Friday, October 17, 2014

கால்களின் கீழே சுழலும் உலகம்

இம்மாத புதிய புத்தகம் பேசுது இதழில் ஆர். அபிலாஷின் கால்கள் நாவல் குறித்து நான் எழுதியிருந்த நூல் அறிமுகம்.

தமிழ் இலக்கியப்பரப்பில் இதுவரை மாற் றுத்திறனாளிகள் உலகையும்,அவர்கள் இருப்பையும், இருப்பிற்கான தத்தளிப்பையும், அவர்களின் உடல் வலியையும்,வலி சார்ந்த தகவல்களையும் இவ்வளவு நுட்பமாகப் பதிவு செய்த நாவல்கள் எதுவும் வந்துள்ளதா என்று தெரியவில்லை. அந்தவகையில் தமிழின் குறிப்பிடத்தக்க நாவலாக அபிலாஷின் கால்கள் நாவலைச் சொல்லலாம்.

தனது இளம்பிராயத்தில் போலியோ அட்டாக் வந்து கால்கள் பாதிக்கப்பட்ட மதுக்‌ஷரா என்ற மதுவின் அகவுலகமும் அவள் புறவுலகில் சந்திக்கும் வேறுபட்ட குணங்கள் கொண்ட எண்ணற்ற மனிதர்களும், அவர்களுக்குள் நடக்கும் இடையறாத உரையாடல்களுமே நாவலின் மையப்புள்ளி. அழகென்றும் சொல்லமுடியாத அழகி இல்லையென்றும் சொல்லமுடியாத சராசரித் தோற்றமுடைய மதுவின் அகஉலகத்தை இரண்டு அடுக்காகப் பிரித்துக்கொள்ளலாம்.

மது தனது வீட்டில் அவளுக்காக ஒதுக்கப்பட்ட தனியறையில் அமர்ந்து தனது உடலின் ஒருபகுதியாக இருக்கும் காலிப்பரையும் அது ஏற்படுத்தும் வலியையும் தொடர்ந்து கவனித்தபடியே இருக்கிறாள். ஒவ்வொரு முறை காலிப்பரைப் பொருத்தும்போதும், தனியாக கழிவறைக்குச் சென்று திரும்பும்போதும், சக்கர நாற்காலியில் உட்காரும்போதும், மாடிப்படிகளில் ஏறி இறங்கும்போதும், வெளியிடங்களுக்குச் சென்று திரும்புகிறபோதும் மது அடையும் பெருவலியை அவளது அந்தரங்க மனம் கவனித்து வலியுடன் தொடர்ந்து அவள் உரையாடுவது போன்ற தருணங்கள். பிறகு அவள் வளர்ந்து பெரியவள் ஆனதும் அவளது உடம்பு அடையும் மாறுதல்களையும், அது தரும் வேறுவிதமான வலியையும், இனம்புரியாத அவஸ்தையையும் தொடர்ந்து கவனிப்பது என்று இந்நாவல் முழுக்க வலி சார்ந்த நுட்பமான தகவல்கள் மதுவின் அகவுலகத்தில் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன.
இரண்டாவது மதுவின் புறஉலகம். மதுவின் புறஉலகத்தை இரண்டு அடுக்காகப் பிரித்துக் கொள்ளலாம். முதல் அடுக்கில் மதுவின் அப்பா,அம்மா, கார்த்திக், பேராசிரியர் மதுசூதனன் அவரது மகன் பாலு போன்ற மைய துணைப்பாத்திரங்கள். இரண்டாவது அடுக்கில் அந்த மைய துணைப்பாத்திரங்களோடு தொடர்புடைய எண்ணற்ற மனிதர்கள். வேறுபட்ட குணாதிசயங்களுடன் உலவும் இந்த மனிதர்களின் இடையே நடக்கும் உரையாடல்கள், உரையாடல்கள் வழியே விரியும் அரசியல், தத்துவம், வரலாறே இந்நாவலுக்கான விரிவையும், ஆழத்தையும் கொடுக்கிறது.

எதிலும் ஆர்வமற்ற மது ஒரு சுவர்ப்பல்லி போலத் தொடர்ந்து தனது உடலையும், சுற்றியுள்ள மனிதர்களையும், அவர்களது பேச்சுகளையுமே விளையாட்டுப் போல கவனித்துக் கொண்டிருக்கிறாள். ஒருகட்டத்தில் அவளுக்கு அதுவே வாழ்க்கையாகவும் மாறிவிடுகிறது. வளர்ந்ததும் ஆங்கில இலக்கியம் படிக்கச் செல்கிறாள். அங்கும் அதுவே தொடர்கிறது. புத்தகங்களும், மனிதர்களும் அவளுக்கென்று ஒரு தனித்த சிந்தனையை, தர்க்கத்தை ஏற்படுத்துகிறார்கள். அவளிடம் இருப்பது முன்கூட்டிய பிடிவாதமான சிந்தனைகள் என்று சொல்லமுடியாது. ஆனால் யாராவது அவளது சுயத்தைக் காயப்படுத்தினால் அவளால் அவ்வளவு எளிதில் அதை உதறிப்போக முடியாமல் வாதங்களால் அதைச்சாடுகிறாள். அதனாலேயே பிடிவாதக்காரி என்றும் முரட்டுப்பெண் என்றும் சிலரால் நினைக்கப்படுகிறாள்.
மதுவின் அப்பாவுக்கும் மதுவுக்குமான உறவு நுட்பமாக நாவலில் பதிவாகியுள்ளது போன்று மதுவுக்கும், அவளது அம்மாவுக்குமான உறவு அவ்வளவு விரிவாக இல்லையோ என்று தோன்றுகின்றது. மதுவை சிறுவயதிலிருந்து வைத்தியசாலைக்குத் தூக்கிச்செல்வதும், கால்களுக்கு எண்ணெய் தடவிவிடுவதுமாக அற்புதமான தந்தையாக இருக்கும் அவரேதான் பல நேரங்களில் மது மீது எரிந்து விழுந்து அவளை வெறுக்கிறார். சுடிதார் வாங்கித் தரச் சொல்லிக் கேட்கும் நேரத்தில் கடுமையாகத் திட்டும் அவரேதான் பின்னாட்களில் மதுவுக்கு வாய்பேசாத வரன் அமையும்போது காலம் முழுக்க என் பெண்ணை நானே தூக்கிச் சுமக்கிறேன். ஆனால் ஓர் ஊமைக்கு கட்டிக்கொடுக்க மாட்டேன் என்று தீர்மானமாகச் சொல்கிறார். மதுவுக்கு அவளது தாயிடம் பெரிதாக எந்த ஆர்வமும் இல்லை. ஒருசில நேரங்களில் கழிவறை செல்லும்போது மதுவின் அம்மா உதவி செய்கிறாள். சில நேரங்களில் மது அவளது அம்மாவுக்கு சமையலில் உதவி செய்கிறாள். எஞ்சிய நேரங்கள் எல்லாம் மதுவின் வீடு முழுக்க அவளது அப்பாதான் நிறைந்து விடுகிறார். தூக்கத்தில் ஆடை கலைந்த அப்பாவின் ஆண்குறி அவளது கனவில் வருகிறது. அப்பாவின் மீதுள்ள ஈர்ப்பு போல கார்த்திக் மீது மதுவுக்குப் பெரிதாக எந்த சுவாரசியமும் இல்லையோ என்றுதான் தோன்றுகிறது.

