Monday, July 1, 2013

ஓநாய் குலச்சின்னம்


ஓலோன்புலாக் என்ற பகுதி மங்கோலியாவின் சிறந்த மேய்ச்சல் புல்வெளி பிரதேசம். மலைகளும், பள்ளத்தாக்குகளும், ஏரிகளும் நிறைந்த பகுதி. அங்கு ஆடு,மாடுகளை பேணி வளர்க்கும் மந்தைக்கு சொந்தக்காரர் பில்ஜி என்ற மேய்ப்பர் அவரது மகன் பட்டு, மருமகள் கஸ்மாய் தவிர அவர்களின் ஒன்பது வயதுச் சிறுவன் பாயர் வசித்து வருகின்றார்கள். பில்ஜி சிறந்த வேட்டைக்காரரும் கூட. அவர்களுடன் திறமை மிக்க ஒரு மேய்ப்பர்குழு இருக்கின்றது. 

இவர்களுடன் ஜென்சென் என்னும் மாணவரும் அவரது சக மாணவ நண்பர்களும் இரண்டாண்டுகளாக தங்கியுள்ளார்கள். ஜென்சென் மற்றும் அவரது சக மாணவர்கள் பீஜிங்கிலிருந்து வந்தவர்கள். அவர்களுக்கு ஓலோன்புலாக் பூர்வீகம் கிடையாது. ஆடு மேய்ப்பது பற்றியும் , ஓநாய்களைப் பற்றியும், மங்கோலியர்களின் மேய்ச்சல் நிலங்களை ஆராய்ச்சி செய்யவும் ஜென்சென்னும்,அவரது நண்பர்களும் இரண்டாண்டுகளாக ஓலோன்புலாக்கில் தங்கியுள்ளார்கள்.  

மங்கோலியர்களுக்கும், சீனர்களுக்கும் கலாச்சார சிந்தனை வித்தியாசங்கள் உள்ளன. சீனர்கள் ஓநாய்களை துரதிர்ஷ்டமாக வெறுக்கத்தக்க விலங்காக பார்க்கின்றார்கள்.ஆனால் நாய்களை அப்படி கருதுவதில்லை. மங்கோலியர்கள் ஓநாய்களை கடவுளாக பார்க்கின்றார்கள். மங்கோலியர்களை  பொறுத்தவரையில் நாய்கள் என்பது ஒரு அடிமை விலங்கு.  என்னதான் நாய்கள் ஓநாய்களிலிருந்து வந்த வம்சமாக இருந்தாலும் நாய்கள் மங்கோலிய மனிதர்களுக்கு ஒரு சேவகன் மட்டுமே. அது வேட்டையாடும் அவ்வளவே. ஆனால் ஓநாய்கள் அப்படி அல்ல. அவை மனிதர்களை காட்டிலும் புத்திக்கூர்மை உடையவை. மனித நாகரீகமே ஓநாய்கள் நாகரீகம்தான். இவ்வளவு ஏன் ஒருக்காலத்தில் உலகின் பாதி நிலப்பரப்பை வெற்றிக்கொண்ட செங்கிஸ்கான் கூட ஓநாய் வளர்த்த பிள்ளைதான் என்று ஒரு மித் மங்கோலியர்களுக்கு உண்டு. மங்கோலிய குலச்சின்னமாக ஓநாய்கள் கருதப்படுகின்றன.

ஒருநாள் பில்ஜியும், ஜென்சென்னும் ஓநாய் கூட்டமொன்று மான்களை வேட்டையாடுவதை பார்க்கின்றார்கள். பிறகு அவர்கள் தங்கள் இடத்துக்கு வந்து விடுகின்றார்கள். மறுநாள் ஜென்சென்னை பில்ஜி அந்த வேட்டை பனி ஏரிக்கு அழைத்துச் செல்கின்றார். அங்கே பனி ஏரியில் இறந்து போன மான்களின் உடல் குவியல் குவியலாக இருக்கின்றன. சில மான்கள் குற்றுயிரும்,குலையுயிருமாக கிடக்கிறன. சில மான்கள் கடித்து குதறப்பட்டு பாதி உடல்கள் மட்டும் எஞ்சியுள்ளன. தங்கள் கால்கள் உறைந்த பனிக்கட்டிகளில் புதையுண்டு சில மான்கள் உயிருக்கு போராடுகின்றன. ஓநாய்கள் வேட்டையாடி விட்டு சில மான்களது உடல்களை இப்படி பனிக்குள் பாதுகாப்பாக்க சேமித்து வைத்து விட்டு சென்றுவிடும் என்று பில்ஜி சொல்கின்றார். ஜென்சென்னுக்கு ஆச்சர்யமாக இருக்கின்றது. தவிர ஓநாய்களின் வேட்டை தந்திரங்களை பில்ஜி விளக்க ஆரம்பிக்கின்றார். எப்படி உயரமான சுற்றுச்சுவரை உடைய தங்களது ஒரு ஆட்டு மந்தையை ஓநாய் கூட்டமொன்று தாக்கியது என்று சொல்கின்றார். ஒரு தலைமை ஓநாய் சுவற்றில் இரண்டு கால்களை வைத்து நிற்க அதன் மீது ஒவ்வொரு ஓநாயாக ஏறி தப்பியது என்றும், அந்த கடைசி தலைமை நாய் இறந்துப்போன ஆட்டு உடல்களை குவியலாகப் போட்டு அந்த உடல்கள் மீது ஏறி தப்பித்தது என்றும் விளக்குகின்றார். எல்லா ஓநாய்களும் ஏற்கனவே சில ஆடுகளை கொன்று அவற்றின் உடலை குவியலாக போட்டு கடைசி தலைமை நாய்க்கு ஏற்கனவே உதவி செய்து விட்டு தப்பிப்போனதையும் சொல்கின்றார். ஜென்சென்னுக்கு பிரமிப்பாக இருக்கின்றது.                                                        

பனி ஏரியில் இறந்துக்கிடக்கும் சில மான்களை உணவுக்கு மட்டும் தங்கள் உணவுக்காக எடுத்துக்கொள்ளும் குழுவினர் உயிரோடு பனிச்சேற்றுக்குள் மாட்டிக்கொண்ட மான்களை விடுவித்து காட்டுக்கு அனுப்புகின்றார்கள். ஓநாய்களின் அந்த வெறிச்செயலை கண்டு கோபமடையும் ஓநாய்களை பலமாக நிந்திக்கின்றான். மான்கள் பாவம் என்கின்றான். பில்ஜிக்கு கோபம் வந்து விடுகின்றது. பில்ஜி ஓநாய்கள் தங்கள் குலச்சின்னம் என்கிறார். ஓநாய்களால் மட்டுமே மான்களின், கால்நடைகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகின்றது. அதனால் மேய்ச்சல் நிலங்கள் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றன என்கின்றார். மேய்ச்சல் நிலங்களை சார்ந்தே எண்ணற்ற சிறு உயிர்கள் தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றன. சீனர்களாகிய நீங்கள் வெறும் புத்தகங்களை படித்து அதன் மூலம் அறிவை பெறுகின்றீர்கள். மங்கோலியர்கள் நாங்கள் படிப் பதில்லை. ஆனால் மேய்ச்சல் நில வாழ்க்கை, வேட்டைகள் மூலமே வாழ்வை பார்க்கின்றோம் என்கின்றார். படித்த சீனர்கள் நீங்கள் சொல்வதை எல்லாரும் நம்புகின்றார்கள். நீங்கள் எப்போதும் சிறிய உயிர்களை காப்பற்றும் முயற்சியில் பெரிய உயிர்களை அழித்து விடுகின்றீர்கள். மான்களின் மேல் இரக்கப்படும் நீங்கள் ஏன் புல்லும் ஒரு உயிர்தான் என்று ஏற்றுக்கொள்ள மறுக்கின்றீர்கள். மான்களாவது தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். இயற்கை அந்த ஆற்றலையும் அபரிமித இனப்பெருக்க ஆற்றலையும் தந்துள்ளது. புற்களுக்கு அது இல்லை. ஒரு உயிரை சார்ந்தே இன்னொரு உயிர் இருக்கும் இந்த மேய்ச்சல் நிலங்களில் ஓநாய்களை பாதுகாப்பதன் மூலமே நாம் வாழ முடியும் என்கின்றார். தவிர ஓநாய்கள் மேய்ச்சல் நிலங்களில் வளைகளைத் தோண்டி அதில் வாழ்க்கையை நடத்தும் எலிகளையும், மர்மோட்டுகளையும் உண்கின்றன. ஓநாய்களின் எண்ணிக்கையால் எலிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகின்றன. எலிகள், மர்மோட்டுகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுவதால் கொசுக்களின் எண்ணிக்கை குறைகின்றன என்றும் விளக்குகின்றார் இந்நாவலின் முக்கியமான பகுதியும் , மையக்கருத்தும் இந்த உரையாடலே. மங்கோலிய மேய்ப்பர்கள் இறந்தவர்களின் உடலை ஓநாய்களுக்கு விருந்தாக தந்து விடுகின்றார்கள். இதன் மூலம் அவர்களின் ஆன்மா நேரடியாக சொர்க்கத்திற்கு சென்று விடுவதாக நம்புகின்றார்கள். 

