Showing posts with label Poetry. Show all posts
Showing posts with label Poetry. Show all posts

Tuesday, October 6, 2015

நரகம் ஒரு தனித்த பிரதேசம்

சார்லஸ் புக்கோவ்ஸ்கி எனக்கு மிகவும் பிடித்த கவிஞர். புக்கோவ்ஸ்கி கவிதைகள் வாசிக்க எந்த சிரமமும் இல்லாமல் எளிமையாக இருக்கும். அவரது பல கவிதைகளை எனது வலைப்பக்கத்தில் தமிழில் மொழிப்பெயர்ப்பு செய்து பதிவிட்டுள்ளேன். அவரது ஒரு குறிப்பிட்ட கவிதை சமீபத்தில் என்னை மிகவும் தொந்தரவு செய்தது. அந்த கவிதையை மொழிப்பெயர்க்க தோன்றியது.. பொருளாதாரத்தில் நலிவுற்ற வயதான நோயுற்ற தம்பதிகளின் இறுதிக்கால கொடும் தனிமைதான் இந்த கவிதையின் ஆன்மா.கவிதையின் உச்சம் இறப்பு நடந்த அந்த வீட்டுக்கு புதிதாக வரும் இளம் ஜோடி பற்றிய மர்மமான விவரணைகள். ஒருவேளை அந்த முதியவர்களே மீண்டும் பிறந்து கூட அங்கு வந்திருக்கலாம்.

நரகம் ஒரு தனித்த பிரதேசம்
----------------------------------------------
அந்த மனிதருக்கு அறுபத்தைந்து வயது
அவரது மனைவிக்கு அறுபத்தாறு வயது
மனைவிக்கு அல்சைமர் வியாதி
அந்த மனிதருக்கு வாய்புற்றுநோய்
அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை
அவரது தாடையின் எலும்பை உருக்கிற்று
தாடையை தாங்கி பிடித்துக்கொண்டிருக்க வேண்டும்
தினமும்
அவரது நோயுற்ற மனைவிக்கு
ஒரு குழந்தைக்கு மாட்டிவிடுவதைபோல
ரப்பர் டயாப்பரை அணிவிப்பார்.
அவரது நிலைமையில் கார் ஓட்ட முடியாது
மருத்துவமனைக்கு வாடகைடாக்சி பிடிக்க வேண்டும்
ஓட்டுநரிடம் பேச இயலாது
செல்ல வேண்டிய திசையை எழுதிக்காட்ட வேண்டும்
கடந்த மருத்துவச்சோதனையின்போது
அவரிடம் தெரிவித்தார்கள்
தாடையில் இன்னொரு அறுவை சிகிச்சை
செய்யப்பட வேண்டும்
வலதுப்பக்க கன்னத்தருகே
நாவுக்கருகே
அவர் வீடு திரும்பியதும்
மனைவியின் டயாப்பரை மாற்றினார்
அடுப்பை பற்ற வைத்தார்
மாலைநேர செய்திகளை கவனித்தார்
பிறகு இருவரும் படுக்கையறை சென்றார்கள்
அவர் துப்பாக்கியை எடுத்து
மனைவியின் நெற்றிப்பொட்டில் வைத்து சுட்டார்
மனைவி இடதுப்பக்கம் சரிந்ததும்
அவர் மெத்தையில் உட்கார்ந்தார்
தனது வாயில் துப்பாக்கியை நுழைத்து
விசையை இழுத்தார்
குண்டுச்சத்தம் அண்டைவீட்டாரை உசுப்பவில்லை
பிறகு
பற்றியெரியும் அடுப்பு அதை செய்தது
யாரோ வந்தார்கள்
கதவை உடைத்தவர்கள் அதை கவனித்தார்கள்
விரைவில்
காவலர்கள் வந்தார்கள்
சம்பிரதாய கடமைகளை செய்தார்கள்
சில பொருட்களை சேகரித்து எடுத்துச்சென்றார்கள்
1.14 டாலர் மிச்சமுள்ள
ஒரு மூடப்பட்ட வங்கிக்கணக்கு
ஒரு செக்புத்தகம்
தற்கொலை என்று முடிவெடுத்தார்கள்
அடுத்த மூன்று வாரங்களில்
இரண்டு புதியவர்கள் அங்கு குடிவந்தார்கள்
ராஸ் என்ற பெயருடையை ஒரு மென்பொருள் நிறுவனர்
அவரது மனைவி அனந்தனா
பாலே நடனம் கற்றவர்
சமூகத்தில் உயர் அந்தஸ்துடைய ஜோடி


Hell Is A Lonely Place 

- Poem by Charles Bukowski

he was 65, his wife was 66, had
Alzheimer's disease.

he had cancer of the
mouth.
there were
operations, radiation
treatments
which decayed the bones in his
jaw
which then had to be
wired.

daily he put his wife in
rubber diapers
like a
baby.

unable to drive in his
condition
he had to take a taxi to
the medical
center,
had difficulty speaking,
had to
write the directions
down.

on his last visit
they informed him
there would be another
operation: a bit more
left
cheek and a bit more
tongue.

when he returned
he changed his wife's
diapers
put on the tv
dinners, watched the
evening news
then went to the bedroom, got the
gun, put it to her
temple, fired.

she fell to the
left, he sat upon the
couch
put the gun into his
mouth, pulled the
trigger.

the shots didn't arouse
the neighbors.

later
the burning tv dinners
did.

somebody arrived, pushed
the door open, saw
it.

soon
the police arrived and
went through their
routine, found
some items:

a closed savings
account and
a checkbook with a
balance of
$1.14
suicide, they
deduced.

in three weeks
there were two
new tenants:
a computer engineer
named
Ross
and his wife
Anatana
who studied
ballet.

they looked like another
upwardly mobile
pair. 

Wednesday, February 26, 2014

தவம்

ஒவ்வொரு முறை
தவம் கலையும்போதேல்லாம்   
என்ன வரம் கேட்கவேண்டுமென்று
எனக்கும்
என்னை பார்க்கும் அவருக்கும்
குழம்பிவிடுகிறது

கடவுளே
இனியாவது
முன்வரையறையுடன் கூடிய  
தவங்களை சாத்தியப்படுத்து

Tuesday, December 31, 2013

ஆக நீங்கள் ஒரு எழுத்தாளனாக வேண்டுமா?

