Showing posts with label Tamil-Article. Show all posts
Showing posts with label Tamil-Article. Show all posts

Saturday, August 8, 2015

ரசிகன்



மகத்தானவற்றின் மீது நாம் வைக்கும் நம்பிக்கையும், உறுதிப்பாடும் பொய்த்துப் போகிறபோது நொறுங்கிவிடுகிறோம். அவநம்பிக்கை மேலெழுகிறது. குழப்பங்களும், வினாக்களும் தோன்றுகின்றன. இதுநாள்வரை நாம் எதன்மீது பற்று வைத்திருந்தோமோ அது இற்று விழுகிறது. நம் மனதிலேயே எதிர்வாதம் தோன்றி நம்மை உருமாற்றம் செய்கிறது. நாம் அதுவரை நம்பிக்கொண்டிருந்தவைக்கு எதிரானவராக அத்தருணத்தில் மாறிவிடுகிறோம்
--– அபிலாஷின் ரசிகன் நாவல் பற்றி அழகிய பெரியவன் எழுதிய கட்டுரையிலிருந்து
எண்பதுகளின் தொடக்கத்தில் பிறந்தவர்களை பாக்கியசாலிகள் என்று நான் எனது நண்பர்களிடம் அடிக்கடி சொல்வேன். காரணம் அவர்கள் வளர்ந்து பதின்பருவம் அடையும்முன்னரே தமிழ்நாட்டில் குளோபலைசேஷன், லிபரலேஷன் காலூன்றிவிட அவர்கள் உலகத்தை புரிந்துக்கொள்வதற்கு முன்பே அவர்களால் இயல்பாக ஒரு காலமாற்றத்துக்குள் அடியெடுத்து வைத்து விட்டார்கள். ஆனால் அதற்குமுன்பு பிறந்து அதிலும் குறிப்பாக தீவீர லட்சியவாதம் பேசிய சிறுபத்திரிக்கை மரபை சேர்ந்த பல இளைஞர்கள் என்ன ஆனார்கள் என்று எனது கண்முன்னால் பார்த்திருக்கிறேன். எனது நண்பர்கள் சிலர் அப்படி மைய நீரோட்டத்தில் கரைந்து காணாமல் போனதையும் தற்கொலை செய்துக்கொண்டதையும் சிலர் துபாய் போன்ற நாடுகளில் கிடைத்த வேலை செய்து தங்கள் அடையாளம் இழந்துப் போனதையும், பலர் என்ன ஆனார்கள் என்றே தெரியாமல் போனதையும் பார்த்திருக்கிறேன்.
ரசிகன் நாவலில் வரும் சாதிக் என்ற கதாபாத்திரத்தின் சாயலில் நான் பார்த்த சில நெருங்கிய நண்பர்களின் சாயலை உணர முடிந்தது. எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்த லட்சியவாத சிறுபத்திரிக்கை மரபை சேர்ந்த சாதிக் தொண்ணூறுகளின் காலகட்டத்துக்கு வரும்போது அவன் வாழ்க்கை உள்ளும் புறமும் எப்படி மாறுகிறது? அவன் நம்பிக்கைகள் எப்படி சிதறுகின்றன? என்பதுதான் ரசிகன் நாவலின் மையம்.
சாதிக்தான் இந்த நாவலின் மையப்புள்ளி என்றாலும் சங்கர் என்ற கதாபாத்திரத்தின் பார்வையில் நாவல் ஆரம்பிக்கிறது. சந்திரமுகி படம் வெளிவந்த காலகட்டத்தில் நாவலின் கதை ஆரம்பிக்கிறது. சென்னையில் கதை தொடங்குகிறது. சந்திரமுகி படத்தின் நூறாவது நாள் வெற்றிவிழாவில் கலந்துக்கொள்ளும் சாதிக் தியேட்டர் வாசலில் இருக்கும் ரஜினி கட்டவுட் மீது ஏறி கால்தடுமாறி அல்லது தற்கொலை எண்ணத்துடன் தானாகவே கீழே விழுந்து மண்டை உடைந்து மூளை சிதறி இறக்கிறான். சாதிக் இறந்த விஷயத்தை சங்கர் ஊரிலிருக்கும் சாதிக்கின் பழைய காதலி ரெஜினாவிடம் சொல்கிறான். அங்கிருந்து பிளாஷ்பேக்காக சாதிக்கின் பின்னணியை சங்கர் சொல்வதாக நாவல் விரிகிறது.
எண்பதுகளில் சாதிக்கை போன்ற ஆட்களை எளிதாக கண்டு பிடித்துவிடலாம். எல்லாருக்கும் ஒரேபோல முகத்தில் தாடி கண்களில் தீர்க்கம், பேச்சில் அலட்சியம், உடம்பில் நீளமான ஜிப்பா என்று பொதுத்தன்மை கொண்டிருப்பார்கள். சாதிக்கின் உலகம் சிற்றிதழ் வாசிப்பு, உலக அரசியலை பேசுவது, நண்பர்களுடன் சேர்ந்து மொட்டை மாடியில் டிவியில் மாற்றுத் திரைப்படங்களை பார்ப்பது, கையில் புகையும் பீடி, தேதீருடன் அகிரகுரசோவா படங்களை பற்றி விவாதிப்பது என்று சுற்றுகிறது. டுட்டோரியல் பள்ளியொன்றில் குறைந்த ஊதியத்தில் வேலை செய்யும் சாதிக் பொருளாதாரத்தை பற்றியெல்லாம் பெரிதாக கவலைப் படுவதில்லை. தஸ்தாயெவ்ஸ்கி, டால்ஸ்டாய், நகுலன், புதுமைப்பித்தன், பிராய்டு,சார்த்தார் என்று வேறு ஓர் உலகத்தில் வாழ்கிறான். சூரியனுக்கு கீழே உள்ள எல்லா விஷயங்களையும் பற்றி அவனால் தீவிரமாக விவாதிக்கமுடியும். எல்லாவற்றையும் ஒரு புதுகோணத்தில் பார்த்து அவன் தனது நண்பர்களுக்கு அறிவாசானாக இருக்கிறான். மார்க்கிசிய சித்தாந்தத்தில் தீவிரமாக நம்பிக்கை கொண்டவன். ஊரில் செங்கதிர் என்னும் சிற்றிதழ் நடத்திவருகிறான்.
இந்நாவல் மூன்று தளங்களில் மூன்று பகுதிகளாக விரிந்து செல்கிறது. முதல் பகுதியில் சாதிக்கின் இலக்கிய நண்பர்கள் அவர்களின் அரசியல் நம்பிக்கைகள் சித்தாந்தங்கள் அவர்களில் சிலரின் வெகுஜன ரசனையை பொருளியல் யதார்த்த வாழ்க்கையை கடுமையாக விமர்சித்து சாதிக் செய்யும் உரையாடல்கள் என்று செல்கிறது. அடுத்த பகுதி சாதிக் அவனது காதலி ரெஜினா பிறகு அவன் திருவனந்தபுரம் பேரலல் கல்லூரியில் பேராசிரியராக சேருவது என்று சுழல்கிறது. மூன்றாவது பகுதியில்தான் சாதிக் சென்னைக்கு வந்து வெகுஜன ரசிக மனோபாவத்தை விரும்பி ஏற்று தீவிர ரஜினி ரசிகனாக மாறி கட்அவுட்டுக்கு பால், பீர் ஊற்றும் வெறிப்பிடித்த ரசிகனாக மாறுவது நடக்கிறது.
சாதிக்கின் தனிப்பட்ட வாழ்க்கையில் பாலியல் ஆர்வமற்று இருக்கிறான். கிட்டத்தட்ட பிரவீணாவிடமும் இதேபோல நிறைவேறாத அல்லது திருப்தியடையாத அலல்து தன்னைத்தானே சுயவதை செய்துக்கொள்ளும் ஒருவித மனநிலை இருக்கிறது. பாலியல் ஆர்வம் இல்லாதவர்கள் கொஞ்சம் டேஞ்சரான ஆட்கள்தான். அதோடு இலக்கியக்கிறுக்கும் சேர்ந்துவிட்டால் இன்னும் மோசம். ஆனால் இந்நாவலின் ஆரம்பத்தில் மிக தீவிரமாக வெகுஜன ரசிக மனோபாவத்தை கிண்டல் செய்யும் ரஜினி படங்களை திட்டும் சாதிக் குறிப்பாக தீவிர மார்க்சியம் பேசும் ஒருவன் எப்படி இப்படியொரு இடத்துக்கு வந்து சேர்ந்திருப்பான்? இது சாத்தியம்தானா என்று யோசிக்கும்போது இலக்கிய உலகத்திலும் ரசிகமனோபாவம் இருப்பதை தாஸ் போன்ற கதாபாத்திரம் வழியாக அபிலாஷ் பதிவு செய்து அதற்கான விளக்கத்தை கொடுக்கிறார்.
மனிதர்களால் சமநிலையை பேணுவது மிகவும் கடினம். ஏதோவொன்றின் மேல் எல்லா மனிதர்களுக்கும் ரசிகமனோபாவம் தேவைப்படுகிறது. சங்கருக்கு ஆன்மிகம். ஆணை பெண் ரசிப்பதும் பெண்ணை ஆண் ரசிப்பதும் அரசியல் தலைவரை தொண்டர்கள் ரசிப்பதும் என்று எல்லாமும் ஒரே புள்ளியில் மனிதர்களின் பாதுகாப்பின்மை ஏற்படுத்தும் பதற்றத்திலிருந்தே பிறக்கின்றன
தாஸ் கதாபாத்திரம் வரும்போதெல்லாம் இவர் யார்? இவரா அவரா என்று யோசிக்க வைக்கிறது. பிற்பாதியில் எழுத்தாளர் தாஸ் சென்னைக்கு வந்து தனக்கென்று வாசகர் வட்டம் என்ற பெயரில் ரசிக அடிவருடிகளை வைத்து ரஜினிக்கு நிகராக தனது கட்அவுட்டுக்கு பீர் அபிகேஷம் செய்யும் பவர்ஸ்டார் கோமாளித் தனங்களை புன்னகையுடன் படித்தேன். குறிப்பாக தாஸின் வாசகர்கள் நாவல் வெளியீட்டு விழாவுக்கு ஒரு பெண்ணை காசுகொடுத்து அழைத்து வருகிறார்கள். அந்தப்பெண் தாஸை தனது மார்பில் கையெழுத்து போட சொல்லி வற்புறுத்துகிறாள். இவள்தான் தனது உணமையான வாசகி என்று தாஸ் மேடையில் பெருமையாக பேசுகிறார். அதே மேடையில் ஏறும் சாதிக் ரஜினி பட வசனங்களை பேச தாஸின் வாசகர்கள் அதற்கும் கைதட்டுகிறார்கள். இரண்டாயிரத்துக்கு பிறகு கிட்டத்தட்ட இலக்கிய ரசிகர்களும் (வாசகர்கள் அல்ல) சினிமா ரசிகர்களும் ஒரே மாதிரித்தான் தங்கள் மூளையை அடகுவைத்து கிடக்கிறார்கள். பிறகு அந்தபெண் மேடைக்கு பின்னால் சென்று மனுஷனா அவன்? கையெழுத்து போட சொன்னால் பேனாவால் கீறி வைக்கிறான். ஒழுங்கா பேசுன காசை கொடுத்துடுங்க என்று தாஸின் வாசகர்களிடம் சண்டை போடுகிறாள்.
எண்பதுகளின் மார்க்சிய சித்தாந்தம் சிதைந்து பின்நவீனத்துவம் வந்தபிறகு அது ஒரு தனிமனித நம்பிக்கைகளை இருப்பை எப்படி அலைக்கழிக்க வைத்து அவனை காணாமல் போக வைத்தது என்பதை வலுவாக பதிவு செய்தவகையில் இந்நாவல் முக்கியம்பெறுகிறது. அதே நேரம் சாதிக் தோற்றுப்போனால் அது அவன் கொண்ட நம்பிக்கைகளின், சித்தாந்தங்களின் தோல்வி அல்ல. வச்சா குடுமி. அடிச்சா மொட்டை என்று சொல்வார்கள். சாதிக்கும் அப்படியொரு பிடிவாத மனநிலையில்தான் வாழ்கிறான். வெகுஜன ரசிக மனோபாவத்தின் உச்சத்துக்கு சென்று ராகேவந்திரா மண்டபம் சென்று ரஜினி காலில் விழுந்து ஆசிப்பெற்று வருகிறான்.
நாவலில் நுட்பமாக வரும் சில இடங்களும் உண்டு. கறுப்பு நாயொன்று சாதிக்கை பின்தொடர்ந்து வந்தபடியே இருக்கிறது. ரஜினி கட்அவுட் மீதிருந்து சாதிக் கால் தவறி விழும்போது அந்த நாய் வந்து அவனது மூளையை நக்குகிறது. எல்லா மகத்தான மூளைகளையும் கடைசியில் ஓர் அற்பநாய் வந்துதான் நக்கிவிட்டு செல்கிறது.

Friday, October 17, 2014

கால்களின் கீழே சுழலும் உலகம்

இம்மாத புதிய புத்தகம் பேசுது இதழில் ஆர். அபிலாஷின் கால்கள் நாவல் குறித்து நான் எழுதியிருந்த நூல் அறிமுகம்.

தமிழ் இலக்கியப்பரப்பில் இதுவரை மாற் றுத்திறனாளிகள் உலகையும்,அவர்கள் இருப்பையும், இருப்பிற்கான தத்தளிப்பையும், அவர்களின் உடல் வலியையும்,வலி சார்ந்த தகவல்களையும் இவ்வளவு நுட்பமாகப் பதிவு செய்த நாவல்கள் எதுவும் வந்துள்ளதா என்று தெரியவில்லை. அந்தவகையில் தமிழின் குறிப்பிடத்தக்க நாவலாக அபிலாஷின் கால்கள் நாவலைச் சொல்லலாம்.

தனது இளம்பிராயத்தில் போலியோ அட்டாக் வந்து கால்கள் பாதிக்கப்பட்ட மதுக்‌ஷரா என்ற மதுவின் அகவுலகமும் அவள் புறவுலகில் சந்திக்கும் வேறுபட்ட குணங்கள் கொண்ட எண்ணற்ற மனிதர்களும், அவர்களுக்குள் நடக்கும் இடையறாத உரையாடல்களுமே நாவலின் மையப்புள்ளி. அழகென்றும் சொல்லமுடியாத அழகி இல்லையென்றும் சொல்லமுடியாத சராசரித் தோற்றமுடைய மதுவின் அகஉலகத்தை இரண்டு அடுக்காகப் பிரித்துக்கொள்ளலாம்.

மது தனது வீட்டில் அவளுக்காக ஒதுக்கப்பட்ட தனியறையில் அமர்ந்து தனது உடலின் ஒருபகுதியாக இருக்கும் காலிப்பரையும் அது ஏற்படுத்தும் வலியையும் தொடர்ந்து கவனித்தபடியே இருக்கிறாள். ஒவ்வொரு முறை காலிப்பரைப் பொருத்தும்போதும், தனியாக கழிவறைக்குச் சென்று திரும்பும்போதும், சக்கர நாற்காலியில் உட்காரும்போதும், மாடிப்படிகளில் ஏறி இறங்கும்போதும், வெளியிடங்களுக்குச் சென்று திரும்புகிறபோதும் மது அடையும் பெருவலியை அவளது அந்தரங்க மனம் கவனித்து வலியுடன் தொடர்ந்து அவள் உரையாடுவது போன்ற தருணங்கள். பிறகு அவள் வளர்ந்து பெரியவள் ஆனதும் அவளது உடம்பு அடையும் மாறுதல்களையும், அது தரும் வேறுவிதமான வலியையும், இனம்புரியாத அவஸ்தையையும் தொடர்ந்து கவனிப்பது என்று இந்நாவல் முழுக்க வலி சார்ந்த நுட்பமான தகவல்கள் மதுவின் அகவுலகத்தில் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன.
இரண்டாவது மதுவின் புறஉலகம். மதுவின் புறஉலகத்தை இரண்டு அடுக்காகப் பிரித்துக் கொள்ளலாம். முதல் அடுக்கில் மதுவின் அப்பா,அம்மா, கார்த்திக், பேராசிரியர் மதுசூதனன் அவரது மகன் பாலு போன்ற மைய துணைப்பாத்திரங்கள். இரண்டாவது அடுக்கில் அந்த மைய துணைப்பாத்திரங்களோடு தொடர்புடைய எண்ணற்ற மனிதர்கள். வேறுபட்ட குணாதிசயங்களுடன் உலவும் இந்த மனிதர்களின் இடையே நடக்கும் உரையாடல்கள், உரையாடல்கள் வழியே விரியும் அரசியல், தத்துவம், வரலாறே இந்நாவலுக்கான விரிவையும், ஆழத்தையும் கொடுக்கிறது.

எதிலும் ஆர்வமற்ற மது ஒரு சுவர்ப்பல்லி போலத் தொடர்ந்து தனது உடலையும், சுற்றியுள்ள மனிதர்களையும், அவர்களது பேச்சுகளையுமே விளையாட்டுப் போல கவனித்துக் கொண்டிருக்கிறாள். ஒருகட்டத்தில் அவளுக்கு அதுவே வாழ்க்கையாகவும் மாறிவிடுகிறது. வளர்ந்ததும் ஆங்கில இலக்கியம் படிக்கச் செல்கிறாள். அங்கும் அதுவே தொடர்கிறது. புத்தகங்களும், மனிதர்களும் அவளுக்கென்று ஒரு தனித்த சிந்தனையை, தர்க்கத்தை ஏற்படுத்துகிறார்கள். அவளிடம் இருப்பது முன்கூட்டிய பிடிவாதமான சிந்தனைகள் என்று சொல்லமுடியாது. ஆனால் யாராவது அவளது சுயத்தைக் காயப்படுத்தினால் அவளால் அவ்வளவு எளிதில் அதை உதறிப்போக முடியாமல் வாதங்களால் அதைச்சாடுகிறாள். அதனாலேயே பிடிவாதக்காரி என்றும் முரட்டுப்பெண் என்றும் சிலரால் நினைக்கப்படுகிறாள்.
மதுவின் அப்பாவுக்கும் மதுவுக்குமான உறவு நுட்பமாக நாவலில் பதிவாகியுள்ளது போன்று மதுவுக்கும், அவளது அம்மாவுக்குமான உறவு அவ்வளவு விரிவாக இல்லையோ என்று தோன்றுகின்றது. மதுவை சிறுவயதிலிருந்து வைத்தியசாலைக்குத் தூக்கிச்செல்வதும், கால்களுக்கு எண்ணெய் தடவிவிடுவதுமாக அற்புதமான தந்தையாக இருக்கும் அவரேதான் பல நேரங்களில் மது மீது எரிந்து விழுந்து அவளை வெறுக்கிறார். சுடிதார் வாங்கித் தரச் சொல்லிக் கேட்கும் நேரத்தில் கடுமையாகத் திட்டும் அவரேதான் பின்னாட்களில் மதுவுக்கு வாய்பேசாத வரன் அமையும்போது காலம் முழுக்க என் பெண்ணை நானே தூக்கிச் சுமக்கிறேன். ஆனால் ஓர் ஊமைக்கு கட்டிக்கொடுக்க மாட்டேன் என்று தீர்மானமாகச் சொல்கிறார். மதுவுக்கு அவளது தாயிடம் பெரிதாக எந்த ஆர்வமும் இல்லை. ஒருசில நேரங்களில் கழிவறை செல்லும்போது மதுவின் அம்மா உதவி செய்கிறாள். சில நேரங்களில் மது அவளது அம்மாவுக்கு சமையலில் உதவி செய்கிறாள். எஞ்சிய நேரங்கள் எல்லாம் மதுவின் வீடு முழுக்க அவளது அப்பாதான் நிறைந்து விடுகிறார். தூக்கத்தில் ஆடை கலைந்த அப்பாவின் ஆண்குறி அவளது கனவில் வருகிறது. அப்பாவின் மீதுள்ள ஈர்ப்பு போல கார்த்திக் மீது மதுவுக்குப் பெரிதாக எந்த சுவாரசியமும் இல்லையோ என்றுதான் தோன்றுகிறது.

சில குறைவான பக்கங்களே வரும் துணைக் கதாபாத்திரங்கள் எல்லாம் அவ்வளவு கவனமாகவும், நுட்பமாகவும் செதுக்கப்பட்டுள்ளன. அந்த துணைக் கதாபாத்திரங்கள் இல்லாமல் போனால் இந்நாவலுக்கு கிடைத்திருக்கும் அபாரமான விரிவும், சுவாரசியமும் கிடைக்காமல் வெறுமனே ஏதோ ஒரு பெண்ணின் கழிவிரக்கத்தைச் சொல்லும் நாவலாகத் தடம்மாறிப் போயிருக்கலாம். மதுவின் வாழ்க்கையில் அவ்வப்போது இதுபோன்ற எண்ணற்ற மனிதர்கள் நீர்க்கோலம் போன்று வந்து மறைந்துபோகிறார்கள். மதுவின் இளம் வயதில் வரும் மத்தாயி என்ற செயற்கைக்கால் பழுது பார்க்கும் கடை நடத்துபவர் மற்றவர்களால் அவருக்கும் அவரது சித்திக்கும் இருப்பதாக நம்பப்படும் உறவு, பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் பிளேடு என்ற பட்டப்பெயர் கொண்ட மனிதர் அவரது குடும்பம், பெண்களோடு பேசும்போது அவர்களின் மார்பை மட்டுமே கவனிக்கும் ஹரிஹர ஐயர் என்ற மனிதர், ஆட்டோ ஓட்டும் கணேஷ், உலகத்துக்கு கீழ் இருக்கும் அனைத்திற்கும் கருத்து எழுதும் மார்க்கண்டேயன் என்ற எழுத்தாளர். அவர் எழுதும் சி++ என்ற புத்தகம்,டாக்டர் ஆபிரகாம் போன்று நாவல் முழுக்க வரும் உதிரிமனிதர்களால் நாவல் பிரமாண்டமாக விரிகிறது. மது இறுதிவரை அதே ஊரில் இருந்தாலும் பல துணைக்கதாபாத்திரங்கள் நாவலில் தொடர்ந்து பயணிக்காமல் ஆங்காங்கே மறைந்து விடுகிறார்கள். ஆனால் இதை நாவலின் ஒரு பிரச்சனையாகவும் பார்க்க முடியாது. வாழ்க்கையில் ஒரு மனிதன் சந்திக்கும் நிறைய மனிதர்களில் யாரோ ஒரு சிலர் மட்டும் அவனது இறுதிவரை பயணம் செய்து வருகிறார்கள்.

