Tuesday, May 6, 2014

நிலம் - ராஜீவ் காந்தி சாலை

(2014 ஆண்டுக்கான மலைச்சொல் விருது ராஜீவ் காந்தி சாலைக்கு வழங்கப்பட்டது. விருது வழங்கும் விழாவில் மதிப்புக்குரிய எஸ்.வி.ஆர் அவர்கள் வாசித்த கட்டுரை. இந்த கட்டுரை உயிர் எழுத்து ஏப்ரல் 2014 இதழில் ‘நிலம்’ என்ற கட்டுரையாக அச்சு வடிவத்தில் வெளியானது)

சென்னை நகரத்தில் நாற்பதாண்டுக் காலத்திற்கும் மேலாக வாழ்ந்த, தென் மாவட்டங்களைச் சேர்ந்த இரு முக்கியப் புனைவிலக்கியப் படைப்பாளிகள் தொடர்ந்து கிராமப்புறம் சார்ந்த படைப்புகளையே வழங்கி வந்துள்ளனர். அவை சிறந்த இலக்கியப் படைப்புகள் என்பதில் ஐயமில்லை. இருவரும் ஒருகாலத்தில் இடதுசாரி இயக்கத்தோடு த்டர்பு கொண்டிருந்தவர்கள். எனது மதிப்புக்கும் மரியாதைக்கும் என்றும் உரியவர்கள். அவர்களிலொருவர் சில வாரங்களுக்குமுன் என்னிடம் தொலைபேசியில் பேசும்போது, தனது சொந்த கிராமத்திற்குச் சென்று சில மாதங்கள் அங்கேயே தங்கி தான் எழுத உத்தேசித்துள்ள நாவலொன்றை எழுதப்போவதாகக் கூறினார். ‘மண் வாசனை’ மிக்க மற்றொரு நாவலாக அது வெளிவரும் என்றும் ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்காலத்தில் அவரது கிராமப்புறத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார, அரசியல், பண்பாட்டு மாற்றங்கள், இந்த மாற்றங்களுக்கெல்லாம் தாக்குப்பிடித்து இன்னும் உயிர்ப்போடு இருக்கும் சாதியக் கட்டமைப்பு ஆகியவை அந்த நாவலில் பதிவு செய்யப்படும் என்றும் எதிர்பார்ப்பதில் தவறில்லை. ஆனால் நாற்பது, நாற்பத்தைந்து ஆண்டுக்காலத்தில் சென்னை நகரில் ஏற்பட்டுள்ள மிகப் பிரமாண்டமான மாற்றங்களினூடாகத்தான் இந்த எழுத்தாளர்களின் வாழ்க்கையும் கழிந்திருக்கிறது. இந்த மாற்றங்கள் அவர்களது படைப்பு மனங்களில் ஏன் எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை என்னும் கேள்விக்கு என்னால் பதில் காண முடியவில்லை.


எனக்கும் சென்னைக்கும் ஏறத்தாழ 60 ஆண்டுக்கால உறவு. முறிந்துபோன கல்லூரிப் படிப்புக்காக இரண்டாண்டுகளும் பிழைப்புக்காகவும் அரசியல் பணிக்காகவும் 24 ஆண்டுகளுமாக இருமுறை தொடர்ச்சியாக சென்னையில் என் வாழ்வு கழிந்திருக்கிறது. 1955 இல் அறிமுகமான சென்னைக்கும் 2014 இல் உள்ள சென்னைக்குமுள்ள வேறுபாடு எனக்குள் திகைப்பையும் கோபத்தையும் வருத்தத்தையும் ஒன்றிணைக்கின்றன. என் கண் முன்னாலேயே நெல் வயல்கள் காணாமல் போயிருக்கின்றன; மாந்தோப்புகள் அழிக்கப்பட்டிருக்கின்றன; எத்தனையோ குளங்களும் ஏரிகளும் நிரப்பப்பட்டு அவற்றின் மேல் காங்கிரீட் காடுகள் முளைத்திருக்கின்றன; வேளச்சேரியிலிருந்து தொடங்கி கிட்டத்தட்ட மகாபலிபுரம் வரை பரந்துவிரிந்திருந்த காடுகளின் பரப்பு வெகுவாகவும் விரைவாகவும் வெட்டிக்குறுக்கப்பட்டு கிண்டி மான் பூங்காவாகச் சுருங்கியிருக்கிறது. அந்தக் காலத்தில் கட்டடங்களே தெரியாதவாறு சோலைகளால் சூழப்பட்டிருந்த சென்னை கிறிஸ்துவக் கல்லூரி வளாகமோ, அதைவிடச் சற்றுக் குறைந்த அளவில் இருந்தாலும் பசுமைக் கோலம் பூண்டிருந்த லயோலா, பச்சையப்பன் கல்லூரி வளாகங்களோ இன்று செம்மண் கோலம் பூண்டிருக்கின்றன. இன்ன இடம் என்று குறித்துச் செல்லப்படக்கூடிய பல ‘லேண்ட்மார்க்குகள்’ வரலாறாகிவிட்டன. ‘பாதசாரிகள்’ என்று ஒருகாலத்தில் அழைக்கப்பட்டு வந்த மனிதப் பிரிவுகளுக்கு இடமே இல்லாமல் செய்துவிட்டன அகலப் பாதைகள்; 1930 களில் சுயமரியாதை இயக்க முன்னணி வீரர் சா. குருசாமியுடன் சென்னையிலிருந்து மகாபலிபுரம் வரை படகில் சென்று வரவும் அந்த அனுபவத்தின் அடிப்படையில் பாரதிதாசனின் ‘ஓடப்பாட்டை’ எழுத வைத்ததுமான பக்கிங்ஹாம் கால்வாய் அடுத்த இருபதாண்டுகளுக்குள் மாசுப்பட்டுப் போயிருந்தாலும், 1950 களிலும்கூட ஆந்திராவரை சரக்குப் போக்குவரத்துப் படகுகளுக்குப் பயன்பட்டுவந்தது என்பதை நினைத்தாலே ஆச்சரியமாக இருக்கின்றது. திரு.வி.க. குளித்தெழுந்ததாகச் சொல்லப்படும் கூவம் எண்பதாண்டுகளுக்கும் மேலாகவே சாக்கடையாகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. எனினும் பல்லாயிரக்கணக்கான வக்கற்ற மனிதர்கள் தங்குமிடமாக இருந்த அதன் கரையோரங்களும்கூட அவர்களை வஞ்சிக்கும்படி செய்துவிட்டன. ஆளும் வர்க்கங்களின் ‘ அழகுத் திட்டங்கள்’ சென்னை நகரம் முழுவதையுமே ஒரேபடித்தான இரைச்சல் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. இந்த மாற்றங்களை உன்னிப்பாக அவதானித்து வந்த ஏதேனுமொரு படைப்பு மனம், அவற்றைப் புனைவிலக்கியமாக வடித்துத் தரும் இரசவித்தையில் ஈடுபடாதா என்னும் எதிர்பார்ப்பு என்னைப் போன்ற வாசகர்களுக்கு நீண்ட நாள்களாகவே இருந்துவந்தது. இந்த எதிர்பார்ப்பை மிக அருமையாக நிறைவு செய்திருக்கிறது விநாயக முருகனின் ‘ ராஜீவ் காந்தி சாலை’ (உயிர்மைப் பதிப்பகம், சென்னை, டிசம்பர் 2013, 328 பக்கங்கள், விலை ரூ 240/-)

