Sunday, September 26, 2010

பரத்தை கூற்று
















சமீபத்தில் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். தலித் பிரச்சினை பற்றி அந்த வலியை அனுபவித்த ஒரு உண்மையான தலித்தால் மட்டுமே அதை துல்லியமாக எழுத முடியுமென்றார். பெண்களின் வலியை பற்றி பெண் கவிஞர்கள் எழுதும்போது இருக்கும் வலியும்,வீர்யமும்,உக்கிரமும் ஆண் கவிஞர்கள் எழுதும்போது இருப்பதில்லையென்றார். அவர் சொன்னது பெரும்பாலும் உண்மை.

காமத்தை பற்றிய நவீனக்கால எழுத்துகளில் ஜி.நாகராஜன், தஞ்சை பிரகாஷ்,வா.மு.கோமு போன்றோரும் (சிறுகதைகள், நாவல்கள்) கவிதைகளில் கலாப்ரியா, விக்கிரமாதித்தியன், மகுடேஸ்வரன் போன்ற சில ஆண் படைப்பாளிகள் மட்டுமே ஆங்காங்கு சில பாய்ச்சல்களை காட்டியுள்ளார்கள்.

குறிப்பாக பரத்தையர் உலகம் பற்றியும் அவர்களது அக உலகின் சிக்கல்களையும் பற்றி மிகச்சில ஆண் எழுத்தாளர்களே எழுதியுள்ளார்கள். பரத்தையர் என்ற சங்ககால சொல் வேசி, விபச்சாரி என்றெல்லாம் மாறி இறுதியில் பாலியல் தொழிலாளி என்று இன்று உருமாறியுள்ளது.

தமிழில் அருவி என்றொரு சொல் உள்ளது. ஆங்கிலத்தில் இருந்த Watter Falls என்ற சொல்லை நீர்வீழ்ச்சி என்று தமிழ் படுத்தியது போல, Sex Worker என்ற சொல்லை பாலியல் தொழிலாளி என்று பொது வழக்கில் கொண்டுவந்துள்ளோம். பரத்தை என்ற சொல் இருந்தபோது அவர்களுக்கு என்ன பிரச்சினைகள் இருந்தனவோ, அவையே வேசி என்னும் சொல் இருந்தபோதும் இருந்தன. விபச்சாரி என்ற சொல் இருந்தபோதும் இருந்தன. பாலியல் தொழிலாளி என்ற சொல் இருந்தபோதும் இருக்கின்றன. அன்று இன்று எல்லாக் காலங்களிலும் பெண்கள் ஒரு பண்டமாகவே பார்க்கப் படுகின்றார்கள். வீட்டில் வளர்க்கும் ஒரு பசுமாட்டை பார்க்கும் அதே அணுகுமுறையில்தான் பெண்களும் பார்க்கப் படுகிறார்கள்.அதிலும் குறிப்பாக பாலியல் தொழிலாளிகளது வாழ்க்கை இன்னும் கொடுமை. அது மேட்டுக்குடி பெண் பாலியல் தொழிலாளியாக இருந்தாலும் (Female Escort) சரி. லாரிகளை மறிக்கும் சாலையோர பாலியல் தொழிலாளியாக இருந்தாலும் சரி. அவரவர்கள் மட்டத்தில் அவரவர்களது பொருளாதார அளவுகளில் சுரண்டப்படுகிறார்கள். சுரண்டல் என்பது பணம் என்ற அளவீட்டில் மட்டும் அர்த்தம் கொள்ளகூடாது. போலீஸ் தொந்தரவு-கெடுபிடி.சக மனிதர்களது ஏளனப் பார்வை,இழிச்சொல் எல்லாம்...சரவணகார்த்திகேயனின் "பரத்தையர் கூற்று" என்ற கவிதைத்தொகுப்பை வாசித்தேன். பல இடங்களில் அந்த வலியை உணர முடிகின்றது.

இத்தொகுப்பில் வரும் பரத்தையர்கள் கோபப்படுகிறார்கள். சமூகத்தை பார்த்து திட்டுகிறார்கள். சலித்துக்கொள்கிறார்கள். சில இடங்களில் கிண்டல் செய்கிறார்கள்.இடங்களில் பெருமைப்படுகிறார்கள். அதே பெருமையை களைந்துவிட்டு அழுகிறார்கள். சில கேள்விகளை முன் வைக்கிறார்கள். வரிசையாக இருக்கும் கவிதைகளில் இவையெல்லா உணர்ச்சிகளையும் மாறி,மாறி தருகிறார்கள்.

தொகுப்பில் இருக்கும் ஒரு கவிதை...

ஓரிரவில் பதினோரு பேர்
இது எனது ரெக்கார்ட்-ம்!
அதெல்லாம் அந்தக்காலம்.

இந்த வலியை சொல்லும் பெண் ஒரு மூதாட்டியாக இருக்கலாம். அல்லது நோயுற்று மெலிந்து மரணப்படுக்கையில் கிடக்கும் ஒரு நடுத்தர வயது பெண்ணாக இருக்கலாம். அவளை பற்றிய சித்திரம் மனதில் ஓடுகிறது.அதைவிட அந்த சித்திரம் ஏற்படுத்தும் வலி அதிக அதிர்வுகளை தருகின்றது.

கண்களும் காம்புகளும்
பெரிதாயிருக்க வேண்டும்
உதடுகளும் பிளவுகளும்
சிறிதாயிருக்க வேண்டும்
நேயர் விருப்பம்

தொகுப்பில் எனக்கு பிடித்த கவிதை இது.

பரத்தையர் பற்றிய பார்வையில் கவிஞரின் சில கவிதைகளில் முரண்பாடுகள் தெரிகின்றன. தொகுப்பின் முதல் கவிதை இப்படி இருக்கிறது.

சுதந்திரமென்பது
புணர்தலல்ல;
புணர மறுப்பது

அடுத்த பக்கத்திலேயே இன்னொரு கவிதை இப்படி சொல்கிறது.

என்ன இருந்தாலும்
எம் மகளிரைப் போல்
ஆண்களை உறவுக்கு
அழைக்கும் மறுக்கும்
உரிமையில்லையுன்
இல்லக்கற்பரசிகட்கு.

இந்த கவிதை பரத்தையர்க்கு புணர மறுக்கும் சுதந்திரம் இருப்பதாக சொல்கிறது.

சிறிசு பெருசு கருப்பு சிவப்பு
ஒல்லி தடிமன் கூர்மை மொக்கை
வகைவகையாக் குறிகளை
உள்வாங்கிக் களைக்கிறெதென்
திருயோனி பெருஞ்சரிதம்

சரவண கார்த்திகேயனின் இந்த கவிதை 'எல்லா அறிதல்களோடும் விரிகிறெதென் யோனி ' என்னும் சல்மாவின் வரிகளை நினைவூட்டுகிறது.

படிமங்களின் சுமையோ, இருண்மையோ இன்றி மிக எதார்த்தமாக இருக்கின்றன இத்தொகுப்பிலுள்ள கவிதைகள்.பின்னட்டையில் பொன்.வாசுதேவன் சொல்லியிருப்பது போல,வடிவம் சார்ந்த அணுகுதல்களுக்க்கப்பாற்பட்டு, மரபு வடிவ கவிதைகளாகவோ வெறும் துணுக்குகளாகவோ இல்லாமல் இக்கவிதைகளின் உன்னதக் கேள்விகள் முக்கியமானவையாகப் படுகிறது.

பரத்தை கூற்று (கவிதைகள்)
சி.சரவணகார்த்திகேயன்
வெளியீடு : அகநாழிகை
விலை : ரூ.50/-

3 comments:

  1. சுதந்திரமென்பது
    இருவரும் இனிதாய்
    கூடி கலைவது!

    :)

    ReplyDelete
  2. நன்றி விநாயகமுருகன்.

    தலைப்பு ‘பரத்தை கூற்று‘ என்றிருக்க வேண்டும்.

    ReplyDelete
  3. அசோக்... இது கூட நல்லாயிருக்கு பாஸ்
    சுட்டி காட்டியமைக்கு நன்றி வாசு (திருத்திவிட்டேன்)

    ReplyDelete