Showing posts with label FaceBook. Show all posts
Showing posts with label FaceBook. Show all posts

Monday, August 8, 2016

வலம் நாவல் -- இரா.முருகவேள்

வலம் நாவல் பற்றி எழுத்தாளர் இரா.முருகவேளின் விமர்சனம்.

வலம்
----------
----இரா.முருகவேள்

தன் மனதுக்கு மூளைக்கு வெளியே இன்னொரு உலகம் இருக்கிறது என்பதை அங்கீகரிக்கும் எழுத்துக்கள் எப்போதுமே முக்கியமானவை. அவைதான் காலத்தின் வரலாற்றுப் பதிவுகளாக உலகமெங்கும் கொண்டாடப்படுகின்றன. அதிலும் நூலாசிரியருக்கு தான் எடுத்துக் கொண்ட காலப் பகுதியின் மக்கள் வாழ்வைத் தேடிக் கண்டுகொள்ளும் பிடிவாதமும் ஆவலும் இருந்து அவர் அதற்காக உழைக்கவும் தயாராக இருந்து விட்டால் நிச்சயம் ஒரு நல்ல இலக்கியம் பிறந்து விடும்.

அந்த வகையில் விநாயக முருகனின் வலம் குறிப்பிடத்தக்க நாவலாக உருவாகியிருக்கிறது. சென்னை நகரின் உருவாக்கத்துக்குக் கொடுக்கப்பட்ட விலைதான் நாவலின் பின்னணி. நரிகளுக்கும் சென்னை கிராமப்புறங்களுக்கும் இருந்த உறவையும் அவை ஆங்கிலேயர்களால் அழிக்கப்பட்ட விதத்தையும் சுவாரஸ்யமாகப் பேசுகிறது வலம்.

தமிழக நாட்டுப்புறக் கதைகளில் நரிக்குத் தனி இடம் உண்டு என்று விமர்சகர் முருகேச பாண்டியன் குறிப்பிடுகிறார். நரி எப்போதும் மனிதனுடன் போட்டி போடும். நரியை வெற்றி கொள்வதுதான் மனிதனின் சாம்ர்த்தியம் என்று நாட்டுப்புறக் கதைகளில் திரும்பத்திரும்ப வலியுறுத்தப்படும். இயற்கையின் நுட்பமான வலைப் பின்னலில் நரி ஒரு தவிர்க்க முடியாத இணைப்பு. இப்போது தமிழக மலையோர கிராமங்களி நரிகளும் கீரிகளும் அழிந்ததால் மயில்களும் மற்ற பறவைகளூம் பெருகி விவசாயிகளுக்குப் பெரும் தொல்லையாக மாறிவருகின்றன. நரிகள் போதுமான எண்ணிக்கையில் இருந்திருந்தால் அவை பறவை முட்டைகளைக் குடித்து பறவைகளில் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தியிருக்கும்.

நுட்பமாகப் பார்த்தால் இந்த உறவை நமது நாட்டுப்புறக் கதைகள் வலியுறுத்துவதை உணர முடியும். ஆனால் வெள்ளையர்களின் பார்வை வித்தியாசமானது. தங்கள் நாடுகளில் பெரும் காடுகளை அழித்தும் தனியுடமையாக்கியும் பெற்ற அனுபவங்களோடு வெள்ளையர்கள் இங்கே வருகின்றனர். அவர்கள் நமது மலைக்காடுகளை வெட்டிச் சாய்த்தனர். சதுப்பு நிலங்களை வடித்தனர். யானைகளையும் புலிகளையும் மான்களையும் மற்ற மிருகங்களையும் கொன்று குவித்தனர். பின்பு நடந்ததை துன்பக் கேணீயும் தமிழக மலையக எஸ்டேட் இலக்கியமும் பேசும். இவற்றின் தொடக்கம் சென்னையைச் சுற்றி ஆரம்பித்தது என்பதை வலத்தில் காண முடிகிறது.

கதை நரி மேட்டு சித்தரில் தொடங்குகிறது. நரிகளுக்கும் இயற்கைக்கும் சுற்றி வாழ்ந்த மக்களுக்குமான உறவைப் பேசி பதினெட்டாம் நூற்றாண்டுக்குத் தாவுகிறது. நரி மேடு தகர்க்கப்படுகிறது. நரிகள் கொன்று குவிக்கப்படுகின்றன. சென்னைப் பட்டணம் எழுகிறது. இதன் பிறகு பத்தொன்பதாம் நூற்றாண்டில் சென்னையில் வாழ்ந்த வெள்ளையர்களின் வாழ்வை ஒரு கொலை வழக்கு மற்றும் நரி வேட்டையின் பின்னணீயில் சொல்கிறார் விநாயக முருகன்.

ஓர் ஓவியம் வரையும் போது அதையொட்டிய காட்சிகள் அதனதன் இடத்தில் இயல்பாக உட்கார்ந்து விடுவது போல புதிய சென்னை நகரத்தில் நீக்கமற நிறைந்து கிடக்கும் சாதி, அயோத்திதாசப் பண்டிதரின் தலைமையில் முதல் தலித் இயக்கம் துளிர்விடுவது, பஞ்சம், பாலியல் தொழிலாளர்களீன் நிலை, என்று அனைத்தையும் நம் முன்னர் விரித்து வைக்கிறது வலம். அயோத்திதாசர் இந்து மதத்திலிருந்து விலகிச் செல்வதும் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கோஹன் சென்னையின் காவல்துறை அதிகாரி. பிரபு குடும்பத்தில் வந்தவன். சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டிய கோஹனின் பெயர் தனக்கு வைக்கப்பட்டிருப்பதை பெருமையாக உணர்பவன். மொத்தத்தில் எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன்.

புளியந்தோப்புப் பகுதியில் இரண்டு சிறுவர்கள் நரிகளால் கொல்லப்பட்டிருப்பதை அறிந்து விசாரிக்கச் செல்கிறான். அங்கு வாழும் ஆதிதிராவிட மக்கள் தங்கள் குழந்தைகள் நரிகளால் கொல்லப்பட்டன என்பதை நம்ப மறுக்கின்றனர். அங்குதான் கோஹன் உள்ளூரில் வாழும் ஆங்கிலம் தெர்ந்த தலித் மக்களின் தலைவனான ரத்தினத்தைத் சந்திக்கிறான். உடல்களை உயர்சாதி அதிகாரியின் வண்டியில் ஏற்றச் சொல்லும் போது அவர் மறுக்கிறார். சென்னையின் சாதி பற்றிய ஆரம்ப அறிவு அவனுக்குக் கிடைக்கிறது.

பேட்டர்ஸன் அய்ர்லாந்தைச் சேர்ந்த படைவீரன். அவனது அப்பா அயர்லாந்தில் பண்ணையில் வேலையாளாக இருந்தார். குலப்பெருமை அற்றவனாகவும் பணமில்லாதவனாக இருப்பதையும் உணர்ந்த தாழ்வு மனப்பான்மை அவனை உறுத்திக் கொண்டே இருக்கிறது. மனதுக்குள் குமைந்து கொண்டிருக்கும் கோபம் அதி தீவிரத்துடன் அவனை நரி வேட்டையில் ஈடுபடச் செய்கிறது. அவன் வெறி பிடித்தவனாக சென்னையைச் சுற்றி நரிகளைத் தேடி அலைந்து கொண்டே இருக்கிறான்.

சென்னையில் வேட்டைக்காரர்களுக்காக ஒரு கிளப் இயங்குகிறது. அதன் உரிமையாளர் மெக்கன்ஸி உயர்ரக நாய்களையும் குதிரைகளையும் நரிவேட்டையாடுபவர்களுக்கு அளிக்கிறார். கவர்னர் (கன்னிமாரா?) பெரும் குடிகாரராகவும் பெண் பித்தராகவும் இருக்கிறார். சென்னையை விரிவுபடுத்த திட்டங்கள் தீட்டுகிறார். அவரது இனிமையான குணமுடைய ஓவியரான மனைவி சூஸன் கவர்னரின் குணத்தால் வெறுப்படைந்திருக்கிறார். இந்தப் பின்னணியில் சென்னையின் அக்கால வாழ்க்கை குறிப்பாக வெள்ளையர் வாழ்க்கை நம் கண் முன் விரிகிறது.

பஞ்சப் பிரதேசங்களில் இருந்து மக்கள் நிழல்கள் போல நகரினுள் நுழைந்து கொண்டே இருக்கிறார்கள். உணவின்றிக் குழந்தைகள் உயிர்விடுகின்றன. நெல் ஏற்றிச் செல்லும் வண்டிகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. ஆனால் அரசு சென்னைக்கு ரயில் பாதை அமைக்கவும் நகரை இன்னும் விரிவுபடுத்தவும் திட்டங்கள் தீட்டுகிறது.

வலம் முழுமையும் தலித்துகளைப் பற்றிய நாவல் அல்ல என்றாலும் பெரும்பாலும் எதிர்த்துத் தாக்காத நரிகள், தாக்க வழியில்லாத தலித்துகள், பிரிட்டிஷ் அரசு என்று ஒரு முக்கோண பிணைப்பு நாவலில் இருக்கத்தான் செய்கிறது.

சதுப்பு நிலங்களும் ஓடைகளும் ஆறுகளும் ஏரிகளும் நிரம்பிய ஒரு மென்மையான நிலப்பரப்பின் ஒரு மூர்க்கமான, பஞ்சங்களுக்கும் கொள்ளை நோய்களுக்கும் இருப்பிடமான நகரத்தைக் கட்டியமைக்கிறது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம். நரிகள் கொன்று குவிக்கப்படுகின்றன. விரட்டியடிக்கப்படுகின்றன.

நரிகளைப் போலவே கோட்டை இருக்கும் கடலோரப் பகுதியில் வாழ்ந்த மீனவர்களும் விரட்டியடிக்கப்படுகிறார்கள். அவர்கள் வாழ்விடங்கள் ஆகிரமிக்கபட்டு அங்கே எழுகிறது ஒரு வலிமை வாய்ந்த கோட்டை. தலித்துகளுக்கு பல புதிய வாயில்கள் திறக்கின்றன. ஆனால் அவற்றையும் அரசே அடைக்கிறது. ஒரு புதிய வகையிலான அடிமைத்தனம் உழைக்கும் மக்கள் மீது திணிக்கப்படுகிறது.

இக்கதை நடக்கும் காலத்துக்கு அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தென் தமிழகத்தில் மருது பாண்டியர், பூலித்தேவன், கட்டபொம்மன், எல்லோருக்கும் மேலாக ஊமைத்துரை தலைமையில் ஆங்கிலேயருக்கு எதிராக கடும் போர்கள் நிகழ்ந்தன. அப்போது ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பலர் எல்லா பாளையக்காரர்களின் படைகளீலும் தளபதிகளாகவும், வீரர்களாகவும் பணீபுரிந்தனர். அதற்கான தேவை இருந்தது. இது தொடர்ந்திருந்தால் சாதியக் கட்டுமானத்தில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் பிரிட்டிஷ் அரசு தனது அதிகாரத்தை நிலைநாட்டிய பின்பு சாதிய அமைப்புமுறையைக் குலைக்காத ஒரு நுட்பமான பாதையைப் பின்பற்றியது. ராணுவத்துக்கும், ஆலைகளுக்கும் தேவைப்பட்ட அளவுக்கே தலித்துகள் அரசு அமைப்புகளில் அனுமதிக்கப்பட்டனர். மற்றபடி சாலைகளீலும், நிறுவனங்களிலும் ப்ரந்து விரிந்த கிராமப் பகுதிகளீலும் சாதிய முறை தடையின்றித் தொடர அனுமதிக்கப்பட்டது.

இதைத்தான் வலத்திலும் காண்கிறோம். பின்னி மில்லில் பாதிப்பேர் தலித்துகள். அவர்கள் தங்களுக்கென்று பள்ளிகள் வைத்து ஆங்கிலம் படிப்பது தடை செய்யப்படவில்லை. ஆனால் காயம் பட்ட ஒருவனை தன் வண்டியில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்று சொல்லும் உரிமை உயர்சாதிக்காரனுக்கு அனுமதிக்கப்பட்டது. சாதியக் கட்டுமானத்தைத் தாங்கி நிற்கும் மேல்சாதிக்காரர்களின் பொருளாதார பலத்தைத் தகர்க்காமல் சாதிய அமைப்பில் பலவீனத்தை ஏற்படுத்துவது சாத்தியமில்லை என்பதை அயோத்திதாசரின் அனுபவத்திலிருந்து இன்று வரையிலான அனுபவங்கள் காட்டுகின்றன. தலித்துகள் படிக்கவும், மில்களில் வேலை செய்யவும் அனுமதிக்கப்படுகின்றனர். அதே நேரம் சாதி ஆதிக்க வாதிகள் சாதியைக் காப்பாற்றும் பொருளாதார மேல்நிலையை தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கபப்டுகின்றனர். இந்த நீண்ட நெடிய போராட்டத்தின் தொடக்கம் வலத்தில் கோடிட்டுக் காட்டப்படுகிறது.

இவையனைத்தையும் விட நாவலில் வரும் வெள்ளைக்காரர்களின் பத்திரங்களின் உருவாக்கத்தில்தான் விநாயக முருகனின் நேர்த்தி தெரிகிறது. குறிப்பாக பாட்டர்ஸனின் பாத்திரம். ஒரு விளையாட்டாகத் தொடங்கி நரி வேட்டையில் அவன் கொள்ளும் தீவிரம், மூர்க்கம், எதிர்ப்புக் காட்டாமல் தப்பி ஓட மட்டுமே முயலும் பலவீனமான உயிரிகள் மீது வரும் கண்மூடித்தனமான வெறுப்பு உலகத்தில் தான் வெறுக்கும் அனைத்தின் மொத்த உருவமாக நரிகளை அவன் உருவகப்படுத்திக் கொள்வது அற்புதமாக எழுதப்பட்டிருக்கிறது. பேட்டர்ஸனின் நாயான புல்லட்டின் விசுவாசம் சக்திக்கு மீறிய உழைப்பால் தளர்ந்து வரும் அதன் உடல்நிலை . . . விநாயக முருகனின் எழுத்துத் திறன் தனிச்சிறப்புடன் வெளிப்படுகிறது. அவர் வருணிக்கும் நரிவேடையின் நுணுக்கங்கள் இந்தப் பகுதியை நாவலில் மிகவும் முக்கியமானதாக மாற்றுகிறது.

நரி வேட்டை ராயல் விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதாவது நரியைக் கொல்வது வேட்டை அல்ல, விளையாட்டு என்று பிரிட்டிஷாரால் கருதப்பட்டது. குதிரையில் செல்லும் வேட்டைக்காரன் நரியைச் சுடுவது கௌரவக் குறைச்சல் என்று கருதப்பட்டது. எல் போன்ற இரும்புத் தடியால் நரியின் மண்டையை அடித்துப் பிளப்பதே சிறந்த விளையாட்டு வீரனுக்கு அடையாளமாகும் .எதிர்ப்புக்காட்டாத மனித குலத்தின் ஒரு பகுதியை அடக்கி ஒடுக்குவதிலும் அதை அதன் அற்பமான வாழ்விடங்களில் இருந்து ஓரப்பகுதிகளுக்கு விரட்டியடிப்பதிலும் மற்ற பகுதி காட்டும் முனைப்பை இதனுடன் இணைத்துப் புரிந்து கொள்ளலாம். பழைய கொண்டாட்டமான தமிழக கிராமப்புற வேட்டைக்கும், ஆங்கிலேயர்களின் இது போன்ற கேளிக்கை அல்லது உள்ளே குமையும் மூர்க்கத்திற்கு வடிகாலான வேட்டைக்கும் வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது. வளர்ந்து வரும் நகரம் நரிகள் வாழத் தகுதியில்லாததாக மாறிப் போகிறது. நரிகள் எங்கோ தொலை தூரங்களில் சென்று மறைகின்றன. பஞ்சமும், பசியும் நோய்களும் அவை விட்டுச் சென்ற இடங்களில் நிரந்தரமாகக் குடியேறுகின்றன.

நாவல் முழுக்க விநாயக முருகனின் பிடிவாதமான உழைப்பு தெரிகிறது. நாவலில் சொல்லப்படும் எதைக் குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டாலும் துல்லியமாக ஆதாரங்களுடன் அவர் விடையளிப்பதை முக நூலில் பார்த்திருக்கிறேன். சென்னை செங்கற்களால் ஆன நகரம் மட்டுமல்ல. ஓடைகளையும், பசும்புல் வெளிகளையும், வயல்களையும் சின்னஞ்சிறு அழகிய கிராமங்களையும் புதைத்துக் கட்டிய மாபெரும் புதைகுழியும்கூட என்பதை வலம் உணரவைக்கிறது.

ஓர் இடத்தில் மட்டும் எனக்கு சந்தேகம் இருக்கிறது. தோடர் பழங்குடியின கரோலின் பாத்திரம் அது. வெள்ளைக்காரன் தொடர்பால் அவளது அம்மா தற்கொலை செய்து கொள்கிறாள். கரோலின் கோஹனைக் காதலிக்கிறாள். கவர்னரின் வேட்கைக்கு இரையாகிறாள். குற்ற உணர்வால் உந்தப்பட்டு கோஹனின் காதலை ஏற்றுக் கொள்ளாமல் கன்னியாஸ்திரியாவதாக நாவல் முடிகிறது. பழங்குடியினங்களில் குழந்தைகள் ஒருபோதும் அனாதைகளாக விடப்படுவதில்லை. அவர்களது பாலியல் சார்ந்த பார்வையும் நமது மத்திய தரவர்க்கப் பார்வையிலிருந்து வித்தியாசமானது. விநாயக முருகன் கட்டாயம் ஏதோ ஒரு வரலாற்று ஆவண்த்திலிருந்துதான் இந்த பாத்திரத்திற்கான தாக்கத்தைப் பெற்றிருப்பார் என்று உணரமுடிகிறது. அந்த சூழலை சற்று விரிவாக சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

சென்னையின் ஆரம்ப நாட்களையும் அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்வையும் இயற்கையின் நுட்பமான வலைப்பின்னலின் பின்னணியில் சுவாரஸ்யமான நாவலாக்கிய விநாயக முருகன் பாராட்டத்தக்கவர்.

நன்றி:- இரா.முருகவேள்

Tuesday, October 6, 2015

நரகம் ஒரு தனித்த பிரதேசம்

சார்லஸ் புக்கோவ்ஸ்கி எனக்கு மிகவும் பிடித்த கவிஞர். புக்கோவ்ஸ்கி கவிதைகள் வாசிக்க எந்த சிரமமும் இல்லாமல் எளிமையாக இருக்கும். அவரது பல கவிதைகளை எனது வலைப்பக்கத்தில் தமிழில் மொழிப்பெயர்ப்பு செய்து பதிவிட்டுள்ளேன். அவரது ஒரு குறிப்பிட்ட கவிதை சமீபத்தில் என்னை மிகவும் தொந்தரவு செய்தது. அந்த கவிதையை மொழிப்பெயர்க்க தோன்றியது.. பொருளாதாரத்தில் நலிவுற்ற வயதான நோயுற்ற தம்பதிகளின் இறுதிக்கால கொடும் தனிமைதான் இந்த கவிதையின் ஆன்மா.கவிதையின் உச்சம் இறப்பு நடந்த அந்த வீட்டுக்கு புதிதாக வரும் இளம் ஜோடி பற்றிய மர்மமான விவரணைகள். ஒருவேளை அந்த முதியவர்களே மீண்டும் பிறந்து கூட அங்கு வந்திருக்கலாம்.

நரகம் ஒரு தனித்த பிரதேசம்
----------------------------------------------
அந்த மனிதருக்கு அறுபத்தைந்து வயது
அவரது மனைவிக்கு அறுபத்தாறு வயது
மனைவிக்கு அல்சைமர் வியாதி
அந்த மனிதருக்கு வாய்புற்றுநோய்
அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை
அவரது தாடையின் எலும்பை உருக்கிற்று
தாடையை தாங்கி பிடித்துக்கொண்டிருக்க வேண்டும்
தினமும்
அவரது நோயுற்ற மனைவிக்கு
ஒரு குழந்தைக்கு மாட்டிவிடுவதைபோல
ரப்பர் டயாப்பரை அணிவிப்பார்.
அவரது நிலைமையில் கார் ஓட்ட முடியாது
மருத்துவமனைக்கு வாடகைடாக்சி பிடிக்க வேண்டும்
ஓட்டுநரிடம் பேச இயலாது
செல்ல வேண்டிய திசையை எழுதிக்காட்ட வேண்டும்
கடந்த மருத்துவச்சோதனையின்போது
அவரிடம் தெரிவித்தார்கள்
தாடையில் இன்னொரு அறுவை சிகிச்சை
செய்யப்பட வேண்டும்
வலதுப்பக்க கன்னத்தருகே
நாவுக்கருகே
அவர் வீடு திரும்பியதும்
மனைவியின் டயாப்பரை மாற்றினார்
அடுப்பை பற்ற வைத்தார்
மாலைநேர செய்திகளை கவனித்தார்
பிறகு இருவரும் படுக்கையறை சென்றார்கள்
அவர் துப்பாக்கியை எடுத்து
மனைவியின் நெற்றிப்பொட்டில் வைத்து சுட்டார்
மனைவி இடதுப்பக்கம் சரிந்ததும்
அவர் மெத்தையில் உட்கார்ந்தார்
தனது வாயில் துப்பாக்கியை நுழைத்து
விசையை இழுத்தார்
குண்டுச்சத்தம் அண்டைவீட்டாரை உசுப்பவில்லை
பிறகு
பற்றியெரியும் அடுப்பு அதை செய்தது
யாரோ வந்தார்கள்
கதவை உடைத்தவர்கள் அதை கவனித்தார்கள்
விரைவில்
காவலர்கள் வந்தார்கள்
சம்பிரதாய கடமைகளை செய்தார்கள்
சில பொருட்களை சேகரித்து எடுத்துச்சென்றார்கள்
1.14 டாலர் மிச்சமுள்ள
ஒரு மூடப்பட்ட வங்கிக்கணக்கு
ஒரு செக்புத்தகம்
தற்கொலை என்று முடிவெடுத்தார்கள்
அடுத்த மூன்று வாரங்களில்
இரண்டு புதியவர்கள் அங்கு குடிவந்தார்கள்
ராஸ் என்ற பெயருடையை ஒரு மென்பொருள் நிறுவனர்
அவரது மனைவி அனந்தனா
பாலே நடனம் கற்றவர்
சமூகத்தில் உயர் அந்தஸ்துடைய ஜோடி


Hell Is A Lonely Place 

- Poem by Charles Bukowski

he was 65, his wife was 66, had
Alzheimer's disease.

he had cancer of the
mouth.
there were
operations, radiation
treatments
which decayed the bones in his
jaw
which then had to be
wired.

daily he put his wife in
rubber diapers
like a
baby.

unable to drive in his
condition
he had to take a taxi to
the medical
center,
had difficulty speaking,
had to
write the directions
down.

on his last visit
they informed him
there would be another
operation: a bit more
left
cheek and a bit more
tongue.

when he returned
he changed his wife's
diapers
put on the tv
dinners, watched the
evening news
then went to the bedroom, got the
gun, put it to her
temple, fired.

she fell to the
left, he sat upon the
couch
put the gun into his
mouth, pulled the
trigger.

the shots didn't arouse
the neighbors.

later
the burning tv dinners
did.

somebody arrived, pushed
the door open, saw
it.

soon
the police arrived and
went through their
routine, found
some items:

a closed savings
account and
a checkbook with a
balance of
$1.14
suicide, they
deduced.

in three weeks
there were two
new tenants:
a computer engineer
named
Ross
and his wife
Anatana
who studied
ballet.

they looked like another
upwardly mobile
pair. 

Saturday, August 8, 2015

ரசிகன்



மகத்தானவற்றின் மீது நாம் வைக்கும் நம்பிக்கையும், உறுதிப்பாடும் பொய்த்துப் போகிறபோது நொறுங்கிவிடுகிறோம். அவநம்பிக்கை மேலெழுகிறது. குழப்பங்களும், வினாக்களும் தோன்றுகின்றன. இதுநாள்வரை நாம் எதன்மீது பற்று வைத்திருந்தோமோ அது இற்று விழுகிறது. நம் மனதிலேயே எதிர்வாதம் தோன்றி நம்மை உருமாற்றம் செய்கிறது. நாம் அதுவரை நம்பிக்கொண்டிருந்தவைக்கு எதிரானவராக அத்தருணத்தில் மாறிவிடுகிறோம்
--– அபிலாஷின் ரசிகன் நாவல் பற்றி அழகிய பெரியவன் எழுதிய கட்டுரையிலிருந்து
எண்பதுகளின் தொடக்கத்தில் பிறந்தவர்களை பாக்கியசாலிகள் என்று நான் எனது நண்பர்களிடம் அடிக்கடி சொல்வேன். காரணம் அவர்கள் வளர்ந்து பதின்பருவம் அடையும்முன்னரே தமிழ்நாட்டில் குளோபலைசேஷன், லிபரலேஷன் காலூன்றிவிட அவர்கள் உலகத்தை புரிந்துக்கொள்வதற்கு முன்பே அவர்களால் இயல்பாக ஒரு காலமாற்றத்துக்குள் அடியெடுத்து வைத்து விட்டார்கள். ஆனால் அதற்குமுன்பு பிறந்து அதிலும் குறிப்பாக தீவீர லட்சியவாதம் பேசிய சிறுபத்திரிக்கை மரபை சேர்ந்த பல இளைஞர்கள் என்ன ஆனார்கள் என்று எனது கண்முன்னால் பார்த்திருக்கிறேன். எனது நண்பர்கள் சிலர் அப்படி மைய நீரோட்டத்தில் கரைந்து காணாமல் போனதையும் தற்கொலை செய்துக்கொண்டதையும் சிலர் துபாய் போன்ற நாடுகளில் கிடைத்த வேலை செய்து தங்கள் அடையாளம் இழந்துப் போனதையும், பலர் என்ன ஆனார்கள் என்றே தெரியாமல் போனதையும் பார்த்திருக்கிறேன்.
ரசிகன் நாவலில் வரும் சாதிக் என்ற கதாபாத்திரத்தின் சாயலில் நான் பார்த்த சில நெருங்கிய நண்பர்களின் சாயலை உணர முடிந்தது. எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்த லட்சியவாத சிறுபத்திரிக்கை மரபை சேர்ந்த சாதிக் தொண்ணூறுகளின் காலகட்டத்துக்கு வரும்போது அவன் வாழ்க்கை உள்ளும் புறமும் எப்படி மாறுகிறது? அவன் நம்பிக்கைகள் எப்படி சிதறுகின்றன? என்பதுதான் ரசிகன் நாவலின் மையம்.
சாதிக்தான் இந்த நாவலின் மையப்புள்ளி என்றாலும் சங்கர் என்ற கதாபாத்திரத்தின் பார்வையில் நாவல் ஆரம்பிக்கிறது. சந்திரமுகி படம் வெளிவந்த காலகட்டத்தில் நாவலின் கதை ஆரம்பிக்கிறது. சென்னையில் கதை தொடங்குகிறது. சந்திரமுகி படத்தின் நூறாவது நாள் வெற்றிவிழாவில் கலந்துக்கொள்ளும் சாதிக் தியேட்டர் வாசலில் இருக்கும் ரஜினி கட்டவுட் மீது ஏறி கால்தடுமாறி அல்லது தற்கொலை எண்ணத்துடன் தானாகவே கீழே விழுந்து மண்டை உடைந்து மூளை சிதறி இறக்கிறான். சாதிக் இறந்த விஷயத்தை சங்கர் ஊரிலிருக்கும் சாதிக்கின் பழைய காதலி ரெஜினாவிடம் சொல்கிறான். அங்கிருந்து பிளாஷ்பேக்காக சாதிக்கின் பின்னணியை சங்கர் சொல்வதாக நாவல் விரிகிறது.
எண்பதுகளில் சாதிக்கை போன்ற ஆட்களை எளிதாக கண்டு பிடித்துவிடலாம். எல்லாருக்கும் ஒரேபோல முகத்தில் தாடி கண்களில் தீர்க்கம், பேச்சில் அலட்சியம், உடம்பில் நீளமான ஜிப்பா என்று பொதுத்தன்மை கொண்டிருப்பார்கள். சாதிக்கின் உலகம் சிற்றிதழ் வாசிப்பு, உலக அரசியலை பேசுவது, நண்பர்களுடன் சேர்ந்து மொட்டை மாடியில் டிவியில் மாற்றுத் திரைப்படங்களை பார்ப்பது, கையில் புகையும் பீடி, தேதீருடன் அகிரகுரசோவா படங்களை பற்றி விவாதிப்பது என்று சுற்றுகிறது. டுட்டோரியல் பள்ளியொன்றில் குறைந்த ஊதியத்தில் வேலை செய்யும் சாதிக் பொருளாதாரத்தை பற்றியெல்லாம் பெரிதாக கவலைப் படுவதில்லை. தஸ்தாயெவ்ஸ்கி, டால்ஸ்டாய், நகுலன், புதுமைப்பித்தன், பிராய்டு,சார்த்தார் என்று வேறு ஓர் உலகத்தில் வாழ்கிறான். சூரியனுக்கு கீழே உள்ள எல்லா விஷயங்களையும் பற்றி அவனால் தீவிரமாக விவாதிக்கமுடியும். எல்லாவற்றையும் ஒரு புதுகோணத்தில் பார்த்து அவன் தனது நண்பர்களுக்கு அறிவாசானாக இருக்கிறான். மார்க்கிசிய சித்தாந்தத்தில் தீவிரமாக நம்பிக்கை கொண்டவன். ஊரில் செங்கதிர் என்னும் சிற்றிதழ் நடத்திவருகிறான்.
இந்நாவல் மூன்று தளங்களில் மூன்று பகுதிகளாக விரிந்து செல்கிறது. முதல் பகுதியில் சாதிக்கின் இலக்கிய நண்பர்கள் அவர்களின் அரசியல் நம்பிக்கைகள் சித்தாந்தங்கள் அவர்களில் சிலரின் வெகுஜன ரசனையை பொருளியல் யதார்த்த வாழ்க்கையை கடுமையாக விமர்சித்து சாதிக் செய்யும் உரையாடல்கள் என்று செல்கிறது. அடுத்த பகுதி சாதிக் அவனது காதலி ரெஜினா பிறகு அவன் திருவனந்தபுரம் பேரலல் கல்லூரியில் பேராசிரியராக சேருவது என்று சுழல்கிறது. மூன்றாவது பகுதியில்தான் சாதிக் சென்னைக்கு வந்து வெகுஜன ரசிக மனோபாவத்தை விரும்பி ஏற்று தீவிர ரஜினி ரசிகனாக மாறி கட்அவுட்டுக்கு பால், பீர் ஊற்றும் வெறிப்பிடித்த ரசிகனாக மாறுவது நடக்கிறது.
சாதிக்கின் தனிப்பட்ட வாழ்க்கையில் பாலியல் ஆர்வமற்று இருக்கிறான். கிட்டத்தட்ட பிரவீணாவிடமும் இதேபோல நிறைவேறாத அல்லது திருப்தியடையாத அலல்து தன்னைத்தானே சுயவதை செய்துக்கொள்ளும் ஒருவித மனநிலை இருக்கிறது. பாலியல் ஆர்வம் இல்லாதவர்கள் கொஞ்சம் டேஞ்சரான ஆட்கள்தான். அதோடு இலக்கியக்கிறுக்கும் சேர்ந்துவிட்டால் இன்னும் மோசம். ஆனால் இந்நாவலின் ஆரம்பத்தில் மிக தீவிரமாக வெகுஜன ரசிக மனோபாவத்தை கிண்டல் செய்யும் ரஜினி படங்களை திட்டும் சாதிக் குறிப்பாக தீவிர மார்க்சியம் பேசும் ஒருவன் எப்படி இப்படியொரு இடத்துக்கு வந்து சேர்ந்திருப்பான்? இது சாத்தியம்தானா என்று யோசிக்கும்போது இலக்கிய உலகத்திலும் ரசிகமனோபாவம் இருப்பதை தாஸ் போன்ற கதாபாத்திரம் வழியாக அபிலாஷ் பதிவு செய்து அதற்கான விளக்கத்தை கொடுக்கிறார்.
மனிதர்களால் சமநிலையை பேணுவது மிகவும் கடினம். ஏதோவொன்றின் மேல் எல்லா மனிதர்களுக்கும் ரசிகமனோபாவம் தேவைப்படுகிறது. சங்கருக்கு ஆன்மிகம். ஆணை பெண் ரசிப்பதும் பெண்ணை ஆண் ரசிப்பதும் அரசியல் தலைவரை தொண்டர்கள் ரசிப்பதும் என்று எல்லாமும் ஒரே புள்ளியில் மனிதர்களின் பாதுகாப்பின்மை ஏற்படுத்தும் பதற்றத்திலிருந்தே பிறக்கின்றன
தாஸ் கதாபாத்திரம் வரும்போதெல்லாம் இவர் யார்? இவரா அவரா என்று யோசிக்க வைக்கிறது. பிற்பாதியில் எழுத்தாளர் தாஸ் சென்னைக்கு வந்து தனக்கென்று வாசகர் வட்டம் என்ற பெயரில் ரசிக அடிவருடிகளை வைத்து ரஜினிக்கு நிகராக தனது கட்அவுட்டுக்கு பீர் அபிகேஷம் செய்யும் பவர்ஸ்டார் கோமாளித் தனங்களை புன்னகையுடன் படித்தேன். குறிப்பாக தாஸின் வாசகர்கள் நாவல் வெளியீட்டு விழாவுக்கு ஒரு பெண்ணை காசுகொடுத்து அழைத்து வருகிறார்கள். அந்தப்பெண் தாஸை தனது மார்பில் கையெழுத்து போட சொல்லி வற்புறுத்துகிறாள். இவள்தான் தனது உணமையான வாசகி என்று தாஸ் மேடையில் பெருமையாக பேசுகிறார். அதே மேடையில் ஏறும் சாதிக் ரஜினி பட வசனங்களை பேச தாஸின் வாசகர்கள் அதற்கும் கைதட்டுகிறார்கள். இரண்டாயிரத்துக்கு பிறகு கிட்டத்தட்ட இலக்கிய ரசிகர்களும் (வாசகர்கள் அல்ல) சினிமா ரசிகர்களும் ஒரே மாதிரித்தான் தங்கள் மூளையை அடகுவைத்து கிடக்கிறார்கள். பிறகு அந்தபெண் மேடைக்கு பின்னால் சென்று மனுஷனா அவன்? கையெழுத்து போட சொன்னால் பேனாவால் கீறி வைக்கிறான். ஒழுங்கா பேசுன காசை கொடுத்துடுங்க என்று தாஸின் வாசகர்களிடம் சண்டை போடுகிறாள்.
எண்பதுகளின் மார்க்சிய சித்தாந்தம் சிதைந்து பின்நவீனத்துவம் வந்தபிறகு அது ஒரு தனிமனித நம்பிக்கைகளை இருப்பை எப்படி அலைக்கழிக்க வைத்து அவனை காணாமல் போக வைத்தது என்பதை வலுவாக பதிவு செய்தவகையில் இந்நாவல் முக்கியம்பெறுகிறது. அதே நேரம் சாதிக் தோற்றுப்போனால் அது அவன் கொண்ட நம்பிக்கைகளின், சித்தாந்தங்களின் தோல்வி அல்ல. வச்சா குடுமி. அடிச்சா மொட்டை என்று சொல்வார்கள். சாதிக்கும் அப்படியொரு பிடிவாத மனநிலையில்தான் வாழ்கிறான். வெகுஜன ரசிக மனோபாவத்தின் உச்சத்துக்கு சென்று ராகேவந்திரா மண்டபம் சென்று ரஜினி காலில் விழுந்து ஆசிப்பெற்று வருகிறான்.
நாவலில் நுட்பமாக வரும் சில இடங்களும் உண்டு. கறுப்பு நாயொன்று சாதிக்கை பின்தொடர்ந்து வந்தபடியே இருக்கிறது. ரஜினி கட்அவுட் மீதிருந்து சாதிக் கால் தவறி விழும்போது அந்த நாய் வந்து அவனது மூளையை நக்குகிறது. எல்லா மகத்தான மூளைகளையும் கடைசியில் ஓர் அற்பநாய் வந்துதான் நக்கிவிட்டு செல்கிறது.

Sunday, November 2, 2014

ஹெர்குலிஸ்

மலைகள்.காம் நவம்பர் மாத இதழில் ஹெர்குலிஸ் என்ற சிறுகதை பிரசுரமாகியுள்ளது. 

சித்தப்பா அந்த சைக்கிளை வாங்கும்போது எனக்கு பத்து வயது. இப்போது நாற்பது வயது. முப்பது வருடத்துக்கு முன்பு கும்பகோணம் இப்படி இருப்பதுபோல இருந்ததில்லை. குறிப்பாக ரயிலடி. மகாமக (மாமாங்குளம் என்று உச்சரிப்பார்கள்) குளத்திலிருந்து நூல்பிடித்ததுபோல நேராக நடந்து வந்தால் ரயிலடிக்கு வந்துவிடலாம். காபி கடைகளும், குதிரை வண்டிகளும், ரிக்சா வண்டிகளும், புகையை கக்கிக்கொண்டே தெற்கு, வடக்காக ஓடும் கரி எஞ்சின் வண்டிகளும் ரயிலடியை சுற்றி இருக்கும் கரிமேடும், அங்கு குவிந்துகிடக்கும் எரிந்துப்போன நிலக்கரிகளை பொறுக்கவரும் மாதளம்பேட்டை சிறுவர்களும், அவர்களை விரட்டும் ரயில்வே போலீஸ்காரர்களும் என்று ஒருபுறம் ஏதோவோர் ஆதிகால சலனப்படம் போலவும், மற்றொருபுறம் நீலமேக மேம்பாலம், அதன் மீதேறிச்செல்லும் சோழன் பேருந்துகள், சுவர்களில் ரஜினி பட போஸ்டர்கள் என்று நவீனமும் கலந்துக்கட்டி நின்றிருந்த காலம். எதிர்ப்படும் எந்த மனிதர்களை பார்த்தாலும் வெற்றிலை எச்சிலும், காபி மணமும் தெறிக்கும். இப்போதுபோல ஊரைச்சுற்றி இருக்கும் நவக்கிரகங்கள் அப்போது பிரபலம் இல்லை. மகாமகத்திருவிழா அன்று வெளியூர் ஆட்கள் நிறையபேர் ஊருக்குள் வருவார்கள். மற்றபடி வழக்கமாக மார்கழி மாதம், கருடச்சேவை என்று வாரத்துக்கு ஒரு திருவிழா நடக்கும். சப்ளாங்கட்டை அடித்துக்கொண்டு பாகவத கதைகளை சொல்பவர்களை பார்க்கலாம். லாட்ஜுகளின் வாசலில் மல்லிகைச்சரம், உதட்டுச்சாயத்துடன் நமுட்டுச்சிரிப்பு சிரிக்கும் பெண்களை ரிக்சாக்காரர்கள் கிண்டல் செய்தபடியே போவார்கள். கரும்பு ஏற்றிக்கொண்டு தார்ச்சாலையில் செல்லும் டிராக்டர்களை துரத்திக்கொண்டே போய் டிரைவர்களுக்கே தெரியாமல் பின்புறமாக கரும்புக்கட்டை உருவி எடுக்கும் ஜகதல பிரதாபன்களும், வீடுகளில் திருடிவிட்டு செல்லும் திருடர்களும், ரயிலடியிலிருந்து பார்த்தால் தெரியும் ஊசிமாதா கோவில் பின்பக்கம் இருந்த அடர்ந்த வயல்களில் சாராயம் காய்ச்சும் ஆட்களுமாய் ஊர் இருந்த காலம் அது.

அப்பாவுக்கு பெரும்பாலும் வெளியூரில்தான் வேலை இருக்கும். நான் பிறந்தபிறகு அவருக்கு கும்பகோணத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த நாச்சியார்கோவில் என்ற ஊரில் ஓர் ஆரம்ப சுகாதார மையத்தில் பணிமாற்றம் கிடைத்திருந்தது. அந்நாட்களில் பேருந்தில் பத்து கிலோமீட்டர் பயணம் செய்தாலே உடம்பை நோகவைத்துவிடும். கிலோமீட்டருக்கு மூன்று பேருந்து நிறுத்தங்கள் வரும். அப்பா எவ்வளவோ கேட்டுப்பார்த்தும் கும்பகோணத்துக்குள் பணிமாறுதல் வாங்க முடியவில்லை. அப்போது புதியபேருந்து நிலையம் கட்டியிருக்கவில்லை. பழைய பேருந்துநிலையத்திலிருந்து வரும் சோழன் பேருந்தை ரயிலடி நிறுத்தத்தில் கைக்காட்டி மறித்தால் அரைமணிநேர பயணத்துக்கு பிறகு பித்தளை விளக்குகள் உற்பத்திக்கு பெயர்பெற்ற நாச்சியார்கோவில். நாச்சியார்கோவில் ஆரம்ப சுகாதார மையத்தில் காலரா, யானைக்கால் நோய்க்கு அரசு விநியோகம் செய்யும் த/அ என்று எழுத்துகள் பொறிக்கப்பட்ட மாத்திரைகளை கணக்குப்பார்ப்பதும், வெள்ளை நிற காலி கொசு மருந்து கேன்களை கணக்குப் பார்ப்பதும்தான் அப்பாவின் வேலை. மழை, வெள்ளம் வரும் நாட்களில் அலுவலகத்திலிருந்து ஜீப்பில் பயணித்து சுத்துப்பட்டு கிராமங்களுக்குச் சென்று மருந்து,மாத்திரைகளை விநியோகிக்க வேண்டும். விநியோகம் செய்தவற்றை முறையாக நோட்டில் கணக்கு எழுதவேண்டும். வேலைக்குச்செல்லும் அப்பா மாலையில் வீடு திரும்பும்போது குடித்துவிட்டுதான் வருவார். கையில் மீன்கள் இருக்கும். எங்கள் வீட்டில் பெரும்பாலும் இரவில்தான் மீன் சமையல் நடக்கும். அப்பா வேலைக்கு செல்லாத நாட்களில் அம்மா கோழிக்கறி எடுத்து வந்து குழம்பு வைப்பார். அப்பா வீட்டுக்கு வெளியே இருக்கும் வேப்பமரத்தடியில் கயிற்றுக்கட்டிலை போட்டு உறங்கிக்கொண்டிருப்பார். கறிக்குழம்பு தயாரானதும் அப்பாவை எழுப்பி சோறு போடுவார். மாலையில் அப்பாவின் நண்பர்கள் யாராவது சைக்கிளோடு வருவார்கள். அவர்கள் சைக்கிள் ஓட்ட அப்பா கேரியரில் உட்கார்ந்துக்கொள்வார். அவர்கள் எங்காவது சீட்டுக்கச்சேரி நடத்த கிளம்பிவிடுவார்கள். பிறகு நான் அரைத்தூக்கத்தில் இருக்கும்போது அப்பா எல்லா வேலைநாட்களிலும் செய்வது போன்றே குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். சோற்றை போடும் அம்மா அழுதபடியே வந்து எனது பக்கத்தில் படுத்துக்கொள்வார்.

அப்பா வேலைக்கு சென்றிருந்த நாளொன்றின் பகல்பொழுதில் ராஜேந்திரன் உற்சாகமாக வந்தான். வீட்டு வாசலில் நின்றபடி என்னை பெயர் சொல்லி அழைத்தான். நான் வெளியே வந்து பார்த்தபோது அவன் கால்கள் தரையில் பாவியிருக்கவில்லை. சிறுவன் பக்கத்தில் நிற்கும் அவன் வளர்ப்பு நாய்க்குட்டிபோல என்னை பார்த்ததும் தரையிலிருந்து எம்பி எம்பி குதித்து தன்னோடு வரும்படி சைகை செய்தான். ராஜேந்திரன் மாதளம்பேட்டையில் குடியிருப்பவன். பெரியவனானதும் சைக்கிள் கடை வைப்பதுதான் தனது லட்சியம் என்று சொல்லி வாத்தியாரிடம் பிரம்படி வாங்கியவன். தெருவில் யார் சைக்கிளில் போனாலும் அந்த சைக்கிள் பின்னாலேயே கொஞ்சதூரம் வரை ஓடுவான். அந்தக்காலத்தில் ராஜேந்திரன் வயதையொத்த எங்களில் பலருக்கும் சைக்கிள் பைத்தியம் இருந்தது.

சித்தப்பா வீட்டுக்கு பக்கத்துத்தெருவில் ஒரு சைக்கிள்கடை இருந்தது. அந்த சைக்கிள்கடைக்காரர் எப்போதும் கட்டம் போட்ட அழுக்கு லுங்கி அணிந்திருப்பார். கிரீஸ் கறைகளை லுங்கியில் துடைக்கமாட்டார். அதற்கென்று தனியாக துண்டு வைத்திருப்பார். எப்போதும் சிவப்புநிற பார்டர் வைத்த மஞ்சள்நிற முண்டாபனியன் அணிந்திருப்பார். மடித்துக்கட்டிய லுங்கியுடன் குத்துக்காலிட்டு அவர் உட்காரும்போது அவரது வலுவான பின்னங்கால்களின் சதைகள் திரண்டு நிற்கும். அகன்ற தோள்களுடன் வலுவான புஜங்களுடன், நெஞ்சு நிறைந்த கருத்த சுருள் முடிகளோடு கடை முன்பு உட்கார்ந்து சக்கரத்துக்கு கோட்டம் எடுப்பது , பொத்தல் விழுந்த ட்யூப்களில் பஞ்சர் ஒட்டுவது, ஒவாராயிலிங்க் செய்வது என்று எந்நேரமும் அவர் ஏதாவதொரு வேலை செய்துக்கொண்டே இருப்பார். சைக்கிள் கடைக்கு பின்புறம் ஒரு காலித்திடல் இருந்தது. அதில் இரண்டு ப வடிவ இரும்பு உருளைகளை தலைகீழாக மண்ணில் அடித்து எதிரெதிரே இறக்கியிருப்பார்கள். இருட்டிய மாலை நேரங்களில் சைக்கிள்கடைக்காரர் அந்த இரும்பு உருளைகளின் மீது தொங்கிக்கொண்டு உடம்பை முறுக்கி பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பார். கொழுத்த சதை திரட்சியில் பச்சை நரம்புகள் மின்னல்போல நெளிந்தோடும். தண்ணீர் பிடிக்கச்செல்லும் பெண்கள் மடித்து கட்டிய லுங்கியுடன் இரும்புபாரில் உடற்பயிற்சி செய்யும் சைக்கிள்கடைக்காரரையும் , வியர்வை ஊற்றெடுத்து ஓடும் அவரது உடம்பையும் பார்த்தபடியே செல்வார்கள். இரும்பு பொருட்களோடு வேலை செய்பவர்களுக்கு நாளடைவில் உடம்பு இரும்பாக மாறிவிடும் என்று ராஜேந்திரன் சொல்வான். ராஜேந்திரனுக்கு ஏனோ அந்த சைக்கிள்கடைக்காரரை மிகவும் பிடிக்கும். வளர்ந்து பெரியவன் ஆனால் சைக்கிள் கடை வைக்கப்போவதாக என்னிடம் சொல்ல நாங்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்ட எனது அம்மா என்னை அதட்டினார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் படித்துவிட்டு சைக்கிள்கடை வேலைக்கு போனால் என்ன? குழப்பமாக இருந்தது.

எனது அப்பாவுக்கு ராஜேந்திரனை பார்த்தாலே முகம் மாறிவிடும். ராஜேந்திரன் மூக்கில் எப்போதும் சளி ஒழுகிக்கொண்டிருக்கும். கால்சட்டை இடுப்பில் நிற்காது. ஒருகையால் டவுசரை இழுத்து விட்டுக்கொண்டே ஓடிவருவான். மறுகையில் ஏதாவது தின்பண்டம் இருக்கும். அல்லது ஒரு குச்சியால் சைக்கிள் டயரை ஓட்டிக்கொண்டே வருவான். சாலையில் நரிக்குறவர்கள் சென்றால் அவர்கள் பின்னாலேயே நடந்து வயலுக்கு போவான். அவர்கள் எப்படி குருவி சுடுகிறார்கள் என்பதை மறுநாள் வகுப்புக்கு வந்து எங்களிடம் விவரிப்பான். ராஜேந்திரன் மீது எப்போதும் ஒருவித கவுச்சிவாடை அடிக்கும். காக்கையை சுட்டு தின்பவர்கள் மீது அப்படித்தான் நாறும் என்று எங்கள் வகுப்பில் படிக்கும் சேதுராமன் அடிக்கடி சொல்வான். ராஜேந்திரன் வீட்டில் மாட்டுக்கறி சமைப்பார்கள். அதுகுறித்து சேதுராமனும், மற்றவர்களும் ராஜேந்திரனை அடிக்கடி கிண்டல் செய்வார்கள். ஆனால் ராஜேந்திரன் அவர்களுடன் சண்டைக்கு போகமாட்டான். நான் ஆடு,கோழி, மீன் சாப்பிடும் எங்களை சேதுராமன் கிண்டல் செய்யமாட்டான். ஒருமுறை ராஜேந்திரனிடம் “நீங்க ஏன் மாட்டுக்கறி சாப்பிடுறீங்க?” என்று கேட்டேன். அது தனக்கும் வருத்தமாகத்தான் உள்ளது என்றும், எங்க வீட்டில் வேறு கறி எதுவும் எடுப்பதில்லை என்றும் சொன்னான். “ஆட்டுக்கறி சாப்பிட்டதே இல்லையா?” என்று வியப்புடன் கேட்டேன். “சாப்பிட்டிருக்கேன். தீபாவளி அன்னைக்கு மட்டும் எங்க வீட்டில் ஆட்டுக்கறி வாங்குவாங்க” என்று சொன்னான். அதன்பிறகு மாட்டுக்கறி குறித்து நாங்கள் அதிகம் எதுவும் பேசிக்கொள்வதில்லை. நான் ராஜேந்திரனிடம் பழகுவது சேதுராமனைபோலவே எனது அப்பாவுக்கும் பிடிக்காது. ஒருமுறை ராஜேந்திரனோடு சேர்ந்துக்கொண்டு கோனார் தோப்பில் மாங்காய் அடித்தேன். விஷயம் கேள்விப்பட்ட எனது அப்பா என்னை தெருவிலேயே நிற்க வைத்து செருப்பால் அடித்து அவமானப்படுத்தினார். அம்மாவும் வந்து என்னை அடிக்க ஆரம்பித்தபிறகுதான் அப்பா அடிப்பதை நிறுத்தினார். என்னை அடித்தபிறகு அம்மாவும் என்னோடு சேர்ந்து அழுதார். இனிமேல் நான் ராஜேந்திரனோடு சேரக்கூடாது என்று திட்டியபடியே என்னை வீட்டுக்குள் அழைத்து வந்தார்.

ராஜேந்திரன் சொல்லித்தான் எனக்கு விஷயம் தெரிந்தது. சித்தப்பா புதுசைக்கிள் வாங்கிவிட்டார் என்று. சித்தப்பா வீட்டு வாசலில் புதுசைக்கிள் நிற்பதாக தலையில் கைவைத்து சத்தியம் செய்தான். நான் மெதுவாக வீட்டின் பின்புறம் எட்டிபார்த்தேன். அம்மா கொல்லையில் பாத்திரங்கள் கழுவிக்கொண்டிருந்தார். சித்தப்பா வீட்டுக்கு போனால் எனது வீட்டில் அடிவிழும். அதுவும் ராஜேந்திரனுடன் சேர்ந்துப்போனால் கொன்றேவிடுவார்கள். ஏன் அப்பாவுக்கு எனது நண்பன் ராஜேந்திரனையும், சித்தப்பாவையும் பிடிக்கமாட்டேங்குது என்று வெகுநாள் வரை எனக்குள் கேட்டுக்கொண்டே இருந்தேன். அம்மா முதுகை காட்டியபடி கொல்லையில் உட்கார்ந்திருக்க விளையாட போறேம்மா என்று சொல்லிவிட்டு நானும், ராஜேந்திரனும் தெருவில் இறங்கி மறைந்தோம். நான்கைந்து தெருக்கள் தள்ளியிருந்த எனது சித்தப்பா வீட்டுக்கு ஆர்வத்தோடு ஓடினோம். சித்தப்பா ரயிலடியிலிருந்து மகாமக குளம் செல்லும் வழியிலிருந்த பவர்லைட் சோப் தயாரிக்கும் கம்பெனி பக்கத்தில் சொந்தமாக மருந்துக்கடை வைத்திருந்தார். சித்தப்பாவுக்கும்,சித்திக்கும் திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் இருக்கும். பிள்ளைகள் இல்லை. சித்தப்பா அழகன் என்றால் சித்தி பேரழகி.

சித்தப்பா வீட்டின் தெருவில் நுழையும்போது தூரத்திலிருந்தே சைக்கிளை பார்க்க முடிந்தது. திண்ணைக்கு சற்றுத்தள்ளி கம்பீரமாக நின்றிருந்தது அந்த சைக்கிள். குதிரைக்குட்டியின் உறுதியான எலும்புக்கூடுபோல அந்த இரும்பு வாகனம் நின்றிருந்தது. பச்சைநிறத்தில் இருந்த இருக்கையில் கைவைக்க கை பொதிந்துப்போனது. கைகள் கூச்சமாகவும்,உடல் சிலிர்ப்பாகவும் இருந்தது. அப்படியே அந்த பஞ்சுப்பொதியை கையால் அமுக்கிக்கொண்டே இருக்க வேண்டும்போல தோன்றியது. சைக்கிளின் முன்பாரில் பச்சை நிற லெதர் சுற்றப்பட்டிருந்தது. தோலுறையின் ஏழு இடங்களில் சின்ன பொத்தல் போட்டு சின்ன அலுமினியவளையங்கள் அடித்து அந்த இடத்தில பொன்னிற பட்டுக்குஞ்சத்தால் முடிபோடப்பட்டு கட்டப்பட்டிருந்தது. இரும்பு ரிம்களில் சூரிய வெளிச்சம் பட்டு கண்ணை கூச வைத்தன. ஹெட்லைட் மீது இருந்த மஞ்சள்நிற துணி மட்டும் பொருத்தமற்றதாக தெரிந்தது. அதையும் பச்சை நிறத்தில் வாங்கியிருக்கலாம் என்று தோன்றியது.

அப்படியே சைக்கிளின் மற்ற பகுதிகளை நோட்டம் விட்டேன். முன்பாரிலிருந்து முக்கோண வடிவில் சரிவாக இறங்கியிருந்த கம்பியில் யாரோ ஒரு மாவீரன் ஒரு காலை நிலத்தில் அழுத்தமாக ஊன்றி முழங்காலிட்டு அமர்ந்திருந்தான். அந்த மாவீரன் உடல் அவ்வளவு உறுதியாக அழகாக இருந்தது. அவன் சற்று தலையை தாழ்த்தியிருந்தான். அவனது தோள்பட்டையில் உலக உருண்டை இருந்தது. அப்படி ஒரு வசீகர படத்தை நான் அதற்கு முன்னால் பார்த்ததே இல்லை. நான் அந்த அட்லஸ் சைக்கிளை பார்த்து பிரமித்து நின்றிருக்க வீட்டுக்குள்ளிருந்து சித்தி கொலுசு சத்தம் ஒலிக்க வந்தார். எங்கள் பின்னால் சைக்கிள்பெல் சத்தம் கிணிங் கிணிங்கென்று ஒலித்தது. திரும்பி பார்த்தோம். தெருமுனையில் சைக்கிள்கடை வைத்திருப்பவர்தான்.

“என்ன ராசு? புது சைக்கிள் இறக்கிட்டே போல?” என்று சிரித்தபடியே எங்களை கடந்துப்போனார். திரும்பி பார்த்தால் இப்போது சித்தி பக்கத்தில் சித்தப்பாவும் நின்றிருந்தார்.

“ஏன் நாங்க எல்லாம் சைக்கிள் வாங்கக்கூடாதா?” என்று சித்தப்பா கேட்டார்.

“அட சைக்கிள் வாங்கினது சந்தோஷமுன்னு சொன்னேன்ப்பா” என்று சொல்லிவிட்டு அவர் சைக்கிளை மிதித்தபடி பக்கத்து சந்தில் மறைந்தார்.

சித்தி என்னையும், ராஜேந்திரனையும் உள்ளே கூப்பிட்டார்கள். ராஜேந்திரன் என்னோடு சேர்ந்து சித்தப்பா வீட்டுக்குள் நுழைய தயங்கினான்.

“சரிதான் கிடக்கு வாடா பெரிய மனுஷா” என்று சித்தி ராஜேந்திரனை கிண்டல் செய்தார். அவனுக்கு கூச்சமாக இருந்தது.

“என்னடா ஸ்கூல் போகலையா? ரெண்டு பேரும் இங்க சுத்திக்கிட்டு இருக்கீங்க?” சித்தப்பா கேட்டார்.

“இன்னைக்கு லீவ் சித்தப்பா”

சித்தி எங்களுக்கு மணக்க மணக்க காபி போட்டு கொடுத்தார்கள். காபி குடித்துவிட்டு திண்ணைக்கு வந்து அந்த புது சைக்கிளையே அதிசயமாக பார்த்தபடி நின்றோம். சித்தப்பா வீட்டிலிருந்து திரும்பிவரும்போது, “உங்க சித்தி ரொம்ப நல்லவங்கடா. சித்தப்பாதான் மோசம்” என்று ராஜேந்திரன் என்னிடம் சொன்னான். காரணம் எனது சித்தப்பா அவர் முன்பு எங்களை சைக்கிளை தொடக்கூட அனுமதிக்கவில்லை. அதட்டிக்கொண்டே இருந்தார். எங்களுக்கு வருத்தமாக இருந்தது. சைக்கிளில் பார்த்த அந்த மாவீரனின் உருவம் பற்றி ராஜேந்திரனிடம் கேட்டேன். அந்த வீரனின் பெயர் அட்லஸ் என்று ராஜேந்திரன் சொன்னான். நான் நம்பவில்லை. அட்லஸ் என்பது சைக்கிள் கம்பெனி. இவன் ஏதோ அடித்துவிடுகிறான். ஒருவேளை அந்த வீரனின் பெயர் அட்லஸ் என்றாலும் இவனுக்கு எப்படி அது தெரியும்?

“அட்லஸ் என்பது சைக்கிள் கம்பெனி பெயர். மனுஷனுக்கு எல்லாம் அப்படி பெயர் வைப்பாங்களா?” என்று கேட்டேன். அவன் முழித்துவிட்டு அப்படித்தான் எங்க பேட்டைல இருக்கற ஒரு அண்ணா சொன்னார். அவர் இங்க்லீஷ் எல்லாம் நல்லா பேசுவார் என்றும் சொன்னான். அதைப்பற்றி மேலும் பேச விவாதிக்க எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் அந்த தோளில் உலகை சுமக்கும் வசீகர உருவம் எனக்கு பிடித்திருந்தது. பெரியவன் ஆனால் அந்த அட்லஸ் உருவம் போலவே எனது உடலும் மாறும் என்று தீர்மானமாக நம்ப ஆரம்பித்தேன். இந்த அட்லஸ் பெண்ணாக பிறந்தால் எப்படி இருக்குமென்று யோசிப்பேன். கண்டிப்பாக அவள் இப்படி பலசாலியாக இருக்கமாட்டாள். ஆனால் பேரழகியாக இருப்பாள். சிவப்பாக, மேலுதட்டின் மேல் சின்ன மச்சத்தோடு, சாயம் பூசாத ஆனால் சிவந்த உதட்டுடன், காதில் சின்ன ரோஜாப்பூ வைரக்கல் பதித்த தோடுடன், தலையில் இருக்கும் மல்லிகைச்சரம் முன்புற தோளில் புரள நடந்துவருவாள். எனக்கு ஒருக்கணம் சித்தியின் முகம் நினைவுக்கு வந்தது.

சித்தப்பா வாங்கிய அந்த புதுசைக்கிளை பார்ப்பதற்காக நானும், ராஜேந்திரனும் ஏதாவது சாக்கு வைத்துக்கொண்டு தினமும் அவர் வீட்டுக்கு செல்ல ஆரம்பித்தோம். நாங்கள் செல்லும்போதெல்லாம் சித்தப்பா அந்த புதுசைக்கிளை துடைத்துக்கொண்டே இருப்பார். சின்ன தண்ணீர் பக்கெட்டில் துணியை போட்டு பிழிந்தெடுத்து நிதானமாக சைக்கிளின் ஒவ்வொரு அங்குலத்தையும் பார்த்து பார்த்து துடைப்பார். சைக்கிள் டயரில் கூட மண் இருப்பது அவருக்கு பிடிக்காது. மழையில் நனைந்த பனைமரத்தின் நிறத்தில் டயர் எப்போதும் கருப்பாகவே இருக்கும். ஒருவேளை இவர் சைக்கிளை தரையில் விடாமல் ஆகாயத்தில் விடுகிறாரோ என்றுகூட தோன்றும். வாங்கும்போது எப்படி இருந்ததோ அதேபோலவே ஒருவருடம் ஆகியும் சைக்கிள் புதிதாக இருந்தது. சித்தப்பா பக்கத்தில் ஒரு மரப்பெட்டி இருக்கும். அதில் கிரீஸ், எண்ணெய் கேன், சின்ன, சின்ன ஸ்பேனர்கள் உப்புத்தாள் எல்லாம் இருக்கும். சித்தப்பா கருப்பு உப்புத்தாள் வாங்க மாட்டார். அது கொஞ்சம் முரட்டுத்தனமாக இருக்கும். வெள்ளையும், மஞ்சளும் கலந்த நிறத்தில் ஒருவித மென்மையான உப்புத்தாளே எனக்கும் பிடிக்கும். அதைத்தான் அவரும் பெட்டியில் வைத்திருப்பார். புதுசைக்கிளுக்கு அந்த உப்புத்தாள் அநேகமாக தேவைப்படாது. அதை ஏன் வாங்கி வைத்திருக்கார் என்று நினைத்துக்கொள்வேன். சக்கரத்தில் இருக்கும் ஒவ்வொரு போக்ஸ் கம்பிகள் மீதும் மடக்கிய துணியை வைத்து ரம்பத்தால் மரத்துண்டை அறுப்பது போல தேய்த்து துடைப்பார். அதற்கே அரைமணி நேரம் ஆகும். சித்தப்பா கடைக்கு சென்று சைக்கிளுக்கு காற்று அடிக்க மாட்டார். காற்று அடிக்கும் பம்பு வாங்கி வைத்திருந்தார். விசுக்விசுக்கென அவர் காற்று அடிப்பதை பார்க்க சிரிப்பாக இருக்கும். எப்போது பார்த்தாலும் சைக்கிளை துடைத்துக்கொண்டே இருக்கும் சித்தப்பாவை பார்த்தால் ஒருவிதத்தில் எனக்கு சைக்கிள்கடை வைத்திருப்பவர் நினைவுக்கு வருவார். அவருக்கு அது தொழில். பலவிதமான சைக்கிள்களை கடையில் நிற்க வைத்திருக்கிறார். நாள் முழுவதும் சைக்கிளோடு புழங்குகிறார். இவருக்கு கூடவா சைக்கிள் பைத்தியம். அதுசரி சிறுவர்களாகிய எங்களுக்கே சைக்கிள் பைத்தியம் இருக்கும்போது பெரியவர்களுக்கு இருக்காதா?

பல வருடங்கள் முன்பு நடந்த அந்த சைக்கிள் பற்றிய நினைவுகளை எல்லாம் இப்போது அசைபோட காரணம் இருக்கிறது. இன்று காலையில் சென்னை கேகேநகரில் ஒரு சைக்கிள் விபத்தை பார்த்தேன். ஷேர்ஆட்டோ ஓட்டிகொண்டு வந்த யாரோ ஒருத்தன் சைக்கிள்காரனை இடித்து கீழே தள்ளிவிட்டான். நல்லவேளை சைக்கிள்காரனுக்கு பெரிய அடி எதுவும் இல்லை. ஆனால் சைக்கிள் முன்சக்கரம் நசுங்கி கிடந்தது. அந்த சைக்கிள் பார்க்க பொம்மை சைக்கிள் போல இருந்தது. ஐந்து வயது சிறுவன் கூட அநாயசமாக ஒருகையால் தூக்கிவிடுவான் என்று தோன்றியது. இப்போது வரும் எந்த சைக்கிளுமே பழைய அட்லஸ்போல பலம்வாய்ந்த சைக்கிள் இல்லையோ என்று தோன்றியது. அந்த பழைய அட்லஸ் சைக்கிள்தான் எவ்வளவு கம்பீரமானது? எவ்வளவு எடை மிக்கது? ஒருமுறை நானும், ராஜேந்திரனும் சைக்கிள்கடைக்காரனிடம் கெஞ்சி கூத்தாடி அட்லஸ் சைக்கிளை வாடகைக்கு எடுத்து வந்தோம். கடைக்காரன் லேசில் தரவில்லை. ராஜேந்திரனிடம் காசு இல்லை. அவன் வீட்டில் மூன்றுவேளை சமைப்பதே பெரிய விஷயம். நான்தான் தீனி வாங்கி தின்ன அம்மா கொடுத்த தினந்தோறும் கொடுக்கும் காசுகளை மிச்சம் பிடித்து வைத்திருந்தேன். அந்த காசை வைத்துக்கொண்டு வார இறுதியில் வாடகை சைக்கிள் எடுத்து ஓட்டுவோம். சின்ன பசங்க சைக்கிள் பழக என்று சின்ன சைக்கிள் ஒன்று இருக்கும். அதை பார்த்தாலே எனக்கு பிடிக்காத்து. அது ஏதோ சர்க்கஸில் வரும் பபூன் போல கோமாளியாக தெரியும். எனக்கு பெரிய சைக்கிள் ஓட்டத்தான் ஆசை. ஆனால் கால் எட்டாது. குரங்குப்பெடல் போட கேட்டால் கூட கடைக்காரர் தரமாட்டார். அதை எங்களிடம் கொடுத்தால் பெரும்பாலும் பெரியவர்களுக்கு வேறு வாடகை சைக்கிள் இருக்காது. தவிர பெரிய சைக்கிளை எடுத்துக்கொண்டு போகும் சிறுவர்கள் கற்றுக்கொள்ளும்போது சைக்கிளை கீழே போட்டு ஏதாவது சேதமடைந்தால் என்ன செய்வது? அதற்கு பயந்துதான் சிறுவர்களாகிய எங்களுக்கு எந்தக்கடையிலும் யாரும் பெரிய சைக்கிளை வாடகைக்கு தருவதேயில்லை.

ஆனால் அன்று ஏதோ பெரிய மனது வைத்து சைக்கிள்கடைக்காரர் எங்களுக்கு அட்லஸ் சைக்கிளை கொடுத்தார். நானும், ராஜேந்திரனும் அந்த சைக்கிளை ரயிலடி பின்னால் இருந்த குட்ஷெட்டுக்கு தள்ளிக்கொண்டுச் சென்றோம். அங்குதான் பகலில் கூட அவ்வளவாக ஆள் நடமாட்டம் இருக்காது. பெரும்பாலும் ரயில்வே போர்ட்டர்கள் அரிசி குடோன் முன்பு இருக்கும் ஆலமரத்தடியில் உட்கார்ந்து ஆடுபுலி ஆட்டம் ஆடிக்கொண்டிருப்பார்கள். இல்லாவிட்டால் நன்றாக குறட்டைவிட்டு தூங்கிக்கொண்டிருப்பார்கள். அவர்களை தவிர வேறு யாரும் அங்கு வரமாட்டார்கள். நாங்கள் இருவரும் அங்குதான் சைக்கிளில் குரங்குபெடல் போட கற்றுக்கொண்டோம். சின்ன சைக்கிளை நாங்கள் அருமையாக ஓட்டுவோம். ஏன் கைகளை ஹேண்டில்பாரிலிருந்து எடுத்து அகல விரித்தபடியே கூட ஓட்டுவோம். ஆனால் பெரிய சைக்கிளை முதலில் ஓட்டப்பழகிக்கொண்டது அன்றுதான். அன்றுதான் ராஜேந்திரன் என்னிடம் திட்டமொன்றை சொன்னான். முதலில் எனக்கு பயமாக இருந்தாலும் அதில் இருந்த சாகசம் என்னை கவர்ந்தது. ஒரு பெரிய பாறாங்கல் அருகே சைக்கிளை கொண்டுச்சென்றோம். நான் சைக்கிளை பிடித்துக்கொள்ள ராஜேந்திரன் பாறாங்கல் மேல் ஏறி சீட்டில் உட்கார்ந்தான். ராஜேந்திரன் என்னை விட உயரம். ஆனாலும் அவனது கால்கள் பெடலை எட்டவில்லை. உடம்பை வலதுபக்கம் லேசாக சாய்த்தும் எட்டவில்லை. அவனுக்கு பயம் வந்துவிட இறங்கி என்னிடம் சைக்கிளை கொடுத்தான். நான் சைக்கிள் மீது உட்கார்ந்தபிறகுதான் தெரிந்தது. பெடலுக்கும் எனது காலுக்கும் இடையே நான்கு அடியாவது இடைவெளி இருந்தது. டேய் டேய் என்று பயத்தில் கத்த அவன் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் சிரித்தபடியே என்னை சைக்கிளின் கேரியரில் கைவைத்து என்னை அப்படியே முன்னால் தள்ளிவிட்டான். நான் பயத்தில் கத்தியபடியே அவ்வளவு பெரிய சைக்கிளில் பயணம் செய்யும் எலிக்குஞ்சுபோல முன்னால் சென்றுக் கொண்டிருந்தேன். முன்னால் வேறு பெரிய மண்சரிவு. சரிவில் வண்டி உச்சக்கட்ட வேகத்தில் இறங்கியது. எப்படி சைக்கிளை நிறுத்துவது? பிரேக் போட்டாலும் தரையில் காலை ஊன்ற முடியாது. தடுமாறிக்கொண்டிருக்க சைக்கிள் அப்படியே வலதுப்பக்கம் விழுந்தது. நான் தரையில் ரத்த சிராய்ப்புகளுடன் கிடக்க எனது தொடையின் மேல் அந்த கனத்த சைக்கிள் கிடந்தது. அப்போதுதான் அட்லஸ் சைக்கிளின் பலம் புரிந்தது. முரட்டு இரும்பை ஆலையில் உருக்கி வார்ப்புகளில் ஊற்றி தயார் செய்யப்பட்ட எல்லா அட்லஸ் சைக்கிள்களும் அப்போது ஒரே நிறத்தில்தான் இருந்தன. ஒரு துளிக்கூட பிளாஸ்டிக் இல்லை. இப்போதெல்லாம் கலர்கலராக நிறைய பிளாஸ்டிக் சைக்கிள்கள் வந்துவிட்டன.

அது போன்ற ஒரு பிளாஸ்டிக் சைக்கிளை ஓட்டி வந்த ஆளைத்தான் கேகே நகரில் பார்த்தேன். ஷேர் ஆட்டோ மோதியதில் ஜிம்னாஸ்டிக் செய்யும் பெண்களின் பாவனைபோல விநோதமான தோரணையில் உடம்பை வளைத்து கிடந்தது. அன்று அந்த அட்லஸ் வாடகை சைக்கிள் அவ்வளவு பெரிய மண்சரிவிலிருந்து கீழே விழுந்தும் ஹெட்லைட் மட்டும் உடைந்துப்போனது. அந்த வாடகை சைக்கிள் கடைக்காரன் எனது அப்பாவிடம் சொல்ல அன்று எனக்கு வீட்டில் பிரம்படி விழுந்தது. மறுநாள் எனக்கு காய்ச்சல் வந்தது. ஒரு வாரம் பள்ளிக்கூடம் செல்லவில்லை. எனது படுக்கையருகே அமைதியாக நடந்து வந்த அப்பாவை பார்த்து “எங்களை ஒரேடியா கொன்னுடுங்க” என்று அம்மா சீறிக்கொண்டு வந்தார். அப்பா சட்டையை எடுத்து அணிந்து மவுனமாக வீட்டை விட்டு வெளியே சென்றதையும் படுக்கையில் படுத்தபடியே பார்த்துக்கொண்டிருந்தேன். அதற்கு பிறகு அட்லஸ் சைக்கிளை பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஏக்கமாக இருக்கும். அந்த ஏக்கம் எப்படி மறைந்தது என்று நினைத்துப்பார்த்தால் சரியாக சொல்ல தெரியவில்லை.

இப்போது என்னிடம் போர்டு கார் இருக்கிறது. அட்லஸை விட பலமடங்கு கனத்த உருவம் கொண்ட அசுரன். சைக்கிள் மேலே விழுந்தால் கூட உயிருக்கு ஒன்றும் நேராது. ஆனால் கார் விழுந்தால்? சைக்கிளை விட கார்தானே வலிமையானது? ஒருநாள் ஈசிஆரில் இருக்கும் மாயாஜாலுக்கு படம் பார்க்க மனைவியோடு காரில் சென்றிருந்தேன். ஓர் இளைஞன் பல்சரில் நூறு கிலோமீட்டர் வேகத்தில் வந்து திரையரங்கு வாசலில் சடன்பிரேக் அடித்தான். பல்சரின் முன்சக்கரம் தாழ்ந்து பின்னிருக்கை சற்று உயர்ந்து நின்றது. பல்சரின் பின்னால் உட்கார்ந்திருந்த ஜீன்ஸ் அணிந்த அழகான இளம்பெண்ணொருத்தி வாவ் என்று அதீத திகைப்புடன் அவனை இறுக்கி கட்டிக்கொண்டாள். எனது மனைவி என்னிடம் “நீங்க ஏன் இருசக்கர வாகனம் வாங்கக்கூடாது?” என்று கேட்டாள். பெண்களுக்கு காரைவிட இருசக்கர வாகனம்தான் பிடிக்கிறது என்று எனக்கு அன்றுதான் தெரிந்தது. அன்றிலிருந்து கார் மீதான எனது பார்வை மாறிப்போனது. நான் பத்தாவது படிக்கும்வரை எனக்கு கிளர்ச்சியூட்டும் கனவொன்று அடிக்கடி வரும். ஏதாவது ஒரு பெண்ணை சைக்கிளின் முன்பக்கம் இருக்கும் முன்பாரில் உட்கார வைத்து நான் ஊருக்கு வெளியே தனியாக காடு,மலை என்று சைக்கிள் ஓட்டிச்செல்வது போல. அப்படி சைக்கிள் ஓட்டிச்செல்லும்போது அந்த பெண்ணின் உடலோடு எனது தொடைகள் உரசும்போது பெரும்பாலும் கனவிலிருந்து விழித்துக்கொள்வேன். உடம்பு வியர்த்து தொண்டை வறட்சியாக உணர்வேன். எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தகிக்கும் அந்த வேட்கை அடங்காமல் தூக்கமும் வராமல் அவஸ்தையாக இருக்கும். இப்போது சைக்கிள் பற்றிய எந்த நினைவுகளும் என்னை வருத்தம் கொள்ள செய்வதில்லை. எப்போதாவது அபூர்வமாகவே கனவுகள் வரும். அதில் சைக்கிள் வராது. மனிதனுக்கு ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு பொருள் மீது காதல். ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு கனவுகள். வெளியில் சொல்லமுடியாத எத்தனையோ ஏக்கங்கள்.

சென்னையில் சைக்கிள் ஓட்டிச்சென்றால் சிரிப்பார்கள். சென்னையில் பெரும்பாலும் சேரிமக்களே சைக்கிள் ஓட்டுகிறார்கள் என்பது எனது கண்டுபிடிப்பு. நான் அமெரிக்காவுக்கும்,ஜெர்மனிக்கும் அலுவலக வேலை நிமித்தம் சென்றிருக்கிறேன். அங்கு எனது பிராஜக்ட் மேனேஜர்கள் சிலர் ஒருசில நாட்களில் சைக்கிளில் அலுவலகம் வந்துச்செல்வதை பார்க்க வியப்பாக இருக்கும். அமெரிக்கர்களுக்கு பிறகு சென்னையில் இருக்கும் விளம்புநிலை மனிதர்கள்தான் வெட்கப்படாமல் சைக்கிள் ஓட்டுகிறார்கள் என்பது எனது கண்டுபிடிப்பு. பொருளாதாரத்தில் முன்னேறிய மக்களுக்கும் சைக்கிள் பிடித்திருக்கிறது. ஏழைகளுக்கும் சைக்கிளே உற்றத்தோழன். ஏன் சென்னையில் இருக்கும் நடுத்தரமக்கள் பலருக்கும் சைக்கிள் வாங்கி ஓட்ட வெட்கமாக உள்ளது என்று யோசித்ததுண்டு. கேகேநகரில் இன்று காலை ஒரு சைக்கிள் விபத்தை பார்த்தேன் என்று சொன்னேன் அல்லவா? அந்த பொம்மை சைக்கிளை போன்றே மேலும் சில பொம்மை சைக்கிள்களை எனது வீட்டருகே பள்ளிச்சிறுமிகள் ஓட்டி கவனித்துள்ளேன். அந்த சைக்கிள்களில் பிஎஸ்ஏ என்று பொறிக்கப்பட்டிருப்பதை பார்த்து திகைப்பாக இருந்தது. ஒருவேளை இப்போது உறுதியான முரட்டு இரும்பை விட கவர்ச்சியான வண்ண சைக்கிளைத்தான் மக்கள் விரும்புகிறார்களோ?

அட்லஸ் சைக்கிள் பற்றி நினைக்கும்போதெல்லாம் எனக்கு ஹெர்குலிஸ் என்ற இன்னொரு சைக்கிள் நினைவுக்கு வரும். இதுபற்றி அப்போது எங்களுக்குள் பெருந்த சண்டையே நடக்கும். அட்லஸ் சைக்கிளில் இருக்கும் மாவீரனின் லோகோவை சிலர் ஹெர்குலிஸ் என்று தவறாக நினைத்ததுண்டு. சேதுராமனின் அப்பா ஒரு சைக்கிள் வாங்கியிருந்தார். அந்த சைக்கிளின் பெயர் ஹெர்குலிஸ். எனக்கும்,ராஜேந்திரனுக்கும் ஏனோ ஹெர்குலிஸ் சைக்கிளை பிடிக்காது. ஆனால் சேதுராமன் எங்களை கிண்டல் செய்துக்கொண்டே இருப்பான். ஹெர்குலிஸ்தான் மாவீரன், அட்லஸ் வீரன் இல்லை என்று சொல்வான். எங்களுக்கு வரலாறு பாடம் எடுத்த சொக்கலிங்கம் சார்தான் அந்தக்கதையை எங்களுக்கு சொன்னார். அந்தக்கதையை கேட்டபிறகும் சேதுராமன் எங்களிடம் ஹெர்குலிஸ்தான் மாவீரன் என்றே தொடர்ந்து வாதிட்டான்.

முன்னொரு காலத்தில் இந்த உலகத்தில் பிரம்மாண்டமான, வலிமையான உடலை கொண்ட ஒரு மனித இனம் இருந்தது. அந்த இனத்திற்கு ‘டைடன்ஸ்’ என்று பெயர். அதில் இனத்தில் ஒருவன்தான் அட்லஸ்.

ஒருமுறை டைடன்ஸுகளுக்கும், கிரேக்க கடவுள்களுக்கும் பெரிய யுத்தம் ஆரம்பித்தது. அதில் டைடன்கள் அனைவரும் தோற்றுப்போய் கடவுளர்களால் தண்டிக்கப்பட்டனர். அவ்வளவு பெரிய தண்டனையை அட்லஸ் என்ற மாவீரன் தனது இனத்துக்காக ஏற்க தானாகவே முன்வந்தான். தனது தோளில் பூமியை தூக்கி சுமக்க வேண்டும் என்பதுதான் அட்லஸுக்குக் கிடைத்த தண்டனை. அட்லஸ் அந்த தண்டனையை ஏற்று பல பல யுகங்கள் தனது தோளில் பூமியை சுமந்துகொண்டு நின்றிருந்தான்.

ஒருநாள் இன்னொரு கிரேக்க மாவீரன் ‘ஹெர்குலிஸ்’ அட்லஸை சந்திக்க வந்தான். ஹெர்குலிஸ் கிடைத்தற்கரிய தங்க ஆப்பிள்களை தேடி அலைந்துக்கொண்டிருந்தான். ஆனால் அந்த ஆப்பிள்கள் இருக்குமிடத்தை அட்லஸ் மட்டுமே அறிவார். அதனால் அட்லஸ் ஹெர்குலிஸிடம் தான் சென்று அந்த ஆப்பிள்களை கொண்டு வருவதாகவும் அதுவரை பூமியை சுமக்கும்படியும் கேட்டுக் கொண்டார். அட்லஸைப் போலவே ஹெர்குலிஸும் பெரிய கனத்த உருவத்துடனும்,மாவீரனாகவும் இருந்ததால் பூமியை சுமக்க ஒப்புக்கொண்டான்.

பல யுகங்கள் கழித்து அட்லஸ் தங்க ஆப்பிள்களுடன் திரும்பி வந்தபோது, ஹெர்குலிஸ் பூமியை தூக்கமுடியாமல் வியர்த்து தடுமாறிக்கொண்டு இருந்தான். அப்போதுதான் அட்லஸுக்கு பூமியைத் தூக்கி சுமப்பது எத்தனை கடினமான காரியம் என்று புரிந்தது.

எதாவது தந்திரம் செய்து ஹெர்குலிஸையே பூமியை சுமக்கும்படி செய்துவிட்டுத் தான் சுதந்திர மனிதனாக இருக்கலாம் என்று அட்லஸ் நினைத்தான். ஆனால் அட்லஸ் மனதில் நினைத்தது ஹெர்குலிஸுக்குத் தெரிந்துவிடுகிறது. அட்லஸிடம் சற்று நேரம் மட்டும் இந்த பூமியை பிடித்துக்கொள். எனது ஒரு தோளில் இருந்து இன்னொரு தோளுக்கு மாற்றி வைத்துக்கொள்கிறேன். உதவி செய் என்று சொல்ல . அட்லஸ் அதை நம்பி ஹெர்குலிசிடம் இருந்து பூமியை வாங்குகிறான். பூமியை கொடுத்தும் ஹெர்குலிஸ் அங்கிருந்து ஓடிவிடுகிறான்.

