Sunday, January 22, 2012

இன்று

இன்று புத்தக கண்காட்சியில்
ஒரு திருவள்ளுவரை சந்தித்தேன்
தனது கவிதை தொகுப்பிற்கு
ராயல்டி கிடைக்கவில்லையென்று விசனப்பட்டார்
தவிர
தான் எப்போதும்
கிரவுன் சைசில் எழுதுவதால்
பதிப்பகம் கிடைக்கவில்லையென்று புலம்பினார்
பேசாமல் தொல்காப்பியர் என்ன புடுங்கியாவென்று
பிளாக்கிலோ பேஸ்புக்கிலே எழுதலாம்
பொழுதாவது போகுமென்றார்

இன்று புத்தக கண்காட்சியில்
ஒரு பாரதியை சந்தித்தேன்
என்ன கவிஞரே சுகமாவென்று கேட்டேன்
யாரும் இருக்கும் இடத்தில் இருந்தால்
எல்லாம் சுகமென்றார்
இது கண்ணதாசன் சொன்னதாயிற்றே
குழம்பியபடி பார்த்தேன்
என்ன இவ்வளவு விரக்தியென்று கேட்டேன்
சாகித்ய அகாடமி விருதை எதிர்பார்த்து
தலை நரைக்கிறதென்று சொன்னார்

இன்று புத்தக கண்காட்சியில்
ஒரு அவ்வையாரை சந்தித்தேன்
எல்லாம் ஆணாதிக்கம் ஆணாதிக்கம்
என்று தலையில் அடித்து கொண்டார்
அதியமானிடம் வாங்கிய நெல்லிக்கனியை
திரும்ப கொடுக்கப் போவதாக
ஆவேசத்துடன் சொன்னார்

இன்று புத்தக கண்காட்சியில்
ஒரு கம்பரை சந்தித்தேன்
அவரது கதையை
ஒரு மெகா சீரியல் இயக்குனர்
திருடிகொண்டதாக புகார் சொன்னார்
அடுத்து கண்காட்சிக்கு
ஒரு ஐயாயிரம் பக்க நாவல் எழுதும்
உத்தேசமிருப்பதாக சொன்னார்

இன்று புத்தக கண்காட்சியில்
ஒரு மோசிகீரனாரை சந்தித்தேன்
பாவம் இளைத்து களைத்து போயிருந்தார்
தனியாக நாற்காலில் அமர்ந்தபடி
தனது கவிதைப்புத்தகத்தை கையிலெடுத்து
தனக்கு தானே விசிறி கொண்டிருந்தார்
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
எங்கேவென்று கேட்டேன்
தனக்கு
டீ வாங்கி வர போனதாக
சொல்லி சிரித்தார்


நன்றி
என்.விநாயக முருகன்