Thursday, June 21, 2012

ஆடுகளம்
-----------------
ஒரு மாலை வேளையில்
இந்த ஆட்டம் தொடங்கப்பட்டது
ஒரு மெல்லிய தலையசைப்பு

ஒரு புன்சிரிப்பிற்கு பிறகு
ஒரு அன்பான கைகுலுக்கல்
ஒரு நலம் விசாரிப்பில்

இந்த ஆட்டம் தொடங்கப்பட்டது
ஒரு நிதானமான
தேநீர் பருகலுக்கு பிறகு
இந்த ஆட்டம் தொடங்கப்பட்டது

நமக்கான இடத்தை தேர்வு செய்து
கறுப்பும் வெண்மையும்
கலந்த கட்டங்களின் முன்பாக
நேருக்கு நேர் அமர்கின்றோம்

கட்டங்களின் நிற வேறுபாடுகளை
எதேச்சையாக கவனிக்கும் நாம்

திடீரென நமது முகங்கள்
எதிரெதிர் சந்தித்துக்கொள்வதின்
தர்மசங்கடத்தை உணர தொடங்குகிறோம்

நாம் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல்
சதுரங்க காய்களை அடுக்குகின்றோம்
களத்திற்கு செல்லும் சாமுராய்

தனது கொலைவாளை
மிருதுவான எண்ணெய் துணியால்
துடைப்பதை போன்று
அவ்வளவு நேர்த்தியாக

ஆட்டத்தை முதலில் ஆரம்பிக்கும் நீ
உனது படைவீரனை களம் இறக்குகின்றாய்

குதிரையிலிருந்தபடி அவனை வீழ்த்தும்
என் ஆவேசம் கண்டு
நீ அரண்டு போகிறாய்
உனது பயம் ரசிக்க வைக்கின்றது

ஒரு வளைவில் திரும்பும்போது
உனது யானை படைகள்
என்னை வழிமறித்து தாக்குகின்றன
தடுமாறி விழுபவனை பார்த்து
மதகுருமார்களும் படைவீரர்களும்
கைகொட்டி சிரிக்கின்றார்கள்

ஆட்டம் மெல்ல மெல்ல
கட்டுப்பாட்டை மீறி போகின்றது
ரெளத்திரம் கொள்ளும்
எனது படைவீரர்கள்
ஆவேசத்துடன் பாய்கின்றனர்

வஞ்சகமும் வெறியும் கலந்த
நமது மதகுருமார்களின் போதனைகள்
கொலைக்களமெங்கும் எதிரொலிக்கின்றன

இதுநாள் வரை ஆடுகளத்திற்கென்று
வரையறுக்கப்பட நியதிகள் உடைபடுகின்றன

நாம் அமர்ந்திருக்கும்
அறையெங்கும் குருதி வாசனை
கவிழ தொடங்குகிறது

நம்மிடம் இன்னும்
ஐந்து போர்வீரர்கள் மட்டும்
எஞ்சியுள்ளார்கள்
யார் யாரை கொல்வார்கள்
என்று தீர்மானிப்பது கடினமாயுள்ளது

ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் பொருட்டு
எழுந்து வெளியில் செல்லும் நான்
நடுங்கும் கைகளுடன்
ஒரு சிகரெட் பற்றவைத்து
களத்திற்கு திரும்பி வருகின்றேன்
பதற்றமாக சதுரங்க களத்தை
பார்வையிடுகின்றேன்

நான் இல்லாத நேரத்தில்
எனது சதுரங்க காய்களை
யாரும் நகர்த்தி வைக்கவில்லையென்று
உறுதி செய்கின்றேன்
முதுகில் குத்தி கொலை
செய்யப்படவில்லையென்று
ஆசுவாசமடைகின்றேன்

ஆட்டத்தை தொடங்கும்போது
இருந்த நமது முகங்கள்
இப்போது இங்கு இல்லை
அவை வேறொருவடையதாய் மாறியிருக்கின்றன

கூடுமானவரை
நானும் நீயும்
இந்த ஆட்டத்தை
தள்ளி போடவே விரும்புகின்றோம்

இந்த 64 கட்டங்களில்
எங்கோ ஒளிந்துள்ளது
மரணமும்
மரணத்தை தள்ளிபோடும்
இந்த விளையாட்டும்

இன்னும் சில நிமிடங்களில்
இந்த ஆட்டம் முடியலாம்
இன்னும் சில மணித்துளிகளில்
இந்த ஆட்டம் முடியலாம்
இன்னும் சில யுகங்களில்
இந்த ஆட்டம் முடியலாம்

கருணையற்ற இந்த இரவு
நீண்டுக்கொண்டே செல்கின்றது



நன்றி

என்.விநாயக முருகன்

Monday, April 16, 2012

மகாகவி

ஒரு கவிஞன்
அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம்
அலாரம் வைத்து எழுந்துக் கொள்கிறான்

குளியலறை சென்று
குழாயில் தண்ணீர் வருகின்றதாவென்று
சரி பார்க்கின்றான்
தூக்க கலக்கத்தில் கவிதை போல
நிழலாடுகின்றது ஏதோவொன்று
தண்ணீர் ஒழுகும் ஓட்டை வாளியை பார்த்தக்கணம்
அவன் கற்பனை வடிந்து விடுகின்றது

பல்துலக்கி டிபன் சாப்பிட்டு அலுவலகம் விரைகின்றான்
பேருந்தில் நடத்துனர்
கிழித்து கொடுக்கும் பயணச்சீட்டு
அவனை கவிஞனென உணரவைக்கின்றது
பயணச்சீட்டின் பின்புறம் பேனாவால்
இரண்டு வரி எழுதுகின்றான்

அலுவலக தேநீர் இடைவெளியில்
அவன் மேலும் இரண்டு வரிகளை யோசிக்கின்றான்
மதிய இடைவெளியில்
முதல் இரண்டு வரிகளை திருத்தி அழிக்கின்றான்
அலுவலக மேலாளர் வசவிற்கு
பிறகு கழிப்பறை செல்கின்றான்.
அங்கு இரண்டு வரிகள்

இடையே பங்குச் சந்தை முதலீடு
முடிச்சூர் சாலையின் ரியல் எஸ்டேட்
மகள் பெயரில் காப்பீடு திட்டம்
மாமனார் ஊருக்கு செல்ல
தட்கலில் முன்பதிவு
மகனுக்கு கல்வி லோன்
மகளுக்கு பள்ளிகூட விண்ணப்பம்
இன்னும் பல பல வேலைகளுக்கு இடையில்
வரிகள் வளர்கின்றன

மாலை வீடு திரும்பும்போது
பத்தாவது வரி முழுமையடைகிறது
இரவு உணவிற்கு பின்னர்
குறிப்பேடு,பேனாவுடன்
தூங்கி போகும் அவன்
திடீரென படிமம்,இருண்மையென அரற்ற
யோவ் பேசாம மூடிகிட்டு தூங்கமாட்ட
மனைவி அதட்டுகிறாள்

ஒரு கவிஞன்
புரண்டு படுக்கிறான்

காலையிலிருந்து
பொறுத்து பொறுத்து பார்த்த
ஒரு கவிதை
தன்னைத்தானே எழுதிக் கொள்ள ஆரம்பிக்கின்றது

நன்றி
என்.விநாயக முருகன்

Monday, March 26, 2012

பண்புடன் ஒரு கடிதம்

அன்புள்ள அஞ்சலாவுக்கு
ஒரு கடிதம் எழுத அமர்ந்தேன்
எனது கணிப்பொறியில்
என்ன சிக்கலோ
'அ' தட்டச்சு செய்வதில் பிரச்சினை
மிகுந்த யோசனைக்கு பிறகு
'ஏ' என்று தட்டச்சு செய்தேன்
ஏஞ்சலாவாக மாறிய முன்னாள் அஞ்சலாவிடம்
கொஞ்சம் மன்னிப்பும் கேட்டேன்
கண்ணே ஏஞ்சலா என்னும் போதெல்லாம்
வெளியூர் வேலைக்குச் சென்ற
பக்கத்து வீட்டுக்காரனின் மனைவியை
கொஞ்சும் ராஜ்மோகன் போலிருந்தது
'அ'ன்புடன் என்று முடியும் இடத்தில்
என்ன செய்வதென்று குழம்பி பின்னர்
பண்புடன் என்று முடித்துக் கொண்டேன்


நன்றி
என்.விநாயக முருகன்

Sunday, January 22, 2012

இன்று

இன்று புத்தக கண்காட்சியில்
ஒரு திருவள்ளுவரை சந்தித்தேன்
தனது கவிதை தொகுப்பிற்கு
ராயல்டி கிடைக்கவில்லையென்று விசனப்பட்டார்
தவிர
தான் எப்போதும்
கிரவுன் சைசில் எழுதுவதால்
பதிப்பகம் கிடைக்கவில்லையென்று புலம்பினார்
பேசாமல் தொல்காப்பியர் என்ன புடுங்கியாவென்று
பிளாக்கிலோ பேஸ்புக்கிலே எழுதலாம்
பொழுதாவது போகுமென்றார்

இன்று புத்தக கண்காட்சியில்
ஒரு பாரதியை சந்தித்தேன்
என்ன கவிஞரே சுகமாவென்று கேட்டேன்
யாரும் இருக்கும் இடத்தில் இருந்தால்
எல்லாம் சுகமென்றார்
இது கண்ணதாசன் சொன்னதாயிற்றே
குழம்பியபடி பார்த்தேன்
என்ன இவ்வளவு விரக்தியென்று கேட்டேன்
சாகித்ய அகாடமி விருதை எதிர்பார்த்து
தலை நரைக்கிறதென்று சொன்னார்

இன்று புத்தக கண்காட்சியில்
ஒரு அவ்வையாரை சந்தித்தேன்
எல்லாம் ஆணாதிக்கம் ஆணாதிக்கம்
என்று தலையில் அடித்து கொண்டார்
அதியமானிடம் வாங்கிய நெல்லிக்கனியை
திரும்ப கொடுக்கப் போவதாக
ஆவேசத்துடன் சொன்னார்

இன்று புத்தக கண்காட்சியில்
ஒரு கம்பரை சந்தித்தேன்
அவரது கதையை
ஒரு மெகா சீரியல் இயக்குனர்
திருடிகொண்டதாக புகார் சொன்னார்
அடுத்து கண்காட்சிக்கு
ஒரு ஐயாயிரம் பக்க நாவல் எழுதும்
உத்தேசமிருப்பதாக சொன்னார்

இன்று புத்தக கண்காட்சியில்
ஒரு மோசிகீரனாரை சந்தித்தேன்
பாவம் இளைத்து களைத்து போயிருந்தார்
தனியாக நாற்காலில் அமர்ந்தபடி
தனது கவிதைப்புத்தகத்தை கையிலெடுத்து
தனக்கு தானே விசிறி கொண்டிருந்தார்
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
எங்கேவென்று கேட்டேன்
தனக்கு
டீ வாங்கி வர போனதாக
சொல்லி சிரித்தார்


நன்றி
என்.விநாயக முருகன்

Monday, December 19, 2011

ஜப்திக்கு வந்த வீடு

ஜப்திக்கு வந்த வீட்டிலிருந்து
வெளியேறும் ஆண்கள்
அந்த தெருவை
விரைந்து கடக்க முயற்சிக்கிறார்கள்

ஜப்திக்கு வந்த வீட்டிலிருந்து
வெளியேறும் பெண்கள்
அந்தரங்க சுவடுகளை
அழித்து விட்டு செல்கிறார்கள்

ஜப்திக்கு வந்த வீட்டிலிருந்து
பொம்மையுடன் வெளியேறும்
குழந்தைகளின் கைகளில்
அப்படியொரு பொறுப்புணர்ச்சி

ஜப்திக்கு வந்த வீட்டிலிருந்து
வெளியேறும் குருவியொன்று
கூடுதல் வைக்கோல் குச்சிகளோடு
மீண்டும் உள்சென்று தாழ பறக்கிறது

Saturday, November 26, 2011

ஒரு மழை

ஒரு மழை
சில கணங்கள்
கால இயந்திரத்தில்
பின்னோக்கி இழுத்து செல்கிறது

ஒரு மழை
புறக்கணிக்கப்பட்ட
சில பிரியங்களை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
பிரிந்து சென்றவர்களை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
பழைய காயங்களை கீறி
வலியை நினைவூட்டுகிறது

ஒரு மழை
காதலியை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
பள்ளி தோழிகளை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
கல்லூரி ஆசிரியைகளை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
நண்பனை
நினைவூட்டுகிறது


ஒரு மழை
நண்பனின் காதலியை,
நண்பனின் தங்கையை
நண்பனின் மனைவியை
நண்பனின் அம்மாவை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
சாலையில் கடந்து சென்ற
முகம் தெரியாத பெண்ணை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
குழந்தையை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
கடவுளை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
சைத்தானை
நினைவூட்டுகிறது


ஒரு மழை
காதலை நினைவூட்டுகிறது

ஒரு மழை
காமத்தை நினைவூட்டுகிறது

ஒரு மழை
கவிதை எழுத நினைவூட்டுகிறது

ஒரு மழை
கொலை செய்ய நினைவூட்டுகிறது

ஒரு மழை
பொய் சொல்ல நினைவூட்டுகிறது

ஒரு மழை
தற்கொலையை நினைவூட்டுகிறது


ஒரு மழை
மது விடுதியை புகை பிடித்தலை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
தேநீர் இடைவெளியை
நினைவூட்டுகிறது


ஒரு மழை
சில நேரங்களில்
இன்னொரு மழையை
நினைவூட்டுகிறது


நன்றி
என்.விநாயக முருகன்

Wednesday, November 16, 2011

புயலுடன் உரையாடுபவன்

பண்டிகை நாளொன்றின்
முந்தைய இரவில்
வானிலை ஆராய்ச்சி மையத்தில்
தனியாக அமர்ந்துள்ளான் அவன்


வெளியே எங்கோ
தொலைதூர அதிர்வேட்டுகளும்
வானவெடிகளின் கொண்டாட்டங்களும்
சன்னமாய் ஒலிக்கின்றன


அவன் அமர்ந்திருக்கும்
கட்டுப்பாட்டு அறையில்
கழுவப்படாத
காலி தேநீர்க்கோப்பைகளும்
எரிந்துப்போன சிகரெட் துண்டுகளும்
மல்லிகைப்பூக்களின் வாசமும்
சிதறி கிடக்கின்றன


அமைதியாக தலையை
கவிழ்ந்திருக்கும் அவன்
சலிப்பாக
கணிப்பொறித்திரையை பார்க்கிறான்


அவனது இருப்பிடத்திலிருந்து
ஐநூறு கிலோமீட்டர் தள்ளி
புயல் சின்னம் நகர்கிறது


சலிப்புற்றிருந்த அவன் முகம்
இப்போது
காதல் கடிதம் கிடைக்கப் பெற்ற
பதின்ம பெண்ணாய் மாறுகிறது
அந்த அறையில் பரபரப்பு
சூல் கொள்கிறது


அவன்
கட்டுப்பாட்டு அறையிலிருக்கும்
கருவிகளின் திசையை மாற்றுகிறான்
கணக்கீடுகளை மீண்டும் சரிபார்க்கிறான்


இதுவரை சந்தித்திராத புதிய புயல்
இதுவென்று அவனுக்கு படுகிறது
வெள்ளைத்தாளில் எதையோ
கிறுக்குகிறான்
தொடர்பு துண்டிக்கப்பட்ட யாருக்கோ
மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறான்
சில மின்னஞ்சல்களை அனுப்புகிறான்


அவன்
புயலின் மையத்தை
புயலின் உருவத்தை
உன்னிப்பாக உற்றுப் பார்க்கிறான்
சிறுவயதில்
கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட
பால்ய காலத்தோழனின் முகம்
அவனுக்கு நினைவுக்கு வருகிறது
சாட்டிலைட் சமிஞ்கைகளை
கவனமாக ஒலிப்பெயர்க்கிறான்


புயல் வடமேற்கு திசையில் நகர்கிறது
அவனது திசையும் அதுவே
அவன் ஆர்வமாக பார்க்கிறான்
தேநீர் குடித்தபடி
புயலை பார்த்து ரசிக்கின்றான்
நேரம் செல்ல செல்ல
புயலின் வேகம் அதிகரிக்கிறது


அவன்
புயலுக்கு ஒரு செல்லப்பெயர் சூட்டுகிறான்
புயலின் மையம் சற்று விரிகிறது
அவன் இப்போது
புயலுடன் உரையாட தொடங்குகின்றான்


புயலுக்கும் அவனுக்கும்
இடையிலிருக்கும் பிணைப்பு
அந்தரங்கமானது
புதிரானது
சுவாரசியமானது
அவர்கள் இருவரும் உரையாடிக்கொள்ளும்
மொழி மற்றவர்கள் அறியாதது
சங்கேத குறியீடுகளால் நிறைந்தது
அவர்கள் உரையாடல்கள்
காதல் நிறைந்தது


நீண்ட உரையாடலின் முடிவில்
புயலின் மையம் சிறிது சிறிதாக சுருங்குகிறது
அது மெல்ல மெல்ல உருமாறுகிறது
புயலின் திடீர் செய்கை
புரியாமல் அவன் திகைக்கிறான்


புயல் இப்போது வடகிழக்காக நகர்கிறது
அவனுக்கு கைகள் நடுங்குகின்றன
புயலின் இலக்கை
அதற்கு நினைவூட்டுகின்றான்
அது பயணிக்க வேண்டிய பாதை
அதுவல்லவென்று கண்டிக்கின்றான்
அது பயணிக்க வேண்டிய வேகமும்
அதுவல்லவென்று கூறுகிறான்


பெயர் தெரியாத தீவுக்கூட்டங்களை நோக்கி
புயல் மெல்ல மெல்ல நகர்கிறது
அவனுக்கு வியர்க்கிறது
கவலையோடு
கணிப்பொறித்திரையை பார்க்கிறான்
மெல்ல மெல்ல புயல்
அவன் பார்வையிலிருந்து மறைகிறது


தலைக்கு மேல் கடக்கும்
மாபெரும் பறவையொன்று
தொடுவானில் மறைந்தார்போல்
இறுதி புள்ளியாய்
திரை ஒளிர்கிறது


அவனுக்கு கண்ணீர் பெருகுகிறது
அழுகையினூடே ஒரு சிகரெட் பற்றவைக்கிறான்


அவன் இப்போதுமீண்டும்
கட்டுப்பாடு அறையின் மையத்தில்
தலைகுனிந்தபடி
அமைதியாக காத்திருக்கிறான் தனியாக


நன்றி
என்.விநாயக முருகன்