Friday, January 14, 2011

சென்னை சங்கமம் - இரண்டு கவிதைகள்

கடந்தவாரம் சென்னை சங்கமம் கவிதைப்போட்டியில் கலந்துக்கொள்ளச் சொல்லி அழைப்பு வந்தது. ஹைதராபாத்தில் இருப்பதாலும் பணிச்சுமை காரணமாகவும் என்னால் கலந்துக்கொள்ள முடியவில்லை எ‌ன்று மறுத்துவிட்டேன்.. சென்னை சங்கமத்திற்காக வாசிக்க எடுத்த வைத்த இரண்டு கவிதைகளை இங்கு பதிவிடுகிறேன். இவை ஏற்கனவே ஆனந்தவிகடனில் பிரசுரமானவை.

பூஜ்யங்கள்
--------------
ஆறாவது வகுப்பு
ஈ பிரிவில் மறக்கமுடியாதவன்
வே. அரங்கநாயகம்
வருடத்துக்கு நாலு முறை
கணக்குப் பாடத்தில்
முட்டை எடுப்பான்


ஒரு தேர்வில்
பத்தோடு பத்தை பெருக்கி
பத்துக்கு பிறகு
பத்து பூஜ்யங்களை போட்டது
உலக பிரசித்தம்
வாத்தியார் வெங்கடரமணி
அதை சுழித்து
பத்து முட்டைகள் போட்டது
கூடுதல் சுவாரஸ்யம்


கோழிப்பண்ணை வைக்கலாம்டா
கிண்டலடித்தலும் வையமாட்டான்
பூஜ்யங்களுக்கு மதிப்புள்ளன
புன்னகையோடு சொல்வான் முரடன்


பத்தாம் வகுப்பில்
பாதியை தாண்டாத
அரங்கநாயம் போட்டோவை
வெகுநாட்களுக்கு பிறகு
செய்தித்தாள்களில் பார்க்க நேரிட்டது
மத்திய அமைச்சராம்
ஆயிரம் கோடி ஊழலாம்
சட்டென எண்ண வரவில்லை
எத்தனை பூஜ்யங்கள்?


சில்லறை
———————
நான் அவனுடன்
சுற்றியலைந்த நாட்களில்
கோனா‌‌‌ர் மாந்தோப்பில்
மாங்காய் திருடி உதை வாங்கியுள்ளான்

பெண்கள் படித்துறைப்பக்கம்
மறைந்திருந்து பார்த்ததில்
பஞ்சாயத்தில் செருப்படி விழுந்திருக்கிறது

ஊருக்கு வெளியே ஓடும்
பலான படத்தை பார்க்க
அழைத்துச் சென்றதே அவன்தான்

இந்த முறை
ஊருக்கு சென்ற போது
சந்திக்க நேரிட்டது
தொப்பையும் சங்கிலியும் மின்ன
ஆள் பருத்திருந்தான்
எம்.எல்.ஏவாகி விட்டான்
என் பால்ய சிநேகிதன்

இன்னுமொன்றும்
சொல்லியாக வேண்டும்

ஒருமுறை
கோயில் உண்டியலை
உடைத்து திருடியிருக்கிறான்

சட்டென நிழலாட நினைவூட்டினேன்
சிரித்தபடியே என்னிடம் சொன்னான்

இப்போதெல்லாம்
அது போன்ற
சில்லறைத்தனங்களை செய்வதில்லையாம்

நன்றி (ஆனந்தவிகடன்)
என்.விநாயக முருகன்

3 comments:

  1. First one timing...........

    ReplyDelete
  2. தயவுசெய்து மே மாதம் நிகழ்வை மறந்து விடாதீர்கள்.சிறிதாவது தமிழனாக இருக்க முயற்சிப்போம்.உங்களது கவிதை அருமை ஆனால் சங்கமம் உங்களை அடிமையக்கிவிடும்.நன்றி

    ReplyDelete