Wednesday, January 8, 2014

காலகண்டம்

நவீன தமிழ் இலக்கியத்தில் இதுவரை பொன்னாசாரிகளை பற்றி ஏதாவது நாவல்கள் வந்துள்ளதா என்று யோசித்து பார்த்தால் எதுவும் எனது நினைவுக்கு வரவில்லை. சங்க இலக்கியத்தில் சிலப்பதிகாரம் போன்ற தரவுகள் உள்ளன. சினிமாவில் கூட ஏதோ ஒரு பாரதிராஜா படத்தில் கார்த்திக் பொன்னாசாரியாக வருவார். அந்த படத்தில் பொன்னாசாரி பிரிட்டிஷ் பெண்ணை காதலிப்பார். பேண்டஸிக்காக கார்த்திக் ஒரு சின்ன சுத்தியலால் ரஞ்சிதா மூக்கில் ஆணியை வைத்து அடித்து மூக்கு குத்திவிடுவார். பிறகு அருள் என்ற படம். அந்த படத்தில் அரசியல்வாதியை வெட்டிவிட்டு ஜெயிலுக்கு போவார். பொன்னாசாரிகளை பற்றி ஏதாவது நல்ல இலக்கியம் வந்துள்ளதா என்று நீண்ட நாட்களாக தேடிகொண்டிருந்தபோதுதான் எஸ்.செந்தில்குமார் நாவல் பொன்னாசாரிகளின் நான்கு தலைமுறைகளை பற்றிய கதை என்ற அறிவிப்பு வந்தது. புத்தகம் வெளிவந்ததும் எடுத்து படிக்க ஆரம்பித்தேன். இந்த நாவலின் பின்னட்டையில் 500 வருடங்களிற்கு மேற்பட்ட பாரம்பரியம் கொண்ட பொன்னாசாரிகளது சமூகம் என்று குறிப்படப்பட்டிருக்கிறது. சிலப்பதிகாரத்தை இன்னும் பிற தரவுகளை வைத்து பார்த்தால் அந்த சமூகம் இன்னமும் பலமடங்கு பழமையான சமூகம் என்றே கணிப்பிட தோன்றுகிறது.

இந்த நாவலின் வெளியீட்டு விழாவில் அ.இராமசாமி சொன்னது போல் பொன்னாசாரிகளுக்கு அப்படியென்ன இறுக்கமான சமூக அழுத்தம் இருக்க போகிறதென்று நினைத்துதான் நாவலை திருப்ப ஆரம்பித்தேன். காரணம் தலித்துகளை போலவோ பிற ஜாதிகளை போலவோ சமூக அடுக்கில் ஆதிக்கசாதியினரின் வீடுகளை தேடிச் சென்று அவர்கள் தரும் வேலைகளை செய்யும் சமூகம் அல்ல ஆசாரிகள். பார்ப்பனர்களுக்கு நிகராக பூணூல் அணியும் ஜாதி. சாமி சிலைக்கே கண் திறக்கும் ஜாதி நாங்கள் என்று சிலர் பெருமையாக சொல்வார்கள். எந்த சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள்தான் பொன்னாசாரிகளது வீடுகளுக்கு தேடிச் சென்று தாலி செய்ய வேண்டும். அது தலித்தோ, நாயக்கமார்களோ, மணியக்காரர்களோ, பார்ப்பனர்களோ எல்லாரும் தேடிச்சென்று வேலை கொடுக்கும் சமூகம் ஆசாரிகளுடையது. எனவே அவர்களுக்கு பெரிதாக சமூக அழுத்தம் இருக்க போவதில்லை என்ற எண்ணத்தில்தான் நாவலை படிக்க ஆரம்பித்தேன்.

நாவலின் கதை சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முந்தைய காலகட்டத்தில் பிரிட்டிஷார் ஆண்ட மதுரை ஜில்லாவில் இருந்து ஆரம்பிக்கிறது. நாவலின் களம் தெலுங்கு பேசும் நகை ஆசாரிகளும், தச்சாசாரிகளும், நாயக்கமார்களும், மணியக்காரர்களும் நிறைந்த போனூர்,தேவாரம் ஜமீன் பாத்தியம் கொண்ட பெரியரேவூப்பட்டி கிராமங்கள்.

பொன்னாசாரி சுப்புலுவும்,பெரியநாச்சியும் போனூரில் தச்சு வேலை செய்கிறார்கள். பொன் ஆபரணங்கள், மரப்பொருட்கள் வேலைகளை வருடத்திற்கு பத்துபடி வரகும், சோளமும், கேழ்வரகும் சம்பளமாக நாயக்கமார்களிடமும், மணியக்காரர்களிடமும் வாங்கிக்கொண்டு உழைக்கிறார்கள். சுப்புலுவும், பெரியநாச்சியின் மகன் பெத்தையா. ஊருக்குள் காலரா நோய் பரவியபோது பெத்தையாவின் மனைவி இறந்து விடுகிறார். காலரா நோயில் இறந்த ஆட்களை ஊருக்கு வெளியே புதைக்க சொல்லி மணியக்காரர்கள் சொல்லிவிட பெத்தையா அவரது மனைவியை ஊருக்கு வெளியே புதைத்து விடுகிறார். பெத்தையாவிற்கு இரண்டு ஆண் பிள்ளைகள். மூத்தவன் ராஜய்யா. இளையவன் சென்னய்யா. மனைவி இறந்ததும் பெத்தையா அவர்களை அழைத்து சென்று தனது தம்பியிடம் ஒப்படைத்து வளர்க்க சொல்கிறார். பெத்தையாவின் தம்பி பொன் ஆசாரி அல்ல. தச்சு ஆசாரி. பெத்தையாவின் பிள்ளைகள் இருவரும் அவர்கள் சித்தப்பாவிடம் தங்கி தச்சு வேலைகளை கற்றுக்கொள்கிறார்கள். பெத்தையாவிற்கு ஒரு தங்கை. அவள் பெயர் வீரவீருசின்னம்மா. கணவன் பெயர் சில்லையா ஆசாரி. அவளது மகன் கிருட்டிணாசாரி.

