Monday, May 31, 2010

மூன்று கவிதைகள்

அடையாள அட்டைகள்
—————————————————————

முத‌ல் கவிதை இந்த வார விகடனில் வெளிவந்துள்ளது.

1.
இப்போதெல்லாம்
ரயில் நிலையத்தில்
பேருந்து நிலையத்தில்
விமான நிலையத்தில்
வழிபடும் இடத்தில்
இன்னும் ஆயிரம் ஆயிரம்
காரணங்களுக்கு
ஆடைகளை களைந்து
சோதனை செய்கிறார்கள்
கவனமிருக்கட்டும்
ஒரு
அடையாள அட்டையென்பது
ஆடை களையும் சடங்கிலிருந்து
தற்காலிகமாக தப்பிக்க
தரப்பட்டுள்ள சிறுசலுகையே

(நன்றி - ஆனந்த விகடன்)


2
நாளுக்கு நாள்
எனது அடையாள அட்டைகள்
பெருகிக் கொண்டே செல்கின்றன
உடம்பில் புதுபுது மச்சங்களும்,மருக்களும்
உற்பத்தியாவதை போல
கடைசியாக வ‌ந்து சேர்ந்தது
வாக்காளர் அடையாள அட்டை
எனது மருத்துவ நண்பரிடம்
கேட்டபொழுது
வளர்சிதை மாற்றம்
பயப்பட தேவையில்லெயென்கிறார்


3
சாலையோர நடைபாதையில்
அனா‌‌‌தையாக கிடந்தது
அடையாள அட்டை
முகத்தை தவிர
வேறெதுவும் புலப்படவில்லை
அந்த பழுப்பேறிய
நைந்துப்போன அட்டையில்
நூறாண்டுகளாய்
சலித்து நின்ற மரமொன்று
இலைகளை உதிர்த்து விட்டு
‌மிக மிக சந்தோஷமாய்
மண்ணை முத்தமிட்ட
கணம் போல சிரித்திருந்தது
அந்த முகம்


நன்றி
-என்.விநாயக முருகன்

7 comments:

  1. முதல் மற்றும் மூன்றாவது கவிதை அருமை...
    வாழ்த்துக்கள் NVM..

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. கவிதைகள் நன்றாக உள்ளது. கவிதைக் கருவாக அடையாள அட்டையை முன்னிருத்தியுள்ளதால், கவிஞனின் பார்வை அனுபவபூர்வமானதாக இருக்க வேண்டும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. சமீபத்தில் திருவண்ணாமலையில், கோவில் வாசலில் காவி ஆடை அணிந்து சாமியார் போலத் தோன்றமளித்த ஒருவரின் கழுத்தில் அடையாள அட்டை இருந்தது கண்டேன்.

    ReplyDelete
  5. அருமையான அடையாள அட்டைகள்

    ReplyDelete
  6. விகடனிலேயே படித்தேன் மிகவும் நன்றாக இருந்தது...வாழ்த்துக்கள் தோழரே...

    ReplyDelete
  7. நன்றி செந்தில்
    நன்றி துரோகி (என்ன ஒரு முரண்நகை)
    நன்றி வேடியப்பன்
    நன்றி நண்பா
    நன்றி கோமா
    நன்றி கமலேஷ்

    ReplyDelete