Thursday, November 10, 2011

இப்படியான வாழ்விலே

என்னை நீங்கள்
எங்கும் பார்த்திருக்கலாம்

நான் கோவிலுக்கு போனால்
செருப்பு காணாமல் போய்விடுகிறது

நான் திருமணத்துக்கு போனால்
பந்தி முடிந்து விடுகிறது

நான் நிதிநிறுவனத்தில் பணம் போட்டால்
சொல்லாமல் கூட ஓடி விடுகிறார்கள்

நான் நேர்மையாக சம்பாதித்தால்
கடன்காரர்கள் வந்துவிடுகிறார்கள்

நான் வீடு வாங்கினால்
வட்டி விகிதத்தை உயர்த்தி விடுகிறார்கள்

நான் வாகனம் வாங்கினால்
எரிபொருள் விலையை உயர்த்தி விடுகிறார்கள்

நான் ஒட்டு போட்டால்
மந்திரிசபையை கவிழ்த்து விடுகிறார்கள்

என்னை நீங்கள்
எங்கும் பார்த்திருக்கலாம்

நான் ஆசிரமத்துக்கு சென்றால்
அங்கு காவல்துறை நுழைந்து விடுகிறது

நான் ஊழல் செய்தால்
அங்கு சிபிஐ வந்து விடுகிறது

நான் நடிகன் ஆனால்
அங்கு நிருபர்கள் வந்து விடுகிறார்கள்

நான் உப்பு விற்க போனால்
மழை கொட்டி தீர்க்கிறது

நான் பொரி விற்க போனால்
காற்று வீசி தீர்க்கிறது

நான் நாய் வளர்த்தால்
அது பக்கத்து வீட்டு நாயோடு ஓடிவிடுகிறது

என்னை நீங்கள்
எங்கும் பார்த்திருக்கலாம்

நான் பிள்ளையார் பிடித்தால்
குரங்காய் மாறிவிடுகிறது

நான் கதை எழுதினால்
கந்தலாக மாறி விடுகிறது

நான் கவிதை எழுதினால்
அது எப்போதும்
இப்படித்தான் முடிந்து விடுகிறது

நன்றி
என்.விநாயக முருகன்

2 comments:

  1. //நான் கவிதை எழுதினால்
    அது எப்போதும்
    இப்படித்தான் முடிந்து விடுகிறது//

    final touch !!!!!!!

    ReplyDelete