Friday, January 14, 2011

அதீதமாய் தொடங்கிய தமிழ் புத்தாண்டு



இப்படியொரு இணைய இதழ் தொடங்க இருப்பதாக இரண்டு வாரங்கள் முன்பே மீரா ப்ரியதர்ஷனி அவர்கள் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.இணைய இதழுக்கு கவிதை கிவிதை ஏதாவது எழுதி தாருங்கள் என்று கேட்டிருந்தார். சமீபகாலமாக நான் இணையத்தில் மேய்வதை வெகுவாக குறைத்துவிட்டேன். கணினியில் படிப்பது மிகுந்த ஆயாசத்தை தருகிறது. கணினித்திரை கண்களுக்கு எரிச்சலை தருகிறது. மேலும் புத்தகங்கள் போல தொடர்ச்சியான வாசிப்பனுபவத்தை இணையத்தில் பெற முடிவதில்லை.ஒரு தளத்தை படித்தால் கருத்துகளை முற்றாக கிரகிக்கும் முன்பே அங்கிருந்து இன்னொரு லிங்கை பிடித்து அடுத்த தளத்திற்கு மனம் சென்று விடுகிறது. ஒருவர் மிக கடினமாக உழைத்து அருமையாக பத்து பக்கத்திற்கு கட்டுரை எழுதியிருப்பார். அதை படித்து பார்க்காமலேயே கட்டுரை மொக்கை என்று ஒருவர் பின்னூட்டம் போட்டிருப்பார். அவருக்கு ஜால்ரா தட்டி நாற்பது பேர் கும்மியிருப்பார்கள்.மொக்கைகளும்.கும்மிகளும் நிறைந்த இணையத்தில் அத்தி பூத்தாற்போல எப்போதாவது சில நல்ல தளங்கள் தென்படும். தமிழர் திருநாளாம் பொங்கலான இன்று வெளிவந்துள்ள "அதீதம்" இதில் இரண்டாவது வகை.

ஒருவித சோம்பலுடனும், அசுவாரசியத்துடனுமேயே இந்த தளத்தை இன்று மேய்ந்தேன். (இணையத்தில் பெரும்பாலும் படிக்க முடிவதில்லை. மேயத்தான் முடிகிறது.) மேய்ந்த ஓரிரு நிமிடத்திற்குள்ளே இந்த இணைய இதழ் சுவாரசியமாகவும், தனித்துவமாகவும் இருப்பது தெரிந்தது. நிதானமாக ஒவ்வொரு படைப்பாளிகளது பெயர்களையும் படித்தேன். நிலாரசிகன், தேனம்மை லக்ஷ்மணன், நண்பர் உழவன், லதாமகன் (இவர் எனது அலுவலகத்தில்தான் பணி செய்கிறார்) ,ரிஷான் ஷெரீஃப் குறிப்பாக அபிமான கவிஞர் அனுஜன்யா என்று ஒரே கொண்டாட்டமாக இருந்தது. அதீதம் தளத்தில் நான் ரசித்த அபிமான கவிஞர் அனுஜன்யாவின் கவிதை....

மோட்சப் பிரசாதம்
-------------------------
காலை கிடைத்தது
கடவுள் பிரசாத லட்டு.
ஒரு குழந்தை பிறந்ததினால்
மதியம் கரைந்த சாக்லேட்கள்
மேசைக்கடியில் குவிந்திருந்த
இனிப்புத் துகள்கள்
மாலையில் வசீகரமான
மஞ்சள் உருண்டைகளுடன்
வளையம் வந்த ஊழியனிடம்
எனக்கு இரண்டு கேட்டேன்
ஒன்றும் பேசாமல்
மேசைக்கடியில் உருண்டைகளைப்
போட்டு விட்டு அகர்ந்தான்
இரவுக் கனவில்
புதிதாக இறந்திருந்த
கரப்பானின் மென் மேசை
என் நாசியை உரசியபடி அலைந்தது.

"புத்தக அறிமுகம்" பகுதியில் ராமலக்ஷ்மி அவர்கள் "வெயில் தின்ற மழை" (நிலாரசிகன்) கவிதைத்தொகுப்பை பற்றி மிக அருமையான விமர்சனமொன்றை எழுதியுள்ளார். "அறிவியலும் அறிவில்லா இயலும்" கட்டுரையில் சந்தனமுல்லை அவர்கள் இப்படி கேட்கிறார். "மதமும், மூடநம்பிக்கைகளும் பெண்களை எப்படி அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றன என்று உணர வேண்டும். (மனைவியின் ந‌ல‌னுக்காக‌ ஏதேனும் விர‌த‌ங்க‌ள் க‌ண‌வ‌னுக்கு இருக்கிற‌தா?)"

அதீதத்தில் பல்சுவை இணைய இதழ் எ‌ன்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆனா‌‌‌ல் ஏதோ குறைவது போல தெரிகிறது. அதீதம் சுருக்கமாக இருக்கிறது. நிறைய கட்டுரைகளும், குறைந்தது இரண்டு அல்லது மூன்று சிறுகதைகள் இட‌ம்பெற்றிருந்தால் முழுமையான இணைய இதழ் தோற்றம் கிடைத்திருக்கும். முத‌ல் இதழுக்கு படைப்புகள் குறைவாகவே வந்திருக்கலாம். இனி வரும் இதழ்களில் அரசியல் கட்டுரைகளும், அதிக அளவிலான இலக்கிய படைப்புகளும் இடம்பெறும் எ‌ன்று நம்புகின்றேன். பின்னூட்டம் பகுதி இல்லாதது ஆறுதலாக இருக்கிறது. இருந்திருந்தால் தளம் சந்தைக்கடை போல மாறிவிட்டிருக்கும். ந‌ல்ல முயற்சி. அதீதத்துக்கு தமிழர்திருநாள் வாழ்த்துக்கள்!!!.

http://www.atheetham.com

1 comment:

  1. விநாயகமுருகன்

    மேய்தலும் கும்முதலும் தான்றி ஒர் அருமையான முகந்தெரியாத நட்பு ஒன்றுக்கு இந்த இணையதளங்கள் வித்திடுகின்றன, ஆயாசம் தான் மறுக்கவில்லை ஆனால் மாதம் ஒருமுறையேனும் எல்லாரையும் சென்று பாருங்கள் இது ஒரு வித தொத்து வியாதி போல் வந்தால் தான் வளரும் ...

    மேலும் எழுதுங்கள்

    நன்றி ஜேகே

    ReplyDelete