Tuesday, January 28, 2014

நீலப்பறவை

-----சார்லஸ் புக்கோவ்ஸ்கி


அங்கு ஒரு நீலப்பறவை
எனது இதயத்திலிருந்து வெளிவர விரும்பும்
ஆனால் நான் அவனுக்கு முரடனாக உள்ளேன்
நான் சொல்கிறேன் அங்கேயே இரு
வேறு யாரும் உன்னைப்பார்க்க விடப்போவதில்லை 
அங்கு ஒரு நீலப்பறவை
எனது இதயத்திலிருந்து வெளிவர விரும்பும்
ஆனால் நான் அவன் மீது விஸ்கியை ஊற்றி
சிகரெட் புகையை உள்ளிழுக்கிறேன் 
அவன் உள்ளே இருப்பது
வேசிகளுக்கும் மது ஊற்றுபவர்களுக்கும்
மளிகைக்கடை குமாஸ்தாகளுக்கும்
ஒருபோதும் தெரிவதில்லை  

அங்கு ஒரு நீலப்பறவை
எனது இதயத்திலிருந்து வெளிவர விரும்பும்
ஆனால் நான் அவனுக்கு முரடனாக உள்ளேன்
நான் சொல்கிறேன் 
அங்கேயே தங்கு
நீ என்னை குழப்பியடிக்க விரும்புகிறாயா?
என் வேலைகளை வெட்டியாக்க விரும்புகிறாயா?
என் புத்தக விற்பனையை ஐரோப்பாவில்
ஒன்றுமில்லாக்க விரும்புகிறாயா? 
அங்கு ஒரு நீலப்பறவை
எனது இதயத்திலிருந்து வெளிவர விரும்பும்
ஆனால் நான் மிகவும் புத்திசாலி
எல்லாரும் உறங்கும் இரவில் மட்டும்
சில நேரம்
அவனை வெளியில் வெளியே விடுகிறேன்
நான் சொல்கிறேன் நீ அங்கே இருப்பது எனக்கு தெரியும்
எனவே சோகமாகாதே
மீண்டும் அவனை உள்ளே வைக்கிறேன்.
ஆனால் அவன் அங்கே மெல்ல பாடுகிறான்
நான் அவனை சாகடிக்க செய்யவில்லை.
மேலும் அவனும் நானும்
எங்களின் ரகசிய ஒப்பந்தத்துடன்
ஒன்றாகத் தூங்குகிறோம்
மேலும் ஓர் ஆணை
அழச்செய்வதென்பது நல்லதுதான்.
ஆனால் நான் அழுவதில்லை,
நீங்கள்?

ஆங்கில மூலம்

--------Charles Bukowski

there's a bluebird in my heart that
wants to get out
but I'm too tough for him,
I say, stay in there, I'm not going
to let anybody see
you.
there's a bluebird in my heart that
wants to get out
but I pour whiskey on him and inhale
cigarette smoke
and the whores and the bartenders
and the grocery clerks
never know that
he's
in there.

there's a bluebird in my heart that
wants to get out
but I'm too tough for him,
I say,
stay down, do you want to mess
me up?
you want to screw up the
works?
you want to blow my book sales in
Europe?
there's a bluebird in my heart that
wants to get out
but I'm too clever, I only let him out
at night sometimes
when everybody's asleep.
I say, I know that you're there,
so don't be
sad.
then I put him back,
but he's singing a little
in there, I haven't quite let him
die
and we sleep together like
that
with our
secret pact
and it's nice enough to
make a man
weep, but I don't
weep, do
you?




நன்றி
விநாயக முருகன்

Friday, January 10, 2014

ஆயிரம் விழுதுகள்

கண்ணுக்கு தெரியும்
உன் விழுதுகளால்
நிற்கின்றது என் மரம்
யாருக்கும் தெரியாமல்
பரவுகிறது வேர்
பெருகும் உனது
ஒவ்வொரு விழுதுகளுக்கு
இணையாக




நன்றி
விநாயக முருகன்

கிழட்டுப்புலி

தங்கள் நகங்கள் மழுங்கி போனதையும்
தங்கள் நடை தளர்ந்து போனதையும்
தங்கள் பற்கள் உதிர்ந்து போனதையும்
தங்கள் பார்வை மங்கி போனதையும்
தங்கள் உடல் திராணியற்று போனதையும்
தங்கள் குரல் பலவீனமாக போனதையும் 
தங்கள் இரை கைகெட்டும் தூரத்தில் இருப்பதையும்
உணரும் தருணத்தில்
பதுங்கும் முடிவை கைவிடுகின்றன
கிழட்டுப்புலிகள்





நன்றி
விநாயக முருகன்

உண்மை

திருட்டு விசிடியில்
சரஸ்வதி சபதம் பார்த்த
ஊமை வித்யாபதிக்கு
திடீரென பேச்சு வந்தது


ம்..ம்மா... ம்..ம்மா
அம்மா...அப்பா
அம்மா...அப்பா
அம்மா...அப்பா
ஓசை ஒலி சப்தம் நாதம்
எழுத்து சொல் பொருள்
இசை பண் பாட்டு கவி கவிதை செய்யுள்
அறம் பொருள் இன்பம்
அன்னை தந்தை தெய்வம் ஆசான்
பேச்சு மொழி
பேசும் தன்மை அனைத்தும் வந்துவிட்டது
தாயே என்றவன்
திருட்டு விசிடியை மூலக்கடையில் வாங்கிய
உண்மையையும் உளறி வைத்தான்


நன்றி
விநாயக முருகன்

மீன்காரி

முன்பொரு முறை
பூ விற்ற பெண்மனி
பின்னாட்களில்
மீன் விற்க ஆரம்பிக்கும்போது
அவள் முன்னிருக்கும் மீன்குவியல் மீது
தண்ணீர் தெளிக்கின்றாள்
ஏதோ நினைப்பில்
சலனமற்று வெறித்திருக்கும்
கண்களை பார்த்துவிட்டு
மீண்டும் தெளிக்கின்றாள்




நன்றி
விநாயக முருகன்

Wednesday, January 8, 2014

காலகண்டம்

நவீன தமிழ் இலக்கியத்தில் இதுவரை பொன்னாசாரிகளை பற்றி ஏதாவது நாவல்கள் வந்துள்ளதா என்று யோசித்து பார்த்தால் எதுவும் எனது நினைவுக்கு வரவில்லை. சங்க இலக்கியத்தில் சிலப்பதிகாரம் போன்ற தரவுகள் உள்ளன. சினிமாவில் கூட ஏதோ ஒரு பாரதிராஜா படத்தில் கார்த்திக் பொன்னாசாரியாக வருவார். அந்த படத்தில் பொன்னாசாரி பிரிட்டிஷ் பெண்ணை காதலிப்பார். பேண்டஸிக்காக கார்த்திக் ஒரு சின்ன சுத்தியலால் ரஞ்சிதா மூக்கில் ஆணியை வைத்து அடித்து மூக்கு குத்திவிடுவார். பிறகு அருள் என்ற படம். அந்த படத்தில் அரசியல்வாதியை வெட்டிவிட்டு ஜெயிலுக்கு போவார். பொன்னாசாரிகளை பற்றி ஏதாவது நல்ல இலக்கியம் வந்துள்ளதா என்று நீண்ட நாட்களாக தேடிகொண்டிருந்தபோதுதான் எஸ்.செந்தில்குமார் நாவல் பொன்னாசாரிகளின் நான்கு தலைமுறைகளை பற்றிய கதை என்ற அறிவிப்பு வந்தது. புத்தகம் வெளிவந்ததும் எடுத்து படிக்க ஆரம்பித்தேன். இந்த நாவலின் பின்னட்டையில் 500 வருடங்களிற்கு மேற்பட்ட பாரம்பரியம் கொண்ட பொன்னாசாரிகளது சமூகம் என்று குறிப்படப்பட்டிருக்கிறது. சிலப்பதிகாரத்தை இன்னும் பிற தரவுகளை வைத்து பார்த்தால் அந்த சமூகம் இன்னமும் பலமடங்கு பழமையான சமூகம் என்றே கணிப்பிட தோன்றுகிறது.

இந்த நாவலின் வெளியீட்டு விழாவில் அ.இராமசாமி சொன்னது போல் பொன்னாசாரிகளுக்கு அப்படியென்ன இறுக்கமான சமூக அழுத்தம் இருக்க போகிறதென்று நினைத்துதான் நாவலை திருப்ப ஆரம்பித்தேன். காரணம் தலித்துகளை போலவோ பிற ஜாதிகளை போலவோ சமூக அடுக்கில் ஆதிக்கசாதியினரின் வீடுகளை தேடிச் சென்று அவர்கள் தரும் வேலைகளை செய்யும் சமூகம் அல்ல ஆசாரிகள். பார்ப்பனர்களுக்கு நிகராக பூணூல் அணியும் ஜாதி. சாமி சிலைக்கே கண் திறக்கும் ஜாதி நாங்கள் என்று சிலர் பெருமையாக சொல்வார்கள். எந்த சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள்தான் பொன்னாசாரிகளது வீடுகளுக்கு தேடிச் சென்று தாலி செய்ய வேண்டும். அது தலித்தோ, நாயக்கமார்களோ, மணியக்காரர்களோ, பார்ப்பனர்களோ எல்லாரும் தேடிச்சென்று வேலை கொடுக்கும் சமூகம் ஆசாரிகளுடையது. எனவே அவர்களுக்கு பெரிதாக சமூக அழுத்தம் இருக்க போவதில்லை என்ற எண்ணத்தில்தான் நாவலை படிக்க ஆரம்பித்தேன்.

நாவலின் கதை சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முந்தைய காலகட்டத்தில் பிரிட்டிஷார் ஆண்ட மதுரை ஜில்லாவில் இருந்து ஆரம்பிக்கிறது. நாவலின் களம் தெலுங்கு பேசும் நகை ஆசாரிகளும், தச்சாசாரிகளும், நாயக்கமார்களும், மணியக்காரர்களும் நிறைந்த போனூர்,தேவாரம் ஜமீன் பாத்தியம் கொண்ட பெரியரேவூப்பட்டி கிராமங்கள்.

பொன்னாசாரி சுப்புலுவும்,பெரியநாச்சியும் போனூரில் தச்சு வேலை செய்கிறார்கள். பொன் ஆபரணங்கள், மரப்பொருட்கள் வேலைகளை வருடத்திற்கு பத்துபடி வரகும், சோளமும், கேழ்வரகும் சம்பளமாக நாயக்கமார்களிடமும், மணியக்காரர்களிடமும் வாங்கிக்கொண்டு உழைக்கிறார்கள். சுப்புலுவும், பெரியநாச்சியின் மகன் பெத்தையா. ஊருக்குள் காலரா நோய் பரவியபோது பெத்தையாவின் மனைவி இறந்து விடுகிறார். காலரா நோயில் இறந்த ஆட்களை ஊருக்கு வெளியே புதைக்க சொல்லி மணியக்காரர்கள் சொல்லிவிட பெத்தையா அவரது மனைவியை ஊருக்கு வெளியே புதைத்து விடுகிறார். பெத்தையாவிற்கு இரண்டு ஆண் பிள்ளைகள். மூத்தவன் ராஜய்யா. இளையவன் சென்னய்யா. மனைவி இறந்ததும் பெத்தையா அவர்களை அழைத்து சென்று தனது தம்பியிடம் ஒப்படைத்து வளர்க்க சொல்கிறார். பெத்தையாவின் தம்பி பொன் ஆசாரி அல்ல. தச்சு ஆசாரி. பெத்தையாவின் பிள்ளைகள் இருவரும் அவர்கள் சித்தப்பாவிடம் தங்கி தச்சு வேலைகளை கற்றுக்கொள்கிறார்கள். பெத்தையாவிற்கு ஒரு தங்கை. அவள் பெயர் வீரவீருசின்னம்மா. கணவன் பெயர் சில்லையா ஆசாரி. அவளது மகன் கிருட்டிணாசாரி.

கிருட்டிணாசாரி தலைமுறையில் நாவல் தொடங்குகிறது. அவனுக்கும் பெரியரேவூப்பட்டியில் வசிக்கும் பொன்னழகு ஆசாரி மகள் திரஜம்மாவிற்கும் திருமணம் நடக்கிறது. அந்தகால வழக்கம் போல பால்ய விவாகம். பிறகு திரஜம்மா பருவம் அடைந்ததும் குடும்ப வாழ்க்கை தொடங்குகிறது. ஒரு மகளும்,மகனும் பிறக்க சில ஆண்டுகளில் திரஜம்மா இறந்து போகிறாள். கிருட்டிணாசாரி இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறான். மனைவி பெயர் வீருசின்னு. அவர்களுக்கு மூன்று மகன்கள். கதை அப்படியே மூன்றாவது தலைமுறை செல்கின்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டம். இப்படியே சமகாலம் வரை நீளும் ஒரு குடும்பத்தின் வழியாக அதன் உறவுகளின் ஊடாக அந்த குடும்பம் வசிக்கும் ஊர்களின் வழியாக அவர்கள் குலத்தெய்வங்கள் வழியாக அந்த குலதெய்வங்கள் அமர்ந்திருக்கும் நிலபரப்பின் ஊடாக மாறும் பருவ நிலைகள் வழியாக ஒரு சமூகத்தின் கதை சொல்லப்படுகிறது. காலச்சக்கரம் சுழல சுழல ஒரு காலத்தில் மிடுக்காக வாழ்ந்த பொன்னாசாரிகள் சமூகம் எப்படி சிதைந்து போகின்றது என்பதையும், நவீன இயந்திர காலத்தின் முன்பு அவர்களது பழமையான பட்டறைகள் எல்லாம் தோற்று போவதையும், அவர்களின் இன்றைய தலைமுறைகள் பலர் கந்து வட்டிக்கு கடன் வாங்கி தொழில் செய்வதையும், ரஜினி படம் பார்க்க சென்று வழியில் கழுதை மோதி சைக்கிளோடு சாக்கடைக்குள் விழுந்து எழுவதையும் , சாராயக்கடைக்குள் விழுந்து கிடப்பதையும் சொல்வதோடு நாவல் முடிகிறது.

