Monday, October 21, 2013

பனி




நாற்பத்தியிரெண்டு வயதான கரீம் அலாகுஷோலு அப்படி அழைத்தால் அவனுக்கு பிடிக்காது. கா என்று அழைக்கப்படுவதையே அவன் விரும்புகின்றான். பத்திரிக்கைகாரன். கவிஞனும் கூட. கூச்ச சுபாவம் கொண்ட தனிமை விரும்பி. மிகப்பெரிய லட்சியங்களை தலைக்கு மேல் கொண்ட ஆனால் வாழ்க்கையில் வெற்றியடையாத   செக்காவின் கதாப்பாத்திரங்கள் போல இருப்பவன் கா. குறிப்பாக இறை மறுப்பாளன்.

இப்படிதான் முதல் அத்தியாத்தில் காவை அறிமுகப் படுத்துகின்றார் ஒரான் பாமுக். அரசியல் காரணங்களுக்காக துருக்கியிலிருந்து நாடுகடத்தப்பட்டு ஜெர்மனியின் பிராங்க்பர்ட்டில் பன்னிரண்டு ஆண்டுகாலம் வசிக்கின்றான். இஸ்தான்புல்லில் அவனது அம்மா இறந்து போனதை அறிந்து ஈமசடங்கு செய்ய மீண்டும் இஸ்தான்புல் வருகின்றான். என் பெயர் சிவப்பு போன்று பாமுக்கின் மற்ற எல்லா கதைகளிலும் வரும் இஸ்தான்புல் நிலபரப்பில்தான் இனி ஐநூறுக்கும் மேற்பட்ட பக்கங்களில் பயணம் செல்ல போகின்றோம் என்று நினைத்தால் கா கார்ஸ் என்ற எல்லையோர சிறு நகரத்திற்கு அந்த வருடத்தின் பனிக்காலத்தில் பயணம் செய்கின்றான். பாமுக்கின் தனித்துவமான நாவல் இது. இந்த முறை இஸ்தான்புல்லை விட்டு வெளியே சென்று விளையாடியுள்ளார். கதையும் அதை சொல்லும் அந்த பரபரப்பு நடையும் கூட வித்தியாசமானது. என் பெயர் சிவப்பு  போலல்லாமல் நாவலில் மிக வெளிப்படையாக பாமுக் இஸ்லாமிய அரசியலை பேசுகின்றார்.  

கார்ஸில் பல இளம்பெண்கள் தொடர்ச்சியாக தற்கொலை செய்துக் கொள்கின்றார்கள்.அதையும் தவிர அங்கு வரவிருக்கும் தேர்தலை பற்றிய செய்திகளையும் சேகரிக்க கா கார்ஸ் செல்கின்றான். அங்கு முன்னூற்று சொச்சம் பிரதிகள் மட்டுமே விற்கும் பார்டர் சிட்டி கெஜட் என்ற பத்திரிக்கையின் பதிப்பாளர் சர்தார் பேவை சந்திக்கின்றான். தற்கொலைக்கான காரணங்களை சேகரிக்க காஸிம் பே என்ற காவல்துறை துணைத்தலைவரை சந்திக்கின்றான். கார்ஸில்  அவன் தங்கியிருக்கும் ஹோட்டலின் உரிமையாளர் துர்குத் பே என்பவரின் மகள் இபெக்கை சந்திக்கின்றான். இபெக்கும், காவும் ஒன்றாக பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள். இபெக்கின் முன்னாள் கணவன் முக்தார் பேவும் கூட காவின் பள்ளித்தோழன்தான்.

ஒட்டாமன் ராஜ்ஜியம் முடிந்து துருக்கியில் ஐரோப்பிய நாகரீகமும், கலாச்சாரமும் நடப்பதால் அங்கு ஒருவித அரசியல் சமனற்ற சூழல் இருக்கின்றது. பர்தாவை எடுக்க முடியாமலும், பர்தாவை அணிய முடியாமலும் இரண்டு எல்லைகளுக்குள் அங்கு இருக்கும் இளம்பெண்கள் சிக்கி தவிக்கின்றார்கள். இபெக் பர்தா அணிவதில்லை. அவள் மேற்கத்திய கலாச்சாரத்தை ஆதரிக்கின்றாள். இபெக்கின் தங்கை கடிஃபோ நேர் எதிரி. இபெக்கை விவாகரத்து செய்தவுடன் முக்தார் பே முழுநேர இஸ்லாமிய அடிப்படைவாதியாக மாறிவிடுகின்றான். ஒருநாள் காவும்,இபெக்கும் ஒரு நியூலைப் பாஸ்ட்ரி என்ற கடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது அங்கு அவர்கள் கண்முன்னால் கொலை நடக்கின்றது. சுட்டுக் கொல்லப்பட்டவர் கல்வித்துறை இயக்குனர். என்ன காரணமென்றால் அவரது கல்விக்கூடத்தில் பர்தா அணிந்த பெண்களை அவர் அனுமதிக்க மறுத்து விட்டார். பார்தா அங்கு தடை செய்யப்பட்ட சூழலில் அரசாங்கம் பர்தாவை அணிந்தால் மிரட்டுகின்றது. அடிப்படை மதவாதிகள் பர்தா அணிவதை தடுக்கும் ஆட்களை கொலை செய்கின்றார்கள். நாவலின் இந்தப்பகுதியில் அந்த கொலைக்காரனுக்கும், கல்வித்துறை இயக்குநருக்கும் இடையே நடக்கும் அந்த உரையாடலில் பாமுக் ரகளை செய்திருப்பார்.(அசத்தலான நடை இது. அந்த கொலைகாரன் கல்வித்துறை இயக்குநரை கிண்டல் செய்தபடியே அதே நேரத்தில் உன்னை கொலை செய்ய வந்திருக்கின்றேன் என்று மிக பணிவாக பேசி அவருடன் மரியாதையாக உரையாடி இறுதியில் கொலை செய்வான்)

