Sunday, August 8, 2010

ஆடும் கூத்து- கலையின் உச்சம்













உயிரோசையில் அந்த கட்டுரையை படிக்கும் வரையில் தமிழில் இப்படியொரு படம் வந்திருப்பது சத்தியமாக எனக்கு தெரியவே தெரியாது.

அந்த திரைப்படத்தை பற்றி கேள்விப்பட்டவுடன் பர்மா பஜார், தெரிந்த டிவிடி கடைகளில் எல்லாம் ஏறி இறங்கினேன். எல்லாரும் என்னை ஏற இறங்க பார்த்தார்கள். ஒருவேளை இப்படியொரு படம் வந்திருக்காதோ? என்று திகைப்பாக இருந்தது. அந்த படத்தை தேடி சோர்ந்துப்போன நிலையில் யூட்யூபில் எதேச்சையாக பார்க்க நேர்ந்தது. நான் தேடிய அதே திரைப்படத்தின் பெயர். கடவுளே இது அதுவாகத்தான் இருக்க வேண்டும். லிங்கை கிளிக் செய்தேன்.

என் வாழ்வின் மகத்தான மணித்துளிகள். வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இந்த திரைப்படத்தில் சேரன்,நவ்யாநாயர்,தலைவாசல் விஜய், பாண்டியராஜன், பிரகாஷ்ராஜ், சீமான் ,மனோரமா, கொச்சின் ஹனீஃபா,ரேகா இன்னும் பலர் நடித்துள்ளார்கள்.இருந்தும் ஏன் இந்த படம் பேசப்படவில்லை? வருத்தமாக இருக்கிறது. தமிழ் சமூகத்தின் மீது ஆத்திரமாகவும் இருக்கிறது. தமிழ் சமூகத்தை தரமற்ற குப்பை படங்களால் நிரப்பி வைத்திருக்கும் ஆட்கள் மீது கோபம் வருகிறது . இந்த படம் ஏன் வெற்றியடையவில்லை. சாட்டிலைட் டிவிக்களை, தமிழின் கமர்ஷியல் டைரக்டர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. இது போன்ற படங்களை ஊக்குவிக்காத பேசாத நானும், நீங்களும் கூட குற்றவாளிதான். ஈரானிய டைரக்டர் மஜீத் மஜீதியின் படங்களை இந்த படம் தரமானது. அடித்து சொல்வேன். உலக சினிமா,உலக சினிமா என்று சொல்கிறார்களே.. அந்த தர வரிசையில் இந்த திரைப்படத்தை தாராளமாக சேர்க்கலாம். மிக தேர்ந்த பிண்ணனி இசை. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ,திரைக்கதை, ஒவ்வொரு நடிக, நடிகைகளின் கச்சிதமான நடிப்பு, முகபாவங்கள், கேமரா கோணம் என்று எல்லாம் சமச்சீரான விகிதத்தில் அடுத்தடுத்து நிற்க ஒரு வானவில் போல என் மனதில் அழகாய் விசுவரூபமெடுத்து நிற்கிறது அந்தப்படம். இன்னும் பல வருடங்களுக்கு என் நினைவில் இந்த படம் நிற்க போவது உறுதி.



‘வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட- வெறும்
வெளியி லிரத்தக் களியொடு பூதம்பாடப்- பாட்டின்
அடிபடு பொருளின் அடிபடு மொழியிற் கூடக்- களித்
தாடுங் காளீ! சாமுண்டீ! கங் காளீ!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.’


-இருட்டான திரையில் டைட்டில் ஓட ஒருவித புதிர்தன்மையோடு கூடிய இசைப் பிண்ணனியில் பாரதியின் வரிகளை கொண்ட பாடல் ஒலிக்கிறது. படத்தில் ஏதோ அமானுஷ்யம் இருக்கிறது என்று பார்வையாளர்களுக்கு ஓரளவு முன்கூட்டியே கணித்துக்கொள்ள தோதுவாக இருக்கிறது அந்த பாடலின் இசை கம்போஸிங்.

டைட்டில் முடிந்ததும், ஒரு ஊரின் வாய்க்கால் காட்டப்படுகிறது. இரவு நேரம். ஒரு வாய்க்காலில் மூன்று பேர் சேர்ந்து ஒரு ஆளை அரிவாளால் வெட்டுகிறார்கள். கேமரா அப்படியே கிரேன் ஷாட்டில் மேலே சென்று சற்று தள்ளியிருக்கும் ஊரை காட்டுகிறது. ஊருக்குள் திருவிழா. ராட்டினம் சுற்றுகிறது. ராட்டினத்தில் மேலிருந்து ஒரு பெண் அந்த கொலையை பார்த்து விடுகிறாள். ராட்டினத்தை அவசர ,அவசரமாக கீழிறக்க சொல்லி அவளது அப்பாவிடம் தான் பார்த்த கொலையை சொல்கிறாள். அவளது அப்பா "மற்றவர்கள் கண்ணுக்கு தெரியாததெல்லாம் உன் கண்ணுக்கு எப்படித்தான் தெரியுதோ?" என்று கேட்கிறார். இந்த வசனம்தான் படத்தின் கருவே.