இந்த நாவலின் வெளியீட்டு விழாவில் அ.இராமசாமி சொன்னது போல இந்த நாவலில் மனிதர்கள் இறந்துக் கொண்டே இருக்கிறார்கள். முதல் தலைமுறையில் விஷக்காய்ச்சல், பஞ்சம் என்று மனிதர்கள் இறக்க இறக்க பூமி புதிது புதிதாக மனிதர்களை உற்பத்தி செய்துகொண்டே இருக்கிறது. நாவலின் இறுதி செல்ல செல்ல காலகண்டம் அந்த சமூகத்தை வேகமாக வீழ்ச்சியடைய வைக்கிறது. ஆனால் இந்த முறை நடக்கும் வீழ்ச்சியில் மனிதர்கள் ஒரு போதும் மீண்டெழுவதில்லை. போனூர் கிராமத்தின் எல்லா சுவடுகளையும் காலம் அழிந்துவிடுகிறது. நெடுநேரம் கழித்து நாவலை புரட்டி மீண்டும் முதல் பகுதியை படித்தேன். வடக்குவீரநாச்சி ஒரு குழந்தையை காலில் போட்டு மிதித்து கொன்று அதன் குடலை உருவி மாலையாக போட்டு கொண்டு கற்சிலையாக நிற்கிறாள். இப்படி ஒரு தொன்ம கதையுடன்தான் நாவல் தொடங்குகிறது. வடக்குவீரநாச்சி என்பது வேறு யாருமில்லை. அது காலம். அது பலிகொண்ட குழந்தை போனூர்.

பொன்னாசாரிகள் சமூகம் பற்றி பதிவு செய்த வகையில் இது ஒரு முக்கிய நாவலாக படுகிறது.

Saturday, January 4, 2014

ஒரு கடிதம்

அன்புள்ள விமு

பேஸ்புக்கில் ஒருத்தர் ராஜீவ்காந்தி சாலை நாவலில் நிறைய ஒற்றுப்பிழைகளும், பல இடங்களில் முற்றுப்புள்ளி இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். சில இடங்களில் இலக்கணப்பிழைகள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். இப்படியே போனால் தமிழ் இறந்து விடாதா? உதாரணத்திற்கு உங்கள் நாவலில் பக்கம் எண் 67-ல் "கொஞ்ச நேரம் முன்னாடி தான் அறிமுகம் ஆன பழனி எடுத்த எடுப்பிலேயே அப்படிச் சொன்னது பழனிக்குத் திகைப்பாகவும் சங்கோஜமாகவும் இருந்தது...."

இப்படியே சென்றால் தமிழ் இறந்து விடாதா?

அன்புடன்
மகேஷ்


வணக்கம் மகேஷ்.
ஒரு முறை நானும், அபிலாசும் பேசும்போது தமிழில் காப்பி எடிட்டர்கள் இல்லாத குறையை பற்றி விவாதித்தோம்.