 இதனிடையில் பில்ஜி குழுவில் இருக்கும் சிலர் ஓநாய்குட்டிகளை குகைகளிலிருந்து திருடி எடுத்து வருகின்றார்கள். ஓநாய் தோல் வாங்கும் ஆட்களிடம் ஓநாய்குட்டிகளை விற்று காசு பார்ப்பது அவர்கள் நோக்கம். பில்ஜி அவர்களை எச்சரிக்கை செய்கின்றார். ஓநாய்கள் பழிவாங்கும் குணம் கொண்டவை. குறிப்பாக தாய் ஓநாய்கள் நம்மை சும்மா விடாது என்று எச்சரிக்கை செய்கின்றார். ஆனால் எல்லாரும் பில்ஜியை பழமைவாதி என்று ஏளனம் செய்கின்றார்கள். யாரும் பில்ஜி பேச்சை பொருட்படுத்தாமல் குட்டிகளோடு திரும்புகின்றார்கள்.               

பட்டுவும் அவனது நண்பன் லாசுருங்கும் இராணுவத்திற்காக ஒரு பெரிய குதிரை மந்தையை வளர்த்து வருகின்றார்கள். இரவோடு இரவாக அந்த மந்தைக்குள் நுழையும் ஓநாய்க்கூட்டம் ஒரு குதிரையை கூட மிச்சம் வைக்காமல் தாக்கி அழிக்கின்றது. நாவலின் இன்னொரு முக்கியமான பகுதி இது. ஓநாய்கள் எவ்வளவு சாதுர்யத்துடனும், பழிவெறியுடனும், போர் நுட்பங்களோடும் வேட்டையாடுகின்றது என்று விவரமாக சொல்லப்படுகின்றது. சும்மாவா சொன்னார் பில்ஜி. ஓநாய்களிடமிருந்துதான் செங்கிஸ்கானே போர்க்கலையை கற்றுக்கொண்டான். மனித நாகரீகமே ஓநாய்களிடமிருந்துதான் பரிணாம வளர்ச்சிப் பெற்றதை ஜென்சென் அறிந்துகொள்கிறான். பில்ஜி பேச்சை யாரும் மதிக்கவில்லை. விளைவு ஒரு மந்தையே அழிந்து விட்டது.                        

விஷயம் கேள்விப்பட்டு அங்கு வருகின்றார்கள் இராணுவப் பிரதிநிதி பாவோ சுங்காய் மற்றும் மேய்ச்சல் நில இயக்குநர் உல்ஜீ. ஓநாய் கூட்டத்தின் வெறிச்செயலைக் கண்டு திகைக்கும் அவர்கள் ஓநாய்க் கூட்டத்தை அடியோடு அழிக்க திட்டம் போடுகின்றார்கள். பாவோ அரசாங்க பிரதிநிதி. அரசின் திட்டம் என்னவென்றால் அந்த மேய்ச்சல் நிலத்தை நவீனப்படுத்தி அங்கு விவசாய நிலங்கள் கூடவே செங்கல் கட்டப்பட்ட வீடுகள்,நெடுஞ்சாலைகள், திரையரங்குகள், கடைகள் அமைப்பது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகவே ஓநாய்களை அழிக்க ஆரம்பிக்கின்றார்கள்.  

ஜென்சென் ஒரு ஓநாய்க் குட்டிகளை எடுத்து வந்து வளர்க்கின்றான். இதற்கு காரணம் ஜென்சென்னுக்கு ஓநாய்களின் மீது இருந்த காதலோடு, ஓநாய்களை நாய்களோடு கலக்க வைத்து ஒரு திறமையான வேட்டை நாயை உருவாக்குவதும். இதை மிக கடுமையாக எதிர்க்கின்றார் பில்ஜி. ஆனால் பாவோ எதிரியை வெல்ல எதிரியை பற்றி தெரிந்துக்கொள்வது அவசியம் என்று சொல்லி ஓநாய் வளர்க்க அனுமதி தருகின்றார். ஜென்சென் ஓநாய்க்குட்டியை வளர்ப்பதன் மூலம் ஓநாய்களின் தந்திரங்களை வாழ்க்கை முறைகளை மிக நுட்பமாக கற்றுக்கொள்கின்றான்.                   

பாவோவின் இராணுவ வீரர்கள் மர்மோட்டுகளை அழிக்கின்றார்கள். மர்மோட்டுகளின் எண்ணிக்கையை குறைத்தால் ஓநாய்கள் உணவு இல்லாமல் அழிந்து விடுமென்று நம்புகின்றார்கள். மர்மோட்டுகளை குவியல் குவியலாக வேட்டையாடி கொல்கின்றார்கள். இடையே அந்த பகுதிக்கு வரும் வெளியாட்கள் அன்னப்பறவைகளை, வாத்துகளை வேட்டையாடி கொல்கின்றார்கள். அதி நவீன துப்பாக்கி மூலம் நரிகளை,ஓநாய்களை வேட்டையாடி கொல்கின்றார்கள். மிக மோசமான இனப்படுகொலைகளை இராணுவ வீரர்கள் செய்கின்றார்கள். தடுக்க வரும் முதியவர் பில்ஜியை அவமதிக்கின்றார்கள். இப்படியே வேட்டை தொடங்கி சில மாதங்களில் அந்த இடமே நிர்மூலமாகின்றது. ஒரு சில ஓநாய்களே எஞ்சுகின்றன. அவையும் மங்கோலியாவின் வெளிப்பகுதிக்கு ஓடி விடுகின்றன. ஓலோன்புலாக்கில் ஓநாய் இனமே அழிகின்றது. ஓநாய்கள் அதிகளவில் இல்லாததால் குதிரைகளின் இனப்பெருக்கம் அதிகரிக்கின்றது. ஆடு மாடு கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. அவற்றுக்கு புல் தட்டுப்பாடு வருகின்றது. வேறு வழியில்லாமல் குதிரைகளை கொல்கின்றார்கள். ஆடு, மாடுகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துகின்றார்கள். இயற்கை சங்கிலியிலிருந்து ஒரு கண்ணியை வெட்டியெடுக்க இயற்கை ஸ்தம்பித்து மழை வரத்து நின்று ஊரே சீரழிகின்றது. ஜென்சென் இயற்கைக்கு புறம்பாக கட்டிப் போட்டு வளர்த்த ஓநாய் குட்டியும் சூழலுக்கு ஏற்ப மாறாததால் விரைவில் நோய்வாய்ப்படுகின்றது. வேறு வழியில்லாமல் குழந்தையைப் போல வளர்த்த அந்த நோயில் துடிக்கும் ஓநாயை அவனே மண்வெட்டியால் தலையில் அடித்து கருணைக்கொலை செய்கின்றான். பில்ஜி இறந்து விடுகின்றார். அவரது கடைசி ஆசையின்படி அவரது எஞ்சிய உடலை காட்டுக்குள் கொண்டுச்சென்று போடுகின்றார்கள். ஓலோன்புலாக்கில் ஓநாய்க் கூட்டம் உண்ணும் கடைசி உடலாக பில்ஜியின் உடல் இருக்கின்றது.