கிருட்டிணாசாரி தலைமுறையில் நாவல் தொடங்குகிறது. அவனுக்கும் பெரியரேவூப்பட்டியில் வசிக்கும் பொன்னழகு ஆசாரி மகள் திரஜம்மாவிற்கும் திருமணம் நடக்கிறது. அந்தகால வழக்கம் போல பால்ய விவாகம். பிறகு திரஜம்மா பருவம் அடைந்ததும் குடும்ப வாழ்க்கை தொடங்குகிறது. ஒரு மகளும்,மகனும் பிறக்க சில ஆண்டுகளில் திரஜம்மா இறந்து போகிறாள். கிருட்டிணாசாரி இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறான். மனைவி பெயர் வீருசின்னு. அவர்களுக்கு மூன்று மகன்கள். கதை அப்படியே மூன்றாவது தலைமுறை செல்கின்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டம். இப்படியே சமகாலம் வரை நீளும் ஒரு குடும்பத்தின் வழியாக அதன் உறவுகளின் ஊடாக அந்த குடும்பம் வசிக்கும் ஊர்களின் வழியாக அவர்கள் குலத்தெய்வங்கள் வழியாக அந்த குலதெய்வங்கள் அமர்ந்திருக்கும் நிலபரப்பின் ஊடாக மாறும் பருவ நிலைகள் வழியாக ஒரு சமூகத்தின் கதை சொல்லப்படுகிறது. காலச்சக்கரம் சுழல சுழல ஒரு காலத்தில் மிடுக்காக வாழ்ந்த பொன்னாசாரிகள் சமூகம் எப்படி சிதைந்து போகின்றது என்பதையும், நவீன இயந்திர காலத்தின் முன்பு அவர்களது பழமையான பட்டறைகள் எல்லாம் தோற்று போவதையும், அவர்களின் இன்றைய தலைமுறைகள் பலர் கந்து வட்டிக்கு கடன் வாங்கி தொழில் செய்வதையும், ரஜினி படம் பார்க்க சென்று வழியில் கழுதை மோதி சைக்கிளோடு சாக்கடைக்குள் விழுந்து எழுவதையும் , சாராயக்கடைக்குள் விழுந்து கிடப்பதையும் சொல்வதோடு நாவல் முடிகிறது.

இந்த நாவலின் வெளியீட்டு விழாவில் அ.இராமசாமி சொன்னது போல இந்த நாவலில் மனிதர்கள் இறந்துக் கொண்டே இருக்கிறார்கள். முதல் தலைமுறையில் விஷக்காய்ச்சல், பஞ்சம் என்று மனிதர்கள் இறக்க இறக்க பூமி புதிது புதிதாக மனிதர்களை உற்பத்தி செய்துகொண்டே இருக்கிறது. நாவலின் இறுதி செல்ல செல்ல காலகண்டம் அந்த சமூகத்தை வேகமாக வீழ்ச்சியடைய வைக்கிறது. ஆனால் இந்த முறை நடக்கும் வீழ்ச்சியில் மனிதர்கள் ஒரு போதும் மீண்டெழுவதில்லை. போனூர் கிராமத்தின் எல்லா சுவடுகளையும் காலம் அழிந்துவிடுகிறது. நெடுநேரம் கழித்து நாவலை புரட்டி மீண்டும் முதல் பகுதியை படித்தேன். வடக்குவீரநாச்சி ஒரு குழந்தையை காலில் போட்டு மிதித்து கொன்று அதன் குடலை உருவி மாலையாக போட்டு கொண்டு கற்சிலையாக நிற்கிறாள். இப்படி ஒரு தொன்ம கதையுடன்தான் நாவல் தொடங்குகிறது. வடக்குவீரநாச்சி என்பது வேறு யாருமில்லை. அது காலம். அது பலிகொண்ட குழந்தை போனூர்.

பொன்னாசாரிகள் சமூகம் பற்றி பதிவு செய்த வகையில் இது ஒரு முக்கிய நாவலாக படுகிறது.

3 comments:

  1. அனேகமாக நாவலை முழுமையக படித்ததோடு மட்டுமல்லாது, இத்தனை திறந்தமனதோடு தெளிவான கருத்துக்களை பகிர்ந்துகொள்வது நல்ல விஷயம்தான். அதுவும் நாவல் வெளியான ஒரு வாரத்தில். செந்தில் உங்கள் நட்பு வட்டத்தில் இல்லை. இருந்து, இந்த ப்ளாக்கை படிக்கமுடிந்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார். அவர் சார்பில் எங்களது நன்றிகள்.

    ReplyDelete
  2. good one..please read more with chittoor adalat.. you need to consider teh vishwabrahin story as well

    ReplyDelete
  3. Good one. please read chittoor adalat.. the case. Also consider vishwabrahmins history

    ReplyDelete