திகைத்துப்போன அட்லஸ் வேறுவழியில்லாமல் யுகயுகமாக தனது பாரத்தை சுமந்தபடியே மலையாக சமைந்துவிடுகிறான். வடமேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள மலைகள் ‘அட்லஸ் தி டைடன்’ என்றே அழைக்கப்படுகின்றன. அம்மலைகள் இன்றும் சொர்க்கத்தை தூக்கிப் பிடித்திருப்பதாக நம்பப்படுகிறது.

சொக்கலிங்கம் சார் எங்களிடம் சொன்ன கதை இதுதான். பல வருடங்கள் சென்றபிறகும் இன்றும் அந்த கிரேக்க கதை அதே காவியச்சுவையுடன் என்னை வசீகரிக்க வைக்கிறது. சில நாட்கள் சென்றபிறகு சேதுராமனின் தாத்தா அவனிடம் ஒரு கதை சொன்னதாக எங்களிடம் சொன்னான். அந்த புராணக்கதையில் ஒரு கடவுள் பன்றி அவதாரம் எடுத்து உலகத்தை தாங்கி பிடித்ததாக சொன்னான். பன்றி எப்படி உலகத்தை தூக்கமுடியும் என்று எதிர்கேள்வி கேட்டோம். அவனுக்கு சரியாக பதில் சொல்ல தெரியவில்லை.

எனது வாழ்க்கையில் மறக்கமுடியாத நாளென்று ஒன்றை சொல்ல வேண்டும். அது நான் எனது சித்தப்பாவின் அட்லஸ் சைக்கிளை எடுத்து ஓட்ட ஆரம்பித்த தினம். நன்றாக நினைவுள்ளது. அன்று அப்பா ஊரில் இல்லை. வேலைக்குச் சென்றிருந்தார். வேலைக்கு கிளம்பிச்செல்வதற்கு முன்பு “தம்பியாடி அவன். குடும்ப மானத்தையே வாங்கிட்டான்” என்று சொல்லிவிட்டு அம்மாவின் முடியை இழுத்துப்போட்டு அடித்தார். எதற்கு அம்மாவை அடிக்கிறார் என்று தெரியாமல் நான் நடுக்கத்துடன் சுவர்பல்லி போல கட்டிலின் மூலையில் தொடைநடுங்க ஒளிந்துக்கொண்டேன். எனது டவுசரில் இரண்டொரு சொட்டு சிறுநீர் கூட கழித்துவிட்டேன். அப்பா கோபத்துடன் கிளம்பி வேலைக்கு கிளம்பிவிட்டார். அன்று அப்பா கையில் டிபன்பாக்ஸ் இல்லை. வாசல்வரை சென்ற அப்பா “மானங்கெட்டவன். அவன் வீட்டுப்பக்கம் போனா உன்னை வெட்டி போட்டுடுவேன். எனக்கே தம்பி இல்லைன்னு ஆச்சு. உனக்கு என்னடி பாசம். பத்துமாசம் சுமந்து பெத்தவ மாதிரி” என்று ஊருக்கே கேட்கும்படி கத்திவிட்டு ரபப்ர் செருப்பை காலில் மாட்டிக்கொண்டு விடுவிடுவென தெருவில் இறங்கி நடந்துப்போனார்.

அவர் சென்றபிறகு நான் கட்டில் மூலையிலிருந்து வெளியே வந்தேன். எனது உடம்பு நடுங்கிக்கொண்டிருந்தது. அம்மா என்னை பார்த்து கைகளை நீட்டினார். நான் கோழிக்குஞ்சு போல குடுகுடுவென ஓடிச்சென்று அம்மாவின் கைகளுக்குள் எனது சின்ன உடலை புதைத்துக்கொண்டேன். அம்மாவின் இளஞ்சூடு எனக்கு ஆசுவாசமாக இருந்தது. வெகுநேரம் வரை விசும்பிக்கொண்டிருந்த அம்மா ஏதோ தீர்மானமாக எழுந்து முகம் கழுவி என்னை அழைத்துக்கொண்டு சித்தப்பா வீட்டுக்கு கிளம்பிச்சென்றார். சித்தப்பா வீட்டுக்குள் சோகமாக உட்கார்ந்திருந்தார். வீட்டு திண்ணையில் ஆண்களில் சிலர் ஏதேதோ பேசிக்கொண்டும், கத்திக்கொண்டும் உட்கார்ந்திருந்தார்கள். சிலர் அமைதியாக இருந்தார்கள். அவர்களில் பலர் எங்கள் தூரத்து உறவினர்கள். அக்கம்பக்க வீட்டிலிருந்த பெண்கள் ரகசியமாக ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்து ஏதோ அவர்களுக்குள் கிசுகிசுத்துக்கொண்டிருந்தார்கள். திண்ணையில் உட்கார்ந்திருந்த ஆண்களை பார்த்த சில பெண்கள் அவசரமாக ஜன்னலை மூடிக்கொண்டார்கள். அம்மா வேகமாக சித்தப்பாவின் வீட்டுக்குள் நுழைந்தார். நேராக சமையல்கட்டுக்கு சென்று வயர்கூடையை எடுத்த அம்மா தெருவில் இறங்கி நடந்தார். தெரு முனையில் பெட்டிக்கடை இருந்தது. பால்பாக்கெட்டுடன் திரும்பி வந்த அம்மா வீட்டுக்குள் நுழைந்து காபி போட்டு மணக்க மணக்க எடுத்து வந்தார். சித்தப்பா குடிக்கவில்லை. திண்ணையில் அமர்ந்திருந்த ஆண்கள் அனைவரும் வீட்டுக்குள் வந்து சித்தப்பாவை வற்புறுத்தி குடிக்க வைத்தார்கள். சித்தப்பா அழுதபடியே காபியை குடித்தார். வந்திருந்தவர்கள் எல்லாரும் மெல்ல மெல்ல கலைந்துப்போனார்கள்.

நான் சித்தப்பாவின் வீட்டுக்குள் போகாமல் தெருவில் திண்ணையை ஒட்டி நின்றுக்கொண்டிருந்த சைக்கிள் பக்கத்திலேயே நின்றுக்கொண்டிருந்தேன். அந்த அட்லஸ் உருவத்தின் மீதான காதல் எனது மனதில் நாள்தோறும் வளர்ந்துக்கொண்டே சென்றது. அட்லஸ் சாதாரண ஆள் இல்லை. புலிவாலை கையால பிடிச்சு அந்தரத்துல சுழற்றி தரையில அடிப்பான். மலையை பெயர்த்து கடலுக்குள்ள வீசுவான் என்று ராஜேந்திரன் சொன்னதே மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. இருக்காதா பின்ன. உலகத்தையே தோளில வச்சு தூக்கிட்டானே என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது சித்தப்பா உள்ளிருந்து வந்தார். அவர் முகம் வீங்கி கண்கள் கருத்துப்போய் கிடந்தன. அவர் கையில் சைக்கிளின் சாவி இருந்தது. என்னால் நம்பவே முடியவில்லை. சித்தப்பாதானா? காற்றில் மிதப்பதுபோல உணர்ந்தேன்.

சந்தோஷத்துடன் சாவியை வாங்கிக்கொண்டு குரங்குப்பெடல் போட்டுக்கொண்டே பக்கத்துக்கு தெருவுக்கு வந்தேன். ராஜேந்திரன் கண்கள் அகலவிரித்தபடியே ஆச்சர்யத்துடன் என்னை நோக்கி ஓடிவந்தான்.

“டேய்…எப்படிடா உங்க சித்தப்பா சைக்கிளை கொடுத்தார்?”

“அதாண்டா எனக்கும் தெரியல. ஒரே சந்தோஷமா இருக்கு”

சைக்கிள் ஹெட்லைட்டில் புதுமஞ்சள் துணி சுற்றியிருந்தது. இரண்டு வீல்களிலும் நடுவில் தூசிபடியாமல் இருக்க மாட்டிவிட்டிருந்த கலர்ப்பூ பார்க்க கவர்ச்சியாக இருந்தது. ராஜேந்திரன் முன்வீலில் இருந்த கலர்ப்பூவை தொட்டு பார்த்துவிட்டு பறவை றெக்கை மாதிரி கலர் கலரா இருக்குடா என்றான். நாங்கள் நின்று பேசிக்கொண்டிருந்த தெருவில் எங்கள் பக்கவாட்டில் இருந்த சைக்கிள் கடை பூட்டிக்கிடந்தது.

“சைக்கிள கொடுத்ததுக்கு உங்க சித்தப்பா ஒண்ணும் சொல்லலையாடா?”

ராஜேந்திரன் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று நான் அன்று பெரிதாக யோசிக்கவோ, கவலைப்படவோ இல்லை. என் கண்கள் எல்லாம் சைக்கிளின் மீதே பதிந்திருந்தன. நான் இருட்டும்போதுதான் சித்தப்பா வீட்டுக்கு சென்றேன். சித்தப்பா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். சைக்கிளின் சாவியை சித்தப்பாவிடம் கொடுத்தேன்.

“நீயே வச்சுக்கடா. வீட்டுக்கு எடுத்துட்டுப்போ’ என்றார். எனக்கு திகைப்பாக இருந்தது. நம்பமுடியாமல் அவர் என்னிடம் கொடுத்த சாவியை வாங்கிக்கொண்டு வாசலுக்கு வந்தேன். ஹாலில் மாட்டியிருந்த சித்தப்பா திருமணப்போட்டோவை காணவில்லை. அடுத்தடுத்த நாட்களில் நானும், ராஜேந்திரனும் பூட்டிக்கிடந்த சைக்கிள்கடை பின்னாலிருந்த காலித்திடலில் உற்சாகமாக கத்தியபடியே சைக்கிளை மாற்றி மாற்றி கொண்டாட்டத்துடன் கால்வலிக்கும்வரை ஓட்டினோம்.


Friday, October 17, 2014

கால்களின் கீழே சுழலும் உலகம்

இம்மாத புதிய புத்தகம் பேசுது இதழில் ஆர். அபிலாஷின் கால்கள் நாவல் குறித்து நான் எழுதியிருந்த நூல் அறிமுகம்.

தமிழ் இலக்கியப்பரப்பில் இதுவரை மாற் றுத்திறனாளிகள் உலகையும்,அவர்கள் இருப்பையும், இருப்பிற்கான தத்தளிப்பையும், அவர்களின் உடல் வலியையும்,வலி சார்ந்த தகவல்களையும் இவ்வளவு நுட்பமாகப் பதிவு செய்த நாவல்கள் எதுவும் வந்துள்ளதா என்று தெரியவில்லை. அந்தவகையில் தமிழின் குறிப்பிடத்தக்க நாவலாக அபிலாஷின் கால்கள் நாவலைச் சொல்லலாம்.

தனது இளம்பிராயத்தில் போலியோ அட்டாக் வந்து கால்கள் பாதிக்கப்பட்ட மதுக்‌ஷரா என்ற மதுவின் அகவுலகமும் அவள் புறவுலகில் சந்திக்கும் வேறுபட்ட குணங்கள் கொண்ட எண்ணற்ற மனிதர்களும், அவர்களுக்குள் நடக்கும் இடையறாத உரையாடல்களுமே நாவலின் மையப்புள்ளி. அழகென்றும் சொல்லமுடியாத அழகி இல்லையென்றும் சொல்லமுடியாத சராசரித் தோற்றமுடைய மதுவின் அகஉலகத்தை இரண்டு அடுக்காகப் பிரித்துக்கொள்ளலாம்.

மது தனது வீட்டில் அவளுக்காக ஒதுக்கப்பட்ட தனியறையில் அமர்ந்து தனது உடலின் ஒருபகுதியாக இருக்கும் காலிப்பரையும் அது ஏற்படுத்தும் வலியையும் தொடர்ந்து கவனித்தபடியே இருக்கிறாள். ஒவ்வொரு முறை காலிப்பரைப் பொருத்தும்போதும், தனியாக கழிவறைக்குச் சென்று திரும்பும்போதும், சக்கர நாற்காலியில் உட்காரும்போதும், மாடிப்படிகளில் ஏறி இறங்கும்போதும், வெளியிடங்களுக்குச் சென்று திரும்புகிறபோதும் மது அடையும் பெருவலியை அவளது அந்தரங்க மனம் கவனித்து வலியுடன் தொடர்ந்து அவள் உரையாடுவது போன்ற தருணங்கள். பிறகு அவள் வளர்ந்து பெரியவள் ஆனதும் அவளது உடம்பு அடையும் மாறுதல்களையும், அது தரும் வேறுவிதமான வலியையும், இனம்புரியாத அவஸ்தையையும் தொடர்ந்து கவனிப்பது என்று இந்நாவல் முழுக்க வலி சார்ந்த நுட்பமான தகவல்கள் மதுவின் அகவுலகத்தில் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன.
இரண்டாவது மதுவின் புறஉலகம். மதுவின் புறஉலகத்தை இரண்டு அடுக்காகப் பிரித்துக் கொள்ளலாம். முதல் அடுக்கில் மதுவின் அப்பா,அம்மா, கார்த்திக், பேராசிரியர் மதுசூதனன் அவரது மகன் பாலு போன்ற மைய துணைப்பாத்திரங்கள். இரண்டாவது அடுக்கில் அந்த மைய துணைப்பாத்திரங்களோடு தொடர்புடைய எண்ணற்ற மனிதர்கள். வேறுபட்ட குணாதிசயங்களுடன் உலவும் இந்த மனிதர்களின் இடையே நடக்கும் உரையாடல்கள், உரையாடல்கள் வழியே விரியும் அரசியல், தத்துவம், வரலாறே இந்நாவலுக்கான விரிவையும், ஆழத்தையும் கொடுக்கிறது.

எதிலும் ஆர்வமற்ற மது ஒரு சுவர்ப்பல்லி போலத் தொடர்ந்து தனது உடலையும், சுற்றியுள்ள மனிதர்களையும், அவர்களது பேச்சுகளையுமே விளையாட்டுப் போல கவனித்துக் கொண்டிருக்கிறாள். ஒருகட்டத்தில் அவளுக்கு அதுவே வாழ்க்கையாகவும் மாறிவிடுகிறது. வளர்ந்ததும் ஆங்கில இலக்கியம் படிக்கச் செல்கிறாள். அங்கும் அதுவே தொடர்கிறது. புத்தகங்களும், மனிதர்களும் அவளுக்கென்று ஒரு தனித்த சிந்தனையை, தர்க்கத்தை ஏற்படுத்துகிறார்கள். அவளிடம் இருப்பது முன்கூட்டிய பிடிவாதமான சிந்தனைகள் என்று சொல்லமுடியாது. ஆனால் யாராவது அவளது சுயத்தைக் காயப்படுத்தினால் அவளால் அவ்வளவு எளிதில் அதை உதறிப்போக முடியாமல் வாதங்களால் அதைச்சாடுகிறாள். அதனாலேயே பிடிவாதக்காரி என்றும் முரட்டுப்பெண் என்றும் சிலரால் நினைக்கப்படுகிறாள்.
மதுவின் அப்பாவுக்கும் மதுவுக்குமான உறவு நுட்பமாக நாவலில் பதிவாகியுள்ளது போன்று மதுவுக்கும், அவளது அம்மாவுக்குமான உறவு அவ்வளவு விரிவாக இல்லையோ என்று தோன்றுகின்றது. மதுவை சிறுவயதிலிருந்து வைத்தியசாலைக்குத் தூக்கிச்செல்வதும், கால்களுக்கு எண்ணெய் தடவிவிடுவதுமாக அற்புதமான தந்தையாக இருக்கும் அவரேதான் பல நேரங்களில் மது மீது எரிந்து விழுந்து அவளை வெறுக்கிறார். சுடிதார் வாங்கித் தரச் சொல்லிக் கேட்கும் நேரத்தில் கடுமையாகத் திட்டும் அவரேதான் பின்னாட்களில் மதுவுக்கு வாய்பேசாத வரன் அமையும்போது காலம் முழுக்க என் பெண்ணை நானே தூக்கிச் சுமக்கிறேன். ஆனால் ஓர் ஊமைக்கு கட்டிக்கொடுக்க மாட்டேன் என்று தீர்மானமாகச் சொல்கிறார். மதுவுக்கு அவளது தாயிடம் பெரிதாக எந்த ஆர்வமும் இல்லை. ஒருசில நேரங்களில் கழிவறை செல்லும்போது மதுவின் அம்மா உதவி செய்கிறாள். சில நேரங்களில் மது அவளது அம்மாவுக்கு சமையலில் உதவி செய்கிறாள். எஞ்சிய நேரங்கள் எல்லாம் மதுவின் வீடு முழுக்க அவளது அப்பாதான் நிறைந்து விடுகிறார். தூக்கத்தில் ஆடை கலைந்த அப்பாவின் ஆண்குறி அவளது கனவில் வருகிறது. அப்பாவின் மீதுள்ள ஈர்ப்பு போல கார்த்திக் மீது மதுவுக்குப் பெரிதாக எந்த சுவாரசியமும் இல்லையோ என்றுதான் தோன்றுகிறது.

சில குறைவான பக்கங்களே வரும் துணைக் கதாபாத்திரங்கள் எல்லாம் அவ்வளவு கவனமாகவும், நுட்பமாகவும் செதுக்கப்பட்டுள்ளன. அந்த துணைக் கதாபாத்திரங்கள் இல்லாமல் போனால் இந்நாவலுக்கு கிடைத்திருக்கும் அபாரமான விரிவும், சுவாரசியமும் கிடைக்காமல் வெறுமனே ஏதோ ஒரு பெண்ணின் கழிவிரக்கத்தைச் சொல்லும் நாவலாகத் தடம்மாறிப் போயிருக்கலாம். மதுவின் வாழ்க்கையில் அவ்வப்போது இதுபோன்ற எண்ணற்ற மனிதர்கள் நீர்க்கோலம் போன்று வந்து மறைந்துபோகிறார்கள். மதுவின் இளம் வயதில் வரும் மத்தாயி என்ற செயற்கைக்கால் பழுது பார்க்கும் கடை நடத்துபவர் மற்றவர்களால் அவருக்கும் அவரது சித்திக்கும் இருப்பதாக நம்பப்படும் உறவு, பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் பிளேடு என்ற பட்டப்பெயர் கொண்ட மனிதர் அவரது குடும்பம், பெண்களோடு பேசும்போது அவர்களின் மார்பை மட்டுமே கவனிக்கும் ஹரிஹர ஐயர் என்ற மனிதர், ஆட்டோ ஓட்டும் கணேஷ், உலகத்துக்கு கீழ் இருக்கும் அனைத்திற்கும் கருத்து எழுதும் மார்க்கண்டேயன் என்ற எழுத்தாளர். அவர் எழுதும் சி++ என்ற புத்தகம்,டாக்டர் ஆபிரகாம் போன்று நாவல் முழுக்க வரும் உதிரிமனிதர்களால் நாவல் பிரமாண்டமாக விரிகிறது. மது இறுதிவரை அதே ஊரில் இருந்தாலும் பல துணைக்கதாபாத்திரங்கள் நாவலில் தொடர்ந்து பயணிக்காமல் ஆங்காங்கே மறைந்து விடுகிறார்கள். ஆனால் இதை நாவலின் ஒரு பிரச்சனையாகவும் பார்க்க முடியாது. வாழ்க்கையில் ஒரு மனிதன் சந்திக்கும் நிறைய மனிதர்களில் யாரோ ஒரு சிலர் மட்டும் அவனது இறுதிவரை பயணம் செய்து வருகிறார்கள்.

மாற்றுத்திறனாளிகளின் உலகத்தைப் புரிந்துகொள்வது பெரிய விஷயமில்லை. உடல் வலி அவர்களுக்கு ஒரு பிரச்சனையில்லை. உதாசீனமும், கேலியும், கிண்டலும், அல்லது அளவுக்கதிகமான கரிசனமும் (பாசாங்கற்றதாகவே இருந்தாலும்), ஒப்பீடு செய்வதுமே அவர்களைக் காயப்படுத்துகின்றன. அதுவே அவர்களை சராசரி மனிதர்களிடமிருந்து விலக்கிவைப்பதாகவும் உணர்கின்றார்கள்.

நாவலின் ஒரு அத்தியாயத்தில் மதுவின் அப்பா அவரது அலுவலக நண்பரின் வீட்டுக்கு மதுவை அழைத்துச்செல்வார். அலுவலக நண்பரின் வீட்டில் இருக்கும் பவித்ரா என்ற மதுவின் வயதையொத்த பெண்ணுக்கும் கால்கள் செயலிழந்த நிலையில் இருக்கும். ஆனால் அவள் அதீத தன்னம்பிக்கையுடன் இருப்பாள். கணிப்பொறி கற்றுக்கொண்டிருப்பாள். வண்டி ஓட்டுவாள். பெரிய வேலையில் இருப்பாள். சந்தோஷமாகவும், வசதிகளுடன் கூடிய ஒருவித நடுத்தர மேல்தட்டு வர்க்கம் போல சித்தரிக்கப்பட்டிருக்கும் அந்தப்பெண் அதீத நம்பிக்கையுடனும், மகிழ்வுடனும் வாழ்க்கையை எதிர்கொள்வாள். மதுவின் அப்பா அந்தப்பெண் போல ஏன் உன்னால் தன்னம்பிக்கையாக வாழ்வை எதிர்கொள்ள முடியவில்லை என்று கேட்டு மதுவைத் திட்டுவார். மதுவுக்கு குழப்பமாக இருக்கும். அவளது உடல் குறைபாட்டின் அளவு வேறு. எனது குறைபாடு வேறு. நான் ஏன் அவள் போல இருக்க வேண்டும்? என்று கேட்பாள்.
மதுவுக்கு வைத்தியம் செய்ய வரும் சித்த வைத்தியர்கள் எல்லாம் ஏதேதோ செய்து தொடர்ந்து தோற்றுப்போகிறார்கள். அவர்கள் கொடுக்கும் எந்த மருந்தும் அவளது காலை குணப்படுத்தவில்லை. மாறாக மருந்துகள் அவளது யானைப்பசியைத்தான் அதிகரிக்கின்றன. அதனால் உடல் பருமன் ஆகிக்கொண்டே போகிறது. ஆரம்பத்தில் தனது உடல் பருமனைப் பற்றி லேசாகக் கவலைப்படும் மது பிறகு ஒருக்கட்டத்தில் அதை அலட்சியம் செய்கிறாள்.

சமீபத்தில் எனக்குத் தெரிந்த ஒரு நண்பரின் ஆறு வயது மகன், மாற்றுத்திறனாளி. கழிவறையில் கால் வழுக்கி அங்கிருந்த இரும்புவாளியில் தலை அடிபட்டுவிட்டது. ஐசியூவில் சேர்க்கும் நிலைமைக்குப் போனது. பொதுஇடங்களை விட்டுவிடலாம். இந்தியாவில் மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் வீடுகளில் கூட அவர்களுக்கான முறையான கழிப்பறை, சக்கர நாற்காலி ஏற்றிச்செல்லும் மாடிப்படி வசதிகள் இல்லை. அதைப்பற்றி பேஸ்புக்கில் விரிவான கட்டுரையொன்றை எழுதியிருந்தேன். சென்னை போன்ற பெருநகரங்களில் இருக்கும் ஷாப்பிங் மால்களில், இப்போது கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் நிலையம் போன்ற சொற்ப இடங்கள் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் அளவுக்குத் தகுதி கொண்டவையாக இருக்கின்றன. அங்கும் அவர்களுக்கான கழிவறை வசதிகள் எப்படி என்று தெரியவில்லை. அதைக் கூட சகித்துக்கொள்ளலாம்.
இந்நாவலின் இறுதியில் மது பிரத்யேக வண்டியோட்டுவதற்காக விண்ணப்பிக்கின்றாள். அங்கு மதுவுக்கு மருத்துவச் சான்றிதழ் வழங்கும் மருத்துவர் முதல் போக்குவரத்து அதிகாரி வரை லஞ்சம் வாங்குகிறார்கள். மற்றவர்களிடம் அதிகமாகக் கைநீட்டும் அரசு அதிகாரிகள் மாற்றுத்திறனாளிகளிடம் இரக்கப்பட்டு கொஞ்சமாக லஞ்சம் வாங்குவதை நானே பலமுறை நேரில் பார்த்து அவர்களது இரக்ககுணத்தை வியந்து பாராட்டியுள்ளேன்.

நாவலுக்காக அபிலாஷ் பயன்படுத்தியுள்ள கவித்துவமான மொழி கவனிக்கத்தக்கது. அதிக சிடுக்குகள் இன்றியும், சாதாரணமாக இல்லாமலும் வாசிக்க சிரமப்படுத்தாமல் செல்லும் இந்நாவலைப் பற்றி சில நண்பர்கள் பொதுக்கருத்தொன்றைச் சொல்வதைக் கவனித்துள்ளேன். அது இந்நாவல் மெதுவாகச் செல்கிறது. எல்லா ரயிலும் வேகமாகச் செல்ல வேண்டுமா என்ன? மலைரயிலுக்கென்று ஓர் அழகு உண்டு. இந்த மலைரயிலில் பயணிக்கும்போது ஆங்காங்கு வரும் பிளேடு,எழுத்தாளர் மார்க்கண்டேயன், டாக்டர் ஆபிரகாம் போன்ற மனிதர்கள், அவர்கள் ஊடான உரையாடல், அதில் இருக்கும் மெல்லிய அங்கதம், சமூகக் கோபம் என்று இந்நாவல் தொடர்ந்து அதன் வெற்றியைத் தக்கவைத்துக்கொண்டே நம்மைக் கடத்திச்செல்கிறது.
ஒரு பெண் மாற்றுத்திறனாளியின் உலகையும், அவள் சார்ந்திருக்கும் சமூகத்தையும் விரிவாக இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் வகையில் இந்நாவல் கொண்டாடப்பட வேண்டியது. சமீபத்தில் இந்நாவல் எழுதிய ஆர்.அபிலாசுக்கு சாகித்ய அகாடமியின் இளம் எழுத்தாளருக்கான யுவபுரஸ்கார் விருது கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அபிலாசுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வோம்.

Friday, October 10, 2014

அற்புதங்கள் நிகழ்த்துபவன்

இந்நாட்களில்
நான் அற்புதங்கள் நிகழ்த்துபவனாக மாறியிருந்தேன்
என்னைச்சுற்றி அற்புதங்களின் குறியீடுகள்
கணந்தோறும் பல்லைக்காட்டி நடனமிடுகின்றன

நான் குடையெடுத்து
தெருவில் நடந்தால்
கொட்டும் மழை கூட ஓடிவிடுகிறது

நான் பயணச்சீட்டு முன்பதிவு செய்தால்
இணையத்தளம் முடங்கிவிடுகிறது

நான் தேர்தலில் தேர்வுசெய்த எம்எல்ஏ
எனது ஊர்பக்கம் வருவதை நிறுத்திவிட்டார்

நான் முதலீடு செய்த
தனியார் வங்கியை அன்றே மூடிவிட்டார்கள்

சாவதற்காக விஷம் அருந்தினேன்
கலப்படம் என்பதால்
அப்படி எதுவும் நடக்கவில்லை

நான் ஒரு தேவதையை கண்டேன்
மெல்ல எனது அருகில் வந்தவள்
தனது இமைகளை மூடி
அழகிய வதனத்தை உயர்த்திய தருணத்தில்
அவளை ஆசையுடன் முத்தமிட்டேன்
அடுத்த விநாடி
அவள் தவளையாக உருமாறி குதித்தோடி
வேலிக்கப்பால் மறைந்துப்போனாள்

நேற்று பக்கத்து ஊரில் இருந்த
ஜோசியரை பார்க்க போனேன்
அவன் தலையில் தேங்காய் விழுந்து
மருத்துவமனையில் கிடப்பதாக சொன்னார்கள்

கவலைகள்

என்னிடம் பத்து கவலைகள் இருந்தன
உன்னிடம் ஐந்து கவலைகள் இருந்தன
நாம் இருவரும்
மாலைப்பொழுதொன்றில் சந்தித்தோம்
மதுபான விடுதியில் அமர்ந்தபடி
ஆளுக்கொரு மதுவை வரவழைத்தோம்
நமது கவலைகளை ஒவ்வொன்றாக
முன்னால் இருந்த தட்டில் கொட்டினோம்

உன்னிடம் இருப்பது ஐந்துதான்
ஆனால் ஐநூறு கவலைகளுக்கு சமமென்றாய்
உன்னை சமாதானப்படுத்த வேண்டி
உன்னிடம் இருந்த ஒரு கவலையை
எடுத்து மென்றபடி ஒரு மிடக்கு விழுங்கினேன்
இப்போது உன்னிடம் நான்கு
என்னிடம் அதே பத்து

உனது கவலைகளோடு ஒப்பிட்டால்
எனது கவலைகள் அனைத்தும்
அற்பத்திலும் அற்பமென்றாய்

நான் கோபத்தின் உச்சத்தில்
இன்னொரு மிடறு விழுங்கையில்
நீ செய்த காரியம் அதிஅற்புதமானது
எனது தட்டில் இருந்த ஒரு கவலையை
என்னை கேட்காமலேயே எடுத்து வாயில் போட்டுக்கொண்டாய்
எனது கவலைகளில் ஒன்று குறைந்துப்போனது

உனது தட்டில் இருந்த நான்கு கவலைகளை
எனது பக்கம் நகர்த்தி வைத்தாய்
எனது தட்டில் இருந்த ஒன்பது கவலைகளை
உன் பக்கம் நகர்த்த எனக்கு தயக்கமாக இருந்தது

நீண்ட யோசனைக்கு பிறகு இருவரும்
பொது உடன்படிக்கையொன்றை செய்துக்கொண்டோம்
மீண்டும் ஒரு போத்தல் வரவழைத்தோம்

இரண்டு தட்டில் இருந்த கவலைகளையும்
ஒரே தட்டுக்கு இடம்மாற்றினோம்
இருவரும் மதுவருந்ததொடங்கும்போது
நமது தட்டில் பதிமூன்று கவலைகள் இருந்தன
அதை எப்படி சரிசமமாக பங்கிட்டுக்கொள்வதென்று
இருவரும் குழம்பி தவித்தோம்
இறுதியில் பார்த்துக்கொள்ளலாமென்று
ஆளுக்கொரு கவலையை
கையில் எடுத்து கொறிக்க ஆரம்பித்தோம்

கடைசி வாய் அருந்தும்போது
நமது தட்டில் ஒரேயொரு கவலை எஞ்சியிருந்தது
அதை யார் எடுத்துக்கொள்வதென்ற
புதுக்கவலையொன்று இப்போது நம்மிடம் வந்துவிட்டது

Thursday, September 25, 2014

புலி விளையாட்டு

காட்டில் வேடிக்கை பார்க்கச்சென்றவனை
எதேச்சையாக கவனிக்கும்
புலியொன்று அடித்துக்கொல்கிறது


அதை கவனிக்கும்
இன்னொரு மனிதன்
தனது அலைபேசியில்
கவனமாக பதிவு செய்கிறான்

அடுத்த ஐந்து நிமிடங்களில்
அந்த பதிவு நகரமெங்கும் பரவுகிறது
இணையம், பத்திரிக்கை, தொலைக்காட்சி
என்று மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாகிறது

கருணையற்ற வேட்டைக்கண்கள் முன்பு
தனது கைகளை கூப்பியபடி அமர்ந்திருக்கும்
மனிதனின் இறுதிக்கணத்தை பார்த்து
நகரத்தின் மனிதர்கள் திகைத்து நிற்கிறார்கள்

காப்பாற்றாமல் படம் எடுத்தவனின்
பொறுப்பற்றத்தனத்தை
திட்டி தீர்க்கிறார்கள்

அப்படி செய்திருந்தால்
அவனையுமல்லவா புலி கொன்றிருக்குமென்று
சிலர் வாதாடுகிறார்கள்

புலி அடித்த மனிதனை பற்றிய
விதவிதமான ஊகங்கள் நகரெங்கும் பரவுகின்றது

அவன் தற்கொலை செய்ய
உத்தேசித்து காட்டுக்குச்சென்றவன்

என்னதான் இருந்தாலும்
புலி அப்படி செய்திருக்கக்கூடாது

புலி பயந்திருக்கும்

அந்த மனிதன் எதற்கு
புலியின் வீட்டுக்குள் செல்ல வேண்டும்

புலியை எல்லாம் கைது செய்ய முடியுமா?
என்னதான் இருந்தாலும் தப்பு அந்தாளு மேலதான்

எவ்வளவு நுட்பமாக பதிவு செய்திருக்கிறான்
கண்டிப்பாக கேனான் கேமராவேதான்

புலிக்கும் அவனுக்கும்
இடையே நடந்த இறுதி உரையாடல்
தெரிந்துக்கொள்ள நகரமக்கள் விழைகிறார்கள்

தனது வாழ்வின் இறுதியில்
ஏன் புலியை பார்த்து கும்பிட்டான்
படம் எடுத்தவனை பார்த்து கும்பிடவில்லை

புலி ஏன் பத்து நிமிடங்கள்
அமைதியாக காத்திருந்து பிறகு தாக்கியது

புலிக்கும் அவனுக்குமான
அந்தரங்கத்தை அறிந்துக்கொள்ள
முடியாமல் மீண்டும் மீண்டும் வீடியோவை
பார்த்து குழம்பி தவிக்கிறார்கள்

புலி அடித்த மனிதனுக்காக
ஒருக்கணம் கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறார்கள்

இனி யாரும் புலியுடன் பேசக்கூடாது என்று
தங்கள் குழந்தைகளுக்கு போதனை செய்கிறார்கள்

இது எதுவும் தெரியாத புலி
நகரின் எல்லையில் இருக்கும் வனத்தில்
ஒரு ஜென்துறவி போல
தனிமையின் சூன்யத்தை பார்த்துக்கொண்டிருக்கிறது.

அதனிடம் எந்த தத்துவச்சிக்கல்களும் இல்லை
எந்த கேள்விகளும் இல்லை
எந்த குற்றவுணர்வும் இல்லை
எந்த பெருமிதமும் இல்லை
கனவுகள் இல்லை
அடுத்தவேளைக்கான
இரை பற்றிய கவலை கூட இருப்பதாக தெரியவில்லை
அடுத்து செய்யக்கூடிய திட்டம் எதுவுமில்லை
அது மனிதனல்ல
அது வெறும் புலி
அவ்வளவே

Wednesday, August 13, 2014

புதிய புத்தகம் பேசுது - ராஜீவ்காந்தி சாலை

ஆகஸ்ட் மாத "புதிய புத்தகம் பேசுது" இதழில் வெளிவந்துள்ள "ராஜீவ்காந்தி சாலை" நாவல் விமர்சனம்.  

நன்றி:- சா.சுரேஷ்
 
 
 

Sunday, July 27, 2014

சென்னை மாநகர வெளியில் ராஜீவ் காந்தி சாலை

நன்றி:- ந.முருகேச பாண்டியன்

தமிழ் இந்துவில் ராஜீவ்காந்தி சாலை நாவல் பற்றிய ஒரு விமர்சனம் வெளிவந்துள்ளது. நண்பர்கள் பார்வைக்கு...  


சென்னை நகரைச் சுற்றிலும் இயற்கை எழிலுடன் விளங்கிய கிராமங்கள் நகரமயமாதலின் காரணமாக இன்று சிதிலமாகிக்கொண்டிருக்கின்றன இயற்கை வளமான பிரதேசத்தின் ஊடே மாமல்லபுரத்தினை நோக்கிச் செல்லும் ராஜீவ் காந்தி சாலை வெறுமனே போக்குவரத்திற்கானது மட்டுமல்ல.

பாரம்பரியமான கிராமங்கள், ஐ.டி. கம்பெனிகள் என இரு வேறு உலகங்களைப் பிரிக்கும் எல்லையாக ராஜீவ் காந்தி சாலை விளங்குகிறது. பன்னாட்டுத் தகவல்தொடர்புக் கம்பெனிகளின் வருகையினால் செம்மஞ்சேரி, பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் போன்ற பாரம்பரியமான கிராமங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை முன்வைத்து விநாய முருகன் எழுதியுள்ள ராஜீவ் காந்தி சாலை அண்மையில் தமிழுக்கு வந்துள்ள முக்கியமான நாவலாகும்.

கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர்கூட செம்மஞ்சேரி கிராமத்திற்கு அப்பால் எளிய கிராமிய வாழ்க்கை நிலவியது . இன்று ஆறு வழிப் பாதைகளில் விரையும் வெளிநாட்டுக் கார்கள் வேறு உலகுக்கு அழைத்துச் செல்கின்றன. ஐ.டி. கம்பெனிகள் அடுக்கு மாடிகளில் வந்தவுடன், காலங்காலமாக அங்கு வாழ்ந்துவந்த மக்கள் காணாமல் போயினர். பெரிய வணிக வளாகங்கள், நட்சத்திர விடுதிகள், இறக்குமதியான கார்கள். அழகான இளைஞர்களும் இளைஞிகளும் எனச் சூழலே மாறிப்போனது.

கிராமத்தினர் தங்களுடைய விவசாய நிலங்களை விற்றுவிட்டு, மாறிவரும் பண்பாட்டு மாற்றத்தினை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ரியல் எஸ்டேட்காரர்கள் சிறிய நிலவுடைமை யாளர்களைத் தந்திரமாக ஏமாற்றிக் கைப்பற்றிய விவசாய நிலத்தின் மூலம் பெரும் கோடீஸ்வரர்களாக ஆயினர். தங்கவேலு செட்டியார், அன்னம், ராசு படையாச்சி போன் றோர் பூர்வீக நிலங்களில் இருந்து துரத்தியடிக்கப்பட்டுச் சிறிய கடைகள் வைத்துப் பிழைக்கின்றனர். குடும்ப உறவுகளின் சிதைவில் மனித மதிப்பீடுகள் சிதலமடைகின்றன.

நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிக்கொண்டு சாப்ட்வேர் கம்பெனிகளில் பணியாற் றும் இளைஞர்களும் உற்சாகமாக இல்லை. எப்போதும் வேலையிலிருந்து நீக்கப்படலாம் என்ற பதற்றத்துடன் பணி யாற்றுகிறவர்களைப் பயம் நிழலாகத் தொடர்கிறது. நிறுவனங்களில் பணம், அதிகாரப் போட்டிக்காக நடை பெறும் சம்பவங்கள் அலுவலர்களின் மன அமைதியைச் சிதைக்கின்றன. அழகிய இளம் பெண்கள், காதல், குடும்பம் என வாழும் இளைஞர்கள் ஆடம்பர மனநிலையுடன் வாழ முயலுகின்றனர்.

பத்தாண்டுப் பணியில் முப்பதாண்டு முதுமையை ஏற்படுத்தும் மென்பொருள் கம்பெனியின் வேலைப் பளு பற்றி அழுத்தமான கருத்துகளை விநாயக முருகன் முன்வைத்துள்ளார். சாப்ட்வேர் கம்பெனிகளைச் சார்ந்து வாழும் அடித்தட்டு ஊழியர்கள், கார் ஓட்டுநர்கள் பற்றிய விவரிப்பு ஐ.டி. நிறுவனங்கள் பற்றிய இன்னொரு பிம்பமாகும்

ஆணும் பெண்ணும் சேர்ந்து பணியாற்றும் ஐ.டி. நிறுவனங்களில் நடைபெறுவதாக மிகைப்படுத்திச் சொல்லப்படும் பாலியல் சீரழிவுகள் பொதுப்புத்தி சார்ந்தவை. ஆண்-பெண் சேர்ந்து பணியாற்றுகின்ற பிற நிறுவனங்களில் நடைபெறுகின்ற சம்பவங்கள் போலத்தான் சாப்ட்வேர் கம்பெனிகளிலும் நிகழ வாய்ப்புண்டு. ஆனால் நாவல் முன்னிறுத்தும் பாலியல் சம்பவங்கள் சராசரி மனிதர்களுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தும். என்றாலும் மனிதர்கள் இப்படியெல்லாம் தங்களுடைய வாழ்க்கையைச் சீரழித்துக் கொள்வது ஏன் என யோசிக்க வைக்கிறது நாவல்.

வளமான பொருளியல் வாழ்க்கை, வசதியான வீடு, நட்சத்திர விடுதிகள், அமெரிக்கா பயணம் என வாழும் சாப்ட்வேர்காரர்களின் இன்னொரு முகம் கொண்டாட்டமானது. சாதியை மறுத்து காதல் திருமணம் செய்து கொண்டு புதிய தடத்தில் பயணிக்கின்ற இளைய தலைமுறையினர் பற்றி நேர்மறையாகச் சித்திரிக்காதது நாவலில் பலவீனமான அம்சம்.

மனப் பிறழ்வடைந்து சாலையில் சுற்றித் திரிவோர், உயரமான கட்டி டதில் இருந்து குதித்துத் தற்கொலை செய்கிறவர்கள் என நாவல் வாழ்வின் இருண்ட பக்கங்களை விவரித்துள்ளது. எல்லாவற்றிலும் அவசரம் என வேகம்வேகமாகத் தேடி அலையும் மனிதர்கள் மனப் பிறழ்வடைவது இயல்பாக நடைபெறலாம் என நாவலாசிரியர் எச்சரிக்கிறார். நகரத்தின் பிரமாண்டமான வளர்ச்சி குறித்து மகிழ்ச்சி கொள்ளவிய லாமல், சூழலின் அபத்தம், வெறுமை குறித்துக் காத்திரமான சம்பவங்களை நாவல் முன்வைத்துள்ளது.

நானூறு வருடங்களாகக் கடலைத் தழுவி விரிந்துகொண்டிருக்கும் சென்னை மாநகரின் பதிவாக ராஜீவ் காந்தி சாலை நாவல் நீள்கிறது எனவும் வாசிக்கலாம்.

Sunday, December 29, 2013

நண்பர்களுக்கு ஓர் அறிவிப்பு

'ராஜீவ் காந்தி சாலை' என்ற எனது முதல் நாவலின் வெளியீட்டு விழா வரும் ஜனவரி ஒன்றாம் தேதி சென்னை அண்ணாசாலையில் இருக்கும் (ஸ்பென்சர் எதிரே) புக்பாயிண்ட் புத்தகக்கடை அரங்கில் நடக்க உள்ளது. உயிர்மை பதிப்பக சார்பில் நடக்கும் இந்த விழாவில் மேலும் பல நண்பர்களின் புத்தகங்கள் வெளிவர உள்ளன. நண்பர்கள் அனைவரும் கலந்துக் கொண்டு இந்த விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன். 



காமம் , பணம், துரோகம், நம்பிக்கையின் முறிவு சொந்த ஆன்மாவின் அழிவு, உறவுகளுக்குள் படியும் குற்ற நிழல்கள், அர்த்தம் தெரியாத தற்கொலைகள். இதுதான் இந்த நாவலின் மைய நீரோட்டம்.
ராஜீவ் காந்தி சாலை என்பது ஒருஇடம் மட்டுமல்ல, அது ஒரு பிரமாண்டமான வளர்ச்சிக்கு உள்ளும் புறமும் படந்திருக்கும் பிரமாண்டமான் அவலத்தின் நிலப்பரப்பு.
(நாவலின் பின்னட்டையிலிருந்து)

நன்றி
விநாயக முருகன்


ஆன்லைனில் புத்தகங்கள் கிடைக்குமிடம்:-

அகநாழிகை 

டிஸ்கவரி புக் பேலஸ்

வீகேன்

Monday, October 21, 2013

பனி




நாற்பத்தியிரெண்டு வயதான கரீம் அலாகுஷோலு அப்படி அழைத்தால் அவனுக்கு பிடிக்காது. கா என்று அழைக்கப்படுவதையே அவன் விரும்புகின்றான். பத்திரிக்கைகாரன். கவிஞனும் கூட. கூச்ச சுபாவம் கொண்ட தனிமை விரும்பி. மிகப்பெரிய லட்சியங்களை தலைக்கு மேல் கொண்ட ஆனால் வாழ்க்கையில் வெற்றியடையாத   செக்காவின் கதாப்பாத்திரங்கள் போல இருப்பவன் கா. குறிப்பாக இறை மறுப்பாளன்.

இப்படிதான் முதல் அத்தியாத்தில் காவை அறிமுகப் படுத்துகின்றார் ஒரான் பாமுக். அரசியல் காரணங்களுக்காக துருக்கியிலிருந்து நாடுகடத்தப்பட்டு ஜெர்மனியின் பிராங்க்பர்ட்டில் பன்னிரண்டு ஆண்டுகாலம் வசிக்கின்றான். இஸ்தான்புல்லில் அவனது அம்மா இறந்து போனதை அறிந்து ஈமசடங்கு செய்ய மீண்டும் இஸ்தான்புல் வருகின்றான். என் பெயர் சிவப்பு போன்று பாமுக்கின் மற்ற எல்லா கதைகளிலும் வரும் இஸ்தான்புல் நிலபரப்பில்தான் இனி ஐநூறுக்கும் மேற்பட்ட பக்கங்களில் பயணம் செல்ல போகின்றோம் என்று நினைத்தால் கா கார்ஸ் என்ற எல்லையோர சிறு நகரத்திற்கு அந்த வருடத்தின் பனிக்காலத்தில் பயணம் செய்கின்றான். பாமுக்கின் தனித்துவமான நாவல் இது. இந்த முறை இஸ்தான்புல்லை விட்டு வெளியே சென்று விளையாடியுள்ளார். கதையும் அதை சொல்லும் அந்த பரபரப்பு நடையும் கூட வித்தியாசமானது. என் பெயர் சிவப்பு  போலல்லாமல் நாவலில் மிக வெளிப்படையாக பாமுக் இஸ்லாமிய அரசியலை பேசுகின்றார்.  

கார்ஸில் பல இளம்பெண்கள் தொடர்ச்சியாக தற்கொலை செய்துக் கொள்கின்றார்கள்.அதையும் தவிர அங்கு வரவிருக்கும் தேர்தலை பற்றிய செய்திகளையும் சேகரிக்க கா கார்ஸ் செல்கின்றான். அங்கு முன்னூற்று சொச்சம் பிரதிகள் மட்டுமே விற்கும் பார்டர் சிட்டி கெஜட் என்ற பத்திரிக்கையின் பதிப்பாளர் சர்தார் பேவை சந்திக்கின்றான். தற்கொலைக்கான காரணங்களை சேகரிக்க காஸிம் பே என்ற காவல்துறை துணைத்தலைவரை சந்திக்கின்றான். கார்ஸில்  அவன் தங்கியிருக்கும் ஹோட்டலின் உரிமையாளர் துர்குத் பே என்பவரின் மகள் இபெக்கை சந்திக்கின்றான். இபெக்கும், காவும் ஒன்றாக பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள். இபெக்கின் முன்னாள் கணவன் முக்தார் பேவும் கூட காவின் பள்ளித்தோழன்தான்.

ஒட்டாமன் ராஜ்ஜியம் முடிந்து துருக்கியில் ஐரோப்பிய நாகரீகமும், கலாச்சாரமும் நடப்பதால் அங்கு ஒருவித அரசியல் சமனற்ற சூழல் இருக்கின்றது. பர்தாவை எடுக்க முடியாமலும், பர்தாவை அணிய முடியாமலும் இரண்டு எல்லைகளுக்குள் அங்கு இருக்கும் இளம்பெண்கள் சிக்கி தவிக்கின்றார்கள். இபெக் பர்தா அணிவதில்லை. அவள் மேற்கத்திய கலாச்சாரத்தை ஆதரிக்கின்றாள். இபெக்கின் தங்கை கடிஃபோ நேர் எதிரி. இபெக்கை விவாகரத்து செய்தவுடன் முக்தார் பே முழுநேர இஸ்லாமிய அடிப்படைவாதியாக மாறிவிடுகின்றான். ஒருநாள் காவும்,இபெக்கும் ஒரு நியூலைப் பாஸ்ட்ரி என்ற கடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது அங்கு அவர்கள் கண்முன்னால் கொலை நடக்கின்றது. சுட்டுக் கொல்லப்பட்டவர் கல்வித்துறை இயக்குனர். என்ன காரணமென்றால் அவரது கல்விக்கூடத்தில் பர்தா அணிந்த பெண்களை அவர் அனுமதிக்க மறுத்து விட்டார். பார்தா அங்கு தடை செய்யப்பட்ட சூழலில் அரசாங்கம் பர்தாவை அணிந்தால் மிரட்டுகின்றது. அடிப்படை மதவாதிகள் பர்தா அணிவதை தடுக்கும் ஆட்களை கொலை செய்கின்றார்கள். நாவலின் இந்தப்பகுதியில் அந்த கொலைக்காரனுக்கும், கல்வித்துறை இயக்குநருக்கும் இடையே நடக்கும் அந்த உரையாடலில் பாமுக் ரகளை செய்திருப்பார்.(அசத்தலான நடை இது. அந்த கொலைகாரன் கல்வித்துறை இயக்குநரை கிண்டல் செய்தபடியே அதே நேரத்தில் உன்னை கொலை செய்ய வந்திருக்கின்றேன் என்று மிக பணிவாக பேசி அவருடன் மரியாதையாக உரையாடி இறுதியில் கொலை செய்வான்)

பிறகு நீலம் என்ற மத பயங்கரவாதியை கா சந்திக்க நேரிடுகின்றது. இடையில் முக்தார் பேவை கா சந்திக்க செல்லும்போது அங்கு வரும் காவல்துறை ஆட்கள் முக்தார் பேவை கைது செய்து அழைத்துச் சென்றுவிடுகின்றார்கள்.
நீலத்தை கா சந்தித்து உரையாடும் அந்த இடத்தில் துருக்கியின் அரசியல் தீவிரமாக பேசப்படுகின்றது. அங்கு நெசிப், ஃபாசில் என்ற இரண்டு மத தீவிரவாத இளைஞர்களை கா சந்திக்கின்றார். அதில் நெசிப்பிற்கு இபெக்கின் தங்கை கடிஃபே மீது காதல்.  நேஷனல் தியேட்டரில் பர்தா அணிவதை தடுக்கும் ஒரு நாடகத்தையொட்டி நிகழும் கலவரத்தால் கார்ஸின் இராணுவ வீரர்கள் சுட அதில் இறந்து போகின்றான். ரகசிய மறைவிடத்தில் ஒளிந்திருக்கும் நீலத்தை இராணுவம் கைது செய்கின்றது. காவின் சமரசம் மூலம் நீலத்தை விடுவிக்க இராணுவம் சம்மதிக்கின்றது. அந்த சமரசம் திட்டம் என்னவென்றால் நீலத்தின் காதலி பர்தாவை அகற்றும் நாடகமொன்றில் நடித்து இராணுவத்திற்கு பிரச்சாரம் செய்து தரவேண்டுமென்பது...
 
துருக்கியை ஈரான் போல தீவிர மத அடிப்படை நாடாக மாற்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஒருப்பக்கமும், இன்னொரு பக்கம் அங்கு பர்தாவை தடைசெய்து மேற்கத்திய கலாச்சாரத்தை இறக்கும் அரசாங்கமும், இவர்களுக்கு இடையில் மாட்டிக்கொள்ளும் கார்ஸின் மக்களும், தொடரும் இளம்பெண்களின் மர்மமான தற்கொலைகளும் என்று நாவல் செல்கின்றது.

பர்தாவை நெருப்பில் எரித்து போராட்டம் செய்வது.மத அடிப்படைவாதிகள் பெண்கள் மீது ஏவும் வன்முறை என்று துருக்கியின் அந்த கொந்தளிப்பான சூழலை அப்படியே நுட்பமாக பதிவு செய்துள்ளார்.

எனது முதலும் கடைசியுமான அரசியல் நாவல் இது என்று ஒரான் பாமுக் சொல்லியிருந்தார். அவருக்கு மரணதண்டனை வாங்கிதரும் அளவுக்கு சென்ற நாவலும் கூட.. ஐக்கிய நாடுகளின் தலையீட்டால் துருக்கி அந்த மரணதண்டனை விதிக்கும் முயற்சியை கைவிட்டது. 2007-ல் அவருக்கு நோபல் பரிசு வழங்கும்போது பாமுக் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்திருந்தார். 

ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பை பற்றி நான் ஏற்கனவே முந்தைய என்பெயர் சிவப்பு,கடல் நாவல்களின்,ஹாருகி முரகாமிசிறுகதை தொகுப்பின்
பதிவுவில் குறிப்பிட்டுள்ளேன். சரளமாகவும், அடர்த்தியாகவும் படிக்க தூண்டுகின்றது. அதே நேரம் பாமுக்கின் இந்த நாவல் துப்பறியும் நடையில் கதைக்களன் பரபரப்பாக இருப்பதால் மிக சரளமாக படிக்க வைக்கின்றது.

நாவலின் முக்கியமான பகுதியில் காவின் டைரியை இந்த நாவலின் ஆசிரியர் ஒரான் படிக்கின்றார். கா அவனது டைரியில் எழுதியிருந்த வரிகள்... 
 
 
அறுகோணத்தில் பனித்திவலை ஒன்று படிகமானபின்,அது வானத்திலிருந்து கீழே விழுவதற்கு எட்டிலிருந்து பத்து நிமிடங்கள் வரை ஆகின்றது. வரும் வழியில் அதன் அசல் வடிவத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து மறைகிறது. அவன் மேலும் படித்தறிந்து கொண்டது, ஒவ்வொரு பனித்திவலையின் வடிவமும், வெப்பம்,காற்றின் திசை,வேகம்,மேகத்தின் உயரம் மற்றும் வேறுபல புரியாத அம்சங்களைக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது என்பதும் பனித்திவலைகள் பலவிதங்களில் மனிதர்களை ஒத்திருக்கிறது என்பதும்

Saturday, July 27, 2013

நந்தி ஒரு மானஸ்தன்

இண்டர்நெட் வந்தபிறகு திட்டுகளும்,வசவுகளும் அதிகமாகி விட்டன. நிஜ வாழ்க்கையில் இல்லாத தாக்கத்தை மனஉளைச்சலை இந்த இண்டர்நெட் வசவுகள் ஏற்படுத்துகின்றன.   

சாலையில் டூவீலரில் செல்கின்றோம். தெரியாத்தனமாக ஆட்டோவில் இடித்து விடுகின்றோம். உடனே ஆட்டோக்காரர் டே..பாடு என்கின்றார் கோபத்துடன். உடனே நாம் பாடுவதில்லை. சாரி சார். தெரியாமல் இடிச்சுட்டேன் என்று பயந்து வந்து விடுகின்றோம். ஆட்டோக்காரர் சிக்னலில் கோடு தாண்டி வந்து நிற்கின்றார். டிராபிக் போலீஸ் கழுவி கழுவி ஊற்ற, சாரி சார். இதோ எடுத்துறேன் சார் ஆட்டோவை என்று பம்முகின்றார் . டிராபிக் போலீசை அவரது மேலதிகாரி திட்டுகின்றார் . அந்த மேலதிகாரியை வார்டு கவுன்சிலர் அவரை அமைச்சர் அவரை எதிர்கட்சி அமைச்சர் இவர்களை பத்திரிக்கைகாரர்கள் இவர்கள் எல்லாரையும் பொதுமக்களாகிய நாம் திட்டுகின்றோம். பிறகு பொதுமக்கள் நாம் நமக்கு நாமே திட்டி க் கொள்வோம். இப்படிதான் ஒரு ஆரோக்யமான ஜனநாயக அமைப்பு இயங்குகின்றது.

நேற்று ஒரு முகம் தெரிந்த அலுவலக நண்பரிடம் (பேஸ்புக் வந்தபிறகு யாரை நண்பர்கள் என்று குறிப்பாக எழுத வேண்டியுள்ளது) சாட்டுக்கு வந்தார். அவரது பேஸ்புக்கில் இவர் ஏதோ அசிங்க அசிங்கமாக திட்டி ஒரு கமெண்ட் போட அவர் இவரை அசிங்க அசிங்கமாக திட்டி விட்டாராம். மிகவும் மனவேதனையாக உள்ளது என்றார்.  

"அந்த திட்டினவர் உங்களுக்கு ஸ்கூல் காலேஜ் நண்பரா?" என்றேன்.

"இல்லை" என்றார். 

"சரி.உங்களுக்கு தெரிந்தவரா?" என்றேன் 

"இல்லை" என்றார்.

"சரி.அவரை நேர்ல பார்த்து பேசி இருக்கீங்களா?" என்றேன்   

"இல்லங்க பேஸ்புக்கில்தான் பழக்கம்.அதான் ரொம்ப வருத்தமாயிருக்கு" என்றார்.

"வீட்ல உங்க பொண்டாட்டி,மேலதிகாரி,ரோட்டுல போறவன்,வர்றவன் எல்லாம் திட்டுறான். ஆனா அவங்க மேல வராத கோபம் உங்களுக்கு பேஸ்புக் FakeID திட்டுக்கள் மேல வருதா?" என்று கேட்டேன்.

"அதெப்படி எழுத்துல திட்டினா கோபம் வரக்கூடாதா? வள்ளுவர் கூட நாவினால் சுட்ட வடுன்னு சொன்னாரே" என்றார்.

"அது. விடுங்க அது அந்த காலத்துல பேஸ்புக் இருந்துச்சா? வள்ளுவரை யாராவது திட்டியிருப்பாங்க. அவர் பதிலுக்கு இப்படி ஒரு குறள் எழுதியிருப்பார்.எழுத்துல வாங்குறது, அடிச்சுக்கறது எல்லாம் அடியா?" கேட்டேன்.

"அப்படின்னா எழுத்தால மனவுளைச்சல் கொடுக்கறது உங்களுக்கு வலிக்காதா?படிக்கும்போது உங்களுக்கு வலிக்காதா?" என்னைப் பார்த்து கேட்டார்.            

"உண்மையான மனிதர்களின் திட்டு வலிக்கும். அவர்களின் எழுத்து வலிக்கும். ஆனால் பேஸ்புக்கில் அப்படி யாரும் இருப்பதாக தோன்றவில்லை. அறம் வைத்து பாடுவது எல்லாம் முடிந்து விட்டது" என்றேன்

"அது என்ன அறம் வைத்து பாடுவது?" என்றார் நண்பர்      

தமிழில் அறம் பாடுதல் என்று ஒன்று உண்டு. அதாவது யார் மேல் அறம் வைத்து பாடுகின்றார்களோ (பாட்டுடைத் தலைவன்) அதை கேட்ட உடன் அவர்கள் இறந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை அந்த காலத்தில் இருந்தது.

நந்தி வர்மன் என்ற பல்லவ மன்னன் எட்டாம் நூற்றாண்டில் இருந்தான். போரில் நந்தி வர்மனை கொல்ல முடியாத எதிரிகள், நந்தியின் மேல் அறம் வைத்து பாட ஒரு புலவரை ஏற்பாடு செய்தார்கள். அந்த புலவரும் காசுக்கு ஆசைப்பட்டு முதலில் நந்திவர்மன் மேல் அறம் வைத்துப் பாடினான். ஆனால் பிறகு மனம் மாறி பாடல் எழுதமாட்டேன் என்று சொல்லி விட்டான். அந்தப் புலவருக்கு ஒரு பரத்தையிடம் தொடர்பு இருந்தது. அவளோடு தனித்து இருக்கும் போது அந்த புலவர் தனது நந்தி கலம்பகம் என்ற தொகுப்பிலிருந்து சில பாடல்களை பாடி காண்பித்துள்ளார்.

ஒருநாள் அந்த பரத்தை அரண்மனை வீதி வழியாக செல்லும்போது அவளுக்கு நினைவிலிருந்த சில நந்திக் கலம்பக பாடல்களை பாடிக் கொண்டே போனாளாம் .

அதை அரண்மனைமாடத்தில் நின்றுக் கொண்டிருந்த நந்திவர்மன் கேட்டுவிட்டான். அவனுக்கு அந்த பாடல்கள் மிகவும் பிடித்துபோக அவளை வரவழைத்து அந்தப் பாடல்களின் பிண்ணனி அறிந்துள்ளான். பிறகு அந்தப் புலவனை வரவழைத்தான்.

புலவனும் கண்ணீரோடு உண்மையை சொல்லி விட்டார்.

நந்திவர்மன் மகிழ்ச்சியோடு புலவனை கட்டிப்பிடித்து முழுப் பாடல்களையும் பாடும்படி கேட்டான்.

புலவர் சம்மதிக்கவில்லை . "அரசே , இந்தப் பாடல்களை முழுதும் நீங்கள் கேட்டால் உங்களுக்கு மரணம் சம்பவிக்கும்" என்று எவ்வளவோ எடுத்துச் சொன்னார்.

நந்திவர்மன் கேட்கவில்லை. இப்படி ஒரு அருமையான பாடல்களுக்காக உயிரையே கொடுக்கலாம் என்று சொல்லி அவரைப் பாடச் சொன்னான்.

புலவன் சொன்னார் "மன்னா, மொத்தம் நூறு பாடல்கள் உள்ளன. நூறு பந்தல்கள் அமையுங்கள். நான் ஒவ்வொரு பாடல் பாடும் போதும், நீங்கள் ஒவ்வொரு பந்தலில் இருந்து கேட்க வேண்டும். அப்படி நான் நூறாவது பாடல் பாடும் போது, நீங்கள் நூறாவது பந்தலில் இருந்து கேட்பீர்கள். நான் பாடி முடித்தவுடன், உங்களுக்கு மரணம் சம்பவிக்கும்" என்றார்.

மன்னனும், சம்மதித்து ஒவ்வொரு பாடாலாய் கேட்டு கொண்டு வந்தான். நூறாவது பாடல் கேட்ட பின், அந்த பந்தல் திடீரென்று தீப் பிடித்து எரிந்து மன்னனும் எரிந்து சாம்பலாய் போனான். இதுதான் நந்திவர்மன் கதை.

நந்திவர்மன்  எதிரிகள் பந்தலுக்கு தீ வைத்து கொளுத்தி விட்டார்கள் என்றும் ஒரு கதை உண்டு.

ஆனால் இந்த ஒரு வரி கதையில் அவ்வளவு சுவாரஸ்யம், திடுக்கிடும் சம்பவங்கள், புலவரின் கள்ளக்காதல் கிசுகிசு எல்லாம் இல்லாததால் அது உண்மையான வரலாறாக இருக்க முடியாது.               

இந்த கதையை சொன்னதும்

"அப்படியா? இது உண்மைதானா? " நண்பர் கேட்டார்.        

"அந்த காலத்துல உண்மை இருந்துச்சு. நேர்மை இருந்துச்சு. காசுக்கு ஆசைப்பட்டாலும் பிறகு மனம் மாறி புலவர் நல்லவரா மாறிட்டார். மன்னனிடம் உண்மையை சொல்லி விட்டான். கலைக்காக உயிரே போனாலும் பரவாயில்லை என்று நினைத்தான் நந்திவர்மன். ஒருவேளை அந்த புலவர் பாடிய நூறாவது பாடலில் பந்தல் தீப்பிடித்து எரியாமல் இருந்திருந்தால் கூட பந்தலுக்கு தானே நெருப்பு வைத்து செத்திருப்பான். ஏன்னா நந்தி ஒரு மானஸ்தன்" என்றேன்  

"அப்படின்னா இப்ப உள்ளவங்க மானங்கெட்டவங்களா?" என்றார் நண்பர் கோபத்துடன்.

அப்படி நான் சொல்லல. எனக்கு தெரிஞ்சு ஒருத்தர் வீட்டுல பொண்டாட்டி திட்டிட்டான்னு தற்கொலை செஞ்சுக்க மலை உச்சிக்கு போயிருக்கார். தற்கொலை செஞ்சிக்க போனவன் அங்கே பாறைக்கு பக்கத்தில ஏதோ ஒரு நாவல் கிடந்திருக்கு. சரி. சாவுறதுதான் சாவுறோம். அந்த நாவலை படிச்சுட்டு அரைமணி நேரம் கழிச்சு சாவலாம். இப்ப செத்து அவ்வளவு சீக்கிரம் எங்க போகபோறோமுன்னு நாவலை பிரிச்சுருக்கான். நாவல் படிக்க படிக்க அது அவனை வேறு ஏதோ ஒரு உலகத்திற்கு அழைச்சுட்டு போயிருக்கு. அது இதுவரை பார்க்காத உலகம். அவனுக்குள் என்ன என்னவோ தோன்றியிருக்கு. இந்த நாவலை எழுதின எழுத்தாளரை உடனே பார்க்கனுமுன்னு மலை உச்சியிலிருந்து விடுவிடுன்னு இறங்கி எழுத்தாளர் வீட்டிற்கு போய் நடந்த உண்மைகளை சொல்லியிருக்கான். எழுத்தாளருக்கு செம ஆச்சர்யம். அப்படியா என்னால நீங்க தற்கொலை செஞ்சுக்கற முடிவை கைவிட்டுட்டியா? கேட்க, அவன் சொன்னானாம். என் பொண்டாட்டி திட்டிட்டான்னு தற்கொலை செஞ்சுக்க போனேன். இவ்வளவு கேவலமா கதை எழுதற உன்னை எத்தனை பேரு கழுவி கழுவி ஊத்தியிருப்பாங்க. நீயே உயிரோட இருக்கும்போது நான் ஏன் உயிரோடு இருக்கக்கூடாது என்றானாம்

Thursday, July 25, 2013

ஒரு சிறுகதை இரண்டு சம்பவங்கள்

பாஸ் நீங்க உங்களோட கட்டுரைகளை அப்படியே சிறுகதையா எழுதலாமே என்று பேஸ்புக்கில் ஒருத்தர் கேட்டார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

நான் சமீபத்தில் பார்த்த கேள்விப்பட்ட இரண்டு சம்பவங்களை இங்கு எழுதுகின்றேன்.

சம்பவம்-1
----------------
சேகரும் , நானும் ஒன்பதாம் வகுப்பில் ஒரே பிரிவில் படித்தோம். பத்தாம் வகுப்பு வந்தவுடன் அவன் வேறு பிரிவு சென்று விட்டான். சென்று விட்டான் என்பதை விட அனுப்பி வைத்தார்கள் என்று சொல்ல வேண்டும். எங்கள் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் ஒரு வித அரசியல் நடக்கும். ஒன்பதாம் வகுப்பில் நன்றாக படிக்கும் மாணவர்களை பத்தாம் வகுப்பில் ஒரு பிரிவுக்கு அனுப்புவார்கள். மோசமான மாணவர்களை இன்னொரு பிரிவுக்கு அனுப்புவார்கள். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்களை வடிகட்டி அனுப்பி அதன் மூலம் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்தி விடலாமென்பது அவர்கள் கணக்கு. சேகருக்கு வருகின்றேன்.

நடிகர் அரவிந்த்சாமி எட்டாம் வகுப்பு படிக்கும்போது எப்படி இருந்திருப்பார் என்று கற்பனை செய்துக்கொள்ளவும். அப்படியே இருப்பான் சேகர். அப்படியே அரவிந்தசாமிக்கு திருநீறு பட்டை போட்டுக்கொள்ளவும். பட்டை என்றால் திக்காகவும் இருக்கக்கூடாது. மெலிதாகவும் இருக்கக்கூடாது. அப்படி ஒரு விபூதி பட்டையை அவனது வீட்டில் எப்படி வைத்து விடுவார்கள் என்று இன்னமும் ஆச்சர்யமாக இருக்கும்.

இந்த பட்டையை உங்க வீட்டுல வச்சாங்களா இல்ல செஞ்சாங்களா என்று கிண்டல் செய்வோம். சிரித்து க்கொள்வான். சேகர் அப்படிதான். என்ன கிண்டல் செய்தாலும் அதிர்ந்து பேசமாட்டான். எவ்வளவு வம்பு இழுத்தாலும் நகர்ந்து சென்று விடுவான். ஆனால் படிப்பு என்று வந்துவிட்டால் அவன் குட்டி தாதா. கணக்கில் செண்டமும் மற்ற பாடங்களில் செண்டத்திற்கு ஒன்றிரண்டு மார்க்குகள் குறைவாகவும் எடுப்பான். .

எந்தளவு சேகரை நாங்கள் கிண்டல் செய்து வம்பு இழுக்கின்றோமோ அந்தளவு எங்களுக்கு திட்டும்,அடியும் விழும். சேகரிடமிருந்து இல்லை. வாத்தியார்களிடமிருந்து. கணக்குப்பாட விடைத்தாள் திருத்தப்பட்டு வரும். சேகரது விடைத்தாளில் மூன்று இலக்க மதிப்பெண் இருக்கும். எங்கள் விடைத்தாளில் அந்த மதிப்பெண்ணின் கடைசி இலக்கம் இருக்கும். சேகர் மூத்திரத்தை வாங்கி குடிங்கடா என்று வாத்தியார் கத்துவார். நல்லவேளை மூவாயிரம் பேர் படிக்கும் அந்த பள்ளிக்கூடத்தில் பொண்ணுங்களுக்கென்று தனி பிரிவு இருந்தது. இருபாலாரும் இணைந்து படிக்கும் பிரிவுகளும் உண்டு. ஆனால் எங்கள் பிரிவில் வெறும் பசங்க மட்டும்தான். எந்தளவு சேகரை வாத்தியார்கள் நேசித்தார்களோ அந்தளவு நாங்கள் அவனை எதிர்த்தோம். அவனை பெயில் மார்க் ஆக்க எவ்வளவோ முயன்றும் எதுவும் நடக்கவில்லை. தேர்வுக்கு முதல் நாள் அவனது புத்தகங்களை ஒளித்து வைத்தோம். வருடம் முழுவதும் படிக்கின்றவனுக்கு ஒருநாள் என்ன செய்யும்? அவனுக்கு சினிமா ஆசையை காட்டி சினிமாவுக்கு அழைத்துச் செல்வோம். ஆனால் எங்களுக்குத்தான் சினிமா பைத்தியம் பிடித்தது. இப்படி கல்லுளி மங்கன் போல படிப்பையே ஒரு தவம் போல செய்த சேகர் என்ற முனிவர் பத்தாவது வரும்போது அவனும்,நானும் வேறு வேறு பிரிவுகள் மாறி இருந்தோம். பத்தாவதில் நான் சுமாரான மதிப்பெண்களோடு பாஸ் செய்து வேறு பள்ளிக்கு சந்தோஷமாக சென்றேன். சேகர் ஸ்டேட் பர்ஸ்ட் வருவானென்று எல்லாரும் எதிர்பார்த்தோம். ஆனால் ஸ்டேட் பர்ஸ்ட் வரவில்லை. இரண்டு பாடங்களில் மட்டும் மாநில அளவில் மூன்றாவது. கணக்கில் வழக்கம் போல செண்டம். இதெல்லாம் இருபது வருட கதை.

இதெல்லாம் இருபது வருட கதை. கடைசியாக சேகரை எங்கு நான் பார்த்தேன். மறந்து விட்டது. நினைவுப்படுத்திச் சொல்கின்றேன. மேற்கொண்டு படிக்கவும்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதுதான் எங்களுக்கு பலான புத்தகங்களும், சினிமாக்களும் அறி முகமானது. பள்ளியில் வெளியே யானையடி என்ற இடமிருக்கும். அந்தக்காலத்தில் யாரோ பெரிய யானை சிலையை அங்கு கட்டி வைத்து விட்டு சென்று விட்டான் போலிருக்கு. அதனால் அந்த பகுதிக்கு யானையடி. யானை கட்டி போராடித்த நெல்வயல்கள் கும்பகோணத்தில் இருந்ததால் யானையடி என்றும் வந்ததாக சொல்வார்கள். ராஜராஜ சோழன் கும்பகோணத்தில் (குடந்தை) இருந்து தஞ்சாவூர் செல்ல இந்த வழியைத்தான் தேர்வு செய்வானாம். சுவாமிமலை வழியாக தஞ்சாவூர் செல்லும். ஆனால் இப்போது யாரும் இந்தப் பாதையை பயன்படுத்துவதில்லை. இப்போது வேறு வழி இருக்கின்றது. அப்படி ராஜராஜனோ வந்தியத்தேவனோ,குந்தவை நாச்சியாரோ செல்லும்போது இங்கு யானையை கட்டிவைத்து ஓய்வு எடுப்பார்களாம். அதனால் யானையடி. நமக்கு எதுக்கு வரலாற்று புரட்டு எல்லாம். அந்த யானை சிலை பக்கத்தில் இருக்கும் பழைய பேப்பர் கடையில்தான் சரோஜாதேவி,பருவராகம்,மருதம் , இளமை ஜுஸ் போன்ற புத்தகங்கள் கிடைக்கும்.

யானையடியிலிருந்து ஐநூறு மீட்டர் தொலைவில் எங்கள் பள்ளிக்கூடம். புத்தகங்கள் வாங்குவதில் சிரமம் இருக்காது. என்ன அப்போதெல்லாம் காசுதான் பிரச்சினையாக இருக்கும். அதற்கும் ஒரு வழி வைத்தோம். மாணவர்கள் எல்லாரும் காசு போட்டு பாதி விலையில் புத்தகங்கள் வாங்கி படிப்போம். ஒவ்வொருத்தனும் ஒருநாள் புத்தகத்தை எடுத்துச் செல்வோம். ஒரு வாரம் கழித்து அதே புத்தகத்தை கால் விலைக்கு விற்று விடுவோம். பலானபடங்கள் பார்க்கதான் அதிக சிரமப்பட வேண்டியிருக்கும். எப்படியாவது டியூசன் பீஸ் அது,இதுவென்று தேத்தி விடுவோம். கும்பகோணத்தில் இருக்கும் ஆறு,ஏழு தியேட்டர்களில் எப்படியும் அவளோட ராவுகள், அவள், பூக்காரி ஏதாவது ஓடும். ஆனால் சேகர் மானஸ்தன். செத்தாலும் பலான படங்களுக்கோ,பலான புத்தகங்கள் பக்கமோ தலைவைத்தும் படுக்க மாட்டான். மற்றபடி கட் அடித்து நாங்கள் செல்லும் விஜயகாந்த் ,சத்யராஜ் படங்களுக்கு அவன் வருவான்

நினைவு வந்து விட்டது . சேகரை நான் மீண்டும் பார்த்தது. அரிசோனாவின் பீனிக்ஸ் ஏர்போர்ட்டில். கடந்த வருடம் ஜூலை மாதம். ஜூலை மாதம் பீனிக்ஸ் என்றால் வெயில் எப்படியிருக்குமென்று நினைத்துக் கொள்ளுங்கள். ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வந்த சில விநாடிகளுக்குள் முகம் பழுத்து விட்டது . அது சேகர்தானா என்று முதலில் சந்தேகமாக இருந்தது. பக்கத்தில் சேட்டு வீட்டுப்பெண் போல. அவள் பக்கத்தில் ஆறு ஏழு வயதிருக்கும். மகனா மகளா என்று தெரியவில்லை. அவனும் என்னை அடையாளம் கண்டுக்கொண்டான். பத்து வருடங்களாக யு.எஸ்.சில்தான் குப்பை கொட்டுவதாகவும் நியூயார்க் ,புளோரிடா, ரிச்மாண்ட், கலிபோர்னியா என்று யு.எஸ் முழுவதும் அலைந்து விட்டதாகவும் சொன்னான். இப்போது பீனிக்சிலிருந்து கும்பகோணத்திற்கு கிளம்புவதாகவும் ஒரு மாதம் லீவ் எடுத்து விட்டு சென்னைக்கு வந்து வேறு ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்ய போவதாகவும் சொன்னான். அதிக நேரம் பேசவில்லை இருவரும். போன் நம்பர்கள் வாங்கிக்கொண்டோம். அவனுக்கு அடுத்து கனெக்டிங் பிளைட்டை பிடிக்கும் அவசரம். சேகரின் வேலை,சம்பளம் பற்றி விசாரித்தேன். அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லை. நான் வாங்கும் அதே சம்பளம்தான்

பீனிக்ஸ் சென்ற பிறகு ஏகப்பட்ட வேலைகளுக்கிடையே நான் சேகரை மறந்தேப்போனேன். இரண்டு மாதங்கள் செய்ய வேண்டிய வேலை. ஒரு மாதத்தில் முடிந்து விட்டது. மீண்டும் சென்னைக்கு வந்து விட்டேன். கடந்த மாதம் எதேச்சையாக கும்பகோணம் சென்றபோதும் எனக்கு சேகர் நினைவுக்கு வரவில்லை. அந்த யானையடி யானை சிலையை எனது காரில் தாண்டியதும் ஆர்வமாகி பழைய புத்தகக்கடையை பார்த்தேன். கடை இல்லை. அங்கெ ஷாப்பிங் மால் போல ஏதோ ஒரு பில்டிங் இருந்தது. சேகர் நினைவுக்கு வந்தான். சேகரின் நம்பரை தேடினேன். அது எனது யு.எஸ் செல்போனில் சேமிக்கப்பட்ட நினைவு. அந்த செல்போன் சென்னையில் விட்டு வந்திருந்தேன். சரியென்று ஒரு பள்ளிக்கூட நண்பருக்கு போன் செய்து சேகரை பற்றி விசாரித்தேன். அவன் வீட்டை விட்டு ஓடி விட்டதாக சொன்னார். எனக்கு புரியவில்லை. தெளிவாக சொல்லு. அவன் சாமியாரா போய்ட்டாண்டா. தேட வேணாம்னு லெட்டர் எழுதி வைத்துவிட்டு போய்ட்டான். எங்க போனான்னு தெரியலை. தேடிகிட்டிருக்கோம் என்றான்.


சம்பவம்-2
-----------------
கடந்த வாரம் ஒரு சுவையான சம்பவம் நடந்தது. எனது அலுவலக நண்பர் தான் இதை சொன்னார்.

அவருக்கு தெரிந்த நண்பர் ஒருத்தர். அவரும் எங்கள் அலுவலகத்தில்தான் (கோயம்புத்தூர் கிளை) மாட்யூல் லீடாக வேலை செய்தார்) மாதம் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குபவர். வீட்டிற்கு ஒரே பையன். வயது இருபத்தைந்து இருக்கும். கல்யாணம் ஆகவில்லை. நல்ல வசதியான குடும்பம் வேறு . அப்பா ஜின்னிங் பேக்டரி வைத்துள்ளார். இருந்தும் பையன் ஆசைப்படி கணிப்பொறி படிக்க வைத்துள்ளார் . அவர் திடீரென ஐந்து மாதங்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் ஒரு ஆசிரமத்தில் சேர்ந்து விட்டார். அவர் எனது நண்பரிடம் அடிக்கடி சொல்வாராம். 

இந்த வாழ்க்கை நிலையற்றது. செல்வத்தை தேடி ஓடும் இந்த வாழ்க்கை எனக்கு பிடிக்கவில்லை. விவேகானந்தர் போல ஏதாவது மனிதகுலத்துக்கு சேவை செய்துவிட்டு செத்துப்போகவேண்டுமென்று நண்பரும் அதை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. ஒருநாள் திடீரென அலுவல வேலையை ராஜினாமா செய்து விட்டு வீட்டை விட்டு வெளியேறி ஜக்கி ஆசிரமத்தில் சேர்ந்து விட்டாராம்.

இதுக்கு மேல் நடந்ததுதான் ஹைலைட். நேற்று நானும் எனது நண்பரும் டீக்கடையில் நின்று பேசிக்கொண்டிருந்தோம். எனது நண்பர் என்னிடம் ஒரு பயோடேட்டாவை கொடுத்து,

"இந்த நபருக்கு உங்கள்  டீமில்  ஏதாவது  வேகன்சி உள்ளதா?" என்று கேட்டார்.

"யார் உங்களுக்கு தெரிந்த நபரா?" என்றேன்.

"நான் சொல்லலை..அந்த கோயம்புத்தூர் ஆசிரம பார்ட்டி அவருதான் இவரு" என்று சொல்ல ஒருக்கணம் திகைத்துவிட்டேன்.

 "என்னாச்சு?" என்று கேட்க,

"அதை ஏன் கேட்கறீங்க? இவன் ஆசிரமத்திற்கு போயிருக்கான். அங்க செம வேலை. பெண்டு கழற்றியிருக்காங்கா. கிணத்துல தண்ணி இறைக்கறது. தோட்டத்துக்கு தண்ணி ஊத்தறது. சமையல் செய்யுறது. எச்சி தட்டு கழுவறது. கக்கூஸ் கழுவறது எல்லா வேலைகளையும் இவனை செய்ய சொல்லியிருக்காங்க. நண்பர் வசதியான குடும்பத்தில் பிறந்தவர் அல்லவா? பிஞ்சுக்கை வேற.. கையெல்லாம் கொப்புளம் வந்து உடம்பு முடியாமல் ஹாஸ்பிட்டலில் சேரும்படி ஆகிவிட்டதாம். ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் ஆசிரம சுவர் ஏறிக்குதித்து வீட்டுக்கு ஓடி வந்துட்டாராம். ஒரு மாசம் வேலை இல்லாமல் இருக்கவே தெரிந்த நண்பர்கள் சொந்தக்காரர்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் கிண்டல் தாங்க முடியாமல் இப்போது மீண்டும் வேலை தேடுகின்றாராம்" என்றார்.


முதல் சம்பவத்திற்கும் இரண்டாவது சம்பவத்திற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? அவர் பெயர் சேகர். இவர் பெயர் கூட எனக்கு நினைவில் இல்லை. அவர் யு.எஸ் முழுவதும் அலைந்து கும்பகோணத்தில் காணாமல் போயுள்ளார். இவர் கோயம்புத்தூரை கூட தாண்டாதவர். அவர் பெரிய பணக்காரர் எல்லாம் இல்லை. நடுத்தர வர்க்கம். இவருக்கு கோவையில் சொந்தமாக ஜின்னிங் பேக்டரி உள்ளது. ஒருவேளை அவரு சென்ற அதே ஆசிரமத்தில் இவரும் சேர்ந்திருக்கலாம். யார் கண்டது அந்த இரண்டு பேரும் சந்தித்து கூட பேசியிருக்கலாம். இப்படி ஏதாவது கற்பனை கலந்து அடித்து விட்டால் ஒருவேளை இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் அந்த ஒருத்தர் கேட்ட கேள்விக்கு எனக்கு விடை கிடைக்கக்கூடும்.