ஊரை விட்டு பீஜிங் செல்லும் ஜென்சென் மீண்டும் இருபது ஆண்டுகள் கழித்து ஓலோன்புலாக் திரும்புகின்றான். ஊர் நவீனமாக மாறியுள்ளது. ஒரு ஓநாய் கூட இல்லை. வெறுமை படர்ந்த முன்னொரு காலத்தில் தான் வளர்த்த ஓநாய்க்குட்டியை கண்டெடுத்த அதன் குகை வாசலில் தனது புதிய நாவலின் சில பக்கங்களை கொளுத்திப் போட்டு ஊதுபத்தி ஏற்றி வழிபாடு செய்கின்றான். ஜென்சென்தான் இந்த நாவலின் ஆசிரியர் என்று நமக்கு தெரிகின்றது.


நாவல் முழுக்க ஓலோன்புலாக்கில் எலிகளோடும், மர்மோட்டுகளோடும், குதிரைகளோடும் , ஆடு ,மாடுகளோடும் ஒரு ஓநாய் அரசன் போல கம்பீரமாக உலாவிய மனதுக்குள் வெறுமை வந்து குடிக்கொள்கின்றது. இந்த உலகத்திலேயே ஆபாசமான விலங்கு மனிதன் என்று தெரிகின்றது. அதே நேரம் சர்வைவல் என்ற தியரிபடி மனிதனை விட எதுவும் வல்லமை இல்லை என்றும் தெரிகின்றது. ஆனால் மனிதனையும் விட மகத்தான சக்தி ஒன்று உள்ளது. அது இயற்கை. அதன் விளைவே இன்று நாம் சந்திக்கும் இயற்கை பேரழிவுகள்.





இந்நூலின் ஆசிரியரை பற்றி:-

ஜியாங் ரோங் 1946-ஆம் ஆண்டு ஜியாங்சூ-வில் பிறந்தார். அவருடைய தந்தையின் வேலை நிமித்தமாக, அவர்களுடைய குடும்பம் 1957-ல் பீஜிங்கிற்குக் குடிபெயர்ந்தது. 1966-ல் சென்ட்ரல் அகாதமி ஆஃப் பைன் ஆர்ட்டில் ஜியாங் கல்வி மேற்கொண்டார். கலாச்சாரப் புரட்சியைத் தொடர்ந்து, சீனாவில் ஏற்பட்ட நிகழ்வுகளின் விளைவாக, அவருடைய படிப்பு இடையிலேயே தடைபட்டது. அவருடைய இருபத்தோராவது வயதில், 1967-ல், உள் மங்கோலியாவின் 'கிழக்கு உஜிம்கியூன் பேனர்' இல் அங்குள்ள நாடோடி மக்களோடு சேர்ந்து வாழ்ந்து உழைப்பதற்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் பதினோரு ஆண்டுகள் வாழ்ந்தார். அங்கு செல்லும்போது தன்னோடு இரண்டு பெட்டிகள் நிறைய மேற்கத்திய செவ்வியல் படைப்புகளைக் கொண்டு சென்றார் மேலும் அங்கிருந்த பதினோரு ஆண்டுகளில் மங்கோலிய வரலாறு, கலாசாரம், மரபு ஆகியவற்றை தீர்க்கமாக அறிந்துகொண்டார். குறிப்பாக, மேய்ச்சல்நில ஓநாய்கள் பற்றிய புராணீகங்களை அறிவதில் தீவிர நாட்டமும் வேட்கையும் கொண்டிருந்தார். ஒய்வு நேரங்களில் அவை பற்றிய கதைகளைக் கேட்டறிந்ததோடு மேய்ச்சல் நில மக்களின் ஆசானும் குலச்சின்னமுமான ஓநாய்கள் குறித்து நேரடி அனுபவமும் ஞானமும் பெறுவதற்காக ஒரு ஓநாய்க் குட்டியை எடுத்து வளர்க்கவும் செய்தார்.
 