மாற்றுத்திறனாளிகளின் உலகத்தைப் புரிந்துகொள்வது பெரிய விஷயமில்லை. உடல் வலி அவர்களுக்கு ஒரு பிரச்சனையில்லை. உதாசீனமும், கேலியும், கிண்டலும், அல்லது அளவுக்கதிகமான கரிசனமும் (பாசாங்கற்றதாகவே இருந்தாலும்), ஒப்பீடு செய்வதுமே அவர்களைக் காயப்படுத்துகின்றன. அதுவே அவர்களை சராசரி மனிதர்களிடமிருந்து விலக்கிவைப்பதாகவும் உணர்கின்றார்கள்.

நாவலின் ஒரு அத்தியாயத்தில் மதுவின் அப்பா அவரது அலுவலக நண்பரின் வீட்டுக்கு மதுவை அழைத்துச்செல்வார். அலுவலக நண்பரின் வீட்டில் இருக்கும் பவித்ரா என்ற மதுவின் வயதையொத்த பெண்ணுக்கும் கால்கள் செயலிழந்த நிலையில் இருக்கும். ஆனால் அவள் அதீத தன்னம்பிக்கையுடன் இருப்பாள். கணிப்பொறி கற்றுக்கொண்டிருப்பாள். வண்டி ஓட்டுவாள். பெரிய வேலையில் இருப்பாள். சந்தோஷமாகவும், வசதிகளுடன் கூடிய ஒருவித நடுத்தர மேல்தட்டு வர்க்கம் போல சித்தரிக்கப்பட்டிருக்கும் அந்தப்பெண் அதீத நம்பிக்கையுடனும், மகிழ்வுடனும் வாழ்க்கையை எதிர்கொள்வாள். மதுவின் அப்பா அந்தப்பெண் போல ஏன் உன்னால் தன்னம்பிக்கையாக வாழ்வை எதிர்கொள்ள முடியவில்லை என்று கேட்டு மதுவைத் திட்டுவார். மதுவுக்கு குழப்பமாக இருக்கும். அவளது உடல் குறைபாட்டின் அளவு வேறு. எனது குறைபாடு வேறு. நான் ஏன் அவள் போல இருக்க வேண்டும்? என்று கேட்பாள்.
மதுவுக்கு வைத்தியம் செய்ய வரும் சித்த வைத்தியர்கள் எல்லாம் ஏதேதோ செய்து தொடர்ந்து தோற்றுப்போகிறார்கள். அவர்கள் கொடுக்கும் எந்த மருந்தும் அவளது காலை குணப்படுத்தவில்லை. மாறாக மருந்துகள் அவளது யானைப்பசியைத்தான் அதிகரிக்கின்றன. அதனால் உடல் பருமன் ஆகிக்கொண்டே போகிறது. ஆரம்பத்தில் தனது உடல் பருமனைப் பற்றி லேசாகக் கவலைப்படும் மது பிறகு ஒருக்கட்டத்தில் அதை அலட்சியம் செய்கிறாள்.

சமீபத்தில் எனக்குத் தெரிந்த ஒரு நண்பரின் ஆறு வயது மகன், மாற்றுத்திறனாளி. கழிவறையில் கால் வழுக்கி அங்கிருந்த இரும்புவாளியில் தலை அடிபட்டுவிட்டது. ஐசியூவில் சேர்க்கும் நிலைமைக்குப் போனது. பொதுஇடங்களை விட்டுவிடலாம். இந்தியாவில் மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் வீடுகளில் கூட அவர்களுக்கான முறையான கழிப்பறை, சக்கர நாற்காலி ஏற்றிச்செல்லும் மாடிப்படி வசதிகள் இல்லை. அதைப்பற்றி பேஸ்புக்கில் விரிவான கட்டுரையொன்றை எழுதியிருந்தேன். சென்னை போன்ற பெருநகரங்களில் இருக்கும் ஷாப்பிங் மால்களில், இப்போது கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் நிலையம் போன்ற சொற்ப இடங்கள் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் அளவுக்குத் தகுதி கொண்டவையாக இருக்கின்றன. அங்கும் அவர்களுக்கான கழிவறை வசதிகள் எப்படி என்று தெரியவில்லை. அதைக் கூட சகித்துக்கொள்ளலாம்.
இந்நாவலின் இறுதியில் மது பிரத்யேக வண்டியோட்டுவதற்காக விண்ணப்பிக்கின்றாள். அங்கு மதுவுக்கு மருத்துவச் சான்றிதழ் வழங்கும் மருத்துவர் முதல் போக்குவரத்து அதிகாரி வரை லஞ்சம் வாங்குகிறார்கள். மற்றவர்களிடம் அதிகமாகக் கைநீட்டும் அரசு அதிகாரிகள் மாற்றுத்திறனாளிகளிடம் இரக்கப்பட்டு கொஞ்சமாக லஞ்சம் வாங்குவதை நானே பலமுறை நேரில் பார்த்து அவர்களது இரக்ககுணத்தை வியந்து பாராட்டியுள்ளேன்.

நாவலுக்காக அபிலாஷ் பயன்படுத்தியுள்ள கவித்துவமான மொழி கவனிக்கத்தக்கது. அதிக சிடுக்குகள் இன்றியும், சாதாரணமாக இல்லாமலும் வாசிக்க சிரமப்படுத்தாமல் செல்லும் இந்நாவலைப் பற்றி சில நண்பர்கள் பொதுக்கருத்தொன்றைச் சொல்வதைக் கவனித்துள்ளேன். அது இந்நாவல் மெதுவாகச் செல்கிறது. எல்லா ரயிலும் வேகமாகச் செல்ல வேண்டுமா என்ன? மலைரயிலுக்கென்று ஓர் அழகு உண்டு. இந்த மலைரயிலில் பயணிக்கும்போது ஆங்காங்கு வரும் பிளேடு,எழுத்தாளர் மார்க்கண்டேயன், டாக்டர் ஆபிரகாம் போன்ற மனிதர்கள், அவர்கள் ஊடான உரையாடல், அதில் இருக்கும் மெல்லிய அங்கதம், சமூகக் கோபம் என்று இந்நாவல் தொடர்ந்து அதன் வெற்றியைத் தக்கவைத்துக்கொண்டே நம்மைக் கடத்திச்செல்கிறது.
ஒரு பெண் மாற்றுத்திறனாளியின் உலகையும், அவள் சார்ந்திருக்கும் சமூகத்தையும் விரிவாக இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் வகையில் இந்நாவல் கொண்டாடப்பட வேண்டியது. சமீபத்தில் இந்நாவல் எழுதிய ஆர்.அபிலாசுக்கு சாகித்ய அகாடமியின் இளம் எழுத்தாளருக்கான யுவபுரஸ்கார் விருது கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அபிலாசுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வோம்.

Sunday, October 12, 2014

ராஜீவ்காந்தி சாலை - இரண்டு விமர்சனங்கள்

ராஜீவ்காந்தி சாலை நாவல் பற்றி  ஈழத்து எழுத்தாளர் வ.ந.கிரிதரன் விமர்சனம்

(நன்றி:-வ.ந.கிரிதரன்)

அண்மையில் விநாயக முருகனின் 'ராஜீவ்காந்தி சாலை' நாவல் வாசிக்கும் சந்தர்ப்பமேற்பட்டது. உயிர்மை வெளியீடாக வெளிவந்துள்ள நாவல் அண்மைக்காலத்தில் வெளியான தமிழ் நாவல்களில் முக்கியமான, கவனிக்கப்பட வேண்டிய நாவல்களிலொன்று. மொழியில் எந்தவிதப் புதுமையுமில்லை. தமிழக வெகுசனப் பத்திரிகைகளை வாசிக்கும் வாசகர் ஒருவருக்கு நன்கு பழகிய மொழிதான். இந்த நாவல் முக்கியத்துவம் பெறுவது இது கூறும் பொருளினால்தான். அப்படி எதனைப் பற்றி இந்த நாவல் பேசுகிறது? சுருக்கமாகக் கூறப்போனால் உலகமயமாதலுக்குத் தன்னைத் திறந்து விடும் வளர்ந்து வரும், அபிவிருத்தி அடைந்து வரும் நாடொன்றில் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சூழல்களில் எவ்வகையான மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை விமர்சிக்கும் நாவலிதுவென்று கூறலாம். இத்தருணத்தில் கறுப்பு 'ஜூலை' 1983யினைத் தொடர்ந்து, உலகின் நானா பக்கங்களையும் நோக்கி, அகதிகளாகக்ப் படையெடுத்த ஈழத்தமிழர்களைப் பற்றி சில விடயங்களை எண்ணிப்பார்ப்பது 'ராஜீவ்காந்தி சாலை' நாவல் கூறும் பொருளைப்பொறுத்தவரையில் முக்கியமானது; பயன்மிக்கது.

ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் அகதிகளாகப் புலம் பெயர்ந்துப் புகுந்த நாடுகள் செல்வச்செழிப்புள்ள, முதலாளித்துவச் சமுதாய அமைப்பைக்கொண்ட மேற்கு நாடுகள். இந்த நாடுகளில் நிலவும் சமூக, பொருளாதாரச் சூழல்களுக்கும், அதுவரை அவர்கள் வாழ்ந்த நாட்டின் சமூக, பொருளாதாரச் சூழலுக்கும் மலைக்கும், மடுவுக்குமிடையிலான வித்தியாசம். மேற்கு நாடுகளில் நிலவும் கடனட்டைக் கலாச்சாரம் ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் புதியது. உலக மயமாதலின் விளைவுகளால சமூக, பொருளியல் சூழல்களில் மிகப்பெரிய மாற்றத்தை அடைந்த இந்திய மத்திய வர்க்கத்தினரின் நிலையும், மேற்கு நாடுகளின் பொருளியற் சூழல்களுக்குள் இறக்கி விடப்பட்ட ஈழத்தமிழ் அகதிகளின் நிலையும் இந்த வகையில் ஒரே மாதிரியானவை என்று கூறலாம். ஒரு வேலை இருந்தால் , தகுதிக்கு மீறிய கடன் தொகையுள்ள கடனட்டைகளைப் பெற்றபோது , ஆரம்பத்தில் அகதிகளாகப் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு அது இன்பமளிப்பதாகவேயிருந்தது. அதன் பின்னர் அவர்களது வாழ்க்கை கடன் கலாச்சாரத்துள் முற்றாகவே மூழ்கி விட்டது. கடனுக்குக் கார் வேண்டலாம்; கடனுக்கு வீடு வாங்கலாம்; வீட்டுப் பெறுமானத்தின் உபரி மதிப்பிற்குச் சமமாக கடன் எடுக்கும் வசதியினைப் பெறலாம். இவ்விதமாகப் பல 'கடன்' நன்மைகளைச் சுகிக்கலானார்கள் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள். இவ்விதமான சமூக, கலாச்சார மாற்றங்களுக்குள்ளாகியவர்கள் அகதிகளாகப் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மட்டுமல்லர். கல்வி, வேலை வாய்ப்பு போன்ற பல காரணங்களுக்காக, மேற்கு நாடுகளை நோக்கிப் பல்வேறு நாடுகளிலிருந்தும் , வளர்முக, அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளிலிலிருந்து சென்ற அனைவருக்கும் பொருந்தும். இவ்விதமாகக் கடனட்டை, கடன் போன்றவற்றின் ஆதிக்கத்தின் கீழ் மக்களைக் கொண்டுவரும் முதலாளித்துவ சமுதாய அமைப்பானது, அதன் பின் அம்மக்களை அதன் பிடிக்குள் கொண்டுவந்து, செக்குமாடுகளாக்கி விடும். உழைப்பது கடன்களைக் கட்டுவதற்கே என்று வாழ்க்கை மாறிவிடும். பெரும்பாலானவர்கள் உதாரணத்துக்கு வாங்கிய வீட்டின் விலையைப்போல் இரு மடங்கு வரையிலான விலையை 25 வருட காலத்து வீட்டுக் கடனுக்குக் கட்டி முடிக்கும்போது அவர்களது வாழ்வின் பெரும்பகுதி முடிந்து விட்டிருக்கும். இவ்விதமான வாழ்க்கையானது குடும்பங்களுக்குள் பல்வேறு வகையான சிக்கல்களை உருவாக்கிவிடுகின்றது.

இதே வகையானதொரு நிலையினைத்தான் இந்தியாவில் உலகமயமாக்கலின் விளைவாக உருவான 'பணம் புழங்கும்' நடுத்தர மக்களின் வாழ்க்கையிலும் காணலாம். மேற்கு நாட்டுசமூகக் கலாச்சாரச் சூழலை அப்படியே கொண்டு வந்து, வளர்ந்துவரும் இந்தியா போன்ற நாடொன்றில் நட்டுவிட்டால் எவ்வகையான விளைவுகள் உருவாகுமோ அவ்வகையான விளைவுகள் அனைத்தும் இங்கும் உருவாகும். அவைதான் 'ராஜீவ்காந்தி சாலை'யிலும் உருவாகின. பணம் புழங்கும் மத்தியதர மக்கள் மில்லின் கணக்கில் உருவானதும், மேற்கு நாடுகளின் மிகப்பெரிய நிறுவனங்களுக்குப் புதியதொரு சந்தையினை இந்த மாற்றம் திறந்து விட்டது. குறைந்த அளவு ஊதியத்துடன் உழைப்பை வாங்குவதன் மூலம் இலாபத்தை அதிகரித்த மேற்கு நாடுகளின் மிகப்பெரிய நிறுவனங்கள், இந்த மாற்றத்தால் உருவான புதிய மத்தியதர வர்க்கத்தை மையமாக வைத்துத் தம் வியாபார நடவடிக்கைகளை ஆரம்பித்து மேலும் இலாபத்தைச் சம்பாதித்தன. ஒரு கல்லில் இரு மாங்காய்கள். 'கோல்கேற்' பற்பசை , கோர்ன் ஃபிளாக்௶ஸ் சீரியல்கள் தொடக்கம், ஃபோர்ட் வாகங்கள், ஜிஎம் வாகனங்கள் போன்ற வாகனங்கள் தொடக்கம், புதிய சந்தை நிலவும் நாட்டில் பேசப்படும் பன்மொழிகளில் திரைப்படங்களை மிகச்சிறப்பாக 'டப்பிங்' செய்வது தொடக்கம் இலாபத்தை அள்ளிக்குவித்தன மேற்கு நாட்டின் நிறுவனங்கள். 'மாஸ்டர் கார்ட்', 'விசா', 'அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்' என்று அத்தனை கடன் அட்டை நிறுவனங்களும் நுழைந்து விட்டன. பல்வேறு வகையான காப்புறுதி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், 'மல்டி லெவல் மார்கட்டிங்' என்று அனைத்து நிறுவனங்களும் நுழைந்து விட்டன.

மேற்கு நாடுகளின் நிறுவனங்களின் பணியினைக் குறைந்த ஊதியத்தில் செய்வதற்காகப் பல தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் பூற்றீசல்களைப் போல் முளைத்தன. இவ்விதமான நிறுவனங்களில் மிகவும் உயர்ந்த ஊதியத்துடன் வேலை பார்க்கும் மக்களை மையமாக வைத்து வங்கிகள், நிதி நிறுவனங்கள் எல்லாம் வலையை விரித்தன. கையில் காசு புழங்கத்தொடங்கியதும் இவ்வகையான நிறுவனங்களில் பணி புரிவோரின் வாழ்க்கை மாறத்தொடங்கியது. மேற்குக் கலாச்சாரம் அவர்களைச் சுற்றிப் பின்னிப் பிணைந்து விட்டது. வாகனம் வாங்குவது, கார் வாங்குவது என்பவையே அவர்களது கனவுகளாகின. புதிய சூழல், புதிய வாழ்க்கை முறை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை மட்டுமல்ல மன அழுத்தத்தினையும் கூடவே கொண்டுவந்து விட்டது. சக்திக்கு மீறிய வகையில் கடன்களைப் பெறும் சூழல் உருவாகியது. கடன்களைப் பெற்று வீடுகள், வாகனங்கள் போன்றவற்றை வாங்கியவர்களுக்கு, வேலை சிறிது காலம் இல்லாமல் போனால் கூடத் தாங்க முடியாத நிலைதான். வாசலில் நின்று கடன்களை அவர்கள் மேல் திணித்த நிதி நிறுவனங்கள், வங்கிகள் இவ்விதமான இக்கட்டான நிலையில், உதவுவதில்லை. பணத்தைத் திருப்பிக் கட்டும்படி நெருக்குதல்களைக் கொடுக்கத் தொடங்கும் சூழலுருவாகும். விளைவு? குடும்பங்கள் பிளவுறுதல், தற்கொலைகள், கொலைகள் என்று பல்வேறு வகையான பக்க விளைவுகள் உருவாகும். இரவினில் தனித்துப் பெண்கள் வேலை செய்யும் சூழல்கள், அவர்களுடன் பணி புரியும் ஆண்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினை ஏற்படுத்தும். வேலையிழத்தல் போன்ற சூழல்கள் உருவாக்கும் பொருளியற் சுமைகள் காரணமாக ஒருவருக்கொருவர் பண உதவிகள் பெறுவது, பின்னர் அதன் காரணமாக ஒருவருக்கொருவர் அநுசரித்து வாழ்வது என்று ஏற்படும் மாற்றங்கள் தம்பதியினரின் குடும்ப வாழ்வினைச் சீரழிக்கின்றன.

இன்னுமொரு விடயத்தையும் இந்நாவல் விமர்சிக்கின்றது. குழந்தைகள் மேல் புரியப்பட்டும் பாலியல் வன்முறைகள் எவ்விதம் அவர்களது வாழ்வினைச் சிதைத்து விடுகின்றன என்பதை நாவலில் வரும் கெளசிக் பாத்திரத்தினூடு ஆசிரியர் விமர்சனத்துக்குள்ளாக்குகின்றார். சிறுவயதில் ஆண் உல்லாசப்பிரயாணிகளினால், முதிய செல்வந்தப் பெண்களினால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படும் அவன் வளர்ந்ததும் இளம்பெண்களைப் பாலியல்ரீயில் வதைப்பதில் இன்பம் காணுமொரு வெறியனாக உருமாற்றமடைகின்றான். அதன் விளைவாகக் கொலையுண்டும் போகின்றான். சிறு வயதில் அவன் மிக அதிகமாகப் பாலியல் வன்முறைக்குள்ளாகியது ஆண் உல்லாசப்பிரயாணிகளால்தான். எனவே அவனது ஆத்திரம் அவ்விதமான ஆண்கள்மேல் ஏற்படாமல் எதற்காகப் பெண்கள் மேல் ஏற்பட வேண்டும் என்றொரு கேள்வி எழுவதையும் தடுக்க முடியவில்லை.

மொத்தத்தில் விநாயக முருகனின் ராஜீவ்காந்தி சாலை இவ்விதமாக உலகமயமாதலால் அடியோடு மாறுதலடைந்து, ராஜீவ்காந்தி சாலையாக மாறிய சென்னையின் மகாபலிபுரச்சாலையின் மாறுதல்களை விமர்சிக்கின்றது. உண்மையில் உலகமயமாதல் எவ்விதம் செல்வந்த நாடுகளின் இலாபத்திற்காக வளர்முக நாடுகளில் நிலவிடும் இயற்கைச் சூழலினை , விவசாயம் போன்ற தொழில்களை, சிறுவர்த்தகச் செயற்பாடுகளைச் சிதைத்து விடுகின்றது. எவ்விதம் நகர்ப்புறங்களில் செல்வச்செழிப்புள்ள பகுதிகளை உருவாக்கும் அதே சமயம், மிகவும் வறிய மக்களைக்கொண்ட சேரிகளையும் உருவாக்கி விடுகின்றது. எவ்விதம் பாலியல்ரீயிலான உளவியற் பிரச்சினைகளை உருவாக்கி, அவற்றின் தீய விளைவுகளை உருவாக்கி விடுகின்றது. இவற்றைப்பற்றியெல்லாம் விமர்சிக்கின்றது. அந்த வகையில் 'ராஜீவ்காந்தி சாலை' ஒரு குறியீடு. உலகமயமாதல் வளர்ந்துவரும், அபிவிருத்தியடைந்துவரும் நாடொன்றில் ஏற்படுத்தும் சமூக, பொருளியல், கலாச்சார மற்றும் சூழற் பாதிப்புகளை விமர்சிக்குமொரு குறியீட்டு நாவல் விநாயக முருகனின் 'ராஜீவ்காந்தி சாலை'.


டிசே தமிழனின் விமர்சனம்
(நன்றி :- டிசே தமிழன்)

அளவிற்கு அதிகமான பரபரப்புக்களும், விளம்பரங்களும் ஒரு படைப்பிற்கோ/படைப்பாளியிற்கோ எத்தகைய மேலதிக மதிப்பையும் வழங்கிவிடாது என்றும் நம்பும் ஒருவன் நான். 'ராஜீவ்காந்தி சாலை' நாவல் வெளிவந்தபோது, நாவலின் உள்ளடக்கம் குறித்து எதுவும் அதிகம் பேசாமலே அதற்கு வழங்கப்பட்ட 'வெளிச்சம்' , அந்நாவலை வாசித்துப் பார்ப்பதற்குத் தயக்கத்தைத் தந்திருந்ததால் -சில மாதங்களுக்கு முன்னும் விற்பனையிற்கு இருந்தபோதும்- அதை வாங்காமல் நகர்ந்திருக்கின்றேன்.

இப்போது அதை ஆறுதலாக வாசித்துப் பார்க்கையில், விநாயகமுருகனின் முதலாவது நாவல் என்றவகையில் கவனிக்கப்படவேண்டிய ஒரு நாவலாகவே தோன்றுகின்றது. நவீன காலத்தின் சிதறிய மனங்களை தகவல் தொழில்நுட்பப் பின்னணியில் வைத்து எழுதப்பட்டிருந்தாலும், அந்த 'வளர்ச்சி'யில் உள்ளும் புறமும் தொடர்புபட்ட மனிதர்களின் வாழ்வு பதியப்பட்டிருக்கின்றது.

இன்றைய தகவல் தொழில்நுட்பம் உலகையே உள்ளங்கையில் கொண்டுவந்திருக்கின்றது போன்ற பாவனையைத் தந்தாலும், மனித வாழ்வை இன்னுமின்னும் சிக்கலாக்கி, பல நூறு சில்லுகளாய் மனங்களை உடைத்து, ஒவ்வொருரையும் தனித்தனித் தீவுகளாகவே பெரும்பாலும் ஆக்கியிருக்கின்றது. இந்நாவலும் ஐரி(/டி) துறையில் உச்சத்திலிருப்பவர்களிலிருந்து, இதற்காய் நிலங்களை இழந்து சேரியில் வாழும் மனிதர்கள் வரை எல்லோரையும் ஊடுருவிப் பார்க்கின்றது.

