Saturday, January 16, 2010

தற்கொலை கவிதைகள்

தற்கொலை கவிதைகள்
----------------------

தற்கொலை கவிதைகள் எழுதும்
ஊரின் பிரபல கவிஞரை
நேற்று சந்திக்க நேரிட்டது

தற்கொலை செய்துக்கொள்வதில்
இவ்வளவு தகவல்களை
இவர் போல யாரும்
கவிதையில் சொல்லிவிட முடியாது

தற்கொலை செய்துகொள்பவன்
இறுதிக்கணங்களை
அருகிலிருந்து பார்த்தது போல
அப்படியே எழுதுவார்

இறுதிவரிகளை படித்தால்
நாக்கு தள்ளும்
நெஞ்சு பதறும்
கால்கள் மரக்கும்
அவ்வளவும் சத்தியம்

நானும் கவிஞரும்
பொதுவாய் ‌சில விஷயங்களை பேசினோம்
விடைபெறுகையில்தான் தெரிந்தது

அவர் ஒருமுறை கூட
தற்கொலை செய்துக்கொண்டது இல்லையாம்


கவிதைக்கு இன்ஸ்பிரேஷன்: -
நிலாரசிகன்

Friday, January 15, 2010

ஷேக்ஸ்பியரோடு பயணம்

ஷேக்ஸ்பியரோடு பயணம்
------------------------

நேற்று வளசரவாக்கத்தில்
ஷேக்ஸ்பியரோடு பயணம் செய்தேன்.

17-M பேருந்தில் ஏறி
கலைஞர் கருணா‌‌நி‌தி நகருக்கு
டிக்கட் கேட்டவரை
கே.கே நகரென்று திருத்தினா‌‌‌ர்.

நான் இறங்கும் இடம்
எம்.கே.பி நகர் பக்கத்திலென்று சொன்னார்.
(மகாகவி பாரதியென்று பிற்பாடுதான் தெரிந்தது)

தி.நகரில் தனக்கு
தெரியாத கடைகளே
இல்லையென்று சொன்னார்
டி.டி.கே சாலையின்
மேம்பாலம் பற்றி பேச்சு வந்தது.

பெயரை சுருக்கும்
பண்பாடு பற்றி சீண்டிவிட்டேன்.

ரோஜாவை எப்படி அழைத்தாலென்ன
கோபமாய் கேட்டவர் விடைபெற்றார்.

ஆர்.ஏ.புரத்தில் இறங்கியவரின்
முழுப்பெயரும் நினைவில் இல்லை.
(ஷேக்கென்ற பெயரும் நான் வைத்ததே)