-----சார்லஸ் புக்கோவ்ஸ்கி

எல்லாவற்றையும் மீறி உங்களிடமிருந்து
அது பீறிட்டு வெளிவராத வரை
அதை செய்யாதீர்கள்
உங்களை கேளாமல்
உங்கள் இதயத்திலிருந்தும்,
உங்கள் மனதிலிருந்தும்
உங்கள் வாயிலிருந்தும்
உங்கள் வயிற்றிலிருந்தும்
அது வரவில்லையெனின்
அதைச் செய்யாதீர்கள்.
மணிக்கணக்கில் அமர்ந்து
கணிப்பொறித் திரையை வெறித்தபடியோ
தட்டச்சு எந்திரத்துடன் குறுக்கி அமர்ந்திருந்தோ
வார்த்தைகளை தேடிக்கொண்டிருந்தால்
அதைச் செய்யாதீர்கள்.

பணத்திற்காகவோ, புகழுக்காகவோ
நீங்கள் அதை
செய்வதாக இருந்தால்
அதைச் செய்யாதீர்கள்.

உங்கள் படுக்கையில்
பெண்கள் வேண்டுமென்பதற்காக
நீங்கள் அதை
செய்வதாக இருந்தால்
அதைச் செய்யாதீர்கள்.
அங்கு அமர்ந்து
நீங்கள் அதை
மீண்டும் மீண்டும் எழுதுவதாக இருந்தால்
அதைச் செய்யாதீர்கள்.

அதைச் செய்வது பற்றி சிந்தித்திருப்பதென்பதே
கடும் உழைப்பாகுமானால்
அதைச் செய்யாதீர்கள்.
யாரோ ஒருவரைப் போல நீங்கள் எழுத முயல்வதாயிருந்தால்
அதை மறந்துவிடுங்கள்.

உங்களுக்குள்ளிருந்து அது கர்ஜித்து வெளியேற
நீங்கள் காத்திருக்க வேண்டியிருந்தால்
பொறுமையாக காத்திருங்கள்.
உங்களுக்குள்ளிருந்து அது கர்ஜித்து வெளியேறவே
இல்லையென்றால்
அதை
மறந்து விடுங்கள் 

முதலில் உங்கள் மனைவியிடமோ
அல்லது உங்கள் பெண் நண்பியிடமோ,
அல்லது உங்கள் ஆண் நண்பரிடமோ
அல்லது உங்கள் பெற்றோரிடமோ அல்லது வேறு யாரிடமோ
படித்துக்காட்டவேண்டியிருந்தால்
நீங்கள் தயாராக இல்லை

மற்ற அத்தனை எழுத்தாளர்கள் போலிருக்காதீர்கள்
தங்களை எழுத்தாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும்
பல்லாயிரம் மனிதர்களைப் போல் இருக்காதீர்கள்

உப்புச்சப்பற்று, சலிப்பாக,
பாசாங்கு மிகுந்து
சுயகாதலால் கபளீகரம் செய்யப்பட வேண்டாம்.

உலகின் நூலகங்கள்
உங்களைப் போன்றோரால்
கொட்டாவி விட்டுதூங்கிவிட்டன.

அதில் சேராதீர்கள்
அதை செய்யாதீர்கள்

உங்களின் ஆன்மாவிலிருந்து
ஒரு ராக்கெட்டினைப் போல
அது வெளிவந்தாலொழிய

சும்மாயிருப்பது உங்களைப் பைத்தியத்தில் ஆழ்த்திவிடும்,
அல்லது தற்கொலையில்
அல்லது கொலையில் என்றால் ஒழிய
அதைச்செய்யவேண்டாம்.

உங்களுக்குள் இருக்கும் சூரியன்
உங்கள் குடலை எரித்துக்கொண்டிருந்தால் ஒழிய
அதைச் செய்ய வேண்டாம்.

நிஜமாகவே அதற்கான நேரம் வந்து விட்டால்
நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால்
அது தானாகவே செய்துகொள்ளும்
அது தொடர்ந்து செய்துகொண்டேயிருக்கும்

நீங்கள் சாகும்வரை அல்லது
அது உங்களுக்குள் சாகும்வரை

வேறெந்த வழியுமில்லை
என்றுமே இருந்ததுமில்லை.


ஆங்கில மூலம்

--------Charles Bukowski

if it doesn't come bursting out of you
in spite of everything,
don't do it.
unless it comes unasked out of your
heart and your mind and your mouth
and your gut,
don't do it.
if you have to sit for hours
staring at your computer screen
or hunched over your
typewriter
searching for words,
don't do it.
if you're doing it for money or
fame,
don't do it.
if you're doing it because you want
women in your bed,
don't do it.
if you have to sit there and
rewrite it again and again,
don't do it.
if it's hard work just thinking about doing it,
don't do it.
if you're trying to write like somebody
else,
forget about it.


if you have to wait for it to roar out of
you,
then wait patiently.
if it never does roar out of you,
do something else.

if you first have to read it to your wife
or your girlfriend or your boyfriend
or your parents or to anybody at all,
you're not ready.

don't be like so many writers,
don't be like so many thousands of
people who call themselves writers,
don't be dull and boring and
pretentious, don't be consumed with self-
love.
the libraries of the world have
yawned themselves to
sleep
over your kind.
don't add to that.
don't do it.
unless it comes out of
your soul like a rocket,
unless being still would
drive you to madness or
suicide or murder,
don't do it.
unless the sun inside you is
burning your gut,
don't do it.

when it is truly time,
and if you have been chosen,
it will do it by
itself and it will keep on doing it
until you die or it dies in you.

there is no other way.

and there never was.



நன்றி
விநாயக முருகன் 

 

Monday, April 16, 2012

மகாகவி

ஒரு கவிஞன்
அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம்
அலாரம் வைத்து எழுந்துக் கொள்கிறான்

குளியலறை சென்று
குழாயில் தண்ணீர் வருகின்றதாவென்று
சரி பார்க்கின்றான்
தூக்க கலக்கத்தில் கவிதை போல
நிழலாடுகின்றது ஏதோவொன்று
தண்ணீர் ஒழுகும் ஓட்டை வாளியை பார்த்தக்கணம்
அவன் கற்பனை வடிந்து விடுகின்றது

பல்துலக்கி டிபன் சாப்பிட்டு அலுவலகம் விரைகின்றான்
பேருந்தில் நடத்துனர்
கிழித்து கொடுக்கும் பயணச்சீட்டு
அவனை கவிஞனென உணரவைக்கின்றது
பயணச்சீட்டின் பின்புறம் பேனாவால்
இரண்டு வரி எழுதுகின்றான்

அலுவலக தேநீர் இடைவெளியில்
அவன் மேலும் இரண்டு வரிகளை யோசிக்கின்றான்
மதிய இடைவெளியில்
முதல் இரண்டு வரிகளை திருத்தி அழிக்கின்றான்
அலுவலக மேலாளர் வசவிற்கு
பிறகு கழிப்பறை செல்கின்றான்.
அங்கு இரண்டு வரிகள்