மணிமேகலை பின்னால் அவளது அப்பா மற்றும் ஊர்க்காரர்கள் சென்று வாய்க்காலை பார்த்தாள் அங்கு எதும் இல்லை. கொலை நடந்ததற்கான துளி அடையாளம் கூட இல்லை. மணிமேகலை திகைக்கிறாள். தான் பார்த்தது பிரமையா? மணிமேகலை வீடு திரும்பியதும் எல்லாரும் அவளை கிண்டல் செய்கிறார்கள்.
"மணிமேகலைக்கு ராட்டினத்துல சுத்தும்போது கூட கனவு வருதா?" கிண்டல் செய்து சொல்லி சிரிக்கிறார்கள்.
மணிமேகலைக்கு ஆத்திரமாக வருகிறது. "அப்படினா நான் கண்டது பொய்யா?" சாப்பிடாமல் கோபித்து கொண்டு அவள் அறைக்குள் அமர்ந்திருக்கிறாள்.

மணிமேகலை (நவ்யாநாயர்) துடுக்குத்தனம் நிறைந்த ஒரு கிராமத்துப்பெண். பெரிய படிப்பாளி. தமிழின் இலக்கிய நூல்களை, சிறந்த ஆளுமைகளை தேடி படிப்பவள். அப்பா அழகியநம்பி பிள்ளை (தலைவாசல் விஜய்) யை பெயர் சொல்லி அழைத்து கிண்டல் செய்யுமளவுக்கு அப்பா செல்லம். அழகியநம்பி பிள்ளையின் சொந்த ஜவுளிக்கடையில் வேலை செய்பவன் முத்து. முத்துவுக்கு அழகியநம்பி பிள்ளை மாமன் முறை. மணிமேகலை மாமன் மகள். இருவரும் காதலிக்கின்றார்கள். முத்து திருவிழாவில் வாங்கிய வளையல்களை காதலி மணிமேகலைக்கு பரிசாக தருகிறான். "இந்த வளையல் அதிசயமானது. பழைய கறுப்பு வெள்ளை திரைப்படங்களின் வேஸ்ட் பிலிம்ரோலில் இருந்து இந்த வளையல் செய்யப்பட்டது. இந்த வளையல்களுக்கும் ஒவ்வொரு கதை இருக்கிறது" என்று முத்து சொல்ல, மணிமேகலை சிரிக்கிறாள். முத்துவின் அப்பாவித்தனமான இந்த பேச்சு அவளுக்கு பிடித்திருக்கிறது.

"உன்னை வளையல் கடைக்காரன் நல்லா ஏமாத்தியிருக்கான்" என்று கிண்டல் செய்கிறான். மறுநாள் மணிமேகலை ஆற்றுக்கு துணிதுவைக்க செல்கிறாள். தனியாக அமர்ந்து துணி துவைத்துக்கொண்டிருக்கும்பொது அந்த வளையலில் இருந்து கறுப்புவெள்ளை ஒளிக்கீற்றுகள் கிளம்புகின்றன. பழைய கறுப்பு வெள்ளை திரைப்படமொன்று அவள் கண் முன்னால் ஓடுகிறது. ஒரு இளம் காதல் ஜோடிகள் கூத்து ஆடுகிறார்கள். (காதலனாக நடித்திருப்பது நடிகர் சேரன்) அதை தொடர்ந்து கிராமத்து கொடுமைக்கார ஜமீன்தார் சிலரை காட்டி வைத்து சவுக்கால் அடிக்கும் திரைப்படக் காட்சி. (ஜமீன்தாராக நடித்திருப்பது பிரகாஷ்ராஜ்)

மணிமேகலை அந்த கறுப்புவெள்ளை திரைப்படத்தை பார்த்து பயந்து ஊருக்குள் ஓடிபோய் முத்துவிடம் தகவலை சொல்கிறாள். முத்துவுக்கு பயம் வந்து அவன் மாமாவிடம் மணிமேகலைக்கு ஏதோ ஆகிவிட்டது. அவள் என்ன என்னவோ உளறுகிறாள் என்று சொல்கிறான். மணிமேகலைக்கு ஏதோ ஆகிவிட்டது என்று அனைவரும் வீட்டுக்கு டாக்டரை அழைத்து வருகிறார்கள். பிற்பாடு அந்த ஊரில் நிஜமாகவே ஒரு பிணம் கண்டெடுக்கப்படுகிறது. அனைவரும் மணிமேகலை சொன்னது பொய்யில்லை உண்மையென்று நம்புகிறார்கள்.

1975 ஜீன் 27 ஆம் வருட நாளிதழை முத்து மணிமேகலையிடம் காட்டுகிறான். அதில் அந்த வருடம் கடையநல்லூர் என்ற கிராமத்தில் படப்பிடிப்பு எடுக்கப்பட்டு நின்றுபோன ஒரு பழைய தமிழ் திரைப்படம் பற்றிய தகவல் இருக்கிறது. ஒரு பெண்ணை மொட்டையடித்து மரத்தில் கட்டிவைத்து அடித்த தகவலும் செய்திதாளில் இருக்கிறது. மணிமேகலை அந்த செய்தித்தாளை படித்து அதிர்ச்சியடைகிறாள். முத்துவும். மணிமேகலையும் உடனே கடையநல்லூர் செல்கிறார்கள்.

அந்த ஊரில் வயதான வாத்தியார் ஒருவர் வசிக்கிறார். ஊருக்கு வெளியே தனியாக வீடெடுத்து வசிக்கிறார். அவர் பெயர் லூயிஸ் பாபு. (லூயிஸ்பாபு வேடத்தில் நடித்திருப்பவர் பிரகாஷ்ராஜ்) 1975-ல் ஒரு படப்பிடிப்பு பாதியில் நின்றுபோனதாகவும் அந்த படத்தின் டைரக்டர் பெயர் டைரக்டர் ஞானசேகரன்(டைரக்டர் வேடத்தில் நடித்திருப்பவர் சேரன்) என்றும் தகவல் சொல்கிறார். அந்த திரைப்படம் ஏன் நின்றுபோனது என்பதற்கும் அவர்களுக்கும் விடை கிடைக்கிறது. தலித் பிரச்சினை, 1977-ல் இந்திராகாந்தி ஆட்சியில் நடந்த எமர்ஜென்சி போனஆ பிரச்சினைகளை மையப்படுத்தி அழகான பிளாஷ்பேக் விரிகிறது. அந்த படம் ஏன் நின்றுப்போனது? அந்த படத்தில் நடித்த நடிக,நடிகைகள் என்ன ஆனார்கள் என்று லூயிஸ் பாபு விவரிக்கிறார்.

திரைப்படத்தில் மெல்லிய அங்கதம் ஆங்காங்கு விரவி கிடக்கிறது. மணிமேகலைக்கு மனநிலை சரியில்லையென்று அவள் வீட்டுக்கு ஒரு சைக்கியாரிஸ்டை அவளாது தந்தை அழைத்து வருகிறார். மணிமேகலை பெரிய படிப்பாளி என்று அவள் அப்பா டாக்டரிடம் சொல்கிறார். டாக்டர் அவள் என்ன மாதிரி புத்தகங்களை படிக்கிறாள் என்று கேட்க அவளது தந்தை மாடியில் இருக்கும் மணிமேகலை அறையை காட்டுகிறார். டாக்டரும் மணிமேகலை அறைக்கு செல்கிறார். புதுமைப்பித்தன்,மெளனி, ஜெயகாந்தன், பஷீர்,தி.ஜா,அசோகமித்திரன், பாரதியார்.... டாக்டர் பயந்துபோய் பேயை பார்த்தது போல அலறியடித்துக்கொண்டு மாடி அறையிலிருந்து வெளியே ஒடி வருகிறார்.

"ஒரு ஆள் இரண்டு ஆள் இல்லை..பிள்ளைவாள்...உள்ளே ஒரு நாசகார கும்பலே இருக்கிறது. வெரி டேஞ்சரஸ் கைஸ்" சொல்லியபடியே பயந்துபோய் வீட்டை விட்டு வெளியே ஓடுகிறார்.
மணிமேகலை தந்தை அந்த புத்தகங்களையெல்லாம் ஒளித்து வைக்கிறார். பிற்பாடு ஒரு காட்சியில் மணிமேகலை நார்மலாகத்தான் இருக்கிறாள் என்று அவர் ஆசுவாசப்படுத்திக்கொள்ளும்போது, மணிமேகலை தயங்கியபடியே ஒளித்து வைத்த அந்த புத்தகங்களையெல்லாம் எடுத்து வந்து தந்தையிடம் கேட்கிறாள்.

“நான் சொன்னது பொய்யில்லைனா...இவங்க சொல்றதும் பொய்யில்லைலே? இவங்கள உள்ளே சேர்த்துக்கலாமா?” என்று கேட்கும் இடம்.

இன்னொரு காட்சி. தன் அப்பாவை மோசமாக விமர்சித்து திரைப்படம் எடுப்பதாக கேள்விப்பட்டு அடியாட்களுடன் கோபமாக வருகிறார் ஜமீன்தார் மகன்(நடிகர் சீமான்) . அவர் முதன்முறையாக அப்போதுதான் ஷூட்டிங் பார்க் க்கிறார். அவர் பிரகாஷ்ராஜிடம் வெகுளித்தனமாக படப்பிடிப்பு பற்றி கேள்வி கேட்பது. மணிமேகலையிடம் காதலை சொல்லும் அவளது தமிழ் வாத்தியாரை கண்டு மணிமேகலை சிரிப்பது.. சொல்லிக்கொண்டே போகலாம்.

சேரனின் நடிப்பு பிரமாதம். மணிமேகலை கனவில் அவர் நடனம் ஆடும்போதெல்லாம் பிண்ணனி இசை ஒன்று ஒலிக்கும்.கேட்டு பாருங்கள். நாதஸ்வரம், உருமி எல்லாம் கலந்து நாட்டுபுறக்கூத்து இசை. அந்த இசையில் சொக்கி போய் மீண்டும்,மீண்டும் கேட்டேன். அதைவிட சேரன் ஆடும் அந்த துள்ளலான நடனம்..அட..அட.. அட. அருமை. அருமை. இந்த படத்தின் இயக்குனர் டி.வி. சந்திரன். எடிட்டர் வேணுகோபால். இசையமைத்திருப்பவர் ஐசக்.தாமஸ்.கோட்டுகாபள்ளி.

15 comments:

  1. Good one VM.
    (Include the "you tube link" to watch the movie)

    ReplyDelete
  2. அய்யா, அந்த லிங்கை கொடுக்கறது.

    ReplyDelete
  3. சென்ற வாரம்தான் இந்தப் படம் பார்த்தேன்!! கடைசி 20 நிமிடங்கள் மிக அருமை!! பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  4. If you type "Aadum koothu" in youtube then it will come......

    http://www.youtube.com/watch?v=YW2MPSgjtHA

    ReplyDelete
  5. இந்த படம் எடுக்கும் போது கேள்விபட்டேன்...

    ஆடும் கூத்து... பெயரே அழகு...

    //"ஒரு ஆள் இரண்டு ஆள் இல்லை..பிள்ளைவாள்...உள்ளே ஒரு நாசகார கும்பலே இருக்கிறது. வெரி டேஞ்சரஸ் கைஸ்" //
    அப்ப நாம???? :)

    ReplyDelete
  6. பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  7. நன்கு ரசித்து எழுதி உள்ளீர்கள்; முடிவில் திடீரென நீங்கள் முடித்து போல் உள்ளது

    ReplyDelete
  8. தகவலுக்காக சொல்கிறேன், நான் இந்த திரைபடத்தை டோரென்ட் மூலமாக தரவிறக்கம் செய்து பார்த்து ஒரு வருடமாகிறது.

    ReplyDelete
  9. சுவையான அறிமுகத்துக்கு நன்றி நண்பரே. இந்தப் படத்துக்கு இசை இளையராஜா என்று ஞாபகம். இல்லையா?

    - என். சொக்கன்,
    பெங்களூரு.

    ReplyDelete
  10. வருகைக்கு நன்றி நண்பர்களே...
    திரைப்படத்தில் டைட்டில் கார்டில் இசை ஐசக்.தாமஸ்.கோட்டுகாபள்ளி எ‌ன்று போடுகிறார்கள். Youtube link
    http://www.youtube.com/watch?v=YW2MPSgjtHA

    ReplyDelete
  11. This is the height of Plagiarism!!... You should give credit to the original author who wrote this article for uyirmmai!!!

    ReplyDelete
  12. I've mentioned Anath Annamalai's post link in first word...

    ReplyDelete
  13. Hi Vinayagamurugan,

    Liked your post.
    And equally was amazed by the film - a long time ago when the movie was telecase here in Singapore's national Tamil channel!

    I wrote a brief article about the film - link here in my blog:

    http://sarandeva.blogspot.sg/2009/07/aadum-koothu.html

    Please send in your views.

    Cheers,

    Saravanan

    ReplyDelete