Friday, April 2, 2010

சிறைச்சாலை

சிறைச்சாலை
-------------------

சிறைச்சாலைகள் பாதுகாப்பானவை
கொலையே நடந்தாலும்
நாலுசுவற்றுக்குள் முடிந்துவிடும்
பட்டபகலில் நட்டநடுரோட்டில்
வாலிபர் வெட்டிக்கொலையென்று
அதிர்ச்சியலைகள் கிளம்பாது


சிறைச்சாலைகள் பாதுகாப்பானவை
பேருந்து பயணத்தில் எதிர்கொள்ளும்
பிக்பாக்கெட் சம்பவங்கள் இருப்பதில்லை
மேலும் தொழில்தர்மம் இருக்கிறதல்லவா?
அறைத்தோழர்களிடம் அடிக்கவேண்டிய
அவசியமும் இருக்காது


சிறைச்சாலைகள் பாதுகாப்பானவை
ஒழிந்த நேரத்தில்
சுயசரிதை எழுதலாம்
ஒரு கவிதை பிறக்கலாம்
ஒரு சாமியார் தட்டுப்படலாம்
ஒரு தொழிலதிபரை சந்திக்கலாம்
ஒரு கடவுளைகூட பார்க்கலாம்


சிறைச்சாலைகள் பாதுகாப்பானவை
வெளியில் இருப்பதை விட
மணியடித்தால் சாப்பாடு
மயிரு முளைத்தால் மொட்டை


இப்போதெல்லாம் சிறைச்சாலைகளில்
இடம் கிடைப்பதே
குதிரைக்கொம்பு யானைக்கொம்பு
எனக்கு தெரிந்த சிறைச்சாலையொன்றில்
எங்கள் ஊர்
எம்.எல்.ஏவின் சிபாரிசுக்கடிதம் கேட்கிறார்கள்

4 comments:

  1. நல்ல கவிதை. சிறைச்சாலைக்குமா இந்த அக்கப்போர்? நன்றாக வந்திருக்கிறது கவிதை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. //ஒரு கடவுளைகூட பார்க்கலாம்//
     
    அருமை :-)

    ReplyDelete