இடையே பங்குச் சந்தை முதலீடு
முடிச்சூர் சாலையின் ரியல் எஸ்டேட்
மகள் பெயரில் காப்பீடு திட்டம்
மாமனார் ஊருக்கு செல்ல
தட்கலில் முன்பதிவு
மகனுக்கு கல்வி லோன்
மகளுக்கு பள்ளிகூட விண்ணப்பம்
இன்னும் பல பல வேலைகளுக்கு இடையில்
வரிகள் வளர்கின்றன

மாலை வீடு திரும்பும்போது
பத்தாவது வரி முழுமையடைகிறது
இரவு உணவிற்கு பின்னர்
குறிப்பேடு,பேனாவுடன்
தூங்கி போகும் அவன்
திடீரென படிமம்,இருண்மையென அரற்ற
யோவ் பேசாம மூடிகிட்டு தூங்கமாட்ட
மனைவி அதட்டுகிறாள்

ஒரு கவிஞன்
புரண்டு படுக்கிறான்

காலையிலிருந்து
பொறுத்து பொறுத்து பார்த்த
ஒரு கவிதை
தன்னைத்தானே எழுதிக் கொள்ள ஆரம்பிக்கின்றது

நன்றி
என்.விநாயக முருகன்

Sunday, January 22, 2012

இன்று

இன்று புத்தக கண்காட்சியில்
ஒரு திருவள்ளுவரை சந்தித்தேன்
தனது கவிதை தொகுப்பிற்கு
ராயல்டி கிடைக்கவில்லையென்று விசனப்பட்டார்
தவிர
தான் எப்போதும்
கிரவுன் சைசில் எழுதுவதால்
பதிப்பகம் கிடைக்கவில்லையென்று புலம்பினார்
பேசாமல் தொல்காப்பியர் என்ன புடுங்கியாவென்று
பிளாக்கிலோ பேஸ்புக்கிலே எழுதலாம்
பொழுதாவது போகுமென்றார்

இன்று புத்தக கண்காட்சியில்
ஒரு பாரதியை சந்தித்தேன்
என்ன கவிஞரே சுகமாவென்று கேட்டேன்
யாரும் இருக்கும் இடத்தில் இருந்தால்
எல்லாம் சுகமென்றார்
இது கண்ணதாசன் சொன்னதாயிற்றே
குழம்பியபடி பார்த்தேன்
என்ன இவ்வளவு விரக்தியென்று கேட்டேன்
சாகித்ய அகாடமி விருதை எதிர்பார்த்து
தலை நரைக்கிறதென்று சொன்னார்

இன்று புத்தக கண்காட்சியில்
ஒரு அவ்வையாரை சந்தித்தேன்
எல்லாம் ஆணாதிக்கம் ஆணாதிக்கம்
என்று தலையில் அடித்து கொண்டார்
அதியமானிடம் வாங்கிய நெல்லிக்கனியை
திரும்ப கொடுக்கப் போவதாக
ஆவேசத்துடன் சொன்னார்

இன்று புத்தக கண்காட்சியில்
ஒரு கம்பரை சந்தித்தேன்
அவரது கதையை
ஒரு மெகா சீரியல் இயக்குனர்
திருடிகொண்டதாக புகார் சொன்னார்
அடுத்து கண்காட்சிக்கு
ஒரு ஐயாயிரம் பக்க நாவல் எழுதும்
உத்தேசமிருப்பதாக சொன்னார்

இன்று புத்தக கண்காட்சியில்
ஒரு மோசிகீரனாரை சந்தித்தேன்
பாவம் இளைத்து களைத்து போயிருந்தார்
தனியாக நாற்காலில் அமர்ந்தபடி
தனது கவிதைப்புத்தகத்தை கையிலெடுத்து
தனக்கு தானே விசிறி கொண்டிருந்தார்
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
எங்கேவென்று கேட்டேன்
தனக்கு
டீ வாங்கி வர போனதாக
சொல்லி சிரித்தார்


நன்றி
என்.விநாயக முருகன்

Monday, December 19, 2011

ஜப்திக்கு வந்த வீடு

ஜப்திக்கு வந்த வீட்டிலிருந்து
வெளியேறும் ஆண்கள்
அந்த தெருவை
விரைந்து கடக்க முயற்சிக்கிறார்கள்

ஜப்திக்கு வந்த வீட்டிலிருந்து
வெளியேறும் பெண்கள்
அந்தரங்க சுவடுகளை
அழித்து விட்டு செல்கிறார்கள்

ஜப்திக்கு வந்த வீட்டிலிருந்து
பொம்மையுடன் வெளியேறும்
குழந்தைகளின் கைகளில்
அப்படியொரு பொறுப்புணர்ச்சி

ஜப்திக்கு வந்த வீட்டிலிருந்து
வெளியேறும் குருவியொன்று
கூடுதல் வைக்கோல் குச்சிகளோடு
மீண்டும் உள்சென்று தாழ பறக்கிறது

Saturday, November 26, 2011

ஒரு மழை

ஒரு மழை
சில கணங்கள்
கால இயந்திரத்தில்
பின்னோக்கி இழுத்து செல்கிறது

ஒரு மழை
புறக்கணிக்கப்பட்ட
சில பிரியங்களை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
பிரிந்து சென்றவர்களை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
பழைய காயங்களை கீறி
வலியை நினைவூட்டுகிறது

ஒரு மழை
காதலியை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
பள்ளி தோழிகளை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
கல்லூரி ஆசிரியைகளை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
நண்பனை
நினைவூட்டுகிறது


ஒரு மழை
நண்பனின் காதலியை,
நண்பனின் தங்கையை
நண்பனின் மனைவியை
நண்பனின் அம்மாவை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
சாலையில் கடந்து சென்ற
முகம் தெரியாத பெண்ணை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
குழந்தையை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
கடவுளை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
சைத்தானை
நினைவூட்டுகிறது


ஒரு மழை
காதலை நினைவூட்டுகிறது

ஒரு மழை
காமத்தை நினைவூட்டுகிறது

ஒரு மழை
கவிதை எழுத நினைவூட்டுகிறது

ஒரு மழை
கொலை செய்ய நினைவூட்டுகிறது

ஒரு மழை
பொய் சொல்ல நினைவூட்டுகிறது

ஒரு மழை
தற்கொலையை நினைவூட்டுகிறது


ஒரு மழை
மது விடுதியை புகை பிடித்தலை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
தேநீர் இடைவெளியை
நினைவூட்டுகிறது


ஒரு மழை
சில நேரங்களில்
இன்னொரு மழையை
நினைவூட்டுகிறது


நன்றி
என்.விநாயக முருகன்

Wednesday, November 16, 2011

புயலுடன் உரையாடுபவன்

பண்டிகை நாளொன்றின்
முந்தைய இரவில்
வானிலை ஆராய்ச்சி மையத்தில்
தனியாக அமர்ந்துள்ளான் அவன்


