Friday, July 5, 2013

சண்டை போடாதீங்க ஏட்டையா

சொல்வனம் மின்னிதழில் வண்ணநிலவனுடைய நேர்காணல் படித்தேன்.


நான் எட்டாவது படித்துக்கொண்டிருந்தேன் என்று நினைக்கின்றேன். அப்போது சென்னைத் தொலைக்காட்சியில் ஒரு நெடுந்தொடர் ஒளிபரப்புவார்கள். எனது அம்மாவுக்கு மிகவும் பிடித்த தொடர். அது வண்ணநிலவனுடைய கடல்புரத்தில் என்ற நாவலிலிருந்து எடுக்கப்பட்ட தொடர்.அந்த தொடர் அப்போது மிகவும் பேமஸ். அந்த தொலைக்காட்சித் தொடர் வழியாகத்தான் எனக்கு வண்ணநிலவனுடைய எழுத்துகள் அறிமுகமானது. வீட்டு பக்கத்திலிருந்த லைப்ரரியிலிருந்து கடல்புரத்தில் நாவலை எடுத்து வந்து படித்தேன். அதன் பிறகு நான் ராஜேஷ்குமார் , சுபா, சுஜாதாவிலிருந்து மாறி வேறு பக்கம் போக ஆரம்பித்தேன். விபரம் தெரிந்து முதலில் தொட்ட இலக்கிய நாவல் அல்லது இலக்கிய டிவி சீரியல்(?) கடல்புரத்தில் என்று நினைக்கின்றேன்.

சொல்வனம் நேர்காணல் முதல் வரி படிக்க ஆரம்பித்ததும் கிளர்ந்த மலரும் நினைவுகளை அடக்கி விட்டு மேலே படித்தேன். படிக்க படிக்க கோவில் மண்டபத்தில் யானை கட்டி கிடந்த இடத்தில் இருக்கும் ஒரு வெறுமையை பார்ப்பது போல உணர்ந்தேன். மூத்த எழுத்தாளர்கள் பலரும் இப்போது தங்களை அப்டேட் செய்துக் கொள்வதில்லையோ என்று தோன்றியது

குறிப்பாக நேர்காணலின் இந்த பகுதி நிறைய யோசிக்க வைத்தது

சுகா: இணையத்தில எழுதறதெல்லாம் வாசிக்கிறீங்களா?

வண்ணநிலவன்: அய்யய்யய்யய்யே! அது வாந்தி பேதியாயில்லா இருக்கு! காலரா வந்த மாதிரி. அது என்ன எளுதுதாங்க எல்லாரும்… நமக்கு இருக்கறதும் போயி, எளுத முடியாமப் போயிரும்னு பயம் வந்துட்டுது, அதனால படிக்கறதில்ல.

