Showing posts with label TamilStory. Show all posts
Showing posts with label TamilStory. Show all posts

Sunday, November 2, 2014

ஹெர்குலிஸ்

மலைகள்.காம் நவம்பர் மாத இதழில் ஹெர்குலிஸ் என்ற சிறுகதை பிரசுரமாகியுள்ளது. 

சித்தப்பா அந்த சைக்கிளை வாங்கும்போது எனக்கு பத்து வயது. இப்போது நாற்பது வயது. முப்பது வருடத்துக்கு முன்பு கும்பகோணம் இப்படி இருப்பதுபோல இருந்ததில்லை. குறிப்பாக ரயிலடி. மகாமக (மாமாங்குளம் என்று உச்சரிப்பார்கள்) குளத்திலிருந்து நூல்பிடித்ததுபோல நேராக நடந்து வந்தால் ரயிலடிக்கு வந்துவிடலாம். காபி கடைகளும், குதிரை வண்டிகளும், ரிக்சா வண்டிகளும், புகையை கக்கிக்கொண்டே தெற்கு, வடக்காக ஓடும் கரி எஞ்சின் வண்டிகளும் ரயிலடியை சுற்றி இருக்கும் கரிமேடும், அங்கு குவிந்துகிடக்கும் எரிந்துப்போன நிலக்கரிகளை பொறுக்கவரும் மாதளம்பேட்டை சிறுவர்களும், அவர்களை விரட்டும் ரயில்வே போலீஸ்காரர்களும் என்று ஒருபுறம் ஏதோவோர் ஆதிகால சலனப்படம் போலவும், மற்றொருபுறம் நீலமேக மேம்பாலம், அதன் மீதேறிச்செல்லும் சோழன் பேருந்துகள், சுவர்களில் ரஜினி பட போஸ்டர்கள் என்று நவீனமும் கலந்துக்கட்டி நின்றிருந்த காலம். எதிர்ப்படும் எந்த மனிதர்களை பார்த்தாலும் வெற்றிலை எச்சிலும், காபி மணமும் தெறிக்கும். இப்போதுபோல ஊரைச்சுற்றி இருக்கும் நவக்கிரகங்கள் அப்போது பிரபலம் இல்லை. மகாமகத்திருவிழா அன்று வெளியூர் ஆட்கள் நிறையபேர் ஊருக்குள் வருவார்கள். மற்றபடி வழக்கமாக மார்கழி மாதம், கருடச்சேவை என்று வாரத்துக்கு ஒரு திருவிழா நடக்கும். சப்ளாங்கட்டை அடித்துக்கொண்டு பாகவத கதைகளை சொல்பவர்களை பார்க்கலாம். லாட்ஜுகளின் வாசலில் மல்லிகைச்சரம், உதட்டுச்சாயத்துடன் நமுட்டுச்சிரிப்பு சிரிக்கும் பெண்களை ரிக்சாக்காரர்கள் கிண்டல் செய்தபடியே போவார்கள். கரும்பு ஏற்றிக்கொண்டு தார்ச்சாலையில் செல்லும் டிராக்டர்களை துரத்திக்கொண்டே போய் டிரைவர்களுக்கே தெரியாமல் பின்புறமாக கரும்புக்கட்டை உருவி எடுக்கும் ஜகதல பிரதாபன்களும், வீடுகளில் திருடிவிட்டு செல்லும் திருடர்களும், ரயிலடியிலிருந்து பார்த்தால் தெரியும் ஊசிமாதா கோவில் பின்பக்கம் இருந்த அடர்ந்த வயல்களில் சாராயம் காய்ச்சும் ஆட்களுமாய் ஊர் இருந்த காலம் அது.

அப்பாவுக்கு பெரும்பாலும் வெளியூரில்தான் வேலை இருக்கும். நான் பிறந்தபிறகு அவருக்கு கும்பகோணத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த நாச்சியார்கோவில் என்ற ஊரில் ஓர் ஆரம்ப சுகாதார மையத்தில் பணிமாற்றம் கிடைத்திருந்தது. அந்நாட்களில் பேருந்தில் பத்து கிலோமீட்டர் பயணம் செய்தாலே உடம்பை நோகவைத்துவிடும். கிலோமீட்டருக்கு மூன்று பேருந்து நிறுத்தங்கள் வரும். அப்பா எவ்வளவோ கேட்டுப்பார்த்தும் கும்பகோணத்துக்குள் பணிமாறுதல் வாங்க முடியவில்லை. அப்போது புதியபேருந்து நிலையம் கட்டியிருக்கவில்லை. பழைய பேருந்துநிலையத்திலிருந்து வரும் சோழன் பேருந்தை ரயிலடி நிறுத்தத்தில் கைக்காட்டி மறித்தால் அரைமணிநேர பயணத்துக்கு பிறகு பித்தளை விளக்குகள் உற்பத்திக்கு பெயர்பெற்ற நாச்சியார்கோவில். நாச்சியார்கோவில் ஆரம்ப சுகாதார மையத்தில் காலரா, யானைக்கால் நோய்க்கு அரசு விநியோகம் செய்யும் த/அ என்று எழுத்துகள் பொறிக்கப்பட்ட மாத்திரைகளை கணக்குப்பார்ப்பதும், வெள்ளை நிற காலி கொசு மருந்து கேன்களை கணக்குப் பார்ப்பதும்தான் அப்பாவின் வேலை. மழை, வெள்ளம் வரும் நாட்களில் அலுவலகத்திலிருந்து ஜீப்பில் பயணித்து சுத்துப்பட்டு கிராமங்களுக்குச் சென்று மருந்து,மாத்திரைகளை விநியோகிக்க வேண்டும். விநியோகம் செய்தவற்றை முறையாக நோட்டில் கணக்கு எழுதவேண்டும். வேலைக்குச்செல்லும் அப்பா மாலையில் வீடு திரும்பும்போது குடித்துவிட்டுதான் வருவார். கையில் மீன்கள் இருக்கும். எங்கள் வீட்டில் பெரும்பாலும் இரவில்தான் மீன் சமையல் நடக்கும். அப்பா வேலைக்கு செல்லாத நாட்களில் அம்மா கோழிக்கறி எடுத்து வந்து குழம்பு வைப்பார். அப்பா வீட்டுக்கு வெளியே இருக்கும் வேப்பமரத்தடியில் கயிற்றுக்கட்டிலை போட்டு உறங்கிக்கொண்டிருப்பார். கறிக்குழம்பு தயாரானதும் அப்பாவை எழுப்பி சோறு போடுவார். மாலையில் அப்பாவின் நண்பர்கள் யாராவது சைக்கிளோடு வருவார்கள். அவர்கள் சைக்கிள் ஓட்ட அப்பா கேரியரில் உட்கார்ந்துக்கொள்வார். அவர்கள் எங்காவது சீட்டுக்கச்சேரி நடத்த கிளம்பிவிடுவார்கள். பிறகு நான் அரைத்தூக்கத்தில் இருக்கும்போது அப்பா எல்லா வேலைநாட்களிலும் செய்வது போன்றே குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். சோற்றை போடும் அம்மா அழுதபடியே வந்து எனது பக்கத்தில் படுத்துக்கொள்வார்.

அப்பா வேலைக்கு சென்றிருந்த நாளொன்றின் பகல்பொழுதில் ராஜேந்திரன் உற்சாகமாக வந்தான். வீட்டு வாசலில் நின்றபடி என்னை பெயர் சொல்லி அழைத்தான். நான் வெளியே வந்து பார்த்தபோது அவன் கால்கள் தரையில் பாவியிருக்கவில்லை. சிறுவன் பக்கத்தில் நிற்கும் அவன் வளர்ப்பு நாய்க்குட்டிபோல என்னை பார்த்ததும் தரையிலிருந்து எம்பி எம்பி குதித்து தன்னோடு வரும்படி சைகை செய்தான். ராஜேந்திரன் மாதளம்பேட்டையில் குடியிருப்பவன். பெரியவனானதும் சைக்கிள் கடை வைப்பதுதான் தனது லட்சியம் என்று சொல்லி வாத்தியாரிடம் பிரம்படி வாங்கியவன். தெருவில் யார் சைக்கிளில் போனாலும் அந்த சைக்கிள் பின்னாலேயே கொஞ்சதூரம் வரை ஓடுவான். அந்தக்காலத்தில் ராஜேந்திரன் வயதையொத்த எங்களில் பலருக்கும் சைக்கிள் பைத்தியம் இருந்தது.

சித்தப்பா வீட்டுக்கு பக்கத்துத்தெருவில் ஒரு சைக்கிள்கடை இருந்தது. அந்த சைக்கிள்கடைக்காரர் எப்போதும் கட்டம் போட்ட அழுக்கு லுங்கி அணிந்திருப்பார். கிரீஸ் கறைகளை லுங்கியில் துடைக்கமாட்டார். அதற்கென்று தனியாக துண்டு வைத்திருப்பார். எப்போதும் சிவப்புநிற பார்டர் வைத்த மஞ்சள்நிற முண்டாபனியன் அணிந்திருப்பார். மடித்துக்கட்டிய லுங்கியுடன் குத்துக்காலிட்டு அவர் உட்காரும்போது அவரது வலுவான பின்னங்கால்களின் சதைகள் திரண்டு நிற்கும். அகன்ற தோள்களுடன் வலுவான புஜங்களுடன், நெஞ்சு நிறைந்த கருத்த சுருள் முடிகளோடு கடை முன்பு உட்கார்ந்து சக்கரத்துக்கு கோட்டம் எடுப்பது , பொத்தல் விழுந்த ட்யூப்களில் பஞ்சர் ஒட்டுவது, ஒவாராயிலிங்க் செய்வது என்று எந்நேரமும் அவர் ஏதாவதொரு வேலை செய்துக்கொண்டே இருப்பார். சைக்கிள் கடைக்கு பின்புறம் ஒரு காலித்திடல் இருந்தது. அதில் இரண்டு ப வடிவ இரும்பு உருளைகளை தலைகீழாக மண்ணில் அடித்து எதிரெதிரே இறக்கியிருப்பார்கள். இருட்டிய மாலை நேரங்களில் சைக்கிள்கடைக்காரர் அந்த இரும்பு உருளைகளின் மீது தொங்கிக்கொண்டு உடம்பை முறுக்கி பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பார். கொழுத்த சதை திரட்சியில் பச்சை நரம்புகள் மின்னல்போல நெளிந்தோடும். தண்ணீர் பிடிக்கச்செல்லும் பெண்கள் மடித்து கட்டிய லுங்கியுடன் இரும்புபாரில் உடற்பயிற்சி செய்யும் சைக்கிள்கடைக்காரரையும் , வியர்வை ஊற்றெடுத்து ஓடும் அவரது உடம்பையும் பார்த்தபடியே செல்வார்கள். இரும்பு பொருட்களோடு வேலை செய்பவர்களுக்கு நாளடைவில் உடம்பு இரும்பாக மாறிவிடும் என்று ராஜேந்திரன் சொல்வான். ராஜேந்திரனுக்கு ஏனோ அந்த சைக்கிள்கடைக்காரரை மிகவும் பிடிக்கும். வளர்ந்து பெரியவன் ஆனால் சைக்கிள் கடை வைக்கப்போவதாக என்னிடம் சொல்ல நாங்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்ட எனது அம்மா என்னை அதட்டினார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் படித்துவிட்டு சைக்கிள்கடை வேலைக்கு போனால் என்ன? குழப்பமாக இருந்தது.

எனது அப்பாவுக்கு ராஜேந்திரனை பார்த்தாலே முகம் மாறிவிடும். ராஜேந்திரன் மூக்கில் எப்போதும் சளி ஒழுகிக்கொண்டிருக்கும். கால்சட்டை இடுப்பில் நிற்காது. ஒருகையால் டவுசரை இழுத்து விட்டுக்கொண்டே ஓடிவருவான். மறுகையில் ஏதாவது தின்பண்டம் இருக்கும். அல்லது ஒரு குச்சியால் சைக்கிள் டயரை ஓட்டிக்கொண்டே வருவான். சாலையில் நரிக்குறவர்கள் சென்றால் அவர்கள் பின்னாலேயே நடந்து வயலுக்கு போவான். அவர்கள் எப்படி குருவி சுடுகிறார்கள் என்பதை மறுநாள் வகுப்புக்கு வந்து எங்களிடம் விவரிப்பான். ராஜேந்திரன் மீது எப்போதும் ஒருவித கவுச்சிவாடை அடிக்கும். காக்கையை சுட்டு தின்பவர்கள் மீது அப்படித்தான் நாறும் என்று எங்கள் வகுப்பில் படிக்கும் சேதுராமன் அடிக்கடி சொல்வான். ராஜேந்திரன் வீட்டில் மாட்டுக்கறி சமைப்பார்கள். அதுகுறித்து சேதுராமனும், மற்றவர்களும் ராஜேந்திரனை அடிக்கடி கிண்டல் செய்வார்கள். ஆனால் ராஜேந்திரன் அவர்களுடன் சண்டைக்கு போகமாட்டான். நான் ஆடு,கோழி, மீன் சாப்பிடும் எங்களை சேதுராமன் கிண்டல் செய்யமாட்டான். ஒருமுறை ராஜேந்திரனிடம் “நீங்க ஏன் மாட்டுக்கறி சாப்பிடுறீங்க?” என்று கேட்டேன். அது தனக்கும் வருத்தமாகத்தான் உள்ளது என்றும், எங்க வீட்டில் வேறு கறி எதுவும் எடுப்பதில்லை என்றும் சொன்னான். “ஆட்டுக்கறி சாப்பிட்டதே இல்லையா?” என்று வியப்புடன் கேட்டேன். “சாப்பிட்டிருக்கேன். தீபாவளி அன்னைக்கு மட்டும் எங்க வீட்டில் ஆட்டுக்கறி வாங்குவாங்க” என்று சொன்னான். அதன்பிறகு மாட்டுக்கறி குறித்து நாங்கள் அதிகம் எதுவும் பேசிக்கொள்வதில்லை. நான் ராஜேந்திரனிடம் பழகுவது சேதுராமனைபோலவே எனது அப்பாவுக்கும் பிடிக்காது. ஒருமுறை ராஜேந்திரனோடு சேர்ந்துக்கொண்டு கோனார் தோப்பில் மாங்காய் அடித்தேன். விஷயம் கேள்விப்பட்ட எனது அப்பா என்னை தெருவிலேயே நிற்க வைத்து செருப்பால் அடித்து அவமானப்படுத்தினார். அம்மாவும் வந்து என்னை அடிக்க ஆரம்பித்தபிறகுதான் அப்பா அடிப்பதை நிறுத்தினார். என்னை அடித்தபிறகு அம்மாவும் என்னோடு சேர்ந்து அழுதார். இனிமேல் நான் ராஜேந்திரனோடு சேரக்கூடாது என்று திட்டியபடியே என்னை வீட்டுக்குள் அழைத்து வந்தார்.

ராஜேந்திரன் சொல்லித்தான் எனக்கு விஷயம் தெரிந்தது. சித்தப்பா புதுசைக்கிள் வாங்கிவிட்டார் என்று. சித்தப்பா வீட்டு வாசலில் புதுசைக்கிள் நிற்பதாக தலையில் கைவைத்து சத்தியம் செய்தான். நான் மெதுவாக வீட்டின் பின்புறம் எட்டிபார்த்தேன். அம்மா கொல்லையில் பாத்திரங்கள் கழுவிக்கொண்டிருந்தார். சித்தப்பா வீட்டுக்கு போனால் எனது வீட்டில் அடிவிழும். அதுவும் ராஜேந்திரனுடன் சேர்ந்துப்போனால் கொன்றேவிடுவார்கள். ஏன் அப்பாவுக்கு எனது நண்பன் ராஜேந்திரனையும், சித்தப்பாவையும் பிடிக்கமாட்டேங்குது என்று வெகுநாள் வரை எனக்குள் கேட்டுக்கொண்டே இருந்தேன். அம்மா முதுகை காட்டியபடி கொல்லையில் உட்கார்ந்திருக்க விளையாட போறேம்மா என்று சொல்லிவிட்டு நானும், ராஜேந்திரனும் தெருவில் இறங்கி மறைந்தோம். நான்கைந்து தெருக்கள் தள்ளியிருந்த எனது சித்தப்பா வீட்டுக்கு ஆர்வத்தோடு ஓடினோம். சித்தப்பா ரயிலடியிலிருந்து மகாமக குளம் செல்லும் வழியிலிருந்த பவர்லைட் சோப் தயாரிக்கும் கம்பெனி பக்கத்தில் சொந்தமாக மருந்துக்கடை வைத்திருந்தார். சித்தப்பாவுக்கும்,சித்திக்கும் திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் இருக்கும். பிள்ளைகள் இல்லை. சித்தப்பா அழகன் என்றால் சித்தி பேரழகி.

சித்தப்பா வீட்டின் தெருவில் நுழையும்போது தூரத்திலிருந்தே சைக்கிளை பார்க்க முடிந்தது. திண்ணைக்கு சற்றுத்தள்ளி கம்பீரமாக நின்றிருந்தது அந்த சைக்கிள். குதிரைக்குட்டியின் உறுதியான எலும்புக்கூடுபோல அந்த இரும்பு வாகனம் நின்றிருந்தது. பச்சைநிறத்தில் இருந்த இருக்கையில் கைவைக்க கை பொதிந்துப்போனது. கைகள் கூச்சமாகவும்,உடல் சிலிர்ப்பாகவும் இருந்தது. அப்படியே அந்த பஞ்சுப்பொதியை கையால் அமுக்கிக்கொண்டே இருக்க வேண்டும்போல தோன்றியது. சைக்கிளின் முன்பாரில் பச்சை நிற லெதர் சுற்றப்பட்டிருந்தது. தோலுறையின் ஏழு இடங்களில் சின்ன பொத்தல் போட்டு சின்ன அலுமினியவளையங்கள் அடித்து அந்த இடத்தில பொன்னிற பட்டுக்குஞ்சத்தால் முடிபோடப்பட்டு கட்டப்பட்டிருந்தது. இரும்பு ரிம்களில் சூரிய வெளிச்சம் பட்டு கண்ணை கூச வைத்தன. ஹெட்லைட் மீது இருந்த மஞ்சள்நிற துணி மட்டும் பொருத்தமற்றதாக தெரிந்தது. அதையும் பச்சை நிறத்தில் வாங்கியிருக்கலாம் என்று தோன்றியது.

அப்படியே சைக்கிளின் மற்ற பகுதிகளை நோட்டம் விட்டேன். முன்பாரிலிருந்து முக்கோண வடிவில் சரிவாக இறங்கியிருந்த கம்பியில் யாரோ ஒரு மாவீரன் ஒரு காலை நிலத்தில் அழுத்தமாக ஊன்றி முழங்காலிட்டு அமர்ந்திருந்தான். அந்த மாவீரன் உடல் அவ்வளவு உறுதியாக அழகாக இருந்தது. அவன் சற்று தலையை தாழ்த்தியிருந்தான். அவனது தோள்பட்டையில் உலக உருண்டை இருந்தது. அப்படி ஒரு வசீகர படத்தை நான் அதற்கு முன்னால் பார்த்ததே இல்லை. நான் அந்த அட்லஸ் சைக்கிளை பார்த்து பிரமித்து நின்றிருக்க வீட்டுக்குள்ளிருந்து சித்தி கொலுசு சத்தம் ஒலிக்க வந்தார். எங்கள் பின்னால் சைக்கிள்பெல் சத்தம் கிணிங் கிணிங்கென்று ஒலித்தது. திரும்பி பார்த்தோம். தெருமுனையில் சைக்கிள்கடை வைத்திருப்பவர்தான்.

“என்ன ராசு? புது சைக்கிள் இறக்கிட்டே போல?” என்று சிரித்தபடியே எங்களை கடந்துப்போனார். திரும்பி பார்த்தால் இப்போது சித்தி பக்கத்தில் சித்தப்பாவும் நின்றிருந்தார்.

“ஏன் நாங்க எல்லாம் சைக்கிள் வாங்கக்கூடாதா?” என்று சித்தப்பா கேட்டார்.

“அட சைக்கிள் வாங்கினது சந்தோஷமுன்னு சொன்னேன்ப்பா” என்று சொல்லிவிட்டு அவர் சைக்கிளை மிதித்தபடி பக்கத்து சந்தில் மறைந்தார்.

சித்தி என்னையும், ராஜேந்திரனையும் உள்ளே கூப்பிட்டார்கள். ராஜேந்திரன் என்னோடு சேர்ந்து சித்தப்பா வீட்டுக்குள் நுழைய தயங்கினான்.

“சரிதான் கிடக்கு வாடா பெரிய மனுஷா” என்று சித்தி ராஜேந்திரனை கிண்டல் செய்தார். அவனுக்கு கூச்சமாக இருந்தது.

“என்னடா ஸ்கூல் போகலையா? ரெண்டு பேரும் இங்க சுத்திக்கிட்டு இருக்கீங்க?” சித்தப்பா கேட்டார்.

“இன்னைக்கு லீவ் சித்தப்பா”

சித்தி எங்களுக்கு மணக்க மணக்க காபி போட்டு கொடுத்தார்கள். காபி குடித்துவிட்டு திண்ணைக்கு வந்து அந்த புது சைக்கிளையே அதிசயமாக பார்த்தபடி நின்றோம். சித்தப்பா வீட்டிலிருந்து திரும்பிவரும்போது, “உங்க சித்தி ரொம்ப நல்லவங்கடா. சித்தப்பாதான் மோசம்” என்று ராஜேந்திரன் என்னிடம் சொன்னான். காரணம் எனது சித்தப்பா அவர் முன்பு எங்களை சைக்கிளை தொடக்கூட அனுமதிக்கவில்லை. அதட்டிக்கொண்டே இருந்தார். எங்களுக்கு வருத்தமாக இருந்தது. சைக்கிளில் பார்த்த அந்த மாவீரனின் உருவம் பற்றி ராஜேந்திரனிடம் கேட்டேன். அந்த வீரனின் பெயர் அட்லஸ் என்று ராஜேந்திரன் சொன்னான். நான் நம்பவில்லை. அட்லஸ் என்பது சைக்கிள் கம்பெனி. இவன் ஏதோ அடித்துவிடுகிறான். ஒருவேளை அந்த வீரனின் பெயர் அட்லஸ் என்றாலும் இவனுக்கு எப்படி அது தெரியும்?

“அட்லஸ் என்பது சைக்கிள் கம்பெனி பெயர். மனுஷனுக்கு எல்லாம் அப்படி பெயர் வைப்பாங்களா?” என்று கேட்டேன். அவன் முழித்துவிட்டு அப்படித்தான் எங்க பேட்டைல இருக்கற ஒரு அண்ணா சொன்னார். அவர் இங்க்லீஷ் எல்லாம் நல்லா பேசுவார் என்றும் சொன்னான். அதைப்பற்றி மேலும் பேச விவாதிக்க எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் அந்த தோளில் உலகை சுமக்கும் வசீகர உருவம் எனக்கு பிடித்திருந்தது. பெரியவன் ஆனால் அந்த அட்லஸ் உருவம் போலவே எனது உடலும் மாறும் என்று தீர்மானமாக நம்ப ஆரம்பித்தேன். இந்த அட்லஸ் பெண்ணாக பிறந்தால் எப்படி இருக்குமென்று யோசிப்பேன். கண்டிப்பாக அவள் இப்படி பலசாலியாக இருக்கமாட்டாள். ஆனால் பேரழகியாக இருப்பாள். சிவப்பாக, மேலுதட்டின் மேல் சின்ன மச்சத்தோடு, சாயம் பூசாத ஆனால் சிவந்த உதட்டுடன், காதில் சின்ன ரோஜாப்பூ வைரக்கல் பதித்த தோடுடன், தலையில் இருக்கும் மல்லிகைச்சரம் முன்புற தோளில் புரள நடந்துவருவாள். எனக்கு ஒருக்கணம் சித்தியின் முகம் நினைவுக்கு வந்தது.

சித்தப்பா வாங்கிய அந்த புதுசைக்கிளை பார்ப்பதற்காக நானும், ராஜேந்திரனும் ஏதாவது சாக்கு வைத்துக்கொண்டு தினமும் அவர் வீட்டுக்கு செல்ல ஆரம்பித்தோம். நாங்கள் செல்லும்போதெல்லாம் சித்தப்பா அந்த புதுசைக்கிளை துடைத்துக்கொண்டே இருப்பார். சின்ன தண்ணீர் பக்கெட்டில் துணியை போட்டு பிழிந்தெடுத்து நிதானமாக சைக்கிளின் ஒவ்வொரு அங்குலத்தையும் பார்த்து பார்த்து துடைப்பார். சைக்கிள் டயரில் கூட மண் இருப்பது அவருக்கு பிடிக்காது. மழையில் நனைந்த பனைமரத்தின் நிறத்தில் டயர் எப்போதும் கருப்பாகவே இருக்கும். ஒருவேளை இவர் சைக்கிளை தரையில் விடாமல் ஆகாயத்தில் விடுகிறாரோ என்றுகூட தோன்றும். வாங்கும்போது எப்படி இருந்ததோ அதேபோலவே ஒருவருடம் ஆகியும் சைக்கிள் புதிதாக இருந்தது. சித்தப்பா பக்கத்தில் ஒரு மரப்பெட்டி இருக்கும். அதில் கிரீஸ், எண்ணெய் கேன், சின்ன, சின்ன ஸ்பேனர்கள் உப்புத்தாள் எல்லாம் இருக்கும். சித்தப்பா கருப்பு உப்புத்தாள் வாங்க மாட்டார். அது கொஞ்சம் முரட்டுத்தனமாக இருக்கும். வெள்ளையும், மஞ்சளும் கலந்த நிறத்தில் ஒருவித மென்மையான உப்புத்தாளே எனக்கும் பிடிக்கும். அதைத்தான் அவரும் பெட்டியில் வைத்திருப்பார். புதுசைக்கிளுக்கு அந்த உப்புத்தாள் அநேகமாக தேவைப்படாது. அதை ஏன் வாங்கி வைத்திருக்கார் என்று நினைத்துக்கொள்வேன். சக்கரத்தில் இருக்கும் ஒவ்வொரு போக்ஸ் கம்பிகள் மீதும் மடக்கிய துணியை வைத்து ரம்பத்தால் மரத்துண்டை அறுப்பது போல தேய்த்து துடைப்பார். அதற்கே அரைமணி நேரம் ஆகும். சித்தப்பா கடைக்கு சென்று சைக்கிளுக்கு காற்று அடிக்க மாட்டார். காற்று அடிக்கும் பம்பு வாங்கி வைத்திருந்தார். விசுக்விசுக்கென அவர் காற்று அடிப்பதை பார்க்க சிரிப்பாக இருக்கும். எப்போது பார்த்தாலும் சைக்கிளை துடைத்துக்கொண்டே இருக்கும் சித்தப்பாவை பார்த்தால் ஒருவிதத்தில் எனக்கு சைக்கிள்கடை வைத்திருப்பவர் நினைவுக்கு வருவார். அவருக்கு அது தொழில். பலவிதமான சைக்கிள்களை கடையில் நிற்க வைத்திருக்கிறார். நாள் முழுவதும் சைக்கிளோடு புழங்குகிறார். இவருக்கு கூடவா சைக்கிள் பைத்தியம். அதுசரி சிறுவர்களாகிய எங்களுக்கே சைக்கிள் பைத்தியம் இருக்கும்போது பெரியவர்களுக்கு இருக்காதா?

பல வருடங்கள் முன்பு நடந்த அந்த சைக்கிள் பற்றிய நினைவுகளை எல்லாம் இப்போது அசைபோட காரணம் இருக்கிறது. இன்று காலையில் சென்னை கேகேநகரில் ஒரு சைக்கிள் விபத்தை பார்த்தேன். ஷேர்ஆட்டோ ஓட்டிகொண்டு வந்த யாரோ ஒருத்தன் சைக்கிள்காரனை இடித்து கீழே தள்ளிவிட்டான். நல்லவேளை சைக்கிள்காரனுக்கு பெரிய அடி எதுவும் இல்லை. ஆனால் சைக்கிள் முன்சக்கரம் நசுங்கி கிடந்தது. அந்த சைக்கிள் பார்க்க பொம்மை சைக்கிள் போல இருந்தது. ஐந்து வயது சிறுவன் கூட அநாயசமாக ஒருகையால் தூக்கிவிடுவான் என்று தோன்றியது. இப்போது வரும் எந்த சைக்கிளுமே பழைய அட்லஸ்போல பலம்வாய்ந்த சைக்கிள் இல்லையோ என்று தோன்றியது. அந்த பழைய அட்லஸ் சைக்கிள்தான் எவ்வளவு கம்பீரமானது? எவ்வளவு எடை மிக்கது? ஒருமுறை நானும், ராஜேந்திரனும் சைக்கிள்கடைக்காரனிடம் கெஞ்சி கூத்தாடி அட்லஸ் சைக்கிளை வாடகைக்கு எடுத்து வந்தோம். கடைக்காரன் லேசில் தரவில்லை. ராஜேந்திரனிடம் காசு இல்லை. அவன் வீட்டில் மூன்றுவேளை சமைப்பதே பெரிய விஷயம். நான்தான் தீனி வாங்கி தின்ன அம்மா கொடுத்த தினந்தோறும் கொடுக்கும் காசுகளை மிச்சம் பிடித்து வைத்திருந்தேன். அந்த காசை வைத்துக்கொண்டு வார இறுதியில் வாடகை சைக்கிள் எடுத்து ஓட்டுவோம். சின்ன பசங்க சைக்கிள் பழக என்று சின்ன சைக்கிள் ஒன்று இருக்கும். அதை பார்த்தாலே எனக்கு பிடிக்காத்து. அது ஏதோ சர்க்கஸில் வரும் பபூன் போல கோமாளியாக தெரியும். எனக்கு பெரிய சைக்கிள் ஓட்டத்தான் ஆசை. ஆனால் கால் எட்டாது. குரங்குப்பெடல் போட கேட்டால் கூட கடைக்காரர் தரமாட்டார். அதை எங்களிடம் கொடுத்தால் பெரும்பாலும் பெரியவர்களுக்கு வேறு வாடகை சைக்கிள் இருக்காது. தவிர பெரிய சைக்கிளை எடுத்துக்கொண்டு போகும் சிறுவர்கள் கற்றுக்கொள்ளும்போது சைக்கிளை கீழே போட்டு ஏதாவது சேதமடைந்தால் என்ன செய்வது? அதற்கு பயந்துதான் சிறுவர்களாகிய எங்களுக்கு எந்தக்கடையிலும் யாரும் பெரிய சைக்கிளை வாடகைக்கு தருவதேயில்லை.

ஆனால் அன்று ஏதோ பெரிய மனது வைத்து சைக்கிள்கடைக்காரர் எங்களுக்கு அட்லஸ் சைக்கிளை கொடுத்தார். நானும், ராஜேந்திரனும் அந்த சைக்கிளை ரயிலடி பின்னால் இருந்த குட்ஷெட்டுக்கு தள்ளிக்கொண்டுச் சென்றோம். அங்குதான் பகலில் கூட அவ்வளவாக ஆள் நடமாட்டம் இருக்காது. பெரும்பாலும் ரயில்வே போர்ட்டர்கள் அரிசி குடோன் முன்பு இருக்கும் ஆலமரத்தடியில் உட்கார்ந்து ஆடுபுலி ஆட்டம் ஆடிக்கொண்டிருப்பார்கள். இல்லாவிட்டால் நன்றாக குறட்டைவிட்டு தூங்கிக்கொண்டிருப்பார்கள். அவர்களை தவிர வேறு யாரும் அங்கு வரமாட்டார்கள். நாங்கள் இருவரும் அங்குதான் சைக்கிளில் குரங்குபெடல் போட கற்றுக்கொண்டோம். சின்ன சைக்கிளை நாங்கள் அருமையாக ஓட்டுவோம். ஏன் கைகளை ஹேண்டில்பாரிலிருந்து எடுத்து அகல விரித்தபடியே கூட ஓட்டுவோம். ஆனால் பெரிய சைக்கிளை முதலில் ஓட்டப்பழகிக்கொண்டது அன்றுதான். அன்றுதான் ராஜேந்திரன் என்னிடம் திட்டமொன்றை சொன்னான். முதலில் எனக்கு பயமாக இருந்தாலும் அதில் இருந்த சாகசம் என்னை கவர்ந்தது. ஒரு பெரிய பாறாங்கல் அருகே சைக்கிளை கொண்டுச்சென்றோம். நான் சைக்கிளை பிடித்துக்கொள்ள ராஜேந்திரன் பாறாங்கல் மேல் ஏறி சீட்டில் உட்கார்ந்தான். ராஜேந்திரன் என்னை விட உயரம். ஆனாலும் அவனது கால்கள் பெடலை எட்டவில்லை. உடம்பை வலதுபக்கம் லேசாக சாய்த்தும் எட்டவில்லை. அவனுக்கு பயம் வந்துவிட இறங்கி என்னிடம் சைக்கிளை கொடுத்தான். நான் சைக்கிள் மீது உட்கார்ந்தபிறகுதான் தெரிந்தது. பெடலுக்கும் எனது காலுக்கும் இடையே நான்கு அடியாவது இடைவெளி இருந்தது. டேய் டேய் என்று பயத்தில் கத்த அவன் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் சிரித்தபடியே என்னை சைக்கிளின் கேரியரில் கைவைத்து என்னை அப்படியே முன்னால் தள்ளிவிட்டான். நான் பயத்தில் கத்தியபடியே அவ்வளவு பெரிய சைக்கிளில் பயணம் செய்யும் எலிக்குஞ்சுபோல முன்னால் சென்றுக் கொண்டிருந்தேன். முன்னால் வேறு பெரிய மண்சரிவு. சரிவில் வண்டி உச்சக்கட்ட வேகத்தில் இறங்கியது. எப்படி சைக்கிளை நிறுத்துவது? பிரேக் போட்டாலும் தரையில் காலை ஊன்ற முடியாது. தடுமாறிக்கொண்டிருக்க சைக்கிள் அப்படியே வலதுப்பக்கம் விழுந்தது. நான் தரையில் ரத்த சிராய்ப்புகளுடன் கிடக்க எனது தொடையின் மேல் அந்த கனத்த சைக்கிள் கிடந்தது. அப்போதுதான் அட்லஸ் சைக்கிளின் பலம் புரிந்தது. முரட்டு இரும்பை ஆலையில் உருக்கி வார்ப்புகளில் ஊற்றி தயார் செய்யப்பட்ட எல்லா அட்லஸ் சைக்கிள்களும் அப்போது ஒரே நிறத்தில்தான் இருந்தன. ஒரு துளிக்கூட பிளாஸ்டிக் இல்லை. இப்போதெல்லாம் கலர்கலராக நிறைய பிளாஸ்டிக் சைக்கிள்கள் வந்துவிட்டன.

அது போன்ற ஒரு பிளாஸ்டிக் சைக்கிளை ஓட்டி வந்த ஆளைத்தான் கேகே நகரில் பார்த்தேன். ஷேர் ஆட்டோ மோதியதில் ஜிம்னாஸ்டிக் செய்யும் பெண்களின் பாவனைபோல விநோதமான தோரணையில் உடம்பை வளைத்து கிடந்தது. அன்று அந்த அட்லஸ் வாடகை சைக்கிள் அவ்வளவு பெரிய மண்சரிவிலிருந்து கீழே விழுந்தும் ஹெட்லைட் மட்டும் உடைந்துப்போனது. அந்த வாடகை சைக்கிள் கடைக்காரன் எனது அப்பாவிடம் சொல்ல அன்று எனக்கு வீட்டில் பிரம்படி விழுந்தது. மறுநாள் எனக்கு காய்ச்சல் வந்தது. ஒரு வாரம் பள்ளிக்கூடம் செல்லவில்லை. எனது படுக்கையருகே அமைதியாக நடந்து வந்த அப்பாவை பார்த்து “எங்களை ஒரேடியா கொன்னுடுங்க” என்று அம்மா சீறிக்கொண்டு வந்தார். அப்பா சட்டையை எடுத்து அணிந்து மவுனமாக வீட்டை விட்டு வெளியே சென்றதையும் படுக்கையில் படுத்தபடியே பார்த்துக்கொண்டிருந்தேன். அதற்கு பிறகு அட்லஸ் சைக்கிளை பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஏக்கமாக இருக்கும். அந்த ஏக்கம் எப்படி மறைந்தது என்று நினைத்துப்பார்த்தால் சரியாக சொல்ல தெரியவில்லை.

இப்போது என்னிடம் போர்டு கார் இருக்கிறது. அட்லஸை விட பலமடங்கு கனத்த உருவம் கொண்ட அசுரன். சைக்கிள் மேலே விழுந்தால் கூட உயிருக்கு ஒன்றும் நேராது. ஆனால் கார் விழுந்தால்? சைக்கிளை விட கார்தானே வலிமையானது? ஒருநாள் ஈசிஆரில் இருக்கும் மாயாஜாலுக்கு படம் பார்க்க மனைவியோடு காரில் சென்றிருந்தேன். ஓர் இளைஞன் பல்சரில் நூறு கிலோமீட்டர் வேகத்தில் வந்து திரையரங்கு வாசலில் சடன்பிரேக் அடித்தான். பல்சரின் முன்சக்கரம் தாழ்ந்து பின்னிருக்கை சற்று உயர்ந்து நின்றது. பல்சரின் பின்னால் உட்கார்ந்திருந்த ஜீன்ஸ் அணிந்த அழகான இளம்பெண்ணொருத்தி வாவ் என்று அதீத திகைப்புடன் அவனை இறுக்கி கட்டிக்கொண்டாள். எனது மனைவி என்னிடம் “நீங்க ஏன் இருசக்கர வாகனம் வாங்கக்கூடாது?” என்று கேட்டாள். பெண்களுக்கு காரைவிட இருசக்கர வாகனம்தான் பிடிக்கிறது என்று எனக்கு அன்றுதான் தெரிந்தது. அன்றிலிருந்து கார் மீதான எனது பார்வை மாறிப்போனது. நான் பத்தாவது படிக்கும்வரை எனக்கு கிளர்ச்சியூட்டும் கனவொன்று அடிக்கடி வரும். ஏதாவது ஒரு பெண்ணை சைக்கிளின் முன்பக்கம் இருக்கும் முன்பாரில் உட்கார வைத்து நான் ஊருக்கு வெளியே தனியாக காடு,மலை என்று சைக்கிள் ஓட்டிச்செல்வது போல. அப்படி சைக்கிள் ஓட்டிச்செல்லும்போது அந்த பெண்ணின் உடலோடு எனது தொடைகள் உரசும்போது பெரும்பாலும் கனவிலிருந்து விழித்துக்கொள்வேன். உடம்பு வியர்த்து தொண்டை வறட்சியாக உணர்வேன். எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தகிக்கும் அந்த வேட்கை அடங்காமல் தூக்கமும் வராமல் அவஸ்தையாக இருக்கும். இப்போது சைக்கிள் பற்றிய எந்த நினைவுகளும் என்னை வருத்தம் கொள்ள செய்வதில்லை. எப்போதாவது அபூர்வமாகவே கனவுகள் வரும். அதில் சைக்கிள் வராது. மனிதனுக்கு ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு பொருள் மீது காதல். ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு கனவுகள். வெளியில் சொல்லமுடியாத எத்தனையோ ஏக்கங்கள்.

சென்னையில் சைக்கிள் ஓட்டிச்சென்றால் சிரிப்பார்கள். சென்னையில் பெரும்பாலும் சேரிமக்களே சைக்கிள் ஓட்டுகிறார்கள் என்பது எனது கண்டுபிடிப்பு. நான் அமெரிக்காவுக்கும்,ஜெர்மனிக்கும் அலுவலக வேலை நிமித்தம் சென்றிருக்கிறேன். அங்கு எனது பிராஜக்ட் மேனேஜர்கள் சிலர் ஒருசில நாட்களில் சைக்கிளில் அலுவலகம் வந்துச்செல்வதை பார்க்க வியப்பாக இருக்கும். அமெரிக்கர்களுக்கு பிறகு சென்னையில் இருக்கும் விளம்புநிலை மனிதர்கள்தான் வெட்கப்படாமல் சைக்கிள் ஓட்டுகிறார்கள் என்பது எனது கண்டுபிடிப்பு. பொருளாதாரத்தில் முன்னேறிய மக்களுக்கும் சைக்கிள் பிடித்திருக்கிறது. ஏழைகளுக்கும் சைக்கிளே உற்றத்தோழன். ஏன் சென்னையில் இருக்கும் நடுத்தரமக்கள் பலருக்கும் சைக்கிள் வாங்கி ஓட்ட வெட்கமாக உள்ளது என்று யோசித்ததுண்டு. கேகேநகரில் இன்று காலை ஒரு சைக்கிள் விபத்தை பார்த்தேன் என்று சொன்னேன் அல்லவா? அந்த பொம்மை சைக்கிளை போன்றே மேலும் சில பொம்மை சைக்கிள்களை எனது வீட்டருகே பள்ளிச்சிறுமிகள் ஓட்டி கவனித்துள்ளேன். அந்த சைக்கிள்களில் பிஎஸ்ஏ என்று பொறிக்கப்பட்டிருப்பதை பார்த்து திகைப்பாக இருந்தது. ஒருவேளை இப்போது உறுதியான முரட்டு இரும்பை விட கவர்ச்சியான வண்ண சைக்கிளைத்தான் மக்கள் விரும்புகிறார்களோ?

அட்லஸ் சைக்கிள் பற்றி நினைக்கும்போதெல்லாம் எனக்கு ஹெர்குலிஸ் என்ற இன்னொரு சைக்கிள் நினைவுக்கு வரும். இதுபற்றி அப்போது எங்களுக்குள் பெருந்த சண்டையே நடக்கும். அட்லஸ் சைக்கிளில் இருக்கும் மாவீரனின் லோகோவை சிலர் ஹெர்குலிஸ் என்று தவறாக நினைத்ததுண்டு. சேதுராமனின் அப்பா ஒரு சைக்கிள் வாங்கியிருந்தார். அந்த சைக்கிளின் பெயர் ஹெர்குலிஸ். எனக்கும்,ராஜேந்திரனுக்கும் ஏனோ ஹெர்குலிஸ் சைக்கிளை பிடிக்காது. ஆனால் சேதுராமன் எங்களை கிண்டல் செய்துக்கொண்டே இருப்பான். ஹெர்குலிஸ்தான் மாவீரன், அட்லஸ் வீரன் இல்லை என்று சொல்வான். எங்களுக்கு வரலாறு பாடம் எடுத்த சொக்கலிங்கம் சார்தான் அந்தக்கதையை எங்களுக்கு சொன்னார். அந்தக்கதையை கேட்டபிறகும் சேதுராமன் எங்களிடம் ஹெர்குலிஸ்தான் மாவீரன் என்றே தொடர்ந்து வாதிட்டான்.

முன்னொரு காலத்தில் இந்த உலகத்தில் பிரம்மாண்டமான, வலிமையான உடலை கொண்ட ஒரு மனித இனம் இருந்தது. அந்த இனத்திற்கு ‘டைடன்ஸ்’ என்று பெயர். அதில் இனத்தில் ஒருவன்தான் அட்லஸ்.

ஒருமுறை டைடன்ஸுகளுக்கும், கிரேக்க கடவுள்களுக்கும் பெரிய யுத்தம் ஆரம்பித்தது. அதில் டைடன்கள் அனைவரும் தோற்றுப்போய் கடவுளர்களால் தண்டிக்கப்பட்டனர். அவ்வளவு பெரிய தண்டனையை அட்லஸ் என்ற மாவீரன் தனது இனத்துக்காக ஏற்க தானாகவே முன்வந்தான். தனது தோளில் பூமியை தூக்கி சுமக்க வேண்டும் என்பதுதான் அட்லஸுக்குக் கிடைத்த தண்டனை. அட்லஸ் அந்த தண்டனையை ஏற்று பல பல யுகங்கள் தனது தோளில் பூமியை சுமந்துகொண்டு நின்றிருந்தான்.

ஒருநாள் இன்னொரு கிரேக்க மாவீரன் ‘ஹெர்குலிஸ்’ அட்லஸை சந்திக்க வந்தான். ஹெர்குலிஸ் கிடைத்தற்கரிய தங்க ஆப்பிள்களை தேடி அலைந்துக்கொண்டிருந்தான். ஆனால் அந்த ஆப்பிள்கள் இருக்குமிடத்தை அட்லஸ் மட்டுமே அறிவார். அதனால் அட்லஸ் ஹெர்குலிஸிடம் தான் சென்று அந்த ஆப்பிள்களை கொண்டு வருவதாகவும் அதுவரை பூமியை சுமக்கும்படியும் கேட்டுக் கொண்டார். அட்லஸைப் போலவே ஹெர்குலிஸும் பெரிய கனத்த உருவத்துடனும்,மாவீரனாகவும் இருந்ததால் பூமியை சுமக்க ஒப்புக்கொண்டான்.

பல யுகங்கள் கழித்து அட்லஸ் தங்க ஆப்பிள்களுடன் திரும்பி வந்தபோது, ஹெர்குலிஸ் பூமியை தூக்கமுடியாமல் வியர்த்து தடுமாறிக்கொண்டு இருந்தான். அப்போதுதான் அட்லஸுக்கு பூமியைத் தூக்கி சுமப்பது எத்தனை கடினமான காரியம் என்று புரிந்தது.

எதாவது தந்திரம் செய்து ஹெர்குலிஸையே பூமியை சுமக்கும்படி செய்துவிட்டுத் தான் சுதந்திர மனிதனாக இருக்கலாம் என்று அட்லஸ் நினைத்தான். ஆனால் அட்லஸ் மனதில் நினைத்தது ஹெர்குலிஸுக்குத் தெரிந்துவிடுகிறது. அட்லஸிடம் சற்று நேரம் மட்டும் இந்த பூமியை பிடித்துக்கொள். எனது ஒரு தோளில் இருந்து இன்னொரு தோளுக்கு மாற்றி வைத்துக்கொள்கிறேன். உதவி செய் என்று சொல்ல . அட்லஸ் அதை நம்பி ஹெர்குலிசிடம் இருந்து பூமியை வாங்குகிறான். பூமியை கொடுத்தும் ஹெர்குலிஸ் அங்கிருந்து ஓடிவிடுகிறான்.

திகைத்துப்போன அட்லஸ் வேறுவழியில்லாமல் யுகயுகமாக தனது பாரத்தை சுமந்தபடியே மலையாக சமைந்துவிடுகிறான். வடமேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள மலைகள் ‘அட்லஸ் தி டைடன்’ என்றே அழைக்கப்படுகின்றன. அம்மலைகள் இன்றும் சொர்க்கத்தை தூக்கிப் பிடித்திருப்பதாக நம்பப்படுகிறது.

சொக்கலிங்கம் சார் எங்களிடம் சொன்ன கதை இதுதான். பல வருடங்கள் சென்றபிறகும் இன்றும் அந்த கிரேக்க கதை அதே காவியச்சுவையுடன் என்னை வசீகரிக்க வைக்கிறது. சில நாட்கள் சென்றபிறகு சேதுராமனின் தாத்தா அவனிடம் ஒரு கதை சொன்னதாக எங்களிடம் சொன்னான். அந்த புராணக்கதையில் ஒரு கடவுள் பன்றி அவதாரம் எடுத்து உலகத்தை தாங்கி பிடித்ததாக சொன்னான். பன்றி எப்படி உலகத்தை தூக்கமுடியும் என்று எதிர்கேள்வி கேட்டோம். அவனுக்கு சரியாக பதில் சொல்ல தெரியவில்லை.

எனது வாழ்க்கையில் மறக்கமுடியாத நாளென்று ஒன்றை சொல்ல வேண்டும். அது நான் எனது சித்தப்பாவின் அட்லஸ் சைக்கிளை எடுத்து ஓட்ட ஆரம்பித்த தினம். நன்றாக நினைவுள்ளது. அன்று அப்பா ஊரில் இல்லை. வேலைக்குச் சென்றிருந்தார். வேலைக்கு கிளம்பிச்செல்வதற்கு முன்பு “தம்பியாடி அவன். குடும்ப மானத்தையே வாங்கிட்டான்” என்று சொல்லிவிட்டு அம்மாவின் முடியை இழுத்துப்போட்டு அடித்தார். எதற்கு அம்மாவை அடிக்கிறார் என்று தெரியாமல் நான் நடுக்கத்துடன் சுவர்பல்லி போல கட்டிலின் மூலையில் தொடைநடுங்க ஒளிந்துக்கொண்டேன். எனது டவுசரில் இரண்டொரு சொட்டு சிறுநீர் கூட கழித்துவிட்டேன். அப்பா கோபத்துடன் கிளம்பி வேலைக்கு கிளம்பிவிட்டார். அன்று அப்பா கையில் டிபன்பாக்ஸ் இல்லை. வாசல்வரை சென்ற அப்பா “மானங்கெட்டவன். அவன் வீட்டுப்பக்கம் போனா உன்னை வெட்டி போட்டுடுவேன். எனக்கே தம்பி இல்லைன்னு ஆச்சு. உனக்கு என்னடி பாசம். பத்துமாசம் சுமந்து பெத்தவ மாதிரி” என்று ஊருக்கே கேட்கும்படி கத்திவிட்டு ரபப்ர் செருப்பை காலில் மாட்டிக்கொண்டு விடுவிடுவென தெருவில் இறங்கி நடந்துப்போனார்.

அவர் சென்றபிறகு நான் கட்டில் மூலையிலிருந்து வெளியே வந்தேன். எனது உடம்பு நடுங்கிக்கொண்டிருந்தது. அம்மா என்னை பார்த்து கைகளை நீட்டினார். நான் கோழிக்குஞ்சு போல குடுகுடுவென ஓடிச்சென்று அம்மாவின் கைகளுக்குள் எனது சின்ன உடலை புதைத்துக்கொண்டேன். அம்மாவின் இளஞ்சூடு எனக்கு ஆசுவாசமாக இருந்தது. வெகுநேரம் வரை விசும்பிக்கொண்டிருந்த அம்மா ஏதோ தீர்மானமாக எழுந்து முகம் கழுவி என்னை அழைத்துக்கொண்டு சித்தப்பா வீட்டுக்கு கிளம்பிச்சென்றார். சித்தப்பா வீட்டுக்குள் சோகமாக உட்கார்ந்திருந்தார். வீட்டு திண்ணையில் ஆண்களில் சிலர் ஏதேதோ பேசிக்கொண்டும், கத்திக்கொண்டும் உட்கார்ந்திருந்தார்கள். சிலர் அமைதியாக இருந்தார்கள். அவர்களில் பலர் எங்கள் தூரத்து உறவினர்கள். அக்கம்பக்க வீட்டிலிருந்த பெண்கள் ரகசியமாக ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்து ஏதோ அவர்களுக்குள் கிசுகிசுத்துக்கொண்டிருந்தார்கள். திண்ணையில் உட்கார்ந்திருந்த ஆண்களை பார்த்த சில பெண்கள் அவசரமாக ஜன்னலை மூடிக்கொண்டார்கள். அம்மா வேகமாக சித்தப்பாவின் வீட்டுக்குள் நுழைந்தார். நேராக சமையல்கட்டுக்கு சென்று வயர்கூடையை எடுத்த அம்மா தெருவில் இறங்கி நடந்தார். தெரு முனையில் பெட்டிக்கடை இருந்தது. பால்பாக்கெட்டுடன் திரும்பி வந்த அம்மா வீட்டுக்குள் நுழைந்து காபி போட்டு மணக்க மணக்க எடுத்து வந்தார். சித்தப்பா குடிக்கவில்லை. திண்ணையில் அமர்ந்திருந்த ஆண்கள் அனைவரும் வீட்டுக்குள் வந்து சித்தப்பாவை வற்புறுத்தி குடிக்க வைத்தார்கள். சித்தப்பா அழுதபடியே காபியை குடித்தார். வந்திருந்தவர்கள் எல்லாரும் மெல்ல மெல்ல கலைந்துப்போனார்கள்.

நான் சித்தப்பாவின் வீட்டுக்குள் போகாமல் தெருவில் திண்ணையை ஒட்டி நின்றுக்கொண்டிருந்த சைக்கிள் பக்கத்திலேயே நின்றுக்கொண்டிருந்தேன். அந்த அட்லஸ் உருவத்தின் மீதான காதல் எனது மனதில் நாள்தோறும் வளர்ந்துக்கொண்டே சென்றது. அட்லஸ் சாதாரண ஆள் இல்லை. புலிவாலை கையால பிடிச்சு அந்தரத்துல சுழற்றி தரையில அடிப்பான். மலையை பெயர்த்து கடலுக்குள்ள வீசுவான் என்று ராஜேந்திரன் சொன்னதே மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. இருக்காதா பின்ன. உலகத்தையே தோளில வச்சு தூக்கிட்டானே என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது சித்தப்பா உள்ளிருந்து வந்தார். அவர் முகம் வீங்கி கண்கள் கருத்துப்போய் கிடந்தன. அவர் கையில் சைக்கிளின் சாவி இருந்தது. என்னால் நம்பவே முடியவில்லை. சித்தப்பாதானா? காற்றில் மிதப்பதுபோல உணர்ந்தேன்.

சந்தோஷத்துடன் சாவியை வாங்கிக்கொண்டு குரங்குப்பெடல் போட்டுக்கொண்டே பக்கத்துக்கு தெருவுக்கு வந்தேன். ராஜேந்திரன் கண்கள் அகலவிரித்தபடியே ஆச்சர்யத்துடன் என்னை நோக்கி ஓடிவந்தான்.

“டேய்…எப்படிடா உங்க சித்தப்பா சைக்கிளை கொடுத்தார்?”

“அதாண்டா எனக்கும் தெரியல. ஒரே சந்தோஷமா இருக்கு”

சைக்கிள் ஹெட்லைட்டில் புதுமஞ்சள் துணி சுற்றியிருந்தது. இரண்டு வீல்களிலும் நடுவில் தூசிபடியாமல் இருக்க மாட்டிவிட்டிருந்த கலர்ப்பூ பார்க்க கவர்ச்சியாக இருந்தது. ராஜேந்திரன் முன்வீலில் இருந்த கலர்ப்பூவை தொட்டு பார்த்துவிட்டு பறவை றெக்கை மாதிரி கலர் கலரா இருக்குடா என்றான். நாங்கள் நின்று பேசிக்கொண்டிருந்த தெருவில் எங்கள் பக்கவாட்டில் இருந்த சைக்கிள் கடை பூட்டிக்கிடந்தது.

“சைக்கிள கொடுத்ததுக்கு உங்க சித்தப்பா ஒண்ணும் சொல்லலையாடா?”

ராஜேந்திரன் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று நான் அன்று பெரிதாக யோசிக்கவோ, கவலைப்படவோ இல்லை. என் கண்கள் எல்லாம் சைக்கிளின் மீதே பதிந்திருந்தன. நான் இருட்டும்போதுதான் சித்தப்பா வீட்டுக்கு சென்றேன். சித்தப்பா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். சைக்கிளின் சாவியை சித்தப்பாவிடம் கொடுத்தேன்.

“நீயே வச்சுக்கடா. வீட்டுக்கு எடுத்துட்டுப்போ’ என்றார். எனக்கு திகைப்பாக இருந்தது. நம்பமுடியாமல் அவர் என்னிடம் கொடுத்த சாவியை வாங்கிக்கொண்டு வாசலுக்கு வந்தேன். ஹாலில் மாட்டியிருந்த சித்தப்பா திருமணப்போட்டோவை காணவில்லை. அடுத்தடுத்த நாட்களில் நானும், ராஜேந்திரனும் பூட்டிக்கிடந்த சைக்கிள்கடை பின்னாலிருந்த காலித்திடலில் உற்சாகமாக கத்தியபடியே சைக்கிளை மாற்றி மாற்றி கொண்டாட்டத்துடன் கால்வலிக்கும்வரை ஓட்டினோம்.


Sunday, July 27, 2014

சென்னை மாநகர வெளியில் ராஜீவ் காந்தி சாலை

நன்றி:- ந.முருகேச பாண்டியன்

தமிழ் இந்துவில் ராஜீவ்காந்தி சாலை நாவல் பற்றிய ஒரு விமர்சனம் வெளிவந்துள்ளது. நண்பர்கள் பார்வைக்கு...  


சென்னை நகரைச் சுற்றிலும் இயற்கை எழிலுடன் விளங்கிய கிராமங்கள் நகரமயமாதலின் காரணமாக இன்று சிதிலமாகிக்கொண்டிருக்கின்றன இயற்கை வளமான பிரதேசத்தின் ஊடே மாமல்லபுரத்தினை நோக்கிச் செல்லும் ராஜீவ் காந்தி சாலை வெறுமனே போக்குவரத்திற்கானது மட்டுமல்ல.

பாரம்பரியமான கிராமங்கள், ஐ.டி. கம்பெனிகள் என இரு வேறு உலகங்களைப் பிரிக்கும் எல்லையாக ராஜீவ் காந்தி சாலை விளங்குகிறது. பன்னாட்டுத் தகவல்தொடர்புக் கம்பெனிகளின் வருகையினால் செம்மஞ்சேரி, பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் போன்ற பாரம்பரியமான கிராமங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை முன்வைத்து விநாய முருகன் எழுதியுள்ள ராஜீவ் காந்தி சாலை அண்மையில் தமிழுக்கு வந்துள்ள முக்கியமான நாவலாகும்.

கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர்கூட செம்மஞ்சேரி கிராமத்திற்கு அப்பால் எளிய கிராமிய வாழ்க்கை நிலவியது . இன்று ஆறு வழிப் பாதைகளில் விரையும் வெளிநாட்டுக் கார்கள் வேறு உலகுக்கு அழைத்துச் செல்கின்றன. ஐ.டி. கம்பெனிகள் அடுக்கு மாடிகளில் வந்தவுடன், காலங்காலமாக அங்கு வாழ்ந்துவந்த மக்கள் காணாமல் போயினர். பெரிய வணிக வளாகங்கள், நட்சத்திர விடுதிகள், இறக்குமதியான கார்கள். அழகான இளைஞர்களும் இளைஞிகளும் எனச் சூழலே மாறிப்போனது.

கிராமத்தினர் தங்களுடைய விவசாய நிலங்களை விற்றுவிட்டு, மாறிவரும் பண்பாட்டு மாற்றத்தினை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ரியல் எஸ்டேட்காரர்கள் சிறிய நிலவுடைமை யாளர்களைத் தந்திரமாக ஏமாற்றிக் கைப்பற்றிய விவசாய நிலத்தின் மூலம் பெரும் கோடீஸ்வரர்களாக ஆயினர். தங்கவேலு செட்டியார், அன்னம், ராசு படையாச்சி போன் றோர் பூர்வீக நிலங்களில் இருந்து துரத்தியடிக்கப்பட்டுச் சிறிய கடைகள் வைத்துப் பிழைக்கின்றனர். குடும்ப உறவுகளின் சிதைவில் மனித மதிப்பீடுகள் சிதலமடைகின்றன.

நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிக்கொண்டு சாப்ட்வேர் கம்பெனிகளில் பணியாற் றும் இளைஞர்களும் உற்சாகமாக இல்லை. எப்போதும் வேலையிலிருந்து நீக்கப்படலாம் என்ற பதற்றத்துடன் பணி யாற்றுகிறவர்களைப் பயம் நிழலாகத் தொடர்கிறது. நிறுவனங்களில் பணம், அதிகாரப் போட்டிக்காக நடை பெறும் சம்பவங்கள் அலுவலர்களின் மன அமைதியைச் சிதைக்கின்றன. அழகிய இளம் பெண்கள், காதல், குடும்பம் என வாழும் இளைஞர்கள் ஆடம்பர மனநிலையுடன் வாழ முயலுகின்றனர்.

பத்தாண்டுப் பணியில் முப்பதாண்டு முதுமையை ஏற்படுத்தும் மென்பொருள் கம்பெனியின் வேலைப் பளு பற்றி அழுத்தமான கருத்துகளை விநாயக முருகன் முன்வைத்துள்ளார். சாப்ட்வேர் கம்பெனிகளைச் சார்ந்து வாழும் அடித்தட்டு ஊழியர்கள், கார் ஓட்டுநர்கள் பற்றிய விவரிப்பு ஐ.டி. நிறுவனங்கள் பற்றிய இன்னொரு பிம்பமாகும்

ஆணும் பெண்ணும் சேர்ந்து பணியாற்றும் ஐ.டி. நிறுவனங்களில் நடைபெறுவதாக மிகைப்படுத்திச் சொல்லப்படும் பாலியல் சீரழிவுகள் பொதுப்புத்தி சார்ந்தவை. ஆண்-பெண் சேர்ந்து பணியாற்றுகின்ற பிற நிறுவனங்களில் நடைபெறுகின்ற சம்பவங்கள் போலத்தான் சாப்ட்வேர் கம்பெனிகளிலும் நிகழ வாய்ப்புண்டு. ஆனால் நாவல் முன்னிறுத்தும் பாலியல் சம்பவங்கள் சராசரி மனிதர்களுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தும். என்றாலும் மனிதர்கள் இப்படியெல்லாம் தங்களுடைய வாழ்க்கையைச் சீரழித்துக் கொள்வது ஏன் என யோசிக்க வைக்கிறது நாவல்.

வளமான பொருளியல் வாழ்க்கை, வசதியான வீடு, நட்சத்திர விடுதிகள், அமெரிக்கா பயணம் என வாழும் சாப்ட்வேர்காரர்களின் இன்னொரு முகம் கொண்டாட்டமானது. சாதியை மறுத்து காதல் திருமணம் செய்து கொண்டு புதிய தடத்தில் பயணிக்கின்ற இளைய தலைமுறையினர் பற்றி நேர்மறையாகச் சித்திரிக்காதது நாவலில் பலவீனமான அம்சம்.

மனப் பிறழ்வடைந்து சாலையில் சுற்றித் திரிவோர், உயரமான கட்டி டதில் இருந்து குதித்துத் தற்கொலை செய்கிறவர்கள் என நாவல் வாழ்வின் இருண்ட பக்கங்களை விவரித்துள்ளது. எல்லாவற்றிலும் அவசரம் என வேகம்வேகமாகத் தேடி அலையும் மனிதர்கள் மனப் பிறழ்வடைவது இயல்பாக நடைபெறலாம் என நாவலாசிரியர் எச்சரிக்கிறார். நகரத்தின் பிரமாண்டமான வளர்ச்சி குறித்து மகிழ்ச்சி கொள்ளவிய லாமல், சூழலின் அபத்தம், வெறுமை குறித்துக் காத்திரமான சம்பவங்களை நாவல் முன்வைத்துள்ளது.

நானூறு வருடங்களாகக் கடலைத் தழுவி விரிந்துகொண்டிருக்கும் சென்னை மாநகரின் பதிவாக ராஜீவ் காந்தி சாலை நாவல் நீள்கிறது எனவும் வாசிக்கலாம்.

Saturday, June 7, 2014

மறைந்துப் போனவர்களின் நிழல்கள்


மலைகள்.காம் ஐம்பத்தொன்றாவது இதழில் "மறைந்துப் போனவர்களின் நிழல்கள்" என்ற சிறுகதை வெளியாகி உள்ளது. நண்பர்கள் பார்வைக்கு... 

Tuesday, May 6, 2014

நிலம் - ராஜீவ் காந்தி சாலை

(2014 ஆண்டுக்கான மலைச்சொல் விருது ராஜீவ் காந்தி சாலைக்கு வழங்கப்பட்டது. விருது வழங்கும் விழாவில் மதிப்புக்குரிய எஸ்.வி.ஆர் அவர்கள் வாசித்த கட்டுரை. இந்த கட்டுரை உயிர் எழுத்து ஏப்ரல் 2014 இதழில் ‘நிலம்’ என்ற கட்டுரையாக அச்சு வடிவத்தில் வெளியானது)

சென்னை நகரத்தில் நாற்பதாண்டுக் காலத்திற்கும் மேலாக வாழ்ந்த, தென் மாவட்டங்களைச் சேர்ந்த இரு முக்கியப் புனைவிலக்கியப் படைப்பாளிகள் தொடர்ந்து கிராமப்புறம் சார்ந்த படைப்புகளையே வழங்கி வந்துள்ளனர். அவை சிறந்த இலக்கியப் படைப்புகள் என்பதில் ஐயமில்லை. இருவரும் ஒருகாலத்தில் இடதுசாரி இயக்கத்தோடு த்டர்பு கொண்டிருந்தவர்கள். எனது மதிப்புக்கும் மரியாதைக்கும் என்றும் உரியவர்கள். அவர்களிலொருவர் சில வாரங்களுக்குமுன் என்னிடம் தொலைபேசியில் பேசும்போது, தனது சொந்த கிராமத்திற்குச் சென்று சில மாதங்கள் அங்கேயே தங்கி தான் எழுத உத்தேசித்துள்ள நாவலொன்றை எழுதப்போவதாகக் கூறினார். ‘மண் வாசனை’ மிக்க மற்றொரு நாவலாக அது வெளிவரும் என்றும் ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்காலத்தில் அவரது கிராமப்புறத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார, அரசியல், பண்பாட்டு மாற்றங்கள், இந்த மாற்றங்களுக்கெல்லாம் தாக்குப்பிடித்து இன்னும் உயிர்ப்போடு இருக்கும் சாதியக் கட்டமைப்பு ஆகியவை அந்த நாவலில் பதிவு செய்யப்படும் என்றும் எதிர்பார்ப்பதில் தவறில்லை. ஆனால் நாற்பது, நாற்பத்தைந்து ஆண்டுக்காலத்தில் சென்னை நகரில் ஏற்பட்டுள்ள மிகப் பிரமாண்டமான மாற்றங்களினூடாகத்தான் இந்த எழுத்தாளர்களின் வாழ்க்கையும் கழிந்திருக்கிறது. இந்த மாற்றங்கள் அவர்களது படைப்பு மனங்களில் ஏன் எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை என்னும் கேள்விக்கு என்னால் பதில் காண முடியவில்லை.


எனக்கும் சென்னைக்கும் ஏறத்தாழ 60 ஆண்டுக்கால உறவு. முறிந்துபோன கல்லூரிப் படிப்புக்காக இரண்டாண்டுகளும் பிழைப்புக்காகவும் அரசியல் பணிக்காகவும் 24 ஆண்டுகளுமாக இருமுறை தொடர்ச்சியாக சென்னையில் என் வாழ்வு கழிந்திருக்கிறது. 1955 இல் அறிமுகமான சென்னைக்கும் 2014 இல் உள்ள சென்னைக்குமுள்ள வேறுபாடு எனக்குள் திகைப்பையும் கோபத்தையும் வருத்தத்தையும் ஒன்றிணைக்கின்றன. என் கண் முன்னாலேயே நெல் வயல்கள் காணாமல் போயிருக்கின்றன; மாந்தோப்புகள் அழிக்கப்பட்டிருக்கின்றன; எத்தனையோ குளங்களும் ஏரிகளும் நிரப்பப்பட்டு அவற்றின் மேல் காங்கிரீட் காடுகள் முளைத்திருக்கின்றன; வேளச்சேரியிலிருந்து தொடங்கி கிட்டத்தட்ட மகாபலிபுரம் வரை பரந்துவிரிந்திருந்த காடுகளின் பரப்பு வெகுவாகவும் விரைவாகவும் வெட்டிக்குறுக்கப்பட்டு கிண்டி மான் பூங்காவாகச் சுருங்கியிருக்கிறது. அந்தக் காலத்தில் கட்டடங்களே தெரியாதவாறு சோலைகளால் சூழப்பட்டிருந்த சென்னை கிறிஸ்துவக் கல்லூரி வளாகமோ, அதைவிடச் சற்றுக் குறைந்த அளவில் இருந்தாலும் பசுமைக் கோலம் பூண்டிருந்த லயோலா, பச்சையப்பன் கல்லூரி வளாகங்களோ இன்று செம்மண் கோலம் பூண்டிருக்கின்றன. இன்ன இடம் என்று குறித்துச் செல்லப்படக்கூடிய பல ‘லேண்ட்மார்க்குகள்’ வரலாறாகிவிட்டன. ‘பாதசாரிகள்’ என்று ஒருகாலத்தில் அழைக்கப்பட்டு வந்த மனிதப் பிரிவுகளுக்கு இடமே இல்லாமல் செய்துவிட்டன அகலப் பாதைகள்; 1930 களில் சுயமரியாதை இயக்க முன்னணி வீரர் சா. குருசாமியுடன் சென்னையிலிருந்து மகாபலிபுரம் வரை படகில் சென்று வரவும் அந்த அனுபவத்தின் அடிப்படையில் பாரதிதாசனின் ‘ஓடப்பாட்டை’ எழுத வைத்ததுமான பக்கிங்ஹாம் கால்வாய் அடுத்த இருபதாண்டுகளுக்குள் மாசுப்பட்டுப் போயிருந்தாலும், 1950 களிலும்கூட ஆந்திராவரை சரக்குப் போக்குவரத்துப் படகுகளுக்குப் பயன்பட்டுவந்தது என்பதை நினைத்தாலே ஆச்சரியமாக இருக்கின்றது. திரு.வி.க. குளித்தெழுந்ததாகச் சொல்லப்படும் கூவம் எண்பதாண்டுகளுக்கும் மேலாகவே சாக்கடையாகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. எனினும் பல்லாயிரக்கணக்கான வக்கற்ற மனிதர்கள் தங்குமிடமாக இருந்த அதன் கரையோரங்களும்கூட அவர்களை வஞ்சிக்கும்படி செய்துவிட்டன. ஆளும் வர்க்கங்களின் ‘ அழகுத் திட்டங்கள்’ சென்னை நகரம் முழுவதையுமே ஒரேபடித்தான இரைச்சல் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. இந்த மாற்றங்களை உன்னிப்பாக அவதானித்து வந்த ஏதேனுமொரு படைப்பு மனம், அவற்றைப் புனைவிலக்கியமாக வடித்துத் தரும் இரசவித்தையில் ஈடுபடாதா என்னும் எதிர்பார்ப்பு என்னைப் போன்ற வாசகர்களுக்கு நீண்ட நாள்களாகவே இருந்துவந்தது. இந்த எதிர்பார்ப்பை மிக அருமையாக நிறைவு செய்திருக்கிறது விநாயக முருகனின் ‘ ராஜீவ் காந்தி சாலை’ (உயிர்மைப் பதிப்பகம், சென்னை, டிசம்பர் 2013, 328 பக்கங்கள், விலை ரூ 240/-)

‘ராஜீவ் கொலை’ தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அது ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை பல்வேறு அரசியல் கட்சிகளால் வெவ்வேறு வகைகளில் தங்கள் சொந்த அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல 1992 இல் நடந்த பாபர் மசூதி இடிப்பு, இந்திய சமூகத்தைக் கிடை நிலையிலும், செங்குத்து நிலையிலும் பிளவுபடச் செய்திருக்கிறது. 1984 இல் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து காங்கிரஸ் கட்சியின் ஊக்குவிப்போடு சீக்கியர்களின்மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்களின் காரணமாக சீக்கியர்கள் கணிசமான அளவில் பாஜக ஆதரவாளர்களாயினரே தவிர (இந்திய அரசுக்கு எதிரான சீக்கியப் போராளிகள் ஒடுக்கப்பட்டுவிட்டனர்) இந்துக்களுக்கும், சீக்கியர்களுக்குமிடையே பகைமை உருவாகவில்லை. 1991 , 1992 நிகழ்வுகள் இரண்டும் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் பெரிதும் பண்பாட்டுத்தளத்திலேயோ, அரசியல் தளத்திலேயோ உள்வாங்கப்பட்டு ‘மதச்சார்பின்மை-மதவாதம்’, ‘இந்திய தேசியம்-தமிழ் தேசியம்’ என்னும் எதிர்வுகளுக்குள், கிட்டத்தட்ட அனைத்து அரசியல் சொல்லாடல்களையும் சிறைபிடித்து வைத்துள்ளன.

இந்தச் சிறையிலிருந்து யதார்த்த நிலையை – பல இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வை, இயற்கை வளங்களை, நிலப்பரப்பை, சமூக உணர்வை, மரபான விழுமியங்களை புரட்டிப்போட்டுவிட்ட யதார்த்த நிலையை – எடுத்துக்காட்ட ‘ராஜீவ் கொலை’யிலிருந்து ‘ராஜீவ் சாலை’க்கு நம்மை அழைத்துவந்திருக்கிறார் விநாயக முருகன். தமிழகத்தில் மட்டுமன்றி, இந்தியா முழுவதிலும் முப்பதாண்டுகளுக்கும் மேலாக கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின், விவசாயிகளின், கீழ் – மத்தியதர வர்க்கத்தினரின் வாழ்க்கையைச் சீரழித்து வருகின்ற, அனைத்து மக்களின் ஆதாரத் தூணாக உள்ள இயற்கை வளங்களைச் சூறையாடுகின்ற நவ-தாராளவாதப் பொருளாதாரக் கொளைகை நரசிம்ம ராவின் ஆட்சிக்காலத்தில்தான் கொண்டுவரப்பட்டது என்றாலும் ,அந்த ஆட்சி ஏற்படுவதற்கு மூல காரணமாக இருந்தது ராஜிவ் கொலைதான்; இந்தப் பொருளாதாரக் கொள்கைக்கான பாதையை வகுத்துக் கொடுத்தவர் ‘அதி நவீன இந்தியாவின்’ பிம்பமாக முன் நிறுத்தப்பட்ட உயிரோடு இருந்த ராஜீவ் காந்திதான். ஆக, விநாயக முருகன் யதார்த்தமாகச் சித்தரித்துக் காட்டும் சென்னை ‘ராஜீவ் காந்தி சாலை’யை இன்றைய இந்தியா முழுவதற்குமேயான ஓர் உருவகமாகவும் நம்மால் காணமுடிகின்றது.

விநாயக முருகனுக்கு எதேனுமொரு குறிப்பிட்ட இடதுசாரிக் கருத்துநிலைக் கண்ணோட்டம் (ideological outlook) இருக்கிறதா என்பது நமக்குத் தெரியாது. ஆனால், முதலாளியப் பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்தும் பாரதூரமான மாற்றங்களைப் பற்றி, அவை மனிதர்களின் புறவாழ்வில் மட்டுமன்றி அகவாழ்விலும் ஏற்படுத்தும் மாற்றங்கள் பற்றி , சூழலியல் கேடுகள் பற்றி மார்க்ஸ், ஏங்கெல்சோடு இணைத்து எழுதிய ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’, அவர் தனியாக எழுதிய ‘பொருளாதார, தத்துவக் கையெழுத்துப் படிகள்’ , ‘மூலதனம்’, எங்கெல்ஸின் ‘டூரிங்குக்கு மறுப்பு’ போன்ற நூல்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் கூர்மையான அவதானிப்புகளும் அவற்றின் அடிப்படையில் அவர்கள் பொதுமைப்படுத்திக் கூறிய கருத்துகளும் இந்த நாவல் முழுவதிலும் இழையோடுவதை என்னால் உணரமுடிந்தது.


பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக சிறுசிறு மாற்றங்களை மட்டுமே கண்டுவந்த ஒரு பெரும் நிலக்காட்சி, நவீன முதலாளித்துவத்தின் முக்கியப் படைக்கலன்களிலொன்றான தகவல் தொழில்நுட்பத் தொழில் நிறுவனங்கள் நிறுவப்படும்போது அதன் நீண்டகால அடையாளத்தை ஒருசில ஆண்டுகளிலேயே இழந்துவிடுவதையும் அந்த நிறுவனங்களினதும் அவற்றில் பணிபுரியும் மனிதர்களினதும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் துணைத் தொழில்கள் பல முளைப்பதையும். மனிதனை மனிதன் தின்னவைக்கும் இந்த மாற்றங்கள் ‘வலியவரே எஞ்சுவர்’ (survival of the fittest) என்று டார்வின் இயற்கையில் கண்ட நியதி மானுட சமுதாயத்திற்குள் இயங்குவதையும் ‘காலம்’, ‘சாலைகள்’ ஆகியவற்றை முக்கியப் பாத்திரங்களாக கொண்டுள்ள இந்த நாவலின் முன்னுரையில் எடுத்த எடுப்பிலேயே கச்சிதமாகச் சொல்லிவிடுகிறார் நாவலாசிரியர்.

ராஜீவ்காந்தி சாலை எனப்படும் பழைய மகாபலிபுர சாலைக்கு நான் முதலில் சென்ற வருடம் 1996. அங்கு நடக்கும் பருவநிலை மாற்றங்களை கவனித்து வருகிறேன். அங்கிருந்து புலம் பெயர்ந்து சென்ற மனிதர்களோடு தேநீர் அருந்தியுள்ளேன். அங்கு புதிதாக வந்து சேர்ந்த மனிதர்களோடு வேலை செய்துள்ளேன். செய்துக் கொண்டிருக்கிறேன். மத்திய கைலாஷுக்கும், சிறுசேரிக்கும் தினமும் ஷேர் ஆட்டோக்களில், ஏசி பேருந்துகளில், அலுவலக பேருந்துகளில் என்று மாறி மாறி பயணம் செய்திருக்கிறேன். அந்த சாலையின் ஆன்மாவை பதினேழு ஆண்டுகளாக கவனித்துக்கொண்டிருக்கிறேன். சாலைகளுக்கு உயிர் உண்டு. அதற்கும் கதைகள் உண்டு. பதினேழு வருடங்களுக்கு முன்பு ஏன் ஐந்து வருடங்கள் முன்பு வரை கூட செம்மஞ்சேரி தாண்டி கிராமங்களாகத்தான் இருந்தன. அப்போதெல்லாம் அங்கு எதுவும் இருக்காது. எதுவும் இருக்காது என்றால் நவீன வெளிநாட்டு கார்கள் இருக்காது. ஆறு லேன்கள் இருக்காது. ஐடி கம்பெனிகள் இருக்காது. உணவு விடுதிகள் இருக்காது. அடுக்குமாடி குடியிருப்புகள் இருக்காது. முக்கியமாக இவ்வளவு பைத்தியங்கள் அங்கு இருந்ததில்லை. ஐடி கம்பெனிகள் கட்ட அங்கு இடம் தேர்வு செய்யப்பட்டவுடன் அங்கிருந்த மனிதர்கள் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்து சென்றதையும், பலர் விவசாய வேலைகளை விட்டுவிட்டு ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கியதையும் (பார்த்தேன்) , ஐடி கம்பெனிகள் வந்தவுடன் மிகப்பெரிய வணிக வளாகங்கள், உணவு விடுதிகள் வந்தன. நவநாகரீக மனிதர்கள் இறங்கினார்கள். அழகான இளம் பெண்கள் வந்தார்கள். இறக்குமதிக் கார்கள் வந்தன. அதையெல்லாம் அங்கு காலங்காலமாக குடியிருந்த எளிய கிராமத்து மனிதர்கள் வியப்போடும், திகைப்போடும் பார்த்தார்கள். ஒரு பெருநகரம் எப்படி உருவாகியது, அது அங்கு என்னவிதமான பண்பாட்டு தாக்குதல்களை நடத்தியது,எப்படி மனிதர்களை மாற்றியது என்பதை மிக நெருக்கமாக அருகிலிருந்து பார்த்துள்ளேன். என் கண்முன்னேதான் அவையெல்லாம் நடந்தன. தற்கொலை செய்துக் கொள்வதற்கும், பைத்தியம் பிடிப்பதற்கும் உள்ள இடைவெளி அதிகம் இல்லை. நூலளவுதான்”. மேற்சொன்ன விவரங்கள் மீண்டும் கவிதையாக ஊற்றெடுக்கின்றன ‘வைகறை’ என்னும் அத்தியாயத்தில்.

மிக அண்மைக்காலம் வரை ஒலித்துக்கொண்டிருந்த விதம்விதமான குரல்கள் யாவற்றையும் சாலையின் இரைச்சல் என்னும் ஒற்றைக்குரல் அடக்கி ஒடுக்கி விடுகின்றது: “ஒவ்வொரு குரலும் ஒவ்வொரு விதமாய் இருக்கும். கட்டைக்குரல். கீச்சுக்குரல் என்று. ஒவ்வொரு குரலுக்கும் ஒவ்வொரு தாளலயம் இருக்கும். சில குரல்கள் பழகியவர்களுக்கு மட்டுமே புரியும்படி சங்கேதமாய் இருக்கும்.அலுமினியப் பாத்திரங்கள் விற்பவர் விநோதமாய் கூவிக்கொண்டு வருவார். ஒரு வார்த்தைகூட புரியாது. ஒரு சைக்கிளில் பாத்திரக்கடையையே தொங்கிக் கொண்டு வருவது பார்க்க அதிசயமாய் இருக்கும். பிற்பகல் தெருக்களில் குறிசொல்பவர்கள், கைரேகை சொல்பவர்கள்,கிளி ஜோஸ்யமென்று குரல்கள் நிரம்பியிருக்கும். சிலருக்குப் பழையச் சோறு கூட கிடைக்கும். உண்டு விட்டு ஏதாவது மரத்தடியில் குட்டித்தூக்கம் போடுவார்கள். யாராவது ஒரு பொடியன் கிளியிடம் வம்பு இழுக்க கிளி ஜோஸ்யக்காரன் தூக்கத்திலேயே அதட்டுவான். மாலை வேளைகளில் தேங்காய்பன், கைமுறுக்கு,சோன் பப்டி என்ளறு விதவிதமாய் விற்றுக் கொண்டு வருவார்கள்... தெருக்கள் முழுதும் குரல்கள் ததும்பிக் கொண்டேயிருக்கும். யாரும் கதவை அடைத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் எல்லாருமே அந்த ஊரைச் சேர்ந்தவர்களாய் இருக்க மாட்டார்கள். வெளியூரிலிருந்து வரும் வியாபாரிகளாக இருப்பார்கள். அதெல்லாம் அந்தக் காலம் ஊருக்குள் இப்போதெல்லாம் குரல்கள் கேட்பதில்லை. இப்போதெல்லாம் தெருக்களில் குரல்களுடன் அலைபவர்களை மக்கள் சந்தேகத்துடனேயே பார்க்கின்றார்கள் என்று செட்டியார் நினைத்துக்கொண்டார். குரல்களை விட மக்களுக்கு இரைச்சல்கள் பிடித்து விட்டதா...” ஆம், சிட்டுக் குருவிகளைக் காணாமல் போக அடித்த செல்போன் டவர்களின் உலகம் இது.

ஐடியில் நாவலாசிரியரின் சக பணியாளர்களாக இருக்கும் அவரது நெருக்கமான நண்பர்கள் எவரது பார்வைக்கும் படாத பெரிய மாற்றங்கள், நுண் மாற்றங்கள் எல்லாவற்றையும் ஓர் ஆழமான சமூகவியல் ஆராய்ச்சி அறிஞர் போல பதிவு செய்துள்ளார் இந்த நாவலில்.

ஐடி உலகமே ஒரு ‘மாயாஜால்’ தான். ஐந்து இழக்க , ஆறு இலக்க சம்பளத்தொகை கிடைக்கும் என்னும் மாயக்கவர்ச்சியைக் காட்டும் இந்த மாய உலகத்தில், ‘மனிதரனைவர்க்கும் வாய்த்த விலைமகள்’ என்பாரே ஷேக்ஸ்பியர், அந்த விலைமகளான பணம், மனிதர்களின் பன்முக ஆற்றல்கள் அனைத்தையும் பணவேட்டை என்னும் ஒரே குறிக்கோளாகச் சுருக்கிவிடுகின்றது. மார்க்ஸ் கூறிவதுபோல “புனிதர்களின் திருச்சின்னங்களும்கூட, விற்கவோ வாங்கவோ முடியாதென்று கருதப்படுகின்றன இன்னும் நுண்மையான தெய்விகப் பொருள்களும்கூட இந்த இரசவாதத்திலிருந்து தப்பமுடியவில்லை.” இந்த இரசவாதத்திற்கு உட்படுத்தப்படுத்தப்படுகின்ற மனிதர்களிடம், அவர்களது, உறவுகளிலேயே மிக இயல்பானதும் மிக இன்றியமையாததுமான பாலுறவுகள்கூட வக்கரித்துப் போய்விடுகின்றன. உள்ளார்ந்த காதலோடு இணைகின்றவர்கள்கூட, உடலின் இயல்பான வேட்கைகளை பூர்த்தி செய்ய வாய்ப்போ நேரமோ வழங்காத ஐடி பணிகளால் சோரம் போகின்றார்கள்.

மனிதர்களைத் தனது மாயவலையில் வீழவைக்கும் இந்த உலகத்திலும் செயல்படுவது சமூக டார்வினியம்தான். இது ஒரு ‘அவுட்ஸோர்ஸிங் உலகம்; மென்பொருள் எழுதுவது, பிஓ வேலை ஆகியவற்றை அமெரிக்க கம்பெனிகள் இந்தியர்களைக் கொண்டு ‘அவுட் ஸோர்சிங்’ செய்கின்றன என்றால், இந்திய நிறுவனங்கள் செக்யூரிட்டி, கேப்மேன், துப்புரவு வேலை முதலியவற்றை இந்திய சாமானிய மக்களிடமிருந்து ‘அவுட்ஸோர்ஸிங்’ செய்துகொள்கின்றன. ‘அவுட்ஸோர்ஸிங்’ மட்டுமல்லாது, ஆன்ஸைட் வேலை, புரோகிராமிங், மேனேஜ்மெண்ட், கன்சல்டிங், பெஞ்சிங் எனப் பலதரப்பட்ட வேலைகளில் மேல்-கீழ் வரிசைகளில் நிறுத்தப்பட்டும், பல்லாண்டுகள் வேலை பார்த்தவர்களை ஒரு நொடியில் வீட்டுக்கு அனுப்பியும், புதிய பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்தியும் சைபெர் கூலி உழைப்பு மூலம் கோடிக்கணக்கில் இலாபம் ஈட்டும் ஐடி கம்பெனிகளுக்கு மின்கட்டண சலுகைகள், தண்ணீர் வழங்குதல், சாலை அமைத்துக் கொடுத்தல் போன்ற வசதிகளைச் செய்து கொடுத்ததும், ஐடி பணியாளர்களின் ஊதியத்தில் முப்பது சதவீதத்தை வருமான வரியாக அபகரித்தும் மத்திய, மாநில அரசாங்கங்கள் இந்த நிறுவனங்களுக்குப் பாதுகாப்புத் தருகின்றன. நம்நாட்டு சட்டங்கள் ஐடி, மோட்டார் வாகனத் தொழிற்சாலைகள் போன்றவற்றுக்கு அவற்றின் சார்பில் நிலம் கையகப்படுத்தும் உரிமையை மத்திய,மாநில அரசாங்கங்களுக்கு வழங்குகின்றன. அண்மையில் ஆக்ஸ்போர்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ள ஒரு நூலில் எம்.விஜயபாஸ்கர் எழுதியுள்ள ‘மெளனத்தின் அரசியல்’ (Politics of Silence) என்னும் கட்டுரை, இதுபோன்று நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக மக்கள் போராட்டம் என்று சொல்லத்தக்க எந்தவொரு போராட்டமும் இதுவரை நடந்திராத ஒரே மாநிலமாக திகழ்வது தமிழ்நாடுதான் என்று கூறுகிறது. இடதுசாரி அரசாங்கம் இருந்த மேற்கு வங்கத்தில் தனியார் நிறுவனங்களுக்காக அரசாங்கமே முன்நின்று நிலத்தைக் கையகப்படுத்திச் சூடு வாங்கிக்கொண்டதைப் போலன்றி, ஆசை வார்த்தை பேசி நடுத்தர, ஏழை விவசாயிகளை ஏமாற்றும் கலையில் கைதேர்ந்த நிலத்தரகர்களிடம் அந்த வேலையை விட்டுவைக்கும் தந்திர வழியைப் பயன்படுத்தின அடுத்தடுத்து வந்த தமிழக அரசாங்கங்கள் என்பதை இக்கட்டுரை எடுத்துக்காட்டுகின்றது.

சமூக டார்வினியம் செயல்படும் ஐடி உலகத்தில் தோற்றுப்போனவர்களுக்கு இருக்கவே இருக்கின்றது ஆறுமாடிக் கட்டட உயரம். “இந்த உயரத்துக்குப் போகவேண்டும் என்று ஆசைப்படுவதால்தானோ தற்கொலை செய்துகொள்வதற்கும் உயரமான இடங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனவா?” என்று இந்த நாவல் எழுப்பும் கேள்வி உளவியலாளர்களுக்கு விடுக்கப்படும் மிக ஆழமான கேள்வி. எத்தனை பொருளாதார, மாற்றங்கள் வந்தாலும் சலனப்படாது, சற்று நெகிழ்ந்து கொடுப்பதுபோல நடித்து, புதுப்புது வேடங்களில் சிலவேளையும், நீண்டகாலப் பழைய கோலத்திலும் தன்னை இடைவிடாது மறு உற்பத்தி செய்துகொள்கிறது சாதியம். பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காக காலந்தோறும் புதுப்புது உத்திகளைக் கையாள்வதை ஐடி உலகம் பற்றிய விவாதங்கள், ஐடி உலகிற்கு வெளியே உள்ள மனிதர்களின் உரையாடல் வழியாக எடுத்துரைக்கும் இந்த நாவல், இடைநிலை சாதிகளிடமுள்ள சாதி ஆதிக்கத்தையும், தலித்துகளை ஒடுக்கும் மனப்பான்மையையும் சுட்டிக்காட்டத் தவறுவதில்லை. அதேபோல ஐடி நிறுவனங்களில் உள்ள மலையாளிகள், தெலுங்கர்கள் ஆகியோர் சாதி அடிப்படையில் உருவாக்கிக்கொள்ளும் சமூக மூலதனம் (social capital) ஐடி நிறுவனங்களில் அவர்களது வேலை வாய்ப்பையும் செல்வாக்கையும் உருவாக்கிக்கொள்கின்றது என்பதையும் (சாதியக் கட்டமைப்பின் மறு உருவாக்கத்தின் ஒரு வடிவம்தான் இது) இந்த நாவல் பேசுகிறது. ‘ராஜீவ் காந்தி சாலை’ ஐடி கம்பெனிகளின் உறைவிடம் மட்டுமன்று; ரியல் எஸ்டேட் தாதாக்கள், அரசியல்வாதிகளினதும் புதுப்பணக்காரர்களினதும் பண்ணை வீடுகள்ம் ஷேர் ஆட்டோக்கள் நவீன மால்களுக்கும் ஹோட்டல்களுக்குமிடையே காலமுரண்களாக நிற்கும் தள்ளுவண்டிகள், டாஸ்மாக் கடைகள், பைத்தியக்காரர்களை அவர்களது உறவினர்களிடமிருந்து காசு வாங்கிக்கொண்டு வந்து ஹைவேயில் இறக்கிவிடும் லாரிகள், வழிப்பறி கொள்ளைக்காரர்கள், நவயுகத் தத்துவவாதிகளாக அவதாரமெடுத்து காசு பண்ணும் யோகா மாஸ்டர்கள், இளஞ்சோடிகளை வழிமறித்துப் பெண்களை பாலியல் வன்முறை செய்துவிட்டுக் கொன்றுவிடும் கொலைகாரர்கள் என எத்தனையோ விஷயங்களை அரவணைத்துக்கொள்ளும் சாலை இது.

ராஜீவ் காந்தி சாலையில் ஒருபக்கம் முழுக்கமுழுக்க ஏஸி வசதி கொண்ட வானுயர் கட்டடங்கள், அதிநவீன மால்கள், மல்டிபிளக்ஸ்கள், உல்லாச விடுதிகள், ஆடம்பர ஹோட்டல்கள், பண்ணை வீடுகள், கேட்டட் கம்யூனிட்டிகள் இருந்தால் அதற்கு மறுபக்கமும் இருக்கத்தானே வேண்டும். அப்படியிருந்தால்தானே ஒன்றையொன்று முழுமை செய்ய முடியும். அந்த மறுபக்கம்தான் இது: “(செம்மஞ்சேரியில்) குடிசையைச் சுற்றி சேறும்,சகதியும் கலந்து ஓடியது. நாற்றம் குப்பைகளும், பன்றிக்கழிவுகளும் சேர்ந்து நாற்றம் குடலை பிய்த்து எறிவது போல வீசியது. லூர்துவின் குசைக்கு சற்று தள்ளி மலம் கழித்துக்கொண்டிருந்த சிறுவன் தலையில் மழை நீர் படாமல் இருக்க பாலிதீன் கவரை இறுக்க சுற்றிக் கட்டியிருந்தான். அவன் பக்கத்தில் அந்த சொறிநாய் புது ஈர மலத்தை பார்த்தபடி ஆசை வெறியோடு காத்திருந்தது. சிறுவன் கையில் கிடைத்த கல்லை தூக்கி நாயின் மேல் விட்டெறிந்தான். அடிவாங்கிய நாய் ஈனஸ்வரத்தில் முனகியபடி ஓடியது. சற்று தள்ளி பிரமாண்ட சாக்கடை குட்டை போல தேங்கி கிடந்தது. ஈக்களும் கொசுக்களும் சங்கீதம் பாடியபடி. சாக்கடை தண்ணீர் விரவியிருந்த இடத்தில் ஒழுகிக்கொண்டிருந்த குடிநீர் குழாய்க்கு இரண்டு பெண்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். குடத்தால் அவ்வப்போது அடித்தும் கொண்டார்கள். சில ஆண்கள் சற்று தள்ளி தேநீர் கடையில் பீடி குடித்தபடி அவர்களது சண்டையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் தேநீர்க்கடையில் இருந்த வடை,பஜ்ஜி மேல் ஈக்கள் மொய்க்க அதை கடைக்கார பையன் விரட்டி கொண்டிருந்தான். இப்போது சிறுவனின் மலம் மழைத்தண்ணீரோடு கலந்து அந்த செம்மஞ்ச்சேரி முழுவதும் சாக்கடை நீரோடு பயணம் செய்ய ஆரம்பித்திருந்தது மிதந்தபடியே. உடம்பெல்லாம் புண்கள் கொண்ட கிழவி இந்த காட்சிகளையெல்லாம் பார்த்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். லூர்துவுக்கு வயிற்றைக் குமட்டிக்கொண்டு வந்தது. ரெளத்ரமும்,இயலாமையும் சேர்ந்து ரத்தத்துடிப்பை அதிகப்படுத்தியது.

இந்த சூழல் ஏசுநாதரையும்கூட கொலையையும், கொள்ளையையும் செய்யத் தூண்டும். அதனால்தான் கண்ணகி நகரில் பலவந்தமாகக் குடியேற்றப்பட்ட ஏழை மக்களுக்காகப் போராடி போலீஸ் சித்திரவதைக்கு உள்ளாகி சிறை சென்ற லூர்து, துன்பத்தில் பங்கேற்கத் துணை யாரையும் காணாத அவன், சேகுவேராவையும், மாவோவையும் வணங்கி வந்த அவன், மோசடித்தனமான முறையில் பணம் சம்பாதிக்கவும் அதன் பொருட்டு அவனுக்கு வேலை வாங்கித் தந்தவருக்கே துரோகம் இழைக்கவும் துணிகின்றான்.

ஐடி நிறுவனங்களின் சுரண்டல், அங்கு பணிபுரிவோரிடம் ஏற்படும் உடல், மனநோய்கள், தற்கொலைகள், பாலியல் வக்கிரங்கள், ரியல் எஸ்டேட் கொள்ளைகள், எங்கிருந்தோ கொண்டுவரப்பட்டு ராஜீவ் காந்தி சாலையில் அலைந்துக்கொண்டிருக்கும் பைத்தியக்காரர்கள் ஆகியோர் பற்றிய சித்தரிப்புகள் இருண்டுப்போன புற உலகையும், இருள் கவ்விய மன உலகத்தையும் காட்டுகின்றன. அதேவேளை இந்த நாவலில் ஆங்காங்கே நகைச்சுவை உணர்வும் மிளிர்கின்றது:

"இப்பல்லாம் டிவியில எந்தச் சேனலை திருப்பினாலும் அமேசான் காட்டுல விளையுற அரிய மூலிகைன்னு சொல்லி எதையாச்சும் விக்குறானுங்க. முடி முளைக்கனுமா அமேசான் காடு. உடம்பு இளைக்கனுமா அமேசான் காடு. செவப்பா மாறனுமா அமேசான் காடு. எல்லா பிரச்சினைங்களுக்கும் அமேசான் காட்டுல விளையுற மூலிகைன்னு சொல்லி விளம்பரம் செஞ்சு விக்கறானுங்க. அந்த பாழாய்ப்போன அமேசான் காடு எங்கதான் இருக்கு? டிவியில வர்ற எல்லாரும் அந்த மர்மக் காட்டைப் பற்றியே பேசுறாங்க" யதார்த்தத்தோடு பின்னிப்பிணைந்த நகைச்சுவை.

இயற்கை மீதும் தமிழ் மக்களின் மரபான வேளாண் தொழில் அறிவின் மீதும் நாவலாசிரியர் கொண்டுள்ள மதிப்புக்கு ஓர் எடுத்துக்காட்டு: “தென்னைப் போல பனை மரங்களுக்கு அதன் வேர்களை பக்கவாட்டில் பரப்பி நிலத்தடி நீரை சுயநலமாக உறிஞ்சிக் குடிக்கும் வஞ்சகம் தெரியாது. அவை வேரை மண்ணுக்குள் ஆழமாக ஊன்றி வளரும். அப்படி வளரும்போது தான் உறிஞ்சும் நீரை பக்கவாட்டில் பரப்பி நிலத்தடி நீரை அதிகரிக்கவே செய்யும். அது எடுத்தது போக மீதி உள்ள நீர் மண்ணுக்கு அடியில் இருக்கும் நீரோட்டத்தில் இன்னும் கொஞ்சம் ஊற்றெடுக்கும். தெரியாமலா இந்தப் பகுதியில் ஏராளமான ஏரிகளும், குளம், குட்டைகளும் அதன் சுற்றுக்கரைகளில் இருக்கும் மண்மேடுகளில் பனைகளையும் நட்டு வைத்தார்கள் அந்தக்காலத்தில். கான்கிரீட்டுகளும், தென்னைகளுமே நீரை உறிஞ்சி விரயம் செய்கின்றன என்று அவள் கணவன் பழநியாண்டி அடிக்கடி சொல்வான். கடல்மட்டத்தின் வெகு அருகில் இருப்பதால் இது இயற்கையாகவே நீரை பிடித்து வைக்கும் சதுப்புநிலப் பகுதியல்லவா? கடலுக்கு பக்கத்தில் இருக்கும் சதுப்பு நிலங்களை அழிக்க அழிக்க நல்ல நீர் வற்றி கடல் நீர் மண்ணுக்குள் புகுந்து உப்பு நீர்தான் வரும். அதனாலேயே தென்னையை கடலோர கிராம மக்கள் வளர்த்த அளவிற்கு சதுப்பு நிலங்களை ஒட்டி இருந்த நாவலூர் போன்ற பகுதி விவசாயிகள் வளர்க்க ஆர்வம் காட்டவில்லை”.

ராஜீவ் காந்தி கொலையைத் தங்கள் சொல்லாடல்களின் முக்கியக் கூறுகளிலொன்றாகக் கொண்டுள்ள தமிழ் தேசியவாதிகள் பலர் பார்க்கத் தவறுகின்ற அவலங்கள் ‘ராஜீவ் காந்தி சாலை’யில் வண்டி வண்டியாகக் கொட்டப்பட்டுள்ளன. அமெரிக்காவின் தரகர்களாக உள்ள, வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களின் ஐடி நிறுவனங்களின் கொள்ளை இலாபமோ, இந்த மாநிலத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் கொள்ளைக்காரர்களோ, பெரிதும் உழைக்கும் மக்களின் வியர்வையால் ஈட்டப்பட்ட பணத்தைச் சுருட்டிக்கொள்ளும் டாஸ்மாக்கோ (மது அருந்துவதில்கூட ஒவ்வொரு சமுக அடுக்குக்கும் ஒவ்வொருவிதமான பாணி, வெவ்வேறு வகையான மது இருப்பதையும் இந்த நாவல் சொல்கின்றது) இந்த சொல்லாடல்களில் மிக மிக அரிதாகவே இடம் பெறுகின்றன. இதற்கு மாறாக, வெளிமாநிலங்களிலிருந்து வேலைசெய்ய வருபவர்களால்தான் பண்பாட்டுக் கேடுகளும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களும் எழுவதாக அந்தச் சொல்லாடல்கள் கூறுகின்றன. வெளிமாநிலங்களிலிருந்து வேலை தேடி வருகிறவர்களுக்கு ரேஷன் கார்டுகள்கூடத் தரக்கூடாது என்றும்கூட கூறுகின்றன. போலீஸ் துறையும்கூட வெளிமாநிலத்திலிருந்து வேலைசெய்ய வருகின்றவர்களின் அடையாளக்குறிப்புகள் (profile) எடுக்கப்பட்டுப் பதிவு செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறது. ஒரு குற்றம் குற்றமாகப் பார்க்கப்படுவதற்குப் பதிலாக குற்றத்தை செய்தவர்களின் மாநில அடையாளத்தோடு தொடர்பு படுத்தப்படுகின்றது. உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் இருக்கவே இருக்கிறது ‘என்கவுண்டர்’ கொலை.

இந்தச் சூழலில் வெளிமாநிலத் தொழிலாளிகளின் பங்களிப்பைத் துணிச்சலாக சொல்கிறது நாவல்: “இரண்டாயிரத்துக்கு பிறகான நவீன சென்னையின் வரலாற்றை பேசும்போது பீகாரிகளின் அர்ப்பணிப்பையும் அவர்களது உழைப்பையும் அவர்கள் சிந்திய ரத்தத்தையும் தியாகத்தையும் தவிர்த்து எதுவும் எழுத முடியாது. கத்திப்பாரா பாலத்தின் தூண்களில் அவர்களது பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில்களின் தூண்களில் அவர்கள் ரத்தம் சிந்தியுள்ளன. ஐடி நிறுவனங்கள் அவர்கள் உழைப்பை உறிஞ்சியுள்ளன. இதோ இந்த ராஜீவ்காந்தி சாலை உருவாக்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பீகாரி இன மக்கள் உயிர் இழந்துள்ளனர். கட்டிடங்கள் கட்டும்போது சாரம் இடிந்து விழுந்து பலியாகியுள்ளார்கள். கான்கிரீட் பலகைகளை தூக்கும் சுமக்கும் கிரேன் விழுந்து சிலர் பலியாகியுள்ளார்கள்”

ராஜீவ் காந்தி சாலை கொண்டு வந்த நவீன மாற்றங்களுக்குத் தாக்குப்பிடித்து எப்படியோ தங்கள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டுவரும் சாமானியத் தமிழர்கள் மீது பரிவையும், வாஞ்சையையும் கொட்டுகிறது நாவல். ராஜீவ் காந்தி சாலையின் வருகையால் வாழ்வாதாரங்களை இழந்த பல்லாயிரம் சாமானிய மனிதர்களில் இருவர்தாம் அன்னம்மாவும், பழனியாண்டியும். தண்ணீர் பம்பு மோட்டாரை இயக்க வைக்கையில் மின்கசிவின் காரணமாக இறந்துவிடும் பழனியாண்டியின் மனைவி அன்னம்மாவுக்கு பிழைக்கும் வழியை ஏற்படுத்திக் கொடுக்கிறார் தங்கவேலு செட்டியார். அவரும்கூட நிலபறிப்பால் பாதிக்கப்பட்டவர்தான். அன்னம்மாவுக்கும், தங்கவேல் செட்டியாருக்குமிடையே வளரும் உறவை சமுதாயம் தான் வகுத்துள்ள மரபுநெறி ஒழுக்கங்களின் மீறல் எனக் கருதுகின்றது. ஆனால் அவர்களினூடாக ஓர் அற்புதமான காதல் கதையொன்று மலர்கிறது இந்த நாவலுக்குள்ளே. பிரியாணிக் கடை வைத்திருக்கும் பாய், அஞ்சலை போன்றவர்களுக்குள்ளே இன்னும் மனிதம் சுடர்விட்டு ஒளிர்கின்றது. ரியல் எஸ்டேட் சண்முகமும், சிதம்பரமும் சேர்ந்து அழிக்கும் தோப்பிலுள்ள கடைசி பனை மரமும் வேரோடு சாய்க்கப்படுகையில் நாமும் வீழ்கின்றோம்.

அன்னத்தோடு சேர்ந்து நம்மையும் கனவு காண வைக்கின்றது காலம்: “அன்னத்திற்கு இப்போதெல்லாம் கனவுகள் அதிகரித்திருந்தன. எல்லாமே பெருங்கனவுகளாக இருந்தன. அந்தக் கனவுகளில் எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென்று நெற்வயல்கள். பம்பு செட்டுகளை ஒட்டி இருந்த பெரிய கிணறுகளின் மீதிருந்து சிறுவர்கள் உற்சாகமாக குதித்து விளையாடினார்கள். தண்ணீர்ப் பாம்புகளைப் பிடித்து அடித்தார்கள். அன்னத்தின் பிள்ளைகள் லோகுவும்,தேவியும் சிதம்பரத்தோடு சேர்ந்து பொன்வண்டுகளைப் பிடித்து தீப்பெட்டிகளில் அடைத்து விளையாடினார்கள். எங்கு பார்த்தாலும் பனை மரங்கள் இருந்தன. மாடுகள் தூரத்தில் கூட்ட கூட்டமாக மேய்ந்துக் கொண்டிருந்தன. திருவிழாக் காலம் என்பதால் காப்புக் கட்டியிருந்தார்கள். மழை வரும் போல இருந்தது. ஒன்றிரண்டு நீர்த்துளிகள் நெற்றியில் விழுந்தன. அன்னத்திற்கு அவளது வீட்டின் கொல்லையில் கூரையில் உப்புக்கண்டம் நினைவுக்கு வந்தது. சூழ்ச்சி தெரியாத எளிய மனிதர்களின் கனவுகளை, காலத்திற்கு ஏற்ப மாறிக்கொள்ளாத மனிதர்களின் கனவுகளை காலமாகிய நான் ஒருபோதும் நிறைவேற்றுவதே இல்லை. அவளுக்கு எப்படி புரிய வைப்பது என்று எனக்குத் தெரியவில்லை”


இந்த வார்த்தைகள் நம்மை அழ வைத்துவிடுகின்றன. அரைப் பனை மர உயரத்திலிருந்து ஆழ்கிணற்றில் சுரைக்காய் குடுக்கையுடன் குதித்து நீந்தப் பழகிய, வண்ணத்துப் பூச்சிகளை கர்சீப்கொண்டு மடக்கிப் பிடித்த, முறத்தில் கயிறு கட்டி இழுத்து வைத்து சிட்டுக்குருவிகளை பிடித்த, அமராவதியிலும், நொய்யலிலும் காவிரியிலும் கொள்ளிடத்திலும் சுழிகளைப் பொருட்படுத்தாமல் நீந்தி மகிழ்ந்த, ராஜ வாய்க்காலில் தூண்டில் போட்டுத் துள்ளி வரும் கெண்டை மீன்களைப் பிடித்துப் பெருமைப்பட்ட என் தலைமுறையினருக்கும்கூட எல்லாமே இப்போது வெற்றுக்கனவுகளும் யாருக்கும் பயன்படா பழங்கதைகள்தான்.

பின்குறிப்புகள்:
புத்தகப் பதிப்பு பற்றி சில வார்த்தைகள் சொல்லியாக வேண்டும். தமிழ்நாட்டில் ‘க்ரியா’ , ‘தமிழினி’ போன்ற ஓரிரு பதிப்பகங்கள் தவிர மற்ற அனைத்தும் கையெழுத்துப் படிகளை ஊன்றிப் படித்து ‘எடிட்’ செய்வதிலோ, தொழில்முறையிலான மெய்ப்பு பார்ப்பதிலோ போதுமான கவனம் செலுத்துவதில்லை. எனவே தவறான வாக்கிய அமைப்புகள், இலக்கணப் பிழைகள், சொற் பிழைகள், அச்சுப் பிழைகள் முதலியன திருத்தப்படாமலேயே புத்தகங்கள் அச்சிட்டு வெளிக்கொணரப்படுகின்றன. அச்சேறி வெளிவந்த இத்தகைய புத்தகங்களை அவற்றை ஆக்கியோர்கள் பார்க்கும்போது அவர்கள் அடையும் மனவேதனையையும் பதிப்பாளர்கள் கருத்தில்கொள்ள வேண்டும். பதிப்பாளர்களின் கவனக்குறைவால் பாதிக்கப்பட்டது ‘ராஜீவ் காந்தி சாலை’ மட்டுமன்றி எனது அண்மைக்கால மொழியாக்கமான “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’யும் அடங்கும் என்பதால் இந்த உண்மையை ஆழ்ந்த வருத்தத்தோடு சொல்ல வேண்டியுள்ளது.

Thursday, July 25, 2013

ஒரு சிறுகதை இரண்டு சம்பவங்கள்

பாஸ் நீங்க உங்களோட கட்டுரைகளை அப்படியே சிறுகதையா எழுதலாமே என்று பேஸ்புக்கில் ஒருத்தர் கேட்டார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

நான் சமீபத்தில் பார்த்த கேள்விப்பட்ட இரண்டு சம்பவங்களை இங்கு எழுதுகின்றேன்.

சம்பவம்-1
----------------
சேகரும் , நானும் ஒன்பதாம் வகுப்பில் ஒரே பிரிவில் படித்தோம். பத்தாம் வகுப்பு வந்தவுடன் அவன் வேறு பிரிவு சென்று விட்டான். சென்று விட்டான் என்பதை விட அனுப்பி வைத்தார்கள் என்று சொல்ல வேண்டும். எங்கள் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் ஒரு வித அரசியல் நடக்கும். ஒன்பதாம் வகுப்பில் நன்றாக படிக்கும் மாணவர்களை பத்தாம் வகுப்பில் ஒரு பிரிவுக்கு அனுப்புவார்கள். மோசமான மாணவர்களை இன்னொரு பிரிவுக்கு அனுப்புவார்கள். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்களை வடிகட்டி அனுப்பி அதன் மூலம் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்தி விடலாமென்பது அவர்கள் கணக்கு. சேகருக்கு வருகின்றேன்.

நடிகர் அரவிந்த்சாமி எட்டாம் வகுப்பு படிக்கும்போது எப்படி இருந்திருப்பார் என்று கற்பனை செய்துக்கொள்ளவும். அப்படியே இருப்பான் சேகர். அப்படியே அரவிந்தசாமிக்கு திருநீறு பட்டை போட்டுக்கொள்ளவும். பட்டை என்றால் திக்காகவும் இருக்கக்கூடாது. மெலிதாகவும் இருக்கக்கூடாது. அப்படி ஒரு விபூதி பட்டையை அவனது வீட்டில் எப்படி வைத்து விடுவார்கள் என்று இன்னமும் ஆச்சர்யமாக இருக்கும்.

இந்த பட்டையை உங்க வீட்டுல வச்சாங்களா இல்ல செஞ்சாங்களா என்று கிண்டல் செய்வோம். சிரித்து க்கொள்வான். சேகர் அப்படிதான். என்ன கிண்டல் செய்தாலும் அதிர்ந்து பேசமாட்டான். எவ்வளவு வம்பு இழுத்தாலும் நகர்ந்து சென்று விடுவான். ஆனால் படிப்பு என்று வந்துவிட்டால் அவன் குட்டி தாதா. கணக்கில் செண்டமும் மற்ற பாடங்களில் செண்டத்திற்கு ஒன்றிரண்டு மார்க்குகள் குறைவாகவும் எடுப்பான். .

எந்தளவு சேகரை நாங்கள் கிண்டல் செய்து வம்பு இழுக்கின்றோமோ அந்தளவு எங்களுக்கு திட்டும்,அடியும் விழும். சேகரிடமிருந்து இல்லை. வாத்தியார்களிடமிருந்து. கணக்குப்பாட விடைத்தாள் திருத்தப்பட்டு வரும். சேகரது விடைத்தாளில் மூன்று இலக்க மதிப்பெண் இருக்கும். எங்கள் விடைத்தாளில் அந்த மதிப்பெண்ணின் கடைசி இலக்கம் இருக்கும். சேகர் மூத்திரத்தை வாங்கி குடிங்கடா என்று வாத்தியார் கத்துவார். நல்லவேளை மூவாயிரம் பேர் படிக்கும் அந்த பள்ளிக்கூடத்தில் பொண்ணுங்களுக்கென்று தனி பிரிவு இருந்தது. இருபாலாரும் இணைந்து படிக்கும் பிரிவுகளும் உண்டு. ஆனால் எங்கள் பிரிவில் வெறும் பசங்க மட்டும்தான். எந்தளவு சேகரை வாத்தியார்கள் நேசித்தார்களோ அந்தளவு நாங்கள் அவனை எதிர்த்தோம். அவனை பெயில் மார்க் ஆக்க எவ்வளவோ முயன்றும் எதுவும் நடக்கவில்லை. தேர்வுக்கு முதல் நாள் அவனது புத்தகங்களை ஒளித்து வைத்தோம். வருடம் முழுவதும் படிக்கின்றவனுக்கு ஒருநாள் என்ன செய்யும்? அவனுக்கு சினிமா ஆசையை காட்டி சினிமாவுக்கு அழைத்துச் செல்வோம். ஆனால் எங்களுக்குத்தான் சினிமா பைத்தியம் பிடித்தது. இப்படி கல்லுளி மங்கன் போல படிப்பையே ஒரு தவம் போல செய்த சேகர் என்ற முனிவர் பத்தாவது வரும்போது அவனும்,நானும் வேறு வேறு பிரிவுகள் மாறி இருந்தோம். பத்தாவதில் நான் சுமாரான மதிப்பெண்களோடு பாஸ் செய்து வேறு பள்ளிக்கு சந்தோஷமாக சென்றேன். சேகர் ஸ்டேட் பர்ஸ்ட் வருவானென்று எல்லாரும் எதிர்பார்த்தோம். ஆனால் ஸ்டேட் பர்ஸ்ட் வரவில்லை. இரண்டு பாடங்களில் மட்டும் மாநில அளவில் மூன்றாவது. கணக்கில் வழக்கம் போல செண்டம். இதெல்லாம் இருபது வருட கதை.

இதெல்லாம் இருபது வருட கதை. கடைசியாக சேகரை எங்கு நான் பார்த்தேன். மறந்து விட்டது. நினைவுப்படுத்திச் சொல்கின்றேன. மேற்கொண்டு படிக்கவும்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதுதான் எங்களுக்கு பலான புத்தகங்களும், சினிமாக்களும் அறி முகமானது. பள்ளியில் வெளியே யானையடி என்ற இடமிருக்கும். அந்தக்காலத்தில் யாரோ பெரிய யானை சிலையை அங்கு கட்டி வைத்து விட்டு சென்று விட்டான் போலிருக்கு. அதனால் அந்த பகுதிக்கு யானையடி. யானை கட்டி போராடித்த நெல்வயல்கள் கும்பகோணத்தில் இருந்ததால் யானையடி என்றும் வந்ததாக சொல்வார்கள். ராஜராஜ சோழன் கும்பகோணத்தில் (குடந்தை) இருந்து தஞ்சாவூர் செல்ல இந்த வழியைத்தான் தேர்வு செய்வானாம். சுவாமிமலை வழியாக தஞ்சாவூர் செல்லும். ஆனால் இப்போது யாரும் இந்தப் பாதையை பயன்படுத்துவதில்லை. இப்போது வேறு வழி இருக்கின்றது. அப்படி ராஜராஜனோ வந்தியத்தேவனோ,குந்தவை நாச்சியாரோ செல்லும்போது இங்கு யானையை கட்டிவைத்து ஓய்வு எடுப்பார்களாம். அதனால் யானையடி. நமக்கு எதுக்கு வரலாற்று புரட்டு எல்லாம். அந்த யானை சிலை பக்கத்தில் இருக்கும் பழைய பேப்பர் கடையில்தான் சரோஜாதேவி,பருவராகம்,மருதம் , இளமை ஜுஸ் போன்ற புத்தகங்கள் கிடைக்கும்.

யானையடியிலிருந்து ஐநூறு மீட்டர் தொலைவில் எங்கள் பள்ளிக்கூடம். புத்தகங்கள் வாங்குவதில் சிரமம் இருக்காது. என்ன அப்போதெல்லாம் காசுதான் பிரச்சினையாக இருக்கும். அதற்கும் ஒரு வழி வைத்தோம். மாணவர்கள் எல்லாரும் காசு போட்டு பாதி விலையில் புத்தகங்கள் வாங்கி படிப்போம். ஒவ்வொருத்தனும் ஒருநாள் புத்தகத்தை எடுத்துச் செல்வோம். ஒரு வாரம் கழித்து அதே புத்தகத்தை கால் விலைக்கு விற்று விடுவோம். பலானபடங்கள் பார்க்கதான் அதிக சிரமப்பட வேண்டியிருக்கும். எப்படியாவது டியூசன் பீஸ் அது,இதுவென்று தேத்தி விடுவோம். கும்பகோணத்தில் இருக்கும் ஆறு,ஏழு தியேட்டர்களில் எப்படியும் அவளோட ராவுகள், அவள், பூக்காரி ஏதாவது ஓடும். ஆனால் சேகர் மானஸ்தன். செத்தாலும் பலான படங்களுக்கோ,பலான புத்தகங்கள் பக்கமோ தலைவைத்தும் படுக்க மாட்டான். மற்றபடி கட் அடித்து நாங்கள் செல்லும் விஜயகாந்த் ,சத்யராஜ் படங்களுக்கு அவன் வருவான்

நினைவு வந்து விட்டது . சேகரை நான் மீண்டும் பார்த்தது. அரிசோனாவின் பீனிக்ஸ் ஏர்போர்ட்டில். கடந்த வருடம் ஜூலை மாதம். ஜூலை மாதம் பீனிக்ஸ் என்றால் வெயில் எப்படியிருக்குமென்று நினைத்துக் கொள்ளுங்கள். ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வந்த சில விநாடிகளுக்குள் முகம் பழுத்து விட்டது . அது சேகர்தானா என்று முதலில் சந்தேகமாக இருந்தது. பக்கத்தில் சேட்டு வீட்டுப்பெண் போல. அவள் பக்கத்தில் ஆறு ஏழு வயதிருக்கும். மகனா மகளா என்று தெரியவில்லை. அவனும் என்னை அடையாளம் கண்டுக்கொண்டான். பத்து வருடங்களாக யு.எஸ்.சில்தான் குப்பை கொட்டுவதாகவும் நியூயார்க் ,புளோரிடா, ரிச்மாண்ட், கலிபோர்னியா என்று யு.எஸ் முழுவதும் அலைந்து விட்டதாகவும் சொன்னான். இப்போது பீனிக்சிலிருந்து கும்பகோணத்திற்கு கிளம்புவதாகவும் ஒரு மாதம் லீவ் எடுத்து விட்டு சென்னைக்கு வந்து வேறு ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்ய போவதாகவும் சொன்னான். அதிக நேரம் பேசவில்லை இருவரும். போன் நம்பர்கள் வாங்கிக்கொண்டோம். அவனுக்கு அடுத்து கனெக்டிங் பிளைட்டை பிடிக்கும் அவசரம். சேகரின் வேலை,சம்பளம் பற்றி விசாரித்தேன். அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லை. நான் வாங்கும் அதே சம்பளம்தான்

பீனிக்ஸ் சென்ற பிறகு ஏகப்பட்ட வேலைகளுக்கிடையே நான் சேகரை மறந்தேப்போனேன். இரண்டு மாதங்கள் செய்ய வேண்டிய வேலை. ஒரு மாதத்தில் முடிந்து விட்டது. மீண்டும் சென்னைக்கு வந்து விட்டேன். கடந்த மாதம் எதேச்சையாக கும்பகோணம் சென்றபோதும் எனக்கு சேகர் நினைவுக்கு வரவில்லை. அந்த யானையடி யானை சிலையை எனது காரில் தாண்டியதும் ஆர்வமாகி பழைய புத்தகக்கடையை பார்த்தேன். கடை இல்லை. அங்கெ ஷாப்பிங் மால் போல ஏதோ ஒரு பில்டிங் இருந்தது. சேகர் நினைவுக்கு வந்தான். சேகரின் நம்பரை தேடினேன். அது எனது யு.எஸ் செல்போனில் சேமிக்கப்பட்ட நினைவு. அந்த செல்போன் சென்னையில் விட்டு வந்திருந்தேன். சரியென்று ஒரு பள்ளிக்கூட நண்பருக்கு போன் செய்து சேகரை பற்றி விசாரித்தேன். அவன் வீட்டை விட்டு ஓடி விட்டதாக சொன்னார். எனக்கு புரியவில்லை. தெளிவாக சொல்லு. அவன் சாமியாரா போய்ட்டாண்டா. தேட வேணாம்னு லெட்டர் எழுதி வைத்துவிட்டு போய்ட்டான். எங்க போனான்னு தெரியலை. தேடிகிட்டிருக்கோம் என்றான்.


சம்பவம்-2
-----------------
கடந்த வாரம் ஒரு சுவையான சம்பவம் நடந்தது. எனது அலுவலக நண்பர் தான் இதை சொன்னார்.

அவருக்கு தெரிந்த நண்பர் ஒருத்தர். அவரும் எங்கள் அலுவலகத்தில்தான் (கோயம்புத்தூர் கிளை) மாட்யூல் லீடாக வேலை செய்தார்) மாதம் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குபவர். வீட்டிற்கு ஒரே பையன். வயது இருபத்தைந்து இருக்கும். கல்யாணம் ஆகவில்லை. நல்ல வசதியான குடும்பம் வேறு . அப்பா ஜின்னிங் பேக்டரி வைத்துள்ளார். இருந்தும் பையன் ஆசைப்படி கணிப்பொறி படிக்க வைத்துள்ளார் . அவர் திடீரென ஐந்து மாதங்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் ஒரு ஆசிரமத்தில் சேர்ந்து விட்டார். அவர் எனது நண்பரிடம் அடிக்கடி சொல்வாராம். 

இந்த வாழ்க்கை நிலையற்றது. செல்வத்தை தேடி ஓடும் இந்த வாழ்க்கை எனக்கு பிடிக்கவில்லை. விவேகானந்தர் போல ஏதாவது மனிதகுலத்துக்கு சேவை செய்துவிட்டு செத்துப்போகவேண்டுமென்று நண்பரும் அதை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. ஒருநாள் திடீரென அலுவல வேலையை ராஜினாமா செய்து விட்டு வீட்டை விட்டு வெளியேறி ஜக்கி ஆசிரமத்தில் சேர்ந்து விட்டாராம்.

இதுக்கு மேல் நடந்ததுதான் ஹைலைட். நேற்று நானும் எனது நண்பரும் டீக்கடையில் நின்று பேசிக்கொண்டிருந்தோம். எனது நண்பர் என்னிடம் ஒரு பயோடேட்டாவை கொடுத்து,

"இந்த நபருக்கு உங்கள்  டீமில்  ஏதாவது  வேகன்சி உள்ளதா?" என்று கேட்டார்.

"யார் உங்களுக்கு தெரிந்த நபரா?" என்றேன்.

"நான் சொல்லலை..அந்த கோயம்புத்தூர் ஆசிரம பார்ட்டி அவருதான் இவரு" என்று சொல்ல ஒருக்கணம் திகைத்துவிட்டேன்.

 "என்னாச்சு?" என்று கேட்க,

"அதை ஏன் கேட்கறீங்க? இவன் ஆசிரமத்திற்கு போயிருக்கான். அங்க செம வேலை. பெண்டு கழற்றியிருக்காங்கா. கிணத்துல தண்ணி இறைக்கறது. தோட்டத்துக்கு தண்ணி ஊத்தறது. சமையல் செய்யுறது. எச்சி தட்டு கழுவறது. கக்கூஸ் கழுவறது எல்லா வேலைகளையும் இவனை செய்ய சொல்லியிருக்காங்க. நண்பர் வசதியான குடும்பத்தில் பிறந்தவர் அல்லவா? பிஞ்சுக்கை வேற.. கையெல்லாம் கொப்புளம் வந்து உடம்பு முடியாமல் ஹாஸ்பிட்டலில் சேரும்படி ஆகிவிட்டதாம். ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் ஆசிரம சுவர் ஏறிக்குதித்து வீட்டுக்கு ஓடி வந்துட்டாராம். ஒரு மாசம் வேலை இல்லாமல் இருக்கவே தெரிந்த நண்பர்கள் சொந்தக்காரர்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் கிண்டல் தாங்க முடியாமல் இப்போது மீண்டும் வேலை தேடுகின்றாராம்" என்றார்.


முதல் சம்பவத்திற்கும் இரண்டாவது சம்பவத்திற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? அவர் பெயர் சேகர். இவர் பெயர் கூட எனக்கு நினைவில் இல்லை. அவர் யு.எஸ் முழுவதும் அலைந்து கும்பகோணத்தில் காணாமல் போயுள்ளார். இவர் கோயம்புத்தூரை கூட தாண்டாதவர். அவர் பெரிய பணக்காரர் எல்லாம் இல்லை. நடுத்தர வர்க்கம். இவருக்கு கோவையில் சொந்தமாக ஜின்னிங் பேக்டரி உள்ளது. ஒருவேளை அவரு சென்ற அதே ஆசிரமத்தில் இவரும் சேர்ந்திருக்கலாம். யார் கண்டது அந்த இரண்டு பேரும் சந்தித்து கூட பேசியிருக்கலாம். இப்படி ஏதாவது கற்பனை கலந்து அடித்து விட்டால் ஒருவேளை இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் அந்த ஒருத்தர் கேட்ட கேள்விக்கு எனக்கு விடை கிடைக்கக்கூடும்.

Monday, October 11, 2010

வித்தை - அகநாழிகை சிறுகதை


செப்டம்பர் மாத "அகநாழிகை" இதழில் வெளியான எனது வித்தை எ‌ன்ற சிறுகதை வாசிக்க.. சிறுகதையை வெளியிட்ட அகநாழிகை இதழுக்கு நன்றி...


வித்தை

கடைசி பெஞ்சில் என் பக்கத்தில் அமர்ந்திருந்த பொன்ராஜ்தான் அந்த கேள்வியை என்னிடம் கேட்டான். பள்ளிக்கூட காம்பவுண்டு பக்கத்தில் மண்டிக்கிடந்த கருவேலக்காட்டில் நானும்,அவனும் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தபோதுதான் அந்த கேள்வியை கேட்டான். எனக்கும் ஏற்கனவே அந்த சந்தேகம் இருந்தது.


பொன்ராஜ் வீட்டை தாண்டி தெருமுனையில் செல்லும்போது “அது எப்படிடா மூனு நாளா ஒன்னுக்கு கூட போகாம சைக்கிள் சுத்தறான்?” பொன்ராஜ் கேட்ட கேள்வி மனதில் ஓடியது. எனக்கு இருந்த அதே சந்தேகம் பொன்ராஜுக்கும் இருந்தது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அருகே செல்ல,செல்ல திடலில் கட்டியிருந்த லவுட்ஸ்பீக்கரின் ஒலி அதிகரித்தது. “நான் ஆணையிட்டால்…” எம்.ஜி.ஆர் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. தூரத்தில் அவன் சைக்கிள் சுற்றிக் கொண்டிருப்பது இங்கிருந்தே பார்க்க முடிந்தது.

தெரு முனையில் இருந்த காலித்திடலின் நடுமையத்தில் மூங்கில் கம்பு நட்டிருந்தது. மூங்கில் கம்பில் ஒரு ட்யூப்லைட் கட்டியிருந்தார்கள். அவன் மூங்கில் கம்பை சுற்றி,சுற்றி சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தான். திடலை சுற்றி வட்டவடிவத்தில் ஐந்து மூங்கில் கம்புகள் ஐந்தடிக்கு ஐந் தடி இடைவெளியில் அரண் போல ஊன்றியிருக்க, ஒவ்வொரு கம்பிலும் சணல் கயிற்றால் ட்யூப்லைட் இறுக்கி கட்டப்பட்டிருந்தது. ஐந்து மூங்கில்களையும் கயிற்றால் இணைத்து வட்ட திடலை சுற்றி வட்டவடிவத்தில் அரண் உருவாக்கியிருந்தார்கள்.

இன்று இரண்டாம் நாள். இரண்டு நாட்களாக அவன் கால்கள் தரையில் படவில்லை ; இரண்டு நாட்களாக அவன் உறங்கவில்லை என்பதுதான் ஊருக்குள் அதிசயமான பேச்சாக இருந்தது. அதைவிட பொன்ராஜ் சொன்னதுதான் எனக்கு அதிசயமாக இருந்தது. இரண்டு நாட்களாக அவன் வயக்காட்டுப்பக்கம் ஒதுங்கவில்லை. சைக்கிள் வித்தைக்காரன் காலையில் குளிக்கும்போது குடம், குடமாக தலையில் தண்ணீரை வாரி வாரி கொட்டினா‌‌‌ன். குளிக்கும்போதே அவன் ஒன்னுக்கு போயிடுவானென்ற தகவலை பொன்ராஜ் சொன்னபோது அது எனக்கு அதீத கற்பனையாக பட்டது. ஒருவேளை உண்மையாக இருக்குமோ?

நேற்று இரவு அவன் சைக்கிள் சுற்றும்போது மூன்று பேர் வட்டமாக சூழ்ந்து நின்றார்கள். பழைய ப்யூஸ் போன ட்யூப்லைட்டுகளை கையில் வைத்து அவன் வேகமாக சைக்கிள் சுற்றி வர,வர ஒவ்வொரு லைட்டாக அவன் முதுகில் நெஞ்சில்,முதுகில் அடித்து உடைக்க மக்கள் மெய்மறந்து நின்றார்கள். சிறுவர்கள் கைதட்டி உற்சாகமூட்ட கடைசி ட்யூப்லைட்டை அவன் நெற்றியில் அடித்து உடைத்தார்கள். இவ்வளவுக்கும் அவன் கொஞ்சம் கூட சைக்கிளின் வேகத்தை குறைக்காமல் மூங்கில் கம்பை சுற்றி,சுற்றி சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தான். அதைவிட ஆச்சர்யமாயிருந்தது பொன்ராஜ் சொன்னது. அந்த வித்தைக்காரன் குளிக்கும்போதே ஒன்னுக்கு போயிடுவானென்ற தகவல். அப்படியென்றால் இரண்டுக்கு? பொன்ராஜ்ஜிடம் அதுகுறித்து தெளிவான பதிலில்லை.

“நெஞ்சமுண்டு நேரமுண்டு ஓடு ராஜா…” எம்.ஜி.ஆர் பாடல் மைக் செட்டில் ஒலித்துக் கொண்டிருந்தது. சைக்கிள் வித்தைக்காரனை பார்த்தேன். அவனை சுற்றி சிறுவர்கள் நின்று கைதட்டிக் கொண்டிருந்தார்கள். அவன் சைக்கிளின் ஹேண்டில்பாரை இரண்டு கைகளால் பலமாக பிடித்துக் கொண்டு சற்று படுத்த நிலையில் சைக்கிளை ஓட்டியபடியே சுற்றினான். வலது காலை உயர்த்தியபடி இடதுகாலால் மட்டும் பெடல் ஓட்டி சைக்கிளை ஓட்ட சிறுவர்கள் விசிலடித்தார்கள்.

சைக்கிள் வித்தைக்காரனின் உதவியாளன் கையிலிருந்த சிறிய மைக்கை பிடித்தபடியே திடலின் நடுவிலிருந்த மூங்கிலை சுற்றி, சுற்றி நடந்து வந்துக்கொண்டிருந்தான். அவன் கயிற்றை தாண்டி சென்று அருகிலிருந்த துணி கூடாரத்திற்குள் நுழைந்தான். எம்.ஜி.ஆர் பாடுவதை நிறுத்திவிட்டு வந்தான்… கையிலிருந்த மைக்கில் கத்தினான்.அவன் குரல் கொடூரமானதொரு காட்டெருமை குரலையொத்திருந்தது.

“அம்மாமாரே..அய்யாமாரே உசுர வச்சு வெளையாடுற ஆட்டம். ஜோரா கைதட்டுங்க…காசு போடுங்க.. ” இடதுகையிலிருந்த மைக்கில் பேசியபடியே வலது கையிலிருந்த ஒரு பெரிய கறுப்புநிற குடையை சைக்கிள்வித்தைக்காரனிடம் தூக்கிப்போட, அவன் சைக்கிளை ஓட்டியபடியே குடையை கேட்ச் பிடித்தான். சைக்கிள் ஹேண்டில்பரிலிருந்து கைகளை எடுத்து குடையை பிரித்தான். எனக்கு பிரமிப்பாக இருந்தது. கால்கள் தரையை தொடவில்லை. விரித்த குடையை தலைகீழாக பிடித்தபடியே திடலின் நடுவிலிருந்த மூங்கிலை சுற்றி ,சுற்றி சைக்கிள் ஓட்டினான்.

சில பெண்கள் கயிற்றுக்கு இந்தப்பக்கம் நின்றபடி சில்லறைகாசுகளை தூக்கி குடைக்குள் வீசினார்கள். ஒரு வெள்ளைவேட்டிக்காரர் கயிற்றை தாண்டி சென்று கசங்கி போயிருந்த ஐந்துரூபாய் தாளொன்றை குடைக்குள் போட்டு திரும்பினார்.

இனி பாக்கபோறதுதான் ஜோரு..நெருப்பு வெளையாட்டு…மைக்கில் கத்திக்கொண்டிருந்தவன் சொல்ல கூட்டமே ஒருக்கணம் அமைதியானது. பெண்கள் திகைத்துபோய் சைக்கிள் வித்தைக்காரனை பார்தத்து. மைக்காரன் கூடாரத்துக்குள் சென்று ஒரு மண்ணெண்ணை கேனுடன் வந்தான். ஒரு கையில் சிறிய பந்தத்தை பற்ற வைத்து கேனை சைக்கிள் வித்தைக்காரனிடம் தர அவன் கேனிலிருந்து நாலைந்து மிடக்கு எண்ணெயை விழுங்கினான்.

பொன்ராஜும் வேடிக்கை பார்க்க வந்திருந்தான். முன்னால் கூட்டத்தின் தலை மறைக்க உயரமான கல்லின் மேல் நானும் பொன்ராஜும் ஏறிக்கொண்டோம். சைக்கிள் வித்தைக்காரன் பந்தத்தை வாங்கி வலது கையில் வைத்துக்கொண்டு சைக்கிளை ஒட்ட ஆரம்பித்தான். குடையும்,சில்லறை காசுகளும் மைக்காரனிடம் இருந்தது. சைக்கிள் வித்தைக்காரன் வாயிலிருந்து எண்ணையை காற்றில் கொப்பளித்து துப்பி பந்தத்தால் தீமூட்ட பெரும் ஜூவாலையுடன் காற்றில் நெருப்பு பறந்தது. கொள்ளிவாய் பிசாசு திடலில் சைக்கிள் ஓட்டுவது போலிருந்தது. கூட்டம் மிரண்டு போய் பார்த்துக்கொண்டிருந்தது.

சைக்கிள் வித்தைக்காரன் ஒரு கையாலா ஹேண்டில்பாரை பிடித்து ஓட்டியபடியே சுற்றி வந்துக் கொண்டிருந்தான். மெய்மறந்து நின்ற கூட்டத்திற்கு ஒரு கையால் டாட்டா காட்டியபடியே சைக்கிள் ஓட்டினான். மைக் பிடித்திருந்தவ்ன் துணிக்கூடாரத்துக்குள் சென்றான். லவுட்ஸ்பீக்கரில் டி.எம்.சவுந்தராஜன் பாடல்கள் சன்னமாக ஒலிக்க ஆரம்பித்தது. கூட்டம் கொஞ்சம், கொஞ்சமாக களைய ஆரம்பித்தது. சைக்கிள் வித்தைக்காரன் இப்போது வேகத்தை குறைத்து சுற்றி வந்துக் கொண்டிருந்தான்.

இரவெல்லாம் தூங்காமல் சைக்கிள் ஓட்டுவான் என்று பக்கத்துதெரு பொன்ராஜ் சொன்னான். நேற்று இரவு விழித்திருந்து கவனிக்க முடியவில்லை. திண்ணையில் உட்கார்ந்து கவனித்துக்கொண்டே தூங்கிவிட காலையில் வாசலுக்கு சாணி தெளிக்க வந்த அம்மாவின் சலசலப்பில் விழித்து பார்த்தேன். அதிகாலை பனியிலும் சளைக்காமல் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தான். தலையில் சிவப்பு நிற மப்ளரை சுற்றியிருந்தான். உடம்பில் போர்வை சுற்றியிருக்க குளிரிலும் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தான். ஒருவேளை சைக்கிளை விட்டு இறங்கி துணிக்கூடாரத்துக்குள் சென்று உறங்கியிருப்பானோ?தெரியவில்லை.

இன்று இரவு எப்படியாவது உறங்காமல் பார்க்க வேண்டும். பக்கத்து ஊரிலிருந்து பள்ளிக்கூடம் வரும் பால்பாண்டி அவன் ஊரில் இதுபோல சைக்கிள் வித்தை நடந்தபோது விடிய விடிய தூங்காமல் இருந்து உறுதி செய்ததை சொன்னான். துருவி,துருவி கேட்டபோது கண் அசந்துவிட்டதாக சொன்னான். அவன் அப்பாதான் கண் விழித்து அவன் காலை இறக்காமல் சைக்கிள் ஓட்டுவதை கவனித்ததாக சொன்னான். எனக்கு அதைவிட சந்தேகம் பொன்ராஜ் சொன்னதுதான். தூங்காமல் இருக்கலாம். அது எப்படி ஒன்னுக்கு இருக்க கூட இறங்காமல் ஓட்ட முடியும்? யாராவது லேசாக கண் அசரும் சமயம் பார்த்து இறங்கிபோய் வந்துவிடுவானோ?

சாப்பிட்டு விட்டு திண்ணைக்கு வந்தேன். திண்ணையிலிருந்து பார்த்தால் திடலில் சைக்கிள் ஓட்டுவது தெரியும். இரவு பழுத்து கிடந்தது. ட்யூப் லைட்டுகள் வெளிச்சம் கண்கூசியது. துணிக் கூடாரத்துக்குள்ளிருந்து மைக்செட்காரன் சாப்பிட்டு முடித்து வந்தான். அம்பலக்காரர் வீட்டு பெண் தட்டில் இட்லிகளை எடுத்து வந்து சைக்கிள் ஓட்டுகிறவனிடம் தந்து விட்டு ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்

சைக்கிள் ஓட்டுகிறவன் திடலின் நடுமையத்திலிருந்த மூங்கில் கம்பை இடது கையால் இறுக்கமாக பிடித்தபடி சைக்கிளை பேலன்ஸ் செய்து நிறுத்தியிருந்தான். கால்களை பெடலிலிருந்து எடுக்கவில்லை. தட்டை ஹேண்டில் பார் மீது லாவகமாக வைத்து வலது கையால் இட்லியை தின்றுக் கொண்டிருந்தான். சாப்பிட்டு முடித்ததும் அம்பலக்காரர் வீட்டு பெண் ஒரு லோட்டாவில் தண்ணீர் கொண்டு வர அதை குடிக்காமல் நன்றாக கொப்பளித்து துப்பிவிட்டு மீண்டும் சைக்கிளை ஒட்ட ஆரம்பித்தான். திடலின் ட்யூப் லைட் வெளிச்சம் என் கண்களுக்கு ஆயாசமாய் இருந்தது. திடலை சுற்றி, சுற்றி வரும் சைக்கிளை திண்ணையிலிருந்து பார்த்தபடியே இருந்தேன்.

கண்கள் வலிப்பது போலிருக்க லேசாக தலையணையில் சாய்ந்து படுத்தபடியே அவன் சைக்கிளை விட்டு இறங்கிவிடுவானோ என்று உற்று கவனித்துக்கொண்டிருந்தேன். ஒருவேளை அவன் சைக்கிளை விட்டு இறங்கிவிட்டால் என்ன செய்யவேண்டும். தெருவை ஒரு முறை பார்த்தேன். அநேகமாக எல்லாரும் உறங்க ஆரம்பித்திருந்தார்கள். அவன் சாவதானமாக சுற்றி சுற்றி வந்துக்கொண்டிருந்தான்.

மைக்செட்காரன் கூடாரத்திலிருந்து வெளியே வந்து போர்வையையும், மப்ளரையும் தந்துவிட்டு செல்ல சைக்கிளை மிதித்தபடியே மப்ளரை தலையில் கட்டிக்கொண்டான். போர்வையை உடலில் சுற்றியபடியே சைக்கிளை ஒட்ட ஆரம்பித்தான். தெருநாய்களின் அரவம் கூட குறைந்து கிடந்தது. சுவர்கோழிகள் க்ரீச்..க்ரீச்சென்று கத்திக்கொண்டிருந்தது.

சைக்கிள் வித்தைக்காரன் என்னை பார்த்து லேசாக புன்னகைப்பது போலிருந்தது. அவன் கண்டிப்பாக ஒன்னுக்கு இருக்க இறங்கியாக வேண்டும். தெருவை மீண்டும் ஒருமுறை பார்த்தேன். தெருவில் கயிற்றுக்கட்டிலில் படுத்து கிடந்தவர்கள் நன்றாக குறட்டை விடும் சத்தம் கேட்டது. ஒருவேளை நான் கவனிப்பது தெரிந்து அவன் இறங்காமல் ஓட்டுவது போல நடிக்கிறானோ…?

சைக்கிள் முன்பு போல சீராக இல்லாமல் வளைந்து, வளைந்து சுற்றி வந்தது.சைக்கிள் வித்தைக்காரன் தடுமாறி, தடுமாறி ஒட்டுவது போல எனக்கு பட்டது. சைக்கிள் வித்தைக்காரன் மூங்கில் கம்பை பிடித்தபடியே சைக்கிளை ஒரு இடத்தில் நிறுத்திவிட அவசர, அவசரமாக அவன் கால்களை பார்த்தேன். திண்ணையிலிருந்து நான் பரபரப்பாய் எழுவதை சைக்கிள் வித்தைக்காரன் கவனித்திருக்கவேண்டும். என்னை பார்த்து சிரித்தபடியே அவன் மீண்டும் சைக்கிளை ஒட்ட அரம்பித்தான். மெல்ல,மெல்ல நானும் அந்த சைக்கிள் வித்தைக்காரனின் ஆட்டத்தில் பங்கேற்பது போலிருந்தது.

ஒவ்வொரு முறை அவன் சைக்கிளை ஸ்லோ செய்யும்போதோ, தடுமாறும்போதோ நான் அவன் கால்களை உன்னிப்பாக கவனிப்பதும் பதிலுக்கு அவன் என்னை கேலியாக பார்த்தபடி மீண்டும் சைக்கிளை மிதிப்பதும் ஒரு முடிவற்ற ஆட்டம் போல இருந்தது

இரவின் அடர்ந்த கானகத்தினுள் தண்ணீர் அருந்தும் ஒரு மறிமான் போலவோ வழி தெரியாமல் மரத்தை சுற்றி,சுற்றி வரும் ஒரு மறிமான் குட்டி போலவோ அவன் இருந்தான். மரத்தடியில் உன்னிப்பாக எந்த நேரமும் அதை அடிக்க காத்திருக்கும் சிங்கத்தை போல விழிப்பாக பார்த்துக் கொண்டிருந்தேன். சைக்கிள்வித்தைக்காரன் வேகத்தை குறைக்கும்போதெல்லாம் தூக்க கலக்கத்திலிருக்கும் நான் பதறிப்போய் விழித்தெழும் போதெல்லாம் , என்னை கிண்டல் செய்வது போலிருந்தது அவன் பார்வை. அதுபோன்ற தருணங்களில் அவன் இன்னும் உற்சாகமாய் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான்.

ட்யூப்லைட் வெளிச்சம் கண்களை வலிக்க வைத்தது. மணியென்னவென்று தெரியவில்லை. இரவின் மடியில் தெரு கிறங்கி கிடந்தது. தூரத்தில் ஒற்றை கூட்ஸ் வண்டி ஓடும் சத்தம் இரவின் அமைதியை கிழிப்பது போலிருந்தது. பின்பனி இறங்குவது உணர முடிந்தது.அப்படியே உறங்கிப்போனேன். கண்விழிக்கும்போது அவன் வேப்பங்குச்சியால் பல் துலக்கியபடியே சைக்கிள் மிதித்துக் கொண்டிருந்தான். அவன் என்னை கேலியாக பார்ப்பது போல இருந்தது. என்னை நினைக்க அவமானமாகயிருந்தது. எப்படி உறங்கினேன்? பாய், தலையணையை சுருட்டி வீட்டுக்குள் நுழைந்தேன்.

மாலை பள்ளிக்கூடம் விட்டு திரும்பும்போது பால்பாண்டி கிண்டல் செய்தான். “நாந்தான் அப்பவே சொன்னேனில்ல… அவன் ஒன்னுக்கு கூட இருக்க இறங்க மாட்டான்”

“அது எப்படிடா முடியும்?”

“அவன் தண்ணி குடிக்கமாட்டான்டா. தண்ணி குடிக்காமா ஒருவாரம் கூட எங்க ஊர்ல சைக்கிள் சுத்தியிருக்கான்.” பால்பாண்டி சொன்னான்.

“அப்படியில்லடா. காலம்பறவே கிளம்பி கக்கூஸ் போயிட்டு வந்துடுவாண்டா” பொன்ராஜ் சொல்ல பால்பாண்டி அதை மறுத்தான்.

எனக்கு குழப்பம் அதிகமானது. இன்று மூன்றாவது நாள். கடைசி இரவு. பேசாமல் நாம இன்னைக்கு கண்முழிச்சு பாக்கலாமே பொன்ராஜ் சொன்னது சரியென்று பட்டது.“முதல்ல நீ தூங்கிடு…நான் கண்முழிக்கறேன். அப்புறம் நான் உன்னை எழுப்பி வுடறேன்..நீ கண்முழிச்சு பார்த்துக்கோ.. ” பொன்ராஜ் இரவு சாப்பிட்டுவிட்டு பாய்,தலையணையுடன் என்வீட்டு திண்ணைக்கு வந்துவிடுவான். இன்று எப்படியும் கண்டுபிடித்துவிடுவோம்.

தெரு முனையில் பாட்டு சத்தம் கேட்டது. “நான் செத்து பொழச்சுவண்டா..எமன பார்த்து சிரிச்சவண்டா….” வழக்கம்போல எம்.ஜி.ஆர் பாடல். அம்பலக்காரர் ஒரு செவ்வந்தி மாலையை சைக்கிள்வித்தைக்காரனுக்கு போட்டு, பத்து ரூபாய் தாளொன்றை அவன் சட்டைப்பையில் திணிப்பது இங்கிருந்து தெரிந்தது. லவுட்ஸ்பீக்கர் பாடல் நின்றது.

“அம்பலக்காரர் அய்யாவுத்தேவர் அன்பளிப்பு பத்துரூபாஏய்ய்ய்…” மைக்செட்காரன் மைக்கில் உற்சாகமாக கத்திக்கொண்டிருக்க, அய்யாவுத்தேவரின் இரண்டாவது பெண் அந்த மாலையுடன் சுற்றும் சைக்கிள்காரனை விட்டு வாசல்படியில் நின்று ரகசியமாக ரசித்துக்கொண்டிருந்தது.

கடைசி நாள் களை கட்டியது. திடலுக்குள் கூட்டம் அதிகமாக இருந்தது. தண்ணீர் நிரப்பப்பட்டிருந்த ஒரு சில்வர் குடத்தை வாயால் கவ்வியபடியே சைக்கிள்வித்தைக்காரன் சைக்கிளை மிதித்தான். கைதட்டல் விசில் காதை கிழித்தது. இருட்ட ஆரம்பித்திருந்தது. திடலின் ட்யூப் லைட்டுகள் எரிய ஆரம்பித்தது. அவன் சைக்கிளின் முன் சக்கரத்தை மட்டும் உயர்த்தி பின்சக்கரத்தின் பேலன்ஸில இப்போது ஓட்டிக்கொண்டிருந்தான். சிறுவர்கள் கைதட்டினார்கள். திடலிலிருந்த கூட்டம் படிப்படியாக வடிய ஆரம்பிக்க அம்பலக்காரார் வீட்டிலிருந்து வழக்கம்போல இட்லித்தட்டு வந்தது. அம்பலக்காரரின் பெண் இட்லித்தட்டை சைக்கிள் வித்தைக்காரனிடம் கொடுத்துவிட்டு களுக்கென வெட்கத்துடன் சிரித்தபடியே வீட்டுக்குள் ஓடியது.

இரவு உணவை சாப்பிட்டு விட்டு திண்ணைக்கு வெளியே வரும்பொது பொன்ராஜ் தலை தெரிந்தது. பொன்ராஜ் எனக்கு பக்கத்தில் திண்ணையில் பாய் தலையணையுடன் அமர்ந்தான். எங்கள் மூவரை தவிர மொத்த தெருவும் உறங்க ஆரம்பித்திருந்தது. சைக்கிள் வித்தைக்காரன் எங்களை பார்த்தபடியே சைக்கிளில் சுற்றிக்கொண்டிருந்தான். இன்று அவனை கண்காணிக்க இரண்டு ஆட்கள் இருக்கிறோம்.

சைக்கிள் வித்தைக்காரன் நேற்று போல சிநேகமாக என்னை பார்த்து சிரிக்கவில்லை. மெளனமாக ஓட்டிக்கொண்டிருந்தான். எனக்கு தூக்கம் வந்தது. பொன்ராஜுக்கு தூக்கம் வந்தால் என்னை எழுப்பிவிட்டு அவன் தூங்க வேண்டும். கண்களை இழுத்துக்கொண்டு சென்றது. எவ்வளவு நேரம் தூங்கினேன் தெரியவில்லை. எல்லாரும் திடலுக்குள் ஓடினார்கள். சலசலவென சத்தம்.

“இதோ இறங்கப் போகிறார்” மைக்செட்டில் அலறியது. வந்த கோபத்தில் பொன்ராஜை அடித்து எழுப்பினேன்.அவன் தூக்க கலக்கத்தில் பேந்த ,பேந்த விழித்தான். திடலுக்கு முன் குவிந்திருந்த கூட்டம் மறைத்தது. அருகே ஓடினேன். சைக்கிள் வித்தைக்காரன் ஒரு பறவை போல இரண்டு கைகளை விரித்தபடி சைக்கிளில் இருந்து குதிக்க மைசெட்காரன் தனியாக வந்த சைக்கிளை பிடித்துக் கொண்டான். சைக்கிள் வித்தைக்காரன் குதித்து, குதித்து திடலை வட்டமாக சுற்றி வந்தான். மூன்று இரவுகளாய் தரையில் படாத அவன் கால்கள் தரையை தொட தயங்குவது போலிருந்தது. இரண்டடிக்கு ஒரு முறை கால்களை தரையில் அழுந்த பதித்து நடனமாடியபடியேவும், அந்தரத்தில் பறப்பது போலவும் சுற்றி,சுற்றி ஓடி வந்துக்கொண்டிருந்தான். மக்கள் ரூபாய், நெல்,அரிசி என போட்டி போட்டப்படி தந்தார்கள்.

ஒரு நீர்ப்பறவையின் தரைப்பயணம் போல் தடுமாற்றமாய் ஆரம்பத்தில் சுற்றி,சுற்றி ஓடியவன் இப்போது சரளமாக கால்களை நிலத்தில் ஊன்றி ஓடிக்கொண்டிருந்தான். நான் உங்கள் வீட்டுப் பிள்ளை;இது ஊரறிந்த உண்மையென்று லவுட்ஸ்பீக்கர் அலறியது. சைக்கிள் வித்தைக்காரன் கூட்டத்தில் நின்ற என்னை பார்த்து சிரித்தான். பொன்ராஜ் என்னை பார்த்தான். கோட்டை விட்ட பொன்ராஜ் மீது கடுப்பாக இருந்தது.

மாலை பள்ளிக்கூடம் விட்டு திரும்பும்போது திடல் வெறிச்சோடி இருந்தது.மூங்கில் கம்புகள் நட்டிருந்த இடத்தில் மண் குழிகள் மட்டுமே இருந்தது.மூன்று நாட்களாக தொடர்ச்சியாக உயிர்ப்போடு இருந்த திடல் பார்க்க மயானம் போல தெரிந்தது. அந்த சைக்கிள் வித்தைக்காரன் எப்படி சிறுநீர் கூட கழிக்காமல் மூன்று நாட்களாக சைக்கிள் ஒட்டினான் என்பதை கடைசிவரை கண்டுபிடிக்க முடியாமலேயே போனதில் வருத்தமாயிருந்தது.

கடைசிப்பக்கம் கிழிந்துப்போன மாயாஜால கதையொன்றின் புதிர்த்தன்மையும்,ரகஸ்யங்களும் நிறைந்ததாய் இருந்தது அவனது வருகை யும் பொன்ராஜ் சொன்ன அந்த தகவலும். முக்கியமான அந்த தகவல் பின்னிருந்த ரகசியமொன்றை கண்டுபிடிக்காமல் போனதில் வருத்தமாக இருந்தது.

சைக்கிள் வித்தைக்காரன் ஊரைவிட்டு சென்றிருந்த இரண்டாம் நாள் எனது மாமா வீட்டுக்கு கிளம்பி கொண்டிருந்தேன். அம்மாவுடன் கும்பகோணம் பேருந்து நிலையத்தில் அதிகாலை இருட்டில் இறங்கியபோது அவனை பார்த்தேன். அதிசயமாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது. அதிகாலை இருட்டி ல் அந்த முகமும் உயரமும் தெளிவாகவே அடையாளம் தெரிந்தது. பேருந்து நிலையத்தின் வெளி வாயிலில் இடிந்திருந்த சுற்றுச்சுவர் அருகே குத்துக்காலிட்டு சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தான். சிறுநீர் கழித்து முடித்தவன் பழுப்பேறிய அழுக்கு வேட்டியை கணுக்கால்கள் தெரிய மடித்துக்கட்டி வேகமாக நடக்க ஆரம்பித்தான். சுற்றி ஒருமுறை பார்த்தேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை அந்த பழைய துருபிடித்த அட்லஸ் சைக்கிளை காணவில்லை. ஏமாற்றமாக இருந்தது.

நன்றி
என்.விநாயக முருகன்

Monday, October 4, 2010

சாமுத்ரிகா - உயிரோசை சிறுகதை


இந்த வார உயிரோசையில் வெளியான எனது சாமுத்ரிகா என்ற சிறுகதை வாசிக்க...


காசி தியேட்டரில் கிருஷ்ணமூர்த்தி மாமாவைப் பார்த்ததும் சட்டென அடையாளம் கண்டுகொண்டேன். அவராக இருக்குமோ? என்ற கணநேர தயக்கம் கூட எழவில்லை. பத்துவருட இடைவெளியில் மாமாவின் உருவத்தில் எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை. முன் நெற்றி மட்டும் சற்று ஏறி வழுக்கையைக் காட்டியது. முகத்தில் லேசான சுருக்கங்கள். அன்று பார்த்தது போலவே இன்றும் காதோரம் டை அடித்திருப்பார் என்று யூகிக்க முடிந்தது. காபி சாப்பிட்டபடியே ஸ்ரேயா ஸ்டில்களை ரசித்துக் கொண்டிருந்தார். இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அவரை என்னால் துல்லியமாக அடையாளம் கண்டுகொள்ள முடிந்ததற்கு காரணம் அவரது சில்க் சட்டையோ, தும்பைப்பூ போன்ற வெளுத்த வேட்டியோ,கழுத்தில் சட்டை காலரில் அழுக்குப் படாமல் இருக்க கட்டியிருந்த கர்ச்சிப்போ இல்லை. தியேட்டரில் கண்ணாடிப் பெட்டியில் ‘கந்தசாமி’ பட எழுத்துகளுக்கு நாயகி ஸ்ரேயா நின்றிருந்த போஸ். அதை விழுங்கி விடுவது போல பார்த்துக்கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி மாமாவின் பார்வை. அவரால் மட்டுமே இப்படி உலகத்தில் இருபத்திநாலு மணிநேரமும் பெண்களைப் பற்றியே பேசிக்கொண்டும், ரசித்துக்கொண்டும் இருக்க முடியும்.

ஸ்ரேயா ஸ்டில்களை மறைக்கும்படி அவருக்கு முன்னால் நின்று அவரைப் புன்சிரிப்போடு பார்த்தேன். ஸ்டில்களிலிருந்து கவனம் கலையப்பெற்றவராய், கிருஷ்ணமூர்த்தி மாமா என்னைக் குழப்பமாகப் பார்க்க நான் சிரித்தேன். என் கண்களை ஒருகணம் உற்றுப் பார்த்தார்.

"என்னைத் தெரியலையா மாமா? நான் பாஸ்கி. கும்பகோணம். சாரங்கபாணி கோயில்..."

"டேய்..திருட்டுப் பயலே..முட்டைக்கண்ணா... எப்படியிருக்கடா?"

சந்தோஷத்துடன் கத்தியபடியே வயிற்றில் குத்தியபடி கட்டிப்பிடிக்க, நாலைந்து பேர் எங்களைக் கவனித்துவிட்டு, பிறகு சமோசா சாப்பிடுவதைத் தொடர்ந்தார்கள். என் கைகளைப் பற்றி குலுக்கக் கையெல்லாம் மரிக்கொழுந்து வாசம் ஏறியது.எனக்கு சங்கோஜமாக இருந்தது. மாமா இப்படித்தான். எப்போது பேசினாலும் எட்டூருக்குக் கேட்கும் சத்தத்தில் பேசுவார். வலது காலைத் தரையில் ஊன்றியபடி, இடது காலைப் பின்னாலிருந்த தூணில் சாய்த்துக்கொண்டு பேச ஆரம்பித்தார். இருவரும் காபி சாப்பிட்டபடியே பரஸ்பரம் விசாரிப்புகள், நிறைய நினைவூட்டல்கள். பரஸ்பரம் செல்போன் எண்களைப் பரிமாறிக்கொண்டோம். பேச்சினூடே அவரது கண்கள் முதுகுக்குப் பின்னால் கண்ணாடிப் பெட்டியிலிருந்த ஸ்ரேயா ஸ்டில்கள் மீது அடிக்கடி சென்று வருவதைப் பார்க்க முடிந்தது.

மாமா சிரித்தபடியே, "செமையா இருக்காடா.இடுப்பா அது? பவர் ஸ்டியரிங் போல லட்சணமா இருக்கு.சாமுத்ரிகா லட்சணப்படி" என்றார்.

"என்ன மாமா..இன்னும் உங்க ஆராய்ச்சி முடியலையா? " சிரித்தபடியே கேட்டேன்.

தியேட்டரில் காலைக்காட்சிக்குக் கூட்டம் அவ்வளவாக இல்லை. வெளியே மழை நசநசவென பெய்துகொண்டிருந்தது. தியேட்டர் மாடியிலிருந்து கண்ணாடி ஜன்னல் வழியாகக் கீழே பார்க்கச் சாலையில் மழைத்துளிகள் இறங்குவது தெரிந்தது. சாலையில் சில மனிதர்கள் விரித்த குடைகளைப் பிடித்தபடி சென்று கொண்டிருப்பது தெரிந்தது. அவர்கள் முகம்,உடல் தெரியவில்லை. சாலையில் குடைகள் நகர்ந்து செல்வது பெரிய சைஸ் ஆமை ஓடுகள் நகர்ந்து செல்வது போல இருந்தது. காலையிலிருந்து விடாமல் தூறிக்கொண்டிருக்கும் மழையின் காரணமாக இன்றைய தினம் மகா சோம்பலுமாய், அலுப்புமாய் இருந்தது. அலுவலகம் செல்லவில்லை. ரூமில் தனியாக இருப்பது போரடிக்க, பக்கத்திலிருந்த தியேட்டரில் காலைக்காட்சிக்கு கிளம்பி வந்து விட்டேன். சினிமா இடைவெளியில் வெளியில் வந்த என் கண்களில் கிருஷ்ணமூர்த்தி மாமா தெரிந்தார். தியேட்டரில் இடைவேளை பெல் ஒலிக்க, உள்ளே நுழைந்தோம். எனது இருக்கை பி-3. மாமா டி-5ல் அமர்ந்திருந்தார். தியேட்டரில் கூட்டம் இல்லாததால் நிறைய சீட்கள் காலியாகவே இருந்தன. நான் மாமா பக்கத்து சீட் காலியாகவே இருந்தது. அவரது சீட் பக்கத்தில் நான் அமர்ந்துகொண்டேன்.

"இன்னுமா கல்யாணம் பண்ணாம இருக்கே?" மாமா என்னைப் பார்த்துக் கேட்டார்.

"வீட்டுல பார்த்திக்கிட்டு இருக்காங்க மாமா. திருச்சியிலருந்து நேற்றுக்கூட ஒரு வரன் வந்துச்சு. முடிஞ்சுடுமுனு நினைக்கிறேன்" சொன்னேன்.

"சென்னைல எங்க மாமா இருக்கறீங்க?"

"போரூர்" என்று ஒற்றைச் சொல்லை உதிர்த்துவிட்டு மாமா அமைதியாகப் படம் பார்த்துக் கொண்டிருந்தார். திரையில் ஸ்ரேயா அபாயகரமாய் ஆடை அணிந்து ஆடிக்கொண்டிருக்க, மாமா வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டிருப்பது தியேட்டர் இருட்டிலும் தெளிவாகப் பார்க்க முடிந்தது. எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இந்த சென்னை நகரம் விசித்திரமானது. ஒரே ஊரிலிருந்து சென்னைக்குப் புலம்பெயர்ந்து வந்துள்ளோம். இதே சென்னையில் நானும் மாமாவும் பத்து வருடங்களாக வசித்து வருகிறோம். இதுவரை ஒருவர் கண்ணில் ஒருவர் தென்பட்டதில்லை. இவ்வளவுக்கும் போரூருக்கும், ஜாபர்கான்பேட்டைக்கும் பத்து கிலோமீட்டர் தூரம் கூட இல்லை. சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே நிகழும் விசித்திரங்களில் இதுவும் ஒன்று.

திரையில் விக்ரம் பத்துப் பதினைந்து ஆட்களை சேவல் வேடம் போட்டு அடித்து துவைத்துக் கொண்டிருந்தார்.மாமா அசுவாரசியமாக கொட்டாவி விட்டார். ஸ்ரேயா வந்த காட்சிகளில் இருந்த மலர்ச்சி முகத்தில் இல்லை. பெண்களைப் பற்றியும், அந்த மாதிரி சப்ஜெக்ட்டிலும் மாமாவுக்கு பி.எச்.டி. பட்டம் கொடுக்கலாம்.அந்தளவுக்கு அவருக்கு விஷயம் தெரியும். அந்தக் காலத்தில் அரண்மனைகளில் பெரிய,பெரிய ஓவியர்கள் எல்லாம் இருந்தார்கள் என்று கதைகளில் படித்திருப்பீர்கள். அவர்களில் சிலர் பெண்ணின் தலைமுடியையோ,நகத்தையோ வைத்தே அவளது முழு உருவத்தை வரையும் ஆற்றல் கொண்டவர்கள் என்றும் படித்திருப்பீர்கள். காலப்போக்கில் அந்த ஆற்றலுடைய ஓவியர்கள் படிப்படியாக மறைந்து அதுபோன்றதொரு கலை முற்றிலும் அழிந்திருக்கலாம். ஆனால் மாமாவைப் பார்க்கும் போதெல்லாம் அது முற்றிலும் அழியவில்லை என்றே நினைக்கத்தோன்றும். மாமாவை வுமனைசர் என்று சொல்ல முடியாது. ஆனால் பெண்களின் சகலமும் அவருக்கு அத்துபடி. சாமுத்ரிகா லட்சணம் என்ற கலையை கரைத்துக் குடித்தவர் மாமா. ஒரு பெண்ணின் முகத்தையோ,முகத்தில் இருக்கும் மூக்கையோ, நெற்றிமேட்டையோ, கன்னத்தில் விழும் குழியையோ அவ்வளவு ஏன் அவள் நடையையோ, கால் கட்டைவிரலை வைத்தோ கூட அவள் முழு ஜாதகத்தையும் சொல்லிவிடுவார். உச்சபட்ச ஆச்சர்யமாக அந்தப் பெண்ணின் பெயரையோ கூட சொல்லி விடுவார். நம்புங்கள். உண்மை. பெரும்பாலும் அது சரியாகவே பொருந்தும்.

எனது பள்ளி நண்பர்களுடன் தேநீர்க்கடையில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருப்பேன். மாமா சைக்கிளைத் தள்ளிக்கொண்டே வருவார். ஒரு ‘டீ சொல்லுடா’ என்று என்னை அதட்டிவிட்டு பெஞ்சில் அமர்வார். தேநீர் அருந்திக் கொண்டிருப்போம். ஏதாவது ஒரு பெண் தேநீர்க்கடையை கடந்து செல்வாள். அவள் முகம் கூட பார்த்திருக்கமாட்டார். அப்படி எதைத்தான் பார்த்துச் சொல்வாரோ? அவள் பெயர் மலரில் ஆரம்பிக்கும். அநேகமாக அவள் வீட்டிற்குப் கடைசிப்பெண்ணாக இருக்க வேண்டும் என்று சொல்வார். விசாரித்தால் அந்தப் பெண் பெயர் மல்லிகாவாக இருக்கும். சொன்னது போலவே அந்தப் பெண் வீட்டிற்கு கடைசிப்பெண்ணாக இருப்பாள். குத்துமதிப்பாக அடித்து விடுகிறாரோ என்று கூட ஆச்சர்யமாக இருக்கும். பெண்களை எப்படிக் கவர்வது என்று டிப்ஸ் தருவார். என்னடா நாற்பது வயதில் இப்படி பள்ளிக்கூட பசங்களிடம் போய் சகவாசம் வைத்துக் கொள்கிறோமே. அதுவும் அந்த மாதிரி விஷயங்களை எல்லாம் பேசுகிறோமே என்று துளிக்கூட மாமாவிடம் அசூயை இருந்ததில்லை.

"காமசூத்ராவில் இருக்கும் கஷ்டமான போஸ் எது தெரியுமா?" எங்களைப் பார்த்துக் கேட்பார்

"இது என்ன குவிஸ் புரோகிராம் மாதிரி கேட்கிறார்?" எனக்குக் கடுப்பாக வரும். ஆனாலும் அது என்ன போஸ் என்று தெரிந்து கொள்ள ரகசியமாக ஆசை இருக்கும். மாமா எங்களை அற்பமாகப் பார்த்து சிரித்தபடியே விளக்க ஆரம்பிப்பார். டீக்கடை வைத்திருக்கும் மாணிக்கம் திட்டுவார்.

"ஏலே அறிவிருக்கா? சின்னப் பசங்கட்ட பேசுற பேச்சா?" கத்துவார்.

"போடா அறிவுகெட்டவனே.இதைவிட உலகத்துல உருப்படியான விஷயம் என்ன இருக்கு? ஏதோ நமக்குத் தெரிஞ்ச அனுபவத்தை சொல்லித்தரோம். பின்னால இவனுங்களுக்கு உதவுமில்லை."

டீக்கடை மாணிக்கத்தைப் பார்த்து மாமா சொல்வார்.

"நீ வூட்டுல உன் பொண்டாட்டிகிட்ட செய்யாததையா நான் சொல்லித் தரேன். மாமா கேட்க, ஏண்டா இவரிடம் வாயைக்கொடுத்தோம் என்றிருக்கும் டீக்கடை மாணிக்கத்துக்கு.

சபை கலையும் நேரத்தில் மாமா டீக்கடைப் பக்கத்தில் இருக்கும் பூக்கடையில் குண்டுமல்லி ஒரு முழம் வாங்கிக் கொள்வார். டீக்கடையில் காராசேவு பொட்டலமும் வாங்கிக் கொள்வார். உற்சாகமாக சைக்கிளை மிதித்தபடி வீட்டுக்குச் செல்வார். மாமா தலை மறைந்ததும் டீக்கடை மாணிக்கம் எங்களைப் பார்த்து ஒரு மாதிரி சிரிப்பார். "அறுக்க மாட்டாதவன் இடுப்பைச் சுற்றி ஆயிரெத்தெட்டு கருக்கருவாளாம்" என்று சொல்லிவிட்டு விஷமத்தோடு சிரிப்பார். டீக்கடை மாணிக்கம் சொல்வதன் அர்த்தம் வெகுநாள் வரை எனக்குப் புரியவேயில்லை. ஏதோ அறுக்க..ஆயிரத்தெட்டு என்று ரைமிங்காகச் சொல்வது மட்டுமே சுவாரசியமாக இருக்கும். அடுத்த நாள் மாலை மீண்டும் டீக்கடையில் சபை கூடும். மாமா கொஞ்சம் கூட லஜ்ஜையில்லாமல் முதல் நாள் அவர் வீட்டில் நடந்த விஷயங்களைச் சொல்வார். எல்லாமே பச்சை,பச்சையாக இருக்கும். டீக்கடை மாணிக்கம் தலையில் அடித்துக்கொள்வான். நாளடைவில் எனது பள்ளிக்கூட நண்பர்கள் மாமாவை ஒரு குரு ஸ்தானத்தில் வைத்து வழிபட ஆரம்பித்தார்கள். மாமா தலைக்குப் பின்னால் இருந்த ஒளிவட்டம் நாளுக்கு,நாளுக்கு விரிவடைந்து கொண்டே போனது.

படம் முடிந்து வெளியே வந்தோம். வெளியே மழைத் தூறலாக பெய்து கொண்டிருந்தது. சாலையோரத்தில் இரண்டு பக்கமும் தண்ணீர் வழிந்து சென்று கொண்டிருந்தது. காசி தியேட்டர் எதிரே இருந்த சிக்னல் மந்தமாய் இயங்கியது. ஓரிரு டூவீலர் ஓட்டுநர்கள் மட்டுமே மழையில் நனைந்து சென்று கொண்டிருந்தார்கள். பெரும்பாலானோர் டூவீலர்களை சாலையோரம் நிறுத்திவிட்டு கடைகளின் முன் ஒதுங்கியிருந்தார்கள். சிலர் சாலையோரத் தேநீர்கடைகளில் நின்று டீக்குடித்து கொண்டிருந்தார்கள். எனக்கு சாரலுக்கு இதமாக தம்மடிக்க வேண்டும் போல இருந்தது. மிதமாய் பசியெடுத்தது. மாமா ஏதாவது சாப்பிட்டுப் போகலாமென்று சொன்னார். திரையரங்கு பக்கத்திலேயே சரவணபவன் இருந்தது. நுழைந்தோம். மாமா அவருக்கு மசால் தோசை ஆர்டர் சொல்ல, நான் புரோட்டா சொன்னேன். ஹோட்டலில் ஆட்கள் மந்தமாய் இயங்கிக் கொண்டிருந்தார்கள். மழை வந்தால் மனிதர்கள் ஏன் சற்று மந்தமாய் மாறுகிறார்கள் என்று யோசித்தேன். இயந்திரத்தனமான நகர வாழ்க்கையின் தேர்ச்சக்கரம் சற்று வேகம் குறைந்திருப்பதைப் பார்க்க அழகாக இருந்தது.

எங்கள் எதிரே நாலு டேபிள்கள் தள்ளி ஒரு பெண் அமர்ந்திருந்தாள். அவள் தலைமுடி காற்றில் அலை அலையாக பறந்து கொண்டிருந்தது. முடியை மிக நேர்த்தியாக, அதிக சிரத்தையுடன் ஸ்ட்ரெயிட் பண்ணியிருப்பாள் என்று தோன்றியது.அவள் நிமிடத்திற்குப் பத்து முறை நெற்றியில் விழும் தலைமுடியை இடது கையால் ஒதுக்கிவிடுவது பார்க்க அழகாக இருந்தது. அவள் பக்கத்தில் அமர்ந்திருக்கும் இன்னொரு பெண் அவளது தோழியாகவோ, அக்காவாகவோ, தங்கையாகவோ இருக்கலாம். அவளும் அழகாக இருந்தாள். இரண்டு பேரில் யார் பேரழகி என்று போட்டியே வைக்கலாம். மாமா இரண்டு பேரையுமே ரசித்துக்கொண்டிருந்தார்

மாமா அடிக்கடி சொல்வது நினைவுக்கு வந்தது. கோரை முடி குடி கெடுக்கும். சுருட்டை முடி வாழவைக்கும். கூடவே சங்கு மாதிரி கழுத்திருக்கும் பெண்களைக் கல்யாணம் செய்தால் யோகம் அடிக்கும் என்பார். நீளமான மூக்கிருந்தால் செல்வம் நிறைய இருக்கும் என்பார். எனக்குக் குழப்பமாக இருக்கும்.எங்கள் தெரு முனையில் சதா சர்வநேரமும் ‘பசிக்குது...பசிக்குது’ என்று சுற்றிக் கொண்டிருக்கும் பெண்ணின் மூக்கு கூட நீளமாக இருப்பதாக பட்டது. ஒருநாள் அவள் முகத்தை உற்றுப் பார்த்துக்கொண்டிருக்க, அவளுக்கு என்ன தோன்றியதோ அன்றிலிருந்து என்னிடம் பிச்சை கூட கேட்பதில்லை.

நான் கல்லூரி சேர்ந்திருந்தபோது மாமா முன்பை விட மோசமானவராக மாறியிருந்தார். எப்போது பார்த்தாலும் செக்ஸ் ஜோக்குகள், இரட்டை அர்த்த வசனங்கள். அத்தை வீட்டில் இல்லாதபோது பீர் பாட்டில்களை வாங்கி வைத்துக்கொண்டு என்னையும், என் நண்பர்களையும் வீட்டுக்கு அழைப்பார். மொட்டை மாடியில் அவருடன் பீர் அடித்தபடி ஊர்க்கதைகள் பேசுவோம். பலான படம் பார்க்கச் சென்று போலீஸ் ஸ்டேஷனில் அடி வாங்கி திரும்பிய பி.டி வாத்தியாரைப் பற்றி சிரிக்க, சிரிக்க, பேசுவோம். எங்கள் ஸ்கூல் பிசிக்ஸ் வாத்தியார் தன்னிடம் டியூசன் படிக்க வந்த பெண்ணை தஞ்சாவூர் அழைத்துச் சென்று சினிமா பார்த்து திரும்பியது. எல்லாரும் சிரிக்க, சிரிக்க மற்றவர்கள் அந்தரங்களை வம்புக்கிழுத்து ரசித்துக் கொண்டிருப்போம். பேச்சின் இறுதியில் எப்படியாவது அவரது ஆராய்ச்சியைக் கொண்டுவந்துவிடுவார். மாமா எங்களிடம் சமர்ப்பிக்கும் அவரது ஆராய்ச்சிக் கட்டுரையில் நாளுக்கு நாள் புதுப்புது கண்டுபிடிப்புகளும், நுண்மையான தகவல்களும் பெருகி கொண்டே சென்றது. மூக்கு நுனி கூராக இருந்தால் அதி புத்திசாலியாக இருப்பார்கள் என்பார். எலி மூக்கு போல லேசாகத் தூக்கி இருந்தால் "அந்த" விசயத்தில் அதிக ஆர்வம் இருக்கும் என்பார். என் நண்பர்கள் வாயைப் பிளந்துகொண்டு கேட்பார்கள்.

"சாமுத்ரிகா லட்சணம் என்ன சொல்லுதுன்னா கால் சுண்டு வெரலு தரையில படணும். தரையில படாம தூக்கிட்டு நின்னா அவ குடும்ப வாழ்க்கைக்கு ஒத்து வரமாட்டா. அப்புறம் கால் கட்டைவெரலு வளைஞ்சிருந்தா அவளுக்கு ரெண்டு புருஷன் இருப்பாங்க..." மாமா சொல்வதை என் நண்பர்கள் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

"காலு இல்லாத பொண்ணுங்கள பத்தி உங்க சாமுத்திரிகா லட்சணம் என்ன சொல்லுதாம்?" நான் கிண்டலாய்க் கேட்பேன்.மாமாவுக்கு சுள்ளென்று கோபம் வரும்.

"நீ சின்ன பையன்டா. மீசை கூட மொளைக்கலை. இதெல்லாம் ஆயிரம் ஆயிரம் வருசமா அனுபவித்து எழுதுனது. உனக்குப் புரியாதுடா.நீ இப்பதான் பால்குடியை மறந்திருப்பே." மாமா சிரித்தபடியே சொல்வார். நண்பர்களும் ஆரவாரமாக மாமாவுடன் சேர்ந்துகொண்டு சிரிப்பார்கள்.

மாமாவுக்கு எப்படிப் பேசி எதிராளியை அடித்து வீழ்த்துவது என்பது நன்றாகவே தெரியும். மீசை முளைக்காத முகத்தைக் கிண்டல் செய்தால் அதன் மூலம் என் சுயத்தைக் காயப்படுத்தி என்னைத் தோற்கடித்துவிடலாம் என்பது அவருக்குத் தெரியும். என்னுடைய மற்ற நண்பர்கள் மாமாவுடன் சேர்ந்துக்கொண்டு சிரிப்பதன் காரணம் அவர்கள் மீசை முளைக்காத லிஸ்ட்டிலிருந்து அவசர அவசரமாக வெளியேறி விட்டேயாக வேண்டும் என்ற வேட்கையில் இருந்திருக்கலாம். மாமாவின் கட்சியில் சேர்ந்து அதன் மூலம் தாங்களும் பெண்கள் குறித்த அனைத்து விஷய ஞானங்களும் நிரம்பியவர்கள் என்று காட்ட விரும்பியிருக்கலாம். எனக்கு எரிச்சலாக வரும். மாமாவை ஒருமுறை கூட என்னால் பேசி ஜெயிக்க முடிந்ததில்லை. "இந்த ஆராய்ச்சியெல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம். எவனோ பைத்தியக்காரன் அந்தக் காலத்துல எழுதியிருக்கணும். இதை எழுதினவன் நிச்சயம் செக்சுவல் பெர்வெர்ட்டாகதான் இருக்க வேண்டும். அதேநேரத்தில் மனதின் இன்னொரு மூலை ரகசியமாக மாமா சொன்னதை ரசிக்கவும், ஆராய்ச்சி செய்யவும் தூண்டும். குறிப்பாகத் தனிமையில் இருக்கும்போது பெண்களைப் பற்றி மனதில் கிளர்ச்சி எழும்போது அவர் சொன்ன அனுபவங்களும், கதைகளும் மண்டைக்குள் இடைவிடாது மோதிக்கொண்டே இருக்கும். பெண்களுக்கு காலில் நடுவிரலுக்கு அடுத்த விரல் ஒட்டியிருந்தால் பணம் கொட்டுமென்பார் மாமா. இப்போதும் நகரப் பேருந்திகளிலோ, சினிமா தியேட்டர்களிலோ, சாலை நடைபாதைகளிலோ நடந்துபோகும் பெண்களை எல்லாம் பார்க்கும்போதும் அவர்களது கால் பக்கம் என் கண்கள் ரகசியமாக செல்லும். நாளடைவில் ஒன்று எனக்குத் தெளிவாகப் புரிந்தது. மாமாவைப் பார்க்கும்போதெல்லாம் அவரது பேச்சை எதிர்க்கவேண்டும் என்று ஏனோ நான் விரும்புகிறேன். அவர் இல்லாத நேரங்களில் அவர் சொன்ன வித்தைகளையும், ஆராய்ச்சிகளையும் பற்றியுமே அதிக நேரம் நான் சிந்தித்துக் கொண்டிருக்கின்றேன். ஏன் இந்த முரண்பாடு என்று தெரியவில்லை.

மாமாவைப் பார்த்தேன். மாமா உற்சாகமாய் காபியை டம்ளருக்கும், டபராவுக்குமாய் மாற்றிக் கொண்டிருந்தார். எதிரே சாலையில் சிக்னலுக்குக் காத்திருந்த ஏஸி.பஸ்ஸை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். மழைத்துளிகள் பேருந்தின் மீதிருந்து வழிந்து கொண்டிருந்தன. மழைக்காலத்திலும் ஏ.ஸி பஸ்களில் பயணம் செய்கிறவர்களைப் பார்க்க வினோதமாக இருந்தது. மாமா என்னைப் பார்த்து கண் சிமிட்டினார். அவர் பார்வை என்னிடம் "அந்த இரண்டு பெண்களைப் பார்த்தியா? அவர்களது ஜாதகமே என் கையில்." என்பது போல இருந்தது. அந்த பெண்களைப் பற்றி இப்போது எதையாவது அளந்துவிட போகின்றார் என்று பட்டது. நான் மறுத்துப் பேசினால் அவர் ஏடாகூடமாக ஏதாவது சொல்லுவார். அல்லது என்னை கிண்டல் செய்து என் வாயை எப்படியும் அடைத்துவிடுவார். மாமா எதிர்ப்புறம் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜீன்ஸ் போட்ட பெண்ணை விழுங்கி விடுவது போல பார்த்தபடியே காபி குடித்துக்கொண்டிருந்தார். அந்தப் பெண் முடியை சுருள்,சுருளாக கர்லிங் செய்திருந்தாள். எனக்குச் சிரிப்பாக வந்தது. "அறுக்க மாட்டாதவன் இடுப்பைச் சுற்றி ஆயிரெத்தெட்டு கருக்கருவாளாம்." டீக்கடைக்காரன் சொல்லும் வாக்கியம் நினைவுக்கு வந்தது. மாமாவைப் பார்த்தேன்.

நான் தஞ்சாவூர் கல்லூரியில் படிக்கும் போதுதான் அது நடந்தது. நன்றாக நினைவுள்ளது. கடைசி செமஸ்டருக்காகத் தஞ்சாவூரிலேயே ரூம் எடுத்து கல்லூரி நண்பர்களோடு தங்கிவிட்டேன். எப்போதாவது மட்டுமே கும்பகோணம் செல்வதுண்டு. அப்படி ஒருமுறை கும்பகோணம் சென்றபொழுது ஊரிலிருந்த பள்ளி நண்பர்கள்தான் அந்தத் தகவலை என்னிடம் சொன்னார்கள். விஜயலட்சுமி அத்தை யாருடனோ ஓடிப்போய்விட்டாள் என்று சொன்னார்கள். என்னால் நம்பமுடியவில்லை. டீக்கடை மாணிக்கம் என்னைப் பார்த்து அதே விஷமத்தோடு சிரித்தார். மாமாவை ஊருக்குள் பார்க்க முடியவில்லை. அவர் யாரிடமும் சொல்லாமல் ஊரை விட்டு எங்கோ போய்விட்டதாகச் சொல்லிக்கொண்டார்கள். ஊருக்குள் கிருஷ்ணமூர்த்தி மாமாவைப் பற்றி எல்லாரும் ஒரு மாதிரியாகப் பேச ஆரம்பித்திருந்தார்கள். எனது மனதில் மாமாவின் தலைக்குப் பின்னாலிருந்த ஒளிவட்டம் மங்கலாகத் தொடங்கியது. தஞ்சாவூருக்கு மீண்டும் கிளம்பி வந்துவிட்டேன். இறுதியாண்டு அரியர்ஸ்களை க்ளியர் செய்யும் முயற்சியில் மூழ்கியிருந்தேன். நான் கல்லூரி முடித்துப் பட்டமேற்படிப்புக்கு சென்னை வந்து ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து காலம் உருண்டோட இத்தனை வருடம் கழித்து இப்போதுதான் இதோ காசி தியேட்டரில் சந்தித்து ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றேன்.

"கோரை முடி தரித்திரம்டா.. சுருள் முடிதான் அதிர்ஷ்டமுனு சாமுத்திரிகா லட்சணம் சொல்லுது." நான் எதிர்பார்த்தது போலவே மாமா என்னிடம் சொன்னார்.

"என்ன மாமா..இன்னும் அடிச்சு வுடுற பழக்கம் போகலையா" கிண்டலுடன் கேட்டேன்.

"அடப் பயலே என் அனுபவம் உன் வயசுடா. சுருள்முடி பத்தி சாமுத்திரிகா லட்சணத்துல என்ன சொல்றாங்க தெரியுமா?" சொல்லிவிட்டு மாமா காபியை உறிஞ்சினார். மாமாவுக்கு எப்படி பதிலடி தருவது என்று எனக்குத் தெரியவில்லை. நான் ஒன்றும் சின்னப் பயல் இல்லை. மனதின் ஒரு மூலை என்னை வேகமாகப் பதில் தர தூண்டியது. சுள்ளென்று சூடாக அந்தப் பதில் இருக்க வேண்டும். அனிச்சையாக என்னை மீறி என் வாயிலிருந்து வந்த கேள்வியைக் கேட்டேன்.

"எதுனாச்சும் அடிச்சு வுடாதீங்க மாமா. சுருள்முடி இருக்கறவங்க எல்லாம் குடும்பப் பொண்ணுங்களா?" நான் முடிக்கவில்லை.

சட்டென மாமா முகம் மாறியது. அவரது முகம் ஒருகணம் இருண்டது போல தெரிந்தது. அதுவரை அவர் முகத்திலிருந்த மலர்ச்சி சட்டென மறைந்து இறுக்கமாக அவர் என்னைப் பார்த்தது போல தோன்றியது. கடுப்பில் நான் சற்று குரலை உயர்த்திப் பேசியது கிட்டத்தட்ட கத்தியது போல உணர்ந்தேன். பார்சல் கட்டிக்கொண்டிருந்த இரண்டொரு சர்வர்கள் என்னை விநோதமாகப் பார்த்தார்கள். பில்லைக் கொடுத்துவிட்டு அமைதியாக என்னுடன் வெளியே வந்தவர் காசி தியேட்டர் பஸ் நிறுத்தம் வரும்வரை எதுவும் பேசவில்லை. பஸ் வந்தவுடன், "பார்க்கலாம் மாப்பிள்ளை" என்று என் முகத்தைக் கூடப் பார்க்காமல் சொல்லிவிட்டு பஸ்சில் ஏறினார். தவறாக ஏதாவது சொல்லி விட்டேனா? குழப்பமாக இருந்தது. ஒருகணம் டீக்கடை மாணிக்கம் முகம் நினைவுக்கு வந்தது. விஜயலட்சுமி அத்தையை இழுத்துக் கொண்டு ஓடின சைக்கிள் கடைக்காரன் முகம் மங்கலாக வந்து மறைந்தது. குறிப்பாக, விஜயலட்சுமி அத்தையின் நெற்றியில் விழும் அந்த அழகான சுருள்முடிகள் வந்துப் போனது.


நன்றி
என்.விநாயக முருகன்