பிறகு நீலம் என்ற மத பயங்கரவாதியை கா சந்திக்க நேரிடுகின்றது. இடையில் முக்தார் பேவை கா சந்திக்க செல்லும்போது அங்கு வரும் காவல்துறை ஆட்கள் முக்தார் பேவை கைது செய்து அழைத்துச் சென்றுவிடுகின்றார்கள்.
நீலத்தை கா சந்தித்து உரையாடும் அந்த இடத்தில் துருக்கியின் அரசியல் தீவிரமாக பேசப்படுகின்றது. அங்கு நெசிப், ஃபாசில் என்ற இரண்டு மத தீவிரவாத இளைஞர்களை கா சந்திக்கின்றார். அதில் நெசிப்பிற்கு இபெக்கின் தங்கை கடிஃபே மீது காதல்.  நேஷனல் தியேட்டரில் பர்தா அணிவதை தடுக்கும் ஒரு நாடகத்தையொட்டி நிகழும் கலவரத்தால் கார்ஸின் இராணுவ வீரர்கள் சுட அதில் இறந்து போகின்றான். ரகசிய மறைவிடத்தில் ஒளிந்திருக்கும் நீலத்தை இராணுவம் கைது செய்கின்றது. காவின் சமரசம் மூலம் நீலத்தை விடுவிக்க இராணுவம் சம்மதிக்கின்றது. அந்த சமரசம் திட்டம் என்னவென்றால் நீலத்தின் காதலி பர்தாவை அகற்றும் நாடகமொன்றில் நடித்து இராணுவத்திற்கு பிரச்சாரம் செய்து தரவேண்டுமென்பது...
 
துருக்கியை ஈரான் போல தீவிர மத அடிப்படை நாடாக மாற்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஒருப்பக்கமும், இன்னொரு பக்கம் அங்கு பர்தாவை தடைசெய்து மேற்கத்திய கலாச்சாரத்தை இறக்கும் அரசாங்கமும், இவர்களுக்கு இடையில் மாட்டிக்கொள்ளும் கார்ஸின் மக்களும், தொடரும் இளம்பெண்களின் மர்மமான தற்கொலைகளும் என்று நாவல் செல்கின்றது.

பர்தாவை நெருப்பில் எரித்து போராட்டம் செய்வது.மத அடிப்படைவாதிகள் பெண்கள் மீது ஏவும் வன்முறை என்று துருக்கியின் அந்த கொந்தளிப்பான சூழலை அப்படியே நுட்பமாக பதிவு செய்துள்ளார்.

எனது முதலும் கடைசியுமான அரசியல் நாவல் இது என்று ஒரான் பாமுக் சொல்லியிருந்தார். அவருக்கு மரணதண்டனை வாங்கிதரும் அளவுக்கு சென்ற நாவலும் கூட.. ஐக்கிய நாடுகளின் தலையீட்டால் துருக்கி அந்த மரணதண்டனை விதிக்கும் முயற்சியை கைவிட்டது. 2007-ல் அவருக்கு நோபல் பரிசு வழங்கும்போது பாமுக் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்திருந்தார். 

ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பை பற்றி நான் ஏற்கனவே முந்தைய என்பெயர் சிவப்பு,கடல் நாவல்களின்,ஹாருகி முரகாமிசிறுகதை தொகுப்பின்
பதிவுவில் குறிப்பிட்டுள்ளேன். சரளமாகவும், அடர்த்தியாகவும் படிக்க தூண்டுகின்றது. அதே நேரம் பாமுக்கின் இந்த நாவல் துப்பறியும் நடையில் கதைக்களன் பரபரப்பாக இருப்பதால் மிக சரளமாக படிக்க வைக்கின்றது.

நாவலின் முக்கியமான பகுதியில் காவின் டைரியை இந்த நாவலின் ஆசிரியர் ஒரான் படிக்கின்றார். கா அவனது டைரியில் எழுதியிருந்த வரிகள்... 
 
 
அறுகோணத்தில் பனித்திவலை ஒன்று படிகமானபின்,அது வானத்திலிருந்து கீழே விழுவதற்கு எட்டிலிருந்து பத்து நிமிடங்கள் வரை ஆகின்றது. வரும் வழியில் அதன் அசல் வடிவத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து மறைகிறது. அவன் மேலும் படித்தறிந்து கொண்டது, ஒவ்வொரு பனித்திவலையின் வடிவமும், வெப்பம்,காற்றின் திசை,வேகம்,மேகத்தின் உயரம் மற்றும் வேறுபல புரியாத அம்சங்களைக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது என்பதும் பனித்திவலைகள் பலவிதங்களில் மனிதர்களை ஒத்திருக்கிறது என்பதும்

3 comments:

  1. Just entered and became your rasikar list
    Gomathi natarajan FB
    Let me go through your blog

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. நாவல் விமர்சனம் மிகச்சிறப்பாக இருக்கிறது. படிக்கவேண்டும் என்ற ஆவல் பெருகுகிறது.

    ReplyDelete