Thursday, November 19, 2015

ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே - சிறுகதை


வணக்கம்

இந்த வார ஆனந்த விகடனில் ‘ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே’ என்ற பெயரில் எனது சிறுகதை ஒன்று வெளியாகியுள்ளது. நண்பர்கள் பார்வைக்கு...
 
 

 

    

Monday, November 9, 2015

ராஜீவ் காந்தி சாலை - எனது ஆசிரியரின் விமர்சனம்

அன்புள்ள விநாயகமுருகன்

என் பெயர் மு.அருணகிரி. என்னை நினைவில் இருக்குமென்று நினைக்கிறேன். தஞ்சாவூரில் நீங்கள் படித்த பொன்னையா ராமஜெயம் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக இருந்தேன். இப்போது தஞ்சாவூரில் இல்லை. நன்னிலத்தில் வசிக்கிறேன். கடந்தாண்டு நூலகத்தில் உயிர் எழுத்து பத்திரிக்கை படிக்கும்போது அதில் எஸ்.வி.ராஜதுரையின் ஒரு கட்டுரை படித்தேன். அதில் உங்கள் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. பெயரை வைத்து சற்று சந்தேகமாக இருந்தது. நீங்கள்தான் என்று பிறகுதான் உறுதிப்படுத்திக் கொண்டேன். எனது மாணவர்களிடம் விசாரித்தேன். நீங்கள் முகநூலில் தீவிரமாக இயங்குவதை கேள்விப்பட்டு ஆச்சர்யமாக இருந்தது. எனக்கு முகநூல் கணக்கு இல்லை. எப்போதாவது வலைப்பதிவுகள் வந்து பார்ப்பதுண்டு. எனது மாணவன் ஒருவன் உங்கள் வலைப்பதிவை தேடிப்பிடித்து கொடுத்தான். உங்கள் மின்னஞ்சல் முகவரி கிடைத்தது. உங்கள் புகைப்படத்திலிருந்து என்னால் அடையாளம் கண்டுக்கொள்ள முடியவில்லை. எஸ்விஆரின் கட்டுரையை உங்கள் வலைத்தளத்தில் பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டேன். எஸ்.வி.ராஜதுரையிடமிருந்து அவ்வளவு எளிதாக அபிப்ராயங்களை பெறமுடியாது. உங்கள் முதல் நாவலுக்கான அவரது விமர்சனம் உண்மையில் மகிழ்ச்சியூட்டுவதாக இருந்தது. நான் விசாரித்த உங்கள் நாவல் எங்கும் கிடைக்கவில்லை. சமீபத்தில்தான் எனது மாணவர் ஒருவர் எங்கிருந்தோ தேடிப்பிடித்து கொண்டு வந்தான். படித்தேன்.

முதலில் நாவலின் முக்கிய குறையை சொல்லிவிடுகிறேன். அந்த கட்டுரையின் இறுதியில் எஸ்.வி.ஆர் குறிப்பிட்டதுதான். நாவலில் பல இடங்களில் வாக்கியப்பிழைகள், இலக்கணப்பிழைகள் உள்ளன. அது நாவலை தொடர்ந்து படிக்கவிடாமல் தொந்தரவு செய்கிறது. நாவலின் தலைப்பிலேயே பிழை. ராஜீவ் காந்தி என்று பிரித்து எழுத வேண்டும். ஆசிரியராக என்னால் மன்னிக்கமுடியாத பிழை இது. இது முக்கியமான குறைபாடு. சரிசெய்து கொள்ளுங்கள்.

ஆனால் இந்த ஒரேயொரு குறையை தவிர வேறு எதையும் என்னால் பார்க்க முடியவில்லை. இது ஒரு அசாத்தியமான முயற்சி என்றுதான் சொல்ல தோன்றுகிறது. நாவலுக்கு காலம் (Time), வெளி (Space) இரண்டு புள்ளிகள் முக்கியம். அதன் மீது கதாபாத்திரங்களை சிருஷ்டித்து எழுத வேண்டும். இந்த நாவலில் காலமும், வெளியும் இரண்டு புலனாகாத(Invisible) புள்ளிகள் மீது மிக அழகாக வரையப்பட்ட ஒரு கோலத்தை பார்க்கிறேன். சாலை ஒரு புள்ளியாக வருகிறது. ஆண்டின் பல்வேறு மாறும் பருவநிலைகள் இன்னொரு புள்ளியாக வருகிறது. ஒவ்வொரு பருவநிலைக்கு ஏற்ப மனிதர்களின் குணங்கள் மாறுகின்றன. சாலை மாறுகின்றன. மழை, பனி, கோடைக்கு ஏற்ப சாலை விரிந்தும், நெகிழ்ந்தும் தன்னை மாற்றிக்கொள்கின்றது. மனிதர்களும் தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். அன்னத்தை,செட்டியாரை தவிர வேறு எந்த மனிதர்களும் நிலையான குணங்கள் கொண்டவர்களாக இல்லை. சந்தர்ப்பத்துக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு பிழைக்கிறார்கள். நாவலின் இந்த அம்சத்தை யாரும் வேறு யாரும் தங்கள் விமர்சனத்தில் குறிப்பிட்டார்களாக என்று தெரியவில்லை. படிக்கும்போது எனக்கு தோன்றியது இது. இந்த மையத்தை நாவலின் வடிவமாக தேர்வு செய்ததாலேயே உங்களால் இந்த படைப்புக்குள் ஒரு பெருநாவலுக்கான விரிவையும், செறிவையும் , பிரமாண்ட களனையும் கொண்டு வர சாத்தியமாகியுள்ளது. ஏனெனில் தமிழில் வெளிவரும் வரலாற்று நாவல்கள் எல்லாம் பிரமாண்டத்தை கொண்டுவர சில நூற்றாண்டுகள் கதைக்களன் இருக்குமாறு பார்த்துக்கொள்வார்கள். ஆனால் உங்கள் நாவலுக்கு நீங்கள் இருபதாண்டுகாலத்தை மட்டும் எடுத்துக்கொண்டு இதை சாத்தியப்படுத்தி இருக்கின்றீர்கள்.

இரண்டாவது இந்த நாவலின் பிரமாண்டத்தன்மை என்பது அதன் இருபக்க சித்தரிப்பு. பல்வேறு வர்க்கநிலை மனிதர்களை சித்தரித்து அவர்களின் முரண்களை நுட்பமாக காட்டியுள்ளீர்கள். சான்றாக ஓர் அத்தியாயத்தில் மேல்தட்டு மக்கள் நட்சத்திர விடுதியில் குடித்தபடி பேசிக் கொண்டிருப்பார்கள். அடுத்த அத்தியாயத்தில் கீழ்தட்டு மக்கள் குடித்தபடி பேசுவார்கள். ஓர் அத்தியாயத்தில் அவர்கள் கீழ்தட்டு மக்களின் பாலியல் உறவை விமர்சிப்பார்கள். அடுத்த அத்தியாயத்தில் கீழ்தட்டு மக்கள் உயர்வர்க்க மனிதர்களின் பாலியல் கிசுகிசுக்களை ஆர்வமாக பேசிக்கொள்வார்கள். இப்படியேதான் நாவல் முழுக்க செல்கிறது. மென்பொருள் நிறுவனம் உள்ளே இருக்கும் உயரதிகாரிகள் கீழ்நிலை அதிகாரிகளை மட்டம் தட்டுவார்கள். அடுத்த அத்தியாயத்தில் அவர்கள் மேலதிகாரிகளை கிண்டல் செய்வார்கள். ஜாதியக்கட்டமைப்பு , பணம், பாலியல் இச்சைகள், குடும்ப உறவுகள், மதம் , பண்பாட்டுக்கூறுகள் இப்படியாக எல்லா விஷயங்களையும் அதன் இன்னொரு பக்கத்தை வேறொரு மாறுபட்ட கதாப்பாத்திரங்கள் வழியாக விவாதத்துக்கு உட்படுத்துகின்றீர்கள். அன்னம், செட்டியாருக்கு இடையே இருக்கும் முறைகேடான உறவு அர்த்தம் பொதிந்த அழகிய கவிதையாக மலரும் அதே தருணம் சுஜாவின் உறவு ரத்தமும், சதையுமாக வந்துபோகிறது. நாவலின் ஊடாக இறுதிவரை செல்லும் இந்த விவாதத்தன்மையும், கருத்து, எதிர்கருத்து பரிமாற்றங்களும் நாவலுக்கு செறிவை தருகிறது. நாணயத்தின் இரண்டு பக்கங்களை நுட்பமாக விவரித்து எழுதியுள்ளீர்கள். இதை திட்டமிட்டு செய்தீர்களாக அல்லது இயல்பாக கதையின் போக்கில் வந்ததா என்று தெரியவில்லை. இறுதி அத்தியாயத்தை படித்து முடித்ததும் அந்த சாலையும் மனிதர்களும் வெகுநேரம் வரை மனதில் அப்படியே இருந்தார்கள். ஒரு நல்ல படைப்புக்கான குணமாக இதை பார்க்கிறேன்.

நாவலை பற்றி நீண்ட விமர்சனக்கட்டுரை ஒன்று எழுதிக் கொண்டிருக்கிறேன். தஞ்சை தமிழ்பல்கலைக்கழகத்தில் படிக்கும் எனது மாணவர்களில் சிலர் உலகமயமாக்கல் குறிப்பாக தமிழ் பண்பாட்டுத் தளத்தில் மென்பொருள்துறை ஏற்படுத்திய தாக்கத்தை பற்றி ஆய்வு செய்ய என்னிடம் வந்தார்கள். அவர்களுக்கு இந்த நாவலை பரிந்துரை செய்தேன். வாழ்த்துகள்.


அன்புடன் ஆசிரியர்
மு.அருணகிரி