Thursday, August 20, 2009

ஐந்து கவிதைகள்

ஐந்து கவிதைகள்

1.
சின்னமனிதன்
——————
உணவு விடுதியில்
கைகழுவுமிடத்தில்
பெ‌‌ரிய வாஷ்பேசினொன்றும்
சின்ன வாஷ்பேசினொன்றும்
அருகில் அப்பாவின்
கைப்பிடித்து நடக்கும் சிறு
குழந்தையொன்று தனக்கும்
பெ‌‌ரிய வாஷ்பேசின்
வேண்டுமென்று அழ
வேறுவழியில்லாமல் நான்
நான்கடி குனிந்து கைகழுவ
என்னை சின்னமனிதனாக
எண்ணி சிரித்தாள் அவள்
அப்பா தோளிலிருந்து

2.
ரயில் ‌விளையா‌ட்டு
———————

வரிசையாக ஐந்து வாண்டுகள்
ஒன்றின் இடுப்பை
ஒன்று பிடித்து ‌விளையா‌ட
காடு மலை பள்ளமென்று
சளைக்காமல் சென்றது ரயில்.
நடுவில் திடீரென
மண்டிப்போட்டு தவழும்
குழந்தையொன்று வர
திடீரென பதறிப்போய்
நின்றது ரயில்.
நானும் ச்சும்மாங்காட்டி
ரயில் கடக்கும் வரை
காத்திருந்து நடந்தேன்.

3.
சப்தஸ்வரங்கள்
—————-
நடக்கும்போது
க்கீ க்கீயென்று
கத்தும் காலணிகளை
அந்த குழந்தை
ஆச்சர்யத்துடன்
பார்த்தது. வாங்கி
அணிவித்தவுடன்
இடதுகாலை ஓங்கி
தரையில் மிதித்தது
ஒரு க்கீ
வலதுகாலை மிதிக்க
அடு‌த்த க்கீ
குழந்தை கொஞ்சம்
குழம்பியபடி
இரண்டுகால்களையும்
ஊன்றி நின்றது அசையாமல்
கொஞ்சநேரம் மவுனம்
பிறகு ஏதோ புரிந்தது
இரண்டு கால்களையும்
க்கீ க்கீ யென்று
இசைத்தபடியே நடக்க
புதுப்புது ஸ்வரங்களாய்
தெறித்து கிளம்பின

4.

குடைக்காம்பு
————–
அப்பாவின்
மரணத்துக்குப்பின்
புதுவீடு மாறிவந்ததில்
இடப்பிரச்சினை நிறையவே

தேவையற்ற
தட்டுமூட்டு சாமான்கள்
கந்தல் துணிகள்
பழைய வாரப்பத்திரிக்கைகள்
யார்யாரோ அனுப்பிய
‌திருமண அழைப்பிதழ்கள்
துருவேறிய டிரங்க் பெட்டியொன்று
கூடவே
முன்பொருநாள்
அம்மாவை அடிக்க
அப்பா பயன்படுத்திய
குடைக்காம்பு

எல்லாம் எடைப்போட்டு
சில்லறை வாங்கியதில்
குடைக்காம்பு மட்டும்
செல்லாதென்று
பழைய பேப்பர்க்காரன்
திருப்பி தந்தான்

அம்மாவும் ஏனோ
தடுக்கவில்லை
அன்றைக்கும்

5.

அலைகள்
————————-
அது ஒரு
அபூர்வமான தருணம்
அன்றொரு நாள்
எதேச்சையாக
தொலைக்காட்சியின்
அலைவரிசை மாற்றியபோது
ஆறாம் நம்பர் சேனலில் ஓடிய
அதே பாடல் காட்சியை
ஐந்தாம் நம்பர் சேனலிலும்
பார்க்க நேரிட்டது.
ஒரு ஆர்வத்தில் படபடப்பாக
மீண்டும் ஆறாம் நம்பர் சேனல்
தாவினேன். அதே பாடல்
நம்ப முடியவில்லை. மீண்டும்
ஐந்தாம் நம்பர்.அதே பாடல்.
வேறு வழியில்லாமல்
ஐந்தை ஆறாக நினைத்துக்கொண்டு
அமைதியாக பார்க்க ஆரம்பித்தேன்.
வேறு யாரேனும் எங்காவது
ஆறை ஐந்தாக பார்க்கக்கூடுமோ?
அந்த நினைப்பு தோன்ற
மீண்டும் மனது
ஐந்துக்கும் ஆறுக்கும் அலைபாய்ந்தது.

16 comments:

  1. ella kavithaiyum vasiththeen

    irabdaavathu muunraavathum enakku romba pitiththirukkirathu.

    ReplyDelete
  2. எல்லாமே நல்லா இருக்கு விநாயகம்.அபூர்வமான மனநிலை சார்ந்த அழகும்,வலியும்.ரொம்ப நல்லா இருக்கு.

    ReplyDelete
  3. விநாயகமுருகன்... பின்றீங்க..

    ReplyDelete
  4. இன்றுதான் தங்கள் வலைப்பக்கம் வந்திருக்கிறேன். எளிமையான வார்த்தைகளோடு, அடர்த்தியாய் உங்களால் சொல்ல முடிகிறது. ரொம்ப பிடித்திருக்கிறது உங்கள் கவிதைகள். எல்லாவற்றையும் ஓரிரு நாட்களில் படித்துவிடுவேன். தொடர்ந்து வாசிக்க வருவேன். எழுதுங்கள்......

    ReplyDelete
  5. வாருங்கள் மாதவராஜ்
    நன்றி

    ReplyDelete
  6. அனைத்தும் எளிமையான அசத்தல் கவிதைகள்..

    ஜியோவ்ராம் சுந்தர் அவர்களின் வலைப்பூ வழியே வந்தேன். அருமையான படைப்புக்கள்!

    ReplyDelete
  7. ஜ்யோவ்ராம் பதிவின் மூலம் வந்தேன். எளிமையான கவிதைகள். குடைக்காம்பு பிடித்திருந்தது. ஆங்கில வார்த்தைகளை முடிந்தவரை தவிர்க்கவும். நன்றி.

    ReplyDelete
  8. வாருங்கள் சென்ஷி
    நன்றி

    ReplyDelete
  9. வாருங்கள் மஞ்சூர் ராசா
    நன்றி

    ReplyDelete
  10. romba nalla irukku..thodarndhu ungal thalathai vaasikka vendum ena ninaikkiiren..

    ReplyDelete