Monday, March 29, 2010

இரண்டு கவிதைகள்

விண்ணப்பம்
----------------
உலகின் மிக மோசமான
வசவுச்சொல்லை கேட்பதற்கு
ஆவலாக உள்ளது

என் நண்பர்களோ
எதிரிகளோ முகம் தெரியாதவர்களோ
யார் வேண்டுமானா‌‌‌லும்
என்னை நோக்கி வீசலாம்

ஒரு விண்ணப்பம்
நான் இதுவரை கேள்விப்பட்டிராத
அசாதாரணமாக அந்த சொல் இருக்கவேண்டும்
ஏனெனில் இதுவரை
என் செவியில்
விழுந்த சொற்கள் எல்லாமே
யாரோ யாரையோ
திட்ட பயன்படுத்தியவை

அந்த மோசமான
வசவுச்சொல்லை கேட்பதற்கு
என் காதுகளை எப்போதும்
கூர்தீட்டியே வைத்துள்ளேன்

இரண்டாவது விண்ணப்பம்
தயவுசெய்து
நான் இறப்பதற்குள் சொல்லிவிடவும்
நான் இறந்தபிறகு
ரசிப்பதற்கு செவிகளோ
பொத்திக்கொள்வதற்கு கைகளோ இருக்காது
தவிர அப்போது
உங்கள் பாஷை வேறு
என் பாஷை வேறு. புரியாது.




புரட்சி
--------

எனக்கொரு ஆசை
புரட்சியென்ற சொல்லை
பாரதி கண்டுபிடித்தாற்போல
ஏதாவதொன்றை தேடி
உலகுக்கு சொல்லவேண்டும்

இரண்டு நாட்கள் கண்விழித்து
ஒரு சொல்லையும்
கண்டுபிடித்தேன். ழகுவுகா
ழகுவுகா ழகுவுகா
யுரேகாவெ‌ன்று கத்தவேண்டும் போலிருந்தது

உறங்கிக்கொண்டிருந்த
ஐந்துவயது மகள்
தூக்கத்தில் புரண்டபடி உளற
ழகுவுகா

அந்த பிழைப்பிலும்
விழுந்தது மண்

7 comments:

  1. ரெண்டுமே பிடித்திருந்தது நண்பரே ! ;-)
    ரெண்டாவது ஒருபடி மேல் ..

    ReplyDelete
  2. சரியான விண்ணப்பம் :-)

    ReplyDelete
  3. விநாயகமுருகன்,

    இரண்டும் நன்றாக இருக்கிறது, யுரேகா என ழகுவுகா வந்ததும் அது மழலையில் மலர்ந்ததும் ரசித்த்தேன்

    நன்றி ஜேகே

    ReplyDelete
  4. இரண்டாவது கவிதை படித்ததும் சமீபத்தில் வாசித்த (புர்ரா?) எஸ் ராமகிருஷ்ணனின் சிறுகதை ஞாபகம் வந்தது.

    ReplyDelete
  5. வசவுச்சொல்லை பிற மொழிகளில் மொழிப் பெயர்த்து தரவா?

    ReplyDelete
  6. நன்றி ஜெனோவா
    நன்றி உழவன்
    நன்றி ஜேகே
    நன்றி சுந்தர்
    நன்றி ரவிஷங்கர் (தாங்க ...இதுவரை கேள்விப்பட்டிராத
    அசாதாரணமாக அந்த சொல் இருக்கவேண்டும்)

    ReplyDelete
  7. கலக்கல் தல ,.. அருமையான கவிதைகள்

    ReplyDelete