வாதாம் மர இலைகள் உதிரும்
அந்த மழலையர் பள்ளிக்கூடத்திற்கு
வெடிகுண்டு வைத்துள்ளதாக
தகவல் வருகிறது
இன்னதென்று புரியாமல்
அவசரமாக வெளியேறும்
குட்டி கடவுளர்களால்
முன்பக்க வாசலில்
பரபரப்பு சூல்கொள்கிறது
தேவதைகள் போல் சிரிக்கும்
இளம் ஆசிரியைகள்
இப்போது
கண்டிப்பான குரலில் உத்தரவிட்டபடி
கடவுளர்களுக்கு பாதுகாப்பரண் அமைக்கிறார்கள்
மணல்மூட்டைகள் நிறைந்த
ஊர்தியிலிருந்து இறங்கி
பள்ளிக்குள் ஓடும்
மோப்ப நாயை பார்க்கும்
கடவுளர்களது
விழிகள் அகல விரிகின்றன
புத்தகப் பைகளை தாண்டி
விரையும் காவலர்கள்
மைதானத்துக்குள் அநாதையாக
கிடக்கும் கால்பந்தை
கவனமாக பரிசோதிக்கின்றனர்
அவர்கள்
தலைமையாசிரியை அறைக்குள் தேடுகிறார்கள்
முடிவற்ற தேடுதலின் இறுதியில்
வெடிக்காத குண்டொன்றின்
வதந்தி திரி பற்ற வைக்கப்படுகிறது
வெடித்து விட்ட பாவனையில்
கடவுளர்கள் பயந்துபோய்
காதை பொத்திக்கொள்ளும்போது
வாரஇறுதி நாளில் பள்ளிக்கூடம்
வழக்கம் போல இயங்குமென்று
அறிவிக்கப்படுகிறது