பணத்திற்காகவும், அதன் நிமித்தம் வரும் வசதிகளுக்க்காகவும் பெரும்பான்மையான மனிதர்கள் இந்நாவலில் ஓடிக் கொண்டேயிருக்கின்றார்கள். அவர்கள் விரும்பிய சிலவற்றை அடைந்தபின்னும் இன்னுமின்னும் ஆசைகள் பெருகப் பெருக எதெதெற்கோ தொடர்ந்தும் அலைந்துகொண்டேயிருக்கின்றார்கள். இலட்சங்களில் உழைத்தால் கூட, இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு எதையும்/எவரையும் திருப்திப்படுத்தமுடியாதென இன்னுமின்னும் தேடப்போய் தங்களைத் தொலைத்தும் கொள்கிறார்கள்.

மனிதர்கள் மனம் பிறழ்கிறார்கள், சுமூகமான உறவுகள் சிதைகின்றன, மாடிகளிலிருந்து குதித்து அடிக்கடி தற்கொலை செய்கின்றனர். வெளிநாட்டு நிறுவனங்களுக்காய்ச் செய்யும் ஒவ்வொரு ப்ரஜெக்ட்டைப் போல, இவ்வாறாக இறந்துபோகும் மனிதர்களையும் எளிதில் மறந்துவிட்டு அடுத்து என்னவென அலைபாய்கின்றார்கள்.எந்த நேரத்திலும் சிதையும் மனோநிலையுள்ள மனிதர்களாய் தாங்களும் ஆகிவிடக்கூடும் என்ற நினைப்பை ஒத்திவைத்துவிட்டு வேலைக்குள் இன்னும் மூழ்குகிறார்கள்.

ஐரி நிறுவனங்கள் பற்றி அவ்வளவு பரிட்சயமில்லாதவர்களுக்கு இவ்வளவு இருட்டு நிறைந்த உலகமா அது என இந்நாவலை வாசிக்கும் ஒருவரை அச்சமூட்டக்கூடும். ஆனால் இன்றைய மெய்நிகர் உலகில் இந்நாவலில் குறிப்பிடுபவை எங்கேயும் எந்தச் சூழலிலும் நடைபெறுபவையே/நடைபெறக்கூடியவையே.

இந்நாவலிற்குள் இருக்கும் பெரும் பலவீனம் என்னவென்றால். நாவலின் எந்தக் கதாபாத்திரங்களுக்குள்ளும் ஆழமாய் இறங்கிச் செய்யவில்லை என்பதே. நாவல் முழுதும் தொடர்ந்து வரும் ப்ரணவ் செய்யும் தற்கொலை கூட ஏன் மனதை அவ்வளவாய்ப் பாதிக்கவில்லை என்று யோசிக்கவேண்டியிருக்கிறது. ஐரி துறையில் நீண்டகாலம் இருக்கும் பிரணவிற்கு ஆகக்குறைந்தது அது இயங்கும் சூழல் தெரியும் என நாவலில் தெளிவாகக் கூறப்படும்போது, சடுதியாக வேலையிழத்தலோ அல்லது மனைவியின் பிற ஆண் மீதான உறவோ , இவ்வாறான ஒரு முடிவை எடுக்க வழிவகுக்கச் செய்யுமா என்கின்ற சந்தேகம் வாசிப்பவருக்கு வரக்கூடும்.

அதுபோலவே தற்கொலை செய்யும் இரண்டு (காதல்?) சோடிகளின் தற்கொலைகளும் இருக்கின்றன. கணவன் இருக்கின்றபோதும், எல்லோருக்கும் பொதுவாய்த் தெரியக்கூடியதாய் வேலைத்தளத்தில் உள்ள ஆணோடு நெருங்கிப் பழகவும், அமெரிக்கா ஆன்சைட் போகின்றபோது அங்கு சந்திக்கும் கறுப்பின சக வேலையிட ஆணோடு உறவு கொள்கின்ற ஒரு பெண், எப்படி தற்கொலையை உடனே தேர்ந்தெடுப்பார் எனறும் கேள்விகள் வருகின்றன. ஏதோ ஒருவகையில் துணிச்சலும், எல்லாவற்றையும் சந்திக்கக்கூடிய தைரியமுள்ள ஒரு பெண் உடனே இப்படி தற்கொலையிற்கு முயல்வாரா என நாவலின் போக்கில் நின்று யோசித்துப் பார்த்தால், அவரின் முடிவில் பெரிதாய் பாதிப்பே வருவதில்லை. ஜெயமோகனோ (அல்லது யாரோ) முன்பு ஓரிடத்தில் எழுதியதுதான் நினைவிற்கு வருகின்றது, யதார்த்தத்தில் மரணம் தெருவில் வாகனம் அடித்துவிட்டாற்போல சடுதியாய் வரலாம். ஆனால் எழுத்தில் வைக்கும்போது அதற்கான காரணங்களை முன்வைத்தே எழுதவேண்டும். இல்லாவிட்டால் எத்தகைய பாதிப்பும் வாசிப்பவருக்கு வரப்போவதில்லை என்று. அவ்வாறே இந்நாவலில் பல பாத்திரங்களின் முடிவுகளும் எதையோ தவறவிட்டதாய் அந்தரத்தில் தொங்கி நிற்கின்றன.

காமத்தை, அது 'வழிதவறிய' உறவாய் இருந்தால் கூட, அருமையாக விபரித்துச் சொல்லக்கூடிய இடங்களையெல்லாம், நாவல் போர்னோ வகையாய் விபரித்தபடி போகின்றது. 'தகாத' உறவாய் இருந்தால் கூட, அந்த குற்றவுணர்வை மீறிப் பொங்கும் காமத்தை, காமத்திற்காய் எல்லாவற்றையும் துறந்துவிடத் தயாராகும் மனித மனத்தின் விந்தைகளை எல்லாம் எழுத்தில் வைக்காமல் தவறவிடப்பட்டிருக்கின்றன. மேலும் காமம் என்பது காமத்தை அப்படியே என்ன நடந்திருக்கும் என்பதைச் சொல்வதுமல்ல. உதாரணத்திற்கு 'என் பெயர் சிவப்பில்' காமத்தை விபரிக்கும் பக்கங்களை விரல் விட்டு எண்ண்விடலாம் (ஒன்றிரண்டு இடங்கள் மட்டுமே). ஆனால் நாவல் முழுதுமே காமம் மெல்லிய நீரோடையாய் ததும்பியபடி இருப்பதை வாசிப்பவர்கள் உணரும்படி ஒரான் பாமுக் எழுதியிருப்பார். ஆகக்குறைந்தது விநாயமுருகன் இந்நாவலில் அப்படி எழுதமுடியாமல் விட்டால் கூட, எரோட்டிக்கா வகை எழுத்து நோக்கியாவது நகர்ந்திருக்கலாம்.

நாவல் முழுதும் ஆண் பாத்திரங்களே தொடர்ந்து பேசியபடியிருக்கின்றன. எல்லாப் பெண் பாத்திரங்களும் வரும் ஆண் பாத்திரங்களுக்கு ஊடாக அறிமுகப்படுத்தப்படுகின்றனவே தவிர, அவை தம் கதையை/வாழ்வை சொந்தக் குரலில் கூறும் சாத்தியங்களே இல்லாமற் செய்யப்பட்டிருக்கின்றது. மேலும் பிராமணர்கள்/மலையாளிகள் மீது பொதுப்படையாக வைக்கப்பட்டிருக்கும் கருத்துக்களைத் தவிர்த்திருக்கலாம் (கவனிக்க, விமர்சனம் வைப்பதைக் கூறவில்லை).

இவை, நாவலில் வரும் எதிர்மறையான விடயங்கள் என்றாலும், இவற்றை வைத்து நாவலை நிராகரிக்க வேண்டியதில்லை. விநாயமுருகனின் முதல் நாவல் என்றவகையில் இன்னும் நிறையப் பயணிக்கப் போகின்றவரின் முதலடியென இந்நாவலை வரவேற்கலாம்.

Saturday, September 20, 2014

எழுத்தால் இருளைக் கடந்தவன்

(இம்மாத 'உயிர் எழுத்து' இதழில் வெளியான எனது கட்டுரை) 

இந்த வருடத்துக்கான சாகித்ய அகாடமியின் 'யுவபுரஸ்கார்' விருது 'கால்கள்' நாவல் எழுதிய எழுத்தாளர் அபிலாசுக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து படைப்புலகில் இயங்கிவரும் தகுதியான இளம் எழுத்தாளருக்கு விருது கிடைத்துள்ளது. விருதுஅறிவிப்பின் இரண்டுநாட்களுக்கு முன்புதான் நாங்கள் அவரது அடுத்த நாவல் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். 

அபிலாஷை நேரில் சந்தித்தது ஓர் இலக்கியக்கூட்டத்தில்தான். சென்னை மேற்கு கே.கே.நகரில் இருக்கும் டிஸ்கவரி புக் பேலசில் நடந்த விஜயமகேந்திரனின் நூல் விமர்சனக்கூட்டத்துக்கு வந்திருந்தார். கூட்டம் முடிந்ததும் நல்ல மழை. பெரும்பாலானோர் கடைக்கு வெளியே மழைக்காக ஒதுங்கியிருந்தார்கள். மாடியில் அபிலாசும், நானும் இன்னும் சில நண்பர்களும் மட்டும் இருந்தோம். 'உயிரோசை'யில் கவிதைகள் எழுதியுள்ளேன் என்று என்னை அறிமுகம் செய்துக்கொண்டேன். 

பேஸ்புக் வந்திராத காலம் அது. வலைப்பதிவர்கள் பலர் செறிவாக எழுதிக்கொண்டிருந்த காலம். இணையப்பத்திரிக்கைகள் செல்வாக்கு நிறைந்த காலம். மனுஷ்யபுத்திரன் நடத்திவந்த உயிரோசை என்ற இணையத்தளம் இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தி செறிவான கட்டுரைகளையும், கவிதைகளையும் வெளியிட்டுக்கொண்டிருந்த காலம். எங்கள் அலுவலக ஊழியர்கள் மட்டுமே படிக்கும் உள்வலைத்தளம் ஒன்றுள்ளது. பெரும்பாலும் அவரவர் மொழியில் எழுதும் சுதந்திரம் அங்குண்டு. அதில் எங்கள் அலுவல ஊழியர்கள் கவிதை, கட்டுரை,சிறுகதைகள் எழுதுவார்கள். அந்த வலைத்தளம் தவிர அலுவலகம் வெளியில் இயங்கும் இணையப்பத்திரிக்கைகளிலும் எழுதுவார்கள். அவர்களில் சிலர் அவ்வபோது கேண்டீனில் சந்தித்து தாங்கள் படித்த விஷயங்களை பகிர்ந்துக்கொள்வார்கள். திண்ணை,கீற்று,உயிரோசை போன்ற இணையதளங்களில் வெளியாகும் தங்கள் கவிதை,கதைகளை பெருமையாக மற்றவர்களிடம் காட்டுவார்கள். அது போன்ற தருணமொன்றில்தான் அபிலாசின் எழுத்துக்கள் அறிமுகமானது. அலுவலக நண்பர் உயிரோசை இணையத்தளத்தில் வெளியான அபிலாசின் கட்டுரையை எனக்கு லிங்க் அனுப்பி வைத்தார். கட்டுரை படிக்க தனித்துவமான மொழியில் மிகசெறிவாக சுருக்கமாக இருந்தது. அன்றிலிருந்து உயிரோசையை தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். எனது முதல் கவிதையை உயிரோசைக்கு அனுப்பி வைக்க பிரசுரம் ஆனது. தொடர்ச்சியாக கவிதைகள் மட்டுமே எழுதிக்கொண்டிருந்த வேளையில்தான் அபிலாஷை முதலில் சந்தித்து என்னை அறிமுகம் செய்துக்கொண்டு பேச ஆரம்பித்தேன். அபிலாஷை சந்திக்கும்வரை அவர் கட்டுரை, மொழிபெயர்ப்பு கவிதைகள் எழுதுபவர் என்றே நினைத்திருந்தேன். ஆனால் அவரை சந்தித்து பேசிய சில நிமிடங்களில் அவர் கதை, கவிதை, சிறுகதை, நாவல் என்று பலதுறைகளில் இயங்குபவர் என்று தெரியவந்தது. பிறகு அவர் உயிரோசையில் எழுதுவதையும், அவரது பிளாக்கில் எழுதுவதையும் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். அடிக்கடி போனிலும் எப்போதாவது அபூர்வமாக மட்டுமே நேரிலும் சந்தித்து பேச ஆரம்பித்தோம். 

கடந்த ஆண்டு நாவல் எழுதவேண்டும் என்று எனக்குள் ஏதோவோர் எண்ணமும், உந்துதலும் கொந்தளிப்பான தீவிர மனநிலையும் தொடர்ந்து வந்துக்கொண்டே இருந்தது. அதற்குமுன்பு அப்படியெல்லாம் எந்தவித திட்டமிடலும் எனக்கு இல்லை. ஏதாவது தோன்றுவதை பிளாக்கில், பேஸ்புக்கில் எழுதுவது என்றுதான் நாட்கள் ஓடின. யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை. ஒருநாள் அபிலாசுக்கு போன் செய்து நான் ஒரு நாவல் எழுத ஆரம்பித்துள்ளேன். அது சரியா வருமா என்று தெரியவில்லை. எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. பத்து பக்கங்கள் எழுதி பார்த்தேன். சரியாக வரவில்லை. கிழித்துப்போட்டாலும் உறக்கம் வரவில்லை. திரும்ப எழுத வேண்டும் போல ஏதோ துரத்துகிறது என்று சொன்னேன். அபிலாஷ் தனது கால்கள் நாவலை பற்றியும், அதை என்ன மாதிரியான மனநிலையில் எழுத ஆரம்பித்தார் என்பதை பற்றியும் நிறைய பேசினார். 

போலியோவால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் கடல்கன்னி போல உட்கார்ந்திருக்கிறாள். அந்த காட்சிபடிமம் எனது மனதில் வந்ததும் ஏதோ ஓர் உத்வேகத்தில் எழுத ஆரம்பித்தேன் என்று சொன்னார். எனக்கும் அதுவே நடந்தது. இரை விழுங்கிய மலைப்பாம்பு போல சாலை நீண்டு வளைந்து கிடந்த ஒரு காட்சிபடிமம் எனது மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. அதைத்தான் எப்படி இன்னும் விரிவாக எழுதுவது என்று தவித்துக்கொண்டிருந்தேன். ஒரு சொல் அல்லது ஒரு காட்சிபடிமம் மெல்ல மெல்ல வளர்ந்து பிரமாண்டமான கதையாக உருவெடுக்கும் என்று அபிலாஷ் சொன்னார். எழுதுங்க. உங்களால் முடியும் என்று ஒருமணி நேரம் வரை பல ஆலோசனைகள் சொன்னார். சரிதான் நம்மை ஊக்கப்படுத்த சொல்கிறார் என்றுதான் நினைத்தேன். ஆனால் அடுத்தடுத்த நாட்கள் அவராகவே போன் செய்து தொடர்ந்து நாவலை பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். மெல்ல மெல்ல தயக்கமும், பயமும் மறைந்து எனக்கு வேறுவிதமான கவலை வர ஆரம்பித்தது. நாவல் எழுதுவது ஒரு நல்ல அனுபவம். ஆறுமாதங்களோ ஒரு வருடமோ ஒரு நாவல் எழுதுவீர்கள். அந்த காலக்கட்டத்தில் உங்கள் அன்றாட வேலைகளை செய்துக்கொண்டே இருப்பீர்கள். குளித்துமுடித்து சாப்பிட்டு பஸ் பிடித்து அலுவலகம் சென்று மீண்டும் மாலை வீட்டுக்கு வருவது. இது ஓர் உலகம். ஆனால் உங்களுக்குள் இன்னோர் உலகம் சுழன்றுக்கொண்டே இருக்கும். அங்கே உங்கள் நாவலில் வரும் மனிதர்கள் இருப்பார்கள். நாவலில் வரும் சம்பவங்கள் நடக்கும். அங்கேயும் நீங்கள்தான் இருப்பீர்கள். ஆனால் இங்கே இருப்பவர்களால் அங்கே இருக்கும் உங்களை பார்க்க முடியாது. மற்றவர்கள் கண்ணுக்கு தெரியாமல் நீங்கள் உருவாக்கின உலகத்தில் நீங்கள் உருவாக்கின மனிதர்களோடு நடமாடிக்கொண்டிருப்பீர்கள். அது ஓர் அழகிய அனுபவம். அதை அனுபவித்தால் போதையாக இருக்குமென்று அபிலாஷ் சொன்னார். எனக்கு பயம் வந்துவிட்டது. நாவலை எப்படி எழுதுவது என்பதிலிருந்த கவலை மெல்ல மெல்ல திசைதிரும்பி நாவலை எப்படி முடிப்பது என்று மாற ஆரம்பித்தது. நான் எழுத எழுத அவரிடம் பகிர்ந்துக்கொண்டேன். முழுக்கதையை சொல்லாவிட்டாலும் என்னமாதிரி எழுதுகிறேன் என்னமாதிரி கதாபாத்திர அமைப்புகள் வருகின்றன என்று சொல்வேன். அவர் உடனே வேறு ஏதாவது படித்த நாவலை பற்றி பேசுவார். அதைப்பற்றி விவாதிப்போம். மனச்சோர்வு இல்லாமல் இருந்தது. இப்படியாக நான்கைந்து மாதங்கள் ஓடின. 

நாவலை எழுதி முடித்ததும் மென்பிரதியை அவருக்கு அனுப்பி இதை படித்துபார்த்து உங்கள் ஆலோசனை சொல்லமுடியுமா என்று கேட்டிருந்தேன். அப்போது அவர் கவிதைத்தொகுப்பு ஒன்று வெளியிடுவதற்காக தீவிரமாக உழைத்துக்கொண்டிருந்தார் என்று தெரியவந்தது. சரி. தொந்தரவு செய்ய வேண்டாமென்று அதிகம் வற்புறுத்தவில்லை. டிசம்பர் மாதம் நாவல் வெளியீட்டுவிழா என்று போன் செய்து தேதியை சொன்னேன். எனது கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழாவும் அன்றுதான் என்றார். எங்கள் இருவரின் புத்தகங்களும் ஒரே பதிப்பகம் என்பதாலும் ஒரே நாள் என்பதாலும் அழைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. ஒரே மேடையில் அமர்ந்திருந்ததும் சந்தோஷமாக இருந்தது. 

பிறகு ஜனவரி மாதம் பேஸ்புக்கில் சிலர் என்னை தொடர்ந்து மோசமாக தாக்கி எழுத ஆரம்பித்தார்கள். ஏன் தாக்குகிறார்கள் என்றே தெரியவில்லை. புத்தகத்தை படிக்காதவர்கள் கூட என்னையும் எனது குடும்பத்தினரையும் திட்டி ஆபாசமாக விமர்சனம் என்ற பெயரில் பதிவுகள் எழுதினார்கள். பேஸ்புக் கணக்கை கூட மூடிவைத்துவிடலாமா என்று தோன்றியது. அப்போதுதான் அபிலாஷ் எனக்கு போன் செய்து "ஒன்றுமில்லை நீங்கள் உங்கள் நாவலை பேஸ்புக்கில் விளம்பரம் செய்ததால்தான் இப்படி நடக்கிறது. நீங்கள் ஒருவேளை பேஸ்புக்கில் இல்லாமல் போயிருந்தால் அல்லது விளம்பரம் செய்யாமல் அப்படியே புத்தகத்தை வெளியிட்டிருந்தால் எதுவும் நடந்திருக்காது" என்று சொன்னார். அடுத்தநாள் அவரது வலைதளத்தில் எனது நாவலை விமர்சனம் செய்து ஒரு கட்டுரை வெளியிட்டார். அபிலாஷ் எழுதிய கட்டுரைதான் எனது நாவலுக்கு வந்த முதல் விமர்சனம். கறாராக விமர்சனம் செய்திருந்தார். அதன்பிறகு பேஸ்புக் புழுக்களின் கொஞ்ச கொஞ்சமாக குறைந்தது.அபிலாஷ் என்னிடம் அடிக்கடி சொல்வார். உடனடியாக எந்தவித எதிர்வினையும் செய்யாதீர்கள். ஒரு நாவலை எழுதிமுடித்தால் அடுத்த படைப்பு பற்றி யோசித்து அதை நோக்கி நகர்ந்துச்செல்வதே நல்லது. நல்ல புத்தகம் என்றால் அது சில வருடங்கள் கழித்து கண்டிப்பாக பேசப்படும் என்றார். அது உண்மைதான் என்று தோன்றுகின்றது. உடனடி எதிர்வினை ஆரோக்கியக்குறைவை உண்டுசெய்து நம்மை நோயில் தள்ளிவிடும். 

பிப்ரவரி மாதம் ஊட்டியில் வசிக்கும் மலைச்சொல் கலை இலக்கிய சமூக மையம் அமைப்பின் நிறுவனர் பாலநந்தகுமார் எனக்கு போன் செய்து உங்கள் நாவலை இந்த வருடத்தின் விருது நாவலாக அறிவித்துள்ளோம். சென்னையில் இருந்து உங்கள் நண்பர்கள் யாரையாவது பேச அழைத்து வாங்க என்று சொன்னார். எனக்கு சென்னையில் நண்பர்கள் அவ்வளவாக இல்லை. அப்படியே இருந்தாலும் நேரில் அழைத்தால் முகத்தை திருப்பிக்கொண்டு போகின்றவர்கள்தான் அதிகம். நண்பர்கள் அதுவும் புத்தகத்தை பற்றி பேச யாரை அழைப்பது என்று தெரியவில்லை. அபிலாஷிடம் தயக்கத்துடன் கேட்டேன். அவர் உடனே வர சம்மதம் சொல்லிவிட்டார். அதுவரை அபிலாஷிடம் போனில்தான் பேசியிருக்கிறேன். அபூர்வமாக ஒன்றிரண்டு முறை நேரில் சந்தித்துக்கொண்டதோடு சரி. ஊட்டியில் அபிலாசுடன் இரண்டு நாட்கள் தங்கியிருந்தது மறக்க முடியாத அனுபவம். 

