Thursday, December 5, 2013

பட்ட விரட்டி



காலித் ஹுசைனி எழுதிய நாவல் The Kite Runner. ஐந்து வருடங்களுக்கு முன்பு வெளிவந்து இரண்டு கோடி பிரதிகளுக்கு மேல் விற்ற இந்த புத்தகத்தை போன வாரம் ஒபாமா படிக்க வாங்கிச் சென்ற விஷயத்தை நியூயார்க் டைம்ஸில் படித்தேன். அவர் இன்னுமா அந்த புத்தகத்தை படிக்கவில்லை என்று ஆச்சர்யமாக இருந்தது. கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேல் நியூயார்க் டைம்ஸ் - இன் சிறந்த விற்பனையாகும் நூல்களின் வரிசையில் உள்ள, உலகெங்கிலும் 55 மொழிகளில் மொழிபெயர்க்கபட்டு, 2 கோடிக்கும் மேல் விற்பனையான நூல் இது.

தமிழில் பட்ட விரட்டி என்ற தலைப்பில் எம்.யூசூப் ராஜா மொழிப்பெயர்த்துள்ளார். அபாரமான மொழிபெயர்ப்பு. எந்த சிரமும் இல்லாமல் சல்ப்படைய வைக்காமல் ஒரே அமர்வில் படிக்க வைக்கும் மொழிபெயர்ப்பு.

கதை ஆப்கானின் காபூல் நகரில் நடக்கிறது. ஹசனின் அப்பா அலி. அலியின் மனைவி சனோபர். அவர்கள் அவர்கள் ஷியா பிரிவை சேர்ந்தவர்கள். ஹசன் பிறந்த ஐந்தாம் நாள் சனோபர் ஒரு நாடோடி கும்பலுடன் ஓடி விடுகிறாள். ஹசனின் அப்பாதான் குழந்தையை வளர்க்கிறார்.

அலி வேலை செய்யும் எஜமான் பெயர் ஆகா. ஆகா செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவர். அவர் மனைவியை இழந்தவர். அவருக்கு ஒரு மகன். பெயர் அமீர் (இந்த நாவலின் ஆசிரியர்). அவர்கள் பஸ்டூன் இனத்தை சேர்ந்தவர்கள்.

ஹசனும்,அமீரும் சிறுவயது முதல் எந்த வர்க்க பாகுபாடுகளுமின்றி ஒன்றாக பழகி ஒன்றாக விளையாடுகிறார்கள். பட்டம் விடுவதில் இருவரும் வல்லவர்கள். ஒருநாள் சிறுவர்கள் எல்லாம் சேர்ந்து பட்டம் விடுவது சண்டை நடக்கிறது. அந்தச் சண்டையில் ஆஸிப் என்னும் பஸ்டூன் இனச் சிறுவன் ஹசனை அடித்து வன்புணர்ச்சி செய்து விடுகிறான். அதை அமீரால் தடுக்க முடியவில்லை. பிறகு அது குறித்து அமீர் அடிக்கடி குற்ற உணர்ச்சிக் கொள்கிறான். சிறுவர்கள் அமீருக்கும்,ஹசனுக்கும் இடையே இருக்கும் நட்பில் விரிசல் விழுகிறது. பிறகு ஹசன் மீது அவன் வேலை செய்யும் வீட்டில் ஒரு திருட்டுப்பழி விழ அவனும் அவனது தந்தை அலியும் அந்த வீட்டிலிருந்து வெளியேறுகிறார்கள்.

இதனிடையே ஆப்கானில் சோவியத் ரஷ்யாவின் இராணுவ வீர்கள் அட்டகாசம் செய்கிறார்கள். பலர் அகதிகளாக பாகிஸ்தான் ஓடுகிறார்கள். ஆகாவும்,அமீரும் வீடு சொத்தையெல்லாம் போட்டுவிட்டு அகதியாக பாகிஸ்தான் ஓடுகிறார்கள். பிறகு அங்கிருந்து அமெரிக்கா ஓடுகிறார்கள். அவர்கள் அமெரிக்காவில் தங்கி காலத்தை ஓட்டுகிறார்கள். அமீர் இலக்கியம் படிக்கிறான். எழுத்தாளன் ஆகிறான். நாவல்கள் எழுதுகிறான். திருமணம் நடக்கிறது. அமெரிக்காவில் வந்து குடியேறிய காபூலில் ராணுவ ஜெனரலாக இருந்த தஹாரியின் மகள் சுரையா ஜானை காதலித்து மணம் முடிக்கிறான் அமீர்ஜான். பிறகு அமீரின் தந்தை புற்றுநோயால் மரணமடைகிறார்

இடையே ஆப்கானில் இருக்கும் ரஷ்ய படைகள் அங்கிருந்து ஓடுகிறார்கள். தாலிபான்கள் வந்து அட்டகாசம் செய்கிறார்கள். தாலிபான்கள் அட்டகாசம் செய்யும் அந்த கொடுமையான காலக்கட்டத்தில் (19 98) அமெரிக்காவிலிருந்து ஆப்கான் செல்கிறான் அமீர். அவன் ஏன் அங்கு செல்கிறான்? அங்கு தாலிபான்கள் அவனை என்ன செய்தார்கள்? ஹசன் என்ன ஆனான்? என்றெல்லாம் நாவலை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

ஒரான் பாமுக் எப்படி துருக்கியின் ஆன்மாவை எழுத்துக்குள் இழுத்துக் கொண்டு வருகிறாரோ அது போல இவர் ஆப்கானின் ஆன்மாவை இழுத்துக் கொண்டு வந்துள்ளார். இரண்டு வர்க்கங்களுக்கு இடையே இருக்கும் பிளவுகள். ஒரே மதத்தின் இரண்டு உட்பிரிவுகளுக்கு இடையே இருக்கும் பூசல்கள். மதமும், தீவிரவாதமும் எந்த புள்ளியில் இணைகிறது என்றும், ஆப்கானும்,பாகிஸ்தானும் நட்புநாடுகளாக இருந்தாலும் அவர்களுக்கு இடையே என்ன பிரச்சினை என்றும் அருமையாக புனைவில் கொண்டுவந்துள்ளார்.

எனது ஒரு வருத்தம் என்னவென்றால் தாலிபான்களை வளர்த்து விட்டதே அமெரிக்காதான். அந்த அரசியலையும்,அயோக்கியத்தனத்தையும் அவர் நாவலில் சொல்லியிருக்கலாம். அப்படி சொல்லியிருந்தால் இந்த நாவல் இரண்டு கோடி எண்ணிக்கையில் விற்றிருக்காது. ஒபாமாவும் வாங்கியிருக்க மாட்டார்.

பட்ட விரட்டி
காலித் ஹூசைனி
தமிழில் எம்.யூசூப் ராஜா
எதிர் வெளியீடு

Monday, December 2, 2013

எறும்புத் தின்னி


எப்போதாவது

சாலையோரம்

கையிலிருக்கும் காந்தக்குச்சியால்

தரையை துடைத்துக்கொண்டேச் செல்லும்

இரும்பு பொறுக்கியை சந்தித்ததுண்டா



ஓர் எறும்புத்தின்னியின்

பசியுடன் நடக்கும்

அவனைக் கண்டு

பூட்டிலிருந்து சாவிக்கள் உதிர்கிறன



அவனைக் கண்டு

சிறுசிறு ஆணிக்கள் பின்தொடர்கிறன

வீடுகளின் மேற்கூரையிலிருந்து

இரும்புச்சட்டங்கள் விடுபடுகிறன

கொடிக்கம்பங்கள் சாய்ந்து வளைகிறன



இரும்புக்கதவுகளை இறுக தாழிட்டுக் கொள்கிறார்கள்

இருசக்கர வாகனங்களை இறுகப் பிடித்து கொள்கிறார்கள்

இரும்பு பணப்பெட்டிகளை பூட்டி வைக்கிறார்கள்

தொடர் வண்டிகள் மெதுவாக செல்கிறன

தண்டவாளங்கள் நெளிகிறன



அவனைக் கண்டு மனிதர்கள் பயப்படுகிறார்கள்

அவனைக் கண்டு நாய்கள் குரைக்கிறன

அவனைக் கண்டு பறவைகள் பதறி பறக்கிறன

அவனைக் கண்டு கடவுளுக்கு பயம் வருகிறது



ஓர் எறும்புத்தின்னியின்

பசியுடன் நடக்கும்

அவனைக் கண்டு

ஒருக்கணம் உலகம் பதறி

மீண்டும் சுழல ஆரம்பிக்கிறது  

Monday, October 21, 2013

பனி




நாற்பத்தியிரெண்டு வயதான கரீம் அலாகுஷோலு அப்படி அழைத்தால் அவனுக்கு பிடிக்காது. கா என்று அழைக்கப்படுவதையே அவன் விரும்புகின்றான். பத்திரிக்கைகாரன். கவிஞனும் கூட. கூச்ச சுபாவம் கொண்ட தனிமை விரும்பி. மிகப்பெரிய லட்சியங்களை தலைக்கு மேல் கொண்ட ஆனால் வாழ்க்கையில் வெற்றியடையாத   செக்காவின் கதாப்பாத்திரங்கள் போல இருப்பவன் கா. குறிப்பாக இறை மறுப்பாளன்.

இப்படிதான் முதல் அத்தியாத்தில் காவை அறிமுகப் படுத்துகின்றார் ஒரான் பாமுக். அரசியல் காரணங்களுக்காக துருக்கியிலிருந்து நாடுகடத்தப்பட்டு ஜெர்மனியின் பிராங்க்பர்ட்டில் பன்னிரண்டு ஆண்டுகாலம் வசிக்கின்றான். இஸ்தான்புல்லில் அவனது அம்மா இறந்து போனதை அறிந்து ஈமசடங்கு செய்ய மீண்டும் இஸ்தான்புல் வருகின்றான். என் பெயர் சிவப்பு போன்று பாமுக்கின் மற்ற எல்லா கதைகளிலும் வரும் இஸ்தான்புல் நிலபரப்பில்தான் இனி ஐநூறுக்கும் மேற்பட்ட பக்கங்களில் பயணம் செல்ல போகின்றோம் என்று நினைத்தால் கா கார்ஸ் என்ற எல்லையோர சிறு நகரத்திற்கு அந்த வருடத்தின் பனிக்காலத்தில் பயணம் செய்கின்றான். பாமுக்கின் தனித்துவமான நாவல் இது. இந்த முறை இஸ்தான்புல்லை விட்டு வெளியே சென்று விளையாடியுள்ளார். கதையும் அதை சொல்லும் அந்த பரபரப்பு நடையும் கூட வித்தியாசமானது. என் பெயர் சிவப்பு  போலல்லாமல் நாவலில் மிக வெளிப்படையாக பாமுக் இஸ்லாமிய அரசியலை பேசுகின்றார்.  

கார்ஸில் பல இளம்பெண்கள் தொடர்ச்சியாக தற்கொலை செய்துக் கொள்கின்றார்கள்.அதையும் தவிர அங்கு வரவிருக்கும் தேர்தலை பற்றிய செய்திகளையும் சேகரிக்க கா கார்ஸ் செல்கின்றான். அங்கு முன்னூற்று சொச்சம் பிரதிகள் மட்டுமே விற்கும் பார்டர் சிட்டி கெஜட் என்ற பத்திரிக்கையின் பதிப்பாளர் சர்தார் பேவை சந்திக்கின்றான். தற்கொலைக்கான காரணங்களை சேகரிக்க காஸிம் பே என்ற காவல்துறை துணைத்தலைவரை சந்திக்கின்றான். கார்ஸில்  அவன் தங்கியிருக்கும் ஹோட்டலின் உரிமையாளர் துர்குத் பே என்பவரின் மகள் இபெக்கை சந்திக்கின்றான். இபெக்கும், காவும் ஒன்றாக பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள். இபெக்கின் முன்னாள் கணவன் முக்தார் பேவும் கூட காவின் பள்ளித்தோழன்தான்.

ஒட்டாமன் ராஜ்ஜியம் முடிந்து துருக்கியில் ஐரோப்பிய நாகரீகமும், கலாச்சாரமும் நடப்பதால் அங்கு ஒருவித அரசியல் சமனற்ற சூழல் இருக்கின்றது. பர்தாவை எடுக்க முடியாமலும், பர்தாவை அணிய முடியாமலும் இரண்டு எல்லைகளுக்குள் அங்கு இருக்கும் இளம்பெண்கள் சிக்கி தவிக்கின்றார்கள். இபெக் பர்தா அணிவதில்லை. அவள் மேற்கத்திய கலாச்சாரத்தை ஆதரிக்கின்றாள். இபெக்கின் தங்கை கடிஃபோ நேர் எதிரி. இபெக்கை விவாகரத்து செய்தவுடன் முக்தார் பே முழுநேர இஸ்லாமிய அடிப்படைவாதியாக மாறிவிடுகின்றான். ஒருநாள் காவும்,இபெக்கும் ஒரு நியூலைப் பாஸ்ட்ரி என்ற கடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது அங்கு அவர்கள் கண்முன்னால் கொலை நடக்கின்றது. சுட்டுக் கொல்லப்பட்டவர் கல்வித்துறை இயக்குனர். என்ன காரணமென்றால் அவரது கல்விக்கூடத்தில் பர்தா அணிந்த பெண்களை அவர் அனுமதிக்க மறுத்து விட்டார். பார்தா அங்கு தடை செய்யப்பட்ட சூழலில் அரசாங்கம் பர்தாவை அணிந்தால் மிரட்டுகின்றது. அடிப்படை மதவாதிகள் பர்தா அணிவதை தடுக்கும் ஆட்களை கொலை செய்கின்றார்கள். நாவலின் இந்தப்பகுதியில் அந்த கொலைக்காரனுக்கும், கல்வித்துறை இயக்குநருக்கும் இடையே நடக்கும் அந்த உரையாடலில் பாமுக் ரகளை செய்திருப்பார்.(அசத்தலான நடை இது. அந்த கொலைகாரன் கல்வித்துறை இயக்குநரை கிண்டல் செய்தபடியே அதே நேரத்தில் உன்னை கொலை செய்ய வந்திருக்கின்றேன் என்று மிக பணிவாக பேசி அவருடன் மரியாதையாக உரையாடி இறுதியில் கொலை செய்வான்)

பிறகு நீலம் என்ற மத பயங்கரவாதியை கா சந்திக்க நேரிடுகின்றது. இடையில் முக்தார் பேவை கா சந்திக்க செல்லும்போது அங்கு வரும் காவல்துறை ஆட்கள் முக்தார் பேவை கைது செய்து அழைத்துச் சென்றுவிடுகின்றார்கள்.
நீலத்தை கா சந்தித்து உரையாடும் அந்த இடத்தில் துருக்கியின் அரசியல் தீவிரமாக பேசப்படுகின்றது. அங்கு நெசிப், ஃபாசில் என்ற இரண்டு மத தீவிரவாத இளைஞர்களை கா சந்திக்கின்றார். அதில் நெசிப்பிற்கு இபெக்கின் தங்கை கடிஃபே மீது காதல்.  நேஷனல் தியேட்டரில் பர்தா அணிவதை தடுக்கும் ஒரு நாடகத்தையொட்டி நிகழும் கலவரத்தால் கார்ஸின் இராணுவ வீரர்கள் சுட அதில் இறந்து போகின்றான். ரகசிய மறைவிடத்தில் ஒளிந்திருக்கும் நீலத்தை இராணுவம் கைது செய்கின்றது. காவின் சமரசம் மூலம் நீலத்தை விடுவிக்க இராணுவம் சம்மதிக்கின்றது. அந்த சமரசம் திட்டம் என்னவென்றால் நீலத்தின் காதலி பர்தாவை அகற்றும் நாடகமொன்றில் நடித்து இராணுவத்திற்கு பிரச்சாரம் செய்து தரவேண்டுமென்பது...
 
துருக்கியை ஈரான் போல தீவிர மத அடிப்படை நாடாக மாற்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஒருப்பக்கமும், இன்னொரு பக்கம் அங்கு பர்தாவை தடைசெய்து மேற்கத்திய கலாச்சாரத்தை இறக்கும் அரசாங்கமும், இவர்களுக்கு இடையில் மாட்டிக்கொள்ளும் கார்ஸின் மக்களும், தொடரும் இளம்பெண்களின் மர்மமான தற்கொலைகளும் என்று நாவல் செல்கின்றது.

பர்தாவை நெருப்பில் எரித்து போராட்டம் செய்வது.மத அடிப்படைவாதிகள் பெண்கள் மீது ஏவும் வன்முறை என்று துருக்கியின் அந்த கொந்தளிப்பான சூழலை அப்படியே நுட்பமாக பதிவு செய்துள்ளார்.

எனது முதலும் கடைசியுமான அரசியல் நாவல் இது என்று ஒரான் பாமுக் சொல்லியிருந்தார். அவருக்கு மரணதண்டனை வாங்கிதரும் அளவுக்கு சென்ற நாவலும் கூட.. ஐக்கிய நாடுகளின் தலையீட்டால் துருக்கி அந்த மரணதண்டனை விதிக்கும் முயற்சியை கைவிட்டது. 2007-ல் அவருக்கு நோபல் பரிசு வழங்கும்போது பாமுக் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்திருந்தார். 

ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பை பற்றி நான் ஏற்கனவே முந்தைய என்பெயர் சிவப்பு,கடல் நாவல்களின்,ஹாருகி முரகாமிசிறுகதை தொகுப்பின்
பதிவுவில் குறிப்பிட்டுள்ளேன். சரளமாகவும், அடர்த்தியாகவும் படிக்க தூண்டுகின்றது. அதே நேரம் பாமுக்கின் இந்த நாவல் துப்பறியும் நடையில் கதைக்களன் பரபரப்பாக இருப்பதால் மிக சரளமாக படிக்க வைக்கின்றது.

நாவலின் முக்கியமான பகுதியில் காவின் டைரியை இந்த நாவலின் ஆசிரியர் ஒரான் படிக்கின்றார். கா அவனது டைரியில் எழுதியிருந்த வரிகள்... 
 
 
அறுகோணத்தில் பனித்திவலை ஒன்று படிகமானபின்,அது வானத்திலிருந்து கீழே விழுவதற்கு எட்டிலிருந்து பத்து நிமிடங்கள் வரை ஆகின்றது. வரும் வழியில் அதன் அசல் வடிவத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து மறைகிறது. அவன் மேலும் படித்தறிந்து கொண்டது, ஒவ்வொரு பனித்திவலையின் வடிவமும், வெப்பம்,காற்றின் திசை,வேகம்,மேகத்தின் உயரம் மற்றும் வேறுபல புரியாத அம்சங்களைக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது என்பதும் பனித்திவலைகள் பலவிதங்களில் மனிதர்களை ஒத்திருக்கிறது என்பதும்

Saturday, July 27, 2013

நந்தி ஒரு மானஸ்தன்

இண்டர்நெட் வந்தபிறகு திட்டுகளும்,வசவுகளும் அதிகமாகி விட்டன. நிஜ வாழ்க்கையில் இல்லாத தாக்கத்தை மனஉளைச்சலை இந்த இண்டர்நெட் வசவுகள் ஏற்படுத்துகின்றன.   

சாலையில் டூவீலரில் செல்கின்றோம். தெரியாத்தனமாக ஆட்டோவில் இடித்து விடுகின்றோம். உடனே ஆட்டோக்காரர் டே..பாடு என்கின்றார் கோபத்துடன். உடனே நாம் பாடுவதில்லை. சாரி சார். தெரியாமல் இடிச்சுட்டேன் என்று பயந்து வந்து விடுகின்றோம். ஆட்டோக்காரர் சிக்னலில் கோடு தாண்டி வந்து நிற்கின்றார். டிராபிக் போலீஸ் கழுவி கழுவி ஊற்ற, சாரி சார். இதோ எடுத்துறேன் சார் ஆட்டோவை என்று பம்முகின்றார் . டிராபிக் போலீசை அவரது மேலதிகாரி திட்டுகின்றார் . அந்த மேலதிகாரியை வார்டு கவுன்சிலர் அவரை அமைச்சர் அவரை எதிர்கட்சி அமைச்சர் இவர்களை பத்திரிக்கைகாரர்கள் இவர்கள் எல்லாரையும் பொதுமக்களாகிய நாம் திட்டுகின்றோம். பிறகு பொதுமக்கள் நாம் நமக்கு நாமே திட்டி க் கொள்வோம். இப்படிதான் ஒரு ஆரோக்யமான ஜனநாயக அமைப்பு இயங்குகின்றது.

நேற்று ஒரு முகம் தெரிந்த அலுவலக நண்பரிடம் (பேஸ்புக் வந்தபிறகு யாரை நண்பர்கள் என்று குறிப்பாக எழுத வேண்டியுள்ளது) சாட்டுக்கு வந்தார். அவரது பேஸ்புக்கில் இவர் ஏதோ அசிங்க அசிங்கமாக திட்டி ஒரு கமெண்ட் போட அவர் இவரை அசிங்க அசிங்கமாக திட்டி விட்டாராம். மிகவும் மனவேதனையாக உள்ளது என்றார்.  

"அந்த திட்டினவர் உங்களுக்கு ஸ்கூல் காலேஜ் நண்பரா?" என்றேன்.

"இல்லை" என்றார். 

"சரி.உங்களுக்கு தெரிந்தவரா?" என்றேன் 

"இல்லை" என்றார்.

"சரி.அவரை நேர்ல பார்த்து பேசி இருக்கீங்களா?" என்றேன்   

"இல்லங்க பேஸ்புக்கில்தான் பழக்கம்.அதான் ரொம்ப வருத்தமாயிருக்கு" என்றார்.

"வீட்ல உங்க பொண்டாட்டி,மேலதிகாரி,ரோட்டுல போறவன்,வர்றவன் எல்லாம் திட்டுறான். ஆனா அவங்க மேல வராத கோபம் உங்களுக்கு பேஸ்புக் FakeID திட்டுக்கள் மேல வருதா?" என்று கேட்டேன்.

"அதெப்படி எழுத்துல திட்டினா கோபம் வரக்கூடாதா? வள்ளுவர் கூட நாவினால் சுட்ட வடுன்னு சொன்னாரே" என்றார்.

"அது. விடுங்க அது அந்த காலத்துல பேஸ்புக் இருந்துச்சா? வள்ளுவரை யாராவது திட்டியிருப்பாங்க. அவர் பதிலுக்கு இப்படி ஒரு குறள் எழுதியிருப்பார்.எழுத்துல வாங்குறது, அடிச்சுக்கறது எல்லாம் அடியா?" கேட்டேன்.

"அப்படின்னா எழுத்தால மனவுளைச்சல் கொடுக்கறது உங்களுக்கு வலிக்காதா?படிக்கும்போது உங்களுக்கு வலிக்காதா?" என்னைப் பார்த்து கேட்டார்.            

"உண்மையான மனிதர்களின் திட்டு வலிக்கும். அவர்களின் எழுத்து வலிக்கும். ஆனால் பேஸ்புக்கில் அப்படி யாரும் இருப்பதாக தோன்றவில்லை. அறம் வைத்து பாடுவது எல்லாம் முடிந்து விட்டது" என்றேன்

"அது என்ன அறம் வைத்து பாடுவது?" என்றார் நண்பர்      

தமிழில் அறம் பாடுதல் என்று ஒன்று உண்டு. அதாவது யார் மேல் அறம் வைத்து பாடுகின்றார்களோ (பாட்டுடைத் தலைவன்) அதை கேட்ட உடன் அவர்கள் இறந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை அந்த காலத்தில் இருந்தது.

நந்தி வர்மன் என்ற பல்லவ மன்னன் எட்டாம் நூற்றாண்டில் இருந்தான். போரில் நந்தி வர்மனை கொல்ல முடியாத எதிரிகள், நந்தியின் மேல் அறம் வைத்து பாட ஒரு புலவரை ஏற்பாடு செய்தார்கள். அந்த புலவரும் காசுக்கு ஆசைப்பட்டு முதலில் நந்திவர்மன் மேல் அறம் வைத்துப் பாடினான். ஆனால் பிறகு மனம் மாறி பாடல் எழுதமாட்டேன் என்று சொல்லி விட்டான். அந்தப் புலவருக்கு ஒரு பரத்தையிடம் தொடர்பு இருந்தது. அவளோடு தனித்து இருக்கும் போது அந்த புலவர் தனது நந்தி கலம்பகம் என்ற தொகுப்பிலிருந்து சில பாடல்களை பாடி காண்பித்துள்ளார்.

ஒருநாள் அந்த பரத்தை அரண்மனை வீதி வழியாக செல்லும்போது அவளுக்கு நினைவிலிருந்த சில நந்திக் கலம்பக பாடல்களை பாடிக் கொண்டே போனாளாம் .

அதை அரண்மனைமாடத்தில் நின்றுக் கொண்டிருந்த நந்திவர்மன் கேட்டுவிட்டான். அவனுக்கு அந்த பாடல்கள் மிகவும் பிடித்துபோக அவளை வரவழைத்து அந்தப் பாடல்களின் பிண்ணனி அறிந்துள்ளான். பிறகு அந்தப் புலவனை வரவழைத்தான்.

புலவனும் கண்ணீரோடு உண்மையை சொல்லி விட்டார்.

நந்திவர்மன் மகிழ்ச்சியோடு புலவனை கட்டிப்பிடித்து முழுப் பாடல்களையும் பாடும்படி கேட்டான்.

புலவர் சம்மதிக்கவில்லை . "அரசே , இந்தப் பாடல்களை முழுதும் நீங்கள் கேட்டால் உங்களுக்கு மரணம் சம்பவிக்கும்" என்று எவ்வளவோ எடுத்துச் சொன்னார்.

நந்திவர்மன் கேட்கவில்லை. இப்படி ஒரு அருமையான பாடல்களுக்காக உயிரையே கொடுக்கலாம் என்று சொல்லி அவரைப் பாடச் சொன்னான்.

புலவன் சொன்னார் "மன்னா, மொத்தம் நூறு பாடல்கள் உள்ளன. நூறு பந்தல்கள் அமையுங்கள். நான் ஒவ்வொரு பாடல் பாடும் போதும், நீங்கள் ஒவ்வொரு பந்தலில் இருந்து கேட்க வேண்டும். அப்படி நான் நூறாவது பாடல் பாடும் போது, நீங்கள் நூறாவது பந்தலில் இருந்து கேட்பீர்கள். நான் பாடி முடித்தவுடன், உங்களுக்கு மரணம் சம்பவிக்கும்" என்றார்.

மன்னனும், சம்மதித்து ஒவ்வொரு பாடாலாய் கேட்டு கொண்டு வந்தான். நூறாவது பாடல் கேட்ட பின், அந்த பந்தல் திடீரென்று தீப் பிடித்து எரிந்து மன்னனும் எரிந்து சாம்பலாய் போனான். இதுதான் நந்திவர்மன் கதை.

நந்திவர்மன்  எதிரிகள் பந்தலுக்கு தீ வைத்து கொளுத்தி விட்டார்கள் என்றும் ஒரு கதை உண்டு.

ஆனால் இந்த ஒரு வரி கதையில் அவ்வளவு சுவாரஸ்யம், திடுக்கிடும் சம்பவங்கள், புலவரின் கள்ளக்காதல் கிசுகிசு எல்லாம் இல்லாததால் அது உண்மையான வரலாறாக இருக்க முடியாது.               

இந்த கதையை சொன்னதும்

"அப்படியா? இது உண்மைதானா? " நண்பர் கேட்டார்.        

"அந்த காலத்துல உண்மை இருந்துச்சு. நேர்மை இருந்துச்சு. காசுக்கு ஆசைப்பட்டாலும் பிறகு மனம் மாறி புலவர் நல்லவரா மாறிட்டார். மன்னனிடம் உண்மையை சொல்லி விட்டான். கலைக்காக உயிரே போனாலும் பரவாயில்லை என்று நினைத்தான் நந்திவர்மன். ஒருவேளை அந்த புலவர் பாடிய நூறாவது பாடலில் பந்தல் தீப்பிடித்து எரியாமல் இருந்திருந்தால் கூட பந்தலுக்கு தானே நெருப்பு வைத்து செத்திருப்பான். ஏன்னா நந்தி ஒரு மானஸ்தன்" என்றேன்  

"அப்படின்னா இப்ப உள்ளவங்க மானங்கெட்டவங்களா?" என்றார் நண்பர் கோபத்துடன்.

அப்படி நான் சொல்லல. எனக்கு தெரிஞ்சு ஒருத்தர் வீட்டுல பொண்டாட்டி திட்டிட்டான்னு தற்கொலை செஞ்சுக்க மலை உச்சிக்கு போயிருக்கார். தற்கொலை செஞ்சிக்க போனவன் அங்கே பாறைக்கு பக்கத்தில ஏதோ ஒரு நாவல் கிடந்திருக்கு. சரி. சாவுறதுதான் சாவுறோம். அந்த நாவலை படிச்சுட்டு அரைமணி நேரம் கழிச்சு சாவலாம். இப்ப செத்து அவ்வளவு சீக்கிரம் எங்க போகபோறோமுன்னு நாவலை பிரிச்சுருக்கான். நாவல் படிக்க படிக்க அது அவனை வேறு ஏதோ ஒரு உலகத்திற்கு அழைச்சுட்டு போயிருக்கு. அது இதுவரை பார்க்காத உலகம். அவனுக்குள் என்ன என்னவோ தோன்றியிருக்கு. இந்த நாவலை எழுதின எழுத்தாளரை உடனே பார்க்கனுமுன்னு மலை உச்சியிலிருந்து விடுவிடுன்னு இறங்கி எழுத்தாளர் வீட்டிற்கு போய் நடந்த உண்மைகளை சொல்லியிருக்கான். எழுத்தாளருக்கு செம ஆச்சர்யம். அப்படியா என்னால நீங்க தற்கொலை செஞ்சுக்கற முடிவை கைவிட்டுட்டியா? கேட்க, அவன் சொன்னானாம். என் பொண்டாட்டி திட்டிட்டான்னு தற்கொலை செஞ்சுக்க போனேன். இவ்வளவு கேவலமா கதை எழுதற உன்னை எத்தனை பேரு கழுவி கழுவி ஊத்தியிருப்பாங்க. நீயே உயிரோட இருக்கும்போது நான் ஏன் உயிரோடு இருக்கக்கூடாது என்றானாம்

Thursday, July 25, 2013

ஒரு சிறுகதை இரண்டு சம்பவங்கள்

பாஸ் நீங்க உங்களோட கட்டுரைகளை அப்படியே சிறுகதையா எழுதலாமே என்று பேஸ்புக்கில் ஒருத்தர் கேட்டார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

நான் சமீபத்தில் பார்த்த கேள்விப்பட்ட இரண்டு சம்பவங்களை இங்கு எழுதுகின்றேன்.

சம்பவம்-1
----------------
சேகரும் , நானும் ஒன்பதாம் வகுப்பில் ஒரே பிரிவில் படித்தோம். பத்தாம் வகுப்பு வந்தவுடன் அவன் வேறு பிரிவு சென்று விட்டான். சென்று விட்டான் என்பதை விட அனுப்பி வைத்தார்கள் என்று சொல்ல வேண்டும். எங்கள் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் ஒரு வித அரசியல் நடக்கும். ஒன்பதாம் வகுப்பில் நன்றாக படிக்கும் மாணவர்களை பத்தாம் வகுப்பில் ஒரு பிரிவுக்கு அனுப்புவார்கள். மோசமான மாணவர்களை இன்னொரு பிரிவுக்கு அனுப்புவார்கள். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்களை வடிகட்டி அனுப்பி அதன் மூலம் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்தி விடலாமென்பது அவர்கள் கணக்கு. சேகருக்கு வருகின்றேன்.

நடிகர் அரவிந்த்சாமி எட்டாம் வகுப்பு படிக்கும்போது எப்படி இருந்திருப்பார் என்று கற்பனை செய்துக்கொள்ளவும். அப்படியே இருப்பான் சேகர். அப்படியே அரவிந்தசாமிக்கு திருநீறு பட்டை போட்டுக்கொள்ளவும். பட்டை என்றால் திக்காகவும் இருக்கக்கூடாது. மெலிதாகவும் இருக்கக்கூடாது. அப்படி ஒரு விபூதி பட்டையை அவனது வீட்டில் எப்படி வைத்து விடுவார்கள் என்று இன்னமும் ஆச்சர்யமாக இருக்கும்.

இந்த பட்டையை உங்க வீட்டுல வச்சாங்களா இல்ல செஞ்சாங்களா என்று கிண்டல் செய்வோம். சிரித்து க்கொள்வான். சேகர் அப்படிதான். என்ன கிண்டல் செய்தாலும் அதிர்ந்து பேசமாட்டான். எவ்வளவு வம்பு இழுத்தாலும் நகர்ந்து சென்று விடுவான். ஆனால் படிப்பு என்று வந்துவிட்டால் அவன் குட்டி தாதா. கணக்கில் செண்டமும் மற்ற பாடங்களில் செண்டத்திற்கு ஒன்றிரண்டு மார்க்குகள் குறைவாகவும் எடுப்பான். .

எந்தளவு சேகரை நாங்கள் கிண்டல் செய்து வம்பு இழுக்கின்றோமோ அந்தளவு எங்களுக்கு திட்டும்,அடியும் விழும். சேகரிடமிருந்து இல்லை. வாத்தியார்களிடமிருந்து. கணக்குப்பாட விடைத்தாள் திருத்தப்பட்டு வரும். சேகரது விடைத்தாளில் மூன்று இலக்க மதிப்பெண் இருக்கும். எங்கள் விடைத்தாளில் அந்த மதிப்பெண்ணின் கடைசி இலக்கம் இருக்கும். சேகர் மூத்திரத்தை வாங்கி குடிங்கடா என்று வாத்தியார் கத்துவார். நல்லவேளை மூவாயிரம் பேர் படிக்கும் அந்த பள்ளிக்கூடத்தில் பொண்ணுங்களுக்கென்று தனி பிரிவு இருந்தது. இருபாலாரும் இணைந்து படிக்கும் பிரிவுகளும் உண்டு. ஆனால் எங்கள் பிரிவில் வெறும் பசங்க மட்டும்தான். எந்தளவு சேகரை வாத்தியார்கள் நேசித்தார்களோ அந்தளவு நாங்கள் அவனை எதிர்த்தோம். அவனை பெயில் மார்க் ஆக்க எவ்வளவோ முயன்றும் எதுவும் நடக்கவில்லை. தேர்வுக்கு முதல் நாள் அவனது புத்தகங்களை ஒளித்து வைத்தோம். வருடம் முழுவதும் படிக்கின்றவனுக்கு ஒருநாள் என்ன செய்யும்? அவனுக்கு சினிமா ஆசையை காட்டி சினிமாவுக்கு அழைத்துச் செல்வோம். ஆனால் எங்களுக்குத்தான் சினிமா பைத்தியம் பிடித்தது. இப்படி கல்லுளி மங்கன் போல படிப்பையே ஒரு தவம் போல செய்த சேகர் என்ற முனிவர் பத்தாவது வரும்போது அவனும்,நானும் வேறு வேறு பிரிவுகள் மாறி இருந்தோம். பத்தாவதில் நான் சுமாரான மதிப்பெண்களோடு பாஸ் செய்து வேறு பள்ளிக்கு சந்தோஷமாக சென்றேன். சேகர் ஸ்டேட் பர்ஸ்ட் வருவானென்று எல்லாரும் எதிர்பார்த்தோம். ஆனால் ஸ்டேட் பர்ஸ்ட் வரவில்லை. இரண்டு பாடங்களில் மட்டும் மாநில அளவில் மூன்றாவது. கணக்கில் வழக்கம் போல செண்டம். இதெல்லாம் இருபது வருட கதை.

இதெல்லாம் இருபது வருட கதை. கடைசியாக சேகரை எங்கு நான் பார்த்தேன். மறந்து விட்டது. நினைவுப்படுத்திச் சொல்கின்றேன. மேற்கொண்டு படிக்கவும்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதுதான் எங்களுக்கு பலான புத்தகங்களும், சினிமாக்களும் அறி முகமானது. பள்ளியில் வெளியே யானையடி என்ற இடமிருக்கும். அந்தக்காலத்தில் யாரோ பெரிய யானை சிலையை அங்கு கட்டி வைத்து விட்டு சென்று விட்டான் போலிருக்கு. அதனால் அந்த பகுதிக்கு யானையடி. யானை கட்டி போராடித்த நெல்வயல்கள் கும்பகோணத்தில் இருந்ததால் யானையடி என்றும் வந்ததாக சொல்வார்கள். ராஜராஜ சோழன் கும்பகோணத்தில் (குடந்தை) இருந்து தஞ்சாவூர் செல்ல இந்த வழியைத்தான் தேர்வு செய்வானாம். சுவாமிமலை வழியாக தஞ்சாவூர் செல்லும். ஆனால் இப்போது யாரும் இந்தப் பாதையை பயன்படுத்துவதில்லை. இப்போது வேறு வழி இருக்கின்றது. அப்படி ராஜராஜனோ வந்தியத்தேவனோ,குந்தவை நாச்சியாரோ செல்லும்போது இங்கு யானையை கட்டிவைத்து ஓய்வு எடுப்பார்களாம். அதனால் யானையடி. நமக்கு எதுக்கு வரலாற்று புரட்டு எல்லாம். அந்த யானை சிலை பக்கத்தில் இருக்கும் பழைய பேப்பர் கடையில்தான் சரோஜாதேவி,பருவராகம்,மருதம் , இளமை ஜுஸ் போன்ற புத்தகங்கள் கிடைக்கும்.

யானையடியிலிருந்து ஐநூறு மீட்டர் தொலைவில் எங்கள் பள்ளிக்கூடம். புத்தகங்கள் வாங்குவதில் சிரமம் இருக்காது. என்ன அப்போதெல்லாம் காசுதான் பிரச்சினையாக இருக்கும். அதற்கும் ஒரு வழி வைத்தோம். மாணவர்கள் எல்லாரும் காசு போட்டு பாதி விலையில் புத்தகங்கள் வாங்கி படிப்போம். ஒவ்வொருத்தனும் ஒருநாள் புத்தகத்தை எடுத்துச் செல்வோம். ஒரு வாரம் கழித்து அதே புத்தகத்தை கால் விலைக்கு விற்று விடுவோம். பலானபடங்கள் பார்க்கதான் அதிக சிரமப்பட வேண்டியிருக்கும். எப்படியாவது டியூசன் பீஸ் அது,இதுவென்று தேத்தி விடுவோம். கும்பகோணத்தில் இருக்கும் ஆறு,ஏழு தியேட்டர்களில் எப்படியும் அவளோட ராவுகள், அவள், பூக்காரி ஏதாவது ஓடும். ஆனால் சேகர் மானஸ்தன். செத்தாலும் பலான படங்களுக்கோ,பலான புத்தகங்கள் பக்கமோ தலைவைத்தும் படுக்க மாட்டான். மற்றபடி கட் அடித்து நாங்கள் செல்லும் விஜயகாந்த் ,சத்யராஜ் படங்களுக்கு அவன் வருவான்

நினைவு வந்து விட்டது . சேகரை நான் மீண்டும் பார்த்தது. அரிசோனாவின் பீனிக்ஸ் ஏர்போர்ட்டில். கடந்த வருடம் ஜூலை மாதம். ஜூலை மாதம் பீனிக்ஸ் என்றால் வெயில் எப்படியிருக்குமென்று நினைத்துக் கொள்ளுங்கள். ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வந்த சில விநாடிகளுக்குள் முகம் பழுத்து விட்டது . அது சேகர்தானா என்று முதலில் சந்தேகமாக இருந்தது. பக்கத்தில் சேட்டு வீட்டுப்பெண் போல. அவள் பக்கத்தில் ஆறு ஏழு வயதிருக்கும். மகனா மகளா என்று தெரியவில்லை. அவனும் என்னை அடையாளம் கண்டுக்கொண்டான். பத்து வருடங்களாக யு.எஸ்.சில்தான் குப்பை கொட்டுவதாகவும் நியூயார்க் ,புளோரிடா, ரிச்மாண்ட், கலிபோர்னியா என்று யு.எஸ் முழுவதும் அலைந்து விட்டதாகவும் சொன்னான். இப்போது பீனிக்சிலிருந்து கும்பகோணத்திற்கு கிளம்புவதாகவும் ஒரு மாதம் லீவ் எடுத்து விட்டு சென்னைக்கு வந்து வேறு ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்ய போவதாகவும் சொன்னான். அதிக நேரம் பேசவில்லை இருவரும். போன் நம்பர்கள் வாங்கிக்கொண்டோம். அவனுக்கு அடுத்து கனெக்டிங் பிளைட்டை பிடிக்கும் அவசரம். சேகரின் வேலை,சம்பளம் பற்றி விசாரித்தேன். அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லை. நான் வாங்கும் அதே சம்பளம்தான்

பீனிக்ஸ் சென்ற பிறகு ஏகப்பட்ட வேலைகளுக்கிடையே நான் சேகரை மறந்தேப்போனேன். இரண்டு மாதங்கள் செய்ய வேண்டிய வேலை. ஒரு மாதத்தில் முடிந்து விட்டது. மீண்டும் சென்னைக்கு வந்து விட்டேன். கடந்த மாதம் எதேச்சையாக கும்பகோணம் சென்றபோதும் எனக்கு சேகர் நினைவுக்கு வரவில்லை. அந்த யானையடி யானை சிலையை எனது காரில் தாண்டியதும் ஆர்வமாகி பழைய புத்தகக்கடையை பார்த்தேன். கடை இல்லை. அங்கெ ஷாப்பிங் மால் போல ஏதோ ஒரு பில்டிங் இருந்தது. சேகர் நினைவுக்கு வந்தான். சேகரின் நம்பரை தேடினேன். அது எனது யு.எஸ் செல்போனில் சேமிக்கப்பட்ட நினைவு. அந்த செல்போன் சென்னையில் விட்டு வந்திருந்தேன். சரியென்று ஒரு பள்ளிக்கூட நண்பருக்கு போன் செய்து சேகரை பற்றி விசாரித்தேன். அவன் வீட்டை விட்டு ஓடி விட்டதாக சொன்னார். எனக்கு புரியவில்லை. தெளிவாக சொல்லு. அவன் சாமியாரா போய்ட்டாண்டா. தேட வேணாம்னு லெட்டர் எழுதி வைத்துவிட்டு போய்ட்டான். எங்க போனான்னு தெரியலை. தேடிகிட்டிருக்கோம் என்றான்.


சம்பவம்-2
-----------------
கடந்த வாரம் ஒரு சுவையான சம்பவம் நடந்தது. எனது அலுவலக நண்பர் தான் இதை சொன்னார்.

அவருக்கு தெரிந்த நண்பர் ஒருத்தர். அவரும் எங்கள் அலுவலகத்தில்தான் (கோயம்புத்தூர் கிளை) மாட்யூல் லீடாக வேலை செய்தார்) மாதம் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குபவர். வீட்டிற்கு ஒரே பையன். வயது இருபத்தைந்து இருக்கும். கல்யாணம் ஆகவில்லை. நல்ல வசதியான குடும்பம் வேறு . அப்பா ஜின்னிங் பேக்டரி வைத்துள்ளார். இருந்தும் பையன் ஆசைப்படி கணிப்பொறி படிக்க வைத்துள்ளார் . அவர் திடீரென ஐந்து மாதங்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் ஒரு ஆசிரமத்தில் சேர்ந்து விட்டார். அவர் எனது நண்பரிடம் அடிக்கடி சொல்வாராம். 

இந்த வாழ்க்கை நிலையற்றது. செல்வத்தை தேடி ஓடும் இந்த வாழ்க்கை எனக்கு பிடிக்கவில்லை. விவேகானந்தர் போல ஏதாவது மனிதகுலத்துக்கு சேவை செய்துவிட்டு செத்துப்போகவேண்டுமென்று நண்பரும் அதை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. ஒருநாள் திடீரென அலுவல வேலையை ராஜினாமா செய்து விட்டு வீட்டை விட்டு வெளியேறி ஜக்கி ஆசிரமத்தில் சேர்ந்து விட்டாராம்.

இதுக்கு மேல் நடந்ததுதான் ஹைலைட். நேற்று நானும் எனது நண்பரும் டீக்கடையில் நின்று பேசிக்கொண்டிருந்தோம். எனது நண்பர் என்னிடம் ஒரு பயோடேட்டாவை கொடுத்து,

"இந்த நபருக்கு உங்கள்  டீமில்  ஏதாவது  வேகன்சி உள்ளதா?" என்று கேட்டார்.

"யார் உங்களுக்கு தெரிந்த நபரா?" என்றேன்.

"நான் சொல்லலை..அந்த கோயம்புத்தூர் ஆசிரம பார்ட்டி அவருதான் இவரு" என்று சொல்ல ஒருக்கணம் திகைத்துவிட்டேன்.

 "என்னாச்சு?" என்று கேட்க,

"அதை ஏன் கேட்கறீங்க? இவன் ஆசிரமத்திற்கு போயிருக்கான். அங்க செம வேலை. பெண்டு கழற்றியிருக்காங்கா. கிணத்துல தண்ணி இறைக்கறது. தோட்டத்துக்கு தண்ணி ஊத்தறது. சமையல் செய்யுறது. எச்சி தட்டு கழுவறது. கக்கூஸ் கழுவறது எல்லா வேலைகளையும் இவனை செய்ய சொல்லியிருக்காங்க. நண்பர் வசதியான குடும்பத்தில் பிறந்தவர் அல்லவா? பிஞ்சுக்கை வேற.. கையெல்லாம் கொப்புளம் வந்து உடம்பு முடியாமல் ஹாஸ்பிட்டலில் சேரும்படி ஆகிவிட்டதாம். ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் ஆசிரம சுவர் ஏறிக்குதித்து வீட்டுக்கு ஓடி வந்துட்டாராம். ஒரு மாசம் வேலை இல்லாமல் இருக்கவே தெரிந்த நண்பர்கள் சொந்தக்காரர்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் கிண்டல் தாங்க முடியாமல் இப்போது மீண்டும் வேலை தேடுகின்றாராம்" என்றார்.


முதல் சம்பவத்திற்கும் இரண்டாவது சம்பவத்திற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? அவர் பெயர் சேகர். இவர் பெயர் கூட எனக்கு நினைவில் இல்லை. அவர் யு.எஸ் முழுவதும் அலைந்து கும்பகோணத்தில் காணாமல் போயுள்ளார். இவர் கோயம்புத்தூரை கூட தாண்டாதவர். அவர் பெரிய பணக்காரர் எல்லாம் இல்லை. நடுத்தர வர்க்கம். இவருக்கு கோவையில் சொந்தமாக ஜின்னிங் பேக்டரி உள்ளது. ஒருவேளை அவரு சென்ற அதே ஆசிரமத்தில் இவரும் சேர்ந்திருக்கலாம். யார் கண்டது அந்த இரண்டு பேரும் சந்தித்து கூட பேசியிருக்கலாம். இப்படி ஏதாவது கற்பனை கலந்து அடித்து விட்டால் ஒருவேளை இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் அந்த ஒருத்தர் கேட்ட கேள்விக்கு எனக்கு விடை கிடைக்கக்கூடும்.

ஒரு ரயில் பயணத்தின்போது

ரயிலுக்கும், எனக்கும் ஏதோ பூர்வஜென்ம பந்தம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இதோ இங்கு இருக்கும் கூடுவாஞ்சேரிக்கு ஏன் டவுன் பஸ்சிலோ , ஷேர் ஆட்டோவிலோ போகாமல் எலக்ட்ரிக் ட்ரெயினில் போக வேண்டும்?

சனிக்கிழமை அலுவலகம் போறதை விட சள்ளை பிடித்த வேலை எதுவும் இல்லை. ஆனால் சனிக்கிழமை என்றால் நிதானமாக எழுந்து சன் டிவியோ, புதிய தலைமுறை செய்திகளையோ பார்த்து பதினோரு மணிக்கு அலுவலகம் சென்றால் போதும். ஆமாம் சனிக்கிழமை அலுவலகம் போறதால கூடுதல் சம்பளம் வர போகுதா என்ன? பதினோரு மணிக்கு கிளம்பும் எண்ணத்தில்தான் கண்விழித்தேன். ஆனால் விழித்ததும் நண்பர் ஒருத்தர் போன் செய்து விட்டார். படப்பையில் நிலம் தேடிக்கொண்டிருந்தார் அவர்.

"நீங்க கூடுவாஞ்சேரி வந்தீங்கனா அரை மணி நேரத்துல லேண்ட் பார்த்துட்டு உங்க ஆபீஸ்க்கு போயிடலாம்" என்றார். மறுக்க முடியாது. நிறைய உதவிகள் செய்துள்ள நெருங்கிய நண்பர்.

வடபழனியிலிருந்து கூடுவாஞ்சேரிக்கு டிக்கெட் எடுத்துவிட்டு வழக்கம் போல அலுவலகம் செல்லும் நினைப்பில் தாம்பரம் இறங்கி விட்டேன். எனது அலுவலகம் தாம்பரத்தில் இருந்தது. மணி ஒன்பதரை. பதினோரு மணிக்கு அலுவலகம் சென்றால் போதும். சரி கூடுவாஞ்சேரிக்கு இன்னொரு பேருந்து பிடிக்கலாமென்று நினைத்தபோதுதான் தோன்றியது. எலக்ட்ரிக் ரயிலில் போனால் என்ன என்ற ஆசை. ரயிலில் சென்று பல வருடங்கள் ஆகின்றது. தாம்பரத்தில் டிக்கெட் எடுத்து ரயில் பிடித்தேன். தாம்பரம் பெருங்களத்தூர் வண்டலூர் ஊரப்பாக்கம் அடுத்து கூடுவாஞ்சேரிதான். மின்சார ரயிலில் கூட்டம் அவ்வளவாக இல்லை. எனது எதிரே ஒரு பெரியவரும்,நடுத்தர வயதுக்காரரும் அமர்ந்து தினத்தந்தியை பகிர்ந்து படித்துகொண்டு வந்தார்கள்.

"ரயில்ல அடிப்பட்டான்னு சொல்றாங்க. அப்படி தெரியலையேப்பா" என்றார் பெரியவர்.

"ஆமா.உடம்ப பார்த்தா அப்படிதான் இருக்கு " என்றார் நடுத்தர வயதுக்காரர்.

அவர்கள் பேச்சிலிருந்து என்னவென்று யூகிக்க முடிந்தது .

கும்பகோணத்தில் நாங்கள் குடியிங்கியிருந்த பகுதியின் பெயர் மாதுளம்பேட்டை. பெயர்க்காரணம் எல்லாம் கேட்காதீர்கள். அது அப்படிதான். எங்கள் வீட்டின் பின்னால் கொல்லைப்புறத்தை தாண்டி (அரை ஏக்கரில் மா,தென்னை,புளியமரம்) தடுக்கி விழுந்தால் ரயில்வே கேட். இந்தப்பக்கம் தஞ்சாவூர், திருச்சி மார்க்கமாக ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள். அந்தப்பக்கம் சென்னை சீர்காழி மயிலாடுதுறையில் இருந்து வரும் ரயில்கள். எனக்கு தெரிந்து ஒரு ரயிலும் சத்தம் போடாமல் சென்றதில்லை. காட்டு மனிதனுக்கு குயில்களின் சத்தத்தை வைத்து அந்த குயில் கர்ப்பமாக இருக்கின்றதா என்று கணிக்க தெரியுமாம். அது போல எங்களுக்கு ரயில்களின் சத்தத்தை வைத்தே அது தெற்கில் இருந்து வருதா,வடக்கு நோக்கி போகுதா என்று ஊகிக்க முடியும். சத்தத்தை வைத்தே அது ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸா அல்லது திருப்பதி நோக்கி போகுதா என்று தெரியும். அந்தளவு சத்தங்களும் நேரங்களும் பழகி விட்டிருந்தன.கடிகாரத்தை பார்க்காமல் ரயில்களின் சத்தத்தை வைத்தே மணி அஞ்சு அன்றோ ஒன்பது என்றோ சொல்லிவிடுவோம். அப்போதெல்லாம் ரயில்கள் ஓரளவுக்கு நேரம் தவறாமல் வந்துக் கொண்டிருக்கும் காலம். மழைக்காலம் ,புயல் சின்னம் ,மறியல் போன்ற சில விதிவிலக்குகள் தவிர.

முதன்முறையாக ரயிலில் அடிபட்ட மனிதனை பார்த்தபோது எனக்கு வயது ஏழு. இப்போது நினைத்தால் காட்சிகள் மங்கலாக இருக்கின்றன . மாதுளம்பேட்டையில் பழைய சாக்குத் துணிகளை ஏலத்தில் எடுத்து விற்கும் ஒரு நடுத்தர வயது மனிதர். குடும்பப்பிரச்சினை காரணமாக ரயில் முன்னே விழுந்து தற்கொலை செய்துக்கொண்டார். தண்டவாளம் பக்கத்தில் கூட்டமாக இருந்தது. வீட்டுக்கு தெரியாமல் வேடிக்கை பார்க்க சென்று திரும்பியபோது செம அடி விழுந்தது என் அம்மாவிடம். அன்று காய்ச்சல் வந்துவிட்டது. கூட்டத்தை விலக்கிக் கொண்டு பார்த்தபோது இரண்டு கால்கள் துண்டாக கிடந்தன. சற்று தள்ளி ரத்தம். சற்று தள்ளி குப்புற கிடந்தார் அந்த சாக்குத்துணி வியாபாரி. பக்கத்தில் அவர் மனைவி தலைவிரி கோலமாக சத்தம் போட்டு அழுதுக் கொண்டிருந்தார். எனக்கு காய்ச்சல் வந்ததற்கு காரணம் அந்த கால்களை பார்த்ததினால் இல்லை. அந்த பெண்மணியை பார்த்துதான். எப்படி சொல்வது. பார்ப்பதற்கு பத்ரகாளி போல அவ்வளவு ஆவேசத்துடன் உக்கிரமாக இரண்டு கைகளால் தலையில் அடித்துக் கொண்டு அழுதுக் கொண்டிருந்தார். ஏழு வயது பையனுக்கு அது போன்றதொரு காட்சி கொஞ்சம் அதிகம்தான்.

அதன் பிறகு ரயிலில் அடிபட்டு இறப்பவர்களை பார்க்கும்போது எனக்கு ஓரளவு விவரம் தெரிய ஆரம்பித்திருந்தது. நான் ஆறாவது வகுப்பு சென்றிருந்தேன். நாங்கள் மாதுளம்பேட்டையிலிருந்து ரயிலடிக்கு குடி பெயர்ந்தோம். கும்பகோணம் ரயில் நிலையத்தின் எதிரே தண்டவாளத்திற்கு அந்தப்புறமாக இருக்கும் தெருவை ரயிலடி என்பார்கள். ரயில் அடியில் இருப்பதால் ரயிலடி. ரயிலில் அடிபட்டு இறப்பவர்கள் என்றும் அர்த்தம் கொள்ளலாம் அங்கு சென்ற பிறகுதான் மாதத்திற்கு ஒரு ரயில் சாவை பார்ப்பது வழக்கமாகிவிட்டது. மூன்று வருடங்கள் அங்கு குடி இருந்தோம். இருபது தற்கொலைகளை பார்த்திருப்பேன். ஆட்டுக்குட்டியை காப்பாற்ற வேண்டி ரயிலுக்கு முன்னே விழுந்து அடிப்பட்டு இறந்துப்போன சிறுவன். ஓடும் இரயிலிலிருந்து குதித்து எதிரே வந்த ரயில் முன்னே அடிப்பட்டு இறந்த பெண். கணவன் திட்டியதால் குழந்தையுடன் ரயில் முன்னே விழுந்து செத்த இரண்டு உடல்கள். பெண்ணுக்கு வளைக்காப்பிற்காக ஸ்வீட் பாக்கெட்டுகளுடன் வாங்கி வந்து திரும்பி தண்டவாளத்தில் கால் சிக்கி அடிப்பட்ட பெரியவர். ரயில் கிராஸிங்கிற்காக காத்திருக்கும்போது ரயிலில் இருந்து இறங்கி எதிரே இருக்கும் வெள்ளரித் தோட்டத்தில் வெள்ளரிப்பிஞ்சு பறிக்க சென்று எதிரே வரும் ரயிலில் அடிப்பட்ட சிறுமி. படிக்கட்டில் தொங்கியபடி சென்று எதிரே வந்த போஸ்ட் மரத்தில் அடித்து ரயில் பெட்டிகளுக்கு நடுவில் சிக்கி உயிரிழந்த கல்லூரி மாணவன் . இன்னும் பலர்.சரியாக நினைவு இல்லை. ஆமாம் செத்த பிறகு எல்லாருடைய கைகளும், கால்களும் ஒரே மாதிரிதானே சிதறி கிடக்கும். நள்ளிரவில் ரயிலில் அடிப்பட்டு இறப்பவர்கள் ஆளில்லா பகுதிக்குள் இறப்பவர்களது நிலைமைதான் பரிதாபமாக இருக்கும். காட்டுக்குள் கை,கால்களை நாய்கள் இழுத்துக்கொண்டு வந்து எங்காவது கருவக்காட்டுக்குள் போட்டுவிடும். ஆடு மேய்க்கும் சிறுவர்கள் வந்து சொன்னால்தான் உண்டு. ஒருமுறை பக்கத்துக்கு வீட்டுப்பெண் அதிகாலையில் வாசல் தெளிக்க செல்லும்போது நாய் இழுத்து வந்த கையை பார்த்து தெருவே அமளியானது இன்னமும் நினைவில் உள்ளது.

எட்டாவது கோடை விடுமுறையில் நாங்கள் ரயிலடியை விட்டு வெகுதூரம் குடி பெயர்ந்திருந்தோம். எப்பவாவது ரயில் சாவுகளை கேள்விப்படுவதோடு சரி. நேரில் எதுவும் பார்க்கும் சந்தர்ப்பம் வரவில்லை. ஆனால் சில வருடங்கள்தான் மீண்டும் ரயில் எனது வாழ்க்கையில் குறுக்கிட ஆரம்பித்தது. கும்பகோணத்தில் கணிப்பொறி படிப்புக்கென்று கல்லூரி இல்லாததால் தஞ்சாவூர் சென்று படிக்க வேண்டியதாகிவிட்டது. கும்பகோணத் திலிருந்து தஞ்சாவூர் ஒரு மணி நேர பயணம். தினமும் பேருந்தில் செல்ல முடியாது. கட்டணம் அதிகம். ரயில் என்றால் கல்லூரி மாணவர் என்று சொல்லி சலுகைவிலை பாஸ் வாங்க முடியும். கிட்டத்தட்ட மூன்று வருடம். ஆயிரம் நாட்கள் . போக வர நூறு கிலோமீட்டர்கள். ஒரு மனிதன் எத்தனை ரயில் சாவுகளை பார்த்திருப்பான். எத்தனை ரயில் சாவுகளை கேள்விப்பட்டிருப்பான். அவனுக்கு எத்தனை ரயில் டிரைவர்கள் ,டிடிஆர்க்கள் பழக்கமாகி இருப்பார்கள். எத்தனை புதிர்கதைகளை கேட்டிருப்பான். யூகித்து கொள்ளுங்கள்.

ஒரு நாள் மாலை தஞ்சாவூர் ரயில்வே காண்டீனில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தபோது பக்கத்தில் இருந்த ரயில் டிரைவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் மறுநாள் வேலையை ராஜினாமா செய்யப் போவதாக சொன்னார். என்னவென்று விசாரித்தேன். அவர் செங்கொட்டை எக்ஸ்பிரஸ் டிரைவர். காலை அவர்தான் வண்டியை எடுத்துள்ளார். திட்டை பக்கத்தில் வரும்போது தண்டவாளத்தின் இடதுபுறமிருந்து ஒரு இளைஞன் ஓடிவந்துள்ளான். வலதுபுறமிருந்து ஒரு பெண் ஓடிவந்து இரண்டு பேரும் அப்படியே தண்டவாளம் நடுவே கட்டிப்பிடித்து நின்றுள்ளார்கள். இது என்ன டவுன் பஸ்ஸா? நினைத்தவுடன் பிரேக் போட. இரண்டு பேரையும் தூக்கி எறிந்து விட்டதாம். காதல் தோல்வின்னா வேறு எங்கேயாச்சும் போய் சாகவேண்டியதுதானே. எதுக்கு நம்ம முன்னாடி விழுந்து கஸ்டப்படுத்தறாங்க என்றார். அவர் கண்கள் கலங்கியிருந்தன. கண்டிப்பாக இறந்துப்போன அந்த பெண் வயதில் ஒரு மகளோ ஒரு மகனோ அவருக்கு இருந்திருக்கலாம். இரயிலில் அடிபட்டு சாகும் தருணங்களில் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகுபவர்கள் யாரென்று பார்த்தால் அவர்கள் இறந்துப்போன மனிதர்களுக்கு நெருங்கியவர்களாக இருக்க மாட்டார்கள். அவர்கள் ரயில் ஓட்டுநர்களாகவே இருப்பார்கள். வாழ்நாள் முழுவதும் அவர்கள் கொலை குற்றவாளிகளை போல தங்களை உணர்கின்றார்கள் .                 

ஒரு நாள் மதியம் கல்லூரிக்கு தேர்வு எழுத சென்றுக்கொண்டிருந்தேன். ரயில் நிலையத்தில் அவ்வளவாக கூட்டம் இல்லை. நடைமேடை பெஞ்சில் அமர்ந்து தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்தேன். தூரத்தில் ரயில் வந்துக் கொண்டிருந்தது. நான் எழுந்து நின்றேன். பின்னால் ஏதோ சத்தம் . திரும்பி பார்ப்பதற்குள் அந்த வயிறு பெருத்த ஆடு தண்டவாளத்தில் பாய்ந்தது. அதன் வயிற்றின் அளவை வைத்து பார்த்தால் அது எப்படியும் இரண்டுக் குட்டிகளை போடும். நிறைமாதம் என்று ஊகிக்க முடிந்தது. கணநேரத்தில் எதுவும் தோன்றவில்லை. நாங்கள் எல்லாரும் அந்த ஆட்டை விரட்ட அது குழப்பமடந்து தண்டவாளத்தை விட்டு விலகி ஓடாமல் ரயிலை நோக்கி ஓட ஆரம்பித்தது. நிலையம் பக்கத்தில் என்பதால் ரயிலும் மெதுவாகத்தான் வந்தது. தூரத்திலிருந்து இதை கவனித்து விட்ட ரயில் டிரைவரும் மிக சாமர்த்தியமாக பிரேக் போட்டு நிறுத்தினார். ஆனாலும் ரயில் மிக சரியாக வந்து ஒரு அடி. ஒரே அடிதான். ஆடு சற்று எம்பி விழுந்தது. பத்து விநாடிகளில் மெல்ல அப்படியே கண்ணை மூடி இறந்துவிட்டது. ஆச்சர்யமாக ஒரேயொரு கீறல் கூட ஆட்டின் மேல் இல்லை. எனக்கு பக்கத்தில் இருந்த பெரியவர் பார்த்துவிட்டு வந்து சொன்னார். அந்த ஆடு ரயிலில் அடிபடவில்லை. அதிர்ச்சியில் இறந்துருக்கும்.

இன்னொரு முறை ரயிலின் படிக்கட்டுகளில் அமர்ந்து வேடிக்கை பார்த்தபடியே சென்றுக் கொண்டிருந்தேன். திடீரென பயங்கர சத்தம். ரயில் நிற்க பக்கத்துப்பெட்டிகளில் இருந்த எல்லாரும் கீழே குதித்து ஓடினார்கள். நானும் குழப்பத்துடன் ஓடி சென்று பார்த்தேன். ஸ்கூல் யூனிபார்ம் அணிந்திருந்த ஒரு மாணவன் உடல் கருவமரம் பக்கத்தில் கிடந்தது. தலையை மட்டும் காணவில்லை. தண்டவாளத்தில் ஒரு நசுங்கி போன டிபன் பாக்சிலி ருந்து சிதறிய தயிர்சாதம் கூட சிதறிப்போய் கிடந்த மூளை. அந்தக் காட்சியை பார்த்த இரண்டு மாதங்கள் என்னால் அசைவ உணவை கூட சாப்பிட முடியவில்லை.

ரயிலுக்கு வெளியே பார்த்தேன். கூடுவாஞ்சேரி போர்டு தெரிந்தது. இப்படி ரயிலில் அடிப்பட்டவர்களை பற்றிய செய்திகளை கேள்விப்படும் போதெல்லாம் பழைய நினைவுகள் வந்து மனதை என்னவோ செய்கின்றது.

ரயிலில் அடிப்பட்டு இறந்த உடல்களை பார்க்கும்போதெல்லாம்,அது போன்ற செய்திகளை கேள்விப்படும்போதெல்லாம் ஏதோ ஒரு புதிரின் ரகசியங்களை அவிழ்ப்பது போல தோன்றும் எனக்கு. பேருந்தில் அடிப்பட்டு இறப்பவர்களுக்கும் ரயிலில் அடிப்பட்டு இறப்பவர்களுக்கும் சில வித்தியாசங்கள் உண்டு. அது என்னைப் போன்ற ரயில் சாவுகளை நிறைய பார்த்த ஆட்களுக்கு நன்றாக அடையாளம் கண்டுப்பிடிக்க முடியும். இதில் எல்லாம் பெருமையா என்று கேட்காதீர்கள். ஏதோ சொன்னேன். அவ்வளவுதான்.

பேருந்தில் அடிபட்டு இறக்கும் உடல்களை பார்த்தால் பேருந்து அவர்களை உள்ளே இழுத்து அரைத்து தள்ளியது போல இருக்கும். ஆனால் ரயில் அப்படி செய்யாது. அது மனிதர்களை என்னிடம் வராதே போ அந்தப்பக்கம் என்று கடுப்புடன் சிதறடித்து வீசி விடும். கை கால்கள் சிதறி தள்ளி போய் விழுவார்கள். பேருந்தில் அடிபடுவர்களை பார்த்தால் அநேகமாக குடல் வெளிவந்து விடும். ஆனால் ரயில் விபத்தில் அதற்கான வாய்ப்பு குறைவு. கையோ,காலோ,தலையோ உடல் உறுப்புகள் ஒன்றாவது பிய்ந்து தனியாக வீசி தூக்கி எறியப்படும். மிகச்சரியாக இரண்டு துண்டுகளாக பிய்த்தெறியப்பட்ட ஒரு உடலை பார்த்துள்ளேன். ரயிலடியில் வசிக்கும்போது வீட்டு ஓனரின் ஆட்டுக்குட்டியொன்று ரயிலின் முன்பு விழுந்து அடிபட்டு விட்டது. குட்ஸ் ஷெட்டின் பக்கமாக தண்டவாளம் ஓரமாக ஆட்டுக்குட்டிகளை மேய விட்டதால் ஆர்பிஎப் போலீசார் அபராதம் கட்டச்சொன்னார்கள். அப்போது ஆர்பிஎப் போலீசார் வைத்திருந்த ஆறடி நீள காக்கிநிற பைகளை பார்த்தேன். வித்தியாசமாக இருந்தது. அவர்களிடம் கேட்டபோது ரயிலில் அடிபட்டு சிதறி போகும் மனித உறுப்புகளை இதில்தான் பொட்டலம் கட்டி வைப்போம் என்றார். பிரேத பரிசோதனை முடிந்து உரியவர்களிடம் கொடுப்போம் என்றார். அப்படி ஒரு பையை பார்த்தது அபூர்வம். அதுவும் அடிப்பட்ட உடல்களை கட்டவென்றே பிரத்யேக பைகள் பைகள் செய்கின்றார்கள் என்பது வியப்பாக இருந்தது. தவிர ரயிலில் அடிப்பட்டால் உடல் ஒருவிதமாக கருத்து விடும். கிட்டத்தட்ட மின்சாரக்கம்பியை பிடித்தவர்கள் போல அட்டைக்கரியாக இல்லாவிட்டாலும் ஓரளவு கருப்பாக இருக்கும். உறைந்த ரத்தமும் கருத்துப் போய் இருக்கும். மற்ற எல்லாவற்றையும் விட ரயில் சாவு கொடுமையானது என்று நினைக்கின்றேன். நீ ரயில்ல அடிபட்டுத்தான் சாவ என்று சாபம் விடும் ஆட்கள் நிறைய பேரை பார்த்துள்ளேன். எழுதுவதற்கும்,பகிர்வதற்கும் நிறைய சாவுகள் உள்ளன.

வெளியே பார்த்தேன் . கூடுவாஞ்சேரி நிலையம் . ரயிலை விட்டு இறங்கினேன். முதுகுக்கு பின்னால் இருவரும் இப்போது ரயிலில் அடிப்பட்டு இறந்து போன வாலிபரை விட்டுவிட்டு விவசாயம், லோன் தள்ளுபடி பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். இது விபத்துதானா? கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் இறங்கி சாலையில் நடக்கும் வரை இளவரசனின் அந்த பிளவுண்ட முகமும் இது விபத்துதான் என்று மருத்துவர்கள் சொன்ன அறிக்கையுமே மனதில் அலை போல அடித்துக் கொண்டிருந்தது. சாலையில் இருந்த பெட்டிக்கடைகளில் எல்லாம் இளவரசன் படம் போட்ட செய்தித்தாள் போஸ்டர்கள் தொங்கின. லேசான காற்றோடு மழை வரும் போல மேகங்கள் திரண்டுக் கொண்டிருந்தன. மனது குழப்பமாக இருந்தது. தூரத்தில் ஒரு புள்ளிபோல எனது நண்பர் பைக்கோடு காத்திருந்தார்.

Wednesday, July 24, 2013

இந்த பொழப்புக்கு எருமை மாடு மேய்க்கலாம்

சனிக்கிழமை காலை ஏழு மணி. அம்மாவும், மனைவியும் எங்காவது வெளியில் போகலாம் என்று திடீரென சொல்ல எங்கு போவதென்று குழப்பம். வெளியே தாழ்வழுத்த காற்று மண்டலம். விட்டு,விட்டு பெய்துக்கொண்டிருந்தது. சென்னைக்கு பக்கத்திலேயே எங்காவது சென்று வரலாம் என்று தோன்றியது. எங்கு போவது? அப்போதுதான் சுருட்டுப்பள்ளி நினைவுக்கு வந்தது . சுருட்டுப்பள்ளியில் ஒரு சிவன் கோவில் இருக்கின்றது. அங்கு அழைத்துச் செல்லுங்கள் என்று வீட்டில் நச்சரிப்பு ஆரம்பித்தது. போதாதற்கு சரியாக அன்று சனிபிரதோஷம். டிரைவருக்கு போன் செய்தபோது காலை மணி எட்டு. எனக்கு சுமாராகவும் எனது மனைவிக்கு அசாத்திய திறமையுடனும் கார் ஓட்ட தெரியுமென்றாலும் மழையில் கார் ஓட்டுவது ரிஸ்காக தோன்றியது.    

டிரைவர் மெதுவாக வீட்டிற்கு வந்து சேர்ந்தபோது மணி எட்டரை. இதற்குள் எனது மகள் தண்ணி பாட்டில்கள் ,கேமரா எல்லாம் எடுத்து காருக்குள் காருக்குள் தயாராக வைத்து விட்டாள். அவளுக்கு லேசாக காய்ச்சல் வேறு. இருந்தாலும் வெளியில் செல்லும் குஷி அவளுக்கு. போரூர் சிக்னல் போக்குவரத்தை தாண்டி மதுரவயலை நோக்கி செல்லும் சென்னை பைபாஸில் ஏறும்போது மணி ஒன்பது.

எனது மனைவிதான் சுருட்டுப்பள்ளி செல்லும் வழியை டிரைவருக்கு சொல்லிக்கொண்டே வந்தாள். இரண்டு டோல்கேட்டுகளை தாண்டி கல்கத்தா செல்லும் அந்த மெகா பைபாஸில் கார் இறங்கும்போது மெதுவாக கேட்டேன். 

சுருட்டுப்பள்ளிதான் போறோமா?     

பேசாம வாங்க. உங்களுக்கு ஒன்னும் தெரியாது. நான் கூகிள் மேப்புல ஏற்கனவே வழி பார்த்துட்டேன். இப்படித்தான் போகனும். 

சுருட்டுப்பள்ளிக்கு பூந்தமல்லி ஸ்ரீ பெரும்புதூர் சாலை வழியாக திருவள்ளூர் சென்று பெரியபாளையம் பக்கம் போகுமென்று எப்போதோ கேள்விப்பட்ட நினைவு. டிரைவரிடம் கேட்டேன். அவரும் புதுசு. வழி தெரியாது என்று சொல்லிவிட்டார். எனது மனைவி டிரைவருக்கு வழி சொல்லிக்கொண்டே வந்தார். வழியெல்லாம் பாலங்களும்,பைபாஸ்களும்,பிளை ஓவர்களும் கட்டிக்கொண்டே இருந்தார்கள். இந்த உலகம் இன்றுதான் பிறந்தது போல எங்கு பார்த்தாலும் சாலைகளை புதுப்பித்துக்கொண்டே இருந்தார்கள். தடை காரணமாக நெடுஞ்சாலைகளில் இருந்து அகற்றபட்ட காலி டாஸ்மாக் கடைகள் ஆங்காங்கே பரிதாபமாக நின்றுக்கொண்டிருந்தன.           

கார் ஒரு மணி நேரம் சென்றிருக்கும். தடா பத்து கிலோமீட்டர் என்று அறிவிப்பு பலகை வந்தது. நான் பயந்து போய் காரை நிறுத்த சொன்னேன்.

எனது மனைவிக்கும் குழப்பம் வந்துவிட்டது. இந்நேரம் சுருட்டுப்பள்ளி வந்திருக்கனுமே. நான் கூகிள் மேப்ல பார்த்தேனே. இங்குதானே சுருட்டுப்பள்ளி இருக்குதுன்னு சொன்னாங்க என்றாள். டிரைவர் காரை விட்டு இறங்க, நான் கண்ணுக்கு எட்டுன தூரத்தில சுருட்டுப்பள்ளி இருக்குதான்னு பார்த்தேன். தெரியவில்லை. இங்கு இருந்த ஊர் எங்கு போயிருக்கும் என்று குழப்பம். ஒரு மினி லாரி நின்றுக் கொண்டிருந்தது. அவரிடம் கேட்டோம். என்னது சுருட்டுப்பள்ளியா? அதுக்கு எதுக்கு இந்த ரூட்டுல வந்தீங்க? நீங்க சென்னையில இருந்து வந்தா பெரியபாளையம் ரூட்டுல இல்ல போயிருக்கனும். ஊத்துக்கோட்டை வழியா போயிருக்கலாம் என்றார் .  

எங்கள் டிரைவர் என்னைப பார்த்து, ஊத்துக்கோட்டையா. இதை முன்னாலே சொல்லியிருக்கலாமே. நீங்க கல்கத்தா ரோடு, ஆந்திரா பார்டர்ன்னு சொன்னதும் நானும் இந்த பக்கம் வந்துட்டேன் என்றார்

நான் எனது மனைவியை பார்த்தேன். இல்ல கூகிள் மேப் ஒருவேளை தப்பா இருக்குமோ என்றாள். பெரிய மழை வரும் போல வானம் இருண்டுக்கொண்டு வந்தது. காரை திருப்பிக்கொண்டு வந்த வழியே போரூர் வரை செல்வது சள்ளை பிடித்த வேலை. அதுக்கு பேசாமல் வீட்டுக்கு சென்றுவிடலாம். மணி பத்து. யாரும் சாப்பிடவில்லை. காருக்குள்ளும் குடிதண்ணீரை தவிர வேறு எதுவும் சாப்பிட எடுத்து வைக்கவில்லை இதற்கிடையில் எனது மகளுக்கு லேசாக காய்ச்சல் வந்து காருக்குள் ஒருமுறை வாந்தி எடுத்து விட்டாள்.

வந்த வழியே போக முடியாது. வேறு ஏதாவது வழியிருக்கா என்று அவரிடம் கேட்டேன் . மினி லாரி டிரைவர் நெடுஞ்சாலையில் இருந்து கிளைபிரிந்த சின்ன சாலையை கைகாட்டினார். இப்படியே போனா வெள்ளவேடுன்னு ஒரு ஆந்திர கிராமம் வரும். அப்படியே வெள்ளவேடு கிராமத்தை தாண்டினா செக்போஸ்ட் வந்துடும் . அங்கிருந்து சுருட்டுப்பள்ளி பக்கம் என்றார். நான் எனது மனைவியை பார்த்தேன். அப்போது கூட அவள் கூகிள் மேப்தான் தப்பு என்று சொல்ல நான் எதுவும் பேசாமல் டிரைவரை வெள்ளவேடு போக சொன்னேன்.      

வெள்ளவேடு நோக்கி கார் செல்ல செல்லதான் எவ்வளவு பெரிய மடத்தனம் செய்துவிட்டோம் என்று. அது போன்ற ஒரு சாலையை இதுவரை பார்த்ததே இல்லை. அரைமணிநேரம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இரண்டு பக்கமும் மாந்தோப்புகள். ஒருவேளை கார் ரிப்பேர் ஆகி நின்றால் கூட யாருக்காவது தகவல் தெரிவித்து அவர்கள் வருவதற்குள் அங்கு காத்திருக்க முடியாது. நல்லவேளை செல்போன் சிக்னல் இருந்தது. குண்டும் குழியுமான சகதி நிறைந்த சாலை முடிவற்று சென்று கொண்டே இருந்தது. ஒரு சின்ன கிராமம் வந்தது . எனது மகளுக்கு சாப்பிட ஏதாவது வாங்கி கொடுக்க கடையை தேடினால் அந்த கடையில் எதுவும் இல்லை. முறுக்கு,பிஸ்கட் மட்டும்தான் இருந்துச்சு. பயபுள்ள வேறு சிட்டியிலேயே வளர்ந்தாச்சுல்ல. பிஸ்கட் வேண்டாம். ஏதாவது கேக்,பப்ஸ் இருந்தா வாங்கி கொடுங்கன்னு சொல்ல, இந்த நடுக்காட்டில் கேக் கடைக்கு எங்கே போறது. சிப்ஸ் பாக்கெட் இருந்தது. சரி ஒரு பாக்கெட் கொடுங்க என்று வாங்கினால் லேயிஸ் சிப்ஸ் இல்லை. எனது மகளுக்கு லேயிஸ் சிப்ஸ்தான் பிடிக்கும்.

சரி எப்படியாவது வெள்ளவேடு போயிடலாமென்று டிரைவரை காரை வேகமாக விட சொன்னேன். எங்கிருந்து வேகமாக போறது. ஒத்தையடி சாலையின் இந்தப்பக்கம் பெரிய கண்மாய். கொஞ்ச நேரத்தில் தூரத்தில் மலைகள் தெரிய ஆரம்பித்தன. அநேகமாக அவை தடா பால்ஸ் ஏரியாவாக இருக்குமென்று நினைக்கின்றேன். பிறகு வந்தது அட்டகாசமான இயற்கை காட்சிகள். இரண்டு பக்கமும் பச்சை பசேலென்று நெல் வயல்கள். எருமை மாடுகள். கண்ணுக்கெட்டிய தூரம் ஆட்கள் இல்லை. எருமைகள் தனியாக மேய்ந்துக்கொண்டிருந்தன. பத்து நிமிடங்கள் மெய்மறந்து அந்த இயற்கை காட்சியை பார்த்துக்கொண்டே வந்தேன். எனது இடது பக்கமிருந்து ஒரு பெரிய வாத்துக்கூட்டம் சரேலென சாலையில் ஏறியது. எனது மகளுக்கு கான்பித்தேன். அந்த பசி மயக்கத்திலும் அவள் வாத்துக்கூட்டங்களை பார்த்து சிரித்தாள். கொஞ்ச நேரத்தில் ஒரு பெரிய சினைப்பன்றி குட்டிகளோடு சாலையில் நிதானமாக சென்று க்கொண்டிருந்தது. தூரத்தில் சிறுவர்கள் பம்ப்செட்டில் குளித்துக்கொண்டே எங்கள் காரை பார்த்து வேகமாக கைகாட்டினார்கள். கார் ஒரு சின்ன கிராமத்திற்குள் நுழைந்தது.

அங்கும் பப்ஸ் இல்லை. லேயீஸ் சிப்ஸ் இல்லை. பசி அதிகமானதால் வேறு வழியில்லாமல் லேபிள் எதுவும் ஒட்டாத பெயர் தெரியாத எண்ணையில் பொறித்த ஏதோவொரு வற்றல் பாக்கெட்டை எனது மனைவி வாங்கி கொண்டு வந்தாள்.  

வெள்ளவேடு செல்லுமுன்பு கடைசியாக ஒரு ஆந்திர கிராமம் வந்தது. வயதான மனிதர்கள் எல்லாம் தலையில் முண்டா துண்டுகளை கட்டிக்கொண்டு பீடி புகைத்தபடியும் , சிறுவர்கள் குளங்களில் கல் வீசி எறிந்துக் கொண்டும் விளையாடிக்கொண்டிருந்தார்கள். புறப்படுவதற்கு தயாராக இருந்த ஒரு மினி லாரியில் பெண்கள் உற்சாகமாக அமர்ந்திருந்தார்கள்.  

அந்த கிராமத்தை தாண்டியவுடன் செக்போஸ்ட் வந்தது. லாரி டிரைவர்களிடம் ஆந்திர போலீசார்கள் மாமூல் வாங்கும் லாவகம் பிரமிப்பாக இருந்தது. முன்பெல்லாம் டிரெயின் டிரைவர்கள் ரயிலை ஓட்டிக்கொண்டு வரும் வேகத்தில் ஸ்டேஷன் மாஸ்டர்களிடம் டோக்கன் மாற்றுவார்கள். அது போல டிரைவர்கள் வரும் வேகத்தில் செக்போஸ்ட் ஆட்களிடம் டக்கென கையில் இருக்கும் சுருட்டி இருக்கும் நூறு ரூபாய்த்தாளை தந்து விட்டு செல்கின்றார்கள். ஒருவழியாக செக்போஸ்ட் தாண்டியதும் ஒரளவு சிற்றூர் போல இருந்தது. அங்கே எல்லா கடைகளும் குறிப்பாக மெடிக்கல் ஷாப்பும் கிளினிக்குகளும் இருந்தன.  

உயிர் வந்தது போல இருந்தது. அப்போதுதான் ஒரு விஷயம் தெரிந்தது. என்னதான் கிராமத்தில் பிறந்து கிராமத்திலேயே வளர்ந்தாலும் இப்போதெல்லாம் சென்னையை விட்டு ஓரடி நகர்ந்தாலே ஏன் பதற்றம் வந்து விடுகின்றது? நகரத்துல இந்த பொழைப்பு பொழைக்கறதுக்கு பதில் கிராமத்துல நாலு எருமைமாடுகள் மேய்க்கலாம் என்று பதிவுகள் எழுதுகின்றோம். ஆனால் நிஜ வாழ்க்கையில் நம்மால் ஒரு நாள் கூட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத கிராமத்தில் தங்க முடியாது என்பது உண்மை. நாம் தங்க விரும்பும் கிராமம் வேறு. அங்கு செல்போன் இருக்க வேண்டும். சேட்டிலைட் டிவி சேனல்கள் வர வேண்டும். மல்ட்டி பிளக்ஸ் இருக்க வேண்டும். கோவில் இருக்க வேண்டும். ஐடி நிறுவனங்கள் இருக்க வேண்டும். கேஎப்சிக்கள்,மெக்டிக்கள் இருக்க வேண்டும். டெர்பி,ஆலன் ஷோலி கடைகள் இருக்க வேண்டும். கூடவே நெல்வயல்கள், பம்ப்செட்டுகள், கூட எருமை மாடுகள் இருக்க வேண்டும்.