‘ராஜீவ் கொலை’ தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அது ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை பல்வேறு அரசியல் கட்சிகளால் வெவ்வேறு வகைகளில் தங்கள் சொந்த அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல 1992 இல் நடந்த பாபர் மசூதி இடிப்பு, இந்திய சமூகத்தைக் கிடை நிலையிலும், செங்குத்து நிலையிலும் பிளவுபடச் செய்திருக்கிறது. 1984 இல் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து காங்கிரஸ் கட்சியின் ஊக்குவிப்போடு சீக்கியர்களின்மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்களின் காரணமாக சீக்கியர்கள் கணிசமான அளவில் பாஜக ஆதரவாளர்களாயினரே தவிர (இந்திய அரசுக்கு எதிரான சீக்கியப் போராளிகள் ஒடுக்கப்பட்டுவிட்டனர்) இந்துக்களுக்கும், சீக்கியர்களுக்குமிடையே பகைமை உருவாகவில்லை. 1991 , 1992 நிகழ்வுகள் இரண்டும் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் பெரிதும் பண்பாட்டுத்தளத்திலேயோ, அரசியல் தளத்திலேயோ உள்வாங்கப்பட்டு ‘மதச்சார்பின்மை-மதவாதம்’, ‘இந்திய தேசியம்-தமிழ் தேசியம்’ என்னும் எதிர்வுகளுக்குள், கிட்டத்தட்ட அனைத்து அரசியல் சொல்லாடல்களையும் சிறைபிடித்து வைத்துள்ளன.

இந்தச் சிறையிலிருந்து யதார்த்த நிலையை – பல இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வை, இயற்கை வளங்களை, நிலப்பரப்பை, சமூக உணர்வை, மரபான விழுமியங்களை புரட்டிப்போட்டுவிட்ட யதார்த்த நிலையை – எடுத்துக்காட்ட ‘ராஜீவ் கொலை’யிலிருந்து ‘ராஜீவ் சாலை’க்கு நம்மை அழைத்துவந்திருக்கிறார் விநாயக முருகன். தமிழகத்தில் மட்டுமன்றி, இந்தியா முழுவதிலும் முப்பதாண்டுகளுக்கும் மேலாக கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின், விவசாயிகளின், கீழ் – மத்தியதர வர்க்கத்தினரின் வாழ்க்கையைச் சீரழித்து வருகின்ற, அனைத்து மக்களின் ஆதாரத் தூணாக உள்ள இயற்கை வளங்களைச் சூறையாடுகின்ற நவ-தாராளவாதப் பொருளாதாரக் கொளைகை நரசிம்ம ராவின் ஆட்சிக்காலத்தில்தான் கொண்டுவரப்பட்டது என்றாலும் ,அந்த ஆட்சி ஏற்படுவதற்கு மூல காரணமாக இருந்தது ராஜிவ் கொலைதான்; இந்தப் பொருளாதாரக் கொள்கைக்கான பாதையை வகுத்துக் கொடுத்தவர் ‘அதி நவீன இந்தியாவின்’ பிம்பமாக முன் நிறுத்தப்பட்ட உயிரோடு இருந்த ராஜீவ் காந்திதான். ஆக, விநாயக முருகன் யதார்த்தமாகச் சித்தரித்துக் காட்டும் சென்னை ‘ராஜீவ் காந்தி சாலை’யை இன்றைய இந்தியா முழுவதற்குமேயான ஓர் உருவகமாகவும் நம்மால் காணமுடிகின்றது.

விநாயக முருகனுக்கு எதேனுமொரு குறிப்பிட்ட இடதுசாரிக் கருத்துநிலைக் கண்ணோட்டம் (ideological outlook) இருக்கிறதா என்பது நமக்குத் தெரியாது. ஆனால், முதலாளியப் பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்தும் பாரதூரமான மாற்றங்களைப் பற்றி, அவை மனிதர்களின் புறவாழ்வில் மட்டுமன்றி அகவாழ்விலும் ஏற்படுத்தும் மாற்றங்கள் பற்றி , சூழலியல் கேடுகள் பற்றி மார்க்ஸ், ஏங்கெல்சோடு இணைத்து எழுதிய ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’, அவர் தனியாக எழுதிய ‘பொருளாதார, தத்துவக் கையெழுத்துப் படிகள்’ , ‘மூலதனம்’, எங்கெல்ஸின் ‘டூரிங்குக்கு மறுப்பு’ போன்ற நூல்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் கூர்மையான அவதானிப்புகளும் அவற்றின் அடிப்படையில் அவர்கள் பொதுமைப்படுத்திக் கூறிய கருத்துகளும் இந்த நாவல் முழுவதிலும் இழையோடுவதை என்னால் உணரமுடிந்தது.


பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக சிறுசிறு மாற்றங்களை மட்டுமே கண்டுவந்த ஒரு பெரும் நிலக்காட்சி, நவீன முதலாளித்துவத்தின் முக்கியப் படைக்கலன்களிலொன்றான தகவல் தொழில்நுட்பத் தொழில் நிறுவனங்கள் நிறுவப்படும்போது அதன் நீண்டகால அடையாளத்தை ஒருசில ஆண்டுகளிலேயே இழந்துவிடுவதையும் அந்த நிறுவனங்களினதும் அவற்றில் பணிபுரியும் மனிதர்களினதும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் துணைத் தொழில்கள் பல முளைப்பதையும். மனிதனை மனிதன் தின்னவைக்கும் இந்த மாற்றங்கள் ‘வலியவரே எஞ்சுவர்’ (survival of the fittest) என்று டார்வின் இயற்கையில் கண்ட நியதி மானுட சமுதாயத்திற்குள் இயங்குவதையும் ‘காலம்’, ‘சாலைகள்’ ஆகியவற்றை முக்கியப் பாத்திரங்களாக கொண்டுள்ள இந்த நாவலின் முன்னுரையில் எடுத்த எடுப்பிலேயே கச்சிதமாகச் சொல்லிவிடுகிறார் நாவலாசிரியர்.

ராஜீவ்காந்தி சாலை எனப்படும் பழைய மகாபலிபுர சாலைக்கு நான் முதலில் சென்ற வருடம் 1996. அங்கு நடக்கும் பருவநிலை மாற்றங்களை கவனித்து வருகிறேன். அங்கிருந்து புலம் பெயர்ந்து சென்ற மனிதர்களோடு தேநீர் அருந்தியுள்ளேன். அங்கு புதிதாக வந்து சேர்ந்த மனிதர்களோடு வேலை செய்துள்ளேன். செய்துக் கொண்டிருக்கிறேன். மத்திய கைலாஷுக்கும், சிறுசேரிக்கும் தினமும் ஷேர் ஆட்டோக்களில், ஏசி பேருந்துகளில், அலுவலக பேருந்துகளில் என்று மாறி மாறி பயணம் செய்திருக்கிறேன். அந்த சாலையின் ஆன்மாவை பதினேழு ஆண்டுகளாக கவனித்துக்கொண்டிருக்கிறேன். சாலைகளுக்கு உயிர் உண்டு. அதற்கும் கதைகள் உண்டு. பதினேழு வருடங்களுக்கு முன்பு ஏன் ஐந்து வருடங்கள் முன்பு வரை கூட செம்மஞ்சேரி தாண்டி கிராமங்களாகத்தான் இருந்தன. அப்போதெல்லாம் அங்கு எதுவும் இருக்காது. எதுவும் இருக்காது என்றால் நவீன வெளிநாட்டு கார்கள் இருக்காது. ஆறு லேன்கள் இருக்காது. ஐடி கம்பெனிகள் இருக்காது. உணவு விடுதிகள் இருக்காது. அடுக்குமாடி குடியிருப்புகள் இருக்காது. முக்கியமாக இவ்வளவு பைத்தியங்கள் அங்கு இருந்ததில்லை. ஐடி கம்பெனிகள் கட்ட அங்கு இடம் தேர்வு செய்யப்பட்டவுடன் அங்கிருந்த மனிதர்கள் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்து சென்றதையும், பலர் விவசாய வேலைகளை விட்டுவிட்டு ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கியதையும் (பார்த்தேன்) , ஐடி கம்பெனிகள் வந்தவுடன் மிகப்பெரிய வணிக வளாகங்கள், உணவு விடுதிகள் வந்தன. நவநாகரீக மனிதர்கள் இறங்கினார்கள். அழகான இளம் பெண்கள் வந்தார்கள். இறக்குமதிக் கார்கள் வந்தன. அதையெல்லாம் அங்கு காலங்காலமாக குடியிருந்த எளிய கிராமத்து மனிதர்கள் வியப்போடும், திகைப்போடும் பார்த்தார்கள். ஒரு பெருநகரம் எப்படி உருவாகியது, அது அங்கு என்னவிதமான பண்பாட்டு தாக்குதல்களை நடத்தியது,எப்படி மனிதர்களை மாற்றியது என்பதை மிக நெருக்கமாக அருகிலிருந்து பார்த்துள்ளேன். என் கண்முன்னேதான் அவையெல்லாம் நடந்தன. தற்கொலை செய்துக் கொள்வதற்கும், பைத்தியம் பிடிப்பதற்கும் உள்ள இடைவெளி அதிகம் இல்லை. நூலளவுதான்”. மேற்சொன்ன விவரங்கள் மீண்டும் கவிதையாக ஊற்றெடுக்கின்றன ‘வைகறை’ என்னும் அத்தியாயத்தில்.

மிக அண்மைக்காலம் வரை ஒலித்துக்கொண்டிருந்த விதம்விதமான குரல்கள் யாவற்றையும் சாலையின் இரைச்சல் என்னும் ஒற்றைக்குரல் அடக்கி ஒடுக்கி விடுகின்றது: “ஒவ்வொரு குரலும் ஒவ்வொரு விதமாய் இருக்கும். கட்டைக்குரல். கீச்சுக்குரல் என்று. ஒவ்வொரு குரலுக்கும் ஒவ்வொரு தாளலயம் இருக்கும். சில குரல்கள் பழகியவர்களுக்கு மட்டுமே புரியும்படி சங்கேதமாய் இருக்கும்.அலுமினியப் பாத்திரங்கள் விற்பவர் விநோதமாய் கூவிக்கொண்டு வருவார். ஒரு வார்த்தைகூட புரியாது. ஒரு சைக்கிளில் பாத்திரக்கடையையே தொங்கிக் கொண்டு வருவது பார்க்க அதிசயமாய் இருக்கும். பிற்பகல் தெருக்களில் குறிசொல்பவர்கள், கைரேகை சொல்பவர்கள்,கிளி ஜோஸ்யமென்று குரல்கள் நிரம்பியிருக்கும். சிலருக்குப் பழையச் சோறு கூட கிடைக்கும். உண்டு விட்டு ஏதாவது மரத்தடியில் குட்டித்தூக்கம் போடுவார்கள். யாராவது ஒரு பொடியன் கிளியிடம் வம்பு இழுக்க கிளி ஜோஸ்யக்காரன் தூக்கத்திலேயே அதட்டுவான். மாலை வேளைகளில் தேங்காய்பன், கைமுறுக்கு,சோன் பப்டி என்ளறு விதவிதமாய் விற்றுக் கொண்டு வருவார்கள்... தெருக்கள் முழுதும் குரல்கள் ததும்பிக் கொண்டேயிருக்கும். யாரும் கதவை அடைத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் எல்லாருமே அந்த ஊரைச் சேர்ந்தவர்களாய் இருக்க மாட்டார்கள். வெளியூரிலிருந்து வரும் வியாபாரிகளாக இருப்பார்கள். அதெல்லாம் அந்தக் காலம் ஊருக்குள் இப்போதெல்லாம் குரல்கள் கேட்பதில்லை. இப்போதெல்லாம் தெருக்களில் குரல்களுடன் அலைபவர்களை மக்கள் சந்தேகத்துடனேயே பார்க்கின்றார்கள் என்று செட்டியார் நினைத்துக்கொண்டார். குரல்களை விட மக்களுக்கு இரைச்சல்கள் பிடித்து விட்டதா...” ஆம், சிட்டுக் குருவிகளைக் காணாமல் போக அடித்த செல்போன் டவர்களின் உலகம் இது.

ஐடியில் நாவலாசிரியரின் சக பணியாளர்களாக இருக்கும் அவரது நெருக்கமான நண்பர்கள் எவரது பார்வைக்கும் படாத பெரிய மாற்றங்கள், நுண் மாற்றங்கள் எல்லாவற்றையும் ஓர் ஆழமான சமூகவியல் ஆராய்ச்சி அறிஞர் போல பதிவு செய்துள்ளார் இந்த நாவலில்.

ஐடி உலகமே ஒரு ‘மாயாஜால்’ தான். ஐந்து இழக்க , ஆறு இலக்க சம்பளத்தொகை கிடைக்கும் என்னும் மாயக்கவர்ச்சியைக் காட்டும் இந்த மாய உலகத்தில், ‘மனிதரனைவர்க்கும் வாய்த்த விலைமகள்’ என்பாரே ஷேக்ஸ்பியர், அந்த விலைமகளான பணம், மனிதர்களின் பன்முக ஆற்றல்கள் அனைத்தையும் பணவேட்டை என்னும் ஒரே குறிக்கோளாகச் சுருக்கிவிடுகின்றது. மார்க்ஸ் கூறிவதுபோல “புனிதர்களின் திருச்சின்னங்களும்கூட, விற்கவோ வாங்கவோ முடியாதென்று கருதப்படுகின்றன இன்னும் நுண்மையான தெய்விகப் பொருள்களும்கூட இந்த இரசவாதத்திலிருந்து தப்பமுடியவில்லை.” இந்த இரசவாதத்திற்கு உட்படுத்தப்படுத்தப்படுகின்ற மனிதர்களிடம், அவர்களது, உறவுகளிலேயே மிக இயல்பானதும் மிக இன்றியமையாததுமான பாலுறவுகள்கூட வக்கரித்துப் போய்விடுகின்றன. உள்ளார்ந்த காதலோடு இணைகின்றவர்கள்கூட, உடலின் இயல்பான வேட்கைகளை பூர்த்தி செய்ய வாய்ப்போ நேரமோ வழங்காத ஐடி பணிகளால் சோரம் போகின்றார்கள்.

மனிதர்களைத் தனது மாயவலையில் வீழவைக்கும் இந்த உலகத்திலும் செயல்படுவது சமூக டார்வினியம்தான். இது ஒரு ‘அவுட்ஸோர்ஸிங் உலகம்; மென்பொருள் எழுதுவது, பிஓ வேலை ஆகியவற்றை அமெரிக்க கம்பெனிகள் இந்தியர்களைக் கொண்டு ‘அவுட் ஸோர்சிங்’ செய்கின்றன என்றால், இந்திய நிறுவனங்கள் செக்யூரிட்டி, கேப்மேன், துப்புரவு வேலை முதலியவற்றை இந்திய சாமானிய மக்களிடமிருந்து ‘அவுட்ஸோர்ஸிங்’ செய்துகொள்கின்றன. ‘அவுட்ஸோர்ஸிங்’ மட்டுமல்லாது, ஆன்ஸைட் வேலை, புரோகிராமிங், மேனேஜ்மெண்ட், கன்சல்டிங், பெஞ்சிங் எனப் பலதரப்பட்ட வேலைகளில் மேல்-கீழ் வரிசைகளில் நிறுத்தப்பட்டும், பல்லாண்டுகள் வேலை பார்த்தவர்களை ஒரு நொடியில் வீட்டுக்கு அனுப்பியும், புதிய பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்தியும் சைபெர் கூலி உழைப்பு மூலம் கோடிக்கணக்கில் இலாபம் ஈட்டும் ஐடி கம்பெனிகளுக்கு மின்கட்டண சலுகைகள், தண்ணீர் வழங்குதல், சாலை அமைத்துக் கொடுத்தல் போன்ற வசதிகளைச் செய்து கொடுத்ததும், ஐடி பணியாளர்களின் ஊதியத்தில் முப்பது சதவீதத்தை வருமான வரியாக அபகரித்தும் மத்திய, மாநில அரசாங்கங்கள் இந்த நிறுவனங்களுக்குப் பாதுகாப்புத் தருகின்றன. நம்நாட்டு சட்டங்கள் ஐடி, மோட்டார் வாகனத் தொழிற்சாலைகள் போன்றவற்றுக்கு அவற்றின் சார்பில் நிலம் கையகப்படுத்தும் உரிமையை மத்திய,மாநில அரசாங்கங்களுக்கு வழங்குகின்றன. அண்மையில் ஆக்ஸ்போர்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ள ஒரு நூலில் எம்.விஜயபாஸ்கர் எழுதியுள்ள ‘மெளனத்தின் அரசியல்’ (Politics of Silence) என்னும் கட்டுரை, இதுபோன்று நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக மக்கள் போராட்டம் என்று சொல்லத்தக்க எந்தவொரு போராட்டமும் இதுவரை நடந்திராத ஒரே மாநிலமாக திகழ்வது தமிழ்நாடுதான் என்று கூறுகிறது. இடதுசாரி அரசாங்கம் இருந்த மேற்கு வங்கத்தில் தனியார் நிறுவனங்களுக்காக அரசாங்கமே முன்நின்று நிலத்தைக் கையகப்படுத்திச் சூடு வாங்கிக்கொண்டதைப் போலன்றி, ஆசை வார்த்தை பேசி நடுத்தர, ஏழை விவசாயிகளை ஏமாற்றும் கலையில் கைதேர்ந்த நிலத்தரகர்களிடம் அந்த வேலையை விட்டுவைக்கும் தந்திர வழியைப் பயன்படுத்தின அடுத்தடுத்து வந்த தமிழக அரசாங்கங்கள் என்பதை இக்கட்டுரை எடுத்துக்காட்டுகின்றது.

சமூக டார்வினியம் செயல்படும் ஐடி உலகத்தில் தோற்றுப்போனவர்களுக்கு இருக்கவே இருக்கின்றது ஆறுமாடிக் கட்டட உயரம். “இந்த உயரத்துக்குப் போகவேண்டும் என்று ஆசைப்படுவதால்தானோ தற்கொலை செய்துகொள்வதற்கும் உயரமான இடங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனவா?” என்று இந்த நாவல் எழுப்பும் கேள்வி உளவியலாளர்களுக்கு விடுக்கப்படும் மிக ஆழமான கேள்வி. எத்தனை பொருளாதார, மாற்றங்கள் வந்தாலும் சலனப்படாது, சற்று நெகிழ்ந்து கொடுப்பதுபோல நடித்து, புதுப்புது வேடங்களில் சிலவேளையும், நீண்டகாலப் பழைய கோலத்திலும் தன்னை இடைவிடாது மறு உற்பத்தி செய்துகொள்கிறது சாதியம். பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காக காலந்தோறும் புதுப்புது உத்திகளைக் கையாள்வதை ஐடி உலகம் பற்றிய விவாதங்கள், ஐடி உலகிற்கு வெளியே உள்ள மனிதர்களின் உரையாடல் வழியாக எடுத்துரைக்கும் இந்த நாவல், இடைநிலை சாதிகளிடமுள்ள சாதி ஆதிக்கத்தையும், தலித்துகளை ஒடுக்கும் மனப்பான்மையையும் சுட்டிக்காட்டத் தவறுவதில்லை. அதேபோல ஐடி நிறுவனங்களில் உள்ள மலையாளிகள், தெலுங்கர்கள் ஆகியோர் சாதி அடிப்படையில் உருவாக்கிக்கொள்ளும் சமூக மூலதனம் (social capital) ஐடி நிறுவனங்களில் அவர்களது வேலை வாய்ப்பையும் செல்வாக்கையும் உருவாக்கிக்கொள்கின்றது என்பதையும் (சாதியக் கட்டமைப்பின் மறு உருவாக்கத்தின் ஒரு வடிவம்தான் இது) இந்த நாவல் பேசுகிறது. ‘ராஜீவ் காந்தி சாலை’ ஐடி கம்பெனிகளின் உறைவிடம் மட்டுமன்று; ரியல் எஸ்டேட் தாதாக்கள், அரசியல்வாதிகளினதும் புதுப்பணக்காரர்களினதும் பண்ணை வீடுகள்ம் ஷேர் ஆட்டோக்கள் நவீன மால்களுக்கும் ஹோட்டல்களுக்குமிடையே காலமுரண்களாக நிற்கும் தள்ளுவண்டிகள், டாஸ்மாக் கடைகள், பைத்தியக்காரர்களை அவர்களது உறவினர்களிடமிருந்து காசு வாங்கிக்கொண்டு வந்து ஹைவேயில் இறக்கிவிடும் லாரிகள், வழிப்பறி கொள்ளைக்காரர்கள், நவயுகத் தத்துவவாதிகளாக அவதாரமெடுத்து காசு பண்ணும் யோகா மாஸ்டர்கள், இளஞ்சோடிகளை வழிமறித்துப் பெண்களை பாலியல் வன்முறை செய்துவிட்டுக் கொன்றுவிடும் கொலைகாரர்கள் என எத்தனையோ விஷயங்களை அரவணைத்துக்கொள்ளும் சாலை இது.