இங்க்லீஷில் எழுதுபவர்களுக்கு பெரிய சிரமம் இருக்காது. அவர்களுக்கு ஒற்றுப்பிழை கவலை இல்லை. இலக்கணத்தை திருத்தி தர சில மென்பொருட்கள் உள்ளன. மைக்ரோசாப்ட் எம்ஸ்வேர்டு கூட போதும். ஆனால் தமிழில் அது போன்ற மென்பொருட்கள் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு நான் தமிழ்கம்ப்யூட்டர் பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக வேலை பார்த்தேன். அப்போது சாப்ட்வியூ நிறுவனத்தில் வேலை பார்த்த ஆண்டோ பீட்டர் (இப்போது அவர் உயிருடன் இல்லை) எனக்கு அறிமுகம் ஆனார். தவிர சென்னைகவிகளில் இருந்த சில நண்பர்களும் எனக்கு அறிமுகம் ஆனார்கள். அப்போதுதான் அவர்கள் முதன்முதலில் தமிழில் கணிப்பொறிக்கான எழுத்துருக்களை கொண்டு வந்தார்கள். அதற்கு முன்பு டிடிபி இல்லை. லெட்டர் பிரஸ் முறையில் கம்பாசிடர்கள் அச்சு கோர்ப்பார்கள். லெட்டர் பிரஸ் என்றால் திருவல்லிக்கேணிக்கு சென்றால் அங்கு ஒரு கிலோ தமிழ் எழுத்துக்கள் கேட்டால் அவர்கள் ஈயத்தில் செய்யப்பட்ட பிளாக்குகள் தருவார்கள். இப்போது குழந்தைகளுக்கு பாடம் சொல்லிதர பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட அ, ஆ , ABCD எழுத்துகள் வாங்கி தருகிறோமே அது போல அந்த எழுத்துகள் இருக்கும். ஒரு கிலோ தமிழ் லெட்டர் பிரஸ் கேட்டால் அதில் இருபது அ ,முப்பது ஆ ,நாற்பது உ என்று ஈயத்தில் செய்யப்பட்ட ஈய பிளாக்குகள் தருவார்கள். இங்க்லீஷ் என்றால் அதில் பத்து A இருபது B முப்பது C என்று குத்துமதிப்பாக எழுத்துகளை எடையில் நிறுத்து தருவார்கள். அதை வாங்கிக் கொண்டு வந்து அதில் மை தடவி அதை பேப்பரில் எடுத்துதான் பிரிண்ட் செய்தார்கள். அப்படி இருந்த முறைதான் பின்பு கணிப்பொறி வந்தபிறகு டிடிபியாக மாறி இன்று உள்ள நிலையை அடைந்துள்ளோம். 

எதற்கு எழுதுகிறேன் என்றால் நாங்கள் அப்போது கணிப்பொறி சொற்களை தமிழில் மொழிபெயர்த்து கொண்டிருந்தோம்

நாங்கள் என்றால் நான், எனது ஆசிரியர் மு.சிவலிங்கம் (இவர் வேற.. இலக்கியத்தில் இருக்கும் மு.சிவலிங்கம் அல்ல. பேராசிரியர். விஎஸ்என்னில் வேலை பார்த்து கொண்டு தமிழ் ஆராய்ச்சி செய்தவர்.சினேகலதா என்ற பெயரில் சி,சி++ தொடர்கள் தமிழ் கம்ப்யூட்டர் இதழில் எழுதியவர்) தவிர எழுத்தாளர் சுஜாதா போன்ற சிலர் ஒரு முறை சாரா அமைப்பாக இருந்தோம். மு.சிவலிங்கம் நிறைய தமிழ் சொற்களை அறிமுகம் செய்து கொண்டே இருப்பார். அவர் கண்டுபிடித்த சொல்தான் கணினி. சுஜாதாவுடன் விவாதிக்கும்போது அவருக்கு அந்த சொல் உவப்பாக இல்லை. கணிப்பொறி என்று வைக்கலாம் என்று சுஜாதா சொன்னார். உடனே மு.சிவலிங்கம் சிரிக்க நான் அது சோளப்பொறி போல் இருக்கு. எதுக்கு கணிப்பொறி என்று இரண்டு சொல் வைக்கவேண்டும் கணினி என்றே எழுதலாம் என்று வம்படியாக எழுத ஆரம்பித்தோம். நான் அப்போது தமிழ்கம்ப்யூட்டரில் உதவி ஆசிரியராக இருந்தேன். நவீனா என்ற பெயரில் நிறைய அறிவியல் கட்டுரைகள் எழுதி வந்தேன். தமிழில் இரண்டு அறிவியல் புத்தகங்களும் எழுதியுள்ளேன். அவை ஐந்தாயிரம் பிரதிகள் விற்ற பெருமையுண்டு. தமிழ்நாட்டில் திருச்சி, சேலம் போன்ற சிறுநகரங்களில் இருக்கும் பல மாணவர்கள் தமிழில் அறிவியல் படிக்க வைக்கும் நோக்கத்துடன் அப்போது சுஜாதா தமிழில் நிறைய அறிவியல் கட்டுரைகள் எழுதி வந்தார். ஆனால் சுஜாதாவை விட பல மடங்கு உழைப்பை கொட்டியவர்கள் நாங்கள். நாங்கள் என்றால் தமிழ்கம்ப்யூட்டர் ஆசிரியர் ஜெயகிருஷ்ணன். எனது ஆசிரியர் மு.சிவலிங்கம் ஆண்டோ பீட்டர் , சென்னை கவிகள் இன்னும் பலர். ஜெயகிருஷ்ணனுக்கு அறிவியலை சுத்த தமிழில் எழுதுவதுதான் பிடிக்கும். நான் ஒரு கட்டுரையில் உதாரணம் என்று எழுதிக்கொண்டு சென்று அவரிடம் நீட்டினால் அந்த பேப்பரை கிழித்துப் போட்டு விடுவார். உதாரணம் என்று தமிழில் எழுதக்கூடாது. அது வடமொழி சொல். சான்று அல்லது எடுத்துக்காட்டு என்று எழுதவேண்டும் என்று சொல்வார். அப்படி ஒரு தமிழ்வெறி. Client Server என்பதை வாடிக்கையாளர் சேவையாளர் என்று எழுத சொல்வார். எனக்கு செம கடுப்பு வரும். சுஜாதா அவரது புத்தகத்தில் கிளையன்ட் செர்வர் என்றே எழுதுவார். நானும் அப்படியே பத்திரிக்கையில் எழுதுவேன். எனக்கும் ஜெயகிருஷ்ணனுக்கும் சண்டையே வரும். அப்படிதான் தமிழில் அறிவியல் புத்தகங்கள் வந்தன. அப்படிதான் சிறு நகரங்களில் வசித்த பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒரு தலைமுறை மாணவர்கள் அறிவியலை படித்து மேலே வந்தார்கள்.