சென்னையிலிருந்து கோயம்புத்தூர் ரயிலில் சென்றோம். நள்ளிரவு ஆகிவிட்டது. பாலநந்தகுமார் மேட்டுப்பாளையத்தில் தங்கும் விடுதியை ஏற்பாடு செய்திருந்தார். அங்கு இரவை கழித்துவிட்டு மறுநாள் காலை பத்துமணிக்கு மேல் காரில் மெதுவாக மலை ஏற ஆரம்பித்தோம். அப்போது தருண் தேஜ்பாலின் நாவல் ஒன்றை அபிலாஷ் கையில் வைத்திருந்தார். ரயிலில், பூங்காவில், காரில் என்று நேரம் கிடைக்கும்போதெல்லாம் அதை இடையிடையே வாசித்துக்கொண்டே இருந்தார். அபிலாசின் வாசிப்பை விட என்னை அதிகம் பொறாமைப்பட வைத்தது இன்னொரு நிகழ்ச்சி. சென்னையிலிருந்து நாங்கள் சென்ற ரயிலிலும் மேட்டுப்பாளையத்தில் தங்கியிருந்த விடுதியிலும் ஒருசிலருக்கு அபிலாஷை தெரிந்திருந்தது. இவர் விஜய் டிவியில வர்றவர் என்று பக்கத்தில் இருந்தவர்களிடம் சந்தோஷம் கலந்த வெட்கத்துடன் கோயம்புத்தூர் பெண்கள் சொல்வதை பார்க்க எனக்கு பொறாமையாக இருந்தது. அதற்கு ஊட்டியில் பழிதீர்த்துக்கொண்டேன். நாங்கள் படகுச்சவாரி செல்லும்போது எங்கள் படகுக்கு அழகான வடநாட்டு இளம்பெண்கள் வந்தார்கள். நான் கரையிலேயே இருக்கிறேன். நீங்க போய்ட்டு வாங்க என்று அபிலாஷ் சொல்லிவிட்டார். ஏரிக்கரையில் அமர்ந்து பறவைகளை தீவிரமாக போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார். ஊட்டியில் நாங்கள் தங்கியிருந்த நாட்களில் அபிலாசும், நானும், பாலநந்தகுமாரும் அவ்வளவு பேசினோம். அரசியல், எழுத்து, சினிமா என்று பலவருடங்கள் கழித்து கல்லூரி நண்பர்களோடு பேசுவது போன்ற உணர்வு. தமிழ் இலக்கியம் படிப்பவர்களை விட ஆங்கில இலக்கியம் படிப்பவர்களே அதிகமாக தமிழ் நாவல்களையும்,கவிதைகளையும் படிப்பார்கள் என்பது எனது அபிப்ராயம். அபிலாசின் வாசிப்பு பரந்துபட்டது. கா.நா.சுவின் விமர்சனக் கட்டுரைகளிலிருந்து முகுந்த் நாகராஜன் ஏன் இப்போது கவிதைகள் எழுதுவதில்லை என்பது வரை எது பற்றி பேசினாலும் விரிவாகவும், ஆழமாகவும் தனித்த கோணத்தில் அவரது கருத்துகளை முன்வைப்பார். 

அபிலாஷ் நல்ல கட்டுரை எழுதுபவர் என்றே எனது அலுவலக நண்பர்கள்,பேஸ்புக் நண்பர்கள் பலரும் சொல்கிறார்கள். ஆனால் எனக்கென்னவோ அவரை அப்படி பொதுமைப்படுத்திவிட முடியாது என்று தோன்றுகிறது. உயிரோசை ஆரம்பித்த காலத்திலேயே அபிலாஷ் அப்படி இருந்தில்லை. கட்டுரைகள் எழுதுவார். திடீரென ஹைக்கூ கவிதைகளை மொழிப்பெயர்ப்பு செய்து எழுதுவார். பிறகு அடுத்த வாரம் உளவியல் பற்றி ஒரு கட்டுரை எழுதுவார். சிக்கலான மொழியில் இரண்டுமுறை வாசிப்பை கோரும் எழுத்தில் கட்டுரையின் நடை இருக்கும். ஆனால் அடுத்த வாரமே ஜாலியாக வேறொரு கட்டுரை வெளிவரும். பலதுறைகளில் ஆர்வம் கொண்ட புதுபுது விஷயங்களை தேடி படிக்கும் மனநிலையில் இருக்கும் ஒருவராலேயே இப்படி எழுத முடியும் என்று நினைத்துக்கொள்வேன். இதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். குறைவாக எழுதினால்தான் அது நல்ல எழுத்து என்று அவர் ஆரம்பத்தில் நினைத்ததாகவும் இந்த விஷயத்தில் மேலைநாடுகளில் இருக்கும் தொழில்முறை எழுத்தாளர்களை பாருங்க என்று மனுஷ்யபுத்திரன் அறிவுரை சொன்னதாக குறிப்பிட்டார். மனுஷ்யபுத்திரன்தான் தனது சோம்பேறித்தனத்தை உடைத்து நிறைய எழுத வைத்ததாக சொன்னார். எழுத்தாளன் என்பவன் தினமும் நாலு வரியாவது எழுதி பார்த்துக்கொண்டே இருக்க வேண்டுமென்பதில் எனக்கும் உடன்பாடுதான். 

'கால்கள்' அபிலாஷின் முதல் நாவல். இந்த நாவலுக்கு பிறகு அபிலாஷ் எழுதிய ப்ரூஸ்லீ பற்றிய ஒரு கட்டுரைத்தொகுப்பு வெளிவருகிறது. பிறகு அபிலாசின் முதல் கவிதைத்தொகுப்பு வெளிவருகிறது. இடையில் கிரிக்கெட்டின் மாறும் நிறங்கள் என்ற கட்டுரைநூல். கிரிக்கெட் பற்றி தமிழில் ஆழமான பார்வையுடன் வெளிவந்த நூல்கள் மிகவும் குறைவு. துறைசார் நூல்களில் இருப்பது போன்று நுட்பமான தகவல்களும், ஆழமான பார்வையும், பல இடங்களில் தீவிர மொழியுடனும், சில இடங்களில் அங்கதமுமாய் எழுதப்பட்ட வகையில் இதுவும் ஒரு குறிப்பிடத்தக்க புத்தகம் என்பேன். "இன்னும் மிச்சமுள்ளது உனது நாள்" என்பது அபிலாஷின் சமீபத்திய புத்தகம் (முதல் கவிதைத்தொகுப்பு) 

கடந்த மாதம் டிஸ்கவரி புக் பேலசில் அபிலாசின் கவிதைத்தொகுப்பின் மீதான விமர்சனக்கூட்டம் நடந்தது. இந்திரன்,அமிர்தம் சூர்யா, உமாசக்தி, நரன், விஜயமகேந்திரன் போன்ற சில நண்பர்கள் மட்டுமே பங்கேற்ற சிறுகூட்டமாக இருந்தாலும் அபிலாஷின் எழுத்தை பற்றி நண்பர்கள் பேச,விவாதிக்க உண்மையில் ஏற்ற இடமாக அது இருந்தது. ஆச்சர்யமூட்டும் வகையில் அந்தச்சந்திப்பிலும் கூட்டம் முடிந்ததும் வெளியே மழை கொட்ட ஆரம்பித்தது. புத்தகக்கடைக்கு வெளியே ஆட்கள் நடமாட்டம் குறைந்த முன்னிரவு சாலையில் கொட்டும் மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தோம். பொதுவாக கவிதை எழுதுபவர்கள் அடுத்து சிறுகதை எழுதுவார்கள். பிறகு கொஞ்சநாளில் நாவல்கள் பக்கம் தாவிவிடுவார்கள். பிறகு ஒருபோதும் கவிதைகளின் பக்கம் திரும்பவே மாட்டார்கள். இந்த வசீகர பரிணாமவளர்ச்சி வரிசையை அபிலாஷ் திட்டமிட்டோ எதேச்சையாகவோ மீறுகிறாரோ என்று சந்தேகம் வந்ததுண்டு. இதைபற்றி அவரிடம் கேட்டேன். இது எப்படி நடந்ததென்று எனக்கும் தெரியவில்லை என்றார் சிரித்துக்கொண்டே. 

அவரது கட்டுரைகளில் கூட இதேபோன்ற நியதியை பின்பற்றுகிறாரோ என்று எனக்கு சந்தேகம் தோன்றும். ஒரு கட்டுரையை தீவிரமாக எழுதுவார். அடுத்து வெளிவரும் கட்டுரை கொஞ்சம் அங்கதமாக இருக்கும். ஆனால் நடையில் அதே துல்லியமான கறாரான ஒழுங்கு இருக்கும். அபிலாஷின் சினிமா கட்டுரைகளில் குறிப்படத்தக்கது அவர் ஆயிரத்தில் ஒருவன் (செல்வராகவன்) என்ற சினிமா பற்றி எழுதியது. அந்தக்கட்டுரை உயிர்மையில் வெளிவந்தது என்று நினைக்கிறேன். அவர் அந்த படத்தின் நுட்பமான அம்சங்களை கவனித்து செறிவாக எழுதியிருந்தார். சாருநிவேதிதா அதற்கு எதிர்வினை செய்து அத்திரைப்படத்தை குப்பை என்று எழுதினார். அந்திமழை,காட்சிப்பிழை பத்திரிக்கைகளில் அபிலாஷ் எழுதி வரும் சினிமாக்கட்டுரைகளை நண்பர்கள் பலர் எனக்கு போன் செய்து படித்தீர்களா என்று கேட்டு அதை பற்றி விவாதிப்பது அடிக்கடி நடக்கும். அபிலாஷ் கட்டுரைகள் தனித்துவம் மிக்கதாக தெரிய இரண்டு விஷயங்கள் அவருக்கு உதவுகின்றன. கட்டுரைகளுக்கென்று அபிலாஷ் தேர்வு செய்யும் ஒருவித வசீகர மொழி லாவகம். ஒரு விஷயத்தை வேறொரு கோணத்தில் அவதானிக்கும் பாங்கு. கட்டுரைகளுக்கு மட்டுமல்ல கவிதைகளுக்கும் இதையே அவர் பயன்படுத்திக்கொள்கிறார். 

அபிலாஷின் கவிதைத்தொகுப்பு பற்றி தமிழவன் எழுதிய விமர்சனத்திலிருந்து.... 

"பொதுவாய் அபிலாஷின் கவிதையாக்கல் உத்தி என்பது இந்த எதிர்பாராத, சாதாரண விசயத்தை கவனித்து எதிர்பாராத இன்னொரு பார்வையை அதில் பதிய வைத்து கவிதையாக மாற்றுவது தான். இது பல கவிதைகளில் காணப்படுகிறது"

எங்கேயோ இருக்கும் இரண்டு மூன்று புள்ளிகளைகூட ஆச்சர்யமூட்டும் வகையில் ஒன்றாக இணைத்துவிடுவார். அவரது தனித்துவம் என்று நான் இதையே நம்புகிறேன். ரஜினியையும், பூக்கோவையும் இணைத்து ஒரு கட்டுரை எழுத அவரால் மட்டுமே முடியும். நீட்சேவும்,செந்திலும் என்று கட்டுரைக்கு தலைப்பு வைப்பார். 

எனது நண்பர்கள் சிலருடன் இருக்கும்போது அபிலாசின் ஏதாவது கட்டுரை பற்றி பேச்சு எழும். "உங்களுக்கு அவரை தெரியுமா? அவரோடு நட்பில் இருப்பது சிக்கலான விஷயம் ஆச்சே" என்று ஆச்சர்யமாக கேட்பார்கள். அவர்கள் ஆச்சர்யத்தை பார்த்துதான் எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஊட்டியில் அவரோடு இருந்த நாட்களில் அபிலாஷ் கால்கள் நாவலில் வரும் மதுபோல சிலநேரங்களில் முரட்டு பிடிவாதம் கொண்ட குழந்தையாக தெரிகிறாரோ என்றுகூட நினைத்தது உண்டு. ஆனால் அது ஒரு பாவனைதான் என்று தோன்றியது. உலகத்தில் சிக்கலான விஷயம் குழந்தைகளுடன் நட்பில் இருப்பதுதான். ஆனால் ஆபத்தில்லாத விஷயமும் அதுவே. ஊட்டியிலிருந்து சென்னைக்கு திரும்பிவந்ததும் அபிலாஷ் ஊட்டி பயணம் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். கட்டுரையின் இறுதியில் "கல்லூரியில் படிக்கிற காலத்தில் தான் இவ்வளவு சிரித்து உற்சாகமாக இருந்திருக்கிறேன். அதன் பிறகான என் வாழ்க்கையில் தான் ஏதோ கோளாறு இருக்கிறது என நினைத்தேன். வயிற்றில் அமிலம் கட்டிய ஆட்களை கடவுள் என்னைச் சுற்றி படைத்து வைத்திருக்கிறார். அடுத்த நாள் காலை சென்னை வந்த பின்னரும் இதோ இப்போது வரை அந்த சந்தோஷத்தின் தடம் என் உதடுகளில் இருந்து நீங்கவில்லை. ரொம்ப நாள் தங்காது. ஏதாவது ஒரு சென்னை இலக்கியவாதியை பார்க்காமலே போய் விடுவேன்?" என்று எழுதியிருந்தார். இந்த பயம்தான் எனக்கும் சென்னை நண்பர்களை பார்த்து. அதனால்தான் ஊட்டிக்கு வர முடியுமா என்று தயக்கத்தோடு கேட்டேன். 

அபிலாஷின் 'கால்கள்' நாவல் பற்றி வெகுசிலரே குறிப்பிட்டிருக்கிறார்கள். அது பற்றி அவருக்குள் உள்ளுக்குள் ஏதாவது வருத்தம் இருக்குமா என்று எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு அந்த ஆதங்கம் இருந்தது. உங்கள் நாவலை பற்றி அடிக்கடி பேஸ்புக்கில் எழுதுங்க என்று சொல்வேன். ஆனால் அவர் அதை தீர்மானமாக மறுத்துவிடுவார். ஒரு நாவல் எழுதப்பட்ட சில காலங்கள் கழித்தே அது பேசப்படக்கூடுமென்ற நம்பிக்கையில் உறுதியாக இருப்பார். அவரது இந்த நம்பிக்கை எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஊட்டியில் நாங்கள் தங்கியிருந்தபோது எதிர்கால திட்டங்கள் பற்றி நிறைய சொன்னார். கவிதைக்காக இன்மை.காம் என்ற இணைய இதழ் தொடங்கியுள்ளதாக சொன்னார். கவிதை கருத்தரங்கம் ஒன்றை தொடங்குவது பற்றிய தனது கனவை அவர் சொன்னார். "முன்பைக்காட்டிலும் கவிதை பற்றி விவாதிக்கும் கூட்டங்கள் குறைந்து வருகின்றன. குற்றாலத்தில் நடந்தது போல வருடத்துக்கு ஒருமுறை ஊட்டியில், கொடைக்கானலில் ஒரு பட்டறை நடத்தினால் எப்படியிருக்கும்" என்று கேட்டார். அதுபற்றி விரிவாக பேசினோம். சென்னை திரும்பியதும் விரிவாக திட்டமிடலாம் என்று முடிவெடுத்திருந்தோம். ஆனால் சென்னை திரும்பியதும் வேலைப்பளு அது இதுவென்று தள்ளிக்கொண்டே போய்விட்டது. முதலில் மாதம் இருமுறை பத்திரிக்கையை கொண்டுவருவது என்றுதான் திட்டமிட்டிருந்தார். முதல் மாதம் அப்படித்தான் வந்தது. ஆட்களிடமிருந்து கவிதைகளை வாங்குவதும், அதை தேர்வு செய்வதும், பிறகு படங்களை வடிவமைப்பு செய்பவரோடு நேரம் செலவழிப்பதும் என்று பணிச்சுமை இழுப்பதால் இன்மை.காமை மாதம் ஒருமுறை மட்டுமே கொண்டுவர போகிறேன் என்றும் வருத்தத்தோடு சொன்னார்.

கடந்த மாதம் பேசும்போது இரண்டாவது நாவல் எழுதிமுடித்துவிட்டதாகவும் இப்போது எடிட்டிங் வேலையில் இறங்கியுள்ளதாகவும் உற்சாகமாக சொன்னார். நேற்று சாகித்ய அகாடமி இளம் எழுத்தாளருக்கான யுவபுரஸ்கார் தேசிய விருது பட்டியலில் அவர் பெயர் அறிவித்திருந்ததை பார்த்துவிட்டு போன் செய்து வாழ்த்து சொன்னேன். இந்த விருது அவருக்கு மேலும் உற்சாகத்தையும்,தெம்பையும் கொடுத்திருக்கும் என்று நினைக்கிறேன். அங்கீகாரமும், உரிய நேரத்தில் கிடைக்கும் பாராட்டுக்களும்தானே மனிதனை தொடர்ந்து ஆர்வமாக இயங்க வைக்கின்றன.

Sunday, July 27, 2014

சென்னை மாநகர வெளியில் ராஜீவ் காந்தி சாலை

நன்றி:- ந.முருகேச பாண்டியன்

தமிழ் இந்துவில் ராஜீவ்காந்தி சாலை நாவல் பற்றிய ஒரு விமர்சனம் வெளிவந்துள்ளது. நண்பர்கள் பார்வைக்கு...  


சென்னை நகரைச் சுற்றிலும் இயற்கை எழிலுடன் விளங்கிய கிராமங்கள் நகரமயமாதலின் காரணமாக இன்று சிதிலமாகிக்கொண்டிருக்கின்றன இயற்கை வளமான பிரதேசத்தின் ஊடே மாமல்லபுரத்தினை நோக்கிச் செல்லும் ராஜீவ் காந்தி சாலை வெறுமனே போக்குவரத்திற்கானது மட்டுமல்ல.

பாரம்பரியமான கிராமங்கள், ஐ.டி. கம்பெனிகள் என இரு வேறு உலகங்களைப் பிரிக்கும் எல்லையாக ராஜீவ் காந்தி சாலை விளங்குகிறது. பன்னாட்டுத் தகவல்தொடர்புக் கம்பெனிகளின் வருகையினால் செம்மஞ்சேரி, பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் போன்ற பாரம்பரியமான கிராமங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை முன்வைத்து விநாய முருகன் எழுதியுள்ள ராஜீவ் காந்தி சாலை அண்மையில் தமிழுக்கு வந்துள்ள முக்கியமான நாவலாகும்.

கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர்கூட செம்மஞ்சேரி கிராமத்திற்கு அப்பால் எளிய கிராமிய வாழ்க்கை நிலவியது . இன்று ஆறு வழிப் பாதைகளில் விரையும் வெளிநாட்டுக் கார்கள் வேறு உலகுக்கு அழைத்துச் செல்கின்றன. ஐ.டி. கம்பெனிகள் அடுக்கு மாடிகளில் வந்தவுடன், காலங்காலமாக அங்கு வாழ்ந்துவந்த மக்கள் காணாமல் போயினர். பெரிய வணிக வளாகங்கள், நட்சத்திர விடுதிகள், இறக்குமதியான கார்கள். அழகான இளைஞர்களும் இளைஞிகளும் எனச் சூழலே மாறிப்போனது.

கிராமத்தினர் தங்களுடைய விவசாய நிலங்களை விற்றுவிட்டு, மாறிவரும் பண்பாட்டு மாற்றத்தினை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ரியல் எஸ்டேட்காரர்கள் சிறிய நிலவுடைமை யாளர்களைத் தந்திரமாக ஏமாற்றிக் கைப்பற்றிய விவசாய நிலத்தின் மூலம் பெரும் கோடீஸ்வரர்களாக ஆயினர். தங்கவேலு செட்டியார், அன்னம், ராசு படையாச்சி போன் றோர் பூர்வீக நிலங்களில் இருந்து துரத்தியடிக்கப்பட்டுச் சிறிய கடைகள் வைத்துப் பிழைக்கின்றனர். குடும்ப உறவுகளின் சிதைவில் மனித மதிப்பீடுகள் சிதலமடைகின்றன.

நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிக்கொண்டு சாப்ட்வேர் கம்பெனிகளில் பணியாற் றும் இளைஞர்களும் உற்சாகமாக இல்லை. எப்போதும் வேலையிலிருந்து நீக்கப்படலாம் என்ற பதற்றத்துடன் பணி யாற்றுகிறவர்களைப் பயம் நிழலாகத் தொடர்கிறது. நிறுவனங்களில் பணம், அதிகாரப் போட்டிக்காக நடை பெறும் சம்பவங்கள் அலுவலர்களின் மன அமைதியைச் சிதைக்கின்றன. அழகிய இளம் பெண்கள், காதல், குடும்பம் என வாழும் இளைஞர்கள் ஆடம்பர மனநிலையுடன் வாழ முயலுகின்றனர்.

பத்தாண்டுப் பணியில் முப்பதாண்டு முதுமையை ஏற்படுத்தும் மென்பொருள் கம்பெனியின் வேலைப் பளு பற்றி அழுத்தமான கருத்துகளை விநாயக முருகன் முன்வைத்துள்ளார். சாப்ட்வேர் கம்பெனிகளைச் சார்ந்து வாழும் அடித்தட்டு ஊழியர்கள், கார் ஓட்டுநர்கள் பற்றிய விவரிப்பு ஐ.டி. நிறுவனங்கள் பற்றிய இன்னொரு பிம்பமாகும்

ஆணும் பெண்ணும் சேர்ந்து பணியாற்றும் ஐ.டி. நிறுவனங்களில் நடைபெறுவதாக மிகைப்படுத்திச் சொல்லப்படும் பாலியல் சீரழிவுகள் பொதுப்புத்தி சார்ந்தவை. ஆண்-பெண் சேர்ந்து பணியாற்றுகின்ற பிற நிறுவனங்களில் நடைபெறுகின்ற சம்பவங்கள் போலத்தான் சாப்ட்வேர் கம்பெனிகளிலும் நிகழ வாய்ப்புண்டு. ஆனால் நாவல் முன்னிறுத்தும் பாலியல் சம்பவங்கள் சராசரி மனிதர்களுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தும். என்றாலும் மனிதர்கள் இப்படியெல்லாம் தங்களுடைய வாழ்க்கையைச் சீரழித்துக் கொள்வது ஏன் என யோசிக்க வைக்கிறது நாவல்.

வளமான பொருளியல் வாழ்க்கை, வசதியான வீடு, நட்சத்திர விடுதிகள், அமெரிக்கா பயணம் என வாழும் சாப்ட்வேர்காரர்களின் இன்னொரு முகம் கொண்டாட்டமானது. சாதியை மறுத்து காதல் திருமணம் செய்து கொண்டு புதிய தடத்தில் பயணிக்கின்ற இளைய தலைமுறையினர் பற்றி நேர்மறையாகச் சித்திரிக்காதது நாவலில் பலவீனமான அம்சம்.

மனப் பிறழ்வடைந்து சாலையில் சுற்றித் திரிவோர், உயரமான கட்டி டதில் இருந்து குதித்துத் தற்கொலை செய்கிறவர்கள் என நாவல் வாழ்வின் இருண்ட பக்கங்களை விவரித்துள்ளது. எல்லாவற்றிலும் அவசரம் என வேகம்வேகமாகத் தேடி அலையும் மனிதர்கள் மனப் பிறழ்வடைவது இயல்பாக நடைபெறலாம் என நாவலாசிரியர் எச்சரிக்கிறார். நகரத்தின் பிரமாண்டமான வளர்ச்சி குறித்து மகிழ்ச்சி கொள்ளவிய லாமல், சூழலின் அபத்தம், வெறுமை குறித்துக் காத்திரமான சம்பவங்களை நாவல் முன்வைத்துள்ளது.

நானூறு வருடங்களாகக் கடலைத் தழுவி விரிந்துகொண்டிருக்கும் சென்னை மாநகரின் பதிவாக ராஜீவ் காந்தி சாலை நாவல் நீள்கிறது எனவும் வாசிக்கலாம்.

Sunday, June 8, 2014

ராஜீவ்காந்தி சாலை - நாவல் விமர்சனம்

இம்மாத உயிர்மையில் இமையம் அவர்கள் எழுதியுள்ள விமர்சனக்கட்டுரை வெளியாகியுள்ளது. நண்பர்கள் பார்வைக்கு....

விமர்சனம் – இமையம்

எல்லாக் காலத்திலும், எல்லா மனிதர்களுக்கும் பெரும் சவாலாக, பெரும் அதிசயமாக, உண்மையான அதிசயமாக இருப்பது வாழ்க்கைதான். அந்த அதிசயத்தை முழுமையாக புரிந்துகொள்ள முடியாது. ஆனால் புரிந்து கொள்ள முயல முடியும். அப்படியான ஒரு முயற்சிதான் விநாயக முருகனுடைய ராஜீவ் காந்தி சாலை நாவல்.

 தமிழ் இலக்கியம், இந்திய இலக்கியம் என்பது அநேகமாக குடும்பத்தைப்பற்றி மட்டும்தான் அதிகம் பேசியிருக்கிறது. அதிகம் அழுதிருக்கிறது. பெரும் திரளான மக்கள் குறித்து, ஒரு சமூகத்தில் குறிப்பிட்ட காலத்தில் சமூகம் பெற்ற மாற்றங்கள் குறித்து, பொது சமூக வாழ்வு குறித்து அநேகமாக எழுதப்படவில்லை. தனி மனித இழப்பிற்கு, சோகத்திற்கு, கண்ணீருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் – பெரும் சமூக நிகழ்வுக்கு கொடுக்கப்படுவதில்லை, ஏன்?

 கடந்த இருபதாண்டுகளாக பெற்றோர்களுடைய ஒரே கனவாக இருந்தது தங்களுடைய குழந்தைகள் – ஐ.டி. கம்பனியில் வேலை பார்க்கவேண்டும் என்பதுதான். அதே மாதிரி கடந்த இருபதாண்டுகளில் படித்த எல்லா மாணவர்களுடைய கனவும், ஆசையும், லட்சியமும் ஐ.டி. கம்பனியில் வேலை பார்க்க வேண்டும் என்பதுதான். ஒரு தலைமுறையினரின் வாழ்வாக வரவேற்க்கப்பட்ட ஐ.டி. கம்பனிகளில் பணிபுரிவோர்களைப் பற்றி இந்த நாவல் பேசுகிறது. கடந்த இருபதாண்டுகளில் தமிழ் இலக்கியமோ, இந்திய இலக்கியமோ அதிகம் பேசியிருக்க வேண்டிய, விவாதித்திருக்க வேண்டிய வாழ்க்கை முறை இது. நிஜத்தில் அப்படி எதுவும் நிகழவில்லை. அந்த விசயத்தில் ராஜீவ் காந்தி சாலை – முக்கியமானது.
வாழ்வின் லட்சியமாகவும், பிறவியின் பயனாகவும் மதிக்கப்பட்ட வரவேற்கப்பட்ட ஐ.டி. கம்பனிகள் கொண்டு வந்தது என்ன? அது மனிதர்களை எப்படி நடத்துகிறது, எப்படி பார்க்கிறது, அதோடு ஐ.டி. கம்பனிகளில் பணிபுரிவோரின் மனநிலை, வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பது குறித்து விநாயக முருகன் தெளிவாக எழுதியிருக்கிறார். ஒரு ஐ.டி. கம்பனி உருவாகிறது. ஐநூறு ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கிறது. நல்ல சம்பளமும் வழங்கப்படுகிறது. உண்மைதான். ஐ.டி. கம்பனிகள் அமைகிற இடத்தில், சுற்றுப்புறச் சூழலில், அங்கு வசிக்கக்கூடிய மக்களின் வாழ்க்கையில், சமூக வாழ்க்கையில் என்ன மாற்றம் நிகழ்கிறது என்பது குறித்து இலக்கியப் படைப்புகள் வாயைத் திறப்பதில்லை. தனியார் பன்னாட்டுக் கம்பனிகளுக்கு அரசோ, தனியாரிடமிருந்தோ வழங்கப்படும் ஐநூறு ஏக்கர், ஆயிரம் ஏக்கர் நிலங்களை நம்பி வாழ்ந்த மக்கள் என்னவானார்கள் என்பது குறித்து இதுவரை போதிய பதிவுகள் இல்லை. ஐ.டி. கம்பனிகள் மூலம் ஒரு பிரிவினர் வேலை பெறுகின்றனர். அதே நேரத்தில் ஒரு பிரிவினர் வேலை இழக்கின்றனர் என்பதை இந்த நாவல் சுட்டிக்காட்டுகிறது. ஜேசிபி – என்கிற ஒரு இயந்திரம் ஒரு நாளைக்கு ஆயிரம் மனிதர்கள் செய்யக்கூடிய வேலையை செய்து முடிக்கிறது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்த மக்கள் அநாவசியக் குப்பைகளைப்போல இருப்பிடத்திலிருந்து, உழைப்பிலிருந்து அகற்றப்படுகிறார்கள். தெருவோர வாசிகளாக மாற்றப்படுகிறார்கள். வளர்ச்சி, மேம்பாடு, முன்னேற்றம், நாகரீகம் என்பது குறித்து நாம் வைத்திருக்கும் மதிப்பீடுகள் தவறானவை என்று விநாயக முருகன் சொல்கிறார். இதற்கு காரணம் நம்முடைய கல்வி. நாம் எதை கல்வியாக கற்க வேண்டுமோ அதற்கு நேர் எதிரானதையே கற்றிருக்கிறோம்.

 ராஜீவ் காந்தி சாலை – நாவல் சென்னை வாழ்வை பேசுகிறது. குறிப்பாக கடந்த இருபதாண்டுகால சென்னை வாழ்வு. நூறு இருநூறு ஆண்டுகளில் அடைய வேண்டிய வளர்ச்சியை இருபதே ஆண்டுகளில் சென்னை பெற்றிருக்கிறது. பிரம்மாண்டமான சாலைகள், பிரம்மாண்டமான பாலங்கள், பிரம்மாண்டமான கட்டிடங்கள். இவற்றிற்கு போட்டி போடுவது மாதிரி மனிதர்களின் தேவைகளும், கனவுகளும, ஆசைகளும் பிரம்மாண்டமாகிவிட்டன. இந்த பிரம்மாண்டங்கள் யாருடைய வாழ்வை மேம்படுத்துகிறது, யாருடைய வாழ்வில் மண்ணை அள்ளிப்போடுகிறது என்ற கவலை நாவல் முழுவதும் இருக்கிறது.

 மெத்தப் படித்தவர்கள், அதி புத்திசாலிகள், நல்ல வேலை, நல்ல சம்பளம் வாங்குகிறவர்கள் ஏன் மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்கிறார்கள்? முறையற்ற வகையில் உறவு கொள்கிறார்கள், காதலியோடு படுத்திருந்ததை படம் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டுகிறார்கள், ஓயாத பாலியல் தொல்லையில் சிக்கிக்கொண்டு தவிக்கிறார்கள், பைத்தியமாகிறார்கள், ஆண் பாலியல் தொழிலாளியாக மாறுகிறார்கள், கார், பைக், பிளாஸ்மா டி.வி, ஐ.போன், சாம்சங் கேலக்ஸி எல்லாம் இருக்கிறது. ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு வகையான வெறுமையையே கொண்டுவந்து சேர்க்கிறது. வெறுமையிலிருந்து, மன அழுத்தத்திலிருந்து மீள்வதற்கு தற்கொலைதான், பாலியல் விஷமங்கள்தான் சிறந்த தேர்வாக இருக்கிறது. ஐந்து மணிநேர பயணம், பனிரெண்டு மணிநேர வேலை என்கிற போது ஒருவன் இயல்பான நிலையில் இருக்க முடியுமா? அதோடு வேலை எப்போது பறிபோகும் என்ற கவலை, பிராஜக்ட் வருமா? வராதா? என்ற கவலை, பெஞ்ச் சிஸ்டம் குறித்த அச்சம், எல்லாவற்றுக்கும் மேலாக போலியான பேச்சு, சிரிப்பு, நட்பு, நடிப்பு என்றாகி கடைசியில் தனிமனித, குடும்ப, சமூக வாழ்க்கையிலும் போலி என்ற நிலையில் மனம் கொள்ளும வெறுமை – எப்படி ஐ.டி. துறையில் வேலை பார்க்கும் மனிதர்களிடையே நிலவுகிறது என்பதை இந்த நாவல் கூடுதல் அழுத்தத்துடன் பேசுகிறது.

ஐ.டி. கம்பனியில் வேலை பார்க்கும் மனிதர்களின் வாழ்க்கையை ஒரு பக்கம் விவரிக்கும் நாவல் மற்றொரு பக்கம் ஐ.டி. கம்பனிக்கு நிலம் கொடுத்தவர்களின் வாழ்க்கையையையும், நிலத்தோடு தொடர்புடைய, கிராமத்தோடு தொடர்புடைய மனிதர்களின் அவல வாழ்வையும் விவரிக்கிறது. ஐ.டி. கம்பனிகளில் வேலை பார்ப்பவர்களின் பெயர்கள், கௌசிக், ப்ரணாவ், ப்ரணிதா, சுஜா, ரேஷ்மா, பிரேம் குமார். இப்பெயர்கள் நமக்கு மிக முக்கியமான செய்தி ஒன்றை சொல்கிறது. பெயர் வைப்பதில் தமிழர்கள் பெரிய மாற்றம் பெற்றுள்ளனர்.

முன்பு நிலத்திற்கான மதிப்பு என்பது, செம்மண்ணா, கருமண்ணா, உவர் மண்ணா, வானம் பார்த்த பூமியா, கிணறு, ஏரிப் பாசனம் கொண்டதா – என்பதை வைத்து தீர்மானமாயிற்று. இன்று நிலத்திற்கான மதிப்பு என்பது, பேருந்து நிலையம், ரயில் நிலையம், பள்ளி, கல்லூரி, கோவில், கம்பனிகள் – சாலை வசதி – இவை எல்லாம்தான் தீர்மானிக்கிறது. காணாமல் போனது குளங்கள், ஏரிகள், ஓடைகள், தரிசு, புறம்போக்கு நிலங்கள் மட்டுமல்ல. பறவைகள், பனைமரங்களும்தான். அதோடு காணாமல் போனவர்கள் குறி சொல்பவர்கள், கைரேகை, கிளி ஜோசியக்காரர்கள், ஈயம் பூசுபவர்கள், சாணை பிடிப்பவர்கள், அம்மி கொத்துபவர்கள், பழனீ விற்பவர்கள், புடவை வியாபாரிகள் என்று எல்லோருக்காகவும் கவலைப்படுகிறார் விநாயக முருகன். 

ராஜீவ் காந்தி சாலை மற்றொரு மிக முக்கியமான பிரச்சினையை பேசுகிறது. பாலியல் குறித்து அதிகம் பேச வேண்டும். அதிகம் எழுத வேண்டும். ரசிக்கும்படியாக. போற்றும்படியாக. அகப்பாடல்களைப் போன்று. உடலை துணியால் மூடிக்கொள்கிறோம். ஆனால் மனதை எதைக்கொண்டு மூட முடியும்? மனித மனத்தின் ஆசைகள், குரூரங்கள், வக்கிரங்கள், ஒவ்வொன்றும் நாம் புனிதர்கள் அல்ல என்பதை நிரூபிக்கின்றன. விமான நிலைய கழிப்பறையிலும், ரயிலின் ஏ.சி. கோச் கழிப்பறையிலும் ஆண் பெண் நிர்வாணப் படங்களை வரைந்து வைக்கும் மேல்தட்டு வர்க்க மனதின் செயலை நாம் எப்படி புரிந்துகொள்வது? எல்லா நிகழ்வுகளும் நம் கண்முன்னேதான் நிகழ்கிறது. அதை நாம் பார்ப்பதில்லை. விநாயக முருகன் பார்த்திருக்கிறார். எழுதியிருக்கிறார். மனித மனத்தின் விசித்திரங்களை, குரூரங்களை. சரியாகவும். சற்று மிகையாகவும்.

 இந்த நாவல் ஆபாசமாக எழுதப்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியுமா? காமம் – பணம் இதுதான் மனித வாழ்க்கை. மனிதனுடைய அத்துணை கீழ்மையான செயல்களுக்கும் இவைதான் காரணம். அதற்காக இந்த இரண்டையும் விட்டுவிட முடியுமா? முடியாது. காரணம் காமமும் பணமும்தான் வாழ்வின் அடிப்படை. தமிழக இந்தியக் குடும்ப அமைப்பு புனிதமானதுதானா? புனிதம் – புனிதமற்றது இதை எப்படி வரையறுப்பது? எப்படி விளக்குவது? தனிமனித வாழ்க்கையிலிருந்தா? சமூக வாழ்க்கையிலிருந்தா?

 நாம் நம்முடைய பெண்களை கன்னியாஸ்திரி மடத்தில் இருக்கும் பெண்களைப்போல இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இதனால்தான் எல்லாக் குழப்பமும ஏற்படுகிறது. நாம் நமது பெண்கள் மீது ஏற்றி வைத்திருக்கும் புனிதங்கள் ஆபத்தானவை. அந்தப் புனிதங்கள் மிகையானது மட்டுமல்ல உண்மையானதுமல்ல.

இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு புது காதலனுடன் ஓடிப்போகும் பெண்கள், காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்யும் பெண்கள், ஒரே ஆணுடன் படுக்கும் தாயும், மகளும், ஒரே ஆணுக்காக போட்டியிடும் மூன்று பெண்கள், ஒரே ஆணுடன் ரகசியமாக மாறிமாறி படுக்கப்போகும் தோழிகள் இப்படி பல விநோதங்கள். இந்த விநோதங்கள் இப்போதுதான் நடக்கிறது என்று சொல்ல முடியாது. ஆனால் இப்போது கூடுதலாக நடக்கிறது என்று சொல்ல முடியும். விநோதங்கள் கூடுதலாக நடப்பதற்கு இப்போது வசதிகள் அதிகம். வாய்ப்புகள் அதிகம். காம செயல்பாடு என்பது முன்பு இரண்டு நபர்கள் சம்பந்தப்பட்டதாக, இருட்டில் நடப்பதாக இருந்தது. இப்போது அப்படி இல்லை. கேமராவால் படம் எடுக்கப்படுவதாக, காட்சிப்பொருளாக, வியாபாரப் பொருளாக, உலகத்திற்கே காட்சியாக்கப்படும் விசயமாக, காலத்திற்கும் அழியாத மீண்டும் மீண்டும் பார்க்கப்படும் காட்சியாக மாற்றப்படுகிறது. தொழிற்நுட்பம் மனிதர்களை ரகசியம் அற்றவர்களாக மட்டுமல்ல, அந்தரங்கம் அற்றவர்களாக மட்டுமல்ல, நிர்வாணமாக்கிவிட்டது.

நிஜம், நடந்தது என்ன, குற்றம், நீயா நானா, நித்திய தர்மம், உண்மையை பேசுவோம், பேச தயங்குவதை பேசுவோம், நில், கவனி, சொல் போன்ற நிகழ்ச்சிகளின் வழியே நம்முடைய வீர தமிழச்சிகள், காதலனுடன், கணவனுடன், அடுத்தவளின் கணவனோடு செய்த காம விளையாட்டுகளை சொல்ல மட்டுமல்ல – செய்தும் காட்டுகிறார்கள். அந்தரங்கத்தை காட்சிப்படுத்துகிறவர்களில் படித்தவர், படிக்காதவர் என்ற வேறுபாடு இல்லை. இதைத்தான் வளர்ச்சி, முன்னேற்றம், தொழிற் நுட்ப புரட்சி என்று சொல்கிறோமா என்பதே விநாயக முருகனின் கேள்வி.
நவீன வாழ்வு, நவீன தொழிற்நுட்பம், அதிகப்படியான பணம், வசதிகள், விசித்திரம், வக்கிரம், மன அழுத்தம், விவசாய நிலத்தோடு தொடர்புடைய வாழ்க்கைப்போய் தொழிற்சாலைகள் உருவாகும்போது, ஏற்படும்போது – தனிமனித வாழ்வில், குடும்ப, சமூக வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை எழுதியிருக்கிறார். அதிகப்படியாகவும் எழுதியிருக்கிறார்.

 படைப்புக்கான வெளி எது, படைப்புக்கான வெளியை எது உருவாக்குகிறது – எதார்த்தமா, கற்பனையா, அறிவா, அனுபவமா, படிப்பா என்றால் எல்லாம் சேர்ந்துதான் என்று ராஜீவ் காந்தி சாலை நாவல் சொல்கிறது.

நாவலில் மனிதர்கள் வருகிறார்கள். பெறுகிறார்கள். இழக்கிறார்கள். யாரிடத்திலும் காயம் இல்லை. புண், சீழ், வலி, கண்ணீர், ஓலம், அலறல், அழுகை, கதறல், ஒப்பாரி இல்லை. வெறும் தகவல்களாக – வெறும் வாக்கிய அமைப்புகளாகவே இருக்கிறது. ஒரு படைப்பின் அடிப்படை – சிரிப்பு – கண்ணீர். எல்லா தகவல்களையும் கொட்டி தீர்க்க வேண்டும் என்ற ஆவேசம் இருக்கிறது. கடந்த காலமும் வாழ்க்கையும் மேலானது, புனிதமானது என்ற எண்ணம் நாவலாசிரியரிடம் அழுத்தமாக இருக்கிறது. நேற்றைக்கு இன்று மோசம். இன்றைக்கு நாளை இன்னும் மோசம். தகவல்களையும் பதிவு செய்ய வேண்டியது காலத்தின் தேவை. அந்த வகையில் ராஜீவ் காந்தி சாலை நாவல் கவனத்திற்குரியது. 

Saturday, June 7, 2014

மறைந்துப் போனவர்களின் நிழல்கள்


மலைகள்.காம் ஐம்பத்தொன்றாவது இதழில் "மறைந்துப் போனவர்களின் நிழல்கள்" என்ற சிறுகதை வெளியாகி உள்ளது. நண்பர்கள் பார்வைக்கு... 

Wednesday, May 21, 2014

ஒரு பீரோவின் வரலாறு

மலைகள்.காம் ஐம்பதாவது இதழில் எனது ஒரு பீரோவின் வரலாறு என்ற சிறுகதை வெளியாகியுள்ளது. மலைகள்.காமிற்கு நன்றி      

எங்கள் வீட்டில் ஒரு பழைய மரப்பீரோ இருந்தது. இப்போது அது எங்கள் வீட்டில் இல்லை. மதுரையில் இருக்கும் எனது பெரிய அண்ணனின் வீட்டுக்கு அதை தள்ளிவிட்டாச்சு. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் கடலூரில் வசிக்கும்போது கடிலம் ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக எனது அம்மா அடிக்கடி சொல்வார்கள். இப்போது எனது அம்மாவின் வயது எழுபது. அப்படி வெள்ளப் பெருக்கு வந்த தினத்தன்று எனது தந்தையும், அவரது நண்பர்களும் தங்கள் அலுவலக ஜீப்பை எடுத்துக் கொண்டு கடலூரின் சுற்றுப்பக்க கிராமங்களுக்குச் சென்றார்களாம். எனது அப்பா தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறையில் அலுவலகராக பணியாற்றியதால் இந்த காலரா மருந்து கொடுப்பது, மலேரியா தடுப்பு ஊசி, யானைக்கால் வியாதிகளுக்கு மாத்திரை கொடுப்பது போன்ற வேலைகள் அவருக்கு. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதி மக்களின் சேரிகளை பார்வையிட சென்றபோது கடிலம் ஆற்றில் பெரிய காட்டு தேக்கு மரம் வந்து ஒதுங்குவதை பார்த்துள்ளார்கள். அந்த காட்டு மரத்தை பற்றி எனது அம்மா, அந்த காலத்து ஆசாமிகள் எல்லாம் விவரிக்கும்போது காது கொடுத்து கேட்க முடியாது. அவதார் திரைப்படத்தில் வரும் நூற்றாண்டு பழமை வாய்ந்த அந்த பெரிய கல்மரம் அளவுக்கு இருக்கும். அவர்கள் சொல்லும் கதையை வைத்து அப்படியே ஒரு வரலாற்று ஆவணப்படம் எடுத்துவிடலாம். அவ்வளவு விவரணைகளோடும், ஏராளமான நுண்ணிய அடுக்குகளுடன் கூடிய தகவல்களுடன் அந்தக் கதை இருக்கும்.

நல்லவேளை நான் அப்போது பிறந்திருக்கவில்லை. பிறந்திருந்தால் அந்த அதீதக்கதைகளை எல்லாம் அப்போதே சுக்குநூறாக உடைத்திருப்பேன். சரி. அடிச்சு விடுறாங்கன்னு கதை கேட்பேன். அதெப்படி கோடாலியால் கூட பிளக்க முடியாத ரம்பத்தால் கூட அறுக்க முடியாத மரம் இருக்கும்? அதென்ன மரமா? அல்லது கருங்கல் பாறையா? மரத்தை வெட்ட வெட்ட கோடாலிகள் உடைந்துப் போனதுதான் மிச்சம் என்று எனது அம்மா சொல்வார். என் அம்மா சொல்லித்தான் மரங்களின் வயதை எப்படி கணக்கிடுவது என்று எனக்கு தெரிய வந்தது. மரங்களை குறுக்காக வெட்டினால் வளையங்கள் வருமல்லவா? அந்த வளையங்களின் எண்ணிக்கையை வைத்துதான் மரத்தின் வயதை கணிப்பார்களாம். மாமரம் என்றால் குறைந்த வளையங்களும், ஆலமரம் என்றால் அதிக எண்ணிக்கையிலான வளையங்களும் இருக்குமென்று எனது அம்மா சொல்வார். வளையங்களின் எண்ணிக்கை பெருக பெருக அந்த மரத்துக்கு காற்றுக்கும், புயலுக்கும் தாக்குக்கொடுக்கும் திறன் அதிகரிக்கும். தேக்கு மரம் நூறாண்டுகள் தாண்டியும் வளரும் என்று சொன்னார்கள். சில மரங்கள் ஒவ்வொரு பத்தாண்டுக்கு ஒருமுறை வளையங்களை உருவாக்குமென்றும், சில மரங்கள் ஒவ்வொரு ஐம்பதாண்டுகளுக்கு ஒருமுறை வளையங்களை உருவாக்குமென்றும் சொன்னார். அப்படியென்றால் ஐநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்கள் கூட இருக்குமல்லவா? கேட்டேன். இருக்கலாம். யார் கண்டது? இந்த பீரோ செய்ய எடுத்துட்டு வந்த மரமே நூறாண்டு பழமையானது என்று அம்மா சொன்னார். ஒவ்வொரு மரங்களும் ஒவ்வொருவித பொருட்கள் செய்ய உதவும். பனை மரமென்றால் உத்திரம் அமைக்கும் சட்டங்கள் செய்யவும், மாமரம் என்றால் சின்ன சின்ன நாற்காலி சட்டங்கள் செய்யவும், பலாமரமென்றால் இசைக்கருவிகள் செய்யவும் உதவும். இதெல்லாம் என் அம்மா சொல்லித்தான் தெரியும். ஒருமுறை நாங்கள் திருவண்ணாமலையில் குடியிருந்தபோது எங்கள் வீட்டு கொல்லைப்பக்கம் இருந்த பனைமரத்தில் இடி விழுந்தது. சொன்னால் நம்ப மாட்டீர்கள். மழையிலும் மரம் பற்றிக்கொண்டு எரிந்தது. ஆனால் மாந்தோப்பிலோ, தென்னந்தோப்புகளிலோ இடி விழவில்லை. அது ஏன் பனைமரத்தில் மட்டும் சரியாக இடிவிழுந்தது என்று எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. மற்ற மரங்களை விட பனை மரங்களுக்கு இடியை கடத்தும் தன்மை அதிகம். தென்னையை விட பனையின் வேரில் அதிகம் நீர் நிறைந்திருக்கும். அதனால் இடி வேகமாக இறங்குமென்று சொன்னார்கள். பனை மரம் மின்னலை கடத்தும் கடத்தி என்று பின்னாட்களில் கல்லூரியில் இயற்பியல் வகுப்பெடுத்த ஆசிரியரும் சொன்னார். சரி. அதெல்லாம் போகட்டும் கடிலம் ஆற்றில் கண்டெடுத்த மரத்தின் கதைக்கு வருகிறேன்.

அந்த மரத்தை ஐம்பது ஆட்கள் இரண்டு மூன்று குழுக்களாக பிரிந்து மூன்று நாட்கள் கஷ்டப்பட்டு கரைக்கு இழுத்து வந்தார்களாம். கயிற்றை நம்ப முடியாது. காட்டுக்கொடிகள் உறுதியானவை என்பதால் தடிமனான கயிறுகளோடு காட்டுக்கொடிகளையும் பிணைத்து வெள்ளத்திலிருந்து நாணல் புதர்கள் நிறைந்த கரைக்கு முதலில் இழுத்து வந்துள்ளார்கள். பிறகு கரையில் இருந்த பெரிய மரங்கள், பாறைகளோடு கயிற்றின் இன்னொரு நுனியை கட்டி வைத்துள்ளார்கள். மூன்றாம் நாள் ஆற்றில் வெள்ளம் குறைந்தபோது கூலிக்கு யானை கொடுக்கும் ஆட்களை தேடியுள்ளார்கள். ஆனால் மழைக்காலம் என்பதால் பெரும்பாலான யானைப்பாகன்கள் வரவில்லையாம். ஒருவழியாக எனது அப்பாவின் அலுவலகத்தில் வேலைபார்க்கும் கொசுமருந்து அடிக்கும் ஆட்கள் வழியாக அவர்கள் வசிக்கும் குப்பத்தில் இருந்து ஐம்பது பேர்களை திரட்டி ஆற்றங்கரைக்கு அழைத்து வந்து அந்த காட்டு மரத்தை கரையேற்றியுள்ளார்கள். பிறகு அந்த மரத்தை அரசு அதிகாரிகள் எல்லாம் சேர்ந்து வெட்டி ஆளாளுக்கு பங்கு போட்டுக் கொண்டார்களாம். பெரிய துண்டுகளை எல்லாம் மேலதிகாரிகளும், கிளைத்துண்டுகளையெல்லாம் கீழ்நிலை அதிகாரிகளும் பிரித்துக்கொண்டார்களாம். அப்படி பிரித்ததில் ஒரு பெரிய துண்டு எங்க வீட்டுக்கு வந்தது. அந்த மரத்துண்டை வந்து பார்த்த உள்ளூர் ஆசாரிங்க வியந்து போய் தங்களால் இந்த மரத்தை செதுக்கி பீரோ செய்ய முடியும். ஆனால் தங்களுக்கு வேலைப்பாடுகள் செய்ய அவ்வளவாக வராது என்று கைவிரித்துவிட்டார்கள். பிறகு அப்பாவின் நண்பருக்கு தெரிந்த இரண்டு ஆசாரிங்க சிதம்பரத்திலிருந்து வந்தார்களாம். மரத்துண்டை ஒரு லாரியில் ஏற்றி சிதம்பரம் கொண்டுச்சென்று அங்கு அவர்கள் தச்சுப்பட்டறையில் வைத்து பீரோவுக்கான வேலைப்பாடுகளை செய்தார்களாம். பீரோவின் தலைப்பகுதியில் இரண்டுப்பக்கங்களிலும் இருந்து இரண்டு அன்னப்பறவைகள் எதிரெதிரே இடமும்,வலமும் அமர்ந்து முத்தமிட்டுக்கொள்வது வடிவமைப்பு இருக்கும். மயில் தரையில் அமர்ந்திருக்கும்போது அதன் நீண்ட தோகை மண்ணில் படிந்திருப்பது போன்றதொரு வடிவமைப்பை பீரோவின் கால்பகுதியில் செதுக்கியிருந்தார்கள். எனக்கு கால்பகுதியை விட தலைப்பகுதியைத்தான் அதிகம் பிடிக்கும். அந்த அன்னப்பறவைகள் முத்தமிட்டுக்கொள்வது சற்று கிளர்ச்சியை தூண்டுவது போன்று கூட இருக்கும். இப்போதிருக்கும் இரும்பு பீரோக்கள் போல இரண்டு கதவுகள் இருக்காது. ஒரே கதவுதான். இரண்டு கதவுகள் இருந்தால் மரத்தின் உறுதி போய்விடுமென்று யாரோ அனுபவம் வாய்ந்த ஆசாரி தச்சுப்பட்டறையில் சொன்னாராம். கதவின் இடுக்கு வழியாக காற்றின் ஈரப்பதம் நுழைந்து நாளடைவில் கதவின் இரண்டு பக்கங்களிலும் தேய்மானம் பூச்சி அரிப்பு வந்துவிடுமென்று ஆலோசனை சொன்னாராம். அப்பா சரியென்று ஒரே கதவை வைக்க சொல்லிவிட்டார். திண்டுக்கல்லிலிருந்து வரவழைக்கப்பட்ட பித்தளைப்பூட்டை கதவின் முனையில் பொருத்தியிருந்தார்கள். நாங்கள் இதுவரை குடியிருந்த எத்தனையோ வீடுகளில் இந்த பிரச்சினையை சந்தித்துள்ளோம். மழைக்காலம் வந்துவிட்டால் மரக்கதவு, ஜன்னல்களில் ஈரம் இறங்கி உப்பி விடும். கதவுகளை, ஜன்னல்களை தாழிட சிரமமாக இருக்கும். சரியாக தாழ்ப்பாளில் பொருந்தாது. ஆனால் இந்த பீரோவின் கதவை மட்டும் எப்படி நாற்பது வருடங்களாக எந்த சிறுப்பிரச்சினையும் இல்லாமல் தாழிட முடிகிறது என்று வியப்பாக இருக்கும்.

அந்த பீரோ செய்துவிட்டு மிச்சமிருந்த துண்டில் ஒரு கட்டிலும் செய்தார்கள். கட்டில் கூட அவ்வளவு விசேஷம் இல்லை. அந்த பீரோதான் என்னை எப்போதும் கவர்ந்திழுக்கும். எட்டடி உயரமும் ஐந்தடி கொஞ்சம் குறைவான அகலமும் இருந்ததா என்று சரியாக நினைவில்லை. பள்ளிக்கூட நாட்களில் தீபாவளி நேரம் நெருங்க நெருங்க காசு சேர்த்து வாங்கும் வெடிகளை எல்லாம் அந்த பீரோவில்தான் ஒளித்து வைப்போம். சிறுவர்களாகிய எங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசிய அறைகளை கொண்டது. வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் கொடுக்கும் ரூபாய்த்தாள்களை நானும், எனது அண்ணன்களும் அந்த பீரோவில்தான் ஒளித்து வைப்போம். நான் வைப்பதை அவனாலும், அவன் வைப்பதை என்னாலும் ஒருபோதும் கண்டுபிடிக்க முடிந்ததில்லை. இந்த பீரோ மரமாக இருந்தபோது இதில் எத்தனை குருவிகள் கூடுக்கட்டியிருக்குமென்று ஒருநாள் நினைத்துக்கொண்டேன். எத்தனையோ பாம்புகளும், பல்லிகளும், சிறுத்தைகளும் இந்த மரத்தில்தானே ஊர்ந்துச்சென்றிருக்கும். அப்போதெல்லாம் இந்த மரத்தில் வசித்த பறவைகள் தங்கள் முட்டைகளை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க இப்படித்தானே ரகசிய பொந்துகளை உருவாக்கி அதில் மறைத்து வைத்திருக்குமென்று தோன்றியது. அப்பாவிற்கு அரசாங்க வேலை என்பதால் அடிக்கடி இடமாற்றம் செய்வார்கள். ஊர் ஊராக பெட்டியை கட்டிக் கொண்டு ஓடுவோம். நான் பிறந்த பிறகும் அப்படிதான். ஒவ்வொரு வாடகை வீடு மாறும்போதும் அந்த மரப்பீரோவை தூக்க ஐந்து பேர் வேண்டும். பொணக்கணம் என்பார்களே. அது இதுதான். இந்த பீரோவோ இந்தக்கணம் இருக்கே. அந்த பெருமரம் எப்படியிருந்திருக்கும் என்று யோசிக்கவே மலைப்பாக இருக்கும்.

அப்பா, அம்மாவின் சொந்த ஊர் கும்பகோணம். நான் பிறந்தது கூட கும்பகோணத்தில்தான். அப்பாவை கடலூரிலிருந்து கும்பகோணத்துக்கு பணி மாற்றம் செய்ததில் அம்மாவுக்குதான் சந்தோஷம். ஊர் ஊராக அலைந்துக்கொண்டிருக்காமல் கும்பகோணத்துக்கே வந்தாச்சே. வந்து இரண்டாவது வருடம் நான் பிறந்தேன். மருத்துவமனையிலிருந்து ரிக்சா பிடித்து வீட்டுக்கு வந்து தொட்டிக்கட்டி என்னை போடும்போது கண்டிப்பாக அந்த பீரோ இதேதுடா புதுவரவு வந்திருக்கு என்று என்னை ஆச்சர்யத்துடன் பார்த்திருக்கும். நானும் அந்த பளபளவென்று மின்னும் பீரோவை பார்த்து சிரித்திருக்கலாம். இதென்ன எல்லாரும் நகர்கிறார்கள். இது மட்டும் நகராமல் இருக்கே என்னவென்று எனது பாஷையில் கேட்க எல்லாரும் குழப்பத்தோடு எனது தொட்டிலுக்கு மேலே கிலுகிலுப்பையை ஆட்டி எனக்கு விளையாட்டு காட்டியிருக்கலாம். நினைவில்லை. ஆனால் முதல்முதலில் என் கையில் கிடைத்த ஸ்டிக்கரை கொண்டு வந்து அந்த பீரோவில் ஒட்டியது இன்னமும் நினைவில் உள்ளது. ஒருநாள் பாய் கடையில் பபிள்கம் வாங்கும்போது பாய் இலவசமாக ஒரு ஸ்டிக்கர் கொடுத்தார். அந்த ஸ்டிக்கரில் இருந்த உருவத்தை பார்த்து எனது பள்ளிக்கூட நண்பன் பால்ராஜ் இதுதான் சூப்பர் ஸ்டார் ரஜினி என்றான். அப்போதெல்லாம் எங்கள் தெருவில் ஏன் எங்கள் ஊரிலேயே தொலைக்காட்சிகள் அவ்வளவாக இல்லை. சினிமா திரையரங்குதான் ஒரே பொழுதுபோக்கு. பிறகு நான் அம்மாவுடன் சினிமா செல்லும்போதெல்லாம் ரஜினி நடித்த திரைப்படத்துக்கு அழைத்துச்செல்ல அடம்பிடிக்க ஆரம்பித்தேன். பில்லா, பொல்லாதவன், முரட்டுக்காளை என்று நிறைய ரஜினி படங்கள் அடிக்கடி வந்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தின. பெட்டிக்கடைகளில் எல்லாம் மிட்டாய் வாங்கினால் ரஜினி ஸ்டிக்கர்கள் இலவசமாக கிடைக்கும். அல்லது பத்துகாசு கொடுத்தால் ஐந்து ஸ்டிக்கர்கள் விற்றார்கள். அதை எல்லாம் வாங்கி வந்து பீரோவில் ஒட்டுவேன். அதுக்காக பலமுறை வீட்டில் அடிவாங்கியுள்ளேன். ஸ்டிக்கரை கிழித்தெடுக்கும்போது பீரோவில் நகக்கீறல்கள் பட்டு தேய்வு ஏற்பட்டது. அதை தவிர்க்க ஸ்டிக்கரை கையால் கிழித்துவிட்டு ஈரத்துணியை வைத்து தேய்த்து அழுத்தினால் ஸ்டிக்கர் பிசிறுகள் மறைந்துவிடும். ஆனால் அந்த இடம் மட்டும் கரை படிந்தது போல அசிங்கமாக இருக்கும். ஒருநாள் போகிப்பண்டிகை என்று நினைக்கிறேன். ஒரு ஆசாரி வந்தார். பீரோவை நான்கைந்து பேர்கள் வீட்டுக்கு வெளியே தூக்கிச்சென்று வைத்தார்கள். அந்த ஆசாரி கையில் இருந்த உப்புத்தாளால் பீரோ எங்கும் தேய்த்தார். இப்போது பீரோவின் பளபளப்பு சுத்தமாக இல்லை. பிறகு நான் பள்ளிக்கூடம் சென்று வந்து பார்த்தபிறகு அந்த பீரோ பளபளவென்று முன்னைக்காட்டிலும் மின்னிக்கொண்டிருந்தது. அது பெயின்ட் இல்லை. வார்னிஷ் என்று பால்ராஜ் சொன்னான். அவங்க வீட்டு பீரோவில் கூட அப்படித்தான் நான்கைந்து வருடங்களுக்கு ஒருமுறை வார்னிஷ் அடிப்பார்களாம். ஆனால் எனக்கு விபரம் தெரிந்து இரண்டு முறை மட்டுமே பீரோவுக்கு வார்னிஷ் அடித்தோம். தேக்கு மரங்களுக்கு இயல்பிலேயே எண்ணெய் கசிந்து பளபளப்பு விடும் தன்மை உண்டு. அதனால்தான் பீரோ இப்படி பளபளப்பாக இருக்கிறது என்று அப்பா சொல்வார்.

எனது அப்பா இறந்தபிறகும் ஒவ்வொரு வீடாக அந்த பீரோவை தூக்கிக் கொண்டு சுற்றியலைந்தோம். கட்டிலை தூக்குவதில் எங்களுக்கு சிரமம் இருக்கவில்லை. கட்டில் சட்டங்களை கழற்றி மாட்டிவிடும் வசதி இருந்தது. நான்கு பெரிய நீண்ட எக்கு ஆணிகளை மட்டும் ஸ்பேனர் வைத்து கழற்றி விட்டால் போதும். நான்கு கால்களும் இரண்டிரண்டாக வந்துவிடும். நான்கு பெரிய நீள் பக்கவாட்டு சட்டங்களையும், குறுக்குவாட்டு சட்டங்களையும் இரண்டு ஆட்கள் தாராளமாக தூக்கி சுமந்து நடந்து செல்லலாம். ஆனால் அந்த பீரோதான் தொல்லை செய்யும். கட்டிலை எனக்கு பிடிக்காமல் போனதுக்கு இன்னொரு காரணமும் உள்ளது. எங்க பாட்டி மரணித்தபோது அந்த கட்டிலில்தான் படுத்திருந்தார். அப்பாவும் பக்கவாதம் வந்து ஆறுமாதங்கள் அந்த கட்டிலில்தான் கிடந்தார். படுக்கும் மெல்லிய அட்டை மூத்திரம் இறங்கி ஊறிப்போய் சொதசொதவென்று இருக்கும். அதெல்லாம் பலவருடங்கள் முன்பு நடந்த கதை.

அப்பா இறந்தபிறகு எனது கல்லூரி மேற்படிப்பும் முடிய நாங்கள் சென்னைக்கு வந்துவிட்டோம். இப்போது சென்னையில் வளசரவாக்கத்தில் குடியிருக்கின்றோம். இத்தனை வருடங்களில் அப்பாவின் சாம்பாத்தியத்தில் சொந்தமாக வீடு வாங்கியதில்லை. எல்லாமே வாடகை வீடுகள்தான். அப்பாவுக்கு தெரிந்த ஆட்கள் ஒருமுறை காட்டில் இருந்து மலைத்தேன் எடுத்து வந்து தந்தார்கள். பிறகு சந்தனக்கட்டை வந்தது. கோடைக்காலங்களில் அதைத்தான் வேர்க்குருவுக்கு அரைத்து தேய்ப்போம். பிறகு காட்டுப்பலாக்கள் வரும். அப்பா அரசு அதிகாரியாக இருந்ததால் இப்படி எத்தனையோ பொருட்கள் வந்துக்கொண்டே இருக்கும். ஆனா கடைசி வரை அவர் ஏன் சொந்த வீடு எதுவும் வாங்கியதில்லை என்று நினைத்தால் எனக்கு அவர் மீது கோபம்தான் வரும். நாங்கள் இதுவரை எத்தனையோ முறை வீடுகள் மாறியுள்ளோம். ஒவ்வொரு முறையும் வீடு மாறும்போதும் அந்த பீரோவை தூக்கிக்கொண்டு அலைந்தோம். முன்ன போல இப்ப யாருங்க மரப்பீரோ வச்சிருக்காங்க? இப்ப எல்லாம் ஸ்டீல் பீரோ வந்தாச்சு. தூக்கிப்போட்டு வேற வாங்குங்க என்று தெரிந்தவர்கள் சொன்னார்கள். அந்த பீரோவை பார்க்கும்போதெல்லாம் எனக்கும் எங்க அம்மாவுக்கும் பெரிய சண்டையே நடக்கும்.

“உனக்கு இதோட வரலாறு தெரியாது” என்பார்.

“என்ன பெரிய நெப்போலியன் வரலாறு? திருட்டுத்தனமா ஆத்துல இறங்கி கவர்மென்ட்டுக்கு தெரியாம காட்டுமரத்தை அமுக்கிட்டு வந்த ஆளுதானே?” என்று திட்டுவேன்.

வாடகைக்கு வீடு மாறுவது போன்ற கொடுமையான விஷயங்கள் எதுவும் இல்லை. சென்னைக்கு நான் வந்த புதிதில் இங்கு சேரிகளிலும், கூவம் கரையோரங்களிலும் வசிக்கும் சிலரை பார்த்துள்ளேன். அவர்களிடம் மரச்சாமான்கள் எதுவும் இருக்காது. மிஞ்சிப்போனால் ஐந்தாவது படிக்கும் பையன் கூட தூக்கி சுமக்குமளவுக்கு எடை கொண்ட சின்ன மர நாற்காலி இருக்கும். அவ்வளவுதான். அவர்களிடம் இருப்பதெல்லாம் பிளாஸ்டிக் குடங்கள், எளிதில் மடக்கக்கூடிய இரும்பு கட்டில்கள், தகர பீரோக்கள். சென்னையில் வசிக்கும் சேரி மக்கள் தவிர பெரும்பாலான நடுத்தர மக்கள் கூட இப்படி தங்களை சுற்றியுள்ள எல்லா விஷயங்களையும் எளிமையாகவே வைத்துள்ளார்கள் என்று நினைக்கும்போது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. தலைக்கு மேலே பறக்கும் போர் விமானங்கள் சத்தம் கேட்டதும் குடுகுடுவென்று கைக்கு கிடைத்த பொருட்களுடன் ஓடிச்சென்று பதுங்குகுழிக்குள் மறைந்துக்கொள்ளும் மனித எலிகள் போலவே சென்னை மக்கள் தெரிந்தார்கள். புதுவீடுகளுக்கு குடிமாறுபவர்களை சென்னையில் வீதிக்களில் பார்த்துள்ளேன். சேரிகளில் வசிப்பவர்கள் என்றால் அதிகபட்சம் ஒரு மீன்பாடி வண்டியோ, தள்ளுவண்டியோ போதும். நடுத்தர மக்கள் வீட்டை காலி செய்யும்போது மினிலாரி போதும். ஆனால் எங்கள் வீட்டுக்கு ஒரு லாரி தேவைப்படும். தேவையற்ற தட்டுமுட்டு சாமான்கள். குடைத்துணி இல்லாத வெறும் குடைக்காம்புகள், எப்போதோ நாங்கள் விளையாடிய மரப்பாச்சி பொம்மைகள். (அவையெல்லாம் எங்கள் குழந்தைகள் வைத்து விளையாட அம்மா பத்திரமாக எடுத்து வைத்திருந்தாள்) இதெல்லாம் போதவில்லை என்று அந்த பொணக்கனம் இருக்கும் பீரோ. உண்மையில் சவத்தை சுமப்பது போலவே நாங்கள் ஒவ்வொரு முறையும் அந்த பீரோவை சுமந்துக்கொண்டு அலைந்தோம். நகரத்தில் சுமை தூக்கும் கூலியாட்கள் கிடைப்பதே அபூர்வம். அதுவும் அவர்கள் என்ன கிராமத்து ஆட்கள் போல நல்ல ஆஜானுபாகுவாகவா உள்ளார்கள்?

சென்னை வந்த இந்த பதினைந்து வருடங்களில் வளசரவாக்கத்திலேயே நாங்கள் ஐந்து முறை வீடு மாறிவிட்டோம். சென்னையில் இன்னொரு விநோதமான பழக்கம் உள்ளது. மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே வீட்டில் குடியிருந்தால் அந்த வீட்டின் உரிமையாளர் அங்கு குடியிருப்பவர்களுக்கு இல்லாத தொல்லைகள் கொடுப்பார். ஐந்து வருடங்களுக்கு மேல் ஒரே வீட்டில் குடியிருந்தால் அந்த வீட்டில் குடியிருப்பவரே வீட்டின் உரிமையாளர் ஆகி விடுவார் என்று பாழப்போன நம்பிக்கையை யாரோ தவறாக எப்போதோ எங்கோ சொல்லியிருந்தார்கள். அதை நம்பிக்கொண்டுதான் சென்னையில் இருக்கும் வாடகைக்கு வீடு விடும் மனிதர்கள் அப்படி நடந்துக்கொள்கின்றார்கள்.

ஒருமுறை மதுரையிலிருந்து எனது பெரிய அண்ணன் வந்திருந்தார். அவர் முப்பது வருடங்களுக்கு முன்பு மதுரையில் செட்டில் ஆனவர். மதுரையில் சொந்த வீடு வைத்துள்ளார். அவரிடம் எனது கஷ்டத்தை சொல்ல அவர் இந்த பீரோவை நான் எடுத்துட்டு போறேன் என்றார். அம்மாவுக்கு அந்த பீரோவை அண்ணனிடம் கொடுக்க விருப்பமில்லை. நான்தான் அவரை திட்டி சம்மதிக்க வைத்தேன் அப்படியே அதே மரத்துல செஞ்ச இந்த கட்டிலையும் தூக்கிட்டு போங்க என்று சொன்னேன். எனக்கு அந்த கட்டிலை பார்க்கும்போதெல்லாம் இறுதிவரை ஒரு சொந்த வீடு கூட வாங்க முடியாமல் கடைசிக்காலத்தில் பக்கவாதம் வந்து கட்டிலில் படுத்து இறந்துப்போன அப்பாவும், அவரது மேலுள்ள எனது வெறுப்பும் நினைவுக்கு வரும்.

போரூரில் அண்ணனுக்கு தெரிந்த லாரி சர்வீஸ் ஆட்கள் இருந்தார்கள். அவர்களிடம் சொன்னோம். போரூரில், வளசரவாக்கத்தில், கே.கே.நகரில் எங்குமே சுமை தூக்கும் ஆட்கள் இல்லை. ஒருவழியாக லாரி சர்வீஸ் ஆட்கள் எங்கேயோ அலைந்து தேடி மூன்று பேர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். வீட்டுக்கு வந்தவர்களிடம்

நான் எட்டு ஆட்கள் இல்ல கேட்டேன் என்று சொன்னேன்.

எட்டா? இந்த பீரோவை தூக்க மூன்று பேர் போதுமே. நீங்க வேடிக்கை மட்டும் பாருங்க என்று அலட்சியமாக சொன்னார்கள். நான் எதுவும் பேசாமல் சட்டையை அணிந்துக்கொண்டு தெருமுனையில் இருந்த கடைக்கு சென்று சிகரெட் பிடித்து வீட்டுக்கு திரும்பி வரும்போது அந்த ஆட்கள் மிகவும் சோர்ந்துபோய் வெயில் காலத்தில் நாக்கு வெளியே தள்ளி மூச்சு வாங்கும் நாய் போல தெரிந்தார்கள். எனக்கு சிரிப்பு வந்தது. அதென்ன மரமா? பாறையில் செய்த கல் பீரோ ஆச்சே. பிறகு எப்படியோ கூடுதலாக ஆட்களை அழைத்து வந்து பீரோவை லாரியில் ஏற்றி மதுரைக்கு அனுப்பி வைத்தோம். வீட்டுக்குள் நுழைந்தபோது பீரோ, கட்டில் இருந்த இடம் வெறுமையாக இருந்தது. நிம்மதியாக இருந்தாலும் மனதை ஏதோ செய்தது. பிறகு இரண்டு நாட்கள் கழித்து ஊரிலிருந்து எனது அண்ணி போன் செய்தார்கள். அம்மாவிடம் பேசிவிட்டு என்னிடம் பேசினார்கள்.

“என்ன அண்ணி. அந்த பீரோ நல்லபடியா வந்துச்சா? அதை வீட்டுக்குள்ள எடுத்துட்டு வர்றதுக்குள்ள உயிர் போயிருக்குமே?” என்று சிரித்தபடியே கேட்டேன்.

“நீங்க எல்லாம் சுத்த வேஸ்ட்டுடா. ஒரு மரப்பீரோவை தூக்க முடியுதா? ஒருத்தன் வந்தான். உங்க அண்ணனுக்கு தெரிந்த நண்பர் அவனை எங்கேயோ ஆவணிவீதியிலிருந்து அழைத்து வந்திருந்தார். அவன் அந்த பீரோவை அப்படியே முதுகில தூக்கிட்டு வந்து வீட்டுக்குள்ள வச்சுட்டு போயிட்டான்”

“என்னது? பீரோவை முதுகிலேயே தூக்கிட்டு வந்தானா?

“ஆமா. ஒரே ஆள். பார்க்க கடோத்கஜன் மாதிரி இருந்தான். அவன் தனியாத்தான் வந்தான். அவன்தான் தனியாவே பீரோவை முதுகில தூக்கிட்டு வந்தான்”

“சான்ஸே இல்லை அண்ணி. அதெப்படி அந்த பீரோவை ஒரு தனி ஆள் லாரியில இருந்து இறக்க முடியும்?”

“நான்கைந்து பேர்கள்தான் இறக்கினாங்க. ஆனா அவன் தனியாகத்தான் முதுகில தூக்கிட்டு வந்தான்”

“ஐயோ..கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க. எனக்கு ஒண்ணும் புரியலை”

எனது அண்ணி சிரித்தபடியே, ‘அது பெரிய கதை. லாரி சர்வீஸ் ஆளுங்க பக்கத்துக்கு தெருவிலேயே பீரோவை இறக்கி வச்சுட்டாங்க. தெரு குறுகலா இருந்ததால வீட்டு வாசல் லாரிய எடுத்துட்டு வரமுடியாதுன்னு சொல்லிட்டாங்க. தெருமுனையிலேயே லாரியை நிறுத்திட்டாங்க. டிரைவரும், கிளீனரும் லாரியோட பின் கதவை திறந்து ஒரு பெரிய பலகையை தரைக்கும்,லாரியின் உடம்புக்கும் இடையே சரிவாக வச்சாங்க. அப்புறம் பீரோவோட அடிப்பாகத்துல கால்மிதிக்கற துணியை வச்சாங்க. லாரி மேல இருந்து மூன்று ஆட்கள் பீரோவை மெதுவா பலகையில சரிச்சுட்டே வர கீழேயிருந்து மூன்று பேர் பிடிச்சு கொஞ்ச கொஞ்சமா இறக்கி வச்சுட்டாங்க. எல்லாருக்கும் வேர்த்து விறுவிறுத்து போச்சு”

அவர் சொன்னதை கேட்டதும் எனக்கு காட்டு யானைகளை லாரியில் ஏற்றிச்சென்று சரணாலயங்களில் இறக்கி விடும் காட்சி நினைவுக்கு வந்தது.

“அப்புறம் என்ன நடந்தது?”

அந்த பீரோவை இறக்கி வச்சுட்டு லாரி சர்வீஸ் ஆளுங்க போயிட்டாங்க. அரைமணிநேரம் கழிச்சு அந்த கடோத்கஜன் ஆள் வந்தான். அவன் கையில் பெரிய தாம்புக்கயிறு வச்சிருந்தான். இன்னொரு கையில போர்வை மாதிரி பெரிய துணி இருந்துச்சு. அவன் சட்டையை கழற்றி வச்சுட்டு அந்த துணியை உடம்பில சுத்திக்கிட்டான். அப்புறம் அந்த தாம்புக்கயிற்றை இரண்டா மடிச்சு சுருக்கு மாதிரி செஞ்சான். அவன் சுருக்கு போட்ட விதமே விநோதமா இருந்துச்சு. ஒரு நொடியில சரசரன்னு கயித்தை இரண்டா மடிச்சு வளையம் போல பின்னி வச்சுட்டான். அது கொக்கி போல இருந்துச்சு. நெல் மூட்டை தூக்குறவங்க கையில வச்சிருக்கும் இரும்பு கொக்கி போலவே அந்த துணி சுருக்கு இருந்துச்சு. அப்புறம் பீரோவோட பின்பக்கம் போனான். அந்த கயித்தை அப்படியே பீரோ குறுக்கால வச்சு அந்தப்பக்க முனையை வலது கையிலேயும், இந்தப்பக்க முனையை இடது கையிலேயும் பிடிச்சுக்கிட்டான். அப்படியே முன்னால குனிஞ்சு கயித்தை இறுக்கி பீரோவை கொஞ்சம் கொஞ்சமாக முதுகுக்கு சாய்ச்சுக்கிட்டான். அப்படியே அலேக்காக உப்பு மூட்டை மாதிரி முதுகிலேயே தூக்கிட்டு வந்து வீட்டுக்குள்ள வச்சுட்டான்”

எனக்கு வயிற்றில் அமிலம் பெருகியது.

“விளையாடாதீங்க..ஒரே ஆளா? திரும்ப கேட்டேன்”

“நான் என்ன பொய்யா சொல்றேன். வேணா உங்க அண்ணன்கிட்ட கேளு” என்று சொல்லி போனை வைத்துவிட்டார்.

என்னால் நம்ப முடியவில்லை. ஒரே ஆள் எப்படி அந்த பீரோவை தூக்கினான். எனது அம்மாவுக்கு மயக்கமே வந்துவிட்டது. ஒரு ஆள் கண்டிப்பாக தூக்க முடியாது. அது எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும். ஏன்னா இருபத்தைந்து வருடமாக அந்த பீரோவை எனக்கு தெரியும். அம்மாவுக்கு ஐம்பது வருடங்களாக பீரோவை தெரியும். சரி அண்ணி ஏதோ விளையாட்டு காட்டுறாங்க என்று அண்ணனிடம் கேட்க அவரும் அதையேத்தான் போனில் சொன்னார். ஒரு ஆள்தான். எப்படி தூக்கினான்னு எனக்கும் தெரியல. முதுகில தூக்கிட்டு வந்துட்டான் என்றார். நான் அந்த ஆளை ஆறடி உயரம். கருப்பு நிறம். அர்னால்டு போல கற்பனை செய்துக் கொண்டேன். ஆனால் அந்த கற்பனை எதுவும் பொருந்தவில்லை. எனக்கு இப்போது கடிலம் ஆறு, ஆற்றில் மிதந்து வந்த காட்டு மரம், மன்னர்களுக்கு மர சிற்பங்கள் செய்த தச்சு ஆசாரிங்க கதைகள், எனது பால்யகால கதைகள் எல்லாமே பின்னுக்கு சென்றுவிட்டன. எங்கு திரும்பினாலும் பீரோவை தூக்கிய அந்த மாவீரனே கண்ணுக்குள் நின்றான். அந்த சம்பவம் நடந்து இன்றோடு பத்து வருடங்கள் ஆகின்றன. அன்றிலிருந்து அந்த பேய் பீரோவை தூக்கின அந்த காட்டு மனுசனை சந்திக்க வேண்டும். அவன் யார் என்று தெரிந்துக்கொள்ள வேண்டுமென்று அடிக்கடி ஆர்வம் தோன்றும். ஆனால் எங்கே மதுரைக்கு செல்வது? ஓயாத வேலை. நிமிர்ந்து பார்ப்பதற்குள் பத்து வருடங்கள் ஓடிவிட்டன. இந்த பத்து வருடங்களில் சென்னையில் சொந்தமாக அடுக்குமாடி வீடும், காரும் வாங்கியிருந்தேன். அம்மாவுக்கு கண் அறுவை சிகிச்சை நடந்தது. அம்மாவுக்கு ஒருவகையில் நிம்மதி. அந்த மரப்பீரோவை யாரோ முகம் தெரியாத ஆளிடம் விற்காமல் அண்ணன் வீட்டில் பத்திரமாக உள்ளதை நினைத்து.

இன்று காலை ஏதோ ஒரு விஷயமாக நான் மதுரையில் வசிக்கும் அண்ணனின் நண்பரோடு பேசிக்கொண்டிருந்தேன். பேச்சினூடாக அவர், “இப்ப எல்லாம் கூலிக்கு ஆளுங்க கிடைக்கவே சிரமமா இருக்கு. வீட்டுல கொஞ்சம் வேலை இருக்கு. ஆளுங்க தேடினா கிடைக்க மாட்டேங்குறாங்க” என்று சொன்னார். அப்போது நான் பலவருடங்கள் முன்பு பீரோவை ஒத்தையாக தூக்கின ஆளை பற்றி விசாரித்தேன்.

“அந்த ஆள் செத்துப்போய் ஒரு வருடம் ஆச்சு. தல்லாக்குளம் டாஸ்மாக் கடை வாசலில் ரத்த வாந்தி எடுத்தே செத்து போனான். அளவுக்கு மீறிய குடி”

மனதுக்கு சங்கடமாக இருந்தது. இனி என்னால் அவனை சந்திக்க முடியாது. இப்போது நினைத்தால் கூட நான் ரயிலையோ, விமானத்தையோ பிடித்து மதுரை சென்று அண்ணனின் வீட்டில் இருக்கும் அந்த பீரோவை பார்த்துவிட்டு வந்துவிடலாம். ஆனால் என்னால் ஒருபோதும் மனதில் இருக்கும் அந்த மாவீர பிம்பத்தை நேரில் பார்க்கவே முடியாது. எத்தனையோ வருடங்களுக்கு முன்பு ஏதோவொரு பறவை அடர்ந்த காட்டின் ஊடாக பறந்துச்சென்றிருக்கும். அப்படி பறக்கும்போது அதன் எச்சம் அந்த காட்டில் விழுந்து அதிலிருந்து விருட்சமொன்று முளைத்திருக்கலாம். அது எத்தனையோ மழை,புயல், இடி,வெள்ளப்பெருக்கை பார்த்திருக்கலாம். நூற்றாண்டுகள் பழமைமிக்க அந்த விருட்சத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட துண்டுகள் வேறு வேறு ஊர்களில் வேறு வேறு கதைகளை சுமந்துக்கொண்டு திரிய போகிறதென்று அந்த பறவைக்கு அப்போது தெரிந்திருக்குமா? தெரியவில்லை. எல்லாமே வியப்பாக இருந்தது. எல்லா வரலாற்றுக்கதைகளையும், எல்லா வணக்கத்துக்குரிய பிம்பங்களையும் கால் அடி உயரம் கூட இருக்காத இந்த டாஸ்மாக் பாட்டில் அடித்து விட்டதே என்று நினைக்கும்போது வியப்பிலும் வியப்பாக இருந்தது. எல்லா வரலாற்று கதாநாயகர்களும் சாதாரணத்திலும், சாதாரணமாக செத்துப்போனதை போல.

Wednesday, January 8, 2014

காலகண்டம்

நவீன தமிழ் இலக்கியத்தில் இதுவரை பொன்னாசாரிகளை பற்றி ஏதாவது நாவல்கள் வந்துள்ளதா என்று யோசித்து பார்த்தால் எதுவும் எனது நினைவுக்கு வரவில்லை. சங்க இலக்கியத்தில் சிலப்பதிகாரம் போன்ற தரவுகள் உள்ளன. சினிமாவில் கூட ஏதோ ஒரு பாரதிராஜா படத்தில் கார்த்திக் பொன்னாசாரியாக வருவார். அந்த படத்தில் பொன்னாசாரி பிரிட்டிஷ் பெண்ணை காதலிப்பார். பேண்டஸிக்காக கார்த்திக் ஒரு சின்ன சுத்தியலால் ரஞ்சிதா மூக்கில் ஆணியை வைத்து அடித்து மூக்கு குத்திவிடுவார். பிறகு அருள் என்ற படம். அந்த படத்தில் அரசியல்வாதியை வெட்டிவிட்டு ஜெயிலுக்கு போவார். பொன்னாசாரிகளை பற்றி ஏதாவது நல்ல இலக்கியம் வந்துள்ளதா என்று நீண்ட நாட்களாக தேடிகொண்டிருந்தபோதுதான் எஸ்.செந்தில்குமார் நாவல் பொன்னாசாரிகளின் நான்கு தலைமுறைகளை பற்றிய கதை என்ற அறிவிப்பு வந்தது. புத்தகம் வெளிவந்ததும் எடுத்து படிக்க ஆரம்பித்தேன். இந்த நாவலின் பின்னட்டையில் 500 வருடங்களிற்கு மேற்பட்ட பாரம்பரியம் கொண்ட பொன்னாசாரிகளது சமூகம் என்று குறிப்படப்பட்டிருக்கிறது. சிலப்பதிகாரத்தை இன்னும் பிற தரவுகளை வைத்து பார்த்தால் அந்த சமூகம் இன்னமும் பலமடங்கு பழமையான சமூகம் என்றே கணிப்பிட தோன்றுகிறது.

இந்த நாவலின் வெளியீட்டு விழாவில் அ.இராமசாமி சொன்னது போல் பொன்னாசாரிகளுக்கு அப்படியென்ன இறுக்கமான சமூக அழுத்தம் இருக்க போகிறதென்று நினைத்துதான் நாவலை திருப்ப ஆரம்பித்தேன். காரணம் தலித்துகளை போலவோ பிற ஜாதிகளை போலவோ சமூக அடுக்கில் ஆதிக்கசாதியினரின் வீடுகளை தேடிச் சென்று அவர்கள் தரும் வேலைகளை செய்யும் சமூகம் அல்ல ஆசாரிகள். பார்ப்பனர்களுக்கு நிகராக பூணூல் அணியும் ஜாதி. சாமி சிலைக்கே கண் திறக்கும் ஜாதி நாங்கள் என்று சிலர் பெருமையாக சொல்வார்கள். எந்த சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள்தான் பொன்னாசாரிகளது வீடுகளுக்கு தேடிச் சென்று தாலி செய்ய வேண்டும். அது தலித்தோ, நாயக்கமார்களோ, மணியக்காரர்களோ, பார்ப்பனர்களோ எல்லாரும் தேடிச்சென்று வேலை கொடுக்கும் சமூகம் ஆசாரிகளுடையது. எனவே அவர்களுக்கு பெரிதாக சமூக அழுத்தம் இருக்க போவதில்லை என்ற எண்ணத்தில்தான் நாவலை படிக்க ஆரம்பித்தேன்.

நாவலின் கதை சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முந்தைய காலகட்டத்தில் பிரிட்டிஷார் ஆண்ட மதுரை ஜில்லாவில் இருந்து ஆரம்பிக்கிறது. நாவலின் களம் தெலுங்கு பேசும் நகை ஆசாரிகளும், தச்சாசாரிகளும், நாயக்கமார்களும், மணியக்காரர்களும் நிறைந்த போனூர்,தேவாரம் ஜமீன் பாத்தியம் கொண்ட பெரியரேவூப்பட்டி கிராமங்கள்.

பொன்னாசாரி சுப்புலுவும்,பெரியநாச்சியும் போனூரில் தச்சு வேலை செய்கிறார்கள். பொன் ஆபரணங்கள், மரப்பொருட்கள் வேலைகளை வருடத்திற்கு பத்துபடி வரகும், சோளமும், கேழ்வரகும் சம்பளமாக நாயக்கமார்களிடமும், மணியக்காரர்களிடமும் வாங்கிக்கொண்டு உழைக்கிறார்கள். சுப்புலுவும், பெரியநாச்சியின் மகன் பெத்தையா. ஊருக்குள் காலரா நோய் பரவியபோது பெத்தையாவின் மனைவி இறந்து விடுகிறார். காலரா நோயில் இறந்த ஆட்களை ஊருக்கு வெளியே புதைக்க சொல்லி மணியக்காரர்கள் சொல்லிவிட பெத்தையா அவரது மனைவியை ஊருக்கு வெளியே புதைத்து விடுகிறார். பெத்தையாவிற்கு இரண்டு ஆண் பிள்ளைகள். மூத்தவன் ராஜய்யா. இளையவன் சென்னய்யா. மனைவி இறந்ததும் பெத்தையா அவர்களை அழைத்து சென்று தனது தம்பியிடம் ஒப்படைத்து வளர்க்க சொல்கிறார். பெத்தையாவின் தம்பி பொன் ஆசாரி அல்ல. தச்சு ஆசாரி. பெத்தையாவின் பிள்ளைகள் இருவரும் அவர்கள் சித்தப்பாவிடம் தங்கி தச்சு வேலைகளை கற்றுக்கொள்கிறார்கள். பெத்தையாவிற்கு ஒரு தங்கை. அவள் பெயர் வீரவீருசின்னம்மா. கணவன் பெயர் சில்லையா ஆசாரி. அவளது மகன் கிருட்டிணாசாரி.

கிருட்டிணாசாரி தலைமுறையில் நாவல் தொடங்குகிறது. அவனுக்கும் பெரியரேவூப்பட்டியில் வசிக்கும் பொன்னழகு ஆசாரி மகள் திரஜம்மாவிற்கும் திருமணம் நடக்கிறது. அந்தகால வழக்கம் போல பால்ய விவாகம். பிறகு திரஜம்மா பருவம் அடைந்ததும் குடும்ப வாழ்க்கை தொடங்குகிறது. ஒரு மகளும்,மகனும் பிறக்க சில ஆண்டுகளில் திரஜம்மா இறந்து போகிறாள். கிருட்டிணாசாரி இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறான். மனைவி பெயர் வீருசின்னு. அவர்களுக்கு மூன்று மகன்கள். கதை அப்படியே மூன்றாவது தலைமுறை செல்கின்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டம். இப்படியே சமகாலம் வரை நீளும் ஒரு குடும்பத்தின் வழியாக அதன் உறவுகளின் ஊடாக அந்த குடும்பம் வசிக்கும் ஊர்களின் வழியாக அவர்கள் குலத்தெய்வங்கள் வழியாக அந்த குலதெய்வங்கள் அமர்ந்திருக்கும் நிலபரப்பின் ஊடாக மாறும் பருவ நிலைகள் வழியாக ஒரு சமூகத்தின் கதை சொல்லப்படுகிறது. காலச்சக்கரம் சுழல சுழல ஒரு காலத்தில் மிடுக்காக வாழ்ந்த பொன்னாசாரிகள் சமூகம் எப்படி சிதைந்து போகின்றது என்பதையும், நவீன இயந்திர காலத்தின் முன்பு அவர்களது பழமையான பட்டறைகள் எல்லாம் தோற்று போவதையும், அவர்களின் இன்றைய தலைமுறைகள் பலர் கந்து வட்டிக்கு கடன் வாங்கி தொழில் செய்வதையும், ரஜினி படம் பார்க்க சென்று வழியில் கழுதை மோதி சைக்கிளோடு சாக்கடைக்குள் விழுந்து எழுவதையும் , சாராயக்கடைக்குள் விழுந்து கிடப்பதையும் சொல்வதோடு நாவல் முடிகிறது.

இந்த நாவலின் வெளியீட்டு விழாவில் அ.இராமசாமி சொன்னது போல இந்த நாவலில் மனிதர்கள் இறந்துக் கொண்டே இருக்கிறார்கள். முதல் தலைமுறையில் விஷக்காய்ச்சல், பஞ்சம் என்று மனிதர்கள் இறக்க இறக்க பூமி புதிது புதிதாக மனிதர்களை உற்பத்தி செய்துகொண்டே இருக்கிறது. நாவலின் இறுதி செல்ல செல்ல காலகண்டம் அந்த சமூகத்தை வேகமாக வீழ்ச்சியடைய வைக்கிறது. ஆனால் இந்த முறை நடக்கும் வீழ்ச்சியில் மனிதர்கள் ஒரு போதும் மீண்டெழுவதில்லை. போனூர் கிராமத்தின் எல்லா சுவடுகளையும் காலம் அழிந்துவிடுகிறது. நெடுநேரம் கழித்து நாவலை புரட்டி மீண்டும் முதல் பகுதியை படித்தேன். வடக்குவீரநாச்சி ஒரு குழந்தையை காலில் போட்டு மிதித்து கொன்று அதன் குடலை உருவி மாலையாக போட்டு கொண்டு கற்சிலையாக நிற்கிறாள். இப்படி ஒரு தொன்ம கதையுடன்தான் நாவல் தொடங்குகிறது. வடக்குவீரநாச்சி என்பது வேறு யாருமில்லை. அது காலம். அது பலிகொண்ட குழந்தை போனூர்.

பொன்னாசாரிகள் சமூகம் பற்றி பதிவு செய்த வகையில் இது ஒரு முக்கிய நாவலாக படுகிறது.

Sunday, December 29, 2013

நண்பர்களுக்கு ஓர் அறிவிப்பு

'ராஜீவ் காந்தி சாலை' என்ற எனது முதல் நாவலின் வெளியீட்டு விழா வரும் ஜனவரி ஒன்றாம் தேதி சென்னை அண்ணாசாலையில் இருக்கும் (ஸ்பென்சர் எதிரே) புக்பாயிண்ட் புத்தகக்கடை அரங்கில் நடக்க உள்ளது. உயிர்மை பதிப்பக சார்பில் நடக்கும் இந்த விழாவில் மேலும் பல நண்பர்களின் புத்தகங்கள் வெளிவர உள்ளன. நண்பர்கள் அனைவரும் கலந்துக் கொண்டு இந்த விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன். 



காமம் , பணம், துரோகம், நம்பிக்கையின் முறிவு சொந்த ஆன்மாவின் அழிவு, உறவுகளுக்குள் படியும் குற்ற நிழல்கள், அர்த்தம் தெரியாத தற்கொலைகள். இதுதான் இந்த நாவலின் மைய நீரோட்டம்.
ராஜீவ் காந்தி சாலை என்பது ஒருஇடம் மட்டுமல்ல, அது ஒரு பிரமாண்டமான வளர்ச்சிக்கு உள்ளும் புறமும் படந்திருக்கும் பிரமாண்டமான் அவலத்தின் நிலப்பரப்பு.
(நாவலின் பின்னட்டையிலிருந்து)

நன்றி
விநாயக முருகன்


ஆன்லைனில் புத்தகங்கள் கிடைக்குமிடம்:-

அகநாழிகை 

டிஸ்கவரி புக் பேலஸ்

வீகேன்

Thursday, December 5, 2013

பட்ட விரட்டி



காலித் ஹுசைனி எழுதிய நாவல் The Kite Runner. ஐந்து வருடங்களுக்கு முன்பு வெளிவந்து இரண்டு கோடி பிரதிகளுக்கு மேல் விற்ற இந்த புத்தகத்தை போன வாரம் ஒபாமா படிக்க வாங்கிச் சென்ற விஷயத்தை நியூயார்க் டைம்ஸில் படித்தேன். அவர் இன்னுமா அந்த புத்தகத்தை படிக்கவில்லை என்று ஆச்சர்யமாக இருந்தது. கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேல் நியூயார்க் டைம்ஸ் - இன் சிறந்த விற்பனையாகும் நூல்களின் வரிசையில் உள்ள, உலகெங்கிலும் 55 மொழிகளில் மொழிபெயர்க்கபட்டு, 2 கோடிக்கும் மேல் விற்பனையான நூல் இது.

தமிழில் பட்ட விரட்டி என்ற தலைப்பில் எம்.யூசூப் ராஜா மொழிப்பெயர்த்துள்ளார். அபாரமான மொழிபெயர்ப்பு. எந்த சிரமும் இல்லாமல் சல்ப்படைய வைக்காமல் ஒரே அமர்வில் படிக்க வைக்கும் மொழிபெயர்ப்பு.

கதை ஆப்கானின் காபூல் நகரில் நடக்கிறது. ஹசனின் அப்பா அலி. அலியின் மனைவி சனோபர். அவர்கள் அவர்கள் ஷியா பிரிவை சேர்ந்தவர்கள். ஹசன் பிறந்த ஐந்தாம் நாள் சனோபர் ஒரு நாடோடி கும்பலுடன் ஓடி விடுகிறாள். ஹசனின் அப்பாதான் குழந்தையை வளர்க்கிறார்.

அலி வேலை செய்யும் எஜமான் பெயர் ஆகா. ஆகா செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவர். அவர் மனைவியை இழந்தவர். அவருக்கு ஒரு மகன். பெயர் அமீர் (இந்த நாவலின் ஆசிரியர்). அவர்கள் பஸ்டூன் இனத்தை சேர்ந்தவர்கள்.

ஹசனும்,அமீரும் சிறுவயது முதல் எந்த வர்க்க பாகுபாடுகளுமின்றி ஒன்றாக பழகி ஒன்றாக விளையாடுகிறார்கள். பட்டம் விடுவதில் இருவரும் வல்லவர்கள். ஒருநாள் சிறுவர்கள் எல்லாம் சேர்ந்து பட்டம் விடுவது சண்டை நடக்கிறது. அந்தச் சண்டையில் ஆஸிப் என்னும் பஸ்டூன் இனச் சிறுவன் ஹசனை அடித்து வன்புணர்ச்சி செய்து விடுகிறான். அதை அமீரால் தடுக்க முடியவில்லை. பிறகு அது குறித்து அமீர் அடிக்கடி குற்ற உணர்ச்சிக் கொள்கிறான். சிறுவர்கள் அமீருக்கும்,ஹசனுக்கும் இடையே இருக்கும் நட்பில் விரிசல் விழுகிறது. பிறகு ஹசன் மீது அவன் வேலை செய்யும் வீட்டில் ஒரு திருட்டுப்பழி விழ அவனும் அவனது தந்தை அலியும் அந்த வீட்டிலிருந்து வெளியேறுகிறார்கள்.

இதனிடையே ஆப்கானில் சோவியத் ரஷ்யாவின் இராணுவ வீர்கள் அட்டகாசம் செய்கிறார்கள். பலர் அகதிகளாக பாகிஸ்தான் ஓடுகிறார்கள். ஆகாவும்,அமீரும் வீடு சொத்தையெல்லாம் போட்டுவிட்டு அகதியாக பாகிஸ்தான் ஓடுகிறார்கள். பிறகு அங்கிருந்து அமெரிக்கா ஓடுகிறார்கள். அவர்கள் அமெரிக்காவில் தங்கி காலத்தை ஓட்டுகிறார்கள். அமீர் இலக்கியம் படிக்கிறான். எழுத்தாளன் ஆகிறான். நாவல்கள் எழுதுகிறான். திருமணம் நடக்கிறது. அமெரிக்காவில் வந்து குடியேறிய காபூலில் ராணுவ ஜெனரலாக இருந்த தஹாரியின் மகள் சுரையா ஜானை காதலித்து மணம் முடிக்கிறான் அமீர்ஜான். பிறகு அமீரின் தந்தை புற்றுநோயால் மரணமடைகிறார்

இடையே ஆப்கானில் இருக்கும் ரஷ்ய படைகள் அங்கிருந்து ஓடுகிறார்கள். தாலிபான்கள் வந்து அட்டகாசம் செய்கிறார்கள். தாலிபான்கள் அட்டகாசம் செய்யும் அந்த கொடுமையான காலக்கட்டத்தில் (19 98) அமெரிக்காவிலிருந்து ஆப்கான் செல்கிறான் அமீர். அவன் ஏன் அங்கு செல்கிறான்? அங்கு தாலிபான்கள் அவனை என்ன செய்தார்கள்? ஹசன் என்ன ஆனான்? என்றெல்லாம் நாவலை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

ஒரான் பாமுக் எப்படி துருக்கியின் ஆன்மாவை எழுத்துக்குள் இழுத்துக் கொண்டு வருகிறாரோ அது போல இவர் ஆப்கானின் ஆன்மாவை இழுத்துக் கொண்டு வந்துள்ளார். இரண்டு வர்க்கங்களுக்கு இடையே இருக்கும் பிளவுகள். ஒரே மதத்தின் இரண்டு உட்பிரிவுகளுக்கு இடையே இருக்கும் பூசல்கள். மதமும், தீவிரவாதமும் எந்த புள்ளியில் இணைகிறது என்றும், ஆப்கானும்,பாகிஸ்தானும் நட்புநாடுகளாக இருந்தாலும் அவர்களுக்கு இடையே என்ன பிரச்சினை என்றும் அருமையாக புனைவில் கொண்டுவந்துள்ளார்.

எனது ஒரு வருத்தம் என்னவென்றால் தாலிபான்களை வளர்த்து விட்டதே அமெரிக்காதான். அந்த அரசியலையும்,அயோக்கியத்தனத்தையும் அவர் நாவலில் சொல்லியிருக்கலாம். அப்படி சொல்லியிருந்தால் இந்த நாவல் இரண்டு கோடி எண்ணிக்கையில் விற்றிருக்காது. ஒபாமாவும் வாங்கியிருக்க மாட்டார்.

பட்ட விரட்டி
காலித் ஹூசைனி
தமிழில் எம்.யூசூப் ராஜா
எதிர் வெளியீடு

Saturday, July 27, 2013

நந்தி ஒரு மானஸ்தன்

இண்டர்நெட் வந்தபிறகு திட்டுகளும்,வசவுகளும் அதிகமாகி விட்டன. நிஜ வாழ்க்கையில் இல்லாத தாக்கத்தை மனஉளைச்சலை இந்த இண்டர்நெட் வசவுகள் ஏற்படுத்துகின்றன.   

சாலையில் டூவீலரில் செல்கின்றோம். தெரியாத்தனமாக ஆட்டோவில் இடித்து விடுகின்றோம். உடனே ஆட்டோக்காரர் டே..பாடு என்கின்றார் கோபத்துடன். உடனே நாம் பாடுவதில்லை. சாரி சார். தெரியாமல் இடிச்சுட்டேன் என்று பயந்து வந்து விடுகின்றோம். ஆட்டோக்காரர் சிக்னலில் கோடு தாண்டி வந்து நிற்கின்றார். டிராபிக் போலீஸ் கழுவி கழுவி ஊற்ற, சாரி சார். இதோ எடுத்துறேன் சார் ஆட்டோவை என்று பம்முகின்றார் . டிராபிக் போலீசை அவரது மேலதிகாரி திட்டுகின்றார் . அந்த மேலதிகாரியை வார்டு கவுன்சிலர் அவரை அமைச்சர் அவரை எதிர்கட்சி அமைச்சர் இவர்களை பத்திரிக்கைகாரர்கள் இவர்கள் எல்லாரையும் பொதுமக்களாகிய நாம் திட்டுகின்றோம். பிறகு பொதுமக்கள் நாம் நமக்கு நாமே திட்டி க் கொள்வோம். இப்படிதான் ஒரு ஆரோக்யமான ஜனநாயக அமைப்பு இயங்குகின்றது.

நேற்று ஒரு முகம் தெரிந்த அலுவலக நண்பரிடம் (பேஸ்புக் வந்தபிறகு யாரை நண்பர்கள் என்று குறிப்பாக எழுத வேண்டியுள்ளது) சாட்டுக்கு வந்தார். அவரது பேஸ்புக்கில் இவர் ஏதோ அசிங்க அசிங்கமாக திட்டி ஒரு கமெண்ட் போட அவர் இவரை அசிங்க அசிங்கமாக திட்டி விட்டாராம். மிகவும் மனவேதனையாக உள்ளது என்றார்.  

"அந்த திட்டினவர் உங்களுக்கு ஸ்கூல் காலேஜ் நண்பரா?" என்றேன்.

"இல்லை" என்றார். 

"சரி.உங்களுக்கு தெரிந்தவரா?" என்றேன் 

"இல்லை" என்றார்.

"சரி.அவரை நேர்ல பார்த்து பேசி இருக்கீங்களா?" என்றேன்   

"இல்லங்க பேஸ்புக்கில்தான் பழக்கம்.அதான் ரொம்ப வருத்தமாயிருக்கு" என்றார்.

"வீட்ல உங்க பொண்டாட்டி,மேலதிகாரி,ரோட்டுல போறவன்,வர்றவன் எல்லாம் திட்டுறான். ஆனா அவங்க மேல வராத கோபம் உங்களுக்கு பேஸ்புக் FakeID திட்டுக்கள் மேல வருதா?" என்று கேட்டேன்.

"அதெப்படி எழுத்துல திட்டினா கோபம் வரக்கூடாதா? வள்ளுவர் கூட நாவினால் சுட்ட வடுன்னு சொன்னாரே" என்றார்.

"அது. விடுங்க அது அந்த காலத்துல பேஸ்புக் இருந்துச்சா? வள்ளுவரை யாராவது திட்டியிருப்பாங்க. அவர் பதிலுக்கு இப்படி ஒரு குறள் எழுதியிருப்பார்.எழுத்துல வாங்குறது, அடிச்சுக்கறது எல்லாம் அடியா?" கேட்டேன்.

"அப்படின்னா எழுத்தால மனவுளைச்சல் கொடுக்கறது உங்களுக்கு வலிக்காதா?படிக்கும்போது உங்களுக்கு வலிக்காதா?" என்னைப் பார்த்து கேட்டார்.            

"உண்மையான மனிதர்களின் திட்டு வலிக்கும். அவர்களின் எழுத்து வலிக்கும். ஆனால் பேஸ்புக்கில் அப்படி யாரும் இருப்பதாக தோன்றவில்லை. அறம் வைத்து பாடுவது எல்லாம் முடிந்து விட்டது" என்றேன்

"அது என்ன அறம் வைத்து பாடுவது?" என்றார் நண்பர்      

தமிழில் அறம் பாடுதல் என்று ஒன்று உண்டு. அதாவது யார் மேல் அறம் வைத்து பாடுகின்றார்களோ (பாட்டுடைத் தலைவன்) அதை கேட்ட உடன் அவர்கள் இறந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை அந்த காலத்தில் இருந்தது.

நந்தி வர்மன் என்ற பல்லவ மன்னன் எட்டாம் நூற்றாண்டில் இருந்தான். போரில் நந்தி வர்மனை கொல்ல முடியாத எதிரிகள், நந்தியின் மேல் அறம் வைத்து பாட ஒரு புலவரை ஏற்பாடு செய்தார்கள். அந்த புலவரும் காசுக்கு ஆசைப்பட்டு முதலில் நந்திவர்மன் மேல் அறம் வைத்துப் பாடினான். ஆனால் பிறகு மனம் மாறி பாடல் எழுதமாட்டேன் என்று சொல்லி விட்டான். அந்தப் புலவருக்கு ஒரு பரத்தையிடம் தொடர்பு இருந்தது. அவளோடு தனித்து இருக்கும் போது அந்த புலவர் தனது நந்தி கலம்பகம் என்ற தொகுப்பிலிருந்து சில பாடல்களை பாடி காண்பித்துள்ளார்.

ஒருநாள் அந்த பரத்தை அரண்மனை வீதி வழியாக செல்லும்போது அவளுக்கு நினைவிலிருந்த சில நந்திக் கலம்பக பாடல்களை பாடிக் கொண்டே போனாளாம் .

அதை அரண்மனைமாடத்தில் நின்றுக் கொண்டிருந்த நந்திவர்மன் கேட்டுவிட்டான். அவனுக்கு அந்த பாடல்கள் மிகவும் பிடித்துபோக அவளை வரவழைத்து அந்தப் பாடல்களின் பிண்ணனி அறிந்துள்ளான். பிறகு அந்தப் புலவனை வரவழைத்தான்.

புலவனும் கண்ணீரோடு உண்மையை சொல்லி விட்டார்.

நந்திவர்மன் மகிழ்ச்சியோடு புலவனை கட்டிப்பிடித்து முழுப் பாடல்களையும் பாடும்படி கேட்டான்.

புலவர் சம்மதிக்கவில்லை . "அரசே , இந்தப் பாடல்களை முழுதும் நீங்கள் கேட்டால் உங்களுக்கு மரணம் சம்பவிக்கும்" என்று எவ்வளவோ எடுத்துச் சொன்னார்.

நந்திவர்மன் கேட்கவில்லை. இப்படி ஒரு அருமையான பாடல்களுக்காக உயிரையே கொடுக்கலாம் என்று சொல்லி அவரைப் பாடச் சொன்னான்.

புலவன் சொன்னார் "மன்னா, மொத்தம் நூறு பாடல்கள் உள்ளன. நூறு பந்தல்கள் அமையுங்கள். நான் ஒவ்வொரு பாடல் பாடும் போதும், நீங்கள் ஒவ்வொரு பந்தலில் இருந்து கேட்க வேண்டும். அப்படி நான் நூறாவது பாடல் பாடும் போது, நீங்கள் நூறாவது பந்தலில் இருந்து கேட்பீர்கள். நான் பாடி முடித்தவுடன், உங்களுக்கு மரணம் சம்பவிக்கும்" என்றார்.

மன்னனும், சம்மதித்து ஒவ்வொரு பாடாலாய் கேட்டு கொண்டு வந்தான். நூறாவது பாடல் கேட்ட பின், அந்த பந்தல் திடீரென்று தீப் பிடித்து எரிந்து மன்னனும் எரிந்து சாம்பலாய் போனான். இதுதான் நந்திவர்மன் கதை.

நந்திவர்மன்  எதிரிகள் பந்தலுக்கு தீ வைத்து கொளுத்தி விட்டார்கள் என்றும் ஒரு கதை உண்டு.

ஆனால் இந்த ஒரு வரி கதையில் அவ்வளவு சுவாரஸ்யம், திடுக்கிடும் சம்பவங்கள், புலவரின் கள்ளக்காதல் கிசுகிசு எல்லாம் இல்லாததால் அது உண்மையான வரலாறாக இருக்க முடியாது.               

இந்த கதையை சொன்னதும்

"அப்படியா? இது உண்மைதானா? " நண்பர் கேட்டார்.        

"அந்த காலத்துல உண்மை இருந்துச்சு. நேர்மை இருந்துச்சு. காசுக்கு ஆசைப்பட்டாலும் பிறகு மனம் மாறி புலவர் நல்லவரா மாறிட்டார். மன்னனிடம் உண்மையை சொல்லி விட்டான். கலைக்காக உயிரே போனாலும் பரவாயில்லை என்று நினைத்தான் நந்திவர்மன். ஒருவேளை அந்த புலவர் பாடிய நூறாவது பாடலில் பந்தல் தீப்பிடித்து எரியாமல் இருந்திருந்தால் கூட பந்தலுக்கு தானே நெருப்பு வைத்து செத்திருப்பான். ஏன்னா நந்தி ஒரு மானஸ்தன்" என்றேன்  

"அப்படின்னா இப்ப உள்ளவங்க மானங்கெட்டவங்களா?" என்றார் நண்பர் கோபத்துடன்.

அப்படி நான் சொல்லல. எனக்கு தெரிஞ்சு ஒருத்தர் வீட்டுல பொண்டாட்டி திட்டிட்டான்னு தற்கொலை செஞ்சுக்க மலை உச்சிக்கு போயிருக்கார். தற்கொலை செஞ்சிக்க போனவன் அங்கே பாறைக்கு பக்கத்தில ஏதோ ஒரு நாவல் கிடந்திருக்கு. சரி. சாவுறதுதான் சாவுறோம். அந்த நாவலை படிச்சுட்டு அரைமணி நேரம் கழிச்சு சாவலாம். இப்ப செத்து அவ்வளவு சீக்கிரம் எங்க போகபோறோமுன்னு நாவலை பிரிச்சுருக்கான். நாவல் படிக்க படிக்க அது அவனை வேறு ஏதோ ஒரு உலகத்திற்கு அழைச்சுட்டு போயிருக்கு. அது இதுவரை பார்க்காத உலகம். அவனுக்குள் என்ன என்னவோ தோன்றியிருக்கு. இந்த நாவலை எழுதின எழுத்தாளரை உடனே பார்க்கனுமுன்னு மலை உச்சியிலிருந்து விடுவிடுன்னு இறங்கி எழுத்தாளர் வீட்டிற்கு போய் நடந்த உண்மைகளை சொல்லியிருக்கான். எழுத்தாளருக்கு செம ஆச்சர்யம். அப்படியா என்னால நீங்க தற்கொலை செஞ்சுக்கற முடிவை கைவிட்டுட்டியா? கேட்க, அவன் சொன்னானாம். என் பொண்டாட்டி திட்டிட்டான்னு தற்கொலை செஞ்சுக்க போனேன். இவ்வளவு கேவலமா கதை எழுதற உன்னை எத்தனை பேரு கழுவி கழுவி ஊத்தியிருப்பாங்க. நீயே உயிரோட இருக்கும்போது நான் ஏன் உயிரோடு இருக்கக்கூடாது என்றானாம்