ராஜீவ் காந்தி சாலையில் ஒருபக்கம் முழுக்கமுழுக்க ஏஸி வசதி கொண்ட வானுயர் கட்டடங்கள், அதிநவீன மால்கள், மல்டிபிளக்ஸ்கள், உல்லாச விடுதிகள், ஆடம்பர ஹோட்டல்கள், பண்ணை வீடுகள், கேட்டட் கம்யூனிட்டிகள் இருந்தால் அதற்கு மறுபக்கமும் இருக்கத்தானே வேண்டும். அப்படியிருந்தால்தானே ஒன்றையொன்று முழுமை செய்ய முடியும். அந்த மறுபக்கம்தான் இது: “(செம்மஞ்சேரியில்) குடிசையைச் சுற்றி சேறும்,சகதியும் கலந்து ஓடியது. நாற்றம் குப்பைகளும், பன்றிக்கழிவுகளும் சேர்ந்து நாற்றம் குடலை பிய்த்து எறிவது போல வீசியது. லூர்துவின் குசைக்கு சற்று தள்ளி மலம் கழித்துக்கொண்டிருந்த சிறுவன் தலையில் மழை நீர் படாமல் இருக்க பாலிதீன் கவரை இறுக்க சுற்றிக் கட்டியிருந்தான். அவன் பக்கத்தில் அந்த சொறிநாய் புது ஈர மலத்தை பார்த்தபடி ஆசை வெறியோடு காத்திருந்தது. சிறுவன் கையில் கிடைத்த கல்லை தூக்கி நாயின் மேல் விட்டெறிந்தான். அடிவாங்கிய நாய் ஈனஸ்வரத்தில் முனகியபடி ஓடியது. சற்று தள்ளி பிரமாண்ட சாக்கடை குட்டை போல தேங்கி கிடந்தது. ஈக்களும் கொசுக்களும் சங்கீதம் பாடியபடி. சாக்கடை தண்ணீர் விரவியிருந்த இடத்தில் ஒழுகிக்கொண்டிருந்த குடிநீர் குழாய்க்கு இரண்டு பெண்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். குடத்தால் அவ்வப்போது அடித்தும் கொண்டார்கள். சில ஆண்கள் சற்று தள்ளி தேநீர் கடையில் பீடி குடித்தபடி அவர்களது சண்டையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் தேநீர்க்கடையில் இருந்த வடை,பஜ்ஜி மேல் ஈக்கள் மொய்க்க அதை கடைக்கார பையன் விரட்டி கொண்டிருந்தான். இப்போது சிறுவனின் மலம் மழைத்தண்ணீரோடு கலந்து அந்த செம்மஞ்ச்சேரி முழுவதும் சாக்கடை நீரோடு பயணம் செய்ய ஆரம்பித்திருந்தது மிதந்தபடியே. உடம்பெல்லாம் புண்கள் கொண்ட கிழவி இந்த காட்சிகளையெல்லாம் பார்த்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். லூர்துவுக்கு வயிற்றைக் குமட்டிக்கொண்டு வந்தது. ரெளத்ரமும்,இயலாமையும் சேர்ந்து ரத்தத்துடிப்பை அதிகப்படுத்தியது.

இந்த சூழல் ஏசுநாதரையும்கூட கொலையையும், கொள்ளையையும் செய்யத் தூண்டும். அதனால்தான் கண்ணகி நகரில் பலவந்தமாகக் குடியேற்றப்பட்ட ஏழை மக்களுக்காகப் போராடி போலீஸ் சித்திரவதைக்கு உள்ளாகி சிறை சென்ற லூர்து, துன்பத்தில் பங்கேற்கத் துணை யாரையும் காணாத அவன், சேகுவேராவையும், மாவோவையும் வணங்கி வந்த அவன், மோசடித்தனமான முறையில் பணம் சம்பாதிக்கவும் அதன் பொருட்டு அவனுக்கு வேலை வாங்கித் தந்தவருக்கே துரோகம் இழைக்கவும் துணிகின்றான்.

ஐடி நிறுவனங்களின் சுரண்டல், அங்கு பணிபுரிவோரிடம் ஏற்படும் உடல், மனநோய்கள், தற்கொலைகள், பாலியல் வக்கிரங்கள், ரியல் எஸ்டேட் கொள்ளைகள், எங்கிருந்தோ கொண்டுவரப்பட்டு ராஜீவ் காந்தி சாலையில் அலைந்துக்கொண்டிருக்கும் பைத்தியக்காரர்கள் ஆகியோர் பற்றிய சித்தரிப்புகள் இருண்டுப்போன புற உலகையும், இருள் கவ்விய மன உலகத்தையும் காட்டுகின்றன. அதேவேளை இந்த நாவலில் ஆங்காங்கே நகைச்சுவை உணர்வும் மிளிர்கின்றது:

"இப்பல்லாம் டிவியில எந்தச் சேனலை திருப்பினாலும் அமேசான் காட்டுல விளையுற அரிய மூலிகைன்னு சொல்லி எதையாச்சும் விக்குறானுங்க. முடி முளைக்கனுமா அமேசான் காடு. உடம்பு இளைக்கனுமா அமேசான் காடு. செவப்பா மாறனுமா அமேசான் காடு. எல்லா பிரச்சினைங்களுக்கும் அமேசான் காட்டுல விளையுற மூலிகைன்னு சொல்லி விளம்பரம் செஞ்சு விக்கறானுங்க. அந்த பாழாய்ப்போன அமேசான் காடு எங்கதான் இருக்கு? டிவியில வர்ற எல்லாரும் அந்த மர்மக் காட்டைப் பற்றியே பேசுறாங்க" யதார்த்தத்தோடு பின்னிப்பிணைந்த நகைச்சுவை.

