Thursday, November 19, 2015

ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே - சிறுகதை


வணக்கம்

இந்த வார ஆனந்த விகடனில் ‘ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே’ என்ற பெயரில் எனது சிறுகதை ஒன்று வெளியாகியுள்ளது. நண்பர்கள் பார்வைக்கு...
 
 

 

    

Monday, November 9, 2015

ராஜீவ் காந்தி சாலை - எனது ஆசிரியரின் விமர்சனம்

அன்புள்ள விநாயகமுருகன்

என் பெயர் மு.அருணகிரி. என்னை நினைவில் இருக்குமென்று நினைக்கிறேன். தஞ்சாவூரில் நீங்கள் படித்த பொன்னையா ராமஜெயம் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக இருந்தேன். இப்போது தஞ்சாவூரில் இல்லை. நன்னிலத்தில் வசிக்கிறேன். கடந்தாண்டு நூலகத்தில் உயிர் எழுத்து பத்திரிக்கை படிக்கும்போது அதில் எஸ்.வி.ராஜதுரையின் ஒரு கட்டுரை படித்தேன். அதில் உங்கள் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. பெயரை வைத்து சற்று சந்தேகமாக இருந்தது. நீங்கள்தான் என்று பிறகுதான் உறுதிப்படுத்திக் கொண்டேன். எனது மாணவர்களிடம் விசாரித்தேன். நீங்கள் முகநூலில் தீவிரமாக இயங்குவதை கேள்விப்பட்டு ஆச்சர்யமாக இருந்தது. எனக்கு முகநூல் கணக்கு இல்லை. எப்போதாவது வலைப்பதிவுகள் வந்து பார்ப்பதுண்டு. எனது மாணவன் ஒருவன் உங்கள் வலைப்பதிவை தேடிப்பிடித்து கொடுத்தான். உங்கள் மின்னஞ்சல் முகவரி கிடைத்தது. உங்கள் புகைப்படத்திலிருந்து என்னால் அடையாளம் கண்டுக்கொள்ள முடியவில்லை. எஸ்விஆரின் கட்டுரையை உங்கள் வலைத்தளத்தில் பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டேன். எஸ்.வி.ராஜதுரையிடமிருந்து அவ்வளவு எளிதாக அபிப்ராயங்களை பெறமுடியாது. உங்கள் முதல் நாவலுக்கான அவரது விமர்சனம் உண்மையில் மகிழ்ச்சியூட்டுவதாக இருந்தது. நான் விசாரித்த உங்கள் நாவல் எங்கும் கிடைக்கவில்லை. சமீபத்தில்தான் எனது மாணவர் ஒருவர் எங்கிருந்தோ தேடிப்பிடித்து கொண்டு வந்தான். படித்தேன்.

முதலில் நாவலின் முக்கிய குறையை சொல்லிவிடுகிறேன். அந்த கட்டுரையின் இறுதியில் எஸ்.வி.ஆர் குறிப்பிட்டதுதான். நாவலில் பல இடங்களில் வாக்கியப்பிழைகள், இலக்கணப்பிழைகள் உள்ளன. அது நாவலை தொடர்ந்து படிக்கவிடாமல் தொந்தரவு செய்கிறது. நாவலின் தலைப்பிலேயே பிழை. ராஜீவ் காந்தி என்று பிரித்து எழுத வேண்டும். ஆசிரியராக என்னால் மன்னிக்கமுடியாத பிழை இது. இது முக்கியமான குறைபாடு. சரிசெய்து கொள்ளுங்கள்.

ஆனால் இந்த ஒரேயொரு குறையை தவிர வேறு எதையும் என்னால் பார்க்க முடியவில்லை. இது ஒரு அசாத்தியமான முயற்சி என்றுதான் சொல்ல தோன்றுகிறது. நாவலுக்கு காலம் (Time), வெளி (Space) இரண்டு புள்ளிகள் முக்கியம். அதன் மீது கதாபாத்திரங்களை சிருஷ்டித்து எழுத வேண்டும். இந்த நாவலில் காலமும், வெளியும் இரண்டு புலனாகாத(Invisible) புள்ளிகள் மீது மிக அழகாக வரையப்பட்ட ஒரு கோலத்தை பார்க்கிறேன். சாலை ஒரு புள்ளியாக வருகிறது. ஆண்டின் பல்வேறு மாறும் பருவநிலைகள் இன்னொரு புள்ளியாக வருகிறது. ஒவ்வொரு பருவநிலைக்கு ஏற்ப மனிதர்களின் குணங்கள் மாறுகின்றன. சாலை மாறுகின்றன. மழை, பனி, கோடைக்கு ஏற்ப சாலை விரிந்தும், நெகிழ்ந்தும் தன்னை மாற்றிக்கொள்கின்றது. மனிதர்களும் தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். அன்னத்தை,செட்டியாரை தவிர வேறு எந்த மனிதர்களும் நிலையான குணங்கள் கொண்டவர்களாக இல்லை. சந்தர்ப்பத்துக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு பிழைக்கிறார்கள். நாவலின் இந்த அம்சத்தை யாரும் வேறு யாரும் தங்கள் விமர்சனத்தில் குறிப்பிட்டார்களாக என்று தெரியவில்லை. படிக்கும்போது எனக்கு தோன்றியது இது. இந்த மையத்தை நாவலின் வடிவமாக தேர்வு செய்ததாலேயே உங்களால் இந்த படைப்புக்குள் ஒரு பெருநாவலுக்கான விரிவையும், செறிவையும் , பிரமாண்ட களனையும் கொண்டு வர சாத்தியமாகியுள்ளது. ஏனெனில் தமிழில் வெளிவரும் வரலாற்று நாவல்கள் எல்லாம் பிரமாண்டத்தை கொண்டுவர சில நூற்றாண்டுகள் கதைக்களன் இருக்குமாறு பார்த்துக்கொள்வார்கள். ஆனால் உங்கள் நாவலுக்கு நீங்கள் இருபதாண்டுகாலத்தை மட்டும் எடுத்துக்கொண்டு இதை சாத்தியப்படுத்தி இருக்கின்றீர்கள்.

இரண்டாவது இந்த நாவலின் பிரமாண்டத்தன்மை என்பது அதன் இருபக்க சித்தரிப்பு. பல்வேறு வர்க்கநிலை மனிதர்களை சித்தரித்து அவர்களின் முரண்களை நுட்பமாக காட்டியுள்ளீர்கள். சான்றாக ஓர் அத்தியாயத்தில் மேல்தட்டு மக்கள் நட்சத்திர விடுதியில் குடித்தபடி பேசிக் கொண்டிருப்பார்கள். அடுத்த அத்தியாயத்தில் கீழ்தட்டு மக்கள் குடித்தபடி பேசுவார்கள். ஓர் அத்தியாயத்தில் அவர்கள் கீழ்தட்டு மக்களின் பாலியல் உறவை விமர்சிப்பார்கள். அடுத்த அத்தியாயத்தில் கீழ்தட்டு மக்கள் உயர்வர்க்க மனிதர்களின் பாலியல் கிசுகிசுக்களை ஆர்வமாக பேசிக்கொள்வார்கள். இப்படியேதான் நாவல் முழுக்க செல்கிறது. மென்பொருள் நிறுவனம் உள்ளே இருக்கும் உயரதிகாரிகள் கீழ்நிலை அதிகாரிகளை மட்டம் தட்டுவார்கள். அடுத்த அத்தியாயத்தில் அவர்கள் மேலதிகாரிகளை கிண்டல் செய்வார்கள். ஜாதியக்கட்டமைப்பு , பணம், பாலியல் இச்சைகள், குடும்ப உறவுகள், மதம் , பண்பாட்டுக்கூறுகள் இப்படியாக எல்லா விஷயங்களையும் அதன் இன்னொரு பக்கத்தை வேறொரு மாறுபட்ட கதாப்பாத்திரங்கள் வழியாக விவாதத்துக்கு உட்படுத்துகின்றீர்கள். அன்னம், செட்டியாருக்கு இடையே இருக்கும் முறைகேடான உறவு அர்த்தம் பொதிந்த அழகிய கவிதையாக மலரும் அதே தருணம் சுஜாவின் உறவு ரத்தமும், சதையுமாக வந்துபோகிறது. நாவலின் ஊடாக இறுதிவரை செல்லும் இந்த விவாதத்தன்மையும், கருத்து, எதிர்கருத்து பரிமாற்றங்களும் நாவலுக்கு செறிவை தருகிறது. நாணயத்தின் இரண்டு பக்கங்களை நுட்பமாக விவரித்து எழுதியுள்ளீர்கள். இதை திட்டமிட்டு செய்தீர்களாக அல்லது இயல்பாக கதையின் போக்கில் வந்ததா என்று தெரியவில்லை. இறுதி அத்தியாயத்தை படித்து முடித்ததும் அந்த சாலையும் மனிதர்களும் வெகுநேரம் வரை மனதில் அப்படியே இருந்தார்கள். ஒரு நல்ல படைப்புக்கான குணமாக இதை பார்க்கிறேன்.

நாவலை பற்றி நீண்ட விமர்சனக்கட்டுரை ஒன்று எழுதிக் கொண்டிருக்கிறேன். தஞ்சை தமிழ்பல்கலைக்கழகத்தில் படிக்கும் எனது மாணவர்களில் சிலர் உலகமயமாக்கல் குறிப்பாக தமிழ் பண்பாட்டுத் தளத்தில் மென்பொருள்துறை ஏற்படுத்திய தாக்கத்தை பற்றி ஆய்வு செய்ய என்னிடம் வந்தார்கள். அவர்களுக்கு இந்த நாவலை பரிந்துரை செய்தேன். வாழ்த்துகள்.


அன்புடன் ஆசிரியர்
மு.அருணகிரி

Tuesday, October 6, 2015

நரகம் ஒரு தனித்த பிரதேசம்

சார்லஸ் புக்கோவ்ஸ்கி எனக்கு மிகவும் பிடித்த கவிஞர். புக்கோவ்ஸ்கி கவிதைகள் வாசிக்க எந்த சிரமமும் இல்லாமல் எளிமையாக இருக்கும். அவரது பல கவிதைகளை எனது வலைப்பக்கத்தில் தமிழில் மொழிப்பெயர்ப்பு செய்து பதிவிட்டுள்ளேன். அவரது ஒரு குறிப்பிட்ட கவிதை சமீபத்தில் என்னை மிகவும் தொந்தரவு செய்தது. அந்த கவிதையை மொழிப்பெயர்க்க தோன்றியது.. பொருளாதாரத்தில் நலிவுற்ற வயதான நோயுற்ற தம்பதிகளின் இறுதிக்கால கொடும் தனிமைதான் இந்த கவிதையின் ஆன்மா.கவிதையின் உச்சம் இறப்பு நடந்த அந்த வீட்டுக்கு புதிதாக வரும் இளம் ஜோடி பற்றிய மர்மமான விவரணைகள். ஒருவேளை அந்த முதியவர்களே மீண்டும் பிறந்து கூட அங்கு வந்திருக்கலாம்.

நரகம் ஒரு தனித்த பிரதேசம்
----------------------------------------------
அந்த மனிதருக்கு அறுபத்தைந்து வயது
அவரது மனைவிக்கு அறுபத்தாறு வயது
மனைவிக்கு அல்சைமர் வியாதி
அந்த மனிதருக்கு வாய்புற்றுநோய்
அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை
அவரது தாடையின் எலும்பை உருக்கிற்று
தாடையை தாங்கி பிடித்துக்கொண்டிருக்க வேண்டும்
தினமும்
அவரது நோயுற்ற மனைவிக்கு
ஒரு குழந்தைக்கு மாட்டிவிடுவதைபோல
ரப்பர் டயாப்பரை அணிவிப்பார்.
அவரது நிலைமையில் கார் ஓட்ட முடியாது
மருத்துவமனைக்கு வாடகைடாக்சி பிடிக்க வேண்டும்
ஓட்டுநரிடம் பேச இயலாது
செல்ல வேண்டிய திசையை எழுதிக்காட்ட வேண்டும்
கடந்த மருத்துவச்சோதனையின்போது
அவரிடம் தெரிவித்தார்கள்
தாடையில் இன்னொரு அறுவை சிகிச்சை
செய்யப்பட வேண்டும்
வலதுப்பக்க கன்னத்தருகே
நாவுக்கருகே
அவர் வீடு திரும்பியதும்
மனைவியின் டயாப்பரை மாற்றினார்
அடுப்பை பற்ற வைத்தார்
மாலைநேர செய்திகளை கவனித்தார்
பிறகு இருவரும் படுக்கையறை சென்றார்கள்
அவர் துப்பாக்கியை எடுத்து
மனைவியின் நெற்றிப்பொட்டில் வைத்து சுட்டார்
மனைவி இடதுப்பக்கம் சரிந்ததும்
அவர் மெத்தையில் உட்கார்ந்தார்
தனது வாயில் துப்பாக்கியை நுழைத்து
விசையை இழுத்தார்
குண்டுச்சத்தம் அண்டைவீட்டாரை உசுப்பவில்லை
பிறகு
பற்றியெரியும் அடுப்பு அதை செய்தது
யாரோ வந்தார்கள்
கதவை உடைத்தவர்கள் அதை கவனித்தார்கள்
விரைவில்
காவலர்கள் வந்தார்கள்
சம்பிரதாய கடமைகளை செய்தார்கள்
சில பொருட்களை சேகரித்து எடுத்துச்சென்றார்கள்
1.14 டாலர் மிச்சமுள்ள
ஒரு மூடப்பட்ட வங்கிக்கணக்கு
ஒரு செக்புத்தகம்
தற்கொலை என்று முடிவெடுத்தார்கள்
அடுத்த மூன்று வாரங்களில்
இரண்டு புதியவர்கள் அங்கு குடிவந்தார்கள்
ராஸ் என்ற பெயருடையை ஒரு மென்பொருள் நிறுவனர்
அவரது மனைவி அனந்தனா
பாலே நடனம் கற்றவர்
சமூகத்தில் உயர் அந்தஸ்துடைய ஜோடி


Hell Is A Lonely Place 

- Poem by Charles Bukowski

he was 65, his wife was 66, had
Alzheimer's disease.

he had cancer of the
mouth.
there were
operations, radiation
treatments
which decayed the bones in his
jaw
which then had to be
wired.

daily he put his wife in
rubber diapers
like a
baby.

unable to drive in his
condition
he had to take a taxi to
the medical
center,
had difficulty speaking,
had to
write the directions
down.

on his last visit
they informed him
there would be another
operation: a bit more
left
cheek and a bit more
tongue.

when he returned
he changed his wife's
diapers
put on the tv
dinners, watched the
evening news
then went to the bedroom, got the
gun, put it to her
temple, fired.

she fell to the
left, he sat upon the
couch
put the gun into his
mouth, pulled the
trigger.

the shots didn't arouse
the neighbors.

later
the burning tv dinners
did.

somebody arrived, pushed
the door open, saw
it.

soon
the police arrived and
went through their
routine, found
some items:

a closed savings
account and
a checkbook with a
balance of
$1.14
suicide, they
deduced.

in three weeks
there were two
new tenants:
a computer engineer
named
Ross
and his wife
Anatana
who studied
ballet.

they looked like another
upwardly mobile
pair. 

Saturday, August 8, 2015

ரசிகன்



மகத்தானவற்றின் மீது நாம் வைக்கும் நம்பிக்கையும், உறுதிப்பாடும் பொய்த்துப் போகிறபோது நொறுங்கிவிடுகிறோம். அவநம்பிக்கை மேலெழுகிறது. குழப்பங்களும், வினாக்களும் தோன்றுகின்றன. இதுநாள்வரை நாம் எதன்மீது பற்று வைத்திருந்தோமோ அது இற்று விழுகிறது. நம் மனதிலேயே எதிர்வாதம் தோன்றி நம்மை உருமாற்றம் செய்கிறது. நாம் அதுவரை நம்பிக்கொண்டிருந்தவைக்கு எதிரானவராக அத்தருணத்தில் மாறிவிடுகிறோம்
--– அபிலாஷின் ரசிகன் நாவல் பற்றி அழகிய பெரியவன் எழுதிய கட்டுரையிலிருந்து
எண்பதுகளின் தொடக்கத்தில் பிறந்தவர்களை பாக்கியசாலிகள் என்று நான் எனது நண்பர்களிடம் அடிக்கடி சொல்வேன். காரணம் அவர்கள் வளர்ந்து பதின்பருவம் அடையும்முன்னரே தமிழ்நாட்டில் குளோபலைசேஷன், லிபரலேஷன் காலூன்றிவிட அவர்கள் உலகத்தை புரிந்துக்கொள்வதற்கு முன்பே அவர்களால் இயல்பாக ஒரு காலமாற்றத்துக்குள் அடியெடுத்து வைத்து விட்டார்கள். ஆனால் அதற்குமுன்பு பிறந்து அதிலும் குறிப்பாக தீவீர லட்சியவாதம் பேசிய சிறுபத்திரிக்கை மரபை சேர்ந்த பல இளைஞர்கள் என்ன ஆனார்கள் என்று எனது கண்முன்னால் பார்த்திருக்கிறேன். எனது நண்பர்கள் சிலர் அப்படி மைய நீரோட்டத்தில் கரைந்து காணாமல் போனதையும் தற்கொலை செய்துக்கொண்டதையும் சிலர் துபாய் போன்ற நாடுகளில் கிடைத்த வேலை செய்து தங்கள் அடையாளம் இழந்துப் போனதையும், பலர் என்ன ஆனார்கள் என்றே தெரியாமல் போனதையும் பார்த்திருக்கிறேன்.
ரசிகன் நாவலில் வரும் சாதிக் என்ற கதாபாத்திரத்தின் சாயலில் நான் பார்த்த சில நெருங்கிய நண்பர்களின் சாயலை உணர முடிந்தது. எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்த லட்சியவாத சிறுபத்திரிக்கை மரபை சேர்ந்த சாதிக் தொண்ணூறுகளின் காலகட்டத்துக்கு வரும்போது அவன் வாழ்க்கை உள்ளும் புறமும் எப்படி மாறுகிறது? அவன் நம்பிக்கைகள் எப்படி சிதறுகின்றன? என்பதுதான் ரசிகன் நாவலின் மையம்.
சாதிக்தான் இந்த நாவலின் மையப்புள்ளி என்றாலும் சங்கர் என்ற கதாபாத்திரத்தின் பார்வையில் நாவல் ஆரம்பிக்கிறது. சந்திரமுகி படம் வெளிவந்த காலகட்டத்தில் நாவலின் கதை ஆரம்பிக்கிறது. சென்னையில் கதை தொடங்குகிறது. சந்திரமுகி படத்தின் நூறாவது நாள் வெற்றிவிழாவில் கலந்துக்கொள்ளும் சாதிக் தியேட்டர் வாசலில் இருக்கும் ரஜினி கட்டவுட் மீது ஏறி கால்தடுமாறி அல்லது தற்கொலை எண்ணத்துடன் தானாகவே கீழே விழுந்து மண்டை உடைந்து மூளை சிதறி இறக்கிறான். சாதிக் இறந்த விஷயத்தை சங்கர் ஊரிலிருக்கும் சாதிக்கின் பழைய காதலி ரெஜினாவிடம் சொல்கிறான். அங்கிருந்து பிளாஷ்பேக்காக சாதிக்கின் பின்னணியை சங்கர் சொல்வதாக நாவல் விரிகிறது.
எண்பதுகளில் சாதிக்கை போன்ற ஆட்களை எளிதாக கண்டு பிடித்துவிடலாம். எல்லாருக்கும் ஒரேபோல முகத்தில் தாடி கண்களில் தீர்க்கம், பேச்சில் அலட்சியம், உடம்பில் நீளமான ஜிப்பா என்று பொதுத்தன்மை கொண்டிருப்பார்கள். சாதிக்கின் உலகம் சிற்றிதழ் வாசிப்பு, உலக அரசியலை பேசுவது, நண்பர்களுடன் சேர்ந்து மொட்டை மாடியில் டிவியில் மாற்றுத் திரைப்படங்களை பார்ப்பது, கையில் புகையும் பீடி, தேதீருடன் அகிரகுரசோவா படங்களை பற்றி விவாதிப்பது என்று சுற்றுகிறது. டுட்டோரியல் பள்ளியொன்றில் குறைந்த ஊதியத்தில் வேலை செய்யும் சாதிக் பொருளாதாரத்தை பற்றியெல்லாம் பெரிதாக கவலைப் படுவதில்லை. தஸ்தாயெவ்ஸ்கி, டால்ஸ்டாய், நகுலன், புதுமைப்பித்தன், பிராய்டு,சார்த்தார் என்று வேறு ஓர் உலகத்தில் வாழ்கிறான். சூரியனுக்கு கீழே உள்ள எல்லா விஷயங்களையும் பற்றி அவனால் தீவிரமாக விவாதிக்கமுடியும். எல்லாவற்றையும் ஒரு புதுகோணத்தில் பார்த்து அவன் தனது நண்பர்களுக்கு அறிவாசானாக இருக்கிறான். மார்க்கிசிய சித்தாந்தத்தில் தீவிரமாக நம்பிக்கை கொண்டவன். ஊரில் செங்கதிர் என்னும் சிற்றிதழ் நடத்திவருகிறான்.
இந்நாவல் மூன்று தளங்களில் மூன்று பகுதிகளாக விரிந்து செல்கிறது. முதல் பகுதியில் சாதிக்கின் இலக்கிய நண்பர்கள் அவர்களின் அரசியல் நம்பிக்கைகள் சித்தாந்தங்கள் அவர்களில் சிலரின் வெகுஜன ரசனையை பொருளியல் யதார்த்த வாழ்க்கையை கடுமையாக விமர்சித்து சாதிக் செய்யும் உரையாடல்கள் என்று செல்கிறது. அடுத்த பகுதி சாதிக் அவனது காதலி ரெஜினா பிறகு அவன் திருவனந்தபுரம் பேரலல் கல்லூரியில் பேராசிரியராக சேருவது என்று சுழல்கிறது. மூன்றாவது பகுதியில்தான் சாதிக் சென்னைக்கு வந்து வெகுஜன ரசிக மனோபாவத்தை விரும்பி ஏற்று தீவிர ரஜினி ரசிகனாக மாறி கட்அவுட்டுக்கு பால், பீர் ஊற்றும் வெறிப்பிடித்த ரசிகனாக மாறுவது நடக்கிறது.
சாதிக்கின் தனிப்பட்ட வாழ்க்கையில் பாலியல் ஆர்வமற்று இருக்கிறான். கிட்டத்தட்ட பிரவீணாவிடமும் இதேபோல நிறைவேறாத அல்லது திருப்தியடையாத அலல்து தன்னைத்தானே சுயவதை செய்துக்கொள்ளும் ஒருவித மனநிலை இருக்கிறது. பாலியல் ஆர்வம் இல்லாதவர்கள் கொஞ்சம் டேஞ்சரான ஆட்கள்தான். அதோடு இலக்கியக்கிறுக்கும் சேர்ந்துவிட்டால் இன்னும் மோசம். ஆனால் இந்நாவலின் ஆரம்பத்தில் மிக தீவிரமாக வெகுஜன ரசிக மனோபாவத்தை கிண்டல் செய்யும் ரஜினி படங்களை திட்டும் சாதிக் குறிப்பாக தீவிர மார்க்சியம் பேசும் ஒருவன் எப்படி இப்படியொரு இடத்துக்கு வந்து சேர்ந்திருப்பான்? இது சாத்தியம்தானா என்று யோசிக்கும்போது இலக்கிய உலகத்திலும் ரசிகமனோபாவம் இருப்பதை தாஸ் போன்ற கதாபாத்திரம் வழியாக அபிலாஷ் பதிவு செய்து அதற்கான விளக்கத்தை கொடுக்கிறார்.
மனிதர்களால் சமநிலையை பேணுவது மிகவும் கடினம். ஏதோவொன்றின் மேல் எல்லா மனிதர்களுக்கும் ரசிகமனோபாவம் தேவைப்படுகிறது. சங்கருக்கு ஆன்மிகம். ஆணை பெண் ரசிப்பதும் பெண்ணை ஆண் ரசிப்பதும் அரசியல் தலைவரை தொண்டர்கள் ரசிப்பதும் என்று எல்லாமும் ஒரே புள்ளியில் மனிதர்களின் பாதுகாப்பின்மை ஏற்படுத்தும் பதற்றத்திலிருந்தே பிறக்கின்றன
தாஸ் கதாபாத்திரம் வரும்போதெல்லாம் இவர் யார்? இவரா அவரா என்று யோசிக்க வைக்கிறது. பிற்பாதியில் எழுத்தாளர் தாஸ் சென்னைக்கு வந்து தனக்கென்று வாசகர் வட்டம் என்ற பெயரில் ரசிக அடிவருடிகளை வைத்து ரஜினிக்கு நிகராக தனது கட்அவுட்டுக்கு பீர் அபிகேஷம் செய்யும் பவர்ஸ்டார் கோமாளித் தனங்களை புன்னகையுடன் படித்தேன். குறிப்பாக தாஸின் வாசகர்கள் நாவல் வெளியீட்டு விழாவுக்கு ஒரு பெண்ணை காசுகொடுத்து அழைத்து வருகிறார்கள். அந்தப்பெண் தாஸை தனது மார்பில் கையெழுத்து போட சொல்லி வற்புறுத்துகிறாள். இவள்தான் தனது உணமையான வாசகி என்று தாஸ் மேடையில் பெருமையாக பேசுகிறார். அதே மேடையில் ஏறும் சாதிக் ரஜினி பட வசனங்களை பேச தாஸின் வாசகர்கள் அதற்கும் கைதட்டுகிறார்கள். இரண்டாயிரத்துக்கு பிறகு கிட்டத்தட்ட இலக்கிய ரசிகர்களும் (வாசகர்கள் அல்ல) சினிமா ரசிகர்களும் ஒரே மாதிரித்தான் தங்கள் மூளையை அடகுவைத்து கிடக்கிறார்கள். பிறகு அந்தபெண் மேடைக்கு பின்னால் சென்று மனுஷனா அவன்? கையெழுத்து போட சொன்னால் பேனாவால் கீறி வைக்கிறான். ஒழுங்கா பேசுன காசை கொடுத்துடுங்க என்று தாஸின் வாசகர்களிடம் சண்டை போடுகிறாள்.
எண்பதுகளின் மார்க்சிய சித்தாந்தம் சிதைந்து பின்நவீனத்துவம் வந்தபிறகு அது ஒரு தனிமனித நம்பிக்கைகளை இருப்பை எப்படி அலைக்கழிக்க வைத்து அவனை காணாமல் போக வைத்தது என்பதை வலுவாக பதிவு செய்தவகையில் இந்நாவல் முக்கியம்பெறுகிறது. அதே நேரம் சாதிக் தோற்றுப்போனால் அது அவன் கொண்ட நம்பிக்கைகளின், சித்தாந்தங்களின் தோல்வி அல்ல. வச்சா குடுமி. அடிச்சா மொட்டை என்று சொல்வார்கள். சாதிக்கும் அப்படியொரு பிடிவாத மனநிலையில்தான் வாழ்கிறான். வெகுஜன ரசிக மனோபாவத்தின் உச்சத்துக்கு சென்று ராகேவந்திரா மண்டபம் சென்று ரஜினி காலில் விழுந்து ஆசிப்பெற்று வருகிறான்.
நாவலில் நுட்பமாக வரும் சில இடங்களும் உண்டு. கறுப்பு நாயொன்று சாதிக்கை பின்தொடர்ந்து வந்தபடியே இருக்கிறது. ரஜினி கட்அவுட் மீதிருந்து சாதிக் கால் தவறி விழும்போது அந்த நாய் வந்து அவனது மூளையை நக்குகிறது. எல்லா மகத்தான மூளைகளையும் கடைசியில் ஓர் அற்பநாய் வந்துதான் நக்கிவிட்டு செல்கிறது.