வெளியே எங்கோ
தொலைதூர அதிர்வேட்டுகளும்
வானவெடிகளின் கொண்டாட்டங்களும்
சன்னமாய் ஒலிக்கின்றன


அவன் அமர்ந்திருக்கும்
கட்டுப்பாட்டு அறையில்
கழுவப்படாத
காலி தேநீர்க்கோப்பைகளும்
எரிந்துப்போன சிகரெட் துண்டுகளும்
மல்லிகைப்பூக்களின் வாசமும்
சிதறி கிடக்கின்றன


அமைதியாக தலையை
கவிழ்ந்திருக்கும் அவன்
சலிப்பாக
கணிப்பொறித்திரையை பார்க்கிறான்


அவனது இருப்பிடத்திலிருந்து
ஐநூறு கிலோமீட்டர் தள்ளி
புயல் சின்னம் நகர்கிறது


சலிப்புற்றிருந்த அவன் முகம்
இப்போது
காதல் கடிதம் கிடைக்கப் பெற்ற
பதின்ம பெண்ணாய் மாறுகிறது
அந்த அறையில் பரபரப்பு
சூல் கொள்கிறது


அவன்
கட்டுப்பாட்டு அறையிலிருக்கும்
கருவிகளின் திசையை மாற்றுகிறான்
கணக்கீடுகளை மீண்டும் சரிபார்க்கிறான்


இதுவரை சந்தித்திராத புதிய புயல்
இதுவென்று அவனுக்கு படுகிறது
வெள்ளைத்தாளில் எதையோ
கிறுக்குகிறான்
தொடர்பு துண்டிக்கப்பட்ட யாருக்கோ
மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறான்
சில மின்னஞ்சல்களை அனுப்புகிறான்


அவன்
புயலின் மையத்தை
புயலின் உருவத்தை
உன்னிப்பாக உற்றுப் பார்க்கிறான்
சிறுவயதில்
கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட
பால்ய காலத்தோழனின் முகம்
அவனுக்கு நினைவுக்கு வருகிறது
சாட்டிலைட் சமிஞ்கைகளை
கவனமாக ஒலிப்பெயர்க்கிறான்


புயல் வடமேற்கு திசையில் நகர்கிறது
அவனது திசையும் அதுவே
அவன் ஆர்வமாக பார்க்கிறான்
தேநீர் குடித்தபடி
புயலை பார்த்து ரசிக்கின்றான்
நேரம் செல்ல செல்ல
புயலின் வேகம் அதிகரிக்கிறது


அவன்
புயலுக்கு ஒரு செல்லப்பெயர் சூட்டுகிறான்
புயலின் மையம் சற்று விரிகிறது
அவன் இப்போது
புயலுடன் உரையாட தொடங்குகின்றான்


புயலுக்கும் அவனுக்கும்
இடையிலிருக்கும் பிணைப்பு
அந்தரங்கமானது
புதிரானது
சுவாரசியமானது
அவர்கள் இருவரும் உரையாடிக்கொள்ளும்
மொழி மற்றவர்கள் அறியாதது
சங்கேத குறியீடுகளால் நிறைந்தது
அவர்கள் உரையாடல்கள்
காதல் நிறைந்தது


நீண்ட உரையாடலின் முடிவில்
புயலின் மையம் சிறிது சிறிதாக சுருங்குகிறது
அது மெல்ல மெல்ல உருமாறுகிறது
புயலின் திடீர் செய்கை
புரியாமல் அவன் திகைக்கிறான்


புயல் இப்போது வடகிழக்காக நகர்கிறது
அவனுக்கு கைகள் நடுங்குகின்றன
புயலின் இலக்கை
அதற்கு நினைவூட்டுகின்றான்
அது பயணிக்க வேண்டிய பாதை
அதுவல்லவென்று கண்டிக்கின்றான்
அது பயணிக்க வேண்டிய வேகமும்
அதுவல்லவென்று கூறுகிறான்


பெயர் தெரியாத தீவுக்கூட்டங்களை நோக்கி
புயல் மெல்ல மெல்ல நகர்கிறது
அவனுக்கு வியர்க்கிறது
கவலையோடு
கணிப்பொறித்திரையை பார்க்கிறான்
மெல்ல மெல்ல புயல்
அவன் பார்வையிலிருந்து மறைகிறது


தலைக்கு மேல் கடக்கும்
மாபெரும் பறவையொன்று
தொடுவானில் மறைந்தார்போல்
இறுதி புள்ளியாய்
திரை ஒளிர்கிறது


அவனுக்கு கண்ணீர் பெருகுகிறது
அழுகையினூடே ஒரு சிகரெட் பற்றவைக்கிறான்


அவன் இப்போதுமீண்டும்
கட்டுப்பாடு அறையின் மையத்தில்
தலைகுனிந்தபடி
அமைதியாக காத்திருக்கிறான் தனியாக


நன்றி
என்.விநாயக முருகன்

Monday, November 14, 2011

குழப்பம்

கரையில் அலைவதில்
எந்த அலையில்
கால நனைப்பதென்று குழப்பம்

இதிலென்ன யோசனை
எந்த அலை
முன்னால் வருகிறதோ
அதில் நனைப்பதுதானே
என்றொரு குரல் கேட்டது

முந்தி வந்த அலையில்
கொஞ்சம் கால்
நனைத்து திரும்புகையில்
அதற்கு பிந்தி வந்த
அலைகளும் கெஞ்ச ஆரம்பித்தன

இப்போது
எந்த அலையில்
கால் நனைத்தோமென்று குழப்பம்


நன்றி
என்.விநாயக முருகன்

Thursday, November 10, 2011

இப்படியான வாழ்விலே

என்னை நீங்கள்
எங்கும் பார்த்திருக்கலாம்

நான் கோவிலுக்கு போனால்
செருப்பு காணாமல் போய்விடுகிறது

நான் திருமணத்துக்கு போனால்
பந்தி முடிந்து விடுகிறது

நான் நிதிநிறுவனத்தில் பணம் போட்டால்
சொல்லாமல் கூட ஓடி விடுகிறார்கள்

நான் நேர்மையாக சம்பாதித்தால்
கடன்காரர்கள் வந்துவிடுகிறார்கள்

நான் வீடு வாங்கினால்
வட்டி விகிதத்தை உயர்த்தி விடுகிறார்கள்

நான் வாகனம் வாங்கினால்
எரிபொருள் விலையை உயர்த்தி விடுகிறார்கள்

நான் ஒட்டு போட்டால்
மந்திரிசபையை கவிழ்த்து விடுகிறார்கள்

என்னை நீங்கள்
எங்கும் பார்த்திருக்கலாம்

நான் ஆசிரமத்துக்கு சென்றால்
அங்கு காவல்துறை நுழைந்து விடுகிறது

நான் ஊழல் செய்தால்
அங்கு சிபிஐ வந்து விடுகிறது

நான் நடிகன் ஆனால்
அங்கு நிருபர்கள் வந்து விடுகிறார்கள்

நான் உப்பு விற்க போனால்
மழை கொட்டி தீர்க்கிறது

நான் பொரி விற்க போனால்
காற்று வீசி தீர்க்கிறது

நான் நாய் வளர்த்தால்
அது பக்கத்து வீட்டு நாயோடு ஓடிவிடுகிறது

என்னை நீங்கள்
எங்கும் பார்த்திருக்கலாம்

நான் பிள்ளையார் பிடித்தால்
குரங்காய் மாறிவிடுகிறது

நான் கதை எழுதினால்
கந்தலாக மாறி விடுகிறது

நான் கவிதை எழுதினால்
அது எப்போதும்
இப்படித்தான் முடிந்து விடுகிறது

நன்றி
என்.விநாயக முருகன்

Wednesday, October 19, 2011

வழித்துணை

பக்கத்து இருக்கையில் அமர்ந்திருப்பவன்
அவன் ஊர் வந்ததும்
எழுப்பச் சொல்லி உறங்கப்போகிறான்

அப்படியென்ன இருக்கலாம்
அந்த ஊரில்?

நதியா,மலையா,கோவிலா
மண்ணா,மரமா,க‌ல்லா
மாமன் மகளா
பொங்குமாக்கடலா
பகையா,உறவா,கடனா
பகலா,இரவா,மழையா
பூவா,காயா

உறங்குபவனைத் தட்டியெழுப்ப மனமின்றி
அவன் ஊரை சுமந்து
பயணிக்கின்றேன் ‌மிக பத்திரமாய்

ஊர் வந்ததும்
அவசரம் அவசரமாய் இறங்கி செல்பவன்
மறக்காமல்
என்னிடம் ஒப்படைத்த
அவன் ஊரை வாங்கிக்கொண்டுப் போகிறான்
திரும்பிப் பார்க்காமலேயே



நன்றி
என்.விநாயக முருகன்

Thursday, September 8, 2011

குஞ்சுண்ணியும்,காந்தியும்

குஞ்சுண்ணியை
உங்களுக்குத் தெரியும்தானே

எழு‌தி எழு‌தியே
எழுத்தாய் போனவர்

குஞ்சுண்ணி
எதைப் பற்றியும் எழுதுவார்
எல்லார் பற்றியும் பேசுவார்
எல்லாமும் விவாதிப்பார்

குஞ்சுண்ணி
ஒருநாள் தேநீர் கடைக்கு செ‌ன்றார்

தேநீர் அருந்தியபடியே
தினத்தந்தி பேப்பரை
மெதுவாக படித்தார்

என்னது காந்தியை சுட்டுட்டாங்களா?
குஞ்சுண்ணிக்கு அதிர்ச்சி
கோபத்தில் பேப்பரை கசக்கி எறிந்தார்
அடக்கடவுளே வடைபோச்சே..

வீட்டுக்கு வந்ததும்
காந்தியை பற்றி தேட ஆரம்பித்தார்

காந்தி பிறந்த இடத்துக்கு செ‌ன்றார்

சபர்மதி ஆசிரம் செ‌ன்று
காந்தி சிலையை வணங்கினா‌‌‌ர்

ஹேராம் படத்தை
டிவிடியில் பார்த்தார்

காந்திக்கு குல்லா தைத்து கொடுத்த
சுலைமான் சேட்டிடம் பேட்டி எடுத்தார்

மூச்சுக்கு நூறுமுறை
காந்தி காந்தி எ‌ன்றர்

மனைவி சாந்தியை கூட
காந்தி எ‌ன்று விளித்தார்

பூந்தி தட்டை பார்த்தாலும்
காந்தி காந்தியென்று உருகினா‌‌‌ர்

ஊண் உருகி
உள்ளொளி பெருகி
காந்தியாகவே மாறினா‌‌‌ர்

காந்தியை பற்றி
கவிதை எழுத ஆரம்பித்தார்

காந்தியை பற்றி
கட்டுரைகள் எழுதி குவி்த்தார்

காந்தி கிராமத்திற்கு
கால்நடையாகவே செ‌ன்றார்

காந்திக்கே தெரியாத
பல விஷயங்களை
கண்டுபிடித்து எழுதினார்

காந்தி குளித்தது
காந்தி பல்விளக்கியது
காந்தி கிரிக்கெட் ‌விளையாடியது
இன்னும் பல பல

குஞ்சுண்ணி
ஒரு சுபயோக சுபதினத்தன்று
தனது எழுத்துகளையெல்லாம்
திரட்டி நூலாக வெளியிட்டார்

ஆயிரம் பிரதிகளில்
காந்தி சிரித்தாலும்
ஆத்ம திருப்தி வரவில்லை
குஞ்சுண்ணிக்கு

ஒரு யோசனை பிறந்தது
ஒரு காந்தி எடுத்தால்
இன்னொரு காந்தி இலவசமென்று
ஆரம்பித்தார்

ஒரு புத்தகம் ஐநூறு ரூபாய்
எ‌ன்று விற்க ஆரம்பித்தார்
ஐந்து நூறுரூபாய்
பத்து ஐம்பதுரூபாய்
ஐநூறு பத்துரூபாய்

குஞ்சுண்ணிக்கு வீடெங்கும்
காந்தி கொள்கைகள்
பத்தாய் நூறாய்
ஐநூறாய் ஆயிரமாய்

குஞ்சுண்ணி
காந்தியை போன்று சிரிக்கிறார்ர்
காந்தியை போன்று உண்கிறார்
காந்தியை போன்று நடக்கிறார்
காந்தியாகவே வாழ்கிறார்

குஞ்சுண்ணி
இப்போது ஒரு முழு காந்தியவாதி....

Friday, July 1, 2011

இரண்டு கவிதைகள்

இயல்பு
-------
கேசவப் பெருமாள் கோவிலில்
ராமகாதை சொல்லிக் கொண்டிருந்தார்
பத்து அவதாரமெடுத்தவர் கதையை
பட்டாச்சாரியார் பாடிக்கொண்டிருந்தார்
கேட்க கேட்க கண்ணீர் மல்கியது

கதையின் கிளைமாக்சில்
ராமன் தனது பாதுகைகளை
பரதனிடம் ஒப்படைக்க
கோவில் வாசலில் கழற்றிப்போட்ட
புதுச்செருப்பு ‌மீது
பார்வை செ‌ன்றது


புகழ்
----
மார்க்கெட் போன
நடிகர் ஒருவரை
துணிக்கடை திறப்பு விழாவில்
சந்திக்க நேரிட்டது
சிரித்தபடி கைகுலுக்கியவரிடம்
ஆட்டோகிராப் நோட்டை தந்தேன்

விழுந்தால் விதையாவேன்
எழுந்தால் மரமாவேன்
அன்புடன்………எ‌ன்று முடிந்திருந்தது
அழகான கையெழுத்து

பாவம்
எங்கு விழுந்து எழுந்தாரோ

.