இயற்கை மீதும் தமிழ் மக்களின் மரபான வேளாண் தொழில் அறிவின் மீதும் நாவலாசிரியர் கொண்டுள்ள மதிப்புக்கு ஓர் எடுத்துக்காட்டு: “தென்னைப் போல பனை மரங்களுக்கு அதன் வேர்களை பக்கவாட்டில் பரப்பி நிலத்தடி நீரை சுயநலமாக உறிஞ்சிக் குடிக்கும் வஞ்சகம் தெரியாது. அவை வேரை மண்ணுக்குள் ஆழமாக ஊன்றி வளரும். அப்படி வளரும்போது தான் உறிஞ்சும் நீரை பக்கவாட்டில் பரப்பி நிலத்தடி நீரை அதிகரிக்கவே செய்யும். அது எடுத்தது போக மீதி உள்ள நீர் மண்ணுக்கு அடியில் இருக்கும் நீரோட்டத்தில் இன்னும் கொஞ்சம் ஊற்றெடுக்கும். தெரியாமலா இந்தப் பகுதியில் ஏராளமான ஏரிகளும், குளம், குட்டைகளும் அதன் சுற்றுக்கரைகளில் இருக்கும் மண்மேடுகளில் பனைகளையும் நட்டு வைத்தார்கள் அந்தக்காலத்தில். கான்கிரீட்டுகளும், தென்னைகளுமே நீரை உறிஞ்சி விரயம் செய்கின்றன என்று அவள் கணவன் பழநியாண்டி அடிக்கடி சொல்வான். கடல்மட்டத்தின் வெகு அருகில் இருப்பதால் இது இயற்கையாகவே நீரை பிடித்து வைக்கும் சதுப்புநிலப் பகுதியல்லவா? கடலுக்கு பக்கத்தில் இருக்கும் சதுப்பு நிலங்களை அழிக்க அழிக்க நல்ல நீர் வற்றி கடல் நீர் மண்ணுக்குள் புகுந்து உப்பு நீர்தான் வரும். அதனாலேயே தென்னையை கடலோர கிராம மக்கள் வளர்த்த அளவிற்கு சதுப்பு நிலங்களை ஒட்டி இருந்த நாவலூர் போன்ற பகுதி விவசாயிகள் வளர்க்க ஆர்வம் காட்டவில்லை”.

ராஜீவ் காந்தி கொலையைத் தங்கள் சொல்லாடல்களின் முக்கியக் கூறுகளிலொன்றாகக் கொண்டுள்ள தமிழ் தேசியவாதிகள் பலர் பார்க்கத் தவறுகின்ற அவலங்கள் ‘ராஜீவ் காந்தி சாலை’யில் வண்டி வண்டியாகக் கொட்டப்பட்டுள்ளன. அமெரிக்காவின் தரகர்களாக உள்ள, வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களின் ஐடி நிறுவனங்களின் கொள்ளை இலாபமோ, இந்த மாநிலத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் கொள்ளைக்காரர்களோ, பெரிதும் உழைக்கும் மக்களின் வியர்வையால் ஈட்டப்பட்ட பணத்தைச் சுருட்டிக்கொள்ளும் டாஸ்மாக்கோ (மது அருந்துவதில்கூட ஒவ்வொரு சமுக அடுக்குக்கும் ஒவ்வொருவிதமான பாணி, வெவ்வேறு வகையான மது இருப்பதையும் இந்த நாவல் சொல்கின்றது) இந்த சொல்லாடல்களில் மிக மிக அரிதாகவே இடம் பெறுகின்றன. இதற்கு மாறாக, வெளிமாநிலங்களிலிருந்து வேலைசெய்ய வருபவர்களால்தான் பண்பாட்டுக் கேடுகளும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களும் எழுவதாக அந்தச் சொல்லாடல்கள் கூறுகின்றன. வெளிமாநிலங்களிலிருந்து வேலை தேடி வருகிறவர்களுக்கு ரேஷன் கார்டுகள்கூடத் தரக்கூடாது என்றும்கூட கூறுகின்றன. போலீஸ் துறையும்கூட வெளிமாநிலத்திலிருந்து வேலைசெய்ய வருகின்றவர்களின் அடையாளக்குறிப்புகள் (profile) எடுக்கப்பட்டுப் பதிவு செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறது. ஒரு குற்றம் குற்றமாகப் பார்க்கப்படுவதற்குப் பதிலாக குற்றத்தை செய்தவர்களின் மாநில அடையாளத்தோடு தொடர்பு படுத்தப்படுகின்றது. உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் இருக்கவே இருக்கிறது ‘என்கவுண்டர்’ கொலை.

இந்தச் சூழலில் வெளிமாநிலத் தொழிலாளிகளின் பங்களிப்பைத் துணிச்சலாக சொல்கிறது நாவல்: “இரண்டாயிரத்துக்கு பிறகான நவீன சென்னையின் வரலாற்றை பேசும்போது பீகாரிகளின் அர்ப்பணிப்பையும் அவர்களது உழைப்பையும் அவர்கள் சிந்திய ரத்தத்தையும் தியாகத்தையும் தவிர்த்து எதுவும் எழுத முடியாது. கத்திப்பாரா பாலத்தின் தூண்களில் அவர்களது பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில்களின் தூண்களில் அவர்கள் ரத்தம் சிந்தியுள்ளன. ஐடி நிறுவனங்கள் அவர்கள் உழைப்பை உறிஞ்சியுள்ளன. இதோ இந்த ராஜீவ்காந்தி சாலை உருவாக்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பீகாரி இன மக்கள் உயிர் இழந்துள்ளனர். கட்டிடங்கள் கட்டும்போது சாரம் இடிந்து விழுந்து பலியாகியுள்ளார்கள். கான்கிரீட் பலகைகளை தூக்கும் சுமக்கும் கிரேன் விழுந்து சிலர் பலியாகியுள்ளார்கள்”