அந்த கட்டத்தில்தான் தமிழில் இணையத்தை கொண்டு வருவது பற்றி பரவலாக பேச்சு வந்தது. தமிழ்நெட் மாநாடு நடந்தது. நான் அதில் ஒயிட் பேப்பர் செய்ய நினைத்தேன். ஆனால் சிங்கப்பூர் சொல்ல முடியவில்லை. கையிலும் காசில்லை. வேலையும் நிரந்தரமில்லை. நான் பகுதி நேரமாக எம்சிஏ படித்துக்கொண்டிருந்தேன். அப்போதே தமிழில் இலக்கண முறைப்படி எழுதும் மென்பொருள் தயாரிப்பது பற்றி எனக்கு பெரும்கனவு இருந்தது. அப்போது என்னிடம் வசதியில்லை. ஒரு சின்ன அறை. இரண்டு கணிப்பொறிகள். நான்கு நண்பர்கள் கிடைத்திருந்தால் கூட போதும். ஆறு மாதம் யாராவது எங்களுக்கு பண உதவி செய்திருந்தால் எம்எஸ் வேர்டு போல தரமான ஒரு தமிழ் டிடிபி மென்பொருளை உருவாக்கியிருப்போம். ஆயிரம் ரூபாய் சம்பளம் வேறு. இதெல்லாம் 1994 ஆம் வருடத்திலிருந்து 1997 வரை நடந்த கதை. போகட்டும் அதெல்லாம் பழைய கதை. இப்போது எல்லாரும் இணையத்தில் எழுதுகிறார்கள். வரும் காலங்களில் இது இன்னும் அதிகரிக்கும். யாராவது வசதி உள்ளவர்கள் இலக்கண பிழையை சரிசெய்ய நல்ல தமிழ் மென்பொருளை தயாரிக்கலாம். 

