Monday, July 27, 2009

"கிணற்றில் தூங்கும் இருள்" - உயிரோசை சிறுகதை

உயிரோசை இதழில் வெளியான எனது "கிணற்றில் தூங்கும் இருள்" சிறுகதை வாசிக்க...

கிணற்றில் தூங்கும் இருள்

-நன்றி
என். விநாயக முருகன்

"அவசர சிகிச்சை" - உயிரோசை கவிதை

உயிரோசை இதழில் வெளியான எனது "அவசர சிகிச்சை" கவிதை வாசிக்க...

அவசர சிகிச்சை
நீண்ட ரப்பர்க்குழாயின்
ஒரு முனை
வாயினுள் இறங்குகிறது
வலுக்கட்டாயமாக
உப்புக்கரைசலை ஊற்றுகிறார்கள்
இன்னொரு முனையில்
யாரோ
தலையை அமுக்கி
வயிற்றை பிதுக்கியதில்
விழிகள் வெளியே விழுகின்றது
மலக்கரைசல் உகந்தது
ஏதோவொரு குரல்
ஈனஸ்வரத்தில் ஒலிக்கிறது
குடல் அறுத்துக்கொண்டு
வருவது போல கேட்கிறது
ஓங்கரிப்பு
பேசாமல் வாழ்ந்தோ
செத்தோ தொலைத்திருக்கலாமென்றே
தோன்றுகிறது
தற்கொலைக்கு பிறகு நடக்கும்
கொலையொன்றில்

-நன்றி
என். விநாயக முருகன்

Saturday, July 25, 2009

சுவாரசிய பதிவுகள் விருது

சுவாரசிய பதிவுகள் விருது



குறைந்த சொற்களில் நிறைய விஷயம் புரிய வைப்பதைப் போல கடினமான வேலையெதுவுமில்லை. உலகின் ஆகச்சிறந்த தத்துவங்கள் எல்லாம் நாலு வரிகளில் சொல்லப்பட்டவையே.

நாவல் எழுதுவது கஷ்டம். சிறுகதை எழுதுவது இன்னும் கஷ்டம். கவிதை எழுதுவது அதைவிட கஷ்டம். மவுனமாக இருப்பது எல்லாவற்றிலும் கஷ்டம்.

மவுன நிலையை ‌விட அடு‌த்த யோக நிலையில் இருக்கும் கவிதை களனைத் தேர்வு செய்து எழுதும் கவிஞர்களுக்கு ‌விருது வழங்குகிறேன்.

அனுஜன்யா
அகநாழிகை
கார்த்தி.என்
மண்குதிரை
செல்வராஜ் ஜகதீசன்
பா.ராஜாராம்
ச.முத்துவேல்
ஹரன் பிரசன்னா

இன்னும் நிறைய கவிஞர்கள் உள்ளனர். நான் வலைப்பூவிற்கு புதியவன். அவ்வளவாக பல கவிஞர்களை எனக்கு தெரியாது. கவிதை எழுதும் அனைவருக்கும் விருதுகளை வழங்குகிறேன்.

படித்ததில் பிடித்தது


படித்ததில் பிடித்தது
-----------------------
அண்மையில் நான் ரசித்த புத்தகம் கவிஞர் செல்வராஜ் ஜெகதீசனின் "அந்தரங்கம்". 112 பக்கங்கள் கொண்ட புத்தகத்தில் கவிஞர் விக்கிரமாதித்தியன் 34 பக்கங்களுக்கு முன்னுரை எழுதியுள்ளார்.கவிஞர்கள் கல்யாண்ஜிக்கும், விக்ரமாதித்தியனுக்கும் இந்த நூலை சமர்ப்பித்துள்ளார் செல்வராஜ் ஜெகதீசன். அந்த முப்பதுநாலு பக்க முன்னுரையில் கவிஞர் விக்கிரமாதித்தியன் நொந்துப்போய் எழுதியுள்ளார் இப்படி.


"கவிதை சோறு போடாது. கவிஞர்கள் கண்டு கொள்ளப்பட மாட்டார்கள். முப்பதாண்டுக் காலமாவது ஒருவன் கவிதை எழுதிக்கொண்டே இருக்க வேண்டும்.முத‌லி‌ல் கவிஞன் தீர்க்காயுசோடு இருக்க வேண்டும். பிறகு கவிதை ஊற்றுக்கண். அவ்வளவு காலம் தூர்ந்து போகாதிருக்க வேண்டும். இப்படியெல்லாம் இருந்தாலும் தமிழ்ச் சமூகம் அங்கீகரித்துவிடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை."

வரிகள் மனதை ஏதோ செய்கிறது.

இனி புத்தகத்திலிருந்து ‌சில கவிதைகள்
களவு போனது
கரையோரம் இருந்த
கடிகாரத்தோடு

அருவிக்குளியல்
தந்த
ஆனந்தமும்.

சில்லென்று அருவிச்சாரல் போல மனதை நனைக்கும் வரிகள்.

அந்தரங்கம் - ஆசிரியர் செல்வராஜ் ஜெகதீசன்
பக்கம் 112 - விலை ரூ.60
வெளியீடு - அகரம், தஞ்சாவூர்

‌சில கவிதைகள் வார்த்தை விளையாட்டுகள் போல வருகின்றன

விக்கிரமாதித்தியன் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார் இப்படி"கவிஞர் செல்வராஜ் ஜெகதீசன் தன்னையறிந்த கவிஞராக இருக்கிறார்." அதற்கு உதாரணமாக உங்களை என்னை திரும்பிப் பார்க்க வைக்கும் கவிதை எ‌ன்ற நவீன விருட்சத்தில் வெளியான கவிதையை மேற்கோள் காட்டியுள்ளார்.
அஞ்சல் அட்டை கவிதை ரசிக்க வைக்கிறது. செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள் மிக எளிமையாக இருக்கின்றன. மனதை ஆழமாகவும் ஊடுருவி செல்கிறது. வாழ்த்துகள் கவிஞரே. விரைவில் இரண்டாவது தொகுப்பை எதிர்பார்க்கின்றோம்..

செல்வராஜ் ஜெகதீசனின் வலைமனை http://selvarajjegadheesan.blogspot.com/

Friday, July 17, 2009

"ஒரு வேண்டுகோள்" - நவீன விருட்சம் கவிதை

நவீன விருட்சம் இதழில் வெளியான எனது "ஒரு வேண்டுகோள்" கவிதை வாசிக்க...

ஒரு வேண்டுகோள்

ஒரே கயிற்றில்
ஒரு டஜன்
கோழிகளையாவது
கால்களில் சுருக்கிட்டு
சைக்கிளின் இருபுறம்
தொங்கவிட்டு செல்கிறான்
நிதானமாக.
மானசீகமாக வேண்டுகிறேன்.
கொஞ்சம்
விரைந்துச்செல்
நண்பா
சீக்கிரம்...
வெந்நீரில் முக்கியோ
கழுத்து திருகியோ
கொன்றுவிடு.

நன்றி

-என்.விநாயக முருகன்

Saturday, July 11, 2009

பூப்பறித்தல்

எந்த மடையான்கள்
பூப்போட்டன
தெரியாமலேயே
துரத்துகிறார்கள்
சிறுவர்கள் சிலர்
எந்த பூவை
பறித்துப்போட்டோம்
புரியாமலேயே
பறந்துக்கொண்டிருக்கின்றன
இரண்டு மடையான்கள்
இன்று வரை

Monday, July 6, 2009

"எங்கே அவன்?" மற்றும் "தேடல்" - நவீனவிருட்சம் கவிதை

நவீன விருட்சம் இதழில் வெளியான எனது "எங்கே அவன்?" மற்றும் "தேடல்" கவிதைகளை வாசிக்க...

எங்கே அவன்?
நானே காலமுமாய் இருப்பதாய்
சொன்னவன்
கடந்து விட்டானா?
கரைந்து கொண்டிருக்கிறானா?
சொல் இருக்கிறது.
சொன்னவன் எங்கே?
கேட்டவன் எவன்?

தேடல்
எத்தனை முறை உதிர்ந்தாலும்
அத்தனை முறையும்
பூத்துத்தொலைக்கும்
காதலை எழுதிய
இறகொன்றும்

எத்தனை முறை பெய்தாலும்
அத்தனை முறையும்
கொட்டித்தீர்க்கும்
மழையில் நனைந்த இறகொன்றும்

நூறாண்டுகளாய்
அலைந்துக்கொண்டிருக்கும்
சிறகிலிருந்து பிரிந்த
இறகொன்றும்

தேடிக்கொண்டிருக்கின்றன.

தீராத பக்கங்களில்
எந்த கூட்டில்
அமர்ந்துள்ளது அதுவென்று.

நன்றி
-என். விநாயக முருகன்