ராஜீவ் காந்தி சாலை கொண்டு வந்த நவீன மாற்றங்களுக்குத் தாக்குப்பிடித்து எப்படியோ தங்கள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டுவரும் சாமானியத் தமிழர்கள் மீது பரிவையும், வாஞ்சையையும் கொட்டுகிறது நாவல். ராஜீவ் காந்தி சாலையின் வருகையால் வாழ்வாதாரங்களை இழந்த பல்லாயிரம் சாமானிய மனிதர்களில் இருவர்தாம் அன்னம்மாவும், பழனியாண்டியும். தண்ணீர் பம்பு மோட்டாரை இயக்க வைக்கையில் மின்கசிவின் காரணமாக இறந்துவிடும் பழனியாண்டியின் மனைவி அன்னம்மாவுக்கு பிழைக்கும் வழியை ஏற்படுத்திக் கொடுக்கிறார் தங்கவேலு செட்டியார். அவரும்கூட நிலபறிப்பால் பாதிக்கப்பட்டவர்தான். அன்னம்மாவுக்கும், தங்கவேல் செட்டியாருக்குமிடையே வளரும் உறவை சமுதாயம் தான் வகுத்துள்ள மரபுநெறி ஒழுக்கங்களின் மீறல் எனக் கருதுகின்றது. ஆனால் அவர்களினூடாக ஓர் அற்புதமான காதல் கதையொன்று மலர்கிறது இந்த நாவலுக்குள்ளே. பிரியாணிக் கடை வைத்திருக்கும் பாய், அஞ்சலை போன்றவர்களுக்குள்ளே இன்னும் மனிதம் சுடர்விட்டு ஒளிர்கின்றது. ரியல் எஸ்டேட் சண்முகமும், சிதம்பரமும் சேர்ந்து அழிக்கும் தோப்பிலுள்ள கடைசி பனை மரமும் வேரோடு சாய்க்கப்படுகையில் நாமும் வீழ்கின்றோம்.

அன்னத்தோடு சேர்ந்து நம்மையும் கனவு காண வைக்கின்றது காலம்: “அன்னத்திற்கு இப்போதெல்லாம் கனவுகள் அதிகரித்திருந்தன. எல்லாமே பெருங்கனவுகளாக இருந்தன. அந்தக் கனவுகளில் எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென்று நெற்வயல்கள். பம்பு செட்டுகளை ஒட்டி இருந்த பெரிய கிணறுகளின் மீதிருந்து சிறுவர்கள் உற்சாகமாக குதித்து விளையாடினார்கள். தண்ணீர்ப் பாம்புகளைப் பிடித்து அடித்தார்கள். அன்னத்தின் பிள்ளைகள் லோகுவும்,தேவியும் சிதம்பரத்தோடு சேர்ந்து பொன்வண்டுகளைப் பிடித்து தீப்பெட்டிகளில் அடைத்து விளையாடினார்கள். எங்கு பார்த்தாலும் பனை மரங்கள் இருந்தன. மாடுகள் தூரத்தில் கூட்ட கூட்டமாக மேய்ந்துக் கொண்டிருந்தன. திருவிழாக் காலம் என்பதால் காப்புக் கட்டியிருந்தார்கள். மழை வரும் போல இருந்தது. ஒன்றிரண்டு நீர்த்துளிகள் நெற்றியில் விழுந்தன. அன்னத்திற்கு அவளது வீட்டின் கொல்லையில் கூரையில் உப்புக்கண்டம் நினைவுக்கு வந்தது. சூழ்ச்சி தெரியாத எளிய மனிதர்களின் கனவுகளை, காலத்திற்கு ஏற்ப மாறிக்கொள்ளாத மனிதர்களின் கனவுகளை காலமாகிய நான் ஒருபோதும் நிறைவேற்றுவதே இல்லை. அவளுக்கு எப்படி புரிய வைப்பது என்று எனக்குத் தெரியவில்லை”


இந்த வார்த்தைகள் நம்மை அழ வைத்துவிடுகின்றன. அரைப் பனை மர உயரத்திலிருந்து ஆழ்கிணற்றில் சுரைக்காய் குடுக்கையுடன் குதித்து நீந்தப் பழகிய, வண்ணத்துப் பூச்சிகளை கர்சீப்கொண்டு மடக்கிப் பிடித்த, முறத்தில் கயிறு கட்டி இழுத்து வைத்து சிட்டுக்குருவிகளை பிடித்த, அமராவதியிலும், நொய்யலிலும் காவிரியிலும் கொள்ளிடத்திலும் சுழிகளைப் பொருட்படுத்தாமல் நீந்தி மகிழ்ந்த, ராஜ வாய்க்காலில் தூண்டில் போட்டுத் துள்ளி வரும் கெண்டை மீன்களைப் பிடித்துப் பெருமைப்பட்ட என் தலைமுறையினருக்கும்கூட எல்லாமே இப்போது வெற்றுக்கனவுகளும் யாருக்கும் பயன்படா பழங்கதைகள்தான்.

பின்குறிப்புகள்:
புத்தகப் பதிப்பு பற்றி சில வார்த்தைகள் சொல்லியாக வேண்டும். தமிழ்நாட்டில் ‘க்ரியா’ , ‘தமிழினி’ போன்ற ஓரிரு பதிப்பகங்கள் தவிர மற்ற அனைத்தும் கையெழுத்துப் படிகளை ஊன்றிப் படித்து ‘எடிட்’ செய்வதிலோ, தொழில்முறையிலான மெய்ப்பு பார்ப்பதிலோ போதுமான கவனம் செலுத்துவதில்லை. எனவே தவறான வாக்கிய அமைப்புகள், இலக்கணப் பிழைகள், சொற் பிழைகள், அச்சுப் பிழைகள் முதலியன திருத்தப்படாமலேயே புத்தகங்கள் அச்சிட்டு வெளிக்கொணரப்படுகின்றன. அச்சேறி வெளிவந்த இத்தகைய புத்தகங்களை அவற்றை ஆக்கியோர்கள் பார்க்கும்போது அவர்கள் அடையும் மனவேதனையையும் பதிப்பாளர்கள் கருத்தில்கொள்ள வேண்டும். பதிப்பாளர்களின் கவனக்குறைவால் பாதிக்கப்பட்டது ‘ராஜீவ் காந்தி சாலை’ மட்டுமன்றி எனது அண்மைக்கால மொழியாக்கமான “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’யும் அடங்கும் என்பதால் இந்த உண்மையை ஆழ்ந்த வருத்தத்தோடு சொல்ல வேண்டியுள்ளது.

No comments:

Post a Comment