வண்ணநிலவன் என்றில்லை நான் கவனிக்கும் நிறைய மூத்த எழுத்தாளர்களது பார்வையில் இணையம் குப்பை என்றும், இணைய எழுத்துகள் தரமற்றவை என்றுமே ஒரு பொதுக்கருத்து நிலவுவதை கவனிக்க முடிகின்றது . இதுக்கு ஜெனரேசன் கேப்பை காரணம் காட்டினாலும் இணையத்தில் நடக்கும் ஒரு சில ஆபாச மயிர்ப்பிடிச் சண்டைகளையும், வசவு கட்டுரைகளையும், தனிநபர் தாக்குதல்களையும், சொறிந்து விடும் எழுத்துகளையும் சுட்டிக் காட்ட முடியும். ஆனால் இவை மட்டுமே இணையம் இல்லை. இணையம் என்பது கடல். சமீப காலங்களில் இங்கு இருந்துதான் இலக்கிய வாசிப்பு அதிகமாகியுள்ளது. எப்படி நான் சென்னைத் தொலைக்காட்சியில் வண்ணநிலவனை கண்டெடுத்தேனோ அப்படித்தான் இன்று இணையத்தில் ஒரு தலைமுறையினர் அசோகமித்திரனை கண்டெடுக்கின்றார்கள். வாசிப்பு பழக்கம் இணையம் வந்த பிறகு அதிகமாகி இருக்கின்றது என்றுதான் சொல்வேன். இன்று இணையம் தவிர்த்து வேறு எந்த ஊடகங்களாவது இலக்கிய செயல்பாட்டையும் மூத்த எழுத்தாளர்களையும் அவர்களது படைப்புகளையும் பேசுகின்றனவா என்று பாருங்கள். இணைய எழுத்தாளர்களை பொறுக்கி என்று சொல்பவர்கள் கூட இணையத்தில்தான் எழுதுகின்றார்கள். இணையத்தில்தான் தங்களை விளம்பரம் செய்துக்கொள்கின்றார்கள். இணையம் என்றாலே ஏதோ தினம் தினம் கட்டிப்பிடித்து சண்டைப்போட்டு உருள்வதை போல ஒரு பொதுப்புத்தி இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதே ஊரில்தான் அ.முத்துலிங்கம் கடை போட்டுள்ளார். அழியாச்சுடர்கள் கடை இருக்கின்றது. எஸ்.ரா இருக்கின்றார். இது ஒரு கடல். வேறு வழியில்லை. முத்து குளிக்க கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் கண்டிப்பாக நிறைய கிடைக்கும். இணையம் என்ற பெயரைச் சொன்னாலே ஏன் பேயை பார்த்து போல ஓடுகின்றார்கள் என்றுதான் தெரியவில்லை. ஒரு சில பொறுக்கிகளின் நடவடிக்கைகளை மேலோட்டமாக பார்த்து விட்டு இப்படித்தான் என்று தீர்மானித்தால் எப்படி? இணையத்தில் யாருக்கும் எழுத தெரியாது அல்லது எழுத வராது. இணையத்தில் இயங்கும் சில எழுத்தாளர்களே தொடர்ந்து இதுபோன்ற பிம்பங்களை கட்டமைத்துக் கொண்டே இருக்கின்றார்கள். ஒருபக்கம் இப்படி செய்துக்கொண்டே மறுபக்கம் அவர்கள் நாவல்களை இணையத்தில் விளம்பரம் செய்துக் கொள்கின்றார்கள் . பிறகு அவர்களே இணையத்தில் எழுதுபவர்களை சொறிந்து விடுவதும் இங்கே நடப்பதுண்டு. வட்டங்களையும்,குழுமங்களையும் இங்கேயே உருவாக்குகின்றார்கள்           

இப்படித்தான் தேநீர்கடையொன்றில் நான் மிகவும் மதிக்கும் ஒரு எழுத்தாளரோடு பேசிக்கொண்டிருந்தேன்.

அவருக்கு பேஸ்புக் ,ட்விட்டர் ,பிளாக் என்றால் என்னவென்றே தெரியவில்லை. அவர் இன்டர்நெட்டிற்கு ஒரு முறை வந்துள்ளார். வந்தவுடனேயே ஓடி விட்டார். இண்டர்நெட்டில் எல்லாரும் மயிரைப் பிடித்து (அவரு இப்படிதான் சொன்னார்) இழுத்து சண்டை போடுறாங்க. எங்க பார்த்தாலும் ஒரே குப்பை என்றார்.
 
"நான் அவரிடம் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இலக்கிய கூட்டங்களில் நீங்க போடாத சண்டையா? உங்களுக்கு நினைவு இருக்குதோ இல்லையோ? நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்தேன் . ஒரு மூத்த கவிஞர் குடித்து விட்டு வந்து உங்க மடியில வாந்தி எடுத்தார் நினைவுக்கு இருக்குதா?" என்றேன் சிரித்தபடியே.

"ஆமா...ஆமா...நீங்க அப்ப சின்ன மீசை வச்சுகிட்டு வெடவெடன்னு கதவு ஓரமா பயந்து போய் எங்க சண்டையை வேடிக்கைப் பார்த்துட்டு நின்னுக்கிட்டிருந்தீங்க" என்றார் என்னைப் பார்த்து.

கொஞ்ச நேரம் இருவரும் எதுவும் பேசவில்லை. திடீரென கோபத்துடன், "அந்த புடுங்கி அவன் பேரு என்ன ...இப்ப கூட இண்டர்நெட்டுல எழுதறானே....தா..பெரிய பருப்பாட்டம் என்னோட சிறுகதைத்தொகுப்பை புடுங்கி கிழிச்சுட்டான். அன்னைக்கு அவனை வேட்டியை உருவி துரத்தி துரத்தி அடிச்சில்ல பல்லை ஒடச்சேன்" என்றார்.

கொஞ்ச நேரம் இருவரும் தேநீர் அருந்தியபடியே தொண்ணூறுகளின் மலரும் நினைவுகளில் மூழ்கினோம். 

1 comment:

  1. இன்டர்நெட்டில் எழுதப்படுவது குப்பை என்று சொல்லித்தானாக வேண்டும், இல்லையென்றால் அவர்களுடைய ஜீவனம் போய்விடுமே.

    ReplyDelete