Wednesday, June 15, 2011

மசுரு

தெரிந்த பெண்ணொருத்தியிடம்
பேசிக் கொண்டிருந்தேன்
எனது கையிலிருந்த
ஜி.நாகராஜன் நாவலின்
அட்டைப்படத்தை பார்த்து புன்னகைத்தாள்

இவரை தெரியுமாவென்று
கேட்டேன்
தெரியாது எ‌ன்றாள்
ஜி.நாகராஜன்
தமிழின் முன்னோடி எழுத்தாளரென்றேன்
அவரது மீசை
அழகாக இருக்கிறது எ‌ன்றாள்

பாரதியோடு இவரும்
ஒப்பிடத்தக்கவரென்றேன்
பாரதி...பாரதி
இரண்டு முறை உச்சரித்தவள்
அவரது மீசையும்
அழகாக இருக்கும்
நாக்ராஜை விட எ‌ன்றாள்

எனக்கு முதல்முறையாக
கவிஞர்கள் மேல்
கோபம் வந்தது
மசுரு எ‌ன்று கத்தலாம் போலிருந்தது


.

Wednesday, June 8, 2011

கருத்து கந்தசாமி

கருத்து கந்தசாமி
எல்லாத்துக்கும் கருத்து சொல்வார்

சமச்சீர் கல்வியெல்லாம்
சரிப்பட்டு வராதுங்க
சர்வேதச தரத்துக்கு
சரியான தீர்வு மெட்ரிக் படிப்புதான்
என்ன நான் சொல்லுறது
என்னிடம் கேட்பார்
நான் என்ன சொல்லுறது
முனிசிபாலிட்டி பள்ளிக்கே
முக்கி முக்கி செ‌ன்றவன்

தினந்தந்தியை கூட
எழுத்துக்கூட்ட தெரியாது
எனக்கு
என்னிடம் சொல்வார்
தமிழ்ல எழுதறவன் எல்லாம்
முட்டாப் பயலுங்க தம்பி
மலையாளத்துல பாருங்க
மணி மணியா கவிதை எழுதறாங்க

அருந்ததிராய் ஒரு நக்சலைட்டுங்க
அவரையெல்லாம் என்கவுண்டர் செய்யனும்
ஐஸ்வர்யாராய் கூட அழகாயிருக்கா
எனக்கு சிரிப்பு வரும்

பெரியாரெல்லாம் வேஸ்ட்டுங்க
வைக்கம் எங்க இருக்குனு
தெரியுமா அவருக்கு
கோபத்துடன் சொல்வார்
கேட்கலாமென்றால்
எங்கு போய் தேடுவது பெரியாரை

பசுவதை தடை சட்டம்
கொண்டு வரனுமுங்க
பசுக்களெல்லாம்
தெய்வம் உறையும் இடம்
தெரிஞ்சுதோ
கோமாதா லட்சுமி கடாட்சம்
ஒண்ணுமே வெளங்காது எனக்கு
தேமேவென்று வாயை பார்ப்பேன்

க்யூபாவுல பிடல் காஸ்ட்ரோ
செய்யுறது அநியாயம்ங்க
நம்ம ஊருக்கு கம்யூனிசமெல்லாம்
சரிப்பட்டு வராது..
சரிதானே கேட்பார்
அது சரி
எந்த இசத்தை நான் கண்டேன்

எல்லாத்துக்கும் கருத்து சொல்லும்
கந்தசாமி
ஒரு நாள் இறந்துவிட்டார்
கல்லறைக்கு போயிருந்தேன்

அன்று வாயே திறக்கவில்லை
அஞ்சலி செலுத்திவிட்டு
அமைதியாக நின்றிருக்க
என்னிடம் சொன்னார்

நடுகல் இடுவது
பழங்குடி மரபு
இதிகாசங்களில்
இதுபற்றி ஏராளமாய்
தொன்மம் இருக்கிறது
தென்ஆப்பிரிக்கா நாட்டு
இடுகாடுகளில் கூட
இதற்கு சான்றுகள் உள்ளன

நான் பதிலேதும் சொல்லவில்லை
முன்ன பின்ன செத்திருந்தா
சுடுகாடு தெரிந்திருக்கும்
வருத்தமாயிருந்தது எனக்கு




.

Saturday, June 4, 2011

குஞ்சுண்ணியின் கதை

குஞ்சுண்ணியை
உங்களுக்குத் தெரியும்தானே

எல்லாரையும் போல
அவர் கவிதைகளைத்தான்
முதலில் எழுத தொடங்கினா‌‌‌ர்

எழுத ஆரம்பித்த
‌சில வருடங்களில்
அவருக்கு புதிது பு‌திதாக சொற்கள்
வ‌ந்து விழுந்துக்கொண்டே இருந்தன

கவிதை எழுதியது போக
மீந்துப்போன சொற்களை வைத்து
என்ன செய்வது எ‌ன்று குழம்பினார்
சிறுகதைகளை எழுத ஆரம்பித்தார்

அப்படியும் சொற்கள் தீர்ந்தபாடில்லை
நாவல்களை எழு‌தி குவித்தார்

வீட்டிக்குள் குவிந்து கிடந்த சொற்கள்
மலையென
ஊரைதாண்டி வளர்ந்தபடியே போயிற்று

குஞ்சுண்ணி திகைத்தார்
வருவோர் போவோரிடமெல்லாம்
சொற்களை அள்ளி,அள்ளி கொடுத்தார்

ஆயிரம் பக்க நாவல்கள்
இரண்டாயிரம் பக்க நாவல்கள்
இரண்டு கைகளால் எழுத ஆரம்பித்தார்

சொற்கள் வளர்ந்துக்கொண்டேதான் போனது


நாவல்கள் ஊடாக சினிமாப்பாடல்கள்
திரைக்கதை வசனம்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அஞ்சலிக் கட்டுரைகள்
பிட்டு நோட்டீஸ்கள்
பூப்புனித நீராட்டுகள்
அர‌சிய‌ல் பார்வைகள்

குஞ்சுண்ணி எழுதிக்கொண்டே போனா‌‌‌ர்

பசிக்கும்போது சொற்களை எடுத்து உண்டார்
தாகத்துக்கும் சொற்களையே குடித்தார்
சொற்களால் அழுதார்
சொற்களால் சிரித்தார்
சொற்களை தலைக்கு வைத்து உறங்கினா‌‌‌ர்
சொற்களால் திட்டினா‌‌‌ர்

குஞ்சுண்ணி ஒருநாள் இறந்தும் போனா‌‌‌ர்
இறப்பதற்கு முன் ‌சில சொற்களை
பிரத்யேகமாக
தனது கல்லறை வாசகத்துக்கென்று
எடுத்து வைத்துக்கொண்டார்

மீதமிருந்த சொற்களுக்கு
இப்படி ஒரு வழி செய்தார்

குஞ்சுண்ணியாக நான் எனது
உடல் நலத்துடனும், சுய நினைவுடனும்
என்னுடைய இறுதி விருப்புறுதியாக (உயிலாக)
அல்லது மரணசாசனமாக இதை எழுதுகிறேன்.

அடியில் கண்ட சொற்களை
எனது மகன் சின்ன குஞ்சுண்ணி பெயரில்
அவன் ஆண்டு அனுபவிக்க வேண்டி
எழு‌தி வைக்கிறேன்







Friday, June 3, 2011

யுகப்புரட்சி

தெருமுனையில் நிற்கும் லாரியில்
தண்ணீர் பிடித்து வைத்தாயிற்று

தள்ளுவண்டிகாரனிடம்
பேரம் பேசி
நாளைக்கான காய்கறிகளை
பிரிட்ஜில் வைத்தாயிற்று

பிள்ளைகளுக்கு உணவூட்டி
உறங்க வைத்தாயிற்று

திங்கட்கிழமைக்கான
துணிகளை துவைத்து
இஸ்திரி செய்தாயிற்று

எலக்ட்ரிசிட்டி,டெலிபோன்
பில்களை செலுத்தியாயிற்று

கடன் அட்டைகளுக்கான
காசோலைகளை
காலையிலேயே அனுப்பியுமாயிற்று

மாலையில் ஒரு பொதுக்கூட்டம்
லஞ்ச ஊழல் எதிராக
போதுமான நேரமிருக்கு
ஊர் கூடி தேர் இழுக்க


நல்லவேளை
இன்று சனிக்கிழமை
அலுவலகமும் விடுமுறைதான்

திரும்பும் வழியில்
சரவணா ஸ்டோர்ஸ்
ஒரு எட்டு செல்ல வேண்டும் நேரமிருந்தால்


Monday, May 23, 2011

வெடிகுண்டு


வாதாம் மர இலைகள் உதிரும்
அந்த மழலையர் பள்ளிக்கூடத்திற்கு
வெடிகுண்டு வைத்துள்ளதாக
தகவல் வருகிறது

இன்னதென்று புரியாமல்
அவசரமாக வெளியேறும்
குட்டி கடவுளர்களால்
முன்பக்க வாசலில்
பரபரப்பு சூல்கொள்கிறது

தேவதைகள் போல் சிரிக்கும்
இள‌ம் ஆசிரியைகள்
இப்போது
கண்டிப்பான குரலில் உத்தரவிட்டபடி
கடவுளர்களுக்கு பாதுகாப்பரண் அமைக்கிறார்கள்

மணல்மூட்டைகள் நிறைந்த
ஊர்தியிலிருந்து இறங்கி
பள்ளிக்குள் ஓடும்
மோப்ப நாயை பார்க்கும்
கடவுளர்களது
விழிகள் அகல விரிகின்றன

புத்தகப் பைகளை தாண்டி
விரையும் காவலர்கள்
மைதானத்துக்குள் அநாதையாக
கிடக்கும் கால்பந்தை
கவனமாக பரிசோதிக்கின்றனர்

அவர்கள்
தலைமையாசிரியை அறைக்குள் தேடுகிறார்கள்

முடிவற்ற தேடுதலின் இறுதியில்
வெடிக்காத குண்டொன்றின்
வதந்தி திரி பற்ற வைக்கப்படுகிறது

வெடித்து விட்ட பாவனையில்
கடவுளர்கள் பயந்துபோய்
காதை பொத்திக்கொள்ளும்போது
வாரஇறு‌தி‌ நாளில் பள்ளிக்கூடம்
வழக்கம் போல இயங்குமென்று
அறிவிக்கப்படுகிறது

Friday, January 14, 2011

அதீதமாய் தொடங்கிய தமிழ் புத்தாண்டு



இப்படியொரு இணைய இதழ் தொடங்க இருப்பதாக இரண்டு வாரங்கள் முன்பே மீரா ப்ரியதர்ஷனி அவர்கள் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.இணைய இதழுக்கு கவிதை கிவிதை ஏதாவது எழுதி தாருங்கள் என்று கேட்டிருந்தார். சமீபகாலமாக நான் இணையத்தில் மேய்வதை வெகுவாக குறைத்துவிட்டேன். கணினியில் படிப்பது மிகுந்த ஆயாசத்தை தருகிறது. கணினித்திரை கண்களுக்கு எரிச்சலை தருகிறது. மேலும் புத்தகங்கள் போல தொடர்ச்சியான வாசிப்பனுபவத்தை இணையத்தில் பெற முடிவதில்லை.ஒரு தளத்தை படித்தால் கருத்துகளை முற்றாக கிரகிக்கும் முன்பே அங்கிருந்து இன்னொரு லிங்கை பிடித்து அடுத்த தளத்திற்கு மனம் சென்று விடுகிறது. ஒருவர் மிக கடினமாக உழைத்து அருமையாக பத்து பக்கத்திற்கு கட்டுரை எழுதியிருப்பார். அதை படித்து பார்க்காமலேயே கட்டுரை மொக்கை என்று ஒருவர் பின்னூட்டம் போட்டிருப்பார். அவருக்கு ஜால்ரா தட்டி நாற்பது பேர் கும்மியிருப்பார்கள்.மொக்கைகளும்.கும்மிகளும் நிறைந்த இணையத்தில் அத்தி பூத்தாற்போல எப்போதாவது சில நல்ல தளங்கள் தென்படும். தமிழர் திருநாளாம் பொங்கலான இன்று வெளிவந்துள்ள "அதீதம்" இதில் இரண்டாவது வகை.

ஒருவித சோம்பலுடனும், அசுவாரசியத்துடனுமேயே இந்த தளத்தை இன்று மேய்ந்தேன். (இணையத்தில் பெரும்பாலும் படிக்க முடிவதில்லை. மேயத்தான் முடிகிறது.) மேய்ந்த ஓரிரு நிமிடத்திற்குள்ளே இந்த இணைய இதழ் சுவாரசியமாகவும், தனித்துவமாகவும் இருப்பது தெரிந்தது. நிதானமாக ஒவ்வொரு படைப்பாளிகளது பெயர்களையும் படித்தேன். நிலாரசிகன், தேனம்மை லக்ஷ்மணன், நண்பர் உழவன், லதாமகன் (இவர் எனது அலுவலகத்தில்தான் பணி செய்கிறார்) ,ரிஷான் ஷெரீஃப் குறிப்பாக அபிமான கவிஞர் அனுஜன்யா என்று ஒரே கொண்டாட்டமாக இருந்தது. அதீதம் தளத்தில் நான் ரசித்த அபிமான கவிஞர் அனுஜன்யாவின் கவிதை....

மோட்சப் பிரசாதம்
-------------------------
காலை கிடைத்தது
கடவுள் பிரசாத லட்டு.
ஒரு குழந்தை பிறந்ததினால்
மதியம் கரைந்த சாக்லேட்கள்
மேசைக்கடியில் குவிந்திருந்த
இனிப்புத் துகள்கள்
மாலையில் வசீகரமான
மஞ்சள் உருண்டைகளுடன்
வளையம் வந்த ஊழியனிடம்
எனக்கு இரண்டு கேட்டேன்
ஒன்றும் பேசாமல்
மேசைக்கடியில் உருண்டைகளைப்
போட்டு விட்டு அகர்ந்தான்
இரவுக் கனவில்
புதிதாக இறந்திருந்த
கரப்பானின் மென் மேசை
என் நாசியை உரசியபடி அலைந்தது.

"புத்தக அறிமுகம்" பகுதியில் ராமலக்ஷ்மி அவர்கள் "வெயில் தின்ற மழை" (நிலாரசிகன்) கவிதைத்தொகுப்பை பற்றி மிக அருமையான விமர்சனமொன்றை எழுதியுள்ளார். "அறிவியலும் அறிவில்லா இயலும்" கட்டுரையில் சந்தனமுல்லை அவர்கள் இப்படி கேட்கிறார். "மதமும், மூடநம்பிக்கைகளும் பெண்களை எப்படி அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றன என்று உணர வேண்டும். (மனைவியின் ந‌ல‌னுக்காக‌ ஏதேனும் விர‌த‌ங்க‌ள் க‌ண‌வ‌னுக்கு இருக்கிற‌தா?)"

அதீதத்தில் பல்சுவை இணைய இதழ் எ‌ன்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆனா‌‌‌ல் ஏதோ குறைவது போல தெரிகிறது. அதீதம் சுருக்கமாக இருக்கிறது. நிறைய கட்டுரைகளும், குறைந்தது இரண்டு அல்லது மூன்று சிறுகதைகள் இட‌ம்பெற்றிருந்தால் முழுமையான இணைய இதழ் தோற்றம் கிடைத்திருக்கும். முத‌ல் இதழுக்கு படைப்புகள் குறைவாகவே வந்திருக்கலாம். இனி வரும் இதழ்களில் அரசியல் கட்டுரைகளும், அதிக அளவிலான இலக்கிய படைப்புகளும் இடம்பெறும் எ‌ன்று நம்புகின்றேன். பின்னூட்டம் பகுதி இல்லாதது ஆறுதலாக இருக்கிறது. இருந்திருந்தால் தளம் சந்தைக்கடை போல மாறிவிட்டிருக்கும். ந‌ல்ல முயற்சி. அதீதத்துக்கு தமிழர்திருநாள் வாழ்த்துக்கள்!!!.

http://www.atheetham.com

சென்னை சங்கமம் - இரண்டு கவிதைகள்

கடந்தவாரம் சென்னை சங்கமம் கவிதைப்போட்டியில் கலந்துக்கொள்ளச் சொல்லி அழைப்பு வந்தது. ஹைதராபாத்தில் இருப்பதாலும் பணிச்சுமை காரணமாகவும் என்னால் கலந்துக்கொள்ள முடியவில்லை எ‌ன்று மறுத்துவிட்டேன்.. சென்னை சங்கமத்திற்காக வாசிக்க எடுத்த வைத்த இரண்டு கவிதைகளை இங்கு பதிவிடுகிறேன். இவை ஏற்கனவே ஆனந்தவிகடனில் பிரசுரமானவை.

பூஜ்யங்கள்
--------------
ஆறாவது வகுப்பு
ஈ பிரிவில் மறக்கமுடியாதவன்
வே. அரங்கநாயகம்
வருடத்துக்கு நாலு முறை
கணக்குப் பாடத்தில்
முட்டை எடுப்பான்


ஒரு தேர்வில்
பத்தோடு பத்தை பெருக்கி
பத்துக்கு பிறகு
பத்து பூஜ்யங்களை போட்டது
உலக பிரசித்தம்
வாத்தியார் வெங்கடரமணி
அதை சுழித்து
பத்து முட்டைகள் போட்டது
கூடுதல் சுவாரஸ்யம்


கோழிப்பண்ணை வைக்கலாம்டா
கிண்டலடித்தலும் வையமாட்டான்
பூஜ்யங்களுக்கு மதிப்புள்ளன
புன்னகையோடு சொல்வான் முரடன்


பத்தாம் வகுப்பில்
பாதியை தாண்டாத
அரங்கநாயம் போட்டோவை
வெகுநாட்களுக்கு பிறகு
செய்தித்தாள்களில் பார்க்க நேரிட்டது
மத்திய அமைச்சராம்
ஆயிரம் கோடி ஊழலாம்
சட்டென எண்ண வரவில்லை
எத்தனை பூஜ்யங்கள்?


சில்லறை
———————
நான் அவனுடன்
சுற்றியலைந்த நாட்களில்
கோனா‌‌‌ர் மாந்தோப்பில்
மாங்காய் திருடி உதை வாங்கியுள்ளான்

பெண்கள் படித்துறைப்பக்கம்
மறைந்திருந்து பார்த்ததில்
பஞ்சாயத்தில் செருப்படி விழுந்திருக்கிறது

ஊருக்கு வெளியே ஓடும்
பலான படத்தை பார்க்க
அழைத்துச் சென்றதே அவன்தான்

இந்த முறை
ஊருக்கு சென்ற போது
சந்திக்க நேரிட்டது
தொப்பையும் சங்கிலியும் மின்ன
ஆள் பருத்திருந்தான்
எம்.எல்.ஏவாகி விட்டான்
என் பால்ய சிநேகிதன்

இன்னுமொன்றும்
சொல்லியாக வேண்டும்

ஒருமுறை
கோயில் உண்டியலை
உடைத்து திருடியிருக்கிறான்

சட்டென நிழலாட நினைவூட்டினேன்
சிரித்தபடியே என்னிடம் சொன்னான்

இப்போதெல்லாம்
அது போன்ற
சில்லறைத்தனங்களை செய்வதில்லையாம்

நன்றி (ஆனந்தவிகடன்)
என்.விநாயக முருகன்