Saturday, June 22, 2013

ஒரு மனோதத்துவ நிபுணரும் அவரது நவீனக்கவிதையும்

ஒரு மனோதத்துவ டாக்டரிடம் பேசிக்கொண்டிருந்தேன். பொதுவாக நான் மனோதத்துவ நிபுணர்களிடமும், சாமியார்களோடும் (குறிப்பாக கார்ப்பரேட் சாமியார்கள்) உரையாடுவதை தவிர்க்கவே விரும்புவேன். காரணம் அவர்களோடு உரையாடி ஜெயிக்கவே முடியாது. அவர்களிடம் பேச ஆரம்பித்த ஐந்து நிமிடங்களிலே நமது ஐடியாலஜியை அப்படியே நமது மண்டைக்குளிருந்து உருவி அவர்களது ஐடியாலஜியை பொருத்தி விடுவார்கள்.

விஷயத்துக்கு வருகின்றேன்.

இந்த பேஸ்புக்கில் கிறுக்கறது, லைக் போடுறது,கமெண்ட் போடுறது எல்லாம் கூட ஒருவகை மனோவியாதிதான் என்று சொன்னார் டாக்டர். ஒருக்கணம் அதிர்ந்து விட்டேன். 

இப்படித்தான் முன்பு இன்னொரு மனோதத்துவ நிபுணரிடம் உரையாடியபோது அவர் சொன்னார். "அடக்க முடியாத காமத்தின் வெளிப்பாடே கலைப்படைப்புகள். ஒருத்தன் செக்சில் திருப்தியடைந்து விட்டால் அவன் கதை,கவிதை மாட்டான்." என்றார். இது உண்மையாக கூட இருக்கலாம். ஆனால் பொதுவாக மனோதத்துவ நிபுணர்கள் கலை, இலக்கிய செயல்பாடுகளுக்கு எதிராக அல்லது குறைந்தபட்சம் அட போங்கய்யா நீங்களும், உங்க கவிதையும் என்று சலித்துக் கொள்பவர்களாகவே இருக்கின்றார்கள்.

"ஆடும் கூத்து" என்ற திரைப்படம். டிவி.சந்திரன் இயக்கியது. இந்தப் படத்தை பற்றி ஏற்கனவே இங்கு எழுதியுள்ளேன். இந்த படத்தில் நவ்யாநாயர் ஹீரோயின். அவர் கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். படத்தில் அவர் பெயர் மணிமேகலை. சுட்டித்தனமான பெண். அப்பா செல்லம். நல்ல படிப்பாளி. அசோகமித்திரன்,ஜெயகாந்தன் என்று தரமான புத்தகங்களை நூலகங்களில் தேடி தேடி எடுத்து படிப்பாள். திடீரென ஒருநாள் மணிமேகலைக்கு பூர்வஜென்ம நினைவுகள் வந்துவிடும். அவளது நடவடிக்கைகள் அடியோடு மாறிவிடும். அவள் சொல்லும் எதையும் யாரும் நம்ப மாட்டார்கள். அவள் எல்லா விஷயங்களையும் அவளது சொந்தக் கற்பனையிலிருந்து உருவாக்கி சொல்வதாக அனைவரும் நம்புவார்கள்.  

மணிமேகலைக்கு மனநிலை சரியில்லையென்று அவளது தந்தை வீட்டுக்கு ஒரு சைக்கியாரிஸ்டை அழைத்து வருவார். மணிமேகலை பெரிய படிப்பாளி என்று அவள் அப்பா டாக்டரிடம் சொல்வார். டாக்டர் அவள் என்ன மாதிரி புத்தகங்களை படிக்கிறாள் என்று கேட்க, அவளது தந்தை மாடியில் இருக்கும் மணிமேகலை அறையை காட்டுகிறார். டாக்டரும் மணிமேகலை அறைக்கு செல்வார். புதுமைப்பித்தன்,மெளனி, ஜெயகாந்தன், பஷீர்,தி.ஜா, அசோகமித்திரன், பாரதியார்.... டாக்டர் பயந்துபோய் பேயை பார்த்தது போல அலறியடித்துக்கொண்டு மாடி அறையிலிருந்து வெளியே ஒடி வருவார்.

"ஒரு ஆள் இரண்டு ஆள் இல்லை..பிள்ளைவாள்...உள்ளே ஒரு நாசகார கும்பலே இருக்கிறது. வெரி டேஞ்சரஸ் கைஸ்" சொல்லியபடியே பயந்துபோய் வீட்டை விட்டு வெளியே ஓடுவார்.

மணிமேகலை தந்தை அந்த புத்தகங்களையெல்லாம் ஒளித்து வைப்பார். பிற்பாடு ஒரு காட்சியில் மணிமேகலை நார்மலாகத்தான் இருக்கிறாள் என்று அவர் ஆசுவாசப்படுத்திக்கொள்ளும்போது, மணிமேகலை தயங்கியபடியே ஒளித்து வைத்த அந்த புத்தகங்களையெல்லாம் எடுத்து வந்து தந்தையிடம் கேட்பாள்.

“நான் சொன்னது பொய்யில்லைனா...இவங்க சொல்றதும் பொய்யில்லைலே? இவங்கள உள்ளே சேர்த்துக்கலாமா?” என்று கேட்பாள்.
 
மனோதத்துவ நிபுணர்களுக்கு  ஏன் எழுத்தாளர்களை பார்த்தால் காண்டாகின்றது. நான் நினைக்கின்றேன். ஒருவிதத்தில் மனோதத்துவ நிபுணர்களும், எழுத்தாளர்களும் ஒரே வேலையை செய்கின்றார்கள் என்று நினைக்கின்றேன். இருவருமே மனதின் சிக்கலான சூட்சுமங்களை ஆராய்ச்சி செய்கின்றார்கள். தன்னைச் சுற்றி இருக்கும் மனிதர்களின் அன்றாட செயல்பாடுகளை நுட்பமாக கவனிக்கின்றார்கள். காமம் எங்கிருந்து உருவாகின்றது என்று உற்று கவனிக்கின்றார்கள். மனதின் விசித்திரமான செயல்பாடுகளை அணு அணுவாக பதிவு செய்கின்றார்கள். எழுத்தாளன் என்றால் அதை அவனது பாத்திரப்படைப்பிற்கு பயன்படுத்திக் கொள்கின்றான். மனோதத்துவ நிபுணர் அதை அவரது ஆராய்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்கின்றார். கேஸ் ஸ்டடியாக மாற்றி வைத்துக் கொள்கின்றார்       

சரி. எங்கள் உரையாடலுக்கு வருகின்றேன். 

"ஒரு எழுத்தாளன் என்பவன் அடிப்படையில் மனோதத்துவம் தெரிந்தவனாகவே இருக்க முடியும். அப்போதுதான் அவனால் எழுத முடியும். ஆனால் ஒரு மனோதத்துவ நிபுணரால் கலை இலக்கிய தளத்தில் செயல்பட முடியாது. வட்டிக்கடைக்காரனிடம் வெற்றுத்தாளை கொடுத்தால் அதில் அவன் எண்களை மட்டும்தான் கிறுக்குவான்" என்றேன்.

டாக்டருக்கு கோபம் வந்து விட்டது. 

"யார் சொன்னது? எங்களுக்கும் எழுத வரும்" - என்றார்.

டாக்டர் மேசை டிராயரை திறந்தார். ஸ்கிரிப்லிங் பேட்டை எடுத்து எதையோ யோசிக்க ஆரம்பித்தார். பின்பு வேகமாக எழுத ஆரம்பித்தார். எழுதி முடித்தவுடன் என்னிடம் அதைக் கொடுத்தார். வாங்கி பார்த்து விட்டு ஆடிப்போய் விட்டேன். பிரமாதமாய் இருந்தது கவிதை. கண்டிப்பாக இவர் ஏதாவது இலக்கியப்பத்திரிக்கையில் புனைப்பெயரில்எழுதுபவராகத்தான் இருக்க முடியும்.  

"ஆஹா ஆஹா பிரமாதம் பிரமாதம்" என்றேன்.
                 
ஸ்கிரிப்லிங் பேட்டில் அந்த நவீனக்கவிதை இருந்தது இப்படி.

வட்டம்               
-------------
வட்டம்
வட்டத்திற்குள் வட்டம்
வட்ட வட்டமாய் வட்டம்
வட்டமே வட்டமாய்
வட்டத்திற்குள் வட்டம்       

2 comments: