Monday, January 31, 2011

அதீதம் - கவிதை

அதீதம் இரண்டாவது இதழில் வெளிவந்துள்ள எனது கவிதை...அதீதம் குழுவினருக்கு எனது நன்றி.

தேன்மொழி
---------------
காலை வணக்கம் ஐயா
எங்கள் வங்கியிலிருந்து
தங்களுக்கு கடன் வழங்க
முடிவெடுத்துள்ளோம்
ஐம்பதாயிரம் ரூபாய்.. சம்மதமா?
மதுரத்தமிழில் கேட்டவள்
தன்பெயரைத் தேன்மொழி யென்றாள்

பிடிவாதமாக மறுத்தவனுக்கு
பத்து நிமிடம் கழித்து
மீண்டுமொரு அழைப்பு
காலை வணக்கம் ஐயா
எங்கள் வங்கியிலிருந்து
தங்களுக்கு கடன் வழங்க
முடிவெடுத்துள்ளோம்
ஒரு லட்சம் ரூபாய்..சம்மதமா?
இந்தமுறை குரல் மாறியிருந்தது
கனிமொழியோ கயல்விழியோ நினைவில்லை

மதிய இடைவேளையில்
மற்றுமொரு அழைப்பு
தேன்மொழியேதான் தெரிந்துவிட்டது
மதிய வணக்கம் ஐயா
எங்கள் வங்கியிலிருந்து
தங்களுக்கு கடன் வழங்க
முடிவெடுத்துள்ளோம்
இரண்டு லட்சம் ரூபாய்.சம்மதமா?
என்ன போட்டியோ?
என்ன பொறாமையோ? பாவம்
கனிமொழி அல்லது கயல்விழி மேல்.

கலங்கியது நெஞ்சம் தேன்மொழியிடம்
கடன்பட்டார் போல.




நன்றி
என்.விநாயக முருகன்

4 comments: