Saturday, June 29, 2013

நான் ஏன் பிறந்தேன்?

நான் ஏன் நாவல்களை படிக்க வேண்டும்? நான் ஏன் கதை,கவிதை, கட்டுரைகளை வாசிக்க வேண்டும்? நான் ஏன் இலக்கிய வாசிப்பில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். அவருக்கு என்ன பதிலளித்தேன் என்று பிறகு சொல்கின்றேன்.

புத்தகங்கள் வாசிக்காமல் ஒருவரால் வாழ்நாள் முழுவதும் இருக்க முடியுமா என்று என்னைக் கேட்டால் கண்டிப்பாக இருக்க முடியும் என்றே பதில் சொல்வேன். பல்லே விளக்காமல் ஒருவரால் வாழ்நாள் முழுவதும் இருக்க முடியுமா? குளிக்காமல் ஒருவரால் வாழ்நாள் முழுவதும் இருக்க முடியுமா? மலம் போய்விட்டு கழுவாமல் வர முடியாதா என்ன? கண்டிப்பாக சாத்தியம்தான். இதெல்லாம் சாத்தியம் என்னும்போது புத்தகங்கள் வாசிக்காமல் ஒருவரால் வாழ்நாள் முழுவதும் இருக்க முடியாதா என்ன? மேலே சொன்னவை எதுவும் ஒரு உயிர் வாழ்தலின் அத்தியாவசிய செயல்களில் இல்லை.

இங்குதான் உயிர் வாழ்வதற்கும்,உயிர் பிழைப்பதற்கும் உள்ள வேறுபாட்டை விளக்க வேண்டியது உள்ளது. உயிரின் அடிப்படை உணவு உண்பதும் (வேட்டை) , இன்னொரு உயிரை உற்பத்தி செய்வதும்(கலவி). உயிர் பிழைக்க இந்த இரண்டை செய்தால் போதும். இதைத்தான் விலங்குகள் இன்னமும் செய்து வருகின்றன. இதிலிருந்து படிப்படியாக முன்னேறி வந்ததே மனித நாகரீகம். மனிதனின் அடிப்படை குறிக்கோளும் உயிர் பிழைப்பதே. இருந்தாலும் இந்த உயிர் வாழும் வரை அவனுக்கு மேலும் சில சொகுசு வசதிகளும் , என்டர்டெயின்மெண்ட்களும் தேவைப்பட்டன. தலைக்கு கையை மடித்து வைத்துக் கூட அப்படியே உறங்கி விடலாம். ஆனால் மனிதன் தலையணையை கண்டுபிடித்தான். வாழ்க்கையை ருசியாக்கி கொள்ள என்டர்டெயின்மெண்ட்களை கண்டுபிடித்தான். தனது வேட்டைக் களைப்பை போக்கி மறுநாள் வேட்டைக்கு புத்துணர்வோடு கிளம்ப முதல் நாள் இரவு குடித்து விட்டு உறங்கினான். குடிக்கும்போது நடனம் ஆடினான். நடனம் ஆட முடியாதவர்கள் கூட இசைக்கருவிகளை இசைத்தார்கள். வேட்டைக்கு போன கதையை சிறுவர்களுக்கு சொன்னார்கள். தங்கள் அனுபவங்களை அடுத்த தலைமுறைக்கு சொன்னார்கள். பிறகு இவை கலை, இலக்கியமாக, நாடகமாக , கவிதையாக ,பாடல்களாக மாறி மாறி இன்று டிவி, சினிமா என்று வந்து நிற்கின்றது. எல்லாமே ஒரு மனிதனால் இன்னொரு மனிதனின் கதையை சொல்லுறதுதான். புத்தகங்கள் படிக்காமல் இருக்க முடியுமா என்ற கேள்வி எழும் பலருக்கு ஏன் சினிமா பார்க்காமல் இருக்க முடியுமா என்ற கேள்வி எழமாட்டேங்குது என்று தெரியவில்லை. சினிமா பார்க்காமல் கூட இருக்க முடியும்தானே? 

ஆனால் புத்தகங்கள் படிப்பதாலேயே ஒருவருக்கு எல்லாம் தெரிந்துவிடுமா என்றால் அதுவும் யோசிக்க வைக்கும் கேள்விதான். வாழ்க்கையில் எல்லாருக்கும் எல்லாமே தெரிந்து விடாது. நமக்கு தெரியாத விஷயங்களை மற்றவர்களது வாழ்க்கை அனுபவங்கள் ஊடாக தெரிந்துக் கொள்ளலாம். அது எந்த பார்மேட்டில் கிடைத்தாலும் சரிதான். சினிமா பார்மேட்டை விட புத்தகங்கள் வழியாக கொஞ்சம் அதிகப்படியான வாழ்பனுபவம் கிடைக்கும். அதை விட நேரடியாக வாழ்க்கையை வாழ்ந்தே பார்த்து விட்டால் இன்னும் உத்தமம். புத்தகங்களே படிக்காத எத்தனையோ விஷயம் தெரிந்த ஆட்களை எங்கள் ஊரில் பார்த்துள்ளேன். ஆனால் அவர்கள் எல்லாருமே வாழ்க்கையிலிருந்து விஷயத்தைக் கற்றுக் கொண்டவர்கள். நீங்கள் அப்படிப்பட்ட மேதைகள் என்றால் உங்களுக்கு புத்தகங்கள் தேவைப்படாது.


ஒரு பொடியன் பள்ளிக்கூடம் முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான். தரையை பார்த்துக்கொண்டே நடந்து வந்தவன் கண்ணில் ஒரு கசங்கிய பழைய பத்து ரூபாய்த் தாள் தட்டுப்பட்டது. சிறுவன் சந்தோஷமாக அந்தப் பத்து ரூபாயை எடுத்து சட்டைப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்.

அன்றிலிருந்து அந்தப்பையன் எப்போது சாலையில் நடந்தாலும் தரையைப் பார்த்துக் கொண்டே நடக்க ஆரமபித்தான். இப்படியே நாற்பது வருடங்கள் ஓடிவிட்டன. அந்தப்பையன் வளர்ந்து முதியவர் ஆகி இறந்தும் விட்டான். இந்த நாற்பது வருடங்களில் அந்தப்பையன் தரையைப் பார்த்துக்கொண்டே நடந்ததில் பத்து நூறு ரூபாய் தாள்கள் , பத்து ஐம்பது ரூபாய் தாள்கள் , இரண்டு ஐநூறு ரூபாய் தாள்கள், பிறகு கொஞ்சம் சில்லறை காசுகள் , ஒரு தங்க மோதிரம், ஒரு வெள்ளி செயின் என்று மொத்தமாக ஒரு பத்தாயிரம் மதிப்புள்ள சொத்து அவனுக்கு கிடைத்ததாம். ஆனால் இந்த நாற்பது வருடங்களில் அவன் வானத்தை ஒருநாள் கூட பார்த்ததில்லை. இந்த நாற்பது வருடங்களில் அவன் இழந்தது கிட்டத்தட்ட ஆயிரம் முழுநிலவுகள், பதினைந்தாயிரம் சூரிய உதயம், கோடிக்கணக்கான நட்சத்திரங்கள். இரவில் வானம் என்ன நிறமென்று கூட அவனுக்கு மறந்துப்போனது. இலையுதிர் கால மரங்கள் எப்படி இருக்குமென்று மறந்துப்போனான். அணில்கள் எப்படி கிளைகளில் தாவுகின்றன என்று தெரியாது. கிளியின் நிறம் என்னவென்று தெரியாது. பனித்துளிகள் வானில் இருந்து இறங்குவதை கவனிக்க தவறிவிட்டான். இந்த நாற்பது வருட வாழ்க்கையில் ஒவ்வொரு பருவகாலத்திலும் மரங்களில் என்ன நிறப்பூக்கள் பூக்கின்றன என்று அவனுக்கு தெரியாமலேயே போனது.

நான் அன்றாடம் வேலைக்கு செல்கின்றேன். நிறைய பணம் சம்பாதிக்கின்றேன். எனது குடும்பத்தை நன்றாக கவனித்துக் கொள்கின்றேன் நான் ஏன் நாவல்கள்,இலக்கியம் படிக்க வேண்டும்? நான் ஏன் சக மனிதர்களின் வாழ்க்கையை கவனிக்க வேண்டுமென்று ஒரு நண்பர் கேட்டாரல்லவா? அவருக்கு நான் சொன்ன கதைதான் இது

Saturday, June 22, 2013

ஒரு மனோதத்துவ நிபுணரும் அவரது நவீனக்கவிதையும்

ஒரு மனோதத்துவ டாக்டரிடம் பேசிக்கொண்டிருந்தேன். பொதுவாக நான் மனோதத்துவ நிபுணர்களிடமும், சாமியார்களோடும் (குறிப்பாக கார்ப்பரேட் சாமியார்கள்) உரையாடுவதை தவிர்க்கவே விரும்புவேன். காரணம் அவர்களோடு உரையாடி ஜெயிக்கவே முடியாது. அவர்களிடம் பேச ஆரம்பித்த ஐந்து நிமிடங்களிலே நமது ஐடியாலஜியை அப்படியே நமது மண்டைக்குளிருந்து உருவி அவர்களது ஐடியாலஜியை பொருத்தி விடுவார்கள்.

விஷயத்துக்கு வருகின்றேன்.

இந்த பேஸ்புக்கில் கிறுக்கறது, லைக் போடுறது,கமெண்ட் போடுறது எல்லாம் கூட ஒருவகை மனோவியாதிதான் என்று சொன்னார் டாக்டர். ஒருக்கணம் அதிர்ந்து விட்டேன். 

இப்படித்தான் முன்பு இன்னொரு மனோதத்துவ நிபுணரிடம் உரையாடியபோது அவர் சொன்னார். "அடக்க முடியாத காமத்தின் வெளிப்பாடே கலைப்படைப்புகள். ஒருத்தன் செக்சில் திருப்தியடைந்து விட்டால் அவன் கதை,கவிதை மாட்டான்." என்றார். இது உண்மையாக கூட இருக்கலாம். ஆனால் பொதுவாக மனோதத்துவ நிபுணர்கள் கலை, இலக்கிய செயல்பாடுகளுக்கு எதிராக அல்லது குறைந்தபட்சம் அட போங்கய்யா நீங்களும், உங்க கவிதையும் என்று சலித்துக் கொள்பவர்களாகவே இருக்கின்றார்கள்.

"ஆடும் கூத்து" என்ற திரைப்படம். டிவி.சந்திரன் இயக்கியது. இந்தப் படத்தை பற்றி ஏற்கனவே இங்கு எழுதியுள்ளேன். இந்த படத்தில் நவ்யாநாயர் ஹீரோயின். அவர் கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். படத்தில் அவர் பெயர் மணிமேகலை. சுட்டித்தனமான பெண். அப்பா செல்லம். நல்ல படிப்பாளி. அசோகமித்திரன்,ஜெயகாந்தன் என்று தரமான புத்தகங்களை நூலகங்களில் தேடி தேடி எடுத்து படிப்பாள். திடீரென ஒருநாள் மணிமேகலைக்கு பூர்வஜென்ம நினைவுகள் வந்துவிடும். அவளது நடவடிக்கைகள் அடியோடு மாறிவிடும். அவள் சொல்லும் எதையும் யாரும் நம்ப மாட்டார்கள். அவள் எல்லா விஷயங்களையும் அவளது சொந்தக் கற்பனையிலிருந்து உருவாக்கி சொல்வதாக அனைவரும் நம்புவார்கள்.  

மணிமேகலைக்கு மனநிலை சரியில்லையென்று அவளது தந்தை வீட்டுக்கு ஒரு சைக்கியாரிஸ்டை அழைத்து வருவார். மணிமேகலை பெரிய படிப்பாளி என்று அவள் அப்பா டாக்டரிடம் சொல்வார். டாக்டர் அவள் என்ன மாதிரி புத்தகங்களை படிக்கிறாள் என்று கேட்க, அவளது தந்தை மாடியில் இருக்கும் மணிமேகலை அறையை காட்டுகிறார். டாக்டரும் மணிமேகலை அறைக்கு செல்வார். புதுமைப்பித்தன்,மெளனி, ஜெயகாந்தன், பஷீர்,தி.ஜா, அசோகமித்திரன், பாரதியார்.... டாக்டர் பயந்துபோய் பேயை பார்த்தது போல அலறியடித்துக்கொண்டு மாடி அறையிலிருந்து வெளியே ஒடி வருவார்.

"ஒரு ஆள் இரண்டு ஆள் இல்லை..பிள்ளைவாள்...உள்ளே ஒரு நாசகார கும்பலே இருக்கிறது. வெரி டேஞ்சரஸ் கைஸ்" சொல்லியபடியே பயந்துபோய் வீட்டை விட்டு வெளியே ஓடுவார்.

மணிமேகலை தந்தை அந்த புத்தகங்களையெல்லாம் ஒளித்து வைப்பார். பிற்பாடு ஒரு காட்சியில் மணிமேகலை நார்மலாகத்தான் இருக்கிறாள் என்று அவர் ஆசுவாசப்படுத்திக்கொள்ளும்போது, மணிமேகலை தயங்கியபடியே ஒளித்து வைத்த அந்த புத்தகங்களையெல்லாம் எடுத்து வந்து தந்தையிடம் கேட்பாள்.

“நான் சொன்னது பொய்யில்லைனா...இவங்க சொல்றதும் பொய்யில்லைலே? இவங்கள உள்ளே சேர்த்துக்கலாமா?” என்று கேட்பாள்.
 
மனோதத்துவ நிபுணர்களுக்கு  ஏன் எழுத்தாளர்களை பார்த்தால் காண்டாகின்றது. நான் நினைக்கின்றேன். ஒருவிதத்தில் மனோதத்துவ நிபுணர்களும், எழுத்தாளர்களும் ஒரே வேலையை செய்கின்றார்கள் என்று நினைக்கின்றேன். இருவருமே மனதின் சிக்கலான சூட்சுமங்களை ஆராய்ச்சி செய்கின்றார்கள். தன்னைச் சுற்றி இருக்கும் மனிதர்களின் அன்றாட செயல்பாடுகளை நுட்பமாக கவனிக்கின்றார்கள். காமம் எங்கிருந்து உருவாகின்றது என்று உற்று கவனிக்கின்றார்கள். மனதின் விசித்திரமான செயல்பாடுகளை அணு அணுவாக பதிவு செய்கின்றார்கள். எழுத்தாளன் என்றால் அதை அவனது பாத்திரப்படைப்பிற்கு பயன்படுத்திக் கொள்கின்றான். மனோதத்துவ நிபுணர் அதை அவரது ஆராய்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்கின்றார். கேஸ் ஸ்டடியாக மாற்றி வைத்துக் கொள்கின்றார்       

சரி. எங்கள் உரையாடலுக்கு வருகின்றேன். 

"ஒரு எழுத்தாளன் என்பவன் அடிப்படையில் மனோதத்துவம் தெரிந்தவனாகவே இருக்க முடியும். அப்போதுதான் அவனால் எழுத முடியும். ஆனால் ஒரு மனோதத்துவ நிபுணரால் கலை இலக்கிய தளத்தில் செயல்பட முடியாது. வட்டிக்கடைக்காரனிடம் வெற்றுத்தாளை கொடுத்தால் அதில் அவன் எண்களை மட்டும்தான் கிறுக்குவான்" என்றேன்.

டாக்டருக்கு கோபம் வந்து விட்டது. 

"யார் சொன்னது? எங்களுக்கும் எழுத வரும்" - என்றார்.

டாக்டர் மேசை டிராயரை திறந்தார். ஸ்கிரிப்லிங் பேட்டை எடுத்து எதையோ யோசிக்க ஆரம்பித்தார். பின்பு வேகமாக எழுத ஆரம்பித்தார். எழுதி முடித்தவுடன் என்னிடம் அதைக் கொடுத்தார். வாங்கி பார்த்து விட்டு ஆடிப்போய் விட்டேன். பிரமாதமாய் இருந்தது கவிதை. கண்டிப்பாக இவர் ஏதாவது இலக்கியப்பத்திரிக்கையில் புனைப்பெயரில்எழுதுபவராகத்தான் இருக்க முடியும்.  

"ஆஹா ஆஹா பிரமாதம் பிரமாதம்" என்றேன்.
                 
ஸ்கிரிப்லிங் பேட்டில் அந்த நவீனக்கவிதை இருந்தது இப்படி.

வட்டம்               
-------------
வட்டம்
வட்டத்திற்குள் வட்டம்
வட்ட வட்டமாய் வட்டம்
வட்டமே வட்டமாய்
வட்டத்திற்குள் வட்டம்