1978-ல் பீஜிங் திரும்பி 'சமூக அறிவியல்களுக்கான சீன அகாதெமி'யில் தன் கல்வியைத் தொடர்ந்தார். பின்னர் தன் வாழ்வைக் கல்வி துறையாளராக அமைத்துக் கொண்டு 2006 ஆம் ஆண்டு ஒய்வு பெற்றார்.

2004-ல் வெளியான இந்நாவல் ,அடுத்த இரண்டாண்டுக்குள் நாற்பது லட்சம் பிரதிகள் சீனாவில் விற்பனையானது. 'மேன் ஆசியன் விருது' தொடங்கப்பட்ட முதல் ஆண்டான 2007-ல் இந்நாவல் அவ்விருதைப் பெற்றது. நாவல் வெளியாகி சில ஆண்டுகள் வரை தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாதிருந்த ஜியாங், இப்புத்தகத்தின் எந்தவொரு நிகழ்விலும் விருது வழங்கும் விழாக்களிலும் கலந்துக் கொண்டதில்லை. 'மேன் ஆசியன் விருது' வின் தேர்வுக்குழுவுக்கு இவர் அனுப்பிய புகைப்படம் மற்றும் வாழ்க்கைக் குறிப்பு மூலமே இவர் வெளி உலகுக்கு அறியப்பட்டார். எனினும் அந்த விருதையும் அவர் சென்று பெறவில்லை. ஜியாங்கின்இயற்பெயர்: லூஜியாமின்.


சி.மோகனின் மொழிப்பெயர்ப்பை உழைப்பை எப்படி சொல்வதென்று தெரியவில்லை. அபாரமென்று சொல்வதை விட வேறு எதுவும் எனக்கு எழுத தோன்றவில்லை.



ஓநாய் குலச்சின்னம்,
ஜியாங் ரோங், தமிழில் சி. மோகன்,
அதிர்வு பதிப்பகம், 38, இரண்டாவது தெரு, இராமலிங்க நகர்,
விருகம்பாக்கம், சென்னை 93,
பக்கங்கள் 672, விலை 500ரூ.              

6 comments:

  1. நன்றி .நல்லதொரு நூலை அறிமுகம் செய்திருக்கிறீர்கள் . விமர்சனம் அருமை .இந்தப் புத்தகத்தை இன்றே ஆன்லைனில் ஆர்டர் செய்ய இருக்கிறேன்.

    ReplyDelete
  2. அருமையான விமர்சனம் நன்றி.

    ReplyDelete
  3. Thank you for such a wonderful review!

    ReplyDelete
  4. சிறப்பான அறிமுகம் தந்துள்ளீர்கள், நன்றி !

    ReplyDelete
  5. ஏற்கனவே சாரு நிவேதிதா இந்த நாவல் குறித்து சொல்லியிருந்தார். ஆனால், தமிழில் வந்திருப்பது தெரியாது. கட்டுரைக்கு நன்றி. நிச்சயம் படிக்கப் போகிறேன்.

    ReplyDelete
  6. அபாரம் என்று சொல்வதைவிட வேறு ஒன்றும் எழுதத் தெரியவில்லை.

    ReplyDelete