அபிலாஷ் விசயத்துக்கு வருவோம். தமிழில் எழுதுபவர்களுக்கு முக்கிய சிக்கலாக நான் நினைப்பது ஒன் மேன் ஷோவாக எல்லா வேலையையும் ஒரே ஆளே செய்வது. கவிதை அல்லது கட்டுரை அல்லது சிறுகதை என்றால் அந்த எழுத்தாளரே திருத்தி விடலாம். ஆனால் நாவல் என்றால் அதை எழுதி பார்த்தால்தான் தெரியும் மெய்ப்பு பார்ப்பது எவ்வளவு சிக்கல் என்று. நான் பெரும்பாலும் கதாபாத்திரம் ஒத்திசைவு (Character Synchronization) இருக்க வேண்டும் என்று பார்ப்பேன். முதல் பக்கத்தில் அப்புக்குட்டியின் மனைவி பாக்கியம் என்றால் எழுதிக்கொண்டு போகும் வேகத்தில் நூறாவது பக்கத்தில் அப்புக்குட்டியின் மனைவி ஓமனக்குட்டி என்று தவறாக வந்துவிடும். தகவல் (Detailing) சரியாக உள்ளதா என்று பார்ப்பேன். கிண்டியிலிருந்து போகும்போது தாம்பரம் தாண்டி பல்லாவரம் என்று எழுத முடியாது. ஒரு இடத்தில் ஒரு ஆளின் சம்பளம் மூவாயிரம் என்று எழுதினால் இன்னொரு இடத்தில் அதே மூவாயிரம் என்றுதான் இருக்க வேண்டும். அது போல கதாபாத்திரங்கள் பேசும் மொழி. அசோகமித்திரன் நாவலில் வரும் ஆட்டோ டிரைவர் கூட பிராமண பாஷை பேசுவார். இதெல்லாம் கவனமாக பார்த்து பார்த்து ஒரே ஆள் செய்யும்போது என்னால் சில ஒற்றுப்பிழைகளையும், இலக்கணப்பிழைகளையும் தவிர்க்க முடியாமல் போகிறது. அதை சரி செய்து கொள்கிறேன். இனிமேல் இந்த விஷயத்தில் கவனமாக இருப்பேன். 

அபிலாஷ் சொன்னார். தமிழில் காப்பி எடிட்டர்களே இல்லை. ஆம். நூறு பிரதிகள் விற்கும் மொழி பேசும் சமூகத்தில் என்ன செய்யுறது? ஒரே ஆள்தான் எல்லாத்தையும் செய்ய வேண்டும். நான் உதவி ஆசிரியராக சேரும்போது எனக்கு மெய்ப்பு சரிபார்க்கும் பணிதான் முதலில் கொடுத்தார்கள். மனிதனுக்கு எப்போதுமே ஒரு உளவியல் பிரச்சினை இருக்கும். மற்றவர்கள் தவறு தெரியும். தனது தவறு தெரியாது.

உதாரணத்திற்கு (இது வடமொழிச்சொல்) 

வெள்ளையானை நாவலில் 281 ஆம் பக்கத்தில் முதல் பாராவை பாருங்கள். "என்றான் ஏய்டன்" என்று முடியும். உண்மையில் அது "என்றான் காத்தவராயன்" என்று முடியவேண்டும். அந்த நாவலை படிக்கும்போதே அந்த பிழை எனது கண்ணில் பட்டது. ஆனால் அதை சுட்டிக்காட்டியா ஒரு நாவலை விமர்சனம் செய்ய முடியும்? அது மடத்தனமாக இருக்காது? அதுதான் அந்த நாவலுக்கு செய்யும் மரியாதையா? ஒரு நாவலின் அரசியலையொட்டி அந்த நாவலின் சொல்லப்பட்ட பிரச்சினைகளையொட்டியே விவாதம் இருக்க வேண்டும். ப்ரூப் ரீடிங், மற்ற இலக்கண பிழைகளை இரண்டாம் பதிப்பில் (முதலில் அது இரண்டாம் பதிப்பு போனா பார்த்துக்கலாம் என்று சொல்றது கேட்கிறது) திருத்தி எழுத முடியும்.. ஆனால் நாவலில் சொல்லப்பட்ட மைய கருத்தை இரண்டாவது பதிப்பில் மாற்றி எழுத முடியுமா?உப்புநாய்கள் நாவல் பற்றி ஒரு பிளாக்கில் விமர்சனம் படித்தேன். நிறைய இடங்களில் ஒரு என்ற வார்த்தை வருகின்றது. ஒற்று பிழைகள் உள்ளன என்று விமர்சனம் எழுதியிருந்தார். வெளங்கிடும். அந்த நாவல் என்ன ஒரு என்ற வார்த்தையின் பிரச்சினையை பற்றி எழுதப்பட்ட நாவலா என்ன? அந்த நாவல் சொல்லும் விளம்புநிலை மனிதர்களின் பிரச்சினையை பற்றி விமர்சனம் எழுப்புங்கள். என்னால் இங்கு ஆயிரம் நாவல்களை அதன் சின்ன சின்ன ஒற்றுப்பிழைகளை,இலக்கணப்பிழைகளை குறிப்பிட்டு இங்கு எழுதமுடியும். அது என் வேலை இல்லை. தமிழ் இலக்கணத்தில் முற்றுப்புள்ளி, காற்புள்ளி, ஆச்சர்யக்குறி வைக்கும் பழக்கமே இல்லை. நாவல்கள் என்பதே தமிழ் மரபு இல்லை. தமிழின் ஒரே வடிவம் கவிதை மட்டுமே. நாவல்கள் என்பது ஐரோப்பியர்கள் தமிழுக்கு கொடுத்த கொடை. நாவல்கள் வந்த பிறகே இவ்வளவு சிக்கல்களும் வந்தன.நாவல்கள் என்றுமே மொழியை அப்படியே தக்க வைத்துக்கொண்டு போகாது . நாவல்களின் நோக்கமும் அதுவல்ல. மொழி தன்னை காலந்தோறும் திரித்துக் கொண்டே செல்லும். பிரதாப முதலியார் சரித்திரமும், ராஸ லீலாவும் தமிழில் எழுதப்பட்ட படைப்புகள் என்றாலும் இரண்டும் ஒரே தமிழா? ஒருமுறை எழுத்தாளர் பாலகுமாரனிடம் யாரோ இப்படி கேள்வி கேட்டு வாங்கி கட்டிக் கொண்டார். உங்கள் நாவல்களில் ஏன் ஐ விகுதி வரமாட்டேங்குது. அதாவது அவன் நெற்றியை தடவினான் என்றால் அவன் நெற்றி தடவினான் என்று எழுதறீங்க என்று கேட்டதற்கு பாலகுமாரன் விளக்கம் கொடுத்தார்.

பேஸ்புக்கில் ஒருத்தர் வந்து கார்த்திக்குக்கு போன் செய்தேன் என்று எழுதுவது சரியா? கார்த்திக்கிற்கு போன் செய்தேன் எழுதுவது சரியா? என்று ஒருத்தர் கேட்டார். கார்த்திக் என்று பேர் வச்சதே தப்பு என்றேன். இங்கு தமிழர்கள் இறந்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு அதை பற்றியெல்லாம் கவலை இல்லை. தமிழ் இறந்து விடாதா இல்லையா என்று ஆராய்ச்சி நடத்துகிறீர்கள். பேருந்து நிலையத்தில் பிச்சை எடுக்கும் பெண்ணை பார்த்திருக்கலாம். அம்மா தாயே என்று சொல்வாள். தமிழ் மரபில் ஒரே வார்த்தையில் இரண்டு சொற்கள். கூறியது கூறல் குற்றமென்று அவளிடம் வகுப்பெடுப்பீர்களா?தமிழ் மென்பொருள் தயாரிக்கும் மாணவர்களுக்கு உதவுவதும், பழங்கால ஓலைச்சுவடிகளில், கல்வெட்டுகளில் என்ன உள்ளது என்று ஆராய்ச்சி செய்வதும்,சங்க இலக்கியங்களை எளிமையாக விளக்கி சொல்வதும் மட்டும்தான் உண்மையான தமிழ் ஆர்வலர்கள் செய்ய வேண்டிய இல்லை. நாவல்கள் வழியாக நான் தமிழை வளர்க்கிறேன் என்று சொல்வது மிகப்பெரிய காமெடிக்கூத்து. அப்படி யார் சொன்னாலும் மிக கடுமையாக நான் எதிர்ப்பேன்.கெரில்லா தாக்குதல் பற்றி முன்பு ஒருமுறை பேஸ்புக்கில் எழுதியிருந்தேன். ஒரு மனிதனை வீக்கான இடத்தில் அடிக்க வேண்டும். கெரில்லா தாக்குதலில் இன்னொரு உத்தியும் உள்ளது. அது...தாக்க வருபவர்களிடமிருந்தே தாக்குதலை கற்றுக்கொள்வது.

சாரு ஒரு இங்க்லீஷ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடந்த விவாதமொன்றில் தப்பு தப்பாக இங்க்லீஷ் பேசிவிட்டார். அப்போது ஒரு பெண் சாருவுக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதினார்.

சாரு இப்படி சொன்னார்.

"அந்த நிகழ்ச்சியில் நான் என்ன சொல்ல வந்தேன் என்று பாருங்க. நான் ஜட்டி போட்டேனா. என் புடுக்கு தெரியுதா என்று பார்க்காதீங்க.."


அன்புடன்
விநாயக முருகன்