சில குறைவான பக்கங்களே வரும் துணைக் கதாபாத்திரங்கள் எல்லாம் அவ்வளவு கவனமாகவும், நுட்பமாகவும் செதுக்கப்பட்டுள்ளன. அந்த துணைக் கதாபாத்திரங்கள் இல்லாமல் போனால் இந்நாவலுக்கு கிடைத்திருக்கும் அபாரமான விரிவும், சுவாரசியமும் கிடைக்காமல் வெறுமனே ஏதோ ஒரு பெண்ணின் கழிவிரக்கத்தைச் சொல்லும் நாவலாகத் தடம்மாறிப் போயிருக்கலாம். மதுவின் வாழ்க்கையில் அவ்வப்போது இதுபோன்ற எண்ணற்ற மனிதர்கள் நீர்க்கோலம் போன்று வந்து மறைந்துபோகிறார்கள். மதுவின் இளம் வயதில் வரும் மத்தாயி என்ற செயற்கைக்கால் பழுது பார்க்கும் கடை நடத்துபவர் மற்றவர்களால் அவருக்கும் அவரது சித்திக்கும் இருப்பதாக நம்பப்படும் உறவு, பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் பிளேடு என்ற பட்டப்பெயர் கொண்ட மனிதர் அவரது குடும்பம், பெண்களோடு பேசும்போது அவர்களின் மார்பை மட்டுமே கவனிக்கும் ஹரிஹர ஐயர் என்ற மனிதர், ஆட்டோ ஓட்டும் கணேஷ், உலகத்துக்கு கீழ் இருக்கும் அனைத்திற்கும் கருத்து எழுதும் மார்க்கண்டேயன் என்ற எழுத்தாளர். அவர் எழுதும் சி++ என்ற புத்தகம்,டாக்டர் ஆபிரகாம் போன்று நாவல் முழுக்க வரும் உதிரிமனிதர்களால் நாவல் பிரமாண்டமாக விரிகிறது. மது இறுதிவரை அதே ஊரில் இருந்தாலும் பல துணைக்கதாபாத்திரங்கள் நாவலில் தொடர்ந்து பயணிக்காமல் ஆங்காங்கே மறைந்து விடுகிறார்கள். ஆனால் இதை நாவலின் ஒரு பிரச்சனையாகவும் பார்க்க முடியாது. வாழ்க்கையில் ஒரு மனிதன் சந்திக்கும் நிறைய மனிதர்களில் யாரோ ஒரு சிலர் மட்டும் அவனது இறுதிவரை பயணம் செய்து வருகிறார்கள்.

மாற்றுத்திறனாளிகளின் உலகத்தைப் புரிந்துகொள்வது பெரிய விஷயமில்லை. உடல் வலி அவர்களுக்கு ஒரு பிரச்சனையில்லை. உதாசீனமும், கேலியும், கிண்டலும், அல்லது அளவுக்கதிகமான கரிசனமும் (பாசாங்கற்றதாகவே இருந்தாலும்), ஒப்பீடு செய்வதுமே அவர்களைக் காயப்படுத்துகின்றன. அதுவே அவர்களை சராசரி மனிதர்களிடமிருந்து விலக்கிவைப்பதாகவும் உணர்கின்றார்கள்.

நாவலின் ஒரு அத்தியாயத்தில் மதுவின் அப்பா அவரது அலுவலக நண்பரின் வீட்டுக்கு மதுவை அழைத்துச்செல்வார். அலுவலக நண்பரின் வீட்டில் இருக்கும் பவித்ரா என்ற மதுவின் வயதையொத்த பெண்ணுக்கும் கால்கள் செயலிழந்த நிலையில் இருக்கும். ஆனால் அவள் அதீத தன்னம்பிக்கையுடன் இருப்பாள். கணிப்பொறி கற்றுக்கொண்டிருப்பாள். வண்டி ஓட்டுவாள். பெரிய வேலையில் இருப்பாள். சந்தோஷமாகவும், வசதிகளுடன் கூடிய ஒருவித நடுத்தர மேல்தட்டு வர்க்கம் போல சித்தரிக்கப்பட்டிருக்கும் அந்தப்பெண் அதீத நம்பிக்கையுடனும், மகிழ்வுடனும் வாழ்க்கையை எதிர்கொள்வாள். மதுவின் அப்பா அந்தப்பெண் போல ஏன் உன்னால் தன்னம்பிக்கையாக வாழ்வை எதிர்கொள்ள முடியவில்லை என்று கேட்டு மதுவைத் திட்டுவார். மதுவுக்கு குழப்பமாக இருக்கும். அவளது உடல் குறைபாட்டின் அளவு வேறு. எனது குறைபாடு வேறு. நான் ஏன் அவள் போல இருக்க வேண்டும்? என்று கேட்பாள்.
மதுவுக்கு வைத்தியம் செய்ய வரும் சித்த வைத்தியர்கள் எல்லாம் ஏதேதோ செய்து தொடர்ந்து தோற்றுப்போகிறார்கள். அவர்கள் கொடுக்கும் எந்த மருந்தும் அவளது காலை குணப்படுத்தவில்லை. மாறாக மருந்துகள் அவளது யானைப்பசியைத்தான் அதிகரிக்கின்றன. அதனால் உடல் பருமன் ஆகிக்கொண்டே போகிறது. ஆரம்பத்தில் தனது உடல் பருமனைப் பற்றி லேசாகக் கவலைப்படும் மது பிறகு ஒருக்கட்டத்தில் அதை அலட்சியம் செய்கிறாள்.

சமீபத்தில் எனக்குத் தெரிந்த ஒரு நண்பரின் ஆறு வயது மகன், மாற்றுத்திறனாளி. கழிவறையில் கால் வழுக்கி அங்கிருந்த இரும்புவாளியில் தலை அடிபட்டுவிட்டது. ஐசியூவில் சேர்க்கும் நிலைமைக்குப் போனது. பொதுஇடங்களை விட்டுவிடலாம். இந்தியாவில் மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் வீடுகளில் கூட அவர்களுக்கான முறையான கழிப்பறை, சக்கர நாற்காலி ஏற்றிச்செல்லும் மாடிப்படி வசதிகள் இல்லை. அதைப்பற்றி பேஸ்புக்கில் விரிவான கட்டுரையொன்றை எழுதியிருந்தேன். சென்னை போன்ற பெருநகரங்களில் இருக்கும் ஷாப்பிங் மால்களில், இப்போது கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் நிலையம் போன்ற சொற்ப இடங்கள் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் அளவுக்குத் தகுதி கொண்டவையாக இருக்கின்றன. அங்கும் அவர்களுக்கான கழிவறை வசதிகள் எப்படி என்று தெரியவில்லை. அதைக் கூட சகித்துக்கொள்ளலாம்.
இந்நாவலின் இறுதியில் மது பிரத்யேக வண்டியோட்டுவதற்காக விண்ணப்பிக்கின்றாள். அங்கு மதுவுக்கு மருத்துவச் சான்றிதழ் வழங்கும் மருத்துவர் முதல் போக்குவரத்து அதிகாரி வரை லஞ்சம் வாங்குகிறார்கள். மற்றவர்களிடம் அதிகமாகக் கைநீட்டும் அரசு அதிகாரிகள் மாற்றுத்திறனாளிகளிடம் இரக்கப்பட்டு கொஞ்சமாக லஞ்சம் வாங்குவதை நானே பலமுறை நேரில் பார்த்து அவர்களது இரக்ககுணத்தை வியந்து பாராட்டியுள்ளேன்.

நாவலுக்காக அபிலாஷ் பயன்படுத்தியுள்ள கவித்துவமான மொழி கவனிக்கத்தக்கது. அதிக சிடுக்குகள் இன்றியும், சாதாரணமாக இல்லாமலும் வாசிக்க சிரமப்படுத்தாமல் செல்லும் இந்நாவலைப் பற்றி சில நண்பர்கள் பொதுக்கருத்தொன்றைச் சொல்வதைக் கவனித்துள்ளேன். அது இந்நாவல் மெதுவாகச் செல்கிறது. எல்லா ரயிலும் வேகமாகச் செல்ல வேண்டுமா என்ன? மலைரயிலுக்கென்று ஓர் அழகு உண்டு. இந்த மலைரயிலில் பயணிக்கும்போது ஆங்காங்கு வரும் பிளேடு,எழுத்தாளர் மார்க்கண்டேயன், டாக்டர் ஆபிரகாம் போன்ற மனிதர்கள், அவர்கள் ஊடான உரையாடல், அதில் இருக்கும் மெல்லிய அங்கதம், சமூகக் கோபம் என்று இந்நாவல் தொடர்ந்து அதன் வெற்றியைத் தக்கவைத்துக்கொண்டே நம்மைக் கடத்திச்செல்கிறது.
ஒரு பெண் மாற்றுத்திறனாளியின் உலகையும், அவள் சார்ந்திருக்கும் சமூகத்தையும் விரிவாக இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் வகையில் இந்நாவல் கொண்டாடப்பட வேண்டியது. சமீபத்தில் இந்நாவல் எழுதிய ஆர்.அபிலாசுக்கு சாகித்ய அகாடமியின் இளம் எழுத்தாளருக்கான யுவபுரஸ்கார் விருது கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அபிலாசுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வோம்.

No comments:

Post a Comment