Wednesday, October 19, 2011

வழித்துணை

பக்கத்து இருக்கையில் அமர்ந்திருப்பவன்
அவன் ஊர் வந்ததும்
எழுப்பச் சொல்லி உறங்கப்போகிறான்

அப்படியென்ன இருக்கலாம்
அந்த ஊரில்?

நதியா,மலையா,கோவிலா
மண்ணா,மரமா,க‌ல்லா
மாமன் மகளா
பொங்குமாக்கடலா
பகையா,உறவா,கடனா
பகலா,இரவா,மழையா
பூவா,காயா

உறங்குபவனைத் தட்டியெழுப்ப மனமின்றி
அவன் ஊரை சுமந்து
பயணிக்கின்றேன் ‌மிக பத்திரமாய்

ஊர் வந்ததும்
அவசரம் அவசரமாய் இறங்கி செல்பவன்
மறக்காமல்
என்னிடம் ஒப்படைத்த
அவன் ஊரை வாங்கிக்கொண்டுப் போகிறான்
திரும்பிப் பார்க்காமலேயே



நன்றி
என்.விநாயக முருகன்