Saturday, October 31, 2009

படித்ததில் பிடித்தது - மிஸ்டர் மாறார்

மிஸ்டர் மாறார்
திண்ணை.காமில் வந்த இந்த வார நக்கலொன்று. அடிக்கடி சூர்யாங்கறது யாரு என்று தளபதி பட சாருஹாசன் போல கேள்வி வரும். கீற்று.காமில் இவரது சிறுகதைகள் எனக்கு அறிமுகமானது.

Tuesday, October 27, 2009

இயற்கை







இயற்கை
-----------
இயற்கை‌யென்ற தலைப்பில்
சிறுமியொருத்தி வரைந்த ஓவியத்துக்கு
ஆறுதல் பரிசு கூட தரவில்லையாம்.
அழுதபடியே சொன்னாள்.
வாங்கி பார்த்தேன்.
வெள்ளைத்தாளில் பெ‌‌ரிய அளவில்
இரண்டு முக்கோணங்களை
அருகருகே வரைந்திருந்தாள்.
ஒரு அரைவட்டத்தால்
முக்கோணங்களை இணைத்திருந்தாள்.
பிறைநிலவாம்.
மலைகளின் அடியில்
நெளி நெளியாக கிறுக்கியிருந்தவள்
ஆறு வரைந்தேன் என்றாள்.
ஆர்வமாக உற்றுப்பார்த்தேன்.
ஆற்றின் மேலே
ஆனந்தமாய் நீந்தும் மீன்கள்.
ஆற்றோரம் தென்னை மரங்கள் கூட.
ஓடமொன்றை காண்பித்தாள்.
மீன்களுக்கு அடிபடாமல் இருக்க
ஓடத்தின் பாதிமுனை மலை மேல் இருந்தது.
ஓடம் எப்படி மலையேறும்?
இதைச்சொல்லி நிராகரித்தார்களாம்.
சிரித்தபடியே அவளிடம் தந்தேன்.
ஓடமும் ஒருநாள் வண்டி ஏறும்போது
மலையேறினா‌‌‌ல் என்ன தப்பு?

இறைத்தூதுவன்

இறைத்தூதுவன்
——————————————
இரண்டு மாடிக்கடையில்
விற்பனை பிரதிநிதியென்று
அறிமுகப்படுத்திக் கொண்டவன்
இந்த புதுசெல்போனில்
பிரியமானவர்களின்
மனதின் குரலோடு
ரகசியமாக பேசலாமென்றான்.
பதிலேதும் சொல்லாமல்
புன்னகையோடு பார்த்தேன்.
என் மீது நம்பிக்கை வரவில்லை போலும்.
வரிசையாக சொல்ல ஆரம்பித்தான்.
பாட்டு கேட்கலாம்.
படம் பார்க்கலாம்.
படம் பிடிக்கலாம்.
குறிப்பெழுதலாம்.
கடிகாரம் உண்டு.
காலண்டர் பார்க்கலாம்.
விளையாடலாம்.
புத்தகம் படிக்கலாம்.
ஓவியம் வரையலாம்.
கணக்குகள் செய்யலாம்.
கடவுளையும் வரவழைக்கலாம்…….
திகைத்துப்போய் நிமிர்ந்தேன்.
அவன் தலைக்கு பின்னால்
சிறு ஒளி வட்டம் இருந்தது.

Saturday, October 24, 2009

பளிச் கவிதை - 1 --- "அறை"

எனக்கு பிடித்த கவிஞர்கள்/சமீபத்தில் ரசித்த கவிதைகளை இங்கு பதிவு செய்கின்றேன்.

அறை
------
கலவியில் முந்திய விந்துக்கு
நடிக்கத் தெரியாத மனைவியை
உப்புக் கரையாத தோசைக்கு
அறைவேன்

அழகாய் இருக்கும் மாணவியை
அடிக்கடி அழ வைக்க கையெழுத்து
நல்ல காரணம்

முதலையின் பற்கள் குறித்த கேள்விக்கு
அவளை நான் கடைசியாய் அறைந்தேன்
முத்தமிடும் வேட்கை மிக

முத்தமும் சிலுவையும் இணை பிரியாதவை
முத்தமிட்டு சிலுவையில் அறைந்தாலும்
சிலுவையிட்டு முத்தம் பறந்தாலும்

பேரறிவாளன் நான்
நாடகங்களில் நீண்ட வசனம் பேசும்
ஷைலக்கின் பாத்திரம் எனதே
கடைசி விருந்து நாடகத்திற்கு உங்களுக்கு
அனுமதி இலவசம் ஆண்டோனியோ

- நேசமித்ரன்

நன்றி: நேசமித்ரன் கவிதைகள்


காலங்காலமாக நமது குடும்ப அமைப்பின் மூடப்பட்ட அறைக்குள் நடக்கும் வக்கிரங்களை வெளிச்சம் போட்டு காண்பிக்கும் வரிகள்

Friday, October 23, 2009

வாழ்த்துரை

வாழ்த்துரை
——----——–
மணமக்களுக்கு வாழ்த்துச் சொல்ல
மேடயேறிய தலைவர்
மெல்ல செருமியபடியே ஆரம்பித்தார்.
எதிர்கட்சியை வசைபாடியவர்
ஒ‌ன்று சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்
எ‌ன்று நிறுத்தினா‌‌‌ர். நீண்ட பேச்சினூடே
மக்களுக்கு ஒ‌ன்று சொல்கிறேனென்று
வேறொன்றை சொன்னார்.
தொடர்ந்து பேசியவர்
இளைஞர்களுக்கு ஒ‌ன்று சொல்கிறேன்
சமுதாயத்துக்கு ஒ‌ன்று சொல்கிறேன்
பத்திரிகையாளர்களுக்கு ஒ‌ன்று
எ‌ன்று நீட்டிக்கொண்டே சென்றார்.
மணமக்களுக்கென்று எதுவும்
சொல்லாமலேயே கிளம்பினார்.
அந்தவொன்று என்னவெ‌ன்றும்
இறுதிவரை சொல்லவில்லை.

Friday, October 16, 2009

"நண்பனின் காதலி" - திண்ணை.காம் கவிதை

இந்த வார திண்ணை.காமில் வெளியான எனது "நண்பனின் காதலி" கவிதை வாசிக்க...

நண்பனின் காதலி
----------------
பெண்விடுதலை பற்றி
அதிகம் பேசும் நண்பனொருவன்
தொலைபேசியில் வந்தான்.
தான் ஒரு பெண்ணை காதலிப்பதாக
தயங்கியபடி சொன்னான்.
ஆச்சர்யத்துடன் விசாரித்தேன்.
அவளைப்பற்றி வர்ணிக்க ஆரம்பித்தான்.
புதுமைப்பெண் என்றான்.
நிமிர்ந்த நன்னடையாம்.
நேர்கொண்ட பார்வையாம்.
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளாம்.
திமிர்ந்த ஞானச்செருக்கு கொண்டவளென்றான்.
உனக்கேற்ற செம்மை மாதர்தான்
சிரித்தபடி வாழ்த்தினேன்.
அசப்புல பார்க்க
அவள் மாதிரியே இருப்பாளென்று
சினிமா நடிகையொருத்தியின்
பெயரை குறிப்பிட்டான்.
கடைசியில் சொன்னதை
மீண்டும் அழுத்திச் சொன்னான்.



-நன்றி
என்.விநாயக முருகன்

Tuesday, October 13, 2009

கல் யானை & ராக்கெட் விளையாட்டு

கல் யானை
———————————
ஒற்றைக்கல் யானையருகே
கல்வி சுற்றுலாவுக்கு வந்த
குழந்தைகள் நின்றிருந்தனர்
வாய்பிளந்து பிரமித்தபடி.
துடுக்கு சிறுமியொருத்தி கேட்கிறாள்.
இது கரும்பு திங்குமா அங்கிள்?
புரியாமல் குழம்புகிறேன்.
யானையென்றால்
கரும்பு திங்க வேண்டுமென்பது
பொது விதியா?
கரும்புகூட திங்க தெரியாமல்
என்ன யானை இதுவென்று
நகர்கிறாள் திட்டியபடி.
மகேந்திரவர்ம காலத்து
மோசமான யானையொன்று
புராதன பெருமைகளை இழந்து
பரிதாபமாக பார்த்தது என்னை.

ராக்கெட் விளையாட்டு
————————————————————

ஐந்தாம் வகுப்பு
வனஜா டீச்சர் மேல்
ராக்கெட் விட்டதாக
சிறுகதையொன்றின் வரிகளை
வாசிக்க நேரிட்டது.
சிறுவயது பள்ளி நிழலாடியது.
கூடவே உள்ளுக்குள் சிறு குழப்பம்.
வனஜாவா? தனுஜாவாவென்று தெரியவில்லை.
காலஇயந்திரம் குழம்பி நின்ற கணத்தில்
சிறுபேப்பர் ஒன்றை மடித்து
பறக்கவிட்டேன்.
வனஜாவா? தனுஜாவா?
அடுக்களையிலிருந்து வந்த மனைவி
வினோதமாக பார்த்தபடி கேட்டாள்.
இதென்ன சின்னப